Friday, December 31, 2004

A quick note from Changi airport. Jayanthi Shankar has sent this mail giving a contact address for donations in TN.

"..An appeal for old clothes
Looks like many affected people are suffering without food, shelter and clothes. Old clothes can be donated to one kind volunteer,Mr. Ramkimobile - 98400 95437(chennai)
He is willing arrange to take the old clothes.
Can also be given in him at his address--new.no 100,old no. 50,Naga Medicals BuildingSecond floorJones Road,Saidapet,chennai - 15.
Please kindly spread this mail to as many of your friends,..
This is sent to those not residing in chennai also so that this can be spread to their respective friends,.
thank you,rgds, Jayanthi Sankar..."

I am travelling back from the US. REd Cross is repeatedly posting requests in the US newspapers that I read for contributions. So,
For those who are not in TN:
Redcross world over welcomes donations in terms of money/cheques. They say money is easier to handle than cloths and food which, they say, are difficult to transport to affected areas.

more links for donations:

www.bayareatamilmanram.org

As for the disaster, I have no words to even to think about it. On coming back home, I can't imagine the depth of the aftermath that awaits me there.

Thursday, December 16, 2004

பல மனிதர்கள் என்னுள் ஏதோ ஒரு விதத்தில் நல்ல பாதிப்பை ஏற்படுத்தியுள்ளார்கள் - தெரிந்தவர்கள், பழகியவர்கள், உறவுகள், நண்பர்கள், பிரபலங்கள், அதிகம் பழக்கம் இல்லாவிட்டாலும் சட்டென்று மனசில் ஆழமாக பதிந்தவர்கள் என்று ஒரு லிஸ்டே இருக்கிறது. அலைகள் வந்து மோதுவது போல் அவர்கள் பாதிப்பு பல சம்யங்களில் என் எண்ணங்களை மாற்றியிருக்கலாம்; பழகும் / பேசும் விதங்களை மாற்றியிருக்கலாம்; அல்லது தூரத்தே நின்று அவர்களை நான் பார்த்து ரசித்திருக்கலாம். ஆனால் இதுவரை எந்த மனிதரையும் நான் ஆதர்சமாகக் கொண்டதில்லை - ஜே. கிருஷ்ணமூர்த்தி, காஞ்சியின் பெரிய பெரியவர், மகாத்மா காந்தி, நேருஜி, ரமண மகரிஷி, விவேகானந்தர் என்று என் எண்ணங்களை சீர் அமைத்தவர்கள் வரிசை கூட உண்டு. ஆனால் இவர்கள் யாரையும் நான் வழிபாடு செய்ததில்லை. எந்த ஒரு தனிமனிதரும் என்னுள் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்ததில்லை. அவர்கள் வாழ்க்கைகள் / வாக்குகள் மூலமாக பொதுவாக வாழ்வைப் பற்றி அவ்வப்போது ஒரு தெளிவு கிடைத்துள்ளது என்ற முறையில் இவர்களிடம் ஒரு மரியாதை உண்டு.


ஆனால் ஒருவரின் முகம் /குரல் மட்டும் எப்போதும் ஆழ்மனசில் எங்கோ நன்றாக பதிந்துவிட்டது. எனக்குப் பாட வராது. ஆனாலும் என்னைப் பொறுத்தவரை இவர் ஒரு ஆதர்சப்பிறவி. சாதிக்க இதற்கு மேலொன்றுமில்லை என்ற அளவு புகழ் எய்தினாலும் அது ஏதும் தன்னுதில்லை என்ற பாவனையுடன் கடைசி வரை எளிமையாக வாழ்ந்தவர். தன் இசை ஒன்றே வாழ்வாக, வாழ்க்கையே இசையாக வாழ்ந்தவர். தனக்கும் தன் இசைக்கும் உறுதுணையாக நின்ற கணவரிடமும் தன் குடும்பத்தாரிடமும் அளவில்லாத பிரியத்துடன் வாழ்ந்தவர். இவர் வாழ்க்கையிலும் மேடு பள்ளம் இருந்திருக்கிறது. இருந்தாலும் அவரது எளிமை, unassuming சுபாவம், இத்தனைக்கும் இடையில் ஆழமாக தன் இசையில் ஒரு பக்தி, எந்த நிலையிலும் தன் இசையின் தரம் குறையக் கூடாது என்ற உறுதியான உணர்வு, மனசின் எளிமையைப் பிரதிபலிக்கும் அந்தப் புன்சிரிப்பு..... இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

எம் எஸ் சுப்புலஷ்மி மறைந்து மூன்று நாளாகிவிட்டது. நியூயார்க், மேன்ஹாட்டன் என்று சுற்றுலா கிளம்பிக் கொண்டிருக்கும்போது காலையுணவுக்கு உட்காரும் சமயம் என் உறவினர் சொன்னார். "இப்போதுதான் நெட்டில் பேப்பர் பார்த்துவிட்டு வந்தேன்" என்று. சாப்பாடு உள்ளே இரங்கவில்லை. பின்னர் ஊர் சுற்றும்போதும் அவ்வப்போது சட்டென்று ஏதோ சொல்லத்தெரியாத ஒரு இழப்பு மனசில் தாக்கிற்று.
எம் எஸ் வாழ்க்கை சுத்தமாக ரோஜா மலர் பாதையல்ல. எல்லோரையும் போல் சங்கடங்கள், சவால்கள், வேதனைகள் என்று இருந்திருக்கிறது. ( சமீபத்தில் வெளி அந்த அவரது வாழ்க்கை சரித்திர நூல்கள் சிலவற்றை புரட்டுங்கள் புரியும்.) இருந்தாலும் எல்லாவற்றையும் மீறி அவரது உள்ளுக்குள் இருக்கும் மனிதம், Persona - மிளிர்ந்தது.

முதன் முதலில் பூடானில் அரசரின் அழைப்பின் பேரில் அங்கே கச்சேரி செய்ய வரும்போதுதான் முதன் முதலில் அவரையும் கணவர் சதாசிவத்தையும் சந்தித்தேன். மகள் விஜயா ராஜேந்திரன் உடனிருந்தார். நான் கற்பனை பண்ணியிருந்ததற்கு நேர் மாறாக சிறிய உருவம். முகத்தின் சிரிப்பு மட்டும் பளீரென்று பிரகாசித்தது - மூக்குத்தியின் பிரகாசம் எல்லாம் தெரியவேயில்லை! அன்பாக நாங்கள் ( நானும் சில நண்பர்களும்) கொண்டுபோயிருந்த சாப்பாட்டை ரசித்தவிதம் ( அட, இந்தப் பால் பாயசத்தைப் பாருங்களேன் முந்திரிப் பருப்பு, திராட்சையெல்லாம் போட்டு எவ்வளவு ருசியாக என்று கணவரிடம் சிலாகித்து - அந்த ஹிமாலய மலைகளுக்கு நடுவே புதைந்து இருக்கும் இக்கணூண்டு பிரதேசத்தில் வாய்க்கு ருசியாக பால் பாயசத்தோடு நம் தமிழ் சாப்பாடு கிடைத்ததே என்று குழந்தை போல் வியந்து), உட்கார்ந்து எங்களுடன் சகஜமாக உறையாடின விதம் எல்லாம் அன்று கனவு போல் இருந்தது.

அதன் பின் பல முறை அவரை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. விடுமுறையில் சென்னை வரும்போது - அல்லது - டில்லியில் பத்திரிகைளுக்காக சில பேட்டிகள். ( " பேட்டியா? அதெல்லாம் வேண்டாம்மா. நாம வெறுமே பேசிக்கொண்டிருக்கலாம். உங்களுக்கே ( இந்த"..ங்க" மரியாதையெல்லாம் வேண்டாம் என்றால் கேட்டால்தானே?) ஏதாவது எழுதணும் என்று தோன்றினால் பிறகு எழுதிக் கொள்ளுங்கள் என்று கையிலிருந்து பேனாவையும் நோட்புக்கையும் வாங்கி கீழே வைத்து விட்டார். பேசும்போதும் இயல்பாக தோளில் கைப்போட்டு அன்பாக பேசும் சுபாவம். "இப்பக் கூட கச்சேரி அன்றைக்கு எனக்கு கொஞ்சம் பயமாகதான் இருக்கும்" என்று சொல்லும் அவரது அக்கறை என்னை அசத்தும். விடாமல் தினம் பல மணி நேரம் சாதகம் செய்யும் ஒரு perfectionist. UN ல் பாடும் முன் ஜலதோஷத்தினால் பாதித்த தன் குரலுடன் எப்படி கச்சேரி செய்யப் போகிறோமோ என்ற கவலை மனதை வாட்ட, கச்சேரி ஆரம்பிக்கும் சமயம் கூட குரலே எழும்பாமல் மனசில் ஒரு பிரளயம் சூழ்ந்திருக்க, தான் இருந்த நிலையை அவர் விவரித்தவிதத்தை பிரமிப்புடன் கேட்டுக்கொண்டிருந்தேன். " எல்லோரும் ரெடி. சபையில் அமைதி. தொண்டையைக் கனைச்சுப் பார்க்கிறேன். குரலே எழும்பவில்லை. என்ன செய்யப் போகிறேன் என்றே தெரியவில்லை. மனசில் அப்படியே பெரிய பெரியவாளை ( காஞ்சி) நினைச்சிண்டு கண்ணை மூடிண்டேன். அவ்வளவுதான் எனக்குத் தெரியும். பாட்டு என் குரலில் இருந்து தானே வர ஆரம்பித்தது. என்னிக்கும் மறக்க முடியாத அனுபவம் அது." என்று பல வருஷங்கள் கழிந்த பின்னரும் மன நெகிழ்ச்சியோடு விவரித்தார்.

அவரிடம் குரல் வளமும் இசையில் ஆர்வமும் இருந்ததை சரியானபடி உலகறியச் செய்த அவருக்கு மிகச் சரியான கணவர் சதாசிவம். வாய்க்கு வாய், "அவருக்குப் பிடிக்கும், "அவர் சொன்னார்" என்ற சொற்கள் பேசும்போது நிறைய இருக்கும்.

கடைசி பல மாதங்களாக அவருக்கு உடலில் பல கோளாறுகள் வந்து சிரமப்படும்போது கேட்க ரொம்ப வருத்தமாக இருந்தது. எத்தனை பேரின் வாழ்க்கையில் தன் இசையால் மலர்ச்சியும் இதமும் தந்த ஒரு ஆத்மா இப்படி சிரமப்படுகிறாரே என்று வேதனையாக இருந்தது. ஒரு வழியாக உடல் உபாதைகளிலிருந்து விடுபட்டார் என்றுதான் தோன்றுகிறது.

Greatness Personified. But MS was someone who never realised that or perhaps she consciously avoided getting that fact go into her head !! Either way - she was one person I have constantly admired and have always liked to emulate.

May she be in peace whereever she is.

Saturday, December 11, 2004

மதம் பற்றி பள்ளி வகுப்புகளில் சொல்லிக் கொடுப்பதில் தவறில்லை!!

இதென்ன மறுபடி முரளி மனோகர் ஜோஷி சமாசாரம் போலிருக்கிறதே... அவர் மீண்டும் எப்போ கல்வி அமைச்சர் ஆனார் என்று ஆச்சரியப்படாதீர்கள். ஒரு மாறுதலுக்காக இந்த முறை இந்த மதம் v/s கல்வி விவாதம் அமெரிக்க நகரங்களில் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.

சாதாரணமாக இங்கே உள்ளூர் தினசரிகளில் 99.99 சதவிகிதம் உள்ளூர் சமாசாரங்கள்தாம் இடம் பெறும். வெளி நாடு என்றால் ஐரோப்பா கண்டம். மிஞ்சிப்போனால் சீனா / எப்பவாவது பிலிப்பைன்ஸ், பங்களாதேஷ், பாகிஸ்தான். இந்தியா? மதக் கலவரங்கள் அல்லது பூகம்பம் நடக்கும்போது மட்டும்.

இங்கு வந்து பல நாட்கள் தினசரியைப் புரட்டுவது சில நிமிடங்களில் முடிந்து விடும். உள்ளூர் சமாசாரங்கள் எனக்கு சம்பந்தம் இல்லை என்று கொஞ்சம் தள்ளி நின்று விடுவேன். எந்த ஊர் / நாடு போனாலும் பொதுவாக அந்த இடங்களின் தினசரிகளில் இரண்டு பகுதிகளை மேய்வேன். ஒன்று, classified விளம்பரங்கள். மற்றொன்று வாசகர் கடிதங்கள். ஒரு சமூகத்தின் நடப்பு நிலையை அப்படியே பிரதிபலிப்பவை இவை என்பது என் எண்ணம். நாயைக் காணவில்லை என்ற விளம்பரமும் என் மகளை எங்காவது பார்த்தால் இந்த நம்பரில் தொடர்பு கொள்ளுங்கள் என்ற விளம்பரமும் அருகருகே இருக்கும்போது - பலமுறை நாய் விளம்பரம் பெரிதாக அக்கறையோடு; மகள் விளம்பரம் சின்னதாக ஏனோதானோவென்று - நம் மனதில் ஏதோ இடிக்கும். பக்கம் பக்கமாக கலர் கலராக கார் விளம்பரங்கள். அடுத்து வீடு. அடுத்து நுகர்வோர் பொருள்கள் - மனாவாரியாக.
இதன் நடுவில் அசுவாரசியமாக தினசரியைப் புரட்டியவளை இந்த மதம் v/s கல்வி செய்தி எழுந்து உட்கார வைத்தது.

நடந்தது இதுதான். இங்கே, Cupertino என்ற பக்கத்து ஊரில் உள்ள ஒரு சரித்திர பள்ளி ஆசிரியர் - பெயர், வில்லியம்ஸ்- அமெரிக்க சரித்திரத்தில் கடவுளுக்கு முக்கிய பங்கு உண்டு; அமெரிக்க அரசியல் சாசனத்தை உருவாக்கிய தலைவர்களுக்கு கடவுள் நம்பிக்கை இருந்தது என்ற ரீதியில் சரித்திர உதாரணங்களை எடுத்து காட்டி விளக்கியுள்ளார். இது இந்தப் பகுதியில் இருக்கும் பல கிறிஸ்துவர் அல்லாத பெற்றோர்களுக்குப் பிடிக்கவில்லை. பள்ளி தலைமையாசிரியரிடம் புகார் கொடுத்தவுடன் அவர் வில்லியம்ஸிடம் கடவுள் பற்றி குறிப்பிடும் சரித்திர கோப்புகளைத் தன் பாடத்திட்டத்திலிருந்து எடுத்துவிடும்படி சொல்லியிருக்கிறார். வில்லியம்ஸ் உடனே கோர்ட்டுக்குப் போய்விட்டார். அரசியல் சாசனத்தைப் பற்றி முழுமையாக தன் மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்க முடியாமல் பள்ளி நிர்வாகம் தன் அடிப்படை உரிமையைத் தடுப்பதாக அவரது வழக்கு.

இதுதான் விஷயம். வில்லியம்ஸ் செய்ததில் தவறேதும் இல்லை என்று ஒரு சாராரும், அதெப்படி அவர் வகுப்பில் கடவுள் நம்பிக்கையை புகுத்தலாம்? அவர் ஒரு கிறித்துவர்; அதனால் தன் கிறிஸ்துவ மதத்தைத் தன் மாணவர்களிடம் பரப்ப இப்படி ஒரு வழியைக் கையாளுகிரார்; இது கிறிச்துவர் அல்லாத மற்ற மதத்தவர்களை மிகவும் பாதிக்கிறது" என்று மற்றொரு சாராரும் விவாதித்துக் கொண்டிருக்கின்றனர்.

மேலெழுந்தவாரியாக கிடைத்த விவரங்களை வைத்துப் பார்த்தால் வில்லியம்ஸ் செய்ததில் ஏதும் தவறு இருப்பதாக தெரியவில்லை. அமெரிக்க சாசனத்தை உருவாக்கிய தலைவர்கள் கடவுள் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால் அதை சரித்திர உண்மையாக சொல்வதில் தவறேதும் எனக்குத் தெரியவில்லை. சொல்லப்போனால் அமெரிக்க சரித்திரத்தில் / அரசியலில் இந்தக் கடவுள் நம்பிக்கை ஆழமாகவே இருக்கிறது. இங்கே எல்லா வணிக இடங்களிலும் உபயோகிக்கப்படும் Quarter - கால் சென்ட் - நாணயத்தில், டாலர் நோட்டுகளில், ஜியார்ஜ் வாஷிங்டன் படம் போட்டு பக்கத்தில் "Liberty" என்ற சொல்லும், " In God we Trust" என்ற அவரது வாக்கியம் பொறித்துள்ளது. வில்லியம்ஸ், அமெரிக்க சரித்திரத்தை இப்படி விரிவாக விளக்குவதற்காக கடவுள் பற்றி பேசியிருக்கலாம்.

ஆனால் சில பெற்றோர்கள் சொல்வது போல் நிஜமாகவே தம் மாணவர்களின் மத நம்பிக்கையில் ஊடுருவும் வகையில் அவர் நடந்து கொண்டிருந்தால் அது attempting to influence / or propagating one religion - என்ற வகையில் கண்டிக்கத் தக்கதே. இது விஷ்யமாக பலர் எழுதியதில் Bill Evers ( இவர் Mercury News தினசரியில் எழுதியதைத் தேடினேன். கிடைக்கவில்லை. கிடைத்தால், 9.12.04.தேதியிட்ட செய்தித்தாளைப் பாருங்கள்.) என்ற Educationist சொல்வதில் எனக்கும் உடன்பாடு உள்ளது. இவர் சொல்வது போல், மதம் பற்றி வகுப்புகளில் பேசுவது வேறு. மதத்தைக் கல்வியில் புகுத்துவது வேறு.

முந்தையது அறிவு சார்ந்த விஷயதானம். மற்றது, மதப் பிரசாரம். இரண்டுக்குமுள்ள வேறுபாடு நமக்கு நன்றாகவே தெரியுமே? வில்லியம்ஸ் இதில் எதைச் செய்தார் அல்லது செய்ய முனைந்தார் என்பது அவருக்கே வெளிச்சம்.

மொத்தத்தில் இந்த விவகாரம் பரபரப்பாக இன்று அமெரிக்காவில் பல இடங்களில் எதிரொலிக்கிறது - தேசீய ரீதியில் தொலைக் காட்சியில் மற்றும் பல ஊடகங்களில்.


உங்கள் அபிப்பிராயம் என்ன?


Wednesday, December 01, 2004

இங்கு வந்து இன்றுடன் இரண்டு வாரம் ஆகிறது. இந்த இடத்தைப் பற்றி நிறைய கேள்விப்பட்டுள்ளேன். சினிமாவில் / டிவியில் பார்த்துள்ளேன். அங்கு போய்தான் பாருங்களேன் -பார்த்தால் பிரமிப்பாக இருக்கும் என்று பலர் சொல்ல கேட்டுள்ளேன். சரி அப்படி என்னதான் இருக்கு இந்த இடத்தில் என்று ஒரு வழியாக வந்தும்விட்டேன். சரி என் முதல் அபிப்பிராயம் என்ன?
பலமுறை கேள்விபட்டும் பிம்பங்களைப் பார்த்தும் இருந்ததால் பிரமிப்பு இருக்கவில்லை. விமான நிலையத்தில் இறங்கியதும் முதலில் உறைத்தது சுங்கம் மற்றும் immigration வரிசைதான். அம்மாடி.. மிக நீளமாக இருந்த வரிசை இன்று முடிந்தால் போல்தான் என்று தோன்றியது. ஆனாலும், சரிதான் எவ்வளவு நீளமாக இருந்தால் என்ன? அதுதான் திறமையான நிர்வாகம் எங்கு திரும்பினாலும் என்று சொல்கிறார்களே, அதனால் வரிசை வேகமாக நகர்ந்துவிடும் என்று எதிர்பார்த்தேன். ம்..ஹ¤ம். சரியாக ஒரு மணி நேரம் ஆகியது. அதுவும் சொல்லிவைத்தாற்போல் நாங்கள் நின்றிருந்த வரிசையில் இருந்த அதிகாரி ஏனோ ஒவ்வொருவருக்கும் அதிக நேரம் எடுத்துக் கொள்வதாக தோன்றியது. இந்திய சுங்க / immigration பற்றி இனி அலுத்துக் கொள்ளக்கூடாது என்று முதல் அபிப்பிராயம் உதயம் ஆனது. ( அதற்கேற்றாற் போல் இங்கே உள்ளூர் செய்தித் தாளில் இன்று ஒரு உள்ளூர் வாசகர் கடிதம் எழுதியிருந்தார். இந்திய சுங்க /immigration சோதனைகள் எவ்வளவு திறமையாக /வேகமாக செயல்படுகின்றன என்று. எனக்கென்று இதெல்லாம் கண்களில் படுகிறதே?
சரி இப்போ புரிந்திருக்குமே எங்கே வந்து இறங்கியுள்ளேன் என்று? ஆமாம். அமெரிக்காவேதான். விஸா கிடைத்த பிறகு பயணத் திட்டம் விரிவாகப் போடலாம் என்று வெறுமே டிக்கெட் மட்டும் எங்கள் டிராவல் ஏஜண்டிடம் பதிவு செய்திருந்தோம். விஸா என்னவென்றால் கிடைத்தே விட்டது. அப்புறம் ஒரு வாரத்திற்குள் பயணம் - எல்லாம் மள மளவென்று ஆகிவிட்டது. ( அப்பாடி இங்கே அலைகளில் எட்டிப் பார்க்க முடியாதத்தற்கு விளக்கம் கொடுத்தாகிவிட்டது. எதை வைத்து விஸா கொடுக்கிறார்கள் அல்லது நிராகரிக்கிறார்கள் என்பது புரியவே இல்லை. போன வருடம் கிடைக்கவில்லை. இந்தவருடம் பேட்டி எடுத்த அதிகாரி நல்ல மூடில் இருந்தார் என்று வைத்துக் கொள்ள வேண்டும். இத்தனைக்கும் எங்கள் இரண்டு மகன்களும் இங்கே இருக்கிறார்கள் என்று குறிப்பிட்டு இருந்தோம். இருவரும் "பச்சைக் கார்டு" வைத்திருக்கிறார்களா என்று அந்த அமெரிக்க அதிகாரி, தூதரகத்தில் கொஞ்சம் கடுகடுவென்று கேட்ட விதத்தைப் பார்த்தால் சரி, நமக்கு இவர் கொடுக்கப்போவதில்லை என்று நினைத்தேன். ஆனால் ஏனோ தெரியவில்லை - பெய்தால் ஒரே மழை என்ற ரீதியில் 10 வருடம் என்று போட்டுக் கொடுத்துவிட்டார். அதேபோல் இங்கே இறங்கியதும் immigration அதிகாரி "எவ்வளவு நாள் தங்கப் போகிறீர்கள்? திரும்பிப் போகும் டிக்கெட்டைக் காண்பியுங்கள்" என்றார். சரி, எண்ணி 6 வாரம் என்று முத்திரைக் குத்தப் போகிறார் என்று நினைத்திருந்தேன். பார்த்தால், 6 மாதம் என்று குத்தியிருக்கிறார். சரிதான் இனி அடிக்கடி அமெரிக்கா வர வேண்டியதுதான். ( டிக்கெட் மட்டும் மரத்தில் எங்காவது காய்க்கிறதா என்று பார்க்கிறேன் !)
அமெரிக்கா பதிவுகள் இன்னும் ஒரு மாதம் தொடரும் - டிசம்பர் 29 வரை. இங்கே நான் இருபது சூரிய நகரம் - Sunnyvale / Sanfransico. அதுசரி... இந்தப் பக்கம் இருக்கும் வலைப் பதிவாளர்கள் யார் யாரோ??!! சற்று தெரியப் படுத்தினால் சந்திக்க முடியுமா என்று பார்க்கலாம்.

Sunday, November 14, 2004

தீபாவளியன்று நடந்த காஞ்சி நிகழ்வு எனக்கு ஒரு ஷாக் இல்லை. பெரிய பெரியவர் இருந்த காலத்தில் அவர் மேல் எனக்கு பெரும் மதிப்பு இருந்ததுண்டு. குறிப்பாக கல்கியில் வெளி வந்த அவரது "அருள் வாக்குகள்" பல எனக்கு பல சம்யங்களில் ஒரு மன உறுதியைக் கொடுத்துள்ளன. ( எனக்கு பிடிக்காமல் இருந்த அருள் வாக்குகளும் உண்டு- அது வேறு விஷயம்.) பொதுவாக அவை மதம் என்ற ஒரு குறுகிய வட்டத்துக்குள் அடைபடாமல் மனிதம் என்ற முறையிலேயே இருந்தன.

ஆனால் ஏனோ ஜெயேந்திரரை அப்படி மதிக்க தோன்றியதேயில்லை. பல சமயங்களில் அவரது போக்கு அவரது "துறவி" நிலைக்கு சம்பந்தமில்லாதது போல்தான் தோன்றியுள்ளது. அரசாங்க வழக்கறிஞர் கூறியதுபோல் நிறையபேர் உணரலாம் -"அந்தப் பதவியின் மேல் மிகுந்த மதிப்புண்டு. ஆனால் அதில் இருக்கும் நபர் மீதல்ல" என்று ஆணித்திரமாக சொல்லியிருக்கிறார்.

ஆனால் இந்த நிகழ்வு ஓர் ஆச்சரியம். வலைப்பதிவுகளில் நிறைய பேர் எழுதியதுபோல் சாதாரணர்களுக்கு ஜனநாயகத்தின் மேல் நம்பிக்கை மீண்டும் துளிர் விடும்படி ஒரு நிகழ்வு. - (கடவுளே, கண் படாமல் இருக்க வேண்டுமே! அரசியல் குறிக்கிட்டு நீதி காணாமல் போகாமல் இருக்க வேண்டுமே??!!) குற்றம் இன்னும் கோர்ட்டில் நிரூபணம் ஆகாத வரையில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு benefit of doubt கொடுக்க வேண்டுமென்பது மரபு. அதனால் வரும் நாட்களில் இது எபப்டி போகிறது என்று பார்க்கலாம்.

ஆனால் என் வருத்தமெல்லாம் இப்போ என்னவென்றால் பொதுவாக வெளி நாடுகளில் நிலவும் செழுமைக் குறித்து பேசும்போது அனேக இந்தியர்கள் பெருமையாக, " அங்கெல்லாம் நிறைய பணம் இருக்கு. சுத்தம் சுகாதாரம் எல்லாம் சரிதான்; ஆனால் நாம் ஆன்மீக பாதையில் நாம்தான் உலகுக்கே வழிகாட்டி. லௌகீக வாழ்வில் வேண்டுமானால் அவர்கள் தரம் உயர்ந்திருக்கலாம். ஆனால் நாம் அகத்தூய்மையில் மேம்பட்டு இருக்கிறோம்...." என்ற ரீதியில் பிரமாதமாக சமாதனம் சொல்லிக்கொள்வோம். இதே வாரம் சென்னையில் இன்னொரு சந்நியாசியும் கைது என்ற செய்தி வந்த இரண்டு நாளில் இந்தக் காஞ்சி மடம் செய்தி. அகமாவது? புறமாவது? எங்கே போய் முகத்தை வைத்துக்கொள்ள?

அது ஒரு பக்கம் இருக்கட்டும். ஆன்மீகம் என்று நினைத்துக்கொண்டு எதை வேண்டுமானலும் யாரை வேண்டுமானாலும் நம்பும் மக்களை நினைத்தால் ஒரு பக்கம் கோபமும் ஒரு பக்கம் பரிதாபமும்தான் எழுகிறது. புற்றீசல் போல் கிளம்பும் அதிக வட்டி நிதி நிறுவனங்கள் போல் self styled ஆன்மீகவாதிகளும் சமீபகாலமாக எக்கச்சக்கமாக முளைக்கிறார்கள். ஆனால் ஒவ்வொருவருக்கும் ஏகப்பட்ட பக்தர்கள் எப்படியோ உருவாகிவிடுகிறார்கள். பலமுறை உண்மை நிலைகள் வெளிப்பட்டபின்னும் ஏன் இப்படி மக்கள் விட்டில் பூச்சி மாதிரி விழுகிறார்கள்? என்ன தேடி இவர்கள் பின்னால் செல்லுகிறார்கள்? பணம்? செல்வாக்கு? மன அமைதி?

தங்கள் பிரச்சனைகளுக்கு அடிப்படைக் காரணம் ஆராய்ந்து பாஸிடிவ் நோக்குடன் தீர்வு தேடுவதைவிட்டுவிட்டு - பிரச்சனையும் தீர்வும் தங்களுக்குள்ளேதான் இருக்கிறது என்பது புரியாமல் எதையோ நிழலைத் துரத்திக்கொண்டு போகிறார்கள் என்று தோன்றுகிறது. அதுவும் பல "குருமார்களின்" பக்தர்கள் தம் தம் குருதான் கடவுள் என்று நிஜமாக நம்பும்போது இவர்களை நினைத்து பரிதாபப்படாமல் என்ன செய்ய? இந்த ரீதியில் எத்தனை கடவுள்கள் இப்போது நடமாடிக்கொண்டிருக்கிறார்களோ? கணக்கெடுத்து மாளாது.

Tuesday, November 09, 2004

பத்திரிகைகளில் மற்றும் டிவியில் அல்லது பில் போர்ட்களில் வரும் விளம்பரங்கள் சில சட்டென்று நம் கவனத்தைக் கவரும்; சில, நெகிழ வைக்கும்; சில, வாய் விட்டு சிரிக்க வைக்கும்; இன்னும் சில அடக் கடவுளே, இப்படிக்கூடவா அபத்தமாக இருக்கும் என்று எண்ண வைக்கும்.

பல சமய்ங்களில் "அமுல்" பானர்கள் சட்டென்று ஒரு புன்முறுவலைக் கொண்டு வரும். "நீங்கள் எங்கே போனாலும் தொடர்ந்து வரும்" ஹட்ச் செல் போன் விளம்பரம் பார்த்து நெகிழாதவர்கள் இருக்க முடியுமோ? பல மணி நேர சினிமாக்களில், சீரியல்களில், குறும்படங்களில் அல்லது ஆயிரக்கணக்கான பக்கங்களிலும் சொல்லும் சேதிகளைக் கூட, சில வினாடிகளே ஓடும் விளம்பரப் படங்களில் சொல்லிவிடும் அந்த குவியம் இருக்கே, அது எனக்கு மிகவும் பிடிக்கும். Cannes Golden Lion என்ற விருது, விளம்பர உலகின் " நோபல்".

இன்றிலிருந்து அவ்வப்போது இப்படிக் கண்களில் படும் விளம்பரத் துண்டுகளை "அலைகளின் கோல்டன் லயன்" என்று இங்கே பதியலாம் என்று இருக்கிறேன்.
இந்த வரிசையை ஆரம்பித்து வைப்பது - "மதர்ஸ் ரெஸிபி" நிறுவனத்தின் அப்பளாம் விளம்பரம் ! பாரம்பரியம் மிக்க குடும்பம். அம்மா பெண்ணிற்கு எண்ணைக் குளியல் செய்து தலைவாரி, ஒரு முழம் பூவைத் தலையில் வைக்கிறாள். வாய்க்கு ருசியாக, எல்லாம் பாரம்பரிய முறையில் தயாரிக்கப்பட்ட பதார்த்தங்கள் சாப்பாட்டு மேஜையில் தயாராக உள்ளன. சாப்பிட வருமுன் பேத்தி அப்பளாம் ஒன்றை எடுத்துக்கொண்டு ஓடுகிறாள். அப்பளாம் சாப்பிட போட்டியிடும் பாட்டியிடம் சிரித்துக்கொண்டே நீட்டுகிறாள். அதைப் பாட்டி கடிக்கும்போது பேத்தியின் கண் பட படப்பதை ( அப்பளாம் "சத்தத்தில்" !!) க்ளோசப்பில் காட்டுகிறார்கள். அந்த ஒரு ஷாட் போதும். கலை நயம் மிக்க ஒரு ஷாட்டில் பொருளின் நேர்த்தி சொல்லப்பட்டு விடுகிறது.

இந்த வார அலைகள் கோல்டன் லயன் விருது.......... goes to " மதர்ஸ் ரெசிபி" :-)

Friday, November 05, 2004

இன்னும் கொஞ்சம் தேர்தல் அலசல்

ஐந்தாவது முறையாக இந்தப் பதிவை ஏற்றுகிறேன். என்ன ஆச்சு என்று தெரியவில்லை. முதல் வரியும், கடைசி வரியும்தான் பதிவாகிறது.

அமெரிக்க தேர்தல் பற்றி இன்னும் எழுதலாம் என்று நினைத்திருந்தேன். என் வேலையை இவர் சுலபமாக்கி விட்டார். இந்தக் கட்டுரையில் உள்ள கருத்துக்களுடன் எனக்கு முழு உடன்பாடு உள்ளது.
நேற்று ஹிந்துவில் வந்த Fear Was the Key என்ற கட்டுரை.


சுட்டி இங்கே.




தென்னாசிய பத்திரிகையாளர் அமைப்பு ( SAJA) நேற்றிரவு ஒரு வலை செமினார் நடத்தியது. இந்த அமைப்பின் முதல் வலை செமினார் இது. India Abroad பத்திரிகையாளர் ஆஸிஸ் ஹனீபா, SAJA நிறுவனர்களில் ஒருவரான ஸ்ரீநாத் ஸ்ரீனிவாசன் இவர்களுடன் பாகிஸ்தான், பங்களாதேஷ் பத்த்ரிகையாளர்களும் பங்கேற்றார்கள். உலகின் பல இடங்களிலிருந்தும் யார் வேண்டுமானாலு பங்கு கொண்டு கேள்வி கேட்கலாம். குறித்த நேரத்தில் என் கணினி வழியே பிசிரில்லாமல் ஸ்ரீநாத் னிவாசனின் குரல் 11.30(IST)க்கு வர ஆரம்பித்தது. ஆரம்பத்தில் பேச்சாளர்கள் பொதுவாக இந்தத் தேர்தலில் வெற்றி பெற்ற இரண்டு இந்திய வம்சாவளி அமெரிக்கர்கள் ( ஜிண்டால் மற்றும் ஸ்வேதா) பற்றியும் எப்படி அதிக அளவில் இந்தியர்கள் அமெரிக்க அரசியலில் பங்கேற்கிறார்கள் என்றும் பேசிக்கொண்டிருந்தார்கள். ரொம்ப நேரம் விழித்திருந்து முழுதும் கேட்க முடியவில்லை. நான் தூங்கி விழும் முன் காதில் விழுந்த துண்டு விவரங்கள்.

1. கெர்ரிக்காக 400 / 500 இந்தியர்கள் உழைத்திருக்கிறார்கள்.
2. பாகிஸ்தானியரும் இந்தியர்களும் எவ்வளவு எலியும் பூனையுமாக இருந்தாலும் கெர்ரி வர வேண்டும் என்பதில் ஒற்றுமையாக இருந்திருக்கிறார்கள். ( வேறு என்ன? ஈராக் போர் எதிர்ப்புதான் காரணம்.)
3. புஷ் மன்மோஹன் சிங் அழைப்பை ஏற்று விரைவில் இந்தியா வரலாம். அப்படி வந்தால் பாகிஸ்தானும் எட்டிப் பார்ப்பாரா? அல்லது இந்தியாவுக்கு ஸ்பெஷல் வருகையா?
4. இந்தியர்கள் வாக்களித்த விதத்தை அலசிய ஒரு பத்திரிகையாளர் சொன்ன தகவல் - மூத்த தலைமுறை இந்தியர்கள் புஷ்ஷ¤க்கும், இளைஞர்கள் கெர்ரிக்கும் ஆதரவு அளித்திருப்பதாக தெரிவித்தார். (ஹ்ம்ம்.. இந்திய இளைஞர்கள் எண்ணிக்கை பெரியவர்களைவிட குறைவாக இருந்திருக்கு போலிருக்கு) 5.இளைய தலைமுறை இந்திய பத்திரிகையாளர்கள் அதிகரித்திருக்கிறார்கள்.
6. outsourcing - H1B விஸா சமாசாரங்கள் பற்றி கவலைகளுக்கு தேவையில்லை. ஒருவர் சொன்னார் - H1B விஸா 90,000 க்கு அதிகரிக்க வேண்டும் என்று.

அவ்வளவுதான். ஈராக் போர் போன்ற சமாசாரங்கள்? ம்ஹ¤ம். சுத்தமாக அதெல்லாம் அவர்களுக்கு முக்கியமாக படவில்லை. அனுபவம் வாய்ந்த பத்த்ரிகையாளர் செமினாரில் இன்னும் நிறைய எதிர்பார்த்தேன்.

இந்த செமினாரை SAJA தளத்தில் கேட்கலாம்.

Wednesday, November 03, 2004

அமெரிக்க தேர்தல் ஒரு Cliff Hanger ?? இதற்கு தமிழில் என்ன சொல்லலாம்?

அப்பாடா.. ஒரு வழியாக அமெரிக்க தேர்தல் முடிந்.........! அட கஷ்டமே. முடிந்துவிட்டது என்று சொல்ல முடியாது போலிருக்கே. தேர்தல் முடிந்த பிறகுதான் சுவாரசியமே தொடங்குகிறது என்று அவர்களும் கற்றுகொண்டுவிட்டார்கள் போல. சென்ற முறை ப்ளோரிடா என்றால் இந்த முறை ஒஹையோ. சென்ற முறை புஷ் இருந்த நிலையில் இன்று கெர்ரி. இந்த ரீதியில் ஒரு வேளை சென்ற முறை புஷ்க்கு அடித்த அதிர்ஷ்டம் மாதிரி இந்த முறை கெர்ரிக்கும் சான்ஸ் அடிக்குமோ?

எனக்குத் தெரியாது. அமெரிக்க தேர்தல் முறைகளை நன்கு தெரிந்தவர்கள் யாராவது சொன்னால் தேவலை. ஒரு லட்சத்து 75000 க்கு மேல் provisional ballots மூலமாக இன்னும் வாக்குகள் எண்ணப்படவேண்டும் என்கிறார்கள். ஒஹையோ மாநில செயலாளர் நவம்பர் 15 தேதி ஆகும் என்கிறார். அதுவரை.....??!! அமெரிக்கர்கள் அப்படியெல்லாம் பொறுமையாக காத்திருப்பார்களா? பின்னே வேற என்ன செய்யமுடியும்?

சரி புஷ் திரும்பி வந்தாச்சு என்றே வைத்துக்கொள்வோம். கெர்ரிதான் இந்தியாவுக்கு சாதகமாக இருப்பார் என்று இந்திய ஊடகங்கள் கூறி வந்தன. திரும்பி வந்த புஷ் இந்தியாவுக்கு எவ்வளவு தூரம் அனுசரணையாக இருப்பார் என்று பார்க்க வேண்டும். சென்ற முறை புஷ் வென்றபோது அவரைப் பற்றி நிறைய ஜோக்ஸ் இணையத்தில் சுற்றின. குறிப்பாக அவரது IQ லெவல் பற்றி. புத்திசாலியோ இல்லையோ மக்கள் நம்பிக்கையைப் பெற்றவர் என்றுதான் இந்தத் தேர்தல் முடிவுகள் கூறுகிறது. இராக் போர், outsourcing, செப்டம்பர் 11 கோடிக்காட்டிய தீவிரவாதம், இவைகள்தாம் இந்த தேர்தலில் முக்கியமாக அலசப்பட்ட விஷயங்கள். குறிப்பாக ஈராக் போர். புஷ்ஷ¤க்கு மக்கள் ஆதரவு அளித்ததால் அமெரிக்கர்கள் ஈராக் போரை ஆதரிக்கிறார்களா? தெரியவில்லை. என் ஊகம் என்னவென்றால், அமெரிக்கர்களைப் பெரிதும் பாதித்த விஷயம் செப்டம்பர் 11. அந்த சமயம் புஷ் " we'll flush them out of holes" என்ற ரீதியில் ஒரு தேசீய உணர்வைத் தூண்டி மக்களிடம் ஒரு எழுச்சியை உருவாக்கியது பலருக்கு அவரிடம் நம்பிக்கையைக் கொடுத்திருக்கலாம். தவிர என்னதான் இராக் போர் போன்ற வெளியுறவு சமாசாரங்கள் அலசப்பட்டாலும் அங்கே உல்ளவர்களுக்கு உள் நாட்டுப் பிரச்சனைகள்தாம் முக்கியமாக தோன்றியிருக்க்கும். பொருளாதாரத்தைப் பொறுத்தவ்ரை அமெரிக்கா பின் தங்கவில்லை. மற்றபடி உள் நாட்டுப் பிரச்சனைகளான ஓரின திருமணம், அபார்ஷன், outsourcing, இப்படிபட்ட விஷயங்களில் கெர்ரியின் நிலைப்பாட்டைவிட புஷ்ஷின் நிலைப்பாடு மக்களிடம் இன்னும் நம்பிக்கையைக் கொடுத்திருக்கலாம். அல்லது, பொத்தாம்பொதுவாக, "known devil" syndrome ஆக இருக்கலாம். சமீப காலமாக அமெரிக்க ஜனாதிபதிகள் இரண்டிரண்டு முறை இருக்கும் வழக்கம் இருக்கு போலிருக்கிறது. 1981 -89 ரீகன் தொடர்ந்து இருந்தார். நடுவில் புஷ்ஷின் அப்பா சீனியர் புஷ் நாலு வருடம் இருந்துவிட்டு போனபின், கிளிண்டன் வந்தார். இரண்டு முறை தொடர்ந்து வென்றார் - 1993-2001. இந்த ரீதியில் பார்த்தால் புஷ்ஷ¤க்கு இரண்டு தடவை ஒயிட் ஹவுஸ் வாசம் போலிருக்கு.

Monday, November 01, 2004

அட, மூன்று மாதம் ஓடியே போய்விட்டதே !!

ராஜா, பிரகாஷ் - மூன்று மாதம் விடுமுறை என்றால் பத்திரிகைதான் துவங்கப்போகிறேன் என்று என் மேல் இப்படி ஒரு அசாத்திய நம்பிக்கை வைத்துவிட்டீர்களே !! அதற்கு முதலில் நன்றி. ஆனால் உங்களை ஏமாற்றமடையச் செய்வதற்கு வருந்துகிறேன். அப்படி எல்லாம் பத்திரிகை தொடங்கும் அளவு இன்னும் தைரியம் (??!!) வரவில்லை.
பின்னே? மூன்று மாதம் அப்படி என்ன செய்வதற்காக விடுப்பு என்கிறீர்களா?

அதையேன் கேட்கிறீர்கள்? ரொம்ப நாட்களாக எனக்குள் ஓர் ஆசை. கதையெழுத வேண்டும் என்று. சொல்லப்போனால் 1972ல் ஜர்னலிஸம் கோர்ஸ் படித்தபோது செய்தி ரிபோர்டிங் தவிர புனைகதையெழுதவும் பயிற்சி இருந்தது. கோர்ஸ் முடிவில் சிறப்பு பாடமாக ரிபோர்ட்டிங் எடுத்துக்கலாமா அல்லது புனைகதையா என்ற கேள்வி எழுந்தபோது என் ஓட்டு பின்னதற்கே விழுந்தது. புனைகதையில் புலமை வந்ததோ இல்லையோ தெரியாது. ஆனால் தேர்ச்சி பெற்றதாக ஒரு சர்டிபிகேட்டை வாங்கிவிட்டேன். அப்புறம் ஏதோ அவ்வப்போது எப்போதாவது எழுதி ·பெமினா, வுமன்ஸ் இரா (அட நிஜமாதாங்க...!!) என்று அனுப்பி "பிரசுரிக்க முடியாமைக்கு வருந்துகிறோம்" சீட்டுகளை வாங்கி சேர்த்துக்கொண்டிருந்தேன். இந்த சமயத்தில்தான் இதயம் பேசுகிறது பத்திரிகையில் (1986 என்று ஞாபகம்) ஒரு போட்டி அறிவிப்பு. ஜெயராஜ் வரைந்த ஒரு படத்தைப் போட்டு படத்துகேற்ற ஒரு சிறுகதை எழுத வேண்டும். அப்போது குழந்தைகளுடன் பாலக்காட்டிற்கு ( பெற்றோர்கள் அங்கே இருந்தனர் அப்போது) சென்றிருந்தேன். ஒரு பெண் ஒரு சிறுவனுக்கு தலைவாரிவிடுவதைப் போலிருந்த அந்தப் படத்தைப் பார்த்ததும் எனக்குள் சட்டென்று ஒரு கற்பனை உருவாயிற்று. உடனேயே அதை கதையாக எழுதி போட்டிக்கு அனுப்பினால் என்ன என்று தோன்றிவிட்டது. அவ்வளாவுதான். சட்டென்று எழுத ஒரு நல்ல பேப்பர் கூட உடனே அகப்படவில்லை. கையில் அகப்பட்ட கவரைப் பிரித்து (காகிதச் சிக்கனத்தில் காந்திஜி, ராஜாஜி இவர்களின் நேர் வாரிசு நான்தான் என்று நினைப்பு ) அப்படியே ஒரு கயிற்றுக் கட்டிலில் உட்கார்ந்து எழுத ஆரம்பித்துவிட்டேன். அரை மணியில் கதை ரெடி. அப்புறம் நல்ல பேப்பரில் நகலெடுத்து ஒரு 15 பைசா( அப்போல்லாம் அதான் விலை என்று நினைக்கிறேன்) கவரில் வைத்து என் டில்லி விலாசத்துடன் அனுப்பிவிட்டு டில்லிக்கும் போய் சேர்ந்துவிட்டேன்.

அப்புறம் சுத்தமாக மறந்தும் போயாச்சு. கொஞ்ச நாள் கழித்து அம்மாவிடமிருந்து ஒரு கடிதம். " உன் முதல் கதையே முதல் பரிசு கதையாக வெளிவந்தது பற்றி எனக்கு ரொம்ப சந்தோஷம்" என்று எழுதியிருந்தார். எனக்கு ஒரு வினாடி சத்தியமாக ஒன்றும் புரியவில்லை. அப்புறம் மெள்ள உறைத்தது. உடம்பெல்லாம் பாய்ந்த ஒரு சந்தோஷம் இருக்கிறதே.... உங்களில் பலருக்கு இது புரியும்.

முதல் பரிசு முழுசாக ஐம்பது ரூபாய். என் எழுத்து எனக்கு சம்பாதித்து கொடுத்த முதல் வரும்படி. அடுத்த நாள் இதயம் பேசுகிறது பத்த்ரிகையிலிருந்து பரிசுத் தொகைக்கான காசோலையும் பிரசுரமான இதழ் ஒன்றும் தபாலில் வந்தது. அதோடில்லை. கூடவே அன்று தபால் பெட்டியில் நிறைய கடிதங்கள் - டில்லி விலாசம் கொடுக்கப்படிருந்ததால் நிறைய வாசகர்கள் நேரடியாக பாராட்டி எழுதியிருந்தார்கள். அட உன் கதைக்கு ரசிகர் கடிதங்கள் கூட (!!!) வந்துள்ளதே என்று குடும்பத்தில் அன்பான (!!) சீண்டல்கள் வேறு.
அடுத்த கதையெழுதிய அனுபவம் பூடானிலிருந்தபோது. தெரிந்த நேபாள குடும்பத்தில் நடந்த சம்பவத்தை வைத்து எழுதிய கதை - குமுதத்தில் வெளி வந்தது. அதுக்கும் ஜெயராஜ்தான் படம்.

அவ்வளவுதான். அதற்கப்புறம் எப்படியோ என் எழுத்து வண்டி பாதை மாறிபோய் பத்திரிகையுலகத்தில் திரும்பிவிட்டது. கதை எழுதுவது பக்கமே போகவில்லை. எழுதுவதாவது? செய்தித்துறையில் கவனம் அதிகரிக்க, அதிகரிக்க, கதைகள் படிப்பதே கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துபோய் இன்று சுத்தமாக நின்றுவிட்டது. சமீபத்திய திசைகளில் குறிப்பிட்டுள்ள காணாமற் போனவர்களில் நானும் ஒருத்திதான்.

ஆனாலும் அவ்வப்போது அம்மா கேட்டுக்கொண்டிருப்பார். " நீ எப்போ கதை எழுதப்போகிறாய்" என்று. நானும் இதோ அதோ என்று சொல்லி வந்தேன். அவர் கேட்டது என் மனதிலும் சுழன்று கொண்டுதான் இருந்தது. அவருக்கு கதைகள் படிப்பதில் மிக ஆர்வம். அவருக்கு சம்பந்தமில்லாத கட்டுரைகளில் என் எழுத்து போகிறதே - அவரால் ரசிக்க முடியாமற் போகிறதே என்றும் தோன்றியிருக்கலாம். இதனால் நடுவில் ஒரு முறை சில வருடங்கள் முன்பு அவரது விருப்பத்தைப் பூர்த்தி செய்யவாவது ஒரு புனைகதை எழுத வேண்டும் என்று தோன்றிவிட்டது. அப்போது டில்லியில் இருந்த சமயம். மனதில் ஒரு கதை மேக மூட்டமாக தோன்ற, உடனேயே அம்மாவுக்கு போன் போட்டு " நானும் கதை எழுத முடிவு செய்துவிட்டேன்" என்று ஓர் அறிவிப்பு செய்து விட்டேன்.

அங்கேதான் ஆரம்பித்தது என் சங்கடம். அம்மாவிடம் எழுதிகிறேன் என்று பெரிதாக சொல்லிவிட்டேனே தவிர அது அவ்வளவு எளிதாக இல்லை என்று விரைவிலேயே புரிந்துபோய்விட்டது. சில வருடங்கள் கழிந்து அம்மா போனபின்னரும் என் கதை உருவாகும் அடையாளமேயில்லை. வழக்கமான - பழக்கமான - வேலைகளிலேயே கவனம் போனதே தவிர, ம்ஹ¤ம். நானாவது கதையாவது. எனக்கே நம்பிக்கை போய்விட்டது. ஆனால் அவ்வப்போது என் "கதை எழுதும் ஆர்வம்", நண்பர்களுடன் பேசும்போது வெளிப்படும்.
இந்த சம்யத்தில்தான் என் நண்பர்கள் இருவர் என்னைக் கதை எழுதச் செய்தே ஆக வேண்டும் என்று முடிவு கட்டி விட்டனர். விதம் விதமாக - கடிந்துகொண்டு, சீண்டலாக, ஆர்வம் பல காட்டி, அவர்கள் போட்ட அஸ்திரங்களில் நானும் ஒருவாறு அசைந்து, இரண்டு வருடம் முன்பு நிஜமாகவே நாவல் ஒன்று எழுதத் தொடங்கி விட்டேன் - இந்த முறை ஒரு உத்வேகத்துடன். அதாவது அப்படி நினைத்தேன். ம்ஹ்ம். என் சோம்பேறி புத்தி எங்கே போகும்? மறுபடி மனம் கொஞ்சம் கொஞ்சமாக கதையிலிருந்து நழுவி "பழைய குருடி..." கதையாகிற்று. அடி மனதில் ஒரு குறுகுறுப்பு மட்டுமே பாக்கி.
என் நண்பர்களுக்கே என் மேல் நம்பிக்கை போய்விட்ட சமயம், மனதில் மறுபடி கதையெழுதும் ஆர்வம் மெல்ல தலைத்தூக்கி பார்த்தது. இந்த முறை ஏமாறக்கூடாது என்று முடிவுகட்டிவிட்டேன்.

அதன் முதல் கட்டம்தான் வலைப்பதிவு பக்கம் காணாமல் போய்விடுவது. மூன்று மாதத்தில் என் நாவல் முடியும் என்று நான் கனவு காணவில்லை. ஆனால் தொடங்கி தேரை ஒரு பக்கமாக நகர்த்த ஆரம்பித்துவிட்டேனென்றால் அப்புறம் நகர்த்துவது எளிதாகும் என்பது என் எண்ணம்.

இப்போது ஓரளவு அதில் வெற்றி. தேர் நகர ஆரம்பித்துவிட்டது. போகும் திசையும் தெளிவாக உள்ளது. இன்னும் சில மாதங்களில் முடித்துவிடுவேன் என்று நம்பிக்கையும் வந்துவிட்டது. ஆனால் ஒரு ரோலர் கோஸ்டரில் போகும் அனுபவம் இது. எனக்கு ரொம்ப புதுசு. கதையெழுது என்று சொன்ன அம்மாவையும், அக்கறையாக என்னைத் தூண்டிய நண்பர்களையும் ( அவர்கள் யார் என்று என் நாவலின் முன்னுரையில் அல்லவா கூற வேண்டும்? - ஆக, முன்னுரைக்கு வந்துவிட்டேன் - நாவல் எழுதி முடித்துவிடுவேன் என்றுதான் தோன்றுகிறது ) நினைத்துக் கொள்கிறேன்.

இதன் நடுவில் என் மூன்று மாத 'விடுப்பு' முடிந்துவிட்டதால் இங்கே ஒரு விஸிட்.

வழக்கம்போல் அலைகள் இன்று முதல் வீசும். ஆனால் அவ்வப்போது காணமற்போய்விட்டால், எங்கே போய்விட்டேன் என்று இனி உங்களுக்குப் புரியும்.

Friday, July 30, 2004

முக்கியமான வேலை ஒன்றில் மூழ்க இருப்பதால் ( அது என்ன என்று வெற்றிகரமாக ஆனபின் சொல்கிறேன்!) மூன்று மாதத்திற்கு அலைகளை சற்று நிறுத்தலாம் என்று நினைக்கிறேன். அடுத்து நவம்பர் 1ந் தேதி மீண்டும் சந்திப்போம்.அப்படி ஒரு வேளை நடுவில் பிரளயம், பூகம்பம் அல்லது பாகிஸ்தான் - இந்தியா நட்புறவு பலம் போன்ற செய்திகள் ஏதாவது நிகழ்ந்து அதற்கு அருணா சொல்வது என்ன என்று தெரிய வேண்டுமே (!!!!) என்று நினத்தீர்களானாலும் நவம்பர் மாதம் வரைப் பொறுத்திருக்க வேண்டுகிறேன் :-)

Tuesday, July 27, 2004

உணர்வுகள் என்னமோ அதேதான். பதவிதான் வேறு.

என்ன இப்படி ஒரேடியாகக் காணாமல் போய்விட்டேன் என்று நினைக்கிறீர்களா?கலிபோர்னியாவில் இருக்கும் மகன் - மூத்தவன் - மூன்று வருடம் கழித்து மூன்று வார விடுப்பில் வருகை. ஒவ்வொரு நிமிடமும் முக்கியம் என்று தோன்றுவது இயல்புதானே? அரட்டை, ஊர் சுற்றல் சமையல், சாப்பாடு, நண்பர்கள் / உறவினர்கள் சந்திப்பு என்று மூன்று வாரம் ஓடிப்போய் விட்டது. நான் கல்லூரியில் படிக்கும்போது விடுமுறைக்கு வீட்டுக்குப் போகும்போதும் பிறகு திருமணமாகி பிறந்த வீட்டுக்கு ஒவ்வொரு முறை போகும்போதும் அம்மா / அப்பா எப்படி உணர்ந்திருப்பார்கள் என்று இப்போ எனக்குப் புரிகிறது. அப்போதும் ஊருக்குப் போவதற்கு முன்னும் பின்னும் மனசில் ஒரு பாரம் இருக்கும். சொல்லத்தெரியாத வேதனையும் அதே சமயம் யதார்த்தத்தை ஏற்றுகொள்ளும் மனப் பக்குவமும் என்று ஒரு கலவை உணர்வு மனசில் சுழலும். காலச்சக்கரத்தில் இப்போ நான் நகர்ந்து என் பெற்றோர் இருந்த இடத்துக்கு வந்துள்ளேன். உணர்வுகள் என்னமோ அதேதான். பதவிதான் வேறு.

அதுசரி. வலைப்பதிவுகளில் இந்த மூன்று வாரம் என்ன ஆச்சு என்று மேய வேண்டாமோ? பதிவுகள் விரைவில் வழக்கம்போல் தொடரும்.

Monday, July 12, 2004

மீண்டும் விடுப்பு !! :-)

மறுபடியும் ஊருக்குப் போகிறேன். கொஞ்ச நாள் இங்கே எட்டிப்பார்க்க முடியாது. போய்விட்டு வந்து பிறகு சந்திக்கிறேன்.

Saturday, July 10, 2004

சாதாரணர்களை மனதில் கொண்டு அமைக்கப்பட்ட பட்ஜெட்.

சொந்த வேலையாக டில்லிக்கு சென்றுவிட்டதால் அலைகளில் சென்ற சில நாட்களாக பதிவு செய்ய முடியவில்லை. பட்ஜெட் பற்றி கூட இன்னும் கூர்ந்து கவனிக்க நேரம் கிடைக்கவில்லை. ஆனால் மேலெழுந்தவாரியாக ஒரு பறவைப் பார்வைப் பார்த்ததில் மனதில் சந்தோஷம்தான் நிரம்புகிறது. நிஜமாகவே கண்ணில் விளக்கெண்னெய் விட்டுக்கொண்டு சிதம்பரம் உழைத்திருக்கிறார். இதுவரை யாருக்கும் தோன்றியிராத வழிகளில் திட்டம் போட்டுள்ளார். அரசு வருவாயை அதிகரிக்க அந்த பங்குச் சந்தை பரிமாற்ற வரி ( tax on securities transactions) Brilliant Idea. ஆனால் பங்குச் சந்தைகாரர்களுக்குதான் படு கடுப்பு.

அதுபோல் Education Cess 2 % சூப்பர் ஐடியா. வரி செலுத்தும்போதும் ஒரு நல்ல காரணத்துக்காக கொடுக்கிறோம் என்று திருப்தியும் இருக்கும். ஆனால் இதில் எனக்கு ஓரிரண்டு கவலை இருக்கு. ஒன்று, இதன் மூலம் இந்த வருடம் மட்டும் - பாக்கி இருக்கும் 8 மாதங்களில் - 2500 கோடி ரூபாய்கள் வரும் என்று சொல்லப்படுகிறது. அடுத்த வருடங்களில் முழு வருட வருவாய் 4500 அல்லது 5000 கோடிகளைத் தொடும் என்றும் சொல்கிறார்கள். என் கவலை என்னவென்றால் இப்படி வசூலிக்கப்படும் பணம் சரியாக தேவையான திட்டங்களில் - தேவையுள்ள இடங்களுக்கு சென்றடைய வேண்டுமே என்பதுதான். இந்தப் பணத்திற்கு தனியாக கணக்கு இல்லாத நிலையில், இது மொத்தமாக இதர வளர்ச்சி திட்டங்களுக்கு என்று ஒதுக்கபட்டுள்ள ரூபாய் 10000 கோடிக் கணக்கில் சேர்ந்துவிடும். அதிலிருந்து பின்னர் கல்வி சம்பந்தமான திட்டங்களுக்கு எடுத்துக்கொள்ளப் படும். இப்படியில்லாமல் இந்த கல்விக்கென்று வசூலிக்கப்படும் வரிப் பணம் கல்வித் துறைக்கு மட்டுமே முழுவதும் செலவழிக்கப்பட்டால் - செலவழிக்கப்படும்படி சரியாக திட்டங்கள் அமைக்கப்பட்டால் நன்றாக இருக்கும்.

இன்று தனியார் பள்ளிகள்தாம் அரசு பள்ளிகளைவிட தரமான கல்வியைத் தருகின்றன என்று ஒரு கருத்து இருக்கிறது. அது ஓரளவு உண்மையும் கூட. அதே சமயம், உயர் கல்வி விஷ்யத்தில் நிலைத் தலைகீழ். ஐ ஐ டி, REC, அண்ணா பல்கலைக் கழகம், டில்லியில் AIIMS மருத்துவ ஆராய்ச்சி நிலையம் என்று அரசு கல்வி நிலையங்கள்தாம் தரத்தில் உயர்ந்து நிற்கின்றன. அரசு பள்ளிகளும் இந்தத் தரத்தைத் தொடும் அளவு கவனமாக பணம் உபயோகிக்கப்பட வேண்டும். நமது பள்ளிகளில் ஆரம்ப நிலையில் பல குழந்தைகள் சேர்ந்தாலும், பாதியிலேயே படிப்பை நிறுத்திவிடுவது, அண்டை நாடுகளைவிட இந்தியாவில் அதிக சதவிகிதம் என்று UNESCO ஆராய்ச்சி கூறியுள்ளது. இதற்கு ஒரு முக்கிய காரணம் அரசு பள்ளிகளில் படிக்கும் சூழ்நிலை ஆர்வத்தைத் தூண்டும் வண்ணம் இல்லையென்பது மட்டுமல்ல; பயமுறுத்தி பள்ளி என்றாலே விலகி ஓடும் வண்ணமும் பல பள்ளிச் சூழல்கள் உள்ளன. இந்த நிலை மாற வேண்டும். ஆசிரியர்களின் சொல்லிக்கொடுக்கும் தரத்தை அதிகரிக்கலாம்; கல்வியார்வத்தைத் தூண்டும் சாதனங்களை வழிமுறைகளைப் பின்பற்றலாம்; பல பள்ளிகள் மரத்தைட்யிலும் கூடாரங்களிலும் உள்ளன. நல்ல சுகாதாரமான கட்டிடங்களை எழுப்பலாம்; கணினி, மற்றும் நவீன பரிசோதனை சாலைகள் தவிர, குடிதண்ணீர், உணவு போன்ற அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்கலாம். இதற்கெல்லாம் இந்தக் கல்வி வரிப் பணம் உபயோகிக்கப்படவேண்டும்.

பட்ஜெட்டில் சில குறிப்பிட்ட துறைகளில் Foreign Direct Investment அதிகரிக்கப்பட்டிருக்கிறது. வரவேற்க வேண்டிய விஷயம். சிறு சேமிப்பாளர்களுக்க்கு / மூத்த குடிமகன்கள் சேமிப்புக்கு அபாயம் இல்லை. தகவல் தொழில் நுட்பத் துறையில் கணினி விலை இன்னும் குறைய ஆரம்பித்துவிடும். பொதுவாக சாதாரணர்களை மனதில் கொண்டு அமைக்கப்பட்ட பட்ஜெட். முக்கியமான விஷயம், இந்த பட்ஜெட்டில் அதிகமாக Roll Back இருக்காது என்று நினைக்கிறேன். எ·கு -Steel சுங்க வரி விஷயம் மட்டும் மறு பரிசீலனைக்கு வரலாம்.

Thursday, July 01, 2004

"வரவு எட்டணா செலவு பத்தணா "

நிதி அமைச்சர் சிதம்பரம் எக்கச்சக்கமாக கணக்குப் போட்டுக் கொண்டிருக்கிறார். 8 ம் தேதி அளிக்க வேண்டிய பட்ஜெட் பற்றி சொல்லவில்லை. அதைத் தவிரவும் இன்னும் என்ன எல்லாம் செய்து செலவுகளைக் குறைத்து கையிருப்பை எப்படி புத்திசாலித்தனமாக கையாளலாம் என்று கணக்குப் போட்டுகொண்டிருக்கிறார். நம்ம வீட்டுக் கணக்கிலே கூட பட்ஜெட் போடும்போது பழைய கடன் இருந்தால் கடனுக்கு வட்டி என்று ஒரு தொகை ஒதுக்க வேண்டும் இல்லையா? நம் குடும்ப பட்ஜெட்களைப் போல் - அதாவது கடன் வாங்கும் குடும்பங்களில் - அரசாங்க வரவு செலவு திட்டங்களிலும் வாங்கிய கடனுக்கு வட்டி என்று கொடுப்பதே பெரிய தொகையாக இருக்கும். ஆனால் அசலை ஓரளவு கட்டிவிட்டால் நமது வட்டித் தொகையாவது கொஞ்சம் குறையும் இல்லையா? அதைத்தான் சமீபகாலமாக நமது அரசு அடிக்கடி செய்து வருகிறது. முடிந்தபோது கடன்களைத் திருப்பிகொடுத்து வருகிறது. இப்போது உலக வங்கி மற்றும் Asian Development Bank போன்ற ஸ்தாபனங்களுக்குக் கொடுக்க வேண்டிய கடன்களில் சுமார் 2 அல்லது 3 பில்லியன் டாலர் அளவு திருப்பிக் கொடுத்துவிடலாமா என்று நிதியமைச்சு யோசனை செய்கிறது. இந்தக் கட்டுரையின்படி, நமக்கிருக்கும் மொத்த கடன் சுமார் 100 பில்லியன் டாலர்கள்.

பட்ஜெட் சம்யம் வரும்போதெல்லாம் நம் காதில் அடிக்கடி விழும் ஒரு வார்த்தை - Fiscal Deficit அதாவது பட்ஜெட்டில் விழும் துண்டு -( நம்ம கணக்கில் வேஷ்டி சைஸ் என்று வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளுங்கள் ) ஒவ்வொரு வருடமும் நிதியமைச்சர் இந்த "வரவு எட்டணா செலவு பத்தணா " கதையைச் சொல்லி கொஞ்சம் துண்டு விழுகிறது - அதை விரைவில் சரிகட்டி விடலாம் என்ற ரீதியில் பேசுவார். 1996 -97ல் சிதம்பரத்தின் பட்ஜெட் ஒரு Dream Budget என்று சிலாகிக்கப்பட்டு பின்னர் அதுவே Nightmare ஆனதாக விமரிசிக்கவும் பட்டது. அதனால் இந்த முறை தன் பட்ஜெட் உரையில் நிச்சயம் இதை நினைவூட்டும் வன்ணம் ஏதேனும் சொல்லுவார் என்று நினைக்கிறேன். இந்த பற்றாக்குறை துண்டு என்பது சில வருடங்களுக்கு முன் GDPயில் 4 சதவிகிதமாக இருந்தது, கொஞ்சம் கொஞ்சமாக ஏறி, 5 அப்புறம் 5 புள்ளி சொச்சம், என்ற ரீதியில் வளர்ந்து இப்போது அது 5 புள்ளி 8 சதவிகிதத்தில் உள்ளது. அந்த வருட பட்ஜெட் அளிக்கும்போது இந்த பற்றாகுறை துண்டு 1 சதவிகிதம் ரேஞ்சிற்கு மேல் போகக் கூடாது என்பது என் எதிர்பார்ப்பு என்று கூறினார். ஆனால் அது இப்போதைக்கு நடப்பதாக தெரியவில்லை என்பது மட்டுமல்ல. துண்டு வேஷ்டியாகி, ஆறு கஜம் புடவையாகும் அளவு பெரிதாகிக்கொண்டிருக்கிறது..

இந்த மாதிரி பட்ஜெட்டில் துண்டு விழுந்து அரசாங்கத்திற்கு செல்விற்கு பணம் தேவைப்படும்போதெல்லாம் பங்குச் சந்தையில் கடன் வாங்கும். Tresuery Bill என்று சொல்லப்படுகிற இந்த அரசு பத்திரங்கள் மூன்று மாதம் அல்லது ஒரு வருடம் என்ற கால அளவில் திரும்பப் பெறும் வண்ணம் இருக்கும். நம்மைப் போல் சாதாரணர்களுக்கு இவைமில்லை. பொதுவாக முதலீடு செய்யும் நிறுவனங்கள் இவற்றை வாங்கும். இதைத் தவிர உலக வங்கி போன்ற இடங்களிலிருந்தும் அரசுக்கு கடன் உதவி கிடைக்கிறது இல்லையா? இப்படி கடனுக்கு கொடுக்க வேண்டிய வட்டி மட்டும் இந்த வருடம் ( 2004-05) 1,29500 கோடி ரூபாய் என்று சொல்லப்படுகிறது. இதைத் தவிர திருப்பி கொடுக்க வேண்டிய அசலையும் சேர்த்தால் இந்த வருடம் திருப்ப வேண்டிய கடன் 3,34197 கோடிகளாம்.

கூடிய விரைவில் சில வருடங்களில் கடன்கள் குறைந்து - மறைந்து (??!!) நிதி பற்றாகுறை நீங்கி புடவை, வேஷ்டியாகி, துண்டாகி கர்ச்சீப்பாகி, பின் சுத்தமாக கடனேயில்லாமல் மாறும்போது இந்தியா வளர்ந்த நாடுகளின் முண்ணனியில் நிற்கும் என்று நான் கனவு காண்கிறேன்.

இன்றுடன் ஹாங்காங் சீனாவுடன் மறுபடி இணைந்து 7 வருடமாகிறது. 1997ல் ஜூலை 1 ந் தேதி இந்த நாள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. சீனாவிடம் ஹாங்காங் போனபின்பு வாழ்க்கை எப்படி மாறுமோ என்று கவலைப்பட்ட பலர் ஹாங்காங்கைவிட்டு உலகின் வேறு பாகங்களுக்கு குடி பெயர்ந்தனர். சீனர்களிடையே ஒரு வழக்கம் உண்டு. நாம் முன்னோர்களுக்குத் திதி கொடுப்பதுபோல் அவர்கள் வருடா வருடம் முன்னோர்களின் அஸ்தி வைத்த இடத்தில் சென்று அந்த இடத்தை சுத்தப் படுத்துவதும் அங்கே வணங்குவதும் வழக்கம். ஆனால் ஹாங்காங்கை விட்டு இடம் பெயர்ந்தபின் முன்னோர்களின் நினைவிடத்தை வணங்குவதற்காக ஹாங்காங் வந்து போக முடியுமா என்ன? அதனால் இவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா? அஸ்திகளைத் தோண்டி எடுத்துக் கொண்டு தாங்கள் குடிபோகும் நாட்டிற்கு எடுத்து சென்று விட்டார்கள்!! எப்படி இவர்கள் யோசனை?

இந்த ஹாங்காங் கை மாறுதல் பற்றிய என் கட்டுரையை இங்கே படியுங்கள்.

Thursday, June 24, 2004

தவறும் தீர்வும் ஒவ்வொரு தனிமனிதர் கையிலும் இருக்கிறது....

ஆட்டோவில் ஏறி உட்கார்ந்தால் வாயை மூடிக்கொண்டு பயணம் செய்பவர்கள் எவ்வளவு பேர்? எனக்குத் தெரியாது. ஏனென்றால் ஆட்டோவில் ஏறி உட்கார்ந்த சில நிமிடங்களில் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்துவிடுவேன். சமூகம், அரசியல், ஏமாற்றும் ஆட்டோக்காரர்கள் ( இவர் ஏமாற்றாத ஆள் என்பதை உறுதி செய்து கொண்டு !!) என்றுமே மாற்றியமைக்கப்படாத மீட்டர், மீட்டருக்கு சூடு வைக்கும் டிரைவர்கள் ( அப்படின்னா என்ன என்று தெரியாதவர்கள் சென்னையில் காரில்லாமல் சுற்றும்படி வேண்டுகிறேன் - அதிகமில்லை, இரண்டு நாள் போதும்) இப்படி பேச்சு சுழன்று வரும்.

அன்று அந்த ஆட்டோ டிரைவர் சுவாரசியமாகப் பேசினார். பேச்சில் தெரிந்த முக்கிய விஷயங்கள் - அவர் படித்தது ப்ள்ஸ் 2 வரையில். அரசாங்க வேலைக்கு மிக முயன்றார்.ஆனால் கிடைக்கவில்லை. காரணம் இவருக்கு சிபாரிசு செய்ய யாருமில்லை !!!
"ஏதோ பரிட்சை எல்லாம் எழுதினேங்க. நல்லாத்தான் எழுதினேன். ஆனாலும் வேலைக்கு மனுப்போடும்போது எனக்கு ஏதும் சிபாரிசு இல்லீங்க. சிபாரிசு இல்லாமல் அரசு வேலை கிடைக்காதுங்க." நான் மேலும் குடைந்தபோது வந்த பதில். " பள்ளிக்கூடம் படிக்கும்போதே நிறைய ஆசிர்யர்கள் கோச்சிங் கிளாஸ் படிக்க சொல்கிறார்கள். அப்புறம் கோச்சிங் கிளாஸில் படிக்கும் தன் மாணவர்களுக்கு அந்த கோச்சிங் "பள்ளி" எப்படியோ வேலை வாங்கிக் கொடுத்துவிடுகிறது. ஆனால் அந்த கோச்சிங்க் பள்ளிகளில் / கிளாஸ்களில் படிக்க நிறைய பணம் வேணுமே? நாம உழைச்சுப் படிச்சு படிச்சோம்/ நல்ல மார்க்கோடு பாஸ் பண்ணினோம் என்றாலும் எங்கே வேலை கிடைக்கிறது? அதான், இப்படி ஒரு ஆட்டோவை வாங்கிப் போட்டு ஓட்டுகிறேன். இதில் சொந்தமாக வேலை. ஓரளவுக்கு வருமானம். என் குடும்பத்துக்கு போதும்."

இவர் மனைவி இளம் நிலை பட்டப் படிப்பு முடித்து முதுநிலையைத் தொலைத் தொடர்பு கல்வியாகப் படிக்கிறார். " அவருக்காவது ஏதாவது அரசு வேலைக் கிடைக்குமா" என்று பார்க்கிறேன்" - ஆட்டோகாரர்.

ஒரு உறவினர் பெண். கணவர் வெளி நாட்டில். இவருக்கு இங்கே அரசு உத்தியோகம். காடாறு மாசம். நாடாறுமாசம் கதை. அவ்வப்போது 6 மாதம் "லீவு" எடுத்துக்கொண்டு வெளி நாட்டில் கணவருடன் குடித்தனம் பண்ணப் போவார் - குழந்தைகளுடன். இந்த திரிசங்கு கதை ஏன்? ஒரு வழியாக வேலையை விட்டுவிட்டு கணவருடனேயே வெளி நாட்டில் இருக்கக்கூடாதோ? " அதெப்படி முடியும்? அரசு வேலைக் கிடைப்பதே குதிரைக் கொம்பு. இந்த "பாதுகாப்பான" வேலையை விட்டுவிடமுடியுமா?" அன்தப் பெண்ணின் பதில். இந்த அரசு வேலையைப் பிடித்துக் கொண்டு தொங்குவதில் அவருக்கு கிடைத்த லாபம் - அவ்வப்போது கிடைக்கும் நீண்ட விடுப்பு - தனியார் துறையில் இப்படி முடியுமா?

இன்னொரு பக்கம். ஒரு குடும்ப நண்பர். ஏதோ வேலையாக அவரை அலுவலகத்தில் சந்திக்க வேண்டியிருந்ததால், அவர் எப்போ ஓய்வாக இருப்பார் என்று கேட்டேன். ஓய்வா? 10 மணியிலிருந்து 5 மணி வரை ஓய்வுதான் என்று சொல்லிவிட்டு "அரசு உத்தியோகம். என் விருப்பபடிதான் வேலை செய்வேன். என்ன யாரும் கேட்டுற முடியுமா என்று சொல்லி பெரிதாக சிரிப்பார். எனக்கு ஆச்சரியமாக இருக்கும். அவர் அடிப்பது ஜோக்தான் என்றாலும் ஓரளவு அதில் உண்மையில்லாமல் இல்லையே? அதேபோல், டில்லியில் குளிர் காலம் வந்துவிட்டால், அரசு அலுவலகங்களில் பெரும்பாலான பெண் ஊழியர்கள் கையில் ஸ்வெட்டர் ஊசி/ நூல் இருக்கும். 10 மணி அலுவலக்ம் என்றாலும் 11 மணி வரை ( நடு நடுவே டீத் தண்ணி break லும் ) வெளியில் புல் வெளியில் உட்கார்ந்து அரட்டை அடித்தபடியே வேகமாக நிட்டிங் வேலை நடக்கும். ஆபீஸ் வேலையைப் பற்றி அவர்கள் முகத்தில் கவலையே இல்லை போலிருக்கும். தனியார் துறையில் இது முடியுமா?

இன்று மாறி வரும் தொழில் சூழ்நிலையில் போட்டி காரணமாக அரசு அலுவலகங்களிலும் வேலை ஏய்ப்பு குறைந்து உற்பத்தி திறன் அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றாலும், " ஸ்திர தன்மை" " வேலைப் பாதுகாப்பு" என்ற பெயரில் ineffeciency ஆதரிக்கப்படுகிற நிலை இன்னும் மாறவில்லை. இன்று தனியார் துறை மாற்றத்திற்கு யூனியன்களின் எதிர்ப்புக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். வேலைத் திறமை சுமாராக இருந்தாலும் ஒரு "பத்திரம்" இருக்கிறதே? தனியார் கையில் மாறினால் அது போய்விடுமே? வேலையைத் தக்க வைத்துக்கொள்ள தன் திறமையை நிரூபிக்கும் வண்ணம் உழைத்தாக வேண்டுமே? " நீ எப்படி வேலை செய்தாலும் அரசு உத்தியோகத்தில் உன்னை அசைக்க முடியாது" " வேலை செய்யாமல் கை நிறைய சம்பளம். எங்கே கிடைக்கும் இப்படி?" அவ்வப்போது காதில் விழும் வார்த்தைகள் இவை. நம் மக்களின் மனோபாவம் இப்படி இருக்கும் வரையில் அரசு உத்தியோகத்திற்கு தனி மதிப்பும் இருந்துகொண்டுதான் இருக்கும்.

ஒரு பக்கம் இப்படி "மதிப்பு". இன்னொரு பக்கம், அரசு வேலைகள் குறைந்து கொண்டு வருகின்றன என்ற நிதர்சனம். இந்த நிலையில் வேலை வாய்ப்பு அதிகரிக்கவும், வேலைத்திறன் உயர்ந்து உற்பத்தி தரம் உயரவும் ஒரே வழி, தனியார் முதலீடுகள் பல் வேறு துறைகளில் பெருகி வேலை வாய்ப்புகள் உண்டாக்கப்டுவதும், தனி மனித தொழிலுணர்வு ( entrepreneurship) ஊக்குவிக்கப்படுவதும் மட்டுமே சிறந்த வழி. வேலை கிடைக்கவில்லை என்றாலும் ஆட்டோ ஓட்டத் தெரிந்தவர் ஆட்டோ வாங்கி தொழில் நடத்துகிறார். தையல் தெரிந்தவர் தையல் மிஷின் வாங்கி தொழில் நடத்தலாம். திறமையாக செய்தால் அவரே விரைவில் கார்மெண்ட் எக்ஸ்போர்ட் கம்பெனியாக உருவெடுக்கலாம்.

தவறு எங்கே என்று தெரியவில்லை என்று வெங்கடேஷ் தன் பதிவில் குறிப்பிடுகிறார். தவறும் தீர்வும் ஒவ்வொரு தனிமனிதர் கையிலும் இருக்கிறது என்று நினைக்கிறேன். In my opinion, the govt. need not be a provider of employment - but must be a facilitator of employment generation. மீன் கொடுக்க வேண்டுமா? அல்லது மீன் பிடிக்க கற்றுத் தர வேண்டுமா என்ற அடிபப்டை கேள்விதான் இங்கே. வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும்படியான சூழலை ஏற்படுத்த வேண்டும். தொழில் தொடங்குபவர்களுக்கு/ உற்பத்தியைப் பெருக்குபவர்களுக்கு / வேலை வாய்ப்பை அதிகரிப்பவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வண்ணம் கொள்கைகளை உருவாக்க வேண்டும்.

Monday, June 21, 2004

"இருந்தா சரி; இல்லாவிட்டாலும் OK"

நோரா ஜோன்ஸ் ஞாபகம் இருக்கிறதா? சென்ற வருடம் Grammy Awards ல் கை நிறைய ( நிறைய என்றால் நிஜமாகவே கைகொள்ளாமல் -இவர் விருது வாங்க மேடைக்கு ஏறுமுன் சூப்பர் மார்கெட்டில் செய்வதுபோல் ஒரு கூடையையும் கையில் கொண்டு சென்றிருக்க வேண்டும் !!! ) இவரது பேட்டி ஒன்று சமீபத்திய ஸ்பான் இதழில் படித்தேன். ( சுட்டியைக் கொடுக்கலாம் என்று இணையத்தில் பார்த்தால் அந்த பத்திரிகையின் சில கட்டுரைகள்தாம் அதன் இணையத்தளத்தில் திறக்க முடிந்தன. Anti-Diva என்ற தலைப்பிட்ட இந்தக் கட்டுரைத் திறக்க முடியவில்லை. ஒரு வேளை பின்னர் திறக்கலாம் - முயன்று பாருங்கள். மே /ஜூன் இதழ்.

btw,
The Original NYT link is here; Added later; thanks Dyno.

New York Times ன் கட்டுரையாளரான Rob Hoerburger, நோரா ஜோன்ஸ் மற்றும் அவரது இசைக்குழு நண்பர்கள் என்று பலரை நிறைய முறை சந்தித்து நிதானமாக செய்துள்ள இந்த பேட்டியில் நோராவின் எளிமையான, நேர்மையான சுபாவம் நன்றாக வெளி வருகிறது. Come Away with Me என்ற இவரது விருதுகள் வாங்கிய ஆல்பம் 17 மில்லியன் விற்பனையாகியுள்ளது. இப்படி பல சாதனைகள் புரிந்த ஒரு ஆல்பத்தைக் கொடுத்த இவரது அடுத்த பாடல்கள் எப்படியிருக்கும் என்று ரசிகர்களின் எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருக்குமே? பல வெற்றியாளர்களுக்கு இந்த மாதிரி எதிர்பார்ப்பே ஒரு கவலையைக் கொடுக்குமே? நோரா ஜோன்ஸ் எப்படி இந்த உணர்வை எதிர்கொள்கிறார் என்பதுதான் பேட்டியின் நோக்கம். ஆனால் நோராவோ இதெல்லாம் பற்றி கவலைப் படுவதாகக் காணோம் என்கிறார் பேட்டியாளர். 24 வயதில் இப்படி ஒரு வெற்றி வந்து என்னைச் சேர்ந்ததற்கு நான் மிகவும் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும். அந்தப் பாடலை வாங்கியவர்களில் பத்தில் ஒரு பங்கினர் என் அடுத்தப் பாடலை வாங்கினால் கூட எனக்கு அதுவே மிகப் பெரிய திருப்தி. ஒரு படி மேலே போய் அந்தப் பழைய பாடலை வாங்கிய அத்தனைபேரும் இதையும் வாங்கினால் எவ்வளவு நன்றாயிருக்கும்? ஆனால் அப்படி இது விற்பனையாகவிட்டாலும் எனக்கு குறையில்லை. It would be great if all those people like this new record. But it's OK, if they don't." இவரது புதிய ஆல்பமும் நன்றாகவே இருக்கிறது; ஆனால் பழைய ஆல்பம் அளவு வெற்றி பெறுமா என்று தெரியவில்லை என்று குறிப்பிடுகிறார் கட்டுரையின் நடுவே.

பேட்டி முழுக்க நோராவின் இந்த acceptance குணம் - வாழ்க்கையை அதன் போக்கில் ஏற்றுகொள்ளும் மனப்பான்மை வெளிப்படுகிறது. ஆங்க்காங்கே தன் விருப்பத்தை வெளியிடுகிறார். பின்னர் கூடவே "இருந்தா சரி; இல்லாவிட்டாலும் OK" - என்று ஒரு சமாதானம்!! இவர் தெருவில் மேலும் கீழும் நடந்து சென்றாலும் யாருக்கும் எளிதில் அடையாளம் தெரியாத அளவு காமா சோமாவென்று ஒரு உடை அணிந்திருப்பராம். இருக்கும் வீடும் படு சிம்பிள். இவரும் இவரது இசைகுழு நண்பர்களும் கஷ்டப்பட்டுதான் உழைக்கிறார்கள். ஜாஸ் இசை சில சமயம் இவருக்கு பிடிக்காமலும் போயிருக்கிறது. " ஒரு சமயம் ரொம்ப போரடித்தபோது இசையை விட்டுவிடலாம் என்றுகூட தோன்றியிருக்கிறது. பிடித்த சில பாடல்களை மட்டும் பாடுவது; பாக்கி நேரங்களில் டேபிள் துடைத்து பணம் சம்பாதித்துக் கொள்ளலாம் என்று தோன்றும்." என்று கூறுகிறார்.

Grammy வெற்றி இவரை மயக்கவில்லை. நிதர்சனம் உணர்ந்தவராக தெரிகிறார். பேட்டி காணும்போது வீட்டை நோட்டம் விட்ட பேட்டியாளர், Grammy விருதுகள் வெளியில் இல்லை என்பதைக் கண்டு அதைப் பற்றி கேட்டதற்கு, " ஓ, அவைகளை உள்ளே பீரோவில் இருக்கின்றன. I didn't want my friends to come over and say, " who does she think she is, Miss Grammy Whammy?" !! ஹ்ம்ம்.. பிழைக்கத் தெரியாத பெண். குழந்தைகள் ஸ்கூலில் எலுமிச்சம்பழ ஸ்பூன் ஓட்ட ரேசில் "கப்" வாங்கினாலே ஷோ கேஸில் பிரமாதமாக அலங்கரித்து வைத்து, அதை வருபவர்களிடமெல்லாம் காட்டி பெருமைப் பட்டுக்கொள்ளும் இந்தக் காலத்தில் இப்படியும் ஒரு பெண்.

இவர் கூட வசிக்கும் இவரது Boyfriend, மற்றும் இவரது குழுவில் பாடல்களை எழுதும் அலெக்ஸாண்டர் இன்னொரு எளிமையின் அவதாரம். பேட்டியாளரும் இவர்களும் சேர்ந்து உணவு உண்டபின் தட்டுக்களை எடுத்துக்கொண்டு போனவரைப் பார்த்து நோரா, " பாத்திரம் கழுவுவது நன்றாக வரும் இவனுக்கு என்று ஜோக்கடிக்க, அதற்கு அலெக்ஸ், " நான் கழுவுகிறேன் என்பதால்தான் உங்களிடமிருந்து தட்டுக்களை பிடுங்கிக் கொண்டு போகிறேன். இப்படியே பேசி கொண்டு இருந்திர்ர்களானால் நான் அப்புறம் சுரண்டி சுரண்டிதான் கழுவ வேண்டி வரும்" என்று படு காஷ¤வலாக சொல்கிறார். எங்கள் வீட்டில் நாங்கள் அரட்டையடித்துகொண்டு சாப்பிடுவதுதான் நினைவுக்கு வந்தது. சாப்பிட்ட பின்னரும் டேபிளில் அரட்டை ஓயாது. இன்னும் உட்கார்ந்தால் தட்டைச் சுரண்டிதான் கழுவணும் என்று எழுந்திருப்போம். அந்த மாதிரி இருந்தது அலெக்ஸ் சொன்னது.

கடைசியில் விடை பெறும்போது கதவு வரை வந்து வழியனுப்பிய நோரா தன்னிடம் அந்தப் புது ஆல்ப்ம பற்றி கருத்து கேட்பார் என்று கட்டுரையாளர் எதிர்பார்த்தாராம். ஆனால் அவர் அதைப் பற்றி கவலைப் பட்டதாக தெரியவில்லை. இவரே அதைப் பற்றி நோராவிடம் மறு நாள் கேட்டபோது, " I'm just not a needy person. I don't crave people's approval." என்றாராம் !! இன்னொரு கீதை உதாரணம். போகிற போக்கில் முக்கிய புள்ளிகளின் வாழ்க்கையில் கீதாசாரம் என்று நான் ஒரு தொடரே எழுதலாம் போலிருக்கிறது!

மொத்தத்தில் சுவாரசியமான பேட்டி. கிடைத்தால் படியுங்கள். சொல்ல மறந்துவிட்டேனே. நோராவின் அப்பா பற்றி பேட்டியாளர் ஒன்றுமே சொல்லவில்லையே என்று தேடினேன். கடைசியில் குறிப்பிட்டுவிட்டார். ஆனால் தந்தையின் புகழின் அடிப்படையில்தான் தாம் வெற்றி பெற்றதாக யாரும் சொல்லிவிடக்கூடாதென்பதில் கவனமாக இருக்கிறார். தந்தை யாரென்றுதான் உங்களுக்கு தெரியுமே. இந்த முறை கை தூக்குங்கள் என்று சொல்ல மாட்டேன் :-) No points for guessing the obvious. :-)

Thursday, June 17, 2004

Tim Berners - Lee

இந்த மனுஷரை நினைத்தால் ஏனோ பகவத் கீதையின் சாரம்தான் நினைவுக்கு வருகிறது. கடமையைச் செய். பலனை எதிர்பாராதே !

இன்று உலகமே இவர் கண்டுபிடித்த - உருவாக்கிய அமைப்பின் மீதுதான் மிகவும் சார்ந்து இருக்கிறது. 10 வருடம் முன்பு ஓர் பரிசோதனைச் சாலையில் இவர் ஆரம்பித்த அமைப்பு இன்று உலகெங்கும் பரவி அது இல்லாமல் செயல்பாடே இல்லாமல் உலகம் ஸ்தம்பித்துவிடும் என்று சொல்லும் அளவு வளர்ந்துள்ளது. இந்த அமைப்பு தோன்றுவதற்கு முன்னாலும் நிறைய தொழில் நுட்ப பரிசோதனைகளும் சோதனையோட்டங்களும் நிகழ்ந்திருந்தாலும் ஒரு குடையாக இது இப்படி உருவெடுத்தது பத்து வருடம் முன்புதான்.

இப்படிபட்ட ஒரு மனிதர் இன்று வரை பணத்திற்காக ஆசைப்படவில்லை. தன் உருவாக்கத்தின் மூலம் பணம் சம்பாதிக்க கருதவில்லை. பரவலாக மனித குலம் பயனடைய வேண்டும் என்பதே இவரை இயக்கியுள்ளது. எதிலும் ஒரு சொந்த லாபம் அலல்து வணிக நோக்குடன் - குறைந்த பட்சம் புகழ் பதவி என்ற நோக்கோடு செயல்படும் இன்றைய உலகில் இவர் இன்னும் ஒரு பல்கலைகழக மூலை ஒன்றிலிருந்துதான் செயல்படுகிறார். மனித சரித்திரத்தில் - தொழில் நுட்ப வளர்ச்சியில் நிரந்தரமான இடத்தைப் பிடித்துக்கொண்ட இவருக்கு இன்று ஒரு வழியாக கௌரவம் கிடைத்துள்ளது.

இத்தனை நேரம் இவருக்கு நோபல் பரிசு கிடைத்து இருக்க வேண்டாமோ? பரவாயில்லை; வேறு முக்கிய விருது கிடைத்துள்ளது. " நூற்றாண்டின் மிகச் சிறந்த தொழில் நுட்ப" விருது கிடைத்துள்ளது தொகை - 1 மில்லியன் யூரோ - ( 1.2 மில்லியன் டாலர்.) பின்லாந்தில் நேற்று நூற்றாண்டின் தொழில் நுட்ப மாநாட்டில் வழங்கப்பட்டது.

ஆனால் வணிக நோக்குடன் நான் எதையும் உருவாக்கவிலை என்று நம் ஆள் அடக்கி வாசிக்கிறார். இப்போ சொல்லுங்கள் - நான் சொன்னது சரிதானே? பகவத் கீதையின் சாரம்??? ஆனால் யோசித்துப் பார்த்தால் உலகின் மிகப் பெரிய சாதனைகள் பல இந்த அடிப்படையில்தான் நிகழ்ந்துள்ளன என்று தோன்றுகிறது. அதாவது புகழையும் பணத்தையும் எதிர்பார்த்து சாதனைகள் நிகழவில்லை. இன்னும் குறிப்பாக சொல்லப் போனால் "இதைச் சாதிக்க வேண்டும்" என்று ஒரு இலக்கை நோக்கி உலக நிகழ்வுகள் நடந்திருக்கவில்லை. தன்னிச்சையாக உள்ளூர ஏற்படும் ஓர் ஆர்வத்திலும் / உந்துதல்களே பல நிகழ்வுகளுக்குக் காரணமாக அமைந்துள்ளன. புகழும் / பணமும் - பின்னர் தானாகவே வந்து ஒட்டிகொண்டவை - by products.

ஆனாலும் நாம் எதையோ தேடி / ஆசைப்பட்டு ஓடிக்கொண்டு இருப்பதைத் தவிர்க்க முடியவில்லையே!!!

பி.கு: அதெல்லாம் சரி. மேலே நான் எந்த உலக அமைப்பை பற்றி பேசுகிறேன் என்று தெரியாதவர்கள் கைத்தூக்குங்கள் ? :-)

Tuesday, June 15, 2004

குரல் வலைப் பதிவு

குரல் வலைப் பதிவு செய்ய நான் உபயோகித்த முறை:

முதலில் Blogspot ன் தளத்தில் குரல் வலைப்பதிவுக்கு ரிஜிஸ்டர் செய்தேன்.

அங்கு என் குரல் பதிவிற்காக ஒரு கணக்கு திறந்தவுடன், அந்த தளம் என்னை ஒரு அமெரிக்க நம்பர் - அஹ்டாவது நான் எந்தத் தொலைபேசியிலிருந்து குரல் பதிவு செய்யப்ப்போகிறேனோ அந்த தொலைபேசி எண்ணைக் கேட்டது. இது Primary number. இது ஒரு அமெரிக்க நம்பராக இருக்க வேண்டும் - ஆனால் இதிலிருந்துதான் பேச வேண்டும் என்பதில்லை. இது ஒரு சும்மா referecne க்குதான் என்று அந்த தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. நான் என் மகனின் வீட்டு நம்பர் ( அமெரிக்கா) Primary எண்ணாக கொடுத்தேன்.

அடுத்து அந்த தளத்தில் கொடுத்துள்ள எண்ணுக்கு போன் செய்துணூங்கள் குரலைப் பதிவு செய்யலாம். அதில் உள்ள செய்வழிபாடு கட்டளைகளை சரியாக அப்படியே பின்பற்றினால் - தயார்.. உங்கள் குரல் உங்கள் வலைப் பதிவில் பதிவாகிறது.

இதில் Dial Pad செயலியின் வேலை என்ன என்றால், அதில் கொடுத்துள்ள 1-661-716- BLOG - இந்த BLOG என்பதை 2564 என்று எண் பதிவு செய்யுங்கள் அதாவது - 1 என்பது அமெரிக்க country code - 661716 2564 என்பது நாம் கூப்பிட வேண்டிய நம்பர் - என்ற நம்பருக்கு போன் செய்ய இந்த டையல் பாட் உபயோகித்து செய்யலாம். சாதாரணமாகவே நேரடியாக செய்தால் ISD பில் எக்கச்சகமாக ஏறுமே ??! அதனால் இந்த வழி.

Dial Pad எப்படி இறக்கிக்கொள்வது என்று www.dialpad.com என்ற தளத்திற்கு சென்றால் அங்கே கொடுக்கப்பாடுள்ள Internet phone செயலியை உங்கள் கணினியில் இறக்கிக் கொள்ளலாம். இதற்கு கட்டணம் ஒரு மாத சேவைக்கு $ 15. 300 நிமிடங்கள் பேசலாம். இந்த தொகையை உங்கள் Visa/ Master International credit card மூலம் செலுத்தலாம். ஒரு கடவுச் சொல்லை உபயோகித்து நீங்கள் சாதாரன தொலைபேசி மாதிரி பயன்படுத்தலாம். இவர்கள் நம்பர் அமெரிக்க நம்பர் என்பதால், நாம் அமெரிக்காவுக்கு போன் செய்தாலும் அமெரிக்காவுக்குள்ளே ஒரு உள்ளூர் பேச்சுக்கடணம் செலவுதான் ஆகும். நான் பொதுவாக என் மகன்களுடன் பேசுவதற்காக இந்த dialpad செயலியை உபயோகிப்பதால் இது எளிதாக இருந்தது.

முயன்று பாருங்கள். ஏதேனும் சந்தேகம் இருந்தால் குறிப்பாக கேள்வி கேளுங்கள். விளக்கம் தருகிறேன்.

Monday, June 14, 2004

this is an audio post - click to play



கிருபா சங்கர், இன்னும் உங்க பதிவுலே ஒலி பதிவு செய்ய நினைத்தவ்ர்களெல்லோரும் கேளுங்க. நம் ஊர்லேர்ந்தும் ஒலி பதிவு செய்யலாம்.டையல் பாட் என்கிற செயலியை உபயோகித்து !! எப்படின்னு இதோ சொல்லியிருக்கேன் கேளுங்க :-)
this is an audio post - click to play

Sunday, June 13, 2004

கண்ணாடி கூரை??

பெண்கள் அதிகமாக பல துறைகளில் இன்னும் பெருமளவு வர முடியாததற்கு (!!!???) ஆங்கிலத்தில் Glass ceiling என்று ஒரு பதம் உபயோகிப்பது வழக்கம் இல்லையா? வீட்டு வேலை மற்றும் ஆபீஸ் வேலை என்று இரட்டைக் குதிரை ஓட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் பெண்கள் தடைகளையும் கஷ்டங்களையும் மீறி உயர்ந்த பதவிகளில் இருப்பதும் கூடவே நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனாலும் "இந்த மாதிரி வெளியுலகில் பெண்கள் தங்கள் திறமையை நிலை நாட்ட படும் கஷ்டங்கள் பற்றி கட்டுரைகள் வந்து கொண்டேதான் இருக்கின்றன. இரண்டு நாள் முன்பு இங்கே இந்த ரீதியில் இன்னொரு கட்டுரை.

எல்லோரும் பெண்களைதான் " வீட்டு வேலை ஆபீஸ் வேலை என்று இரண்டையும் எப்படி சமாளிக்கிறீர்கள் என்று கேட்கிறார்களே தவிர, யாராவது வீட்டையும் ஆபீஸையும் எப்படி மேனேஜ் பண்ணுகிறீர்கள் என்று ஆண்களிடம் கேட்கிறார்களா என்று இவர் காய்கிறார்.

வீட்டில் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள சரியான ஆள் இல்லாதது பெண்கள் பெரும் பதவிகளில் அவர்கள் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது என்று சொல்லும் இவர் வேலை இருக்கும் இடத்தில் குழந்தை காப்பகம் மட்டும் போதாது என்று சொல்லி ஒரு புதுவித யோசனை சொகிறார். அதாவது, உயர் பதவியில் இருப்பவர்களுக்கு கார், மற்றும் இதர வசதிகளை அலுவலகம் கொடுக்கிறதல்லவா? அதைப் போல இந்த மாதிரி உயர் பதவியில் இருக்கும் பெண்களுக்கு ஆபீஸ் செகரடரி போல வீட்டு செகரடரியும் கொடுக்க வேண்டுமாம். இந்த வீட்டு செகரடரி, வீட்டில் எல்லா வேலைகளும் பார்ப்பாராம் - குழந்தைகளுக்கு நீச்சல் வகுப்புக்கு ( கராத்தே, பாட்டு அல்லது நடனம் என்று ஏதோ) அழைத்துச் செல்வது; தேவைப் படும்போது அவர்களுடன் செஸ் விளையாடுவது அவர்களுக்கு ஹோம் வர்க் சொல்லிக் கொடுப்பது; வீட்டில் வயதானவர்களை டாக்டரிடம் அழைத்துச் செல்வது ( சில சமயங்களில் நம் ரசனக்கேற்றவாறு இலக்கியமோ, சினிமாவோ பேசுவது!!) இந்த மாதிரி எல்லா வேலைகளும் செய்வாராம். அதனால் வீட்டைப் பற்றி கவலைப் படாமல் பெண்கள் ஆபீஸ் வேலையில் ஈடுபடலாம் என்பது இந்தக் கட்டுரையின் சாரம்.

இதைப் படித்தவுடன் தோன்றியது: வீட்டு செகரடெரியா? பரவாயில்லை. மனைவி/ தாய்/ அம்மா/ மாமியார்/ பாட்டி அல்லது தூரத்து உறவுகார அம்மா/ என்று பல ரூபங்களில் இந்தியாவில் வீட்டு விஷ்யங்களைக் கவனிக்கதான் ஆள் இருக்கிறார்களே!! என்று என் மனதில் நினைத்துக் கொண்டேன். அடுத்த சில நிமிடங்களில் படித்த மற்றொரு கட்டுரை. ஆண்கள் நிறைந்த வங்கி உலகில் வெற்றி நடை போடும் ஒரு பெண் பற்றி. இந்தியாவின் முக்கிய கார்பொரேட் பெண்மணி. நைனாலால் கித்வாய் - ஹாங்காங் ஷாங்காய் வங்கியின் (HSBC) யின் தலைமை நிர்வாகி. சமீபத்தில் Fortune பத்திரிகை ஆசியாவில் சக்தி வாய்ந்த 50 பெண்களில் இவரையும் ஒருவராக தேர்வு செய்திருந்தது. Time பத்திரிகை இவரை உலகளவில் சக்தி வாய்ந்த நபர்களில் ஒருவராகவும் Forbes பத்திரிகை இவரை உலகின் முதன்மை 50 பெண் அதிகாரிகளில் ஒருவராகவும் தேர்வு செய்துள்ளன.

டில்லி Lady Shri Ram கல்லூரியில் காலேஜ் விழாவுக்கு பல நிறுவங்களின் ஆதரவைத் திரட்டுவதில் ஆரம்பித்த இவரது திறமை பின்னர் ஹார்வேர்ட் பல்கலைகழகத்தில் முதல் இந்திஅய்ப் பெண்ணாக ஒளிர்ந்து, 1982ல் ANZ Grindlays வங்கியில் சேர்ந்தவுடன் பிரகாசிக்கப் ஆரம்பித்தது. Morgan Stanley யின் இந்திய நிர்வாகத்திற்கு தலைமையாக இருந்து பல முக்கிய கார்பொரேட் நிகழ்வுகளுக்கு காரணமாக இருந்த இவரை HSBC 2002ல் தன் பக்கம் ஈர்த்து கொண்டது. இப்படி வர்த்தக உலகில் கொடி கட்டி பறந்தாலும் இவரது எண்ணம் பூமியில் காலூன்றி உள்ளது. பலவித சமூக நல அமைப்புகளில் கிராமபுற பெண்கள் முன்னேற்றம், மற்றும் digital divide பிரச்சனைகளை எப்படி குறைப்பது போன்ற விஷய்ங்களில் ஆலோசகராகவும் உள்ளார்.

நல்லது. இப்போ என்ன இவங்களைப் பற்றி என்கிறீர்களா? விஷயம் இருக்கிறது. இப்படி பலவிதங்களில் வெற்றிகரமாக இருக்கும் நைனாலால் தன் வெற்றிக்கு ஒரு அடிபப்டை காரணம் தான் வீட்டைப் பற்றி நிம்மதியாக இருக்க முடிவதுதான் என்கிறார். " மற்ற மேலை நாடுகளைவிட இங்கே இந்தியாவில்தான் நமது பெண்களுக்கு சமூக அமைப்பு நிறைய வசதிகளை அளித்துள்ளது. முதலாவதாக பலவிதமான வித்தியாசங்கள் உள்ள வேலை அமைப்புகளில் பெண்களும் ஒரு அங்கம் என்ற புரிந்துணர்வு இங்கே உள்ளதால் பெண்கள் வேலையிடத்தில் எளிதாக அங்கீகரிக்கப்படுகிறார்கள். இரண்டாவதாக, அம்மா, மாமியார், மச்சினர், அக்கா, தங்கை என்று நமது குடும்ப அமைப்பு விஸ்தாராமானது. எப்போ வேண்டுமானாலும் எந்தவிதமான உதவியும் நமக்கு நம் குடும்பத்தினரிடமிருந்து சுவாதீனமாக கிடைக்கும். இதெல்லாம் தவிர இருக்கவே இருக்கு வீட்டு வேலைக்கு உதவி செய்ய ஆள் என்று. இந்த மாதிரி எல்லாம் வெளி நாட்டில் அபூர்வம்." என்று தன் வெற்றிக்கு தன்னைச் சார்ந்தவர்களை எளிதாக அடையாளம் காட்டும் இவரது சுபாவம் எனக்குப் பிடித்தது.

One Must dream, set goals, do one's best, and not worry about the result. Accolades that have come my way are endorsements that I am on the right course." இது, இவரது வெற்றியின் ரகசியம்.

வெளி நாட்டில் இதேபோல் உலகளவில் வர்த்தக உலகில் கொடி கட்டிப் பறக்கும் பெண்களில் குறிப்பிடத் தகுந்தவர், - Fortune பத்திரிகையி¢ன் உஅலகின் சக்தி வாய்ந்த 50 பெண்மணிகளில் முதன்மை சிலரில் ஒருவர் - Hewlett Packard ன் தலைமை அதிகாரி Carly Fiorina. HP யின் பார்சல் பகுதியில் பில்களைக் கூட்டிக் கழித்துக்கொண்டு சாதாரண அடிமட்ட தொழிலாளியாக ஆரம்பித்த கார்லி பியோரினா இன்று எப்படி அந்த நிறுவனத்திற்கே தலைமையதிகாரியாக உயர்ந்தார் என்பதை இங்கே படிக்கலாம். இந்தியாவைவிடவும் அமெரிக்காவில் பெண்கள் தலைமைப் பதவிகளை அடைவதில் நிறைய பெண் என்பதாலேயே நிறைய விமரிசனத்திற்கு ஆளாக நேரிடும் என்பதும் அங்கே உண்டு போலிருக்கிறது.

"love what you do, or don't do it........ it's about finding your soul and following it." என்று சொல்லும் இவருக்கு ஆசான், குரு, பின் புலம் உதவி எல்லாமே இவரது அம்மா. "என் பெற்றோர்கள், எவ்வளவு கஷ்டமாக இருந்தாலும் தங்கள் நம்பிக்கையிலும் தங்களுக்கு சரியென்று பட்டதை விடாப்பிடியாக பின்பற்றுவதிலும் அவர்கள் காட்டிய தீவிரம் என்னை வழி நடத்தியது. அவர்களைப் பொறுத்தவரையில் வாழ்க்கையில் உயர்வு என்பது ஒரு மனிதனின் உயர்ந்த குணங்களேயாகும்."

Wednesday, June 09, 2004

ஒலி பதிவு.... !!! ??

இதென்னங்க ?! இப்போதான் Blogspot ல் கவனித்தேன். ஒலிப் பதிவு முறையையும் கொடுக்க ஆரம்பச்சிருக்காங்க. ஏற்கனவே இந்த ஒலி பதிவு பற்றி ஓரிரண்டு பதிவுகளில் படிச்சிருக்கேன். ஆங்கில பதிவு கிருபா ஷங்கர் இப்படி ஏதோ ஒலி நாடாவை பதிவு செய்திருந்தார். ஆனால் அதெல்லாம் இலவசமாக இருக்கவில்லை என்று ஞாபகம் :-) இப்போ இவங்க அதையும் இனாமாக கொடுத்திருக்காங்க போலிருக்கு. எழுதி பதிவு செய்ய நேரம் (!!!) இல்லையென்றால் பேசி பதிவு செய்து விடலாமே!! ஆனால் நம்ம வலைப்பதிவு தொழில் நுட்பகாரர்கள் யாரும் இன்னும் அதை சோதனை செய்யவில்லை என்று நினைக்கிறேன். ( ஆமாம் மைக்கை எடுத்து ஒலிப் பதிவு செய்வதற்கு எழுதுவதே மேலோ? அல்லது எழுதுவதிலும் அதை மற்றவர்கள் படித்து பின்னூட்டம் விடுவதிலும் உள்ள சுவை இந்த ஒலி நாடாவில் இருக்குமா? என்ற எண்ணமோ? எதுவானாலும் இருக்கட்டும். யாராவது முயற்சி செய்து ஒரு சோதனையோட்டம் செய்யுங்கள். குரல் வளம் மிக்கவர்கள் பாட்டே பாடிவிடலாம். - மதி பதிவில் அவ்வபோது நல்ல இசைகளுக்கு இணைப்பு கொடுத்துள்ளார். புகைப் படங்கள் சரி; இனி கொஞ்சம் குரலையும் கேட்கலாமே?!! :-) என்ன ரெடியா?

Saturday, June 05, 2004

15 வருடங்கள் முன்பு, தினாமன் சதுக்கத்தில்.

சீனாவில் நடந்த மாணவர்கள் கலவரம் / எழுச்சி. 15 வருடங்கள் முன்பு, தினாமன் சதுக்கத்தில். அன்று நடந்த கலவரங்களை நேரில் பார்த்துப் பதிவு செய்த பத்திரிகையாளர் Mike Chinoy நினைவுக்கு வருகிறார். அப்போது அவர் CNN க்கு பீஜிங் பிரிவுக்கு தலைமைப் பதவியில் இருந்தார். China Live என்ற அவர் புத்தகத்தில் 20 வருட காலம் சீனாவைப் பற்றி செய்திகள் சேகரித்து அனுப்பிய அனுபவமும் உள்ளது. ஆனால் அன்று - June 4th - அந்தச் சதுக்கத்தில் நடந்தவற்றை உடனுக்குடன் உலகுக்கு தெரியபப்டுத்திய பெருமை அவரையும் CNN க்கும்தான் தான் சேரும்.

இந்த கலவரம் எதற்கு நடந்தது என்றே இன்றைய மாணவர்களுக்கு தெரியாத நிலையில், இதைப் பற்றிய ஒரு கவனிக்க வேண்டிய செய்தி. இன்றைய இளைஞர்கள், இன்று பொருள் ஈட்டுவதிலும் தாங்கள் முன்னுக்கு வருவதில் மட்டுமே கவனமாக இருக்கிறார்கள் என்கிறது இந்தச் செய்தி.

முந்தைய பதிவின் பின்னூட்டத்தில்....

....உலக வர்த்தக அமைப்பின் கோட்பாடுகளுக்கு கட்டுபட்டு இந்தியா ஏன் இறக்குமதி வரிகளைக் குறைக்கக்கூடாது, தடைகளை அகற்றக் கூடாது என்று வாதிக்கும் சுரேன், தன் பதிவில், Life & Debt என்ற விவரணப் படத்தைப் பற்றி மெய்யப்பன் பதிவில் இருந்ததைச் சுட்டியிருந்தார்.

ஜமைக்காவுக்கும் இந்தியாவுக்கும் வித்தியாசம் இருக்கிறது. We have our own checks and balances. We have a matured democracy with vibrant media to create public awareness. தவிர, நமது தொழில் துறை நன்கு காலூன்றி வளர்ந்து வருகிறது. ஜமைக்காவில் அப்படி அல்ல. அங்கே இன்னும் விவசாயத்தை அல்லது கனி வளங்களை அடிப்படையாக கொண்டதுதான் தொழில் துறை. உள்ளூர் உற்பத்தி அதிக வலுவில்லாத நிலையில் வெளி நாட்டு உற்பத்திகள் சந்தையை எளிதாக ஆக்கிரமித்துக்கொள்ள முடிகிறது. நம் ஊரிலோ ஏற்கனவே நல்ல உற்பத்திகள் சந்தையில் நிறைய உண்டு.

உலக வங்கி போன்றவை நம் மேல் ஆதிக்கம் செலுத்தாமல் இருக்க ஒரு வழி, கடன் வாங்கும் சூழ்நிலையைத் தவிர்ப்பதுதான். நமது மாநிலங்கள் அகலக் கால் வைக்கும் விதமாக சில சமயம் பெரிய திட்டங்கள் போட்டு கடன் வாங்க நேரும்போது இப்படிபட்ட கட்டுபாடுகளுக்கு ஆளாக நேருகிரது.

நமது நிர்வாகத்தில் உள்ள குறைபாடுகளை அகற்றி, இருக்கும் வளங்களை ஓட்டையில்லாமல் சரியாக பயன்படுத்தும்போது, உலக வங்கி போன்றவற்றிடம் கடன் வாங்கும் அவசியத்தைக் குறைக்கலாம் - இன்று நமக்கு சுத்தமாக IMF கடன் இல்லை. RBIயின் Balance of Payment ஆவணத்தை எடுத்துப் பாருங்கள்; IMF என்ற குறியீட்டின் கீழே இருக்கும் 00 ( ஜீரோ) ஒரு மன நிறைவைத் தரும். நம் வரிகள் மீது IMF ஆதிக்கம் இன்று கிடையாது. வெளியே கடன் வாங்க வேண்டிய சூழலைத் தவிர்க்க முயல்வது ஒரு தொலை நோக்காக இருக்க வேண்டும். கடன் கொடுத்தவர்கள் போடும் ஆணைகளுக்கு தலை வணங்க வேண்டிய சூழலைத் தவிர்க்கலாம். அல்லது குறைக்கலாம். பணம் புரட்ட வேறு முறைகளை சிந்திக்கலாம். இங்கே உள்ள " பொது மக்கள் பணம் பொது மக்களுக்கு" பதிவையும் பாருங்கள்.

கடன் கொடுத்தவர்கள் கட்டுப்பாடுகள் போடுவது இயற்கை. ஆனால், கடன் கொடுத்தவர்கள் ஆணைகளுக்குக் கட்டுபப்டுவது வேறு. உலக வர்த்தக அமைப்புக்கு அதன் சம உரிமை உள்ள உறுப்பினராக கோட்பாடுகளுக்குக் கட்டுப்படுவது வேறு.

ஜமைக்காவில் நடப்பது முந்தையது. பின்னர் உள்ளது, நமக்கு மற்ற வளர்ந்த நாடுகளுக்கு சமமான உரிமை உள்ள ஒரு அமைப்பு. நம்மை ஏமாற்றுகிரார்கள் என்று உணர்வு பூர்வமாக முடிவெடுக்காமல், உண்மை நிலை என்ன, நம் தரப்பை எப்படி வலுப்படுத்தி எப்படி level playing field சூழ்நிலையை உருவாக்குவது என்று ஆக்கப்பூர்வமாக சிந்திக்க வேண்டும். If the situation calls for a fight, let's do it; but not give up with out one.

ஆரோக்கியமான உலக வணிகத்திற்கு, சர்வதேச நாடுகள் ஒன்றுபோல் விதிமுறைகளை ஒழுங்காகக் கடைபிடிக்கும்படி செய்வதற்கு நமக்குத் தேவையானவை மூன்று முக்கிய அம்சங்கள்.

1. வளர்ந்த நாடுகளின் தொழில் முறைகளைப் பற்றிய விழிப்புணர்வு.

2. நம் கவலைகளை சரிவர உணர்ந்து, அவற்றை சர்வதேச அளவில் கவனம் பெறச் செய்ய நம்மிடம் வலுவான வாதிகள். காங்கூன் ஏன் தோல்வியடைந்தது என்று நினைக்கிறீர்கள்? வளரும் நாடுகளின் கூட்டணியின் ஒற்றுமைதான். வலுவாக தங்கள் பக்க வாதங்களை நிலை நாட்ட வேண்டிய அவசியம் முன்னெப்போதையும் விட இப்போதுதான் அதிகம் - as developed world increasingly turn protective against the heat built up by developing world. பேச்சு வார்த்தைத் தொடரப்பட வேண்டும். அழுகுணி ஆட்டம் ஆடும் நாடுகளைப் பற்றி முறையீடு செய்ய - Dispute Settlement அமைப்பு உள்ளது. இதைப் பற்றி சில ஆவணங்கள்:

2.

3.


பெரும்பாலான முறையீடுகள் வெற்றி பெறுகின்றன என்று ஒரு ஆய்வு கூறுகிறது. தங்கள் தடைகளை அகற்றாமல் வளரும் மற்றும் ஏழை நாடுகளின் தடைகளை அகற்றச் சொல்கின்றன வளர்ந்த நாடுகள் என்பது மிகைப் படுத்தப்பட்ட வாதம் என்றும், தடைகள் அகற்றிய ஆரோக்கியமான உலக வணிகத்தில் வளரும் நாடுகளுக்கும் பயன் உண்டு என்றும் பொருளாதார நிபுணர் ஜகதிஷ் பகவதி இங்கே கூறுகிறார். பகவதி, சற்று மிகையாகவே வளர்ந்த நாடுகளுக்கு வக்காலத்து வாங்குவதாகத் தோன்றினாலும், " அவங்க- கொஞ்சம்தான்- protection- வைத்திருக்காங்க, நீங்க, - நிறைய" என்ற விதமான வாதம் சால் ஜாப்பு என்று தோன்றினாலும், எதிர் தரப்பு வாதத்தையும் கவனிப்பது, சரியான நிலையை உணருவதற்கு அவசியம் என்று நினைக்கிறேன். வளர்ந்த நாடுகளுக்கு அவர் சொல்லும் அறிவுரை குறிப்பிடத்தக்கது. " உங்கள் வரிகள் வளரும் நாடுகளை விடக் குறைவுதான் என்றாலும் சரி, அலல்து அமெரிக்கா இப்போது steel tariff and farm bill ல் செய்ததுபோல் "பாதுகாப்பு" முறைகளை உயர்த்தினாலும் சரி, ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். பணக்கார நாடுகளான நீங்களே இப்படி செய்யும்போது, இப்போதுதான் தங்கள் protection முறைகளைத் தளர்த்த ஆரம்பிதிருக்கும் வளரும் நாடுகள் இந்த முயற்சியைத் தொடர தயக்கம் காட்டுவார்கள்." பகவதி, வளர்ந்த நாடுகள் வைத்திருக்கும் "வேளாண்மைப் பாதுகாப்பை" தகர்ப்பதற்கு வழிகளும் சொல்கிறார்.

உணர்ச்சிகரமாக அணுகாமல் நியாய / அநியாயங்களை உணர்ந்து, தொடர்ந்த பேச்சு வார்த்தைகள் ( பேரம்??) - பேச்சு வார்த்தைகள் மட்டுமே நாம் எதிர்பார்க்கும் ஆரோக்கியமான வணிக சூழ்நிலையை உருவாக்கும்.

3. எல்லாவற்றிற்கும் மேலாக, நம் பொருட்களின் / சேவைகளின் தரத்தை உயர்த்துவது. நம்ம பொருள் பிரமாதமாக கணிச விலையில் இருக்கும்போது நான் ஏன் வெளிநாட்டுப் பொருளை வாங்குவேன்? "பாதுகாப்புகள்" நாம் வைக்காமலேயே, இறக்குமதி பொருட்களுக்கு இங்கே தானாகவே மதிப்பில்லாமல் / சந்தையில்லாமல் போனால் தேவையில்லாத இறக்குமதிகள் தானாகவே குறைந்துவிடும். பொதுவாகவே இந்திய நுகர்வோர்கள் தங்கள் சுவைகளை அவ்வளவு சீக்கிரம் மாற்றிகொள்ள மாட்டார்கள். வெளி நாட்டு உற்பத்தியாளர்கள் இந்தியாவுக்கு என்றே தங்கள் டிசைன்களை / படைப்புகளின் சுவையை நமகேற்றவாறு மாற்ற முயற்சிப்பதன் காரணம் இதுதான். நமக்கேத்தவாறு இல்லையென்றால் போணி ஆகாது. இது அவர்களுக்கும் புரியும். இந்திய மார்கெட்டைப் பற்றி ஆசைப் பட்டு இங்கே ஓடி வந்து கடை விரித்து, பின்னர் நம்ம நுகர்வோர்களைப் புரிந்து கொள்ளாமல் நஷ்டம் கண்டு கடையை மூடிய வெளி நாட்டு உற்பத்தியாளர்களும் உண்டு. எனவே நமது உற்பத்தியாளர்கள் தங்கள் தரத்தின் மூலம் போட்டிகளை வெல்ல முயல வேண்டும். சென்ற வருடம் சீனப் பொருட்கள் இங்கே வந்து நம் தொழில்கள் நசிந்தன என்று செய்திகள் வந்தன இல்லையா? ஆனால் சென்ற வருடம், சீனாவிலிருந்து இங்கு இறக்குமதி ஆனதைவிடவும் இங்கிருந்து அங்கிருந்து ஏற்றுமதி ஆனது அதிகம். இந்தியப் பொருட்கள் வந்திறங்கி சீனத் தொழில்கள் நலிந்தன என்று செய்திகள் வரவில்லை. Survival of the fittest.- but it is our responsibility to ensure that the rules are observed in a level playing field.

Thursday, June 03, 2004

அமெரிக்கப் பொருட்கள் சந்தையிழக்கின்றன??

கோகோ கோலா, நைக், மெக்டொனால்ட் போன்ற அமெரிக்க பொருட்கள் இந்தியாவுக்குள் வருவதை விரும்பாதவர்களா நீங்கள்? உங்களுக்கு ஓர் நற்செய்தி!! உலக சந்தையில் அமெரிக்கப் பொருட்களுக்கு மதிப்பு குறைந்து போய்விட்டன என்று ஒரு அமெரிக்க சந்தை ஆய்வு நிறுவனம் ஆய்வு செய்துள்ளது. இதன் அறிக்கையின்படி, இதற்கு ஒரு காரணம் ஆங்காங்கே, ஆஸ்த்திரேலியா, பிலிப்பைன்ஸ் என்று பல நாடுகளில் உள்ளூர் தாயரிப்புகள் பெருகி அமெரிக்க பொருட்களுக்கு மார்கெட் இல்லாமல் போய்விட்டதாம். ஈராக் பிரச்சனையை அமெரிக்கா கையாண்ட விதமும் தற்போது வெளியான ஈராக் சிறைக் கைதியினர் நடத்தப்பட்ட விதத்தின் போட்டோக்களூம் கூட காரணமாக இருக்கலாமாம்.

அதுசரி; எப்படியோ, அமெரிக்க பொருட்கள் இறக்குமதி குறைந்து உள்ளூர் பொருட்களுக்கு சந்தை உருவானால் சரி என்று நினைக்கிறீர்களா? இருங்கள்; அவசரப்படாதீர்கள். The bad news is இந்த "அமெரிக்க பொருட்கள் மதிப்பு குறைந்து உள்ளூர் பொருட்கள் மதிப்பு உயர்ந்து" லிஸ்டில் இந்தியா காணோம் !! அதற்கு ஒரு ஆய்வாளர் விளக்கம்: " பொதுவாகவே, இந்திய நுகர்வோர்கள் சற்று சாவதானக்காரர்கள். இந்த மாதிரி நிகழ்ச்சிகளுக்கு எல்லாம் அவர்கள் அசரமாட்டார்கள் !!!!" ஹ்ம்ம்... நமக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்...

Monday, May 31, 2004

சரியாக ஒரு வருடம் முன்பு, 31.5.2003 அன்று என் முதல் பதிவு :-)

அலைகள்

கொந்தளிக்கும் அலைகளும்
அலைபாயும் கடலும்
கடலெனப் படர்ந்த வானமும்
வானமே எல்லை என்ற மனமும்
மனதில் துளிர்த்த எண்ணங்களும்
எண்ணங்கள் அளாவிய
அணு ஒவ்வொன்றும்
இவையாவும் ஒன்றேதானோ?

அருணா

Sunday, May 30, 2004

"பொது மக்கள் பணம் பொது மக்களுக்கு"

பத்ரி நேற்றைய பதிவுக்கு கொடுத்திருந்த பதிலுக்கு என் பதிலை இங்கே பதிகிறேன். மிக நீளமாக இருந்ததால் இது எளிதாக இருக்கும் என்று தோன்றிற்று.
பாண்டுகள் மூலம் பணம் திரட்டும் திட்டம் நல்லதுதான்.Infrastructure Bond மாதிரி, அல்லது வெற்றிகரமாக இருந்த Resurgent Bond மாதிரி பொது மக்களிடமிருந்து பணம் திரட்டலாம். பத்ரி சொல்வதுபோல் கறுப்பு பணம் வெளி வரவும் வழி செய்யலாம். சிதம்பரத்தின் முந்தைய பீரியடில் செய்தது போல் VDIS கூட ஓகே. ஆனால் இந்த மாதிரி கறுப்பு பணம் வெளிக்கொணர பாண்டுகள் உபயோகிக்கப்படுவது ஒரு மோசமான முன்னுதாரணம் ஆகிவிடும் என்று நினைக்கிறேன். இது ஒரு வழக்கமாகவே ஆகிவிடும். "இப்போ பதுக்கலாம்; அதுதான் ஏதாவது பாண்ட் திட்டம் வருமே அப்போது வெள்ளையாக்கிக்கொள்ளலாம்" என்ற ரீதியில் எண்ணம் உருவாகலாம்.

அதனால் அவசரத் தீர்வுகள் இல்லாமல், நெடுங்காலம் (Longterm) பயன் அளிக்கும் வண்ணம் ஏதாவது திட்டம் இருக்க வேண்டும். அதனால்தான் சிதம்பரத்தின் "முதலீடு" "பசி" நல்ல யோசனையாக தோன்றுகிறது. தனி மனிதர்கள் / professionals / ஆர்வமும் திறமையும் உள்ளவர்கள் இவர்கள் ஒரு பயமின்றி பல துறைகளில் முதலீடு செய்யும் சூழ்நிலையை அரசு அமைத்துக் கொடுக்கலாம். எளிதான கடன் வசதி; ஊக்குவிப்புகள் (incentives) என்ற ரீதியில். உதாரணமாக தண்ணீர் இல்லாத இடங்களில் desalination வசதிகள் அமைக்கவோ, அல்லது நீர் வசதி மிக்க இடங்களில் இருந்து நீர் அல்லாத இடங்களுக்கு வினியோகிக்கும் அமைப்புகள் உருவாக்கவோ ( தண்ணீர் லாரிகள் அல்ல; வேறு முறையான longterm வினியோக முறை தீர்வுகள்) ஆங்காங்கே தனியார் முதலீடுகளை ஊக்குவிக்க்லாம். இவை ஒழுங்காக செயல்பட்டு மகக்ளை சென்றடைகிறதா என்று கவனிக்க ஒரு regulator இருக்கலாம். பலவித தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு இருப்பதுபோல.

தவிர, இந்த "பொது மக்கள் பணம் பொது மக்களுக்கு" என்ற திட்டத்திலும், கிட்டதட்ட disinvestment தொனி இருக்கிறதே? அதாவது, அரசு நிறுவனங்களின் பங்குகளை ஒரு சில குறிப்பிட்ட தனியாரிடம் குறிப்பிட்ட சதவிகிதம் பங்குகளை விற்பதற்கு பதிலாக, retail investorக்கு விற்பதால் பொது மக்கள் அவற்றில் பங்குதாரர்கள் ஆகின்றனர். இன்னொரு பக்கம் அரசும் பொது மக்களுமாக equity உண்டாக்கி புதிய துறைகளில் முதலீடு செய்யலாம். பொது மக்கள் பங்குதாரர்கள் ஆகும்போது effeciency accounatbility நிறையவே இருக்கும். இந்த effeciency விஷயத்திற்கு சிதம்பரம் சொல்லும் தீர்வு, நிறுவனங்களின் நிர்வாகத்தில் அரசு முதலீட்டுடன் நிறுத்திக்கொண்டு தினசரி நிர்வாகத்தை professional managers சுதந்திரமாக கையாள வேண்டும் என்பது. இதுவும் செயலப்டுத்தக்கூடிய திட்டம். ஆனால் அரசு பிரதினிதிகள் கணிசமாக போர்டில் இருக்க வேண்டும் - நிர்வாகம் தடம் புரளாமல் கவனிக்க.

என் கருத்து, என் நம்பிக்கை என்னவென்றால், கார்கள் மற்றும் white goods எனப்படும் டிவி, பிரிட்ஜ் போன்ற நுகர்வோர் பொருட்கள் உற்பத்தியுடன், தனியார் முதலீடு கட்டுமான துறைகளிலும் வரும்படியான climate ஐ, அரசு உருவாக்கினால் சமூக நல திட்டங்களுக்கு தேவையான பணம் கிடைக்கும் - நெடுங்காலம் பயனளிக்கும் வகையில். ஆனால், முதலீட்டுக்கு பிற தொழில்கள் மாதிரி நிறைய லாபம் / வருமானம் இருக்காதே? அதற்கு வழி, User pays முறைதான் - நுகரும் வசதிகளுக்கு பணம் கொடுக்க இயலாத நுகர்வோர்களுக்கு அரசு சலுகை கொடுக்க வேண்டியதுதான். உதாரணமாக இன்று எத்தனை கார்பொரேஷன் பள்ளி¢களில் தனியார் பள்ளிகளில் இருப்பதுபோல் நவீன கல்வி திட்டங்கள் மற்றும் மாண்டிசேரி முறை கல்வி இருக்கிறதென்று தெரியவில்லை. எழுத்தறிவு கூடியிருக்கிறது என்று statistics சொல்கிறதே தவிர, கையெழுத்து போடத்தெரிந்தாலே 'எழுத்தறிவு" கணக்கில் சேர்த்துக்கொள்ளப்படுகிறது. ஆனால் உண்மையாக கல்வி பயிலும் மாணவர்கள் எத்தனைபேர்? ஒன்றாம் வகுப்பில் சேரும் குழந்தைகளில் கணிசமான சதவிகிதம் உயர் நிலைப் பள்ளி வரை கூட தாண்டுவதில்லை. பாதியிலேயே நின்று விடுகிறார்கள். பள்ளியிறுதியைத் தொடுபவர்கள் இன்னும் குறைவு. படிப்பைப் பாதியில் நிறுத்த ஒரு முக்கிய காரணம் கல்வி கற்கும் சூழ்நிலை. ஆசிரியர் அடிப்பார் என்று பள்ளிக்கு செல்வதை நிறுத்திய சிறுவர்கள் அதிகம். கார்பொரேஷன் பள்ளிகளில் 10 கணினிகளை வாங்கி போட்டுவிட்டால் மட்டும் போதாது. தனியார் பள்ளிகளில் இருப்பதுபோல் ஆர்வத்துடன் சொல்லித்தரும் ஆசிரியர்கள், வித்தியாசமான கல்வி பயிலும் முறைகள், என்று பலவித delivery விஷய்ங்கள் இருக்கின்றன. ஆகவே, விவசாயம், கட்டுமானம், கல்வித் துறை என்று எந்த சமூக நலத்துறை எடுத்துக்கொண்டாலும் முதலீடு ஒரு புறமென்றால், அதை சரிவர நிர்வகித்து அடைய வேண்டியவர்களை சரிவர அடையச் செய்வது பெரிய சாதனை.

Saturday, May 29, 2004

முதலீடு அமைச்சர்??

நிதி அமைச்சர் சிதம்பரம் walk the talk (ndtv) நிகழ்ச்சியில் சேகர் குப்தாவிடம், ரொம்பத் தீவிரமாக தங்கள் ஆட்சியின் பொருளாதார சீர்திருத்தங்களை விளக்கிக்கொண்டிருந்தார். ஏழைகள், மற்றும் நலிந்த துறைகளீல் மேல் அதிகம் கவனம் என்கிறீர்களே, என்ன இலவசமாக அள்ளி எடுத்துவிடப்போகிறீர்களா; திட்டங்களுக்கு பணம் எங்கிருந்து வரும் என்ற ரீதியில் கேட்கப்ட்ட கேள்விக்கு, நிதானமாக விளக்கினார். இலவசமாக ( Doling out) கொடுக்காமலேயே, வரிகளை சரியான முறையில் நிர்வகிப்பதன் மூலம் என்று சொன்னவர், எந்த வரிச் சுமையாக இருந்தாலும் அதைத் தாங்கக்கூடியவர்கள்மேல்தான் இருக்க வேண்டுமே தவிர, தாங்க முடியாதவ்ர்கள் மேல் மேலும் சுமத்தாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றார். மக்களின் அடிப்படை வசதிகளில் செலவழிக்க வேண்டும் என்ற கருத்தில் என்ன தவறு இருக்க முடியும் என்ற அவர், உதாரணத்துக்கு தண்ணீர் பிரச்சனையைக் காட்டினார். " ஒரு Mission" ஆர்வத்துடன் இந்தத் தண்ணீர் பிரச்சனைக்கு வழி காண வேண்டும் என்று சொன்னபோது கொஞ்ச நாள் முன்பு இதே வார்த்தையை உபயோகித்து இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும் என்று நான் எழுதியதைப் படித்துவிட்டார்(!!!!!!!!!- அட, ஏதோ கற்பனை பண்றதிலே என்னங்க கஷ்டம் ? :-) என்று சந்தோஷப்ப்ட்டேன்.

தான் ஒரு Investment Minister ( முந்தைய அரசின் Disinvestment அமைச்சுக்கு நேர் மாறாக !!!) என்று சொல்லிக்கொள்கிற இவர், தன் எல்லா பேட்டிகளிலும் புதிய அரசு தொழில் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்தபோகிறது என்று சொல்லி வருகிறார். " நிறைய பேர் - இளைஞர்கள் தொழில்களில் நிறைய முதலீடு செய்வதைக் காண விரும்புகிறேன். இன்னும் நிறைய டாட்டாக்களும், பிர்லாக்களும் வர வேண்டும். இப்படி புதிதாக தொழில்கள் தொடங்க ஒரு பசி இருக்க வேண்டும். I want lot of youngman to have the hunger to start new ventures. If you have 10 business, don't sit with them; Go and start 11th one." இப்படி தொழில் அதிகமாவதுதான் வேலை வாய்ப்புகள் பெருக வழி செய்யும் என்று அவர் தீர்மானமாக நம்புகிறார். அவர் கருத்தில் நியாயம் உள்ளது.
இன்று இந்தியாவின் மொத்த வருமானத்தில் உற்பத்தி - manufacturing - மூலமாக வருவதைவிட சேவைகள் ( Service) மூலமே வருமானம் அதிகம். ஆனால் ஒரு ஸ்திரமான, முழுமையான பொருளாதார வளர்ச்சிக்கு உற்பத்தி வளர்வது மிக முக்கியம்.

இந்த விதத்தில் பார்த்தால், இந்த கட்டுரை ஊக்கமளிப்பதாக இருக்கிறது. அமெரிக்காவில் இருக்கும் வால் மார்ட் தொடர் இந்தியாவிலிருந்து 1 பில்லியன் டாலர் பெறுமான உற்பத்திப் பொருட்களை வாங்குகிறதாம். உடம்பு துடைக்கும் துண்டிலிருந்து, ஆடைகள், துணிகள், ஷ¥, விலையுயர்ந்த டைமண்ட் கற்கள், இறால் ( Shrimps??) என்று நிறைய வாங்கி தங்கள் கடைகளில் விற்கிறதாம். திருப்பூர் பனியன்கள் மற்றும் இதர துணிகளுக்கு மேல் நாடுகளில் என்றுமே ஒரு மதிப்பு உண்டு. இன்று உலக வர்த்தக அரங்குகளில் திருப்பூர் நெசவு தொழில் பற்றி நிறையவே அலசப்ப்டுகின்றன. பஞ்சாபில் உள்ள பர்னாலா என்கிற துணிகள் வியாபாரம் செய்பவர் ரூபாய் 200 கோடிக்கு துணிகள் விற்று, வால் மார்ட் வழங்கும், சர்வதேச சப்ளையர் விருதை வாங்கியிருக்கிறார். அதுபோல் கான்பூர் ஷ¥ உற்பத்தியாளர்களுக்கும் நல்ல வியாபாரம். விலயுயர்ந்த கற்கள் விற்பனை சுமார் 400 மில்லியன் டாலர்கள். வழக்கமாக சர்வதே சந்தையில் ஹாங்காங் டைமண்ட்கள்தாம் விசேஷம். ஆனால் இன்று இந்திய டைமண்ட்களுக்கு சர்வதேச சந்தையில் விற்பனை கூடியதால் ஹாங்காங் வியாப்ர்ரம் எல்லாம் இந்தியாவுக்கு வந்துவிட்டதாக சொல்ல்கிறார்கள். உலகளாவிய வர்த்தக முறையின் அனுகூலங்கள். வெளி நாட்டு உற்பத்திகள் இந்தியாவுக்குள் வந்து நம் தொழில்கள் நசிக்கின்றன என்பதற்கு மாறாக, நம் உற்பத்திகள் வெளியே சென்று நம் உற்பத்தி பெருக ஒரு வாய்ப்பு. உற்பத்தி பெருகும்போது பொதுவாக ஒன்றை ஒன்று சார்ந்த பல பொருட்களின் தேவை அதிகமாகும். உற்பத்திகள் அதிகரிக்கும்போது வேலை வாய்ப்புகளும் அதிகரிக்கும், வறுமை ஒழியும்.

Friday, May 28, 2004

இதுவல்லவோ தன்னம்மிக்கை ? !! :-)

Thursday, May 27, 2004

நேரு

இப்போதெல்லாம், சமீப காலமாக நேரு என்ற சொல்லே ஏதோ சொல்லக்கூடாத சொல் என்பது போல் இருக்கிறது. நாட்டில் எந்தப் பிரச்சனையானாலும் அவர் மேல், அவரது சோஷலிஸ கொள்கையின் மேல் பழி போடப்பட்டு வந்தது. ஆங்காங்கே தெரிந்தவர்கள், அறிந்தவர்கள் " எல்லாம் இந்த நேரு செய்த தவறு" என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். அப்போதெல்லாம் சொல்லத் தெரியாத ஒரு கோபம் வரும். இதென்ன இப்படி கூசாமல் பேசுகிறார்களே என்று. இன்று இந்தர் மல்ஹோத்ரா நேருவைப் பற்றி மிகவும் நெகிழ்ச்சியாகவும் யதார்த்தமாகவும் எழுதியுள்ள கட்டுரையைப் படித்தபோது அப்பாடா என்றிருந்தது.
இந்தக் கட்டுரையில் என்னை சிந்திக்க வைத்த விஷயங்கள்: மதசார்பற்ற நாடாக இந்தியா இருக்க வேண்டும் என்பதற்காக எடுத்துக்கொண்ட முயற்சிகள் எளிதாக இருக்கவில்லை. குறைகள் இருக்கதான் செய்தன. ஆனாலும் இந்தக் கொள்கையைக் கைவிடுவதாக இல்லை. ஈந்த சமயத்தில்தான் Andre Malraux அன்றைய பிரான்ஸின் கலாசார அமைச்சர் நேருவிடம் கேட்டாராம்; " சுதந்திரம் அடைந்ததிலிருந்து அவருடைய மிகக் கடினமான வேலை எது என்று?" அதற்கு உடனே நேரு சொன்னாராம்: " நியாயமான தேசத்தை, நியாயமான முறையில் உருவாக்குவது" என்று சொல்லிவிட்டு, தொடர்ந்தாராம், " அதேபோல், மதங்கள் மேல் ஆழ்ந்த நம்பிக்கை உள்ள ஒரு நாட்டை மத சார்பற்ற நாடாக மாற்றுவதும் கடினம்தான். அதுவும் அந்த மதங்கள் எந்த ஒரு தத்துவ நூல் அடிப்படையிலும் உருவாகாதபோது." என்றாராம்.

இந்தக் கட்டுரையில் குறிப்பிடதுபோல், நேருவின் சில கொள்கைகளோ அல்லது அவற்றை பின்பற்றிய முறைகளிலோ தவறுகள் இருந்திருக்கலாம். ஆனால் ஜனநாயகத்தைக் கட்டி காத்ததில், நாட்டின் ஆரம்ப கால வளர்ச்சிக்கு வித்திட்டதில் என்று எத்தனையோ நன்மைகள் அவர் அரசாங்கத்தில் இருந்தன. இன்று இந்தியா ஒரு software Power " என்று புகழப்படுகின்றதென்ரால், அன்று அவர் IIT, Indian Institute of Science, Baba Atomic Research என்று விஞ்ஞான, தொழில் நுட்ப கல்விகளிலும், இதர தொழில் வளம் பெருக வழிகளிலும் முதலீடு செய்ததால்தான் இன்று நம் இந்தியர்களின் திறமை வெகுவாக உலகில் சிலாகிக்கப்படுகிறது.

ஒரு சமயம் Dean Achson என்கிற அமெரிக்க Secretary of State சொன்னாராம்: " உலகுக்கு இந்தியா மிக முக்கியம். இந்தியாவுக்கு நேரு மிக முக்கியம். ஒரு வேளை நேரு என்றொருவர் இருந்திருக்கவில்லையென்றால், அவரை எப்படியாவது உருவாக்கியிருக்க வேண்டும்" என்றாம். If he did not exist, then - as Voltaire said of God - he would have had to be invented".

பி.கு: இன்று நேருவின் 40 வது மறைவு தினம்.

Wednesday, May 26, 2004

ஹ்ம்ம்... வர வர.. எதற்குதான் மெளசு என்பது புரியாமல் போச்சு.

GMail என்று கூகில் அறிமுகப்படுத்தி இருக்கு இல்ல? அந்த G mail - ஈமெயிலுக்கு நல்ல டிமாண்ட் ஏறிக்கொண்டே போகிறதாம். இன்னும் பரிசோதனை நிலையில் இருக்கும் இந்த ஈ மெயில் நம்ம Blogger குடும்பத்துக்கு மூன்னுரிமை கொடுத்து வினியோகம் செஞ்சிருக்காங்க. தவிர இன்னும் வேறு சிலருக்கும் இந்த பரிசோதனை நிலை G mail உண்டாம். இதில் ஒரு giga byte அளவு உங்கள் கடுதாசிகளை சேமித்துக் கொள்ளலாம். மற்ற ஈ மெயில் சேவைகளில் வருவதுபோல், அப்பப்போ, உங்கள் தபால் பெட்டி நிறைந்துவிட்டது. என்று சிவப்பு கலர் எச்சரிக்கை வருவதைத் தடுக்கலாம். இந்த ஒரு giga byte என்ற அளவு, திடீரென்று ஏதோ ஒரு பிரச்சனையினால் 1000 மடங்கு அதிகமாகி, சென்ற வாரம் ஒரு terabyte அளவு இலவச இடம் கொடுத்துவிட்டதாம். குழப்பம் விளைவிக்கும் " பூச்சியை" (bug என்பதற்கு என்ன வார்த்தைதான் உபயோகிப்பது?) சரி செய்து கொண்டு இருக்கிறார்கள்.

அதுசரி; இந்த giga & terabyte அப்படிங்கறது எல்லாம் சுமாரா எவ்வளவு இருக்கும்? நம்ம யாஹ¥ அல்லது ஹாட்மெயிலில் இப்போ 4 MB யும், 10 MBயுமாக இருக்கிறது. இந்த ஒரு tera byte ல 16 நாட்கள் விடாம DVD பார்க்கிற அளவு data சேமிக்கலாமாம். இந்த terabyte சமாசாரம் ஏதோ தெரியாம நேர்ந்து போச்சு என்று வைத்துக்கொண்டாலும் ஒரு giga byte கூட மற்ற ஈ-மெயில்களைவிட அதிகம்தான்.

அதனால் இப்போ இந்த gmail கிடைக்க நிறைய போட்டியாம். புதுசா ஏதாவது சந்தைக்கு வந்தால் இருக்கும் ஆர்வம் தவிர திருப்பதி free choultry மாதிரி, இதன் இலவச சேமிப்பு இடம் எக்கச்சக்கமாக இருப்பதும் ஒரு காரணம். இப்படி Gmail வைத்திருப்பவர்கள் இதை இணையத்தில் "விற்கவும்" ஒரு புதிய தளம் முளைத்துவிட்டது. இங்கே போனால் உங்கள் gmail கணக்கை எந்த விலையில் மாற்றிகொள்ளலாம் என்று நோட்டம் விடலாம். இந்த Gmail க்கு வந்துள்ள டிமாண்டைக் கிண்டல் செய்து வெளிவரும் நகைச்சுவை அறிவிப்புகளுக்கும் பஞ்சமில்லை. மாதிரிக்கு சில:

" ஒரு gmail கணக்கு கொடுப்பவர்களுக்கு கிராண்ட் கன்யானில், ( Grand Canyan) 200 டாலர் பெறுமான கழுதை சவாரி கிடைக்கும்.

" Gmail கொடுப்பவர்களுக்கு, தன் முதல் குழந்தையைக் கொடுத்துவிடுவதாக ஒரு அம்மையார் அறிவிப்பு" இந்த ரீதியில் அறிவிப்புகள் / கிண்டல்கள்/ ஜோக்குகள் என்று GMail திருவிழா களைக் கட்டிக் கொண்டிருக்கிறது. ஹ்ம்ம்... கலி முத்திப் போச்சுதான் !!

Saturday, May 22, 2004

புது டீம்; புது முகங்கள்.......

- நிறைய மைனாரிடி அல்லது பின் தங்கிய சமூகத்தினர்; நிறைய தமிழர்கள்; நிறைய இளைஞர்கள்; நிறைய பெண்கள்....? ம்... இதுதான் கொஞ்சம் இடிக்கிறது. 4 பெண்கள்தாம். ஆனாலும் 67க்கு 4 என்பது பரவாயில்லையோ?

எதைப் பற்றி சொல்கிறேன் என்று புரிந்திருக்குமே? வேறு என்ன? சற்றுமுன் பதவியேற்ற மன்மோஹன் மந்திரிசபைதான். ஒரு வழியாக நிகழ்ச்சி முடிந்து ஜனகணமன பாடும்போது இரண்டு பேர் - இரண்டு பேர் மட்டுமே - வாய்விட்டு பாடுவது கண்னில் பட்டது. ப. சிதம்பரம்; சுனில் தத்.

இன்று நான்; நாளை நீ; மறுபடி நான்; நாளை யாரோ - சக்கரம் சுழல்கிறது...... involve ஆகாமல் அசோகா ஹாலில் உள்ள சுவராக, தள்ளி நின்று பார்க்கும்போது இதுதான் தோன்றிற்று. சதுரங்க காய்கள் நகர்த்தப்படுவது மாதிரி ஆங்காங்கே முகங்கள் மாறுகின்றன. இடமும் நிகழ்ச்சிகளும் அதே.

சரி. புதிய மந்திரிகளுக்கு வாழ்த்துச்சொல்லுவோம். இந்தியா நிஜமாகவே ஒளிர ஆரம்பிக்கலாம். சாதாரண மக்களின், அடிமட்ட குடிமக்களின் வாழ்க்கை தரம் உயரும் என்று நம்புவோம்.

Thursday, May 20, 2004

சிங்கப்பூர் வானொலி ஒலியில்...

...நான் கூறிய கருத்துக்களில் பரிக்கு இருக்கும் சந்தேகம் வேறு சிலருக்கும் இருப்பதால் இங்கே சற்று விரிவாக என் நிலையை தெளிவு படுத்தலாம் என்று நினைக்கிறேன்.

சோனியாவுக்காக ஓட்டு போட்ட மக்கள் இப்போது அவரில்லாமல் வேறு ஒருவர் பிரதமராக வருவதனால் பெருத்த ஏமாற்றமடையமாட்டார்களா என்று என்னிடம் கேட்கப்பட்டது. அதற்கு என் பதில், " ஓரளவு ஏமாற்றம் இருக்கலாம். ஆனால் பெருவாரியாக என்று சொல்ல முடியாது. பிஜேபி செய்ததுபோல் காங்கிரஸ் கூட்டணி இந்த தேர்தலில் எந்த தனிமனிதரையும் துக்கி வைத்தோ அல்லது தாழ்த்தியோ பிரசாரம் செய்யவில்லை. பொதுவாக, நாட்டை - பொது மக்களை பாதிக்கும் பிரச்சனைகளைதாம் முன் வைத்தார்கள். பிரச்சனைகளுக்கு தீர்வு காண காங்கிரஸ¤ம் கூட்டணி கட்சிகளூம் முனையும் என்றுதான் மக்கள் ஓட்டு போட்டிருப்பார்கள். தவிர, இந்திய அரசியல் சாசனப்படி தேர்தல் முடிந்தபின், வெற்றி பெற்ற கட்சியின் எம் பிக்களால் பின்னர்தாம் பிரதம மந்திரி தேர்ந்தெடுக்கப்படுகிறார்." என்ற ரீதியில் என் பதில் இருந்தது.

அரசியல் சாசன சம்பிரதாயம் தெரிந்துதான் மக்கள் வாக்களித்து இருக்க மாட்டார்கள். நிறைய பேருக்கு தெரிந்து இருக்காது. வாஸ்தவம்தான். ஆனாலும் ஓட்டுப் போடும்போது வாக்காளர்கள் மனதில் என்ன இருந்தது என்பதை யாரால் திட்டவட்டமாக கூறமுடியும் - அவரவர் மனதைத் தவிர ? :-) எல்லாமே ஒரு ஊகம்; மனக்கணக்கு; psephology என்று சொல்லப்படுகிற ஒரு கணிப்புதான். அந்த மட்டில் நான் சொல்லியது என் கருத்து. சோனியா பிரதமர் ஆகாததில் காங்கிரஸ் தொண்டர்கள் மனம் ஒடிந்து இருக்கலாம். ஆனால் டிவியில் நீங்கள் பார்க்கும் காங்கிரஸ் தொண்டர்கள் மட்டுமே இந்திய மக்கள் அல்ல. சோனியா பிரதமர் இல்லை என்றவுடன் பெருத்த ஏமாற்றமடைவதற்கு. காங்கிரஸ¤க்கு ஓட்டுப்போட்ட வாக்காளர்களுக்கு சோனியா பிரதமர் ஆகும் வாய்ப்பு இருக்கும் என்று நன்றாக தெரியும். ஆனால் அவர்கள் வாக்கு அதை மட்டுமே மனதில் கொண்டதல்ல; காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணி என்ற ரீதியில்தான் அவர்கள் ஓட்டளித்திருப்பார்கள் என்பது என் கருத்து. தேர்தலில் ஓட்டுபோடும் வாக்காளர்களில் இரண்டு வகை உண்டு - ஒரு வகையினர், ஒரு கட்சி அல்லது ஒரு தலைவரிடம் விசுவாசமாக வாழ்நாள் முழுவதும் நம்பிக்கை வைத்து ஓட்டளிப்பவர்கள். இந்த கட்சி அல்லது தலைவர் விசுவாசம் கட்சி அல்லது தலைவர் போகுமிடமெல்லாம் போகும். அதனால் இந்த ஓட்டு வங்கி எண்ணிக்கை சாதாரணமாக ஒரே மாதிர்யாகதான் இருக்கும்.

இன்னொரு ரகம் அவ்வப்போது அந்தந்த சமூக சூழலை, வட்டார மற்றும் தேசீய பிரச்சனைகள் தங்களை பாதிப்பதற்கு ஏற்றார்போல் மாறி மாறி வாக்களிக்கும். இதுதான் அவ்வப்போது தேர்தலில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கிறது. நான் குறிப்பிட்டது இந்த வகை வாக்காளர்களை. சோனியா பிரதமராக வருவார் என்று நன்றாக அறிவார்கள். வந்தால் சந்தோஷப் படுவார்கள்; ஆனால் அவர்தான் வர வேண்டும் என்று மட்டுமே எண்ணி வாக்களித்திருக்க மாட்டார்கள்.

காங்கிரஸ் / சோனியா விசுவாசிகள் வேறு; தங்கள் பிரச்சனைகள்தாம் முக்கியம் என்று கருதி வாக்களிக்கும் பொது மக்கள் / வாக்காளர்கள் வேறு.

Wednesday, May 19, 2004

Oli Radio

Singapore's Radio Oli wanted some sound byets from me on the latest poltical developments. Checkout the audio here at 5.15 pm IST and the repeat at 5.15 am IST on 20th - tomorrow. If you are living in Singapore, tune in at Oli - 7.45 pm sg time today and 7.45 am sg time tomorrow, 20th. and let me know your feedback.
" இனி தேசம் டாக்டர் மன்மோஹன் சிங் கையில் பாதுகாப்பாக இருக்கும்". ஜனாதிபதியிடம் ஆதரவு கடிதங்களைக் கொடுத்துவிட்டு வந்ததும் சோனியா காந்தி கூறிய வார்த்தைகள்.

இன்றுதான் அவர் நிம்மதியாக தூங்குவார் என்று நினைக்கிறேன். முகத்தில் அப்படி ஒரு நிம்மதி. பத்த்ரிகையாளர்களிடம் அவர் முகம் மலர்ந்து தெளிவாக சிரித்து பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்தால் அவர் எடுத்த முடிவு அவரைப் பொறுத்தவரை மிகச் சரிதான் என்று தோன்றுகிறது.

ராகுலும் டிட்டோ ! மிக நிம்மதியாக - சொல்லப்போனால் ஜாலியாக பேசிக்கொண்டிருந்தார். " ராகுல், உங்கள் திருமணம் எப்போ?" யாரோ நிருபர் சீண்டலான கேள்வி. " அதை நான் இன்னும் முடிவு செய்யவில்லை. செய்தபின் உங்களுக்குக் கட்டாயம் தெரிவிக்கிறேன்" என்று அதே சீண்டல் தொனியில் பதில். இவரும் மந்திரிசபையில் அங்கம் வகிக்கப் போகிறதில்லையாம். ஆனால் 5 வருடம் குறித்து ஏற்பாராம். பிரதமராவதை யோசித்திருக்கிறீர்களா? சற்று தன்யங்கி, " இல்லை. ஆனால் பிரதமர் ஆக வேண்டும் என்று தினம் ஸ்பரணை செய்து கொண்டிருக்க முடியுமா என்ன? காலப் போக்கில் பிரதமராக வேண்டும் என்ற நிலை வந்தால் ஏற்றுகொள்வேன்." இந்த ரீதியில் இருந்தது அவரது பதில்.

ஏதோ இப்போதைக்கு அவர்களுடன் நாமும் சேர்ந்து சற்று நிம்மதி பெருமூச்சு விடுவோமே?

Tuesday, May 18, 2004

Some how this post gets deleted mysteriously several times. this is the fourth time I am posting this. What's happening on the blogger ? :-(

எங்கள் பெற்றோர் எங்களுடையவர்கள் என்று நினைத்ததேயில்லையே ?

கிட்டதட்ட நான் எதிர்பார்த்தேன். சோனியா இப்படிதான் முடிவு எடுப்பார் என்று. ஆனால் நான் எதிர்பார்த்ததைவிட கொஞ்சம்
தாமதமாகதான் அறிவித்துள்ளார். தேர்தல் முடிவுகள் வந்தவுடனேயே அறிவிப்பார் என்று நினைத்தேன். காங்கிரஸ் இனி அவ்வளவுதான் என்றெல்லாம் கூறப்பட்டதை மீறி, கஷ்டப்பட்டு ஆறு வருஷமாக கட்சியை ஒழுங்குபடுத்தி நிலைக்க செய்து, இன்று தேர்தலிலும் வெற்றி பெற செய்த ஒருவரை, நன்றி; நீங்கள் இனி போகலாம்; என்று கூறுவதுபோல் இருக்கிறது வேறு ஒருவரை பிரதமாராக்குவது. இருந்தாலும் சோனியாவைப் பொறுத்தவரையில் இப்போதைக்கு அவர் விவேகமான முடிவுதான் எடுத்துள்ளார். இல்லாவிட்டால் அவரையோ நாட்டையோ நிம்மதியாக இருக்க விடமாட்டார்கள். பொதுவாக மனித நேயம் உள்ளவர்; பெருந்தன்மையானவர் என்று நான் அவரைப் பற்றி நினைத்திருந்தது சரியாகதான் இருக்கிறது. ஆனால் முன்பு காங்கிரஸ் தலைவர் பதவியின் போதும் இப்படிதானே வேண்டாம் என்று ஒதுங்கியவரை அழுது அமர்க்களம் பண்னி ஏற்றுகொள்ள வைத்தார்கள்? எனவே இப்போவும் அவர் தன் முடிவை மாற்றிகொள்ளலாம் என்றும் சொல்லபப்டுகிறது. பிரியாங்காவும் இறுதியில் ஒரு கேள்விக்கு தன் தாய் "ஒரு வேளை மறுபரிசீலனை செய்யலாம்" என்று சொன்னதையும் கொஞ்சம் கருத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது.

ஆனால் என் ஊகம் சோனியா முடிவை மாற்றிகொள்ள மாட்டார் என்பதுதான். அவர் முகத்தில் தெரிந்த தீவிரம் அப்படியிருந்தது.

என்னைப் பொறுத்தவரையில் சோனியாவின் குடியுரிமை பற்றி என்றுமே சந்தேகம் இருந்ததில்லை. எந்த ஒரு விஷ்யத்திலும் - கல்வி மற்றும் சமூக அமைப்புகள் எதிலும் - ஒருவரின் பிறப்பின் காரணமாக அவர் discriminate செய்யப்படுவதை நான் என்றுமே ஏற்றுக்கொண்டதில்லை. Same holds for top posts of the country. நாட்டின் ரகசியங்களையோ அல்லது முக்கிய ராணுவ ரகசியங்களையோ மந்திரிகளோ அல்லது சேவைத் தளபதிகளோ தயக்கமில்லாமல் "பிரதமர்" சோனியாவுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா என்று சில கேள்விகள் எழுகின்றன. இதற்கு என் பதில் at http://arunas.blogspot.com

சரி. சோனியாவின் இந்த முடிவுக்கு காரணம் என்ன?

இந்த குழப்பம் நிறைந்த சம்யத்தில் பல காங்கிரஸ் தலைவர்கள் பல சேனல்களில் பேட்டி காணப்பட்டார்கள். அதில் சல்மான் குர்ஷித் கூறுவதாக சொல்லப்பட்டது என்னவென்றால், ராகுலும் பிரியாங்காவும் தங்கள் தாயின் உயிருக்கு ஆபத்து வந்துவிடும் என்று பயப்படுவதால் அவர் பிரதமராக இருப்பதை விரும்பவில்லை என்று. இந்த குடும்பத்தைப் பற்றி நன்கு அறிந்த ஒரு காங்கிரஸ் தலைவர் இப்படி அர்த்தமில்லாமல் கூறுகிறாரே என்று தோன்றிற்று. கூட்டம் முடிந்ததும் வெளியே தாழ்வாரத்தில் பிரியாங்காவையும் ராகுலையும் கேள்விக்கணைகள் தாக்கின. அதில் பிரியாங்கா கூறியது குறிப்பிடத்தக்கது:

கேள்வி: குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று நீங்கள் சொல்வதை உங்கள் அம்மா கேட்பாரா? ( கிட்டதட்ட இந்த அர்த்தத்தில்).

பிரியாங்கா - ( சட்டென்று அடிபட்டாற்போன்ற முகத்துடன்) " நாங்கள் என்றுமே எங்கள் பெற்றோர் எங்களுடையவர்கள் என்று நினைத்ததே இல்லையே? We do not feel our parents belonged to us. Even when our father was killed and when he went without any security he didn't listen to us.

இந்தக் குழந்தைகளா அம்மா உயிருக்கு ஆபத்து என்று பயந்து பிரதமராவதைத் தடுப்பார்கள்? அப்படி நினைத்திருந்தால் அரசியலுக்கே வராமல் எங்கேயோ பாதுகாப்பாக வாழ்க்கை நடத்தியிருப்பார்களே?


Sunday, May 16, 2004

இளைஞர் மண்டேலா!!

2010ம் ஆண்டு உலகக்கோப்பையை நடத்த தென்னாப்பிரிக்கா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள செய்தியை டிவியில் பார்த்துக்கொண்டிருந்தேன். தேர்வு அறிவிப்பு செய்யப்பட்ட அடுத்த வினாடி ஒரே உற்சாக வெள்ளம். அதையொட்டி நெல்சன் மண்டேலா ஆற்றிய உரை. அவரும் முகமெல்லாம் மலர்ச்சியாக, " இப்போது நான் 50 வயது இளைஞனைப் போல் உணருகிறேன்" என்று தன் உற்சாகத்தை எல்லொருடனும் பகிர்ந்து கொண்டார்.

என்ன சொல்ல வருகிறேனென்றால், 50 வயதானாலே "வயசாச்சு" என்று சொல்லத் தோன்றும் இந்த காலத்தில் 87 வயதாகும் நெல்சன் மண்டெலா 50 வயது 'இளைஞன் என்று சொன்னது சுவாரசியமாக இருந்தது. அது சரி; அவருடைய 87 வயதுக்கு 50 வயது இளமைதான். இருந்தாலும் வயது ஏற ஏற, 'வயதாகிவிட்டது' என்ற புலம்பல் இல்லாமல் மனதளவில் இளமையாக உற்சாகமாக இருப்பவர்களைப் பார்த்தால் நமக்கும் கொஞ்சம் உற்சாகம் தானே ஒட்டிக்கொள்ளாதா? இதுபோல்தான் என் தந்தைக்கு சென்ற வருடம் ஒரு அறுவை சிகிச்சை செய்யும்படி இருந்தது. பத்து நாள் கழித்து கொஞ்சம் கொஞ்சமாக நார்மலுக்கு வந்த அவரை தினம் எப்படி இன்று முன்னேற்றம் என்று விசாரிப்பது என் வழக்கம். அப்போதைய உடல் நிலை குறித்து ஏதாவது சொல்வார். ஒரு நாள் சொன்னார். " எல்லாம் இப்போ சரியாக இருக்கு. ஆனால் என்ன.... என் நடைதான் சற்று மெள்ளமாக இருக்கு. பார், தாத்தா மாதிரி நடக்கிறேன்..." !! என்றார். அப்போது அவர் வயது, 87 !!

Saturday, May 15, 2004

டெமாகிரெடிக், கம்யூனிஸ்ட் இந்தியா?

தேர்தலுக்குப் பிறகு வரும் செய்திகளைப் பார்த்தால் அப்படி ஒரு பிரமை உண்டாகிறது. மாற்றி மாற்றி இடது சாரிகளின் anti reform ( No; we are not against reforms என்று ஒரு பக்கம் சொல்லிக் கொண்டே) குரல்கள்தாம் ஒலிக்கின்றனவே தவிர காங்கிரஸின் அல்லது மற்ற கட்சி தலைவர்களின் குரல் காணோம். மன்மோஹன் சிங், மற்றும் சிதம்பரம் எல்லாம் எங்கே? பிரதமர் யார் என்று முடிவு செய்வதில் காங்கிரஸ் மூழ்கிக் கிடக்கும்போது அவசரம் அவசரமாக முதல் காரியமாக " disinvestment" பற்றி பேசி பங்குச் சந்தையை இப்படி தடாலென்று கீழே தள்ளியிருக்க வேண்டாம். பங்குச் சந்தை விழுவதும் எழுவதும் பெரிய விஷயமில்லை. இன்னொருமுறை தும்மினால் மேலே வந்துவிடும். இருந்தாலும் தொடர்ந்து முதலீட்டார்கள் நம்பிக்கை இழந்து வேகமாக முதலீடுகளை திரும்ப எடுத்துக்கொள்ளும் trend தான் கவலை தருகிறது. ஒரே நாளில் 605 கோடி ரூபாய் அளவில் முதலீடுகள் காணாமல் போயிருக்கின்றன.

தேர்தல் முடிந்து மகக்ள் நம்பிக்கையை சம்பாதித்தாயிற்று. நல்ல காரியம். அடுத்தது, இப்போதைய அவசியம், முதலீட்டார்களின் நம்பிக்கையை நிலை நாட்டுவது. குறைந்த பட்சம் அவர்களை பயமுறுத்தாமல் இருக்கலாம். ஆரம்பித்தவுடன் பானையைப் போட்டு உடைப்பதுபோல் வணிக உலகில் எதிர்மறை விளைவிக்கும் எண்ணங்களைதான் எடுத்த எடுப்பில் அறிவிப்பு செய்ய வேண்டுமா?

பொருளாதார சீர்திருத்தங்களைத் தொடருவோம் என்று பேசுகிறவர்கள், முதலில் எல்லோருக்கும் நம்பிக்கைத் தரும் கொள்கைகளை அறிவித்து பின் தங்கிய வர்கத்தினர் மற்றும் வணிக உலகம் இரண்டுக்கும் நம்பிக்கை அளிக்கும் வகையில் திட்டங்கள் அறிவிக்க ஆரம்பிக்கலாமே? விவசாயம் மற்றும் நெசவு என்று நலிந்த துறைகளில் அரசு முதலீடு அதிகரித்து வேலை வாய்ப்பு அதிகரிக்க வகை செய்யும் என்று ஏதாவது ஆக்க பூர்வமான அறிவிப்பாக தொடங்கியிருக்கலாமே?

உலகளாவிய வர்த்த்கம் நிலவும் இந்த நாளில் உலக அரங்கில் இந்தியாவைப் பற்றி ஒரு நம்பிக்கையை உருவாக்குவது முக்கியம். அதனால் ஆக்கப்பூர்வமாக ஏதாவது திட்ட அறிவிப்புகள் வர வேண்டும்.

மன்மோஹன் சிங், சிதம்பரம் & Co - விரைவில் ஆஜர் ஆகும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் :-)

Thursday, May 13, 2004

தூவானம் !

மழை ஓய்ந்தாலும் தூவானம் இருக்கணுமே ? சில அசை போடல்கள்:

வெற்றி வந்து குவிந்தபோதும் சோனியா காந்தி வெகு நேரம் பத்திரிகையாளர்களை சந்திப்பதைத் தவிர்த்து வந்தார். பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த போதும் பிடி கொடுக்காமல்தான் பேசினார்.

ஏன்?

என் மனதில் ஒரு "deja vu". காட்சி: 1998 ல் ராஷ்ட்டிரபதி பவன் முன் திறந்த வெளியில் தன்னிடம் தேவையான எம்.பிக்கள் இருப்ப்தாக 'letter of support' என்று படு நம்பிக்கையாக அறிவிப்பு செய்யும் காட்சி மனக்கண் முன் வந்து போனது.

இந்த முறை ரொம்ப ஜாக்கிரதையாக இருக்கிறாரோ?

***

1999 தேர்தலின்போது எழுதிய ஒரு குட்டி சமாசாரம்: இப்போதும் சரியாகவே இருக்கும் :-)

பங்கு சந்தையில் பங்குகளின் ஏற்ற இறக்கத்தை கணிக்கும் அளவுக்கு " Sensitive Index" என்று ஒரு குறியீடு
இருப்பதுபோல், இந்த தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்கு முந்தைய நாள் அரசியல் கட்சிகளின் நம்பிக்கையைக்
கணிக்க ஒரு விசேஷ குறியீடு பயன்படுத்தப்பட்டது. அதுதான், "லட்டுகள் காட்டும் நம்பிக்கை சங்கேதம்"
(Laddoo Index of Confidence).....!! ஜெயித்தால் இனிப்பு வழங்க வேண்டாமா? அதற்காக கட்சிகள்
அனைத்தும் முன்ஜாக்கிரதையாக தங்கள் தங்கள் பங்குக்கு இனிப்பு கடைகளில் லட்டுகளுக்கு ஆர்டர்கள்
கொடுத்துவிட்டனர். எத்தனைக்கெத்தனை ஆர்டர்களின் மதிப்பு அதிகமோ அதற்கேற்றாற்போல் அவர்களின்
நம்பிக்கையின் அளவும் என்று குத்து மதிப்பாக பத்திரிகையாளர்களுக்குள் ஒரு கணிப்பு...!

****

ஒரு பேட்டியில் பிரமோத் மஹாஜனிடம் கேள்வி கேட்கபடுகிறது: " இந்த லோக் சபாவில் எதிர்கட்சி தலைவராக வாஜ்பாய் இருப்பாரா?"

மஹாஜன்: " சொல்ல முடியாது. அவர் வயது, அவர் உடல் சக்தியைப் பொறுத்தது. அவரால் இந்த பளுவைத் தாங்க முடியுமா என்பது கேள்விதான்."

என் உள்ளே அசரீரி: " நன்றாயிருக்கிறதே? கட்சி வெற்றி பெற, அவர் வேணும் - வாஜ்பாய் factor - இப்போ அது நடக்கவில்லையென்றதும் அவரை ஓரம் கட்டிவிட வேண்டியதுதானா?"

***

NDTV யில் வாஜ்பாய் ராஜினாமா கடிதம் கொடுக்கப் போவதைக் காண்பித்தார்கள்: அம்பாசடர் காரை மட்டுமே பார்க்க முடிந்தது.யானால் அலசல்கள் நடுவில் நேற்று அவருடன் எடுத்த பேட்டி வந்தது. ஒரு கவிதை பாடச்சொன்னால் என்ன பாடுவீர்கள் என்ற கேள்விக்கு, " நிச்சயம் தோற்க மாட்டேன்; அப்படியே தோற்றாலும் யாருடைய எதிரியாகவும் இருக்க மாட்டேன்; எனக்கென்று தனியாக ஒரு புதிய பாதை வகுத்துக்கொள்வேன்" என்கிற ரீதியில் இருந்தது கவிதை. அதை அவர் சொல்லும்போது அந்த அமைதியான சிரிப்பும் கண்களில் ஒளியும்... !! மனதில் ஓர் ஓரத்தில் இரக்கம் கவ்விக்கொண்டது.

real gentleman;

So, let's give him a standing ovation. He desrves - for being the gentleman he is, if not for the blunders of his party.

மனதில் உறுதி வேண்டும்; உண்மை நின்றிட வேண்டும்

இந்திய ஜனநாயகத்தையும் முகம் தெரியாத அந்த இந்தியன் என்பவரையும் நினைத்தால் பெருமையாக இருக்கிறது. யார் என்ன வேண்டுமானாலும் சொல்லிக்கொண்டு போங்கள்; எத்தனை விதமாக வேண்டுமானாலும் தங்கள் பெருமையைப் பீற்றிக்கொள்ளுங்கள் - ஆனால் எங்களுக்கு என்ன வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும் என்பதை இன்னொரு முறை திட்டவட்டமாக சொல்லிவிட்டார்கள். அதுவும் தமிழ் நாட்டைப் பற்றி - எதிர்பார்த்ததுதான் என்றாலும், இப்படியா ! சுத்தமாக துடைத்துவிட்டமாதிரியா! என்று மூக்கில் விரல் வைக்கும் அளவு அதிமுக அரசின் மேல் இருக்கும் எதிர்ப்பைக் காண்பித்துள்ளார்கள் என்றே தோன்றுகிறது. அதுவும் வெற்றி பெற்றவர்கள் பெரும்பாலோர் ஆயிரக்கணக்கில், லட்சக் கணக்கில் வெற்றிபெற்றுள்ள்தைப் பார்க்கும்போது, Obviously, the mob was / is furious என்றுதான் தோன்றுகிறது.

அது சரி; ஒன்று கவனித்தீர்களா? நேற்றைய என் 3 ஊகங்களில் இரண்டு சரியாகிவிட்டது :-) Landslide victory - அதாவது, தமிழ் நாட்டில்; அடுத்தது, தேசிய அளவில் சமத்தாக மக்கள் ஒரு கூட்டணிக்குப் பெரும்பான்மை கொடுத்துவிட்டார்கள் - நம்ம ஜனாதிபதிக்கு சிரமம் இல்லாமல் போய்விட்டது.

முடிவுகள் வெளிவர ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே ஒரு சுவாரசியமான trend வெளிப்பட்டது. இடதுசாரிகளின் முன்ணணி எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போயிற்று. இதைப் பார்க்கும்போது மனதில் ஒரு கேள்வி. மக்கள் reform processக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்களோ என்று. ஆனால் அப்படியும் தோன்றவில்லை. ஏனென்றால் காங்கிரஸ்தான் economic reforms ன் காரணகர்த்தாவே - அதேபோல், இடதுசாரி கோட்டையான மேற்கு வங்கமே economic reforms தேவை என்ற ரீதியில்தான் செயல்படுகிறது. அதனால், ஒட்டுமொத்தமாக reformsக்கு எதிரான வாக்களிப்பாக இது தெரியவில்லை. reformsன் பயன்பாடுகள் அடித்தள மக்களை சரியாக அடையவில்லை என்பதுதான் மக்களின் தீர்ப்பு சொல்லும் பாடம். செல் போனைவிட, கல்வி, சுகாதாரமும், சாலைகளும், குடிநீரும்தான்தான் முக்கியம் என்று சொல்லுகிறார்கள். ( என் உள்ளே அசரீரி: மிஸ்டர். குடிமகன்: " அட கடவுளே, தேர்தல் மாத்தி தேர்தல், இதை எத்தனை தடவை அய்யா சொல்வது? இந்த தலைவர் ஜனங்களுக்குப் புரியமாட்டேங்குதே :-( !! )

reform என்று சொல்லும்போது மக்களுக்கு அடிப்படை வசதிகள்/ அவர்கள் வாழ்க்கைத்தரம் உயர, கல்வி, சுகாதாரம், வேலை வாய்ப்பு என்ற ரீதியில் பொருளாதார புரட்சி அமையும்போதுதான் அரசு நமக்கு நல்லது செய்யும் என்ற நம்பிக்கை பிறக்கிறது. காங்கிரஸ் தேர்தல் அறிக்கை சொன்னதுபோல் பொருளாதார கொள்கைக்கு ஒரு human face இருக்க வேண்டும்.

தவிர, மாலனிடம் ஹிந்து ராம் சொன்னதுபோல் இது ஒரு pro democracy and pro secular தீர்ப்பு என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. ஹிந்துத்வா வாதங்கள் மக்களிடம் செல்லவில்லை. அதேபோல் அடிதட்ட மக்கள் மேம்பட வழி செய்யாத எந்தப் பொருளாதார கொள்கையயும் அவர்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை என்பதும் உண்மை. நாடும் வளம் பெற வேண்டும்; வளர்ச்சி வேண்டும்; வேலை வாய்ப்புகள் கூட வேண்டும்; வியாபாரம் பெருக வேண்டும். இதற்கெல்லாம் வழி செய்யும் வகையில் ஒரு பொருளாதாரக் கொள்கை இருக்க வேண்டும்.

மன்மோஹன் சிங் ( அட; வேறு யாராக இருக்கும்?) வேலை எளிதாக இருக்கப்போவதில்லை.

Wednesday, May 12, 2004

ஒரு விக்கெட் அவுட்; சரி. அப்புறம் ?

சந்திரபாபு நாயுடு தோற்றதற்கு காரணங்கள் இப்போ அலசப்படுகின்றன. இதில் சாய்நாத் சொல்வது பளிச்சென்று இருக்கிறது. சந்திரபாபு, கணினி, கார்பொரேட் என்று இருந்த அளவு, அடிமட்ட அளவில் அக்கறை காட்டவில்லை என்பது மட்டும் அல்ல; அவர் அப்படி உண்மை நிலை உணராமல் போனதற்கு, CEO என்று ஜால்ரா போட்டு அவரை எங்கேயோ கொண்டுபோய் தூக்கிவைத்துவிட்ட ஊடகங்களும் காரணம் என்கிறார் சாய்நாத். சரி என்றுதான் தோன்றுகிறது. Emperor has no clothes என்று சொல்பவர்கள் இல்லாமல் போய்விட்டார்கள் நாயுடுகாருக்கு.

இவற்றைப் படிக்கும்போது என்னுள் ஒரு கற்பனை. நாளை மதியம் போல் இதே போல் இன்னொரு அலசல் குவியல் நம்மைத் திக்கு முக்காட வைக்கும். ஏன் தோற்றார்கள் என்று. அது யார் என்று தெரிய இன்னும் 24 மணி நேரம் குறைந்தது காத்திருக்க வேண்டும். அதற்குள் என் ஊகங்களை முன் வைத்துவிடலாம்.

மூன்று சாய்ஸ்:

1. கணிப்புகள் சொல்படி தொங்கு நாடாளுமன்றம்; ஜனாதிபதியும் கணிப்புகளை நம்புகிறார் போல; ஏற்கனவே சட்ட நிபுணர்களின் ஆலோசனைக் கூட்டத்தை ஆரம்பித்துவிட்டார்.

2. எல்லா கணிப்புகளுக்கும் "பெப்பே" என்று அழகு காட்டிவிட்டு காங்கிரஸ் கூட்டணியோ அல்லது பாஜக கூட்டணியோ Landslide Victory !!!! ???? - (அப்படி ஒன்று இருக்கிறதா :-)

3. சமத்தாக ஏதோ ஒரு கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைத்து அப்துல் கலாமுக்கு நிம்மதி பெருமூச்சு விட ஒரு சான்ஸ்.

ஹ்ம்ம்.. இதைவிட வெண்டைக்காயாக எழுத முடியுமா என்ன? :-)

Monday, May 10, 2004

ஹ்ம்ம்ம்... ஓட்டு போடவும் கொடுப்பினை வேண்டுமோ? :-)

Google mail கிடைச்ச மாதிரி இருக்கு - என் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து, ஒட்டு போட்டுவிட்டு வந்தது. இந்த தேர்தலில் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமல் கோபமாக திரும்பி வந்த வாக்காளர் பற்றிதான் நிறைய செய்திகள். தொழிலதிபர் ஆதி கோத்ரெஜ், ஜனாதிபதி அப்துல் கலாமின் சகோதரர் என்று பிரபலங்கள் பெயர் மற்றும் என் brother-in-law போன்ற சாதாரணர்கள் என்று நிறைய பேர் பட்டியலில் காணோம். ஹ்ம்ம்.. கொடுத்துவைத்த சில வாக்காளர்களில் பட்டியலில் நானும் என் கணவரும் இடம் பிடித்துவிட்டோம் போல :-)

பி.கு: அட..! Blogger.com தளம் பிரமாதமாக மாறிப்போயிருக்கே. புது லே அவுட் நன்றாகவே இருக்கு.

Friday, May 07, 2004

வலைப்பதிவாளர்கள் சார்பில் திசைகளுக்கு ஒரு நன்றியைச் சொல்லிவிட வேண்டியதுதான். ஏனோ? படியுங்களேன், புரியும்.

Tuesday, May 04, 2004

கடந்த சில நாட்களாக காசியின் பதிவில் ஒரு விவாதம நடந்து இருக்கு. நான் கவனிக்காமல் இருந்துவிட்டேன். பிகேஎஸ் கொடுத்திருந்த சுட்டியை இப்போதான் சாஆஆஆஆவகாசமாக (!!) பார்த்தேன்! திண்ணையில் என் பெயரைப் பார்த்ததும், தூக்கிவாரிப்போட்டது. மற்றபடி சர்ச்சைக்குரிய பகுதியெல்லாம் காணோம். ( எடுத்துவிட்டார்கள் ?) இருந்தாலும், திண்ணையில் குறிப்பிடப்பட்டிருக்கும் மற்ற வலைப் பதிவாளர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று செல்வராஜ் ஒரு கேள்வி கேட்டிருப்பதால் என் எண்ணங்களைப் பதிவு செய்வது அவசியம் என்று நினைக்கிறேன்.

திண்ணைக் கட்டுரையில் நான் பார்த்தபோது மூன்று பதிவுகள்தாம் இருந்தன. அதனால் பாக்கி பதிவுகளை எப்படி வெளியிட்டு இருந்தார்கள் என்பது தெரியவில்லை. ஆனால் பொதுவாக - In Principle - காப்புரிமை போன்ற சங்கதிகளையெல்லாம் ஒதுக்கிவிட்டு சிம்பிளாக ஒரு கோணத்தில் பார்த்தால், வலைப்பதிவு டைரி மாதிரி என்றாலும் பொது பார்வைக்காகதானே எழுதுகிறோம்? அதனால் மேற்கோள்கள் / links கொடுப்பதில் தவறில்லை. ஆனால் முன்பின் விளக்கங்களுடன் மேற்கோள்கள் - சரியான hyperlinks கொடுத்து கட்டுரையில் நாம் சொல்ல வந்தது தெளிவாக இருந்துவிட்டால் பிரச்சனையில்லை. பிற இடங்களில் நாம் படிப்பதை நம் வலைப்பதிவுகளில் links கொடுப்பதுபோல் நம் வலைப்பதிவுகளும் பிற இடங்களில் மேற்கோள்களாக காட்டப்படுவதில் தவறேதும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.

Having said that, இன்னொன்றையும் குறிப்பிட்டாக வேண்டும். எங்கேயோ தவறு நேர்ந்து விட்டது என்பது புரிந்தவுடன், தடாலென்று சர்ச்சைக்குரிய பகுதி நீக்கப்பட்டிருக்கக்கூடாது. எப்போது பொது பார்வைக்காக வந்துவிட்டதோ அது அப்படியேதான் இருந்திருக்க வேண்டும். காசி சொல்வதுபோல் "திருத்தப்பட்டது" என்று அறிவித்து இருக்கலாம். அல்லது சரியான விளக்கங்கள் கொடுத்து விட்டு இருக்கலாம் - பிரிண்ட் பத்திரிகைகளில் செய்வதுபோல். இணையத்தில் வெளியிட்டாலும் பிரசுரத்துக்குரிய நெறி முறைகள் பின்பற்றப் பட வேண்டும் இல்லையா?

பி.கு: யூனிகோட் பற்றி காசி எழுதியிருந்த பதிவில் பின்னூட்டம் எண்ணிக்கை 40 என்று பார்த்துவிட்டு, அட, 40 பேர் ( சரி; 40 பதில்கள்:-) இருக்கே; அப்படி என்னதான் யூனிகோட் பற்றி அலசுகிறார்கள் என்று நுழைந்தேன் :-) முதலும் கடைசியும் தவிர, நடுவில் பெரிய ரகளையே அல்லவா நடந்திருக்கு - அதுவும் யூனிக்கோடிற்கு சம்பந்தமேயில்லாமல் :-)