Friday, August 17, 2007

ஒரு தூரதிருஷ்டி பார்வையில்

மன்மோஹன் சிங் தளர்வதாக இல்லை; இடதுசாரியும் விடுவதாயில்லை. அரசைக் கவிழ்ப்பது நோக்கமில்லை என்று சொல்லும் இடதுசாரி, ஒரு வேளை "விட்டுகொடுத்து" விட்டாலும், அணு ஒப்பந்தம் அமுலுக்கு வந்தாலும் ஒப்பந்தக் காலமான 40 வருடம் ( கொசுறு 10 வருடக்காலமாம்) சொச்சத்தில் என்ன மாதிரியான மாற்றங்கள் நமது நாட்டில் அல்லது உலகளவில் வரும் என்று தெரியாது.

வெற்றிகரமாக - மன்மோஹன் சிங்க் நம்பிக்கை வைப்பது போல் -இந்தியாவுக்கு ஆதாயமாகவும் இருக்கலாம். அல்லது இடதுசாரி கவலைப்படுவது போல் நாம் அணு சோதனை செய்ய நேர்ந்தால், அதன் காரணமாக ஒப்பந்த முறிவும் ஏற்படலாம்.

Hyde Act காரணம் காட்டி அமெரிக்காவும் ஒப்பந்தத்தை முறித்துக்கொள்ளலாம்; இந்தியாவும் தன் காரணங்களைச் சொல்லி எப்போது வேண்டுமானாலும் விடுபடலாம். ஒப்பந்த முறிவுக்கு சாத்தியக் கூறுகள் இருக்கின்றன. ஆனால், இதனால் விளைவுகள் என்ன? இரு நாடுகளுக்கும் பாதகங்கள் என்ன? முறிக்கும் நிலை வரை இரு நாடுகளுமே போகுமா? அப்படி நேர்ந்தால், அமெரிக்கா திருப்பித் தரச் சொன்னாலும் இந்தியா, தான் பெற்றுக்கொண்டவற்றை திருப்ப வேண்டிய அவசியமில்லா சூழ்நிலை என்ன, என்று பத்திரிகையாளர் சித்தார்த் வரதராஜன் சொல்கிறார். "...Under a worst-case scenario where the U.S. ignores its obligation to ensure the continuous operation of Indian reactors, presumably citing the Hyde Act, India would be under no obligation to entertain an American request for the return of nuclear items...."

ஏன், எப்படி என்று இவர் இங்கே விவரிக்கிறார்.

மற்றொரு பக்கம், இப்படி வெளியிலிருந்து பெறப்படும் உதவிகள் மூலம் - அமைக்க இருக்கும் நான்கு புதிய அணு சக்தி ஆலைகள், இந்தியாவுக்கு மேலும் 30,000 MW சக்தி உற்பத்தி செய்யும் என்று நேற்று வந்த செய்தி கூறுகிறது. என் பார்வையில் இதுவும் ஒரு முக்கிய கோணம். 16 வது Electric Power Survey கொடுத்த அறிக்கையின்படி, 2000 -01 ல் மொத்தம் 1,01630 MW சக்தி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

இதில் நிலக்கரி மூலம் ( Thermal ) - 72,359 MW;
தண்ணீர் சக்தி மூலம் ( Hydel) - 25,142 MW;
அணு சக்தி மூலம் - 2,860 MW;
காற்று மூலம் (Wind power) - 1,269 MW.
( சூரிய சக்தி பெருமளவில் உற்பத்தி செய்யப்படவில்லை - அல்லது குறிப்பிடப்படவில்லை)

ஆக, உற்பத்தி முழுவதுமான கணக்கில் அணு சக்தி மூலம் கிடைத்தது வெறும் 3 சதவிகிதத்திற்கும் கீழ். இப்போது வெளியுதவிகள் மூலம் இந்த உற்பத்தி அதிகரிக்கலாம் - நேற்றைய செய்தியின்படி 30000 MW. இருந்தாலும் மொத்த உற்பத்தியில் அணு சக்தியின் பங்கு மிகக் குறைந்த சதவிகிதம்தான் தேறும்.

இந்த இத்தணூண்டு அளவு கிடைக்கும் சக்திக்காகவா ஒரு அரசாங்கமே ஊசலாடும் அளவு விவாதம் இடம் பெறுகிறது என்று தோன்றுகிறது. இதுக்காக ஏன் நம் அரசு உயிரைப் பிடித்துக்கொண்டு போராடுகிறது என்ற கேள்வி எழுகிறது. ஆராய்ந்ததில் எனக்கு கிடைத்த விடைகளும், என் கேள்விகளும்.

இந்தியாவில் என்றல்ல; உலகம் முழுவதிலும் அணு மூலம் கிடைக்கும் சக்தி 3 சதவிகிதம் மட்டுமே. இயற்கையை மூலதனமாக வைத்து உருவாக்கப்படும் சக்திதான் பெரும்பாலும் இதுவரை உலகை இயக்குகிறது. நாளுக்கு நாள் சக்தியின் தேவை அதிகரித்துக்கொண்டே போகிறது. சக்தியின் தேவை நமக்கு அதிகரிக்கும் அளவு இயற்கையும் வேகமாக வற்றாத ஊற்றாக நமக்கு சக்தியை அள்ளி அளிக்க வேண்டும்.

ஆனால் நிஜம் அப்படி இல்லை. இந்தியா உள்பட உலகெங்கிலும் இயற்கை மூலம் கிடைக்கும் சக்தி வறண்டு விடும் அபாயம் இருக்கிறது.
பெருமளவு தண்ணீர் மின்சாரம் உற்பத்தி செய்ய, பெரும் அணைகள் கட்ட வேண்டும் - பல மக்கள் வாழும் பகுதிகளில் அவர்களை இடம் பெயர்த்து செய்ய வேண்டிய அவசியம் - இது நடைமுறையில் கடினமான ஒன்று. மாற்று வழி - சிறு அணைகள் - அப்போதும் மக்கள் இடப்பெயற்சி அவசியம் - தவிர இப்படிபட்ட சிறு அணைகள் மூலம் கிடைக்கும் மின்சாரம் கடுகளவே. நம் ராட்சச தேவைகளுக்கு பற்றாது. பெரும் வாளியை நிரப்ப, ஸ்பூனால் மொண்டுவிட்டு நிரப்பும் கதை. கடைசி பட்ச அபாயம், எதிர்காலத்தில் நீர் வறட்சியும் ஏற்படலாம். காற்றின் மூலம் கிடைக்கும் சக்தியும் மிகக் குறைச்சலே - ஆனால் இந்தக் கோணத்தில் அதிக பட்ச உற்பத்தி செய்யும் வழிகளைப் பற்றிய ஆராய்ச்சிகளில் முதலீடு செய்வது அவசியம்.

ஆனால் சூரிய சக்தி மற்றும் காற்று சக்தி உற்பத்தியில் ஒரு முக்கிய குறை - அவை சீசன் பொருத்தது எப்போதும் ஒரே சீராக இராது.

இயற்கை வழியாக சக்தி உற்பத்தி செய்யப்படும் மற்றொரு வழி - நிலக்கரி - அதாவது Thermal Power. இன்று இதன் மூலம்தான் அதிக பட்சம் நமக்கு கிடைக்கிறது. ஆனால் நிலக்கரி அட்சயப் பாத்திரம் இல்லை. ஒரு நாள் முழுக்க சுரண்டிவிடுவோம். அப்புறம்??

ஆக, நாளடைவில் இயற்கையும் வறண்டு, மனிதன் வேறு மாற்று வழிகளை நாட வேண்டிய சூழ்நிலை ஏற்படும். மாற்று வழிகளில் ஒன்றுதான் அணு சக்தி. இப்போதிலிருந்தே இதையும் பலப்படுத்தி, இயற்கை மூலம் உற்பத்தி செய்வதை - இயற்கையைச் சுரண்டும் வேகத்தை சற்று மட்டுப்படுத்தி உபயோகித்தால், இயற்கை வழிகளை / வளங்களை இன்னும் சில காலம் இழுக்கலாம். அல்லது, இயற்கையும் கொஞ்சம் இளைப்பாறி, தன்னைப் புதுப்பித்துக்கொண்டு நமக்கு வளம் தரலாம்.

ஆக, நம் தேசீய / வெளியுறவு கொள்கைகளை பாதிக்காத ( பாதிக்கவில்லை என்று பிரதமர் உறுதியாகச் சொல்கிறார் ) வகையிலும், இதர சுற்றுச்சூழல் பிரச்சனைகளில் கவனம் எடுத்துக்கொண்டும் அணு சக்தி உற்பத்தியை பெருக்க முடிந்தால் ஒரு தூரதிருஷ்டி பார்வையில் நமக்கு அது ஆதாயமே.

Wednesday, August 15, 2007

சுதந்திர தின வாழ்த்துக்கள்


60 வயது நிறைந்துவிட்டது.

60 வருட நிறை குறைகளை அலசும் பலவித செய்திகளைப் படித்துவிட்டு, நிகழ்ச்சிகளைப் பார்த்துவிட்டு, மனதில் ஆயிரம் எண்ணங்கள் அலை மோதினாலும், காலையில் செங்கோட்டையில் பூக்களை சிந்தியபடி, அந்தக் கொடி கம்பீரமாகப் பறக்கத் தொடங்கிய அந்த ஒரு கணத்தில், மனதில் ஒரு ஆழ்ந்த அமைதி. அந்த முகம் தெரியாத "இந்தியா" என்ற உணர்வு - வெறும் அடையாளம் என்பதையும் மீறி மனதில் தாக்கும் அந்த உணர்வு தழைக்க, செழிக்க அமைதியாகப் பிரார்த்தனை.

அவ்வளவுதான். மற்றொரு வருடம் உருண்டோடுகிறது.

என்ன சாதித்துவிட்டோம் என்று குறைகளைப் பற்றி மட்டுமே நினைத்து வருந்தாமல், அவற்றை எப்படி அகற்றி இன்னும் மேன் மேலும் எப்படி நாமும் வளர்ந்து பிறருக்கும் நல் உதாரணமாக இருக்கலாம் என்ற எண்ணங்களில் செயல்படுவோம்.

60 வருடங்களாக ஜனநாயகமாக வெற்றிகரமாக செயல்படுகிற அதே வேகத்துடன், நலிந்தோர் தழைக்கவும், பெருகி வரும் மக்கள் எண்ணிக்கை ஒரு பெரும் ஆக்கப்பூர்வமான சக்தியாக பரிமளிக்கவும் வழிகள் தேடுவோம்.
கிளைகளாக, விழுதுகளாக, உலகம் முழுக்கப் பரவியிருந்தாலும் இந்தியர் என்ற வேரில், உணர்வில் பெருமிதம் கொள்வோம்.

அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்.

Friday, August 10, 2007

அணு ஒப்பந்தம்

அணு ஒப்பந்தம் - சில சந்தேகங்கள்.

குமுதம் 15.8.2007 இதழில் இந்திய - அமெரிக்க அணு ஒப்பந்தம் ( ஆயுத??!! - "அணு ஆயுத" என்று இந்தப் பத்தியில் உபயோகித்த வார்த்தையைப் பார்க்க நேர்ந்தால் அமெரிக்க காங்கிரஸ் முதலில் இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு மறு வேலை பார்ப்பார்கள் :-) ) தொடர்பாக ஒரு பத்தியாளர் தன் வருத்தங்களை விவரித்துள்ளார்.

வெளியுறவு அமைச்சின் வலைப் பக்கத்தில் வைத்துள்ள இந்த
அணு ஒப்பந்தம் மொத்தம் 22 பக்கம். விஞ்ஞானம் அதிகம் தெரியாத எனக்கு பாதிக்கு மேல் சுத்தமாகப் புரியவில்லை. ஆனாலும் விடாமல் ஆங்காங்கே "மேய்ந்துவிட்டு" என்னதான் சொல்கிறார்கள்; இந்தியாவுக்கு என்ன ஆதாயம் / நஷ்டம் என்று ஏதாவது புரிகிறதா என்று இரண்டு மூன்று முறை படித்துப் பார்த்தேன்.

எனக்குப் புரிந்தவரையில் பெரும்பாலும் இதில் இந்தியாவுக்கு அனு(ணு!)கூலம் போல்தான் படுகிறது. இந்த ஒப்பந்தம் பற்றி முன்னாள் அணு சக்தி கமிஷனின் தலைவர், எம்.ஆர். சீனிவாசன் போன்ற விவரம் அறிந்தவர்களிடையே விவாதங்கள் நிகழ்ந்தபோது மன்மோஹன் சிங் என்ன செய்யப்போகிறார் என்று நானும் என் பங்குக்கு இங்கே கவலையைப் பதிவு செய்திருந்தேன்.

அது பிரதமர் காதில் விழுந்துவிட்டது :-)

ஆனால் பலர் அப்படி நினைக்கவில்லை. பா.ஜ.க நாட்டை அடகு வைத்துவிட்டார் என்று சொல்வதை குமுதம் பத்தியாளர் ஏற்றுக்கொள்கிறார். இந்த ஒப்பந்தத்தில் எந்தப் பகுதி அப்படி எண்ண வைக்கிறது என்று புரியவில்லை. குறிப்பாக, " இரு நாடுகளின் பொது நலனுக்கு ஏற்ற விஷயங்களில் உலகளாவிய அளவில் ராணுவ நடவடிக்கைகளில் அமெரிக்கா இறங்கும்போது இந்தியா ஒத்துழைக்க வேண்டும்.." என்று ஒரு அம்சம் இந்த ஒப்பந்தத்தில் இருப்பதாக குமுதம் பத்தியில் சொல்லப்பட்டிருக்கிறது.

எனக்குப் புரிந்தவரையில் மேலே சுட்டியில் உள்ள அணு ஒப்பந்தத்தில் இப்படி ஒரு அம்சம் இருப்பதாகத் தெரியவில்லை. இன்று வெளியான ஒரு விரிவான பேட்டியில் தற்போதைய அரசின் Principal Scientific Advisor திரு ஆர். சிதம்பரம் "எல்லாம் சரியாகதான் இருக்கு" என்கிறார்.

தேவையில்லாமல் குழப்பிக்கொண்டு எதிர்காலத்தில் ஆக்கப்பூர்வமாக பயன் இருக்கக்கூடிய ஒரு ஒப்பந்தத்தைப் பற்றி மக்களிடையே பீதியும் அவநம்பிக்கையையும் விழும் சூழ்நிலை உருவாகிறதா?

அல்லது உண்மையிலேயே எங்கேயோ "பொடி" இருக்கிறதா?

சரியான விளக்கங்கள், புரிதல்கள், இன்னும் தேடிக்கொண்டிருக்கிறேன். வரும் திங்கள் கிழமை இந்த விவகாரம் பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு வரும் என்கிறார்கள். அங்கே என்ன சொல்கிறார்கள் என்று பார்க்கலாம்........

பிறகு சேர்த்தது: - 11. 08. 07. ஒரு வாசகருக்காக நான் எழுதிய பதில் இங்கே முன் பக்கமும் இருந்தால் விளக்கங்கள் முழுமையாக இருக்கும் என்று தோன்றியதால் அதை இங்கே சேர்க்கிறேன்.

// நான் சொன்னதுபோல் விளக்கங்கள் /புரிதல்கள் தேடிக்கொண்டிருக்கிறேன். ஆனால் உங்களுக்கு ஒரு சடுதியான பதில்: "ஆயுத" - கேள்விக்குறிக்கு காரணம் - இது அணு ஆயுத ஒப்பந்தம் அல்ல. Not Nuclear Weapons Deal - மாறாக ஒப்பந்தத்தின் தலைப்பே சொல்வதுபோல் - "Agreement for Cooperation Between the Government of India and the Government of the United States of America concerning peaceful uses of Nuclear Energy" - Nuclear Deal. அதாவது அணு சக்தியை அமைதியான வழியில் உபயோகிப்பதற்கான வழிமுறைகளில் ஒப்பந்தம். - அணு ஒப்பந்தம். "ஆயுதம்" இல்லை. நீங்கள் கவலை தெரிவித்திருக்கும் பல விஷயங்கள் இதில் சம்பந்தமேயில்லை என்று ஒப்பந்தத்தைப் படித்தால் புரியும். அமைச்சகம் முழுமையாக வெளியுட்டள்ளதா... "நுனிப்புலா" - அப்படி சரியான விவரங்கள் இல்லையென்றால் மக்கள் எங்கு போய் வழக்காடுவார்கள் என்றெல்லாம் எனக்குத் தெரியாது. உலகின் ஒரு முக்கிய ஜனநாயக அரசின் அமைச்சகத்தின் இணையத்தளத்தில் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்ட ஒரு முக்கிய ஒப்பந்தம், முழுமையானதாக / அக்மார்க் அசலாகதான் இருக்கும் என்பது என் நம்பிக்கை. இந்த ஒப்பந்தப்படி இரு நாடுகளுக்கிடையேயான எல்லாவித அணு சம்பந்தமான ஒத்துழைப்புகளும் அமைதியான உபயோகங்களுக்கே - அதே சமயம் அவரவர் நாட்டில் உள்ள சட்ட திட்டங்களுக்குக் கட்டுபட்டு - ( இங்கேதான் சற்று விளக்கம் தேவைப்படுகிறது எனக்கு) பயன்படுத்தப்படும் என்று அடிக்கடி வலியுறுத்தப்பட்டுள்ளது. Article 2 - Scope of Cooperation என்ற பகுதியைப் படியுங்கள். இதில் 4th clause: The Parties affirm that the purpose of this agreement is to provide for peaceful Nuclear cooperation and not to affect the unsafeguarded nuclear activities of either Party. Accordingly, nothing in this agreement shall be interpreted as affecting the rights of the Parties to use for their own purposes nuclear material, non - nuclear material, equipment, components, information or technology transferred to them pursuant to this Agreement. This Agreement shall be implemented in a manner so as not to hinder or otherwise interfere with any other activities involving the use of nuclear material, non - nuclear material, equipment, components, information or technology and military nuclear facilities produced, acquired or developed by them independent of this Agreement for their own purposes.என் புரிதல்: இந்த ஒப்பந்தப்படி நாம் அமெரிக்க உதவிகளைப் பெற்றுக்கொண்டோமானால், அவை வெறும் அமைதியான பயன்பாட்டுக்கு மட்டுமே உபயோகிப்பட வேண்டும். ஆனால் அதே சமயம், இந்த ஒப்பந்தத்தின் மூலம் பெற்ற உதவிகளின் / பொருட்களை / டெக்னாலஜியைப் பயன்படுத்தாமல், நாம் இத்தனை நாளும் செய்து வந்த அணு ஆயுத ஆராய்ச்சிகளின் மூலம் நாம் சொந்தமாக ஏற்படுத்திக்கொண்ட வசதிகள் /ஆராய்ச்சிகள் /டெக்னாலஜி மூலம் நம் "இஷ்டப்படி" நம் சொந்த உபயோகத்துக்குப் பயன் படுத்திக்கொள்ளலாம். சுருக்கமாச் சொன்னா - நான் கொடுத்த சாமானை வைச்சு நீ ஆயுதம் செய்யாதே; நீயாகவே ஏற்கனவே சேர்த்து வைத்திருக்கிறதை வைச்சு நீ என்ன வேணா செஞ்சுக்கோ.... நான் குறுக்கிடலே. இப்படி எல்லா ஷ்ரத்துகளும் இரு நாடுகளுக்கும் பொருந்தும் வகையில் ஒப்பந்தம் இருக்கிறது.//

ஒப்பந்தத்தில் உள்ள Article சிலவற்றை மேலே கோடிக்காட்டியுள்ளேன். இன்று, இன்னும் சில Articles, Anil Kakodkar, Chairman of the Atomic Energy Commission அளித்த இந்த பேட்டியில் இன்னும் விரிவாக அலசப்பட்டுள்ளது.