Saturday, December 24, 2005

தும்பா ? வாலா?

"...ஒரு கல்லூரியை இடிக்கக்கூடாது என அதன் 100 வருஷப் பாரம்பரியத்தைச் சொல்லிப் போராடித் தடுத்த தமிழ்நாடு, ஆயிரம் வருஷப் பாரம்பரியம் கொண்ட நீர் நிலைகளை, நம் சொத்தாக உணரவில்லை என்பதுதான் பெரிய சோகம் !...."

மண்டையில் அடித்தால்போல் ஆணித்திரமாக உறைக்கும் வரிகள். இந்த வார விகடனில் ஒரு கட்டுரை.

" கடந்த நூறு வருடங்களில் ஆயிரம் மில்லி மீட்டருக்கு அதிகமான மழை தமிழகத்தில் ஏறக்குறைய 10 முறையாவது பெய்திருக்கிறது. 1903ம் ஆண்டு....60'ல் 1227 மி.மி; 69'ல் 1032 மி.மி; 85ல் 1275மி.மீ;" எனப் பட்டியலிட்டு, அப்போதெல்லாம் மழை இப்படி மக்கள் வசிக்கும் வீடுகளில் அத்துமீறி நுழையவில்லை; ஆறுகளின் கரைகள் காணாமல் போகவில்லை. ஏரிகள் உடையவில்லை. குளங்கள் வழியவில்லை. இப்போது மட்டும் ஏன் இவ்வளவு பெரிய இழப்புகள்? என்று கட்டபொம்மன் கணக்கில் கேள்விகளை எடுத்துக்கொண்டு சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியரான டாக்டர் ஜனகராஜனின் கதவைத் தட்டியுள்ளார்கள்.

விளைவு, அருமையாக ecology ( தமிழில் என்ன என்று யாராவது கூறி உதவ முடியுமா?) ரீதியில் விளக்கம். ஜனகராஜன், எப்படி இயற்கை நமக்களித்திருக்கும் நீர் நிலைகளைப் பாதுகாக்கத் தவறிவிட்டோம் என விளக்குகிறார். ஆனால் இந்தியா உணவுத் தேவையில் தன்னிறைவு அடையக் காரணமான பசுமைப் புரட்சியும் இன்றைய நிலைக்கு ஒரு காரணம் என்று கூறுவதுதான் ஆச்சரியமாகவும் புரியாமலும் இருக்கிறது. கிணறுகள் மூலம் நிலத்தடி நீரை உபயோகப்படுத்த முற்பட்டதால் விவசாயிகள் குளம், ஏரி போன்ற நீர் நிலைகளைப் பாதுகாக்காமல் விட்டுவிட்டார்கள் என்பது இவர் சொல்லும் ஒரு கோணம். நீர்ப் பாசனத்துக்கு இந்த இயற்கை நீர் நிலைகளை நம்பியிருந்தால் இவைத் தூர்ந்து போக விட்டிருக்க மாட்டார்கள் என்கிறார். என் மூளைக்கு எட்டியவரையில் இது எப்படி என்று புரியவில்லை. பாசனத்திற்கு, நீர் நிலைகளின் நீர் போதாமல்தானே நிலத்தடி நீருக்குத் தாவினார்கள்?

ஆனால் மொத்தத்தில் கவனம் பெற வேண்டியக் கட்டுரை.

இதேபோல் NDTV யில் 24 hours என்ற நிகழ்ச்சியில் ஜார்கண்ட் மாநிலத்தில் தேநீர் கடை வைத்துக்கொண்டு பிழைப்பு நடத்தியபடி ஆதிவாசிகளின் குறைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்வதற்காகவே ஒரு சுயேச்சைப் பத்திரிகையாளராக பணி செய்யும் தயாமணி பர்லாவுடன் 24 மணி நேரம் சுற்றுகிறார் என்டிடிவியின் ராதிகா போர்டியா. தயாமணி ஒரு ஆதிவாசி; குழந்தைப்பருவத்தில் கொத்தடிமை நிலையில் இருந்துவிட்டுப் பின்னர் ராஞ்சி பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் வாங்கி, கிடைத்த நல்ல வேலையை உதறிவிட்டு ஆதிவாசிகளின் குரல்களுக்கு ஒரு பிரதிநிதியாக பத்திரிகைகளில் எழுத ஆரம்பித்தவர்.

இவருடைய தேநீர் கடையில் பல பத்திரிகையாளர்கள் கூடி செய்திகள் / நாட்டு நிலவரங்கள் அலசுவதும் வழக்கமாம். எண்டிடிவியின் இந்த நிகழ்ச்சிக்கான சுட்டி இல்லை. ஆனால் தயாமணியைப் பற்றி மேலும் அறிய இங்கே பார்க்கலாம்.

நாம் பெரும்பாலும் தும்பைவிட்டு வாலைப் பிடிக்கிற கதையாக முக்கியமாக எந்த விஷயங்களில் அக்கறை காட்டி போராட்டம் நடத்த வேண்டுமோ, அதைச் செய்யாமல் மேம்போக்காக எதெதெற்கோப் போராடிக்கொண்டிருக்கிறோம். பாரம்பரிய மிக்க கட்டிடத்திற்கு நடத்திய ( குவீன் மேரீஸ் கல்லூரி) போராட்டம் தேவைதான். அதில் சந்தேகமில்லை - பழைய மாணவி என்ற முறையில் நானும் அதில் பங்கேற்றேனே! ) ஆனால் இன்னும் பல முக்கிய விஷயங்களை நாம் போராடிப் பெற தவறுகிறோம்.

தெருவில் நடந்தால் சுற்றுப்புற அசுத்தமும், சுகாதாரக்கேடுகளும், பசியும், பட்டினியும், பெண்களுக்குப் பாதுகாப்பின்மை, என்று ஆரம்பித்து எத்தனையோ "எரியும்" விஷயங்கள் மனசை உலுக்குகின்றன; எப்போது விழித்துக்கொள்வோம் ? சினிமா நடிகர்கள் பேசுவதும், அரசியல் பேரங்களும், விளையாட்டு வீரர்களும் மகக்ள் கவனத்தையும் நியூஸ்பிரிண்ட் பக்கங்களையும் தொலைக்காட்சி நேரங்களையும் ஆக்கிரமிப்பு செய்யும் அதே அளவு நம் வாழ்க்கையின் அடிப்படைப் பிரச்சனைகள் நமக்கு உறைக்க வேண்டாமா?

ஆனாலும் அசாத்திய சகிப்பு தன்மைதான் நமக்கு !! அல்லது "கண்டும் காணாமல்" போகும் அளவு நாம் ஊறி விட்டோமோ?

தும்பைவிட்டு வாலைப் பிடிக்கும் குணம் மட்டும் இருந்துகொண்டேதான் இருக்குமோ? ஊடகங்களும் பெரும்பாலும் இப்படி தும்பு - வால் ரீதியில்தானே இயங்குகின்றன?

மேலே குறிப்பிட்ட இரண்டு ஊடகங்களிலும் அவ்வப்போது அபத்தமாக வரும் செய்திகள் /கட்டுரைகளுக்குப் பிராயச்சித்தமாக இது போன்ற செய்திகள் / நிகழ்ச்சிகள் ஈடுகட்டுகின்றன என்பது என் எண்ணம்.

Monday, December 05, 2005

தேசிய அக்கறை

ஒரு பார்வையில் குற்றம் கண்டுபிடிப்பது சரியல்லதான். ஆனாலும் இன்றைய டைம்ஸ் ஆப் இந்தியாப் பத்திரிகையைப் பிரித்துப் படித்தவுடன் ஏதோ உறுத்தியது. தற்போது ஒரு வாரமாக மும்பையில் இருப்பதால் சென்னையின் புயல், வெள்ளப் பாதிப்பைத் தூரத்தில் இருந்து பார்க்கும்படி உள்ளது. திரும்பிச் சென்றபின்தான் நிலவரத்தை நேரில் பார்க்க வேண்டும். இதன் நடுவில் தினம் தொலைக்காட்சி, இணையம் என்று சென்னை நிலவரத்தைத் தேடித்தேடிப் பார்த்துக்கொண்டிருந்தோம். நாங்கள் இருக்கும் இடத்தில் சென்னைச் செய்தித்தாள் கிடைக்காமல் எங்கேயோப் போய் வாங்கிக் கொடுத்தார்கள். இந்த நிலையில் தினசரி காலையில் கிடைக்கும் உள்ளூர் பேப்பரில் நம்மூர் செய்திகளைத் தேடத்தானே தோன்றும் ?

ஆனால் செய்தித்தாளைப் பிரித்தால் - முதல் பக்கம் வேண்டாம் - எங்காவது உள்ளே கூடவா சென்னை வெள்ள நிலவரம் பற்றி செய்தி இருக்காது? இல்லையே...... உள்ளே ஒரு மூலையில், நிவாரண உதவிகள் அளிக்க அரசு உறுதி பற்றி முழுசாக ஒற்றை வாக்கியம்தாம் சென்னை மழை பற்றி மொத்த செய்தி. ஆனால் தூத்துக்குடி அருகே ஒரு கிராமத்தில் ஆசிரியையிடம் கடும் தண்டனை வாங்கிய மாணவர்கள் என்று ஒருப் பெட்டிச் செய்தி - நாலு பத்திகளில்.

மாணவர்களை அநியாயமாகத் தண்டித்த இந்தச் செய்தி முக்கியம்தான். அதே சமயம், அதே மாநிலத்தில் - நாட்டில் ஒரு முக்கியமானப் பகுதியில் - வெள்ளம் மழை என்றால் தேசியச் செய்தித்தாள்களில் செய்திகள் வர வேண்டாமா? உள்ளூர் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து Local வாசனையுடன் பத்திரிகைகள் வருவது இன்றைய Trend. ஆனால் இந்த அளவு மற்ற மாநிலங்களின் முக்கியச் செய்திகளைக் கூட இருட்டடிப்பு செய்வதை எப்படி நியாயப்படுத்துகிறார்கள் என்று புரியவில்லை.

இந்த சமயத்தில் மனதில் தோன்றும் ஒரு ஒப்பு நோக்கையும் தவிர்க்க முடியவில்லை. நியூ ஆர்லின்ஸின் வெள்ளச் செய்திகளை மேற்கு மூலையில் இருக்கும் சான் ஹோஸே மெர்குரி நியூஸில் பத்திப் பத்தியாக தலைப்புச் செய்திகள் / இதர விவரங்கள் படித்த நினைவு வருகிறது. ஏன் இந்த தேசிய அக்கறை, டைம்ஸ் ஆப் இந்தியாவில் காணவில்லை என்று தோன்றுகிறது. ஹிந்துஸ்தான் டைம்ஸில் சற்று பரவாயில்லை. உள்ளே மூன்று பத்தி இஞ்சுகளில் செய்தியும், பக்கத்தில் ஒரு படமும்.

உள்ளூர் முக்கியத்துவம் இருக்க வேண்டியது பத்திரிகைகளுக்கு அவசியமாக இருக்கலாம். ஆனால் தேசீயப் பார்வை இல்லாமல் குறுகிப் போய்க்கொண்டிருக்கின்றன. இது சரியல்ல.

Saturday, November 26, 2005

புளூக்கர் விருது !!

இல்லீங்க. எழுத்துப்பிழை அல்ல. புளூக்கர் என்றுதான் சொன்னேன் !!

ஆறு மாசமா சென்னை மழைப் போல ( ஹ்ம்ம்.. இப்படி சொல்லவும் ஒரு காலம் வந்ததே...) விடாமல் வலைப் பதிவில் எழுதுகிறீர்களா? எழுதி எழுதி புத்தகமேப் போடலாம் என்று ஜோக்கடித்துக்கொண்டிருக்கிறீர்களா? யார் கண்டார்கள்? நீங்கள் ஒரு வேளை புளூக்கர் விருது வாங்கிவிடுவீர்களோ என்னவோ?

புக்கர் விருது தெரியும். அதென்ன புளூக்கர் விருது?

இன்று என் தபால் பெட்டியில் வந்த ஒரு செய்தித் தொகுப்பிலிருந்து வந்த செய்தி


ஆயிரம் / இரண்டாயிரம் / நாலாயிரம் டாலர்கள் என்றெல்லாம் கண்ணில் பட்டது.

இதை நடத்துபவர்களுக்கு ஜனவரி 30க்குள் போட்டிக்கான விண்ணப்பங்கள் போய்ச் சேர வேண்டுமாம். ஹ்ஹ்ம்ம்.. சீக்கிரம்.

முக்கிய பி.கு: புளூக்கர் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும்.

போச்சுடா - சப்பென்று ஆகிவிட்டதோ? :-)

Friday, November 18, 2005

தகவல் திருவிழா

திசைகள் நவம்பர் இதழில் எழுதியது.

துனிசியாவில் தகவல் தொழில் நுட்பத்திருவிழா.

இந்த மாதம் - நவம்பர் 2005 - 16ந் தேதியிலிருந்து 18 ந் தேதி வரை வட ஆப்பிரிக்க நாடான துனிசியாவில், ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவில் இரண்டு நாள் ஒரு தகவல் திருவிழா நடக்கப்போகிறது. அதென்ன தகவல் திருவிழா?

தகவல் தொழில் நுட்பம் பெருகி வரும் இந்நாளில் அபரிதமானத் தகவல்கள் சில சமயம் நம்மைக் குழப்புகின்றன. அல்லது சில சமயம் சரியானத் தகவல்கள் சரியான முறையில் தேவையானவர்களுக்கு சென்றடைவதில்லை. உலகில் ஒரு பக்கம் சிலர் தகவல் வெள்ளத்தில் திக்குமுக்காடுகிறார்கள்; வேறு சிலரோ அடிப்படைத் தகவல் சாதனத்துக்கூட வசதி இல்லாமல் தகவல் வரட்சியில் இருக்கிறார்கள். இந்த இடைவெளிக்குப் பாலம் கட்டுவதுதான் இந்தத் திருவிழாவின் - ஐக்கிய நாடுகள் சபையின் உலகத் தகவல் சமூக உச்சி மாநாடு ( World Summit on Information Society.) - WSIS.நோக்கம்.

சமீபத்தில் இந்திய வலைப்பதிவுலகில் ஒரு சர்ச்சை ஓடிக்கொண்டிருந்தது. ஒரு கல்வி நிறுவனம் பற்றி ஒரு இளைஞர் பத்திரிகையில் வந்தத் தகவல்களை வைத்து ஒரு ஆங்கில வலைப்பதிவாளர் தன் வலைப்பதிவில் அந்தக் கல்வி நிறுவனம் பற்றி கேள்விகளை எழுப்பினார். அந்த நிறுவனம் தன்னிடம் இருப்பதாக ஊடகங்களில் பெரிதும் விளம்பரப்படுத்தப்படும் சிறப்புகள் மிகைப்படுத்தப்பட்டவை என்று குற்றம் சாட்டி அடுத்தடுத்துக் கருத்துகள் வலையுலகில் வர ஆரம்பித்தன. அதே சமயம், இன்னொரு பக்கம் அந்த நிறுவனத்தை வேண்டுமென்றே அபாண்டமாகத் தாக்குவதாக பதில் வாதங்கள் அந்த நிறுவனத்தின் மாணவர்கள் / ஆதரவாளர்கள் சொல்வதாக வெளியாயின.

அவ்வளவுதான்; புகைப் பெரும் நெருப்பாகப் பற்றிக் கொண்டது. அவர் எழுதியதைக் கண்டித்தும் ஆதரித்தும் சரமாரியாக ஆங்கில வலைப் பதிவுலகில் விவாதங்கள் நடந்தன. பாதிக்கப்பட்ட நிறுவனம் அந்த வலைப்பதிவாளர் மீது அவதூறு வழக்குப் போட்டது. அவர் வேலை செய்துகொண்டிரூந்த நிறுவனத்தையும் அது விடவில்லை. அவர் அந்த நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்படாவிட்டால் அந்த அலுவலகம் முன்பு மறியல் செய்யப்போவதாக சொன்னவுடன், அந்த வலைப்பதிவாளர், தன் நிறுவனத்தின் மீது பழி வராமல் இருக்கத் தன் வேலையை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

ஊடகங்களில் அந்த நிறுவனம், வணிக நிறுவனம்போல் பெருமளவு செலவழித்து விளம்பரம் செய்து தங்கள் நிறுவனத்திற்கு மாணவர்களைக் கவர முயற்சித்ததோ அல்லது அந்த நிறுவனத்தின் தரம் பற்றி சர்ச்சைகள் கிளம்பியதோ, அல்லது யார் தரப்பு வாதம் சரி என்பதோ இப்போது கேள்வியல்ல. கல்வியும் இன்று ஒரு லாபகரமான வணிகங்களில் ஒன்று என்பதைப் புற்றீசல் போல் பெருகி வரும் வணிக ரீதியிலான கல்வி நிறுவனங்கள் உணர்த்துகின்றன. குறிப்பாக தொழில் கல்வி நிறுவனங்கள் இந்த வகையில் நிறையவே உள்ளன. ஒரு கல்வி நிறுவனத்தின் தரத்தை மதிப்பிடும் குறியீடுகளைக் கொண்டும், அந்த நிறுவனத்திற்குத் தொழிலுலகில் இருக்கும் மதிப்பையும் ஆராய்ந்துப் பார்த்து, தேர்ந்து எடுத்துச் சேருவது இன்று பயனீட்டாளர்களின் பொறுப்பாகிவிடுகிறது.

ஆனால் பேச்சு /எழுத்து சுதந்திரம் பற்றி பல கேள்விகளை இந்தப் பிரச்சனை எழுப்புகிறது. ஒருவரைப் பற்றியோ அல்லது ஒரு நிறுவனத்தைப் பற்றியோ கருத்தைச் சொல்வதற்கு ஏதும் வரம்பு / வரைமுறை இருக்க வேண்டுமா? குற்றம் / குறை தென்படில், அதைச் சுட்டிக்காட்ட ஏதும் நியதிகள் உள்ளதா? பேச்சு சுதந்திரம் என்ற பெயரில் தனி மனிதரையோ அல்லது நிறுவனத்தையோத் தாக்குவது சரியா? அப்படியே தாக்கிக் கருத்து வெளி வந்தாலும், பாதிக்கப்பட்டவர்கள் பாதித்தவர்களைக் கடுமையாக தண்டிக்க விழைவது சரியா? மேலே கண்டப் பிரச்சனையில் அந்த நிறுவனம் விமரிசனம் வாழ்வில் ஒரு அம்சம் என்று பேசாமல் இருந்திருக்கலாம். ( ஒரு பத்திரிகைப் பேட்டியில் அந்த நிறுவனத்தின் சார்பாக ஒருவர் கூறினார் - வலைப்பதிவுகளில் எழுதப்படுவதைத் தாங்கள் ஒரு பொருட்டாக மதிப்பதில்லை என்று. அப்படியானால், அந்த வலைப்பதிவாளர் மீது வழக்கேத் தொடர்ந்திருக்க வேண்டாமே என்ற கேள்வி எழுகிறது.) அல்லது தங்கள் நிலையை விளக்கி ஊடகங்களில் இன்னொரு முழு பக்க விளம்பரம் கொடுத்திருக்கலாம். இப்படி செய்யாமல், எழுதியவர்கள் மேல் வழக்குத் தொடர்ந்ததோ அல்லது கருத்துக் கூறியவர்களில் ஒருவர் தன் வேலையை ராஜினாமா செய்ய வைத்ததோ சரியா?

இதேபோல் சில மாதங்கள் முன்பு, ஒரு பெரிய இந்தியப் பத்திரிகை நிறுவனம் வேறொரு வலைப் பதிவாளர் மீது அவதூறு வழக்குத் தொடர்ந்தது. இன்னும் உலகளவில் சொல்லப்போனால், கைதான அமெரிக்கப் பத்திரிகையாளர் நியூயார்க் டைம்ஸ் ஜூடித் மில்லர் மீதானக் குற்றச்சாட்டு, ( தனக்குத் தகவல் கொடுத்தவர் பெயர் சொல்ல மறுத்தக் குற்றம் - பின்னால் மனம் மாறி அல்லது குற்றச்சாட்டிலிருந்து விடுபட, மசிந்தார் என்பது வேறு விஷயம் ) மற்றும் சீனாவில் தினாமன் சதுக்க 15 வது ஆண்டு நிறைவு நினைவு கூர்தல் விஷயங்களை ஊடகங்கள் "கண்டுகொள்ள வேண்டாம்" என்று சீன அரசாங்கம் எச்சரித்ததைப் பற்றி வெளியிடவேண்டாம் என்ற ஆணை இருந்தும் மீறி, இந்தத் தகவலை மின் அஞ்சல் மூலம் வெளியுலகுக்குத் தெரியபப்டுத்தி, அதனால் கைதான சீன நிருபர் ஷி தவோ, என்று தகவல் பரிமாற்றத்தின் பாதகமான விளைவுகளைச் சந்தித்தவர்கள் பலர்.

இந்த நிலையில் மேலே உள்ளக் கேள்விகள் அவசியமாகின்றன. கருத்துச் சுதந்திரம் நசுக்கப்பட வேண்டுமா? வலிமையுள்ளவர்கள் கருத்துச் சுதந்திரத்தை நசுக்கினால் உண்மைகள் எப்படி வெளியே வரும்? ஆனால் தனி மனிதர் அவதூறாக மாறாமல் கருத்துச் சுதந்திரத்தின் கண்ணியம் கடைப்பிடிக்க முடியுமா? இரண்டுக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன? யார் நிர்ணயிப்பது?

கேள்விகளும் பதில்களும் அவரவர் பார்வையைப் பொறுத்தது. ஆனால் இப்படி பல விஷயங்களில் எது சரி எது சரியல்ல என்ற பாகுபாடு இன்று மங்கலாக உள்ளது. நிஜம் எங்கேயோ நடுவேப் பொதிந்துள்ளது. தகவல் வெள்ளத்தின் விளைவுகள் இவை.

இன்னொரு பக்கம், தகவல் வெள்ளத்தினால் - தகவல் தொழில் நுட்ப மேன்மையால் கிடைக்கும் அனுகூலங்களும் ஏராளம். 2000 ம் ஆண்டு அகமாதாபத் பூகம்பத்தின் போது உடனுக்குடன் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு உதவி கிடைக்கவும், காணாமல் போனவர்கள் உறவினர்கள், நண்பர்கள் சேரவும் காரணமாக இருந்தது தகவல் தொடர்பு சாதனங்கள். 2004 சுனாமியின் போதும் இதே நடந்தது. அதே சுனாமியின்போது இந்தோனேஷியாவில் பாதிப்பு வந்ததுமே ஒரு எச்சரிக்கைத் தகவல் உடனுக்குடனே இதர ஆசிய நாடுகளை வந்து சேர்ந்திருந்தால் ஓரளவேனும் பாதிப்பைக் கட்டுப்படுத்தியிருக்கலாம் என்றும் சொல்லப்பட்டது. இப்படி ஆக்கலும் அழித்தலும் என்று பலவித பரிமாணங்கள் கொண்டுள்ளது இன்றையத் தகவல் பரிமாற்றம்.

ஒரு சமுதாயத்தில் பலவித நல் விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடிய தகவல் பரிமாற்றம், ஒரு சமுதாயத்தின் பார்வையையும் மாற்றக்கூடிய சக்தி படைத்ததாகும்.

கணினி, இணையம், செயற்கைக்கோள் தொலைக்காட்சித் தொடர்புகள் என்று பலவிதத் தகவல் மற்றும் தொடர்பு சாதனங்களின் தொழில் நுட்ப வளர்ச்சியால் பலவிதங்களிலும் பல திசைகளிலிருந்தும் வினாடிக்கு வினாடி செய்திகள் / தகவல்கள், அவை உருவாகும் நேரத்திலேயே, பூகோள ரீதியான தடங்கல் ஏதுமின்றி நம்மை வந்தடைகின்றன. இவை, நம் அன்றாட வாழ்க்கையில், நாம் செய்யும் வேலைகளில், நம் எண்ணங்களில் என்று பலவிதங்களில் ஏற்படுத்தும் பாதிப்புகள் கணிசமானது.

அதேபோல், சுனாமி, சூறாவளி, பூகம்பம் அல்லது பஞ்சம், போர் என்று உலகின் எந்த மூலையில் மக்கள் பாதிக்கப்பட்டாலும் உடனுக்குடன் உலக மக்கள் பலவித உதவிகளை வாரி வழங்க உதவுகின்றன. மருத்துவம், பொருளாதாரம், தொழில் நுட்பம், மற்றும் கலை வளர்ச்சி என்று பல விதங்களில் பரிமாறிக்கொள்ளப்டும் தகவல்கள் மனிதனின் வாழ்க்கை இன்னும் மேம்பட உதவுகின்றன.

ஆனால் இதே தகவல் பரிமாற்றங்கள், அனாவசிய வதந்திகளும் ஆதாரமில்லாத செய்திகளும், தனி நபர் தாக்குதல்களும் உருவாகவும் காரணமாகின்றன. இப்படி நல்லதும் பொல்லாததுமாகக் கலந்து தகவல் உலகம் இன்று உலகளவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது.
செய்தி அல்லது தகவல் என்பது இன்றைய வாழ்க்கையில் ஒரு இன்றியமையாத அம்சமாகிவிட்ட நிலையில் எவ்வளவு தூரம் நமக்கு வந்து சேரும் தகவல்கள் உண்மையானவை/ நம்பத்தகிந்தவை? யார் எந்த செய்திகளை வெளியிடுகிறார்கள்? ஒரு செய்தியின் பின்புலம் என்ன? எவ்வளவு தூரம் இந்தத் தகவல் பரிமாற்றங்கள் சாதரண மக்களைப் பாதிக்கின்றன? பொருளாதார லாபங்கள் எவ்வளவு தூரம் தகவல்கள் பரிமாற்றங்களை உருவாக்குகின்றன?

இப்படி ஆயிரம் கேள்விகள் இன்று தோன்றுகின்றன. பலவிதமான ஊடகங்களின் மூலம் ஏற்படும் பிரமாண்டமான தகவல் வெடிச்சிதறலின் ஒவ்வொரு துணுக்கும் நம்மை வந்து சேரும்போது அதனூடே பலவித பரிமானங்கள் அடங்கியுள்ளது. இதில் உண்மை எங்கே என்று தேடுவது சாமான்யமான காரியம் அல்ல. பல சமயங்களில் ஒன்றுமில்லாத சமாசாரங்கள் ஊடங்களிடையே பெரிதாக சித்திரம் தீட்டப்படும். சாதாரண மக்களின் வாழ்க்கையில் முக்கியமாக இருக்கும் பல விஷயங்கள் இந்த அதீதத் தகவல் வெள்ளத்தில் எங்கோ அடிபட்டுக் காணாமல் போய்விடும். வெள்ளமாகக் கொட்டும் தகவல் காட்டாற்றில், உண்மை என்பதை, பல சமயங்களில் வைக்கோல் போரில் ஊசித் தேடும் வேலையாகதான் ஆகிவிடுகிறது.

இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம், இந்தத் தகவல் வெள்ளம் சமாசாரங்களெல்லாம் உலகெங்கிலும் தொழில் நுட்ப மற்றும் பொருளாதார வளர்ச்சி இருக்கும் ஒரு குறிப்பிட்ட சதவிகித சமுதாயத்தினரிடையேதான். கணிசமான அளவு உலக மக்கள் இன்னும் இந்தத் தகவல் மழையின் பயனை அடையாமல் இருக்கிறார்கள். இந்த தொழில் நுட்ப இடைவெளியைக் ( Digital Divide ) குறைக்கவும், தகவல் பரிமாற்ற தொழில்நுட்பங்களின் ஆதாயங்கள் உலகில் எல்லா மக்களையும் சென்றடையவும் உலக நாடுகள் உட்கார்ந்து திட்டமிடுவது அவசியம் என்று தொடங்கியதுதான் ஐக்கிய நாடுகள் சபையின் உலகத் தகவல் சமூக உச்சி மாநாடு ( World Summit on Information Society.) - WSIS.
1998 ல் நடைபெற்ற உலகத் தொலைத் தொடர்பு சங்கத்தின் ( International Telecommunication Union - ITU) மாநாடு ஒன்றில், வட ஆப்பிரிக்காவில் உள்ள துனிசியா நாடு பரிந்துரைத்ததின் பேரில் இப்படி ஒரு உலகத் தகவல் சமுக உச்சி மாநாடு ஒன்றை நடத்த ஐ. நா சபையிடம் கோர வேண்டும் என்று ஆரம்ப வித்திடப்பட்டது. உலகத் தொலைத் தொடர்பு சங்கம் இந்த உச்சி மாநாட்டை இரண்டு பகுதிகளாக நடத்தத் தீர்மானித்தது. ஐ நா சபையின் ஜெனரல் அசெம்பளியின் ஒப்புதலும் கிடைத்தது.

இப்படியாகதானே கடந்த டிசம்பர், 2003ல் உச்சி மாநாட்டின் முதல் கட்டம் ஜெனிவாவில் நடந்தேறியது. இப்போது இரண்டாம் கட்டம், துனிசியாவில், இந்த மாதம் - நவம்பர் 2005 - 16ந் தேதியிலிருந்து 18 ந் தேதி வரை இரண்டு நாள் நடக்கப்போகிறது. " மற்ற உச்சி மாநாடுகளிலிருந்து இந்த மாநாடு சற்றே வேறுபடுகிறது - பொதுவாக உலகில் இருக்கும் பலவித அபாயங்கள் பற்றிதான் மாநாடுகளில் அலசுவார்கள். இங்கோ, தகவல் பரிமாற்றத்தை எப்படி உலகைற்கு ஆதாயமான வழிகளில் உபயோகித்துக்கொள்ளலாம் என்று திட்டமிடப்படுகிறது. " என்று ஐ நா சபையின் தலைவர் கோபி அனான் கூறியுள்ளார். ஐ நா சபையின் Millennium Development Goals என்ற திட்டம் நிறைவேறவும் இந்த உச்சி மாநாட்டில் தகவல் தொடர்புகள் மூலம் வழிகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தனி மனிதர் வாழ்க்கை முன்னேற, அறிவு சார்ந்த வளர்ச்சி பெற, உலகில் ஜனநாயகம் தளர, பரஸ்பரம் நட்பு விரிய, என்று சுமார் 67 குறிக்கோள்கள் அடையாளம் காணப்பட்டு வரையரைக்கப்பட்டுள்ளது. இந்த குறிக்கோள்கள் ஜெனிவாவில் 2003 ல் நடந்த முதல் கட்ட மாநாட்டில் அறிவிக்கப்பட்டது. (Declaration of Principles)

அடுத்து எப்படி குறிக்கோள்களை அடையப்பபோகிறார்கள் என்பது Plan of Action அறிக்கையில் உள்ளது.

இந்த திட்ட அறிக்கையில் குறிப்பிடத்தகுந்த சில அம்சங்கள்: உலகில் அரசாங்கங்களுக்கு எத்தனை முக்கிய பங்கு உள்ளதோ அதே அளவு / சொல்லப்போனால் அதைவிட அதிகமாகவே - உலக மக்களுக்குத் தகவல்கள் சரியான முறையில் சென்றடையச் செய்வதில் தனியார் நிறுவனங்களுக்குப் பொறுப்பு உள்ளது. தகவல் தொடர்பு சாதனங்களைச் சரியான முறையில் பயன்படுத்தி தகவல்கள் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவதில் பொது மக்களுக்கும் அதிக பொறுப்பு உள்ளது. தகவல் தொடர்பு தொழில் நுட்பங்களை உபயோகித்து அறிவுசார் வளர்ச்சி, சாதாரண மக்களையும் சென்றடையச் செய்வதும், எந்த ஒரு தகவலும் தங்குத் தடையில்லாமல் சாதாரண மக்களுக்கும் கிடைக்க வழி வகைகள் செய்வதும், இந்த திட்ட அறிக்கையின் முக்கிய அம்சங்களில் ஒரு பகுதி. உறுப்பினர் நாடுகளில் மகளிருக்கு இந்தத் தகவல் தொடர்பு தொழில் நுட்பங்களின் ஆதாயங்கள் முழுமையாகப் போய்ச்சேரவும் பிரத்தேயக வழி செய்யப்படும். வளர்ந்த நாடுகள் வளரும் நாடுகளுக்கும் பின் தங்கிய நாடுகளுக்கும் தகவல் தொடர்பு தொழில் நுட்ப வளர்ச்சிக்கு உதவ வேண்டும்.ஆனால் பக்கம் பக்கமாக உள்ள குறிக்கோள்கள் பகுதியிலாகட்டும், செயல் திட்டம் வரையறுத்துள்ள பகுதியிலாகட்டும் கண்ணில் விளக்கெண்ணெய் போட்டு தேடினாலும் ஆரம்பத்தில் குறிப்பிட்டப் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் வகையில், சரியான தகவல்கள் பொதுமக்களைப் போய்ச் சேர திட்டவட்டமான வழிகள் ஏதும் அடையாளம் காணப்பட்டாற்போல் தெரியவில்லை. அதேபோல் சமுத்திரம் போல் தகவல்கள் வந்து விழுந்த வண்ணம் இருக்கும் இணையத்தை ஏதாவது ஒரு நெறி முறைக்குள் கொண்டுவரப்படுமா என்பதும் இன்னும் தெளிவாகவில்லை.இன்று பெரும்பாலும் இணையத் தளங்களின் சேவை மையங்கள் ( Servers) அமெரிக்காவில் இருப்பதாலும், இணையம் முதன் முதலில் வேரூன்றியது அங்கேதான் என்பதாலும், இன்றும் இணையத் தள முகவரிகள் அளிக்கும் மையம் அமெரிக்காவில் இருப்பதாலும் இன்று அமெரிக்கா ஒரு மையக்கட்டுப்பாட்டகம் போல் இயங்குகிறது. இந்த நிலை மாறி, இணையத்தின் கட்டுபாடுகள் இதர உலக நாடுகளிடம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்று ஐரோப்பிய, ஆசிய நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் இப்படி செய்தால், இணையத்தின் பாதுகாப்புக்குப் பங்கம் வந்துவிடும் என்று அமெரிக்கா சொல்கிறது. இப்படி பல விவாதங்கள் இருந்தாலும், இணைய ஆளுமைக்கு ( Internet Governance) ஒரு வரைபடம் தயாரிப்பதும் இந்த மாநாட்டின் முக்கிய அமசம்.சரி. இப்படி எல்லாம் பல திட்டங்கள் ஜெனிவாவில் முன் வைக்கப்பட்டது. இப்போது துனிசியாவில் என்ன செய்யப்போகிறார்கள்? அந்த செயல் திட்டங்களை ஒவ்வொரு நாட்டிலும், உறுப்பினர் நாடுகளின் மூலை முடுக்கெல்லாம், நடைமுறையில் செயலாக்க என்ன முறைகள் கையாளப்பட வேண்டும் என்பது விவாதிக்கப்படும்.

இதில் சுவாரசியமான விஷயம், ஐ நா தலைவர் கோபி அனான், இந்தத் தகவல் தொடர்பு உலகின் சாதாரண மக்களையும் சென்றடையச் செய்வதில் இளைஞர்களுக்கு முக்கியப் பங்கு இருக்கிரது என்று அறிவித்துள்ளது. காரணம் இணையத்தில், மற்றும் தகவல் தொழில் நுட்பத்தில் சென்ற தலைமுறையினரைவிடவும், அதிக அளவு ஆர்வமும், திறமையும் உடையவர்களாக இன்றைய இளையத் தலைமுறை இருப்பதுதான். அப்படியென்றல், வரும் நவம்பர் 16 - 18 தேதிகளில் துனிசியா மாநாட்டில் நடக்க இருக்கும் மாநாட்டில் இளம் காற்று நிறையவே வீச வாய்ப்புண்டோ? இருக்கலாம் !

நன்றி: திசைகள்

பின் குறிப்பு: இந்த மாநாட்டில் அமெரிக்காதான் இணையத்தின் மகாராஜாவாக இப்போதைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது. இணையத்தின் கட்டுப்பாடு பரவலாக உலக நாடுகளிடையே பகிரப்பட வேண்டும் என்றும், உலக நாடுகள் அனைத்தும் பங்கு பெறும் ஒரு சர்வதேச அமைப்பின் கீழ் இணைய மேற்பார்வை இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வந்த ஐரோப்பிய நாடுகள் இந்த மாநாட்டில் ஏன் தங்கள் குறிக்கோளை அழுத்தி நடைமுறைக்குக் கொண்டு வர முயலவில்லை என்று இணையத்தையும் இந்த மாநாட்டையும் கவனித்தவர்கள் ஆச்சரியப்படுகிறார்கள். வரும் நாட்களில் ஊடகங்களில் இதுவும் ஆராயப்படலாம்.

Thursday, November 17, 2005

ஒரு காத்திருத்தல்

சில சமயம் சில செய்திகள் நம் கண்களில் பட்டாலும் படிக்காமல் போய்விட நேரும் அப்படி எத்தனையோ தவறவிட்டுள்ளேன். அப்படிப்பட்டக் கட்டுரை ஒன்று இன்று என் கண்களில் பட்டது. நல்ல வேளை, இதைப் படிக்காமல் விட்டுவிடவில்லை என்ற எண்ணம் இதைப் படித்து முடித்ததும் தோன்றியது. அதிலிருந்து முடிந்த அளவு தமிழாக்கம் செய்து இங்கே கொடுக்கிறேன்.

நியூயார்க் டைம்ஸில் கருத்துப் பக்கத்தில் ஹெலன் கூப்பர் எழுதியது:

பெண்கள் வாழ லாயக்கற்ற இடங்களில் உலகத்திலேயே மிக மோசமான இடத்தில் வாழும் பெண்களின் ஒரு காத்திருத்தல்.

என் தாய் நாடான லைபீரியாவிலிருந்து காங்கோவில் உள்ள புகாவு என்ற இடத்திற்குப் போவது முடியாத காரியம். ஆப்பிரிக்காவில் எல்லா ஊர்களையும் போல, அடர்த்தியான காடுகளும், இடைவிடாத போர்களும் புழுதி மண்டிக்கிடக்கும் சாலைகளும் இந்த இரண்டு ஊர்களுக்குமிடையே போக்குவரத்தைக் கடினமாக்கிவிட்டிருந்தன.

இருந்தாலும் இரண்டு ஊர்களும் அனேகமாக ஒரே மாதிரிதான் இருந்தன. சொல்லப்போனால், விமானத்தளம் என்று சொல்லப்பட்ட அந்தச் சிறிய ஒத்தையடிப் பாதைக் கணக்கில் இருந்த விமானத் தளத்தில் என் கால் பதித்தவுடனே, " ஆஹா, கடைசியில் ஒரு வழியாக நம்ம ஊருக்கு வந்துட்டாற் போல் இருக்கே" என்றுதான் புகாவு விமான நிலையத்தில் இறங்கியதும் தோன்றியது. இது ஒரு ஆறு மாதத்திற்கு முன் நடந்த விஷயம். ஆப்பிரிக்க நாடுகளில் வறுமையையும் வளர்ச்சித் திட்டங்கள் நடைபெறும் விதங்களையும் பற்றி செய்தி சேகரித்துக் கொண்டிருந்தேன். ஆனால், அக்ரா, கானா, எதியோப்பியா, மேக்லே, கிஸ்மு, கென்யா என்று எந்த நாட்டுக்குப் போனாலும் வறுமையையும் ஊழலையும் மீறி, அங்கே இருந்த வளர்ச்சியும் செழுமையும் என் தாய் நாடான லைபீரியாவை விட எவ்வளவோ மேல் என்றுதான் எனக்குத் தோன்றியது.

அதாவது நான் புகாவிற்கு வந்து சேரும்வரை. ஏறக்குறையப் பாலைவனமான எதியோப்பியாவையும், கென்யாவையும் பார்த்தப் பிறகு, லைபீரியாவில் என் ஊரான மோன்ரோவியாவில் உள்ளதுபோல் அடர்ந்த மழைக்காடுகளும் வாழைமரங்களும் நாசியில் வந்து சுகமாகப் படரும் மழையின் ஈர மண் வாசனையுமாக புகாவு எனக்கு ஒரே பசுமையாகக் காட்சியளித்தது. மோன்ரோவியோவில் உள்ளதுபோலவே தேயிலைக் காடுகளும், மலைகளும் பள்ளத்தாக்குகளும் அந்த ஊரைச் சுற்றி இருந்தன.

அதேபோல், தொடர்ந்துப் போர்களினால் சீரழியப்பட்ட மக்கள் தொகை அதிகம் உள்ள நாட்டில் ஏற்படும் ஒருவித ஆயாச உணர்வும் கூடவே ஏற்படுகிறது. ஆயிரக்கணக்கான சிறுவர்கள் சாலைகளில் வேறு வேலையெதுவும் இல்லாமல் வெட்டியாகக் குப்பைகளைக் கிளறும் காட்சி. இந்தக் கண்டத்தில் அடிக்கடி ஏற்படும் போரினால் வியாபாரம் இல்லாமல் குண்டுகளால் துளையிடப்பட்ட கட்டிடங்கள். எப்போதாவது கண்களில் தென்படும் வாகனக்கள் - 10 / 20 பேரை அடைத்துக்கொண்டு. அதுவும் பெரும்பாலும் ஐ நாவின் SUV வண்டிகள்.

ஆனால் இவற்றையெல்லாம் மீறி என்ன கவனத்தைக் கவர்ந்தது புகாவுவின் பெண்கள். ஊருக்குள் வண்டியில் செல்லும்போதே கண்களில் பட்ட இந்தப் பெண்களை நான் என் வாழ்நாள் முழுவதும் பார்த்துள்ளேன். முதுமையானப் பெண்கள் - முதுமையென்றால் ஆப்பிரிக்காவில் 35 வயது - முதுகில் பெரிய மூங்கில் பார்னக்களைச் சுமந்து கொண்டு சந்தையில் விற்க செல்லும் பெண்கள். சுமையுடன் மலையேறி குச்சி சேகரிப்பவர்கள். சாலையோரங்களில் பழங்கள், கொட்டைகள், அவித்த முட்டைகள் விற்பவர்கள்.

வீட்டு முற்றத்தில் உட்கார்ந்து தம்பிகளுக்கும், தங்கைகளுக்கும் வாளித் தண்ணீரில் குளிப்பாட்டிக் கொண்டிருந்த இளம் பெண்களும் தென்பட்டார்கள். 10 வயதுப் பெண் ஒருத்தி தூக்க முடியாமல் வாளியொன்றைத் தூக்கிக் கொண்டு வந்தாள். தன் 4 வயது தங்கையைக் குளிப்பாட்ட.

இந்த ஊர் பெண்கள் என் ஊர்ப் பெண்களின் பிரதிபலிப்புதான். எங்கள் லைபீரியாவில் இபப்டிப் பெண்கள் நிறையக் கஷ்ட்டப்பட்டுள்ளார்கள் - எதிரிக் கட்சிகளின் சண்டையில் மகன்கள் கடத்தப்படுவதைப் பார்த்தப் பெண்கள்; இந்த உட்பூசலில்களில் / சண்டைகளில் சென்ற கணவர்கள் வீடு திரும்பி வந்ததனால் எய்ட்ஸ் நோய் வரப் பெற்றப் பெண்கள்; உட்பூசல்களில் சண்டையிடும் ஆண்களினால் வன்புணரப்பட்டப் பெண்கள்; இப்படிப் பிறந்த குழந்தைகளையும் தோளில் சுமந்து கொண்டு, தலையில் தண்ணீர் தூக்கிக்கொண்டு நடையாக நடக்கும் / வேலைகளை மௌனமாகச் செய்யும் பெண்கள்; இத்தனை துயரிலும் மீனும் முட்டையும் விற்கும் பெண்கள்;

இந்தப் பெண்கள்தாம் சென்ற வாரம் ஓட்டுப் போடச்சென்றார்கள். ஜனாதிபதிப் பதவிக்குப் போட்டியிட்ட கால்பந்தாட்ட வீரர் ஜியார்ஜ் வீ ( George Weah) ஜெயிக்காவிட்டால் நாட்டில் அமைதி கிடையாஹ்டு என்று சவால் விட்டு மார்தட்டிய கட்சிக்காரர்களின் கூவலை இந்தப் பெண்கள் காதில் போட்டுக்கொள்ளவேயில்லை.

அவர்களின் மிரட்டலையெல்லாம் அலட்சியம் செய்துவிட்டு, இந்தப் பெண்கள், 67 வயதான எலென் ஜான்ஸன் (Ellen Johnson-Sirleaf ) என்றப் பெண்ணை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுத்துவிட்டனர். ஒரு ஆப்பிரிக்க நாட்டின் தலைவராகும் முதல் பெண்மணி. உடனேயே, அந்தக் கால் பந்தாட்ட வீரர் ஜியார்ஜ் கும்பல் இந்தத் தேர்தலில் கள்ள ஓட்டுக்கள் இடம் பெற்றுள்ளன என்று குற்றம் சாட்டியது - சர்வதேசப் பார்வையாளர்கள் அப்படியெல்லாம் நடக்கவில்லை என்று சொல்லியபோதிலும் கூட - எனக்கு வியப்பைத் தரவில்லை. ஆப்பிரிக்காவில் உள்ள ஆண்கள் இப்படியெல்லாம் ஒரு மாயையில் சிக்கியிருப்பது சகஜம்தான்.

ஹார்வேடில் படித்த ஒரு வங்கி அதிகாரியான எலென் ஜான்ஸன் என்ன சாதிப்பார் என்று எனக்குத் தெரியாது. ஒரு வின்னி மண்டேலாவைப் போல் ஆப்பிரிக்கப் பெண்களுக்குக் களங்கமேற்படுத்தியப் பெண்களும் இருந்திருக்கிறார்கள். ஆனால் 25 வருடம் போர்களினால் இந்த நாட்டை சீரழித்த ஆண்களுக்கு ஒருப் பாடம் புகட்டுவார் என்று தோன்றுகிறது.

லைபீரியாவில் இந்தத் தேர்தல் முடிவுகள் வெளி வர ஆரம்பித்த சமயத்தில், இந்த புகாவு நகரத்தில் நான் காரில் நுழையும்போது என் கண்களில் பட்ட ஒரு பெண் மட்டும் என் முன் பசுமையாக நிற்கிறாள். அவள் தன் 30 களில் இருக்கும் ஒரு வயதானவள். நான் அவளைப் பார்த்தபோது சூரியன் மறையும் அந்திப் பொழுதாக இருந்தது.

தன் முதுகில் பெரியக் கட்டைகளை ஏற்றிக்கொண்டு குந்து கொண்டு மலையின் ஏற்றத்தில் ஏறிக்கொண்டு இருந்தாள். பாரத்தில் அவளின் மார்பு கீழே விழுந்துவிடும் அளவு குனிந்து உச்சியில் இருந்த வீட்டை நோக்கி நடந்து கொண்டு இருந்தாள். அவள் பின்னே அவள் கணவன். இன்னும் அவளை வேகமாக நடக்க சொல்லி. அவன் கையில் ஏதுமில்லை. கையை வீசிக்கொண்டு முன்னே நடந்தான்.

இன்று திரும்பி புகாவுக்குச் செல்ல வேண்டுமென்று தோன்றுகிறது. சென்று அந்தப் பெண்ணிடம் லைபீரியாவில் நடந்ததைச் சொல்ல வேண்டும்; இந்தத் தேர்தலைப் பற்றி சொல்லிவிட்டு அவளிடம் நான் சொல்ல வேண்டும்; 'பெண்ணே.. உங்களுக்கும் இப்படி ஒரு காலம் வரும்' என்று.

Friday, November 11, 2005

எல்லாம் ஒரு காலம் !

சில சமயம் சில விஷயங்களைக் கேட்கும்போது வாயடைத்துப் போய்விட்டது என்போம் அல்லவா? அந்த அனுபவம் எனக்கு சமீபத்தில் ஏற்பட்டது. என் உறவினர் பெண் ஒருவர் - நன்குப் படித்து, அரசாங்கத்தில் ஒரு உயர் அதிகாரியாக இருப்பவர் - கூறிய ஒரு கருத்தைக் கேட்டபோது.

சம்பாஷணையின் ஒரு பகுதியை மட்டும் - எனக்கு அதிர்ச்சியைத் தந்தப் பகுதியை - இங்கே தருகிறேன்.

" என் பெண் வெளி நாட்டில் சென்று படிப்பதையோ /வாழ்வதையோ நான் நிச்சயம் விரும்பவில்லை. "

"ஏன்??!!"

" அங்கேயெல்லாம் பெண்கள் தாங்களே வீட்டு வேலைகளைச் செய்துகொண்டு / வேலைக்கும் போய்க் கொண்டு கஷ்டப்பட வேண்டியிருக்கிறது. இங்கேயென்றால் நாம் சம்பாதிக்கும் பணத்தில், தாராளமாக, சமையலுக்கு, மேல் வேலைக்கு, வண்டி ஓட்ட, தோட்டக்காரன் என்று நாலு வேலைக்காரர்களை வைத்துக்கொண்டு சுகமாக இருக்கலாம். அங்கே போய் ஏன் என் பெண் கஷ்டப்பட வேண்டும் ? " !!!!

"அது சரி. இதே வாதம் உன் பிள்ளைக்குப் பொருந்தாதா?அவன் வெளி நாட்டில் சென்று வாழ்வதில் உனக்கு ஒன்றும் பிரச்சனையில்லையா? "

" அவன் ஆண். அவன் வீட்டு வேலைகளை அவன் மனைவிப் பார்த்துக்கொள்வாள்." !!!!!!!!!!!!!!!!!!!!!!!

அடுத்த அரை மணி நேரம் நடந்த மீதி சம்பாஷணை /விவாதம் இவற்றை உங்கள் ஊகத்துக்கு விட்டுவிடுகிறேன் !!

கூடவே, நேற்று இந்துப் பத்திரிகையின் சென்னை - மெட்ரோ ப்ளஸ் பகுதியில் வந்தக் கட்டுரை ஒன்றையும் தமிழ்படுத்தி, உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

அவன் - அவள்.

"அவன் சொல்கிறான்: " ஹ்ம்ம்... இங்கே நாம ஆம்பிளங்கதான் எப்பவும் கஷ்டப்பட வேண்டியிருக்கு. பெண்கள்பாடு தேவலை. ஒரு வேளை அதான் அவங்க இப்படி சோம்பேறித்தனமாக இருக்காங்களோ என்னவோ? இங்கே ஒரு "ப்ளீஸ்"; அங்கே ஒரு புன்சிரிப்பு; என்று இப்படியே அவங்க சாமர்த்தியமா சாதிச்சுக்குவாங்க. ஒரு "சாரி" என்ற வார்த்தை; கொஞ்சம் முறைப்பு காண்பிச்சாப் போதுமே; கொலைப்பழியிலிருந்து கூட தப்பிச்சுக்குவாங்க.

அவங்களுக்கென்ன? எப்ப வேணுமானாலும் கையை மடக்கினா ஓசி சவாரி கிடைச்சிடும். எப்பவும் உலகம் கண்களிலே அவங்கதான் படுவாங்க. ஆம்பிளைங்களும் அவங்களுக்கு "இல்லை"னு சொல்லத் தயங்குவாங்க.
ஆனாலும் இது ரொம்ப பாரபட்சமான உலகம்டா சாமி; உலகமே ரொம்ப மோசமா தாறுமாறாப் போய்கிட்டு இருக்கு. எல்லாத்துலேயும் பெண்களுக்குதான் இப்ப காலம். ஆம்பிளைங்கபாடு திண்டாட்டம்தான். எவ்வளவு கஷ்டப்படவேண்டியிருக்கு? ராப்பகலா உழைச்சாலும், ஓவர் டைம் வேலை செய்தாலும் அது யாருக்குப் புரியுது? ஆனா அதே ஒரு பெண் ஒரு நாள் செஞ்சாக் கூட 'நான் செஞ்சேன்' என்று தான் வேலை செஞ்சது உலகத்துக்கே கேட்கிறார்ப்போல தண்டோராப் போட்டு அறிவிச்சுடுவாங்க.

......... இன்னும் கொஞ்சம் இந்த ரீதியிலே ஆண் புலம்பல்.

அடுத்துப் பெண் சொல்கிறாள்: " ஆமாங்க. அதிர்ச்சியாதான் இருக்கு. ஐயோ பாவம் . ஆண்கள் எப்படி உழைக்கிறாங்க!! பெண்கள் என்ன கிழிச்சிட்டாங்க இன்னிக்கெல்லாம் இருந்தா, ஆபீஸ்லேர்ந்து வீட்டுகு வந்தப்புறம், என்னப் பெரிய வேலை? ராத்திரி சமையல் செஞ்சுட்டு, குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுத்துட்டு, நாய்க்குட்டிக்குச் சாப்பாடுபோட்டுட்டு, டேபிளைத் துடைத்து, பாத்திரம் ஒழிச்சுப்போட்டுத் தேய்த்து வைத்துவிட்டு, சமையல் அறையைத் துடைத்துச் சுத்தம் செஞ்சுட்டு, மறு நாளைக்கு சாமான் எல்லாம் இருக்கான்னு பாத்துட்டு, கணவன் துணியை இஸ்திரிப் போட்டு, ( ஐயோ பாவம், அவன் நாளைக்கு ஆபீஸ் போகணுமே) .... அவ்வளவுதான் செய்யணும். என்ன..? இரண்டு பேருக்கும் ஒரே சம்பளம்தானே என்கிறீங்களா? அட என்ன இருந்தாலும் அவுங்க ஆண்பிள்ளையாச்சே?

இந்தப் பெண்களுக்கு நல்லா வேணும். அவங்கதானே பெண் சுதந்திரம்; சமத்துவம் என்றெல்லாம் கூவினாங்க? சரிதான்; சமமா ஆபீஸ¤லே வேலைப் பாருங்க. ஆண் மாதிரியே சம்பாதிங்க. நல்லது. ஆனா வீட்டு நிர்வாகம் பெண்களுது ஆச்சுங்களே? நீங்கதான் செய்யணும் - அடிப்புடிச்ச வாணலியைத் தேய்ச்சுக் கழுவுற "சுகமான" வேலை உள்பட.. இதெல்லாம் தவிர ஆபீஸ¤லே உங்கத் திறமையைக் கண்டுக்காம சேர வேண்டிய சம்பளமோ பதவியுயர்வோ தராம இருப்பாங்க. அதெல்லாம் கண்டுக்காதீங்க.
அப்புறம் பாருங்க; ஒரு குழந்தைப் பிறந்துச்சுன்னு வையுங்க. அந்தப் பெண்ணுக்கு ஆயிரம் கவலை வந்து உட்கார்ந்துக்கும். குழந்தையை யார் பார்த்துப்பாங்க?எப்படி சமாளிக்கிறது? இப்படி யோசிச்சு யோசிச்சே வேலை மற்றும் குழந்தை இரண்டையும் ஜால வித்தை செஞ்சு சமாளிக்க ஆரம்பிப்பாள். அதே ஆண் என்ன செய்வாரு? குழந்தை பிறந்தவுடனே "பாட்டில்" உடைத்துக் கொண்டாட ஆரம்பிப்பாரு.

அதெல்லாம் சரி. இப்பதான் புது யுக ஆண்; இந்தக் காலத்துலே ரொம்ப அனுசரணையாக இருக்கார்னு கேள்விப்படறோமே? ( ஆதர்ச ஆண் விளம்பரம்? மற்றும் குழந்தையைத் தூக்கிக்கொண்டு பனித்த கண்களுடன் - எல்லா விளம்பரத்துலேயும் சிரிப்பாரே - அந்த ஆண்??) அதுக்கென்ன? ஏதோ வாஷிங் மெஷின்லே இரண்டு பட்டனை அமுக்கி வீட்டு துணிகளைத் தோய்க்க நம்மளுக்கு " உதவி" செய்யறாரு இல்லே... அதாலே, இப்படி எல்லா சீரியல் விளம்பரத்துலேயும் ஆதர்ச ஆண் என்று தலையைக் காண்பிச்சிட்டுப் போவாரு. அதோட இல்லே; இப்படி வீட்டு வேலையிலே " உதவி" செய்யறதக் காரணம் காட்டியே, நம்கிட்ட பேங்க் போறது, வரி கட்ட இன்கம்டாக்ஸ் ஆபீஸ் போறது, இல்லேனா கம்யூடர்லே வேலை என்று அவங்க செய்ய வேண்டிய வேலையெல்லாம் நம்ம பக்கம் தள்ளி விடுவாங்க.

இருந்தாலும் ஆதர்ச ஆண்கள் இருக்கதான் செய்யறாங்க. காபி ஷாப்லே கொஞ்சம் புன்னகை செஞ்சா, நம்ம ஐஸ் காபிலே கூடக் கொஞ்சம் ஐஸ் போட்டுத் தரவாங்க; சினிமாத் தியேட்டர்லே கும்பல்லே அடிச்சுப் பிடிச்சு பாப்கார்ன் வாங்கத் திண்டாடும்போது இன்னும் பாக்கி இருக்கிற காலே அரைக்கால் ஆதர்ச ஆண்கள் நமக்காக கியூலே நின்னு வாங்கித் தருவாங்க - அவங்க சகாக்களாலே நாம் கும்பலிலே நசுங்கி அவதிப்பட வேண்டாமே என்ற கரிசனத்துலே.

ஏதோ இப்படி சில சௌகரியங்களும் இன்னும் நமக்கு பாக்கி இருக்கேன்னு சந்தோஷப்படுவோம். போற வரைக்கும் போகட்டும். அதுவரைக்கும் தயவு செஞ்சு சந்தோஷப்பட்டுக்குவமே? என்ன பெண்களே, புரியுதா?

இந்தக் கட்டுரையை அப்படியே சென்னைத் தமிழில் எழுதினால் எப்படி இருக்கும் என்று பார்த்தேன் :-) இந்தச் சுட்டியில் இருப்பதைப் படித்துவிட்டு, சென்னைத் தமிழில் இன்னும் இதற்கு மெருகேற்ற விரும்புவர்கள் தாராளமாக செய்யலாம்.

Thursday, November 10, 2005

அரசியலில் /அரசாங்கத்தில் / தனிப்பட்ட முறையில் அவரது சாதனைகளை இன்று எல்லா ஊடகங்களிலும் காண்கிறோம். அவற்றுடன் கூட எனக்கு அவரிடம் இன்னும் மிகவும் பிடித்தது, அவருடைய Disarming smile. ஆனால் ஒரு படம் போடலாமென்று பார்த்தால், படம் ஏனோ இன்று இங்கே ஏற மாட்டேனென்கிறது. படம் இல்லாவிட்டால் என்ன? சொல் இருக்கிறதே.

இந்திய ஜனாதிபதி பதவிக்கு ஒரு அர்த்தம் கொடுத்த, அருமையான மனிதர், கொச்சேரி ராமன் நாராயணனுக்கு என் வணக்கமும் அஞ்சலியும்.

Thursday, November 03, 2005

தொடரும் கேள்விகள்.......

(தமிழோவியம் தீபாவளி மலருக்காக எழுதியது.)

சமீப காலமாக ஒரு கேள்வி என் மனதில் அவ்வப்போது எழுந்து கொண்டிருக்கிறது. எனக்கு இன்னும் சரியான பதில் புலப்படவில்லை. உங்களுக்குத் தெரிகிறதா என்று பாருங்களேன்.

ஊர்ப்பாசம் என்பது எப்படி வருகிறது? ஒரு இடத்தில் பிறந்ததால் வருகிறதா? வளர்ந்ததால்? குடிபெயர்ந்து ஓரிடத்தில் பழகிப்போனதால்? இல்லை, ஒரு ஊரின் - நமக்குப் பிடித்தமான பிரத்யேகமான சிறப்புகளால்?

நியூ ஆர்லின்ஸில் காற்றீனா தாக்கியபோது நிறைய பேர் ஊர்ப்பாசத்தால் வெளியேறவில்லையாம். உயிருக்கும் மேலாக நேசிக்கும் அளவு தங்கள் ஊரின் மேல் பிடிமானம் இருப்பது எதனால்? அப்படியே உயிரைக் காப்பாற்றிக்கொள்ள நியூஆர்லின்சைவிட்டு ஓடி வேற்று நகரத்துக்கு வந்த சிலரால் அங்கே ஒட்ட முடியவில்லை. தங்கள் ஊரின் அருமை பெருமைகளை நினைத்து மாய்ந்து போனார்கள். சான் ஹோசே மெர்குரி நியூஸ் பத்திரிகையின் பழைய நிருபர் ஒருவர் நியூ ஆர்லின்ஸைத் தன் ஊராகத் தேர்ந்தெடுத்து வாழ்ந்துவிட்டு இப்போது புயலிலிருந்து தப்பிக்க வேறு மாநிலத்துக்கு வந்தபின் தன் ஊரைவிட்டு வர வேண்டிய சோகத்தைப் பற்றி எழுதினார். அடைக்கலம் புகுந்த இடத்தில் யாரோ நியூ ஆர்லின்ஸ் மடி கிராஸ் மணிகளை இவருக்குக் கொடுத்தபோது, அது சரியான நியூ ஆர்லின்ஸ் மணிகளல்ல என்று வாங்க மறுத்துவிட்டு மனசுக்குள் பொருமுகிறார். " நம்ம ஊர் மணிகளின் பாரம்பரியம் பற்றி இவர்களுக்கு என்ன தெரியும். பிப்ரவரி மாதம் வந்தவுடனே தெருவிலே குழந்தைக் குட்டிகளோட வரிசையாக நின்று கொண்டு நியூ ஆர்லின்ஸ் திருவிழா ஊர்வலம் வருவதை வேடிக்கைப் பார்த்துக்கொண்டு நம்ம இங்க இப்படி கொண்டாட்டமா இருக்கிறப்போ மத்த ஊர்க்காரங்க எல்லாம் என்னதான் செய்யறாங்க என்று நம்ம ஊர்க்காரங்க ஒவ்வொத்தரும் தங்கள் மனசுக்குள் ஒரு நமுட்டு சிரிப்போட நினைச்சுப்போமே; அந்த நம்ம ஊர் ஆளுங்க இல்லையே இவங்க? இவங்களுக்கு நம்ம மணிகளின் அருமை எப்படி புரியும்?"

எப்படி ஒரு ஊர்ப்பாசம்? இத்தனைக்கும் இவர் பிறந்து வளர்ந்த ஊர் நியூ ஆர்லின்ஸ் அல்ல. இப்படி நமக்கும் நிறைய அனுபவங்கள் இருக்கலாம். பிறந்ததனால் மட்டுமே ஒரு ஊரின் மேல் பாசம் வருவதில்லை என்று நினைக்கிறேன். பிறந்த ஊர்ப்பாசம் போல பிறந்த நாட்டுப் பாசமும் வளர்ந்த / பழகிய சந்தர்ப்ப சூழ்நிலைகளைப் பொறுத்து ஆழமில்லாமல் போகுமோ? அப்படி போனால் அது தவறென்று சொல்ல முடியுமா? இந்தியாவில் பிறந்திருந்தாலும் முழுக்க முழுக்க வெளி நாட்டில் வளரும் குழந்தைகளுக்கு எந்த நாட்டின் மேல் பாசம் இருக்கும்? தமிழ் நாட்டில் பிறந்திருந்தாலும் வெளி மாநிலங்களில் வளர்ந்தத் தமிழர்களுக்குத் தமிழ் நாட்டின் மேல் பாசம் இல்லாமல் போய்விடுமோ?

எந்த ஊரிலிலுமே 3 அல்லது 4 அதிக பட்சம் ஏழு வருடங்களுக்கு மேல் வாழ்ந்திராத என் வாழ்க்கையை ஒரு நாடோடி வாழ்க்கை என்று நான் சொல்வதுண்டு. யாதும் ஊரே யாவரும் கேளிர் வகை.
"உங்க சொந்த ஊர்?" - "Where do you come from?" "where do you belong?" போன்ற அறிமுகக் கேள்விகளுக்கு இப்போதும் நான் ஒரு கணம் யோசித்துவிட்டுதான் பதில் சொல்கிறேன். Where do I belong?
பொதுவாக சென்னை என்று முன்பெல்லாம் குறிப்பிடும்போது என்ன சொல்கிறோம் என்று தோன்றும். சென்னையில் வாழ்ந்ததேயில்லை. எதை வைத்து சென்னை என் ஊர் என்று சொல்ல முடியும் என்று தோன்றும். பிறந்த ஊர் முசிறி என்று பெயர்தான் தெரியும். என் மூன்று வயதில் குடும்பம் அங்கிருந்து நகர்ந்துவிட்டது. அங்கிருந்த வாழ்க்கை பற்றி என் சகோதரியும் பெற்றோர்களும் சொல்லிதான் கேள்வி. அப்பாவின் ஊர் தஞ்சாவூர் பக்கம் ஒரு சிற்றூர் என்பதும் அம்மா ஊர் திருச்சி பக்கத்தில் இன்னொரு சிற்றூர் என்பது குடும்ப சரித்திரத்தில் ஒரு அடிக்குறிப்பு. ஆனால் இந்த ஊர்களைப் பற்றி கேள்வி ஞானம்தான். மற்றபடி பரிச்சயமில்லை. யாராவது வயதானவர்கள் அந்தக் கால வழக்கப்படி, "உங்களுக்கு எந்தப் பக்கம்" என்று கேட்டால், என் கணவர் சட்டென்று " என் மனைவி, தஞ்சாவூர் பக்கம்" என்று சொல்லும்போது எனக்கு தூக்கிவாரிப்போடும். தஞ்சாவூரா? நானா? அது எப்படி இருக்கும் என்று கூட தெரியாதே, என்று நினைப்பேன். என் சகோதரி பத்மினி சொல்லிதான் நிறைய என் பெற்றோர்களின் ஊர் விஷயங்கள் தெரிந்து கொண்டேன். என்னிடம் அவர் சொன்ன கதைகள் சுவாரசியமாக இருக்கவே அவற்றை ஆவணப்படுத்த வேண்டும் என்பதற்காகவே அவரது பெயரில் ஒரு வலைப்பதிவும் தொடங்கி அவரிடம் கட்டுரைகள் வாங்கிப் போட்டு வருகிறேன்.

இந்த ஊர்களுக்கு எப்போதாவது சிறு வயதில் திருவிழா, கல்யாணம் என்று செல்வதோடு சரி. இந்த நிலையில் எந்த முகாந்திரத்தை வைத்துக்கொண்டு என் ஊர் என்று சொல்வேன்? பிறகு, நான் வளரும் காலத்தில் அப்பா அவ்வப்போது மாற்றலாகி சென்று கொண்டிருந்த தமிழ் நாட்டு ஊர்களையெல்லாம் சொன்னால் தமிழ் நாட்டுக்கு வெளியே இருப்பவர்களுக்குப் புரியுமோ என்று தோன்றும். பொத்தாம் பொதுவாக சென்னை என்று சொல்லிவிட்டால் நிம்மதி. ஆக மொத்தம் எனக்குப் பிறந்த / வளர்ந்த ஊர்ப்பாசம் என்று ஒன்று ஒட்டாமலேயே போயிற்று. ஆனால் பிறந்த பகுதி, வளர்ந்த நாடு என்று பொதுவாக தமிழ் நாட்டின் மீதும், இந்தியா மேலும் பாசம் இருக்கிறதே? இதுதான் ஒவ்வொரு முறையும் வெளி நாட்டு வாழ்க்கையிலிருந்து அவ்வப்போது பிடித்து இழுத்து வந்துள்ளது. இந்த சொல்லத் தெரியாத பற்றுதல்தான், தான்சானியா, பூடான் மற்றும் சிங்கப்பூர் என்று சுற்றிய நாடுகளிலிருந்து வேலை ஒப்பந்தத்தைப் பாதியிலேயே நிறுத்திக்கொண்டு - சொந்தக் காரணங்களால் - வரத் தூண்டியுள்ளது. எந்த ஊர் என்று இல்லை; இந்தியாவில் இருந்தால் போதும் என்ற நினைப்புதான் அப்போது. இதன் பெயர் ஊர்ப்பாசம் என்று சொல்வதா என்று புரியவில்லை. சிங்கப்பூரைவிட்டு வரும்போது, பல நண்பர்கள் மாய்ந்து போய்விட்டார்கள். இந்தியாவில் அப்படி என்ன இருக்கிறது என்று இப்படி ஓடி ஓடிப் போகிறர்£கள் என்று. அதுதானே எனக்கும் புரியவில்லை.

எழுபதுகளில் கிழக்காப்பிரிக்காவில் தன்சானியாவில் குடியிருந்தபோது இந்தியக் குடும்பங்களிடையே - இந்தியர்கள் என்ற ஒரு "ஊர்ப்பிணைப்பு" இருந்தது. தினம் சந்திப்பு, விழாக்கள், பண்டிகைகள் என்று கலகலவென்று இருக்கும் ( அதுவே இந்தியாவில் ஒரே ஊரில் இருந்தாலும் அப்படி இருந்திருப்போமா என்பது சந்தேகம் - வெளி நாட்டில் / வெளி மாநிலங்களில் இருக்கும் பலரும் இதை உணர்ந்திருப்பார்கள் ) அப்போது எங்களிடையே அடிக்கடி அடிபடும் ஒரு பேச்சு - "எப்போது இந்தியா திரும்பலாம்? வேலை செய்யும் ஒப்பந்தக் காலத்தை இந்த வருடத்தோடு முடித்துக்கொள்ளலாமா? அடுத்த வருடம் நிச்சயமாக இந்தியா போய்விடப்போகிறோம் " என்ற ரீதியிலேயே பேச்சு இருக்கும். இந்த "going for good" சம்பாஷணை இல்லாமல் ஒரு நாளும் கழிந்ததில்லை. பத்து வருடம் கொட்டைப் போட்ட குப்தாஜி, அடுத்த வருடம் நிச்சயம் போகிறேன் என்பார். " டில்லி, கனாட் பிளேஸில் இன்னும் ஒரு இடம் வாங்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன்" அதை வாங்கிவிட்டால், நிச்சயம் என் லட்சியம் பூர்த்தியாகிவிடும். திரும்ப வேண்டியதுதான்" என்று ஒரு கமாவுடன் அவரது " going for good " பேச்சு முடியும். இப்படியே அவர் இன்னும் பதினைந்து வருடம் சொல்லிவிட்டு ஒரு வழியாக ரிடையர் ஆகிவிட்டுதான் இந்தியா வந்தார். இப்படி "Pushing the bars for ever" என்ற ஒரு மனோபாவத்துடனும் ஊர்ப் பாசமும் சேர்ந்து பலருக்கு வாழ்க்கையின் பெரும் பகுதி கேள்வியிலேயே நிற்கும். இன்னும் சிலர் இந்தக் கேள்விக்கணைகளை லட்சியம் செய்யாமல் அடுத்த தலைமுறைக்கு வேரூன்ற முயலுவார்கள்.

இப்படி வேரூன்றியத் தலைமுறைகள்தாம் சேர்ந்து இன்று அமெரிக்காவையும் சிங்கப்பூரையும் வளப்படுத்திக்கொண்டிருக்கின்றன. ஆமாம், அமெரிக்காவையும் சிங்கப்பூரையும் " குடியேறியவர்கள் நாடு" ( country of immigrants) என்று சொல்வதுண்டு இல்லையா?

இப்படிப் புலம் பெயர்ந்தோர் என்பது ஒரு நாட்டைவிட்டு நாடு சென்று குடியேறுபவர்களுக்கு மட்டுமல்ல. ஒரு நாட்டிலேயே ஓரிடத்திலிருந்து வேறு ஊரில் வாழ்பவர்களுக்கும் பொருந்தும். இன்று இந்தியாவிலிருந்து மற்ற நாடுகளில் குடியேறி வாழ்பவர்களின் பிரச்சனைகள் / குழப்பங்கள், பல வருடங்கள் முன்பு கிராமங்களிலிருந்து நகரத்திற்குப் பிழைப்புத் தேடி சென்றவர்களுக்கும் பொருந்தும். இன்று Indian Diaspora / Chinese Diaspora என்பதுபோல் திருநெல்வேலி, தஞ்சாவூர், திருச்சி அல்லது இன்னும் பல குட்டிக் கிராமங்களிலிருந்து புலம் பெயர்ந்தவர்களும் ஒரு விதத்தில் அந்தந்தப் பகுதிகளின் Diaspora தான் - திருச்சிக்காரர்கள், தஞ்சாவூர்க்காரர்கள் என்று diaspora வட்டம் சுழலும்.

இந்தக் கணக்கின்படி பார்த்தால் மாநகரங்களான - மும்பாய், டில்லி போன்றவைகளும் " புலம் பெயர்ந்தோர்" நகரங்கள்தாம். தமிழர்கள் அன்று கிராமங்களிலிருந்து நகரங்களுக்குக் குடியேறினார்கள். பிறகு வெளி மாநிலங்களுக்கு; பிறகு அயல் நாடுகளுக்கு என்று "புலம் பெயர்" வட்டம் விரிந்து கொண்டு போயிற்று.

பல வருடங்கள் முன்பு என் அம்மா வழி தாத்தா தன் அரசாங்க வேலையிலிருந்து ஓய்வு பெற்ற பின் திருச்சி பக்கத்தில் தன் கிராமத்த்தில் வீடு கட்டிக்கொண்டு "செட்டில்" ஆனார். அவருடைய சகோதர்களும் அவ்வண்ணமே செய்தார்கள். ஊர்ப்பாசம் அவ்வளவு இருந்தது அவர்களுக்கு.
அன்று ஊர்ப்பாசம் என்று ஊர் திரும்பிய அந்த சகோதரர்களின் நிலையை இன்று வெளி நாடுகள் / ஊர்களிலிருந்து தமிழ் நாட்டில் தங்கள் ஊர்களுக்குத் திரும்பும் இந்தியப் புலம் பெயர்ந்தோருடன் ஒப்பிடத் தோன்றுகிறது. ஊர்ப்பாசம் என்று ஒரு தலைமுறையினர் திரும்பி வந்தாலும் அவர்களின் அடுத்தத் தலைமுறையினருக்கு அந்த அளவு ஊர்ப்பாசம் இருப்பதில்லை. அதுவும் வளர்ந்தப் பிள்ளைகள் என்றால் கேட்கவே வேண்டாம். அவர்களால் பெற்றோரின் ஊர்ப்பாசத்தையும் புரிந்து கொள்ள முடியாது. தாங்கள் வளர்ந்த ஊருக்கும் பெற்றோரின் ஊருக்கும் இடையே உள்ள வாழ்க்கை முறை வித்தியாசங்களும் மற்றும் பல சந்தர்ப்பங்களில் மொழிப் பிரச்சனையும் அவர்களைத் தண்ணீருக்கு வெளியே விழுந்த மீன் குஞ்சுகளாகத் திணறச்செய்யும். இந்த வாழ்க்கை முறை சங்கடங்களுக்குப் பயந்து பலர் ஊர் திரும்ப யோசனை செய்வார்கள்.

அந்தக் காலத்தில் என் மூதாதையர் - மூத்த தலைமுறையினர் - ஓய்வு பெற்று கிராமம் திரும்பியபோது என் மாமாக்கள் - தாத்தாக்களின் மகன்கள் - பம்பாய், சென்னை என்று நகரங்களில் நல்ல வேலைகளில் - குடும்பம் / வேலை என்று வாழ்க்கையின் பளு /அழுத்தம் நிரம்பிய Prime Time வயதுகளில் இருந்தார்கள். அவர்களால் எப்படி கிராமத்தில் வாழ முடியும்? கடைசியில், தாத்தாக்கள், பிள்ளைகள் வந்து இருக்கப்போகிறார்கள் என்று நினைத்து கிராமத்தில் கட்டியப் பெரிய வீடுகளில் தனியாக - தாத்தா/ பாட்டி - வாழ்ந்தனர்.

வெளி நாடுகளுக்கு இளைஞர்களை அனுப்பிவிட்டு "வயோதிகர்கள் ஊராக" மாறிக்கொண்டிருக்கும் இன்றையச் சென்னையைப் போல அன்றைய கிராமம் இருந்தது.

இன்றும் இந்த ஊருக்குத் திரும்பலமா கேள்வி பலப் புலம் பெயர்ந்தோரை - அது டில்லித் தமிழரோ அல்லது அமெரிக்கத் தமிழரோ - ஆட்டுவித்துக்கொண்டுதான் இருக்கிறது. திரும்பும் சிலரின் அடுத்த தலைமுறையினருக்கு பெற்றோரின் "ஊர்" ஒட்டாது. ஊர்ப்பக்கம் மீண்டும் குடியேறுவதற்கு முன்னோடியாகப் பலர் வருடாந்திர / அல்லது அவ்வப்போது, ஊருக்கு விஜயங்கள் பல செய்திருப்பார்கள் - அவர்கள் பெற்றோரையும் சுற்றோரையும் பார்க்க, குலதெய்வத்துக் கோவிலில் மொட்டையடித்து காதுகுத்த, பெரியப்பா / ம்மா/ மாமா /மி இவர்களுடைய பிள்ளைகள் கல்யாணம், என்று ஏதேதோ காரணம் சொல்லிக்கொண்டு ஊருக்கு ஒரு பத்து நாள் / இரண்டு வாரம் என்று பெட்டி நிறைய எல்லோருக்கும் ஏதேதோ வாங்கிக்கொண்டு சிரித்து, வம்பு பேசி என்று ஆடிவிட்டு மறுபடி தங்கள் தங்கள் பொந்துகளில் போய் அடைந்து கொண்டு, என்று வாழ்க்கை ஓடியிருக்கும். ஆரம்ப காலங்களில் குழந்தைகள் இவர்களைப் போலவே ஆசையுடன் ஊர்ப்பக்கம் வருவார்கள். எல்லோரும் நகரத்திலிருந்து / வெளி நாட்டிலிருந்து வந்திருக்காங்க என்று கொண்டாடுவது குழந்தைகளுக்குப் பிடித்துப்போயிருக்கும்.

ஆனால் சற்று வளர்ந்து பள்ளி, காலேஜ், தங்கள் அலைவரிசைக்கு நண்பர்கள், மற்றும் நீச்சல், டென்னிஸ், பாட்டு நடனம், என்று சிறப்பு பயிற்சிகளில் கவனங்கள், நண்பர்கள் வட்டம், என்ற ரீதியில் அவர்கள் வாழ்க்கை முறை மாறிப்போவதில், ஊரில் இருக்கும் உறவினரோ, வாழ்க்கை முறையோ அத்தனைதூரம் ஈர்க்காது. இந்த இரண்டுகெட்டான் வயது சமயத்தில்தான் பெற்றோருடன் விடுமுறையில் ஊர்ப்பக்கம் போவதற்கு பிள்ளைகள் சங்கடப்படத்தொடங்குவார்கள். எண்ணையும் தண்ணீரும் போல பெற்றோரின் வேருடன் ஒட்ட முடியாமல் ஒரு தர்ம சங்கடம். "ஊருக்கா? நாங்க வந்து என்ன செய்யப்போகிறோம்? நீங்க போயிட்டு வாங்க. நாங்க இங்கே பாத்துக்குறோம்" என்பது போன்ற பதில்கள் வர ஆரம்பிக்கும்.

இந்த நிலையில் புலம் பெயர்ந்தவர்கள் ஊருக்கு வந்து செட்டில் ஆக நினைப்பது மகாக் கடினமான வேலை. இதற்கெல்லாம் பயந்து பலர் இருக்கும் ஊரிலியே முடிந்த வரை இருந்து விடலாம் என்று பார்ப்பார்கள். அது இன்னும் புதைகுழி போல் ஆக ஆரம்பிக்கும். ஒரு பக்கம் தாங்கள் வளர்ந்த சூழ்நிலையைப் பெற்றோர் தேட ஆரம்பிக்க, பிள்ளைகள் தாங்கள் வளர்ந்த/ வளரும் சூழ்நிலையைவிட்டு வெளியேறத் தயங்க, அது ஒரு தர்ம சங்கடமான நிலை.

என்னைப் பொறுத்த வரையில் என் பெற்றோர் வளர்ந்த தஞ்சாவூர், அல்லது திருச்சி அருகே உள்ள கிராமங்கள் என் ஊர் அல்ல. எங்கேயும் அடர்ந்து பல வருடங்கள் இருந்திராக்காததால், வளர்ந்த எந்த ஊரிலும் ஆழமான ஊர்ப்பாசம் வரவில்லை. என் மகன்களின் கதையும் கிட்டதட்ட இதேதான் - நாங்களும் மாற்றலாகிச் சென்று கொண்டிருந்ததால். ஆனாலும் அவர்களின் பெரும்பாலான வருடங்கள் இந்தியாவில் டில்லியில் கழிந்ததால் அவர்களைப் பொறுத்தவரையில் டில்லிதான் சொந்த ஊர். தமிழ் நாடு அவர்களைப் பொறுத்த வரையில் பெற்றோர் ஊர் மட்டுமே. எனக்கு எப்படி என் பெற்றோரின் கிராமங்கள் ஆனவோ அதுபோல்.

இதேபோல் வெளி நாடுகளில் வாழும் பல தமிழ்க் குடும்பங்களில் அங்கே பிறந்து வளர்ந்த குழந்தைகளுக்கு அவர்கள் வளரும் ஊர்தான் அவர்களுக்கு சொந்த ஊர். இந்தியா / தமிழ் நாடு, அயல் நாடாக ஆவதில் ஆச்சரியம் இல்லை. யாராக இருந்தாலுமே பொதுவாக ஒரு மனிதனின் ஐந்து வயதிலிருந்து 20 வயது வரை வளரும் சூழ்நிலையும், ஊரும்தான் அவன் / அவள் மனதில் ஆழமாகப் பதிந்து போயிருக்கும். அந்த சூழ்நிலை மற்றும் ஊரும்தான் அவனைப் பொறுத்தவரையில் "சொந்த ஊர்" - Home. அதற்குப் பின் வாழும் இடங்களெல்லாம் வசதிக்காக, வேலைக்காக, மற்ற ஏதோ வாழ்க்கை சௌகரியங்களுக்காக என்ற ரீதியில்தான் இருக்கும். ஆனால் உள் மனதில் ஒரு பிணைப்பு என்பதும் " feeling at home" உணர்வும் எழுவது இந்த 5 -20 வயதுகளில் வளர்ந்த ஊர்தான்.

இந்த மாதிரியான இரு நாட்டு - சில சமயம் பன்னாட்டு - சூழ்நிலையில் வளரும் குழந்தைகளுக்கு எந்த ஊரின் மீது தேச பக்தி இருக்கும் என்பது விடைத் தெரியாத கேள்விதான். அதுபோல் சௌகரியத்துக்காகவோ அல்லது பல நாள் வாழ்ந்த ஒட்டுதலாலோ வேற்று நாடுகளின் குடிமக்களாக மாறுபவர்களின் ஊர்ப்பாசமும் அடி மனதில் அந்த 5லிருந்து 20 வயது வரை வளர்ந்த ஊரில்தான் இருக்கும். ஆனால் இதற்கும் சில விதி விலக்குகள் உண்டு.

எப்படியென்றால், " சொந்த ஊரை / நாட்டை" விட்டு வெளியே வாழ்ந்தாலும் சில குடும்பங்களில் வீட்டுக்குள்ளே தங்களின் ஊர்ப்பழக்க வழக்கங்களையும், வாழ்க்கை முறையயும் துளிக்கூட மாற்றிக்கொள்ளாமல், புலம் பெயர்ந்த ஊரின் தாக்கங்கள் தங்கள் வீட்டுக்குள்ளே அண்டாமலும் சிலர் இருப்பார்கள். இந்தக் குடும்பங்களில் இளையத் தலைமுறையினருக்கு இரட்டை வாழ்க்கை முறை பழகிப்போயிருக்கும் - அல்லது இந்த தர்ம சங்கட நிலையை இயல்பாக ஏற்றுக்கொண்டிருப்பார்கள். வீட்டுக்குள் வந்தால் இந்தியா/தமிழ்நாடு/ கிராமம் என்றும், வெளியே போனால் வேறு ஒரு நாடு / மாநிலம் / ஊர் என்றும் வாழக் கற்றுக்கொண்டிருப்பார்கள். ஆங்கில நாவலாசிரியை ஜும்பா லஹரியின் கதைகளில் இந்த Jekyll and Hyde மாதிரியான வாழ்க்கையைப் பற்றி நிறைய வரும். ஆங்கில சினிமா Bend it Like Beckham, ஹிந்தி சினிமா Dil Wallen Dhuniya Leh Jaayenge போன்றவற்றின் கதைக் களன்கள், இப்படிபட்ட இரட்டை வாழ்க்கை முறையில் தர்ம சங்கடமாக வாழும் தலைமுறையினரைச் சுற்றிதான் அமைக்கப்பட்டுள்ளன.

இதில் மிகப்பெரிய பிரச்சனை ஆற்றில் ஒரு காலும் சேற்றில் ஒரு காலுமாக இருக்கும் "சாண்ட்விச்" பெற்றோர்கள் - ஒரு பக்கம் பெற்றோர், மறுபக்கம் பிள்ளைகள் - இருவரையுமே திருப்தி படுத்த வேண்டும். ஊரில் இருக்கும் அவர்களுடைய பெற்றோரைத் திருப்தி படுத்துவதற்காகவோ அல்லது இன்னும் தங்கள் ஊர்ப்பாசத்தையும் அங்குள்ள வாழ்க்கை முறையை விட முடியாமலும் இருக்கும் இவர்கள் தங்கள் பிள்ளைகளிடம் அந்த வாழ்க்கை முறையைத் திணிக்கப்பார்ப்பார்கள். வேற்றூரின் சூழ்நிலையில் வளரும் பிள்ளைகளுக்கோ இவர்களது பிடிவாதம் புரிவதில்லை. In Rome, live like Romans என்பது பெற்றோர்களுக்கு ஏன் புரிவதில்லை என்று அவர்களுக்குத் தோன்றும். ஆனால் வீட்டில் இருக்கும் குடும்பப் பழக்க வழக்கங்களுக்கும் வெளியில் மற்ற கலாசாரப் பழக்கங்களுக்கும் உள்ள வித்தியாசங்களைப் புரிந்து கொள்ள சொல்லிகொடுத்து வளர்க்கும்போது இரண்டு விதமான - இன்னும் பலவிதமான வாழக்கை முறைகளையும் புரிந்துகொண்டு, அவற்றை மதித்து வளரும் மனப்பக்குவம் குழந்தைகளுக்கு வந்துவிடும். இது கொஞ்சம் கழைக்கூத்தாடி வேலை போன்றதேயானாலும், எங்கே இருந்தாலும் வாழ்க்கையை இயல்பாக வாழக்கற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் வரும் என்பதால் வளர்ப்பில் இந்த அளவு சிரமமும் சிரத்தையும் காட்டுவது நல்லதே.

இந்தப் பிரச்சனையைத் தவிர்க்க சிலர் குழந்தைகள் சிறியவர்களாக இருக்கும்போதே " ஊர்ப்பக்கம்" திரும்பி விடுவார்கள்.
என் தாத்தாக்கள் ஓய்வு பெற்று கிராமத்தில் மீண்டும் குடியேறியதைப் போல் நாங்களும் நான்கு வருடம் முன்பு சென்னைக்கு வந்து சேர்ந்தோம். வந்தபின் கொஞ்சம் கொஞ்சமாக "என் ஊரில்" கால் ஊன்றத் தொடங்கினேன். பல தலைமுறைகளாக அல்லது பல வருடங்களாக சென்னையை / தமிழ் நாட்டை விட்டு வெளியில் வட இந்தியாக்களில் வாழும் தமிழ் புலம் பெயர்ந்தோர் பலர் சென்னைக்கும் தமிழுக்கும் அந்நியப்பட்டுவிட்டது போல் பேசுவதைக் கேட்டிருக்கிறேன். வட இந்தியாவிற்குப் புலம் பெயர்ந்த பலர் சென்னைக்கு / தமிழ் நாட்டுக்குத் திரும்ப ஏனோ அஞ்சுவதையும் பார்த்துள்ளேன். சென்னைக்காப் போகிறீர்கள்? உங்களால் சென்னை வாழ்க்கை முறையை ஏற்றுக்கொள்ள முடியுமா என்றும் கேட்டிருக்கிறார்கள். அன்றும் சரி. இன்றும் சரி. என் வேருக்குத் திரும்புவது எனக்கு பெரிய விஷயமாகப் பட்டதில்லை. சென்னையில் வாழ்ந்திராவிட்டாலும் நான் அந்நியமாக மட்டும் உணர்ந்ததேயில்லை. மாறாக இது/ தமிழ் நாடு என் இடம் என்ற நினைப்பு என்றுமே இருந்தது.

என் நினைப்பு என்னை ஏமாற்றவில்லை. இந்த நான்கு வருடங்களில் சென்னை நன்றாகவே பழகியும் பிடித்தும் விட்டது. நிறைய விஷயங்களில் என் வாழ்க்கை முறை சென்னை வாழ்க்கை முறையுடன் ஒத்துப் போவதால் இயல்பாக இருக்கிறது. வீட்டிலும் வெளியிலும் ஒரே மொழி என்பதே ஒரு வித்தியாசமான அனுபவம்.

இரவு 10 மணிக்குமேல் மரங்கள் அடர்ந்த ராஜா அண்ணாமலை வீதிகளில் செல்லும்போது அந்த அமைதியான நேரத்தில் சென்னையின் அமரிக்கையான அழகு புரிகிறது. பெற்றோரும் உற்றோரும் இருந்த, /இருக்கும் ஊர் என்று சென்னைக்கு வந்துவிட்டாலும், தமிழ் நாட்டில் எந்த ஊரிலும் இப்படி சௌகரியமாகவே உணர்ந்திருப்பேன் என்று நினைக்கிறேன். ஆனால் டில்லி வாழ்க்கைப் பழகிப்போனதில் டில்லியும் இன்னொரு "என் ஊர்" என்ற நினைப்பு மட்டும் மாறவில்லை.

ஆனால் நான் இருந்த எந்த வெளி நாட்டிலும் அங்கேயே இருந்து விட வேண்டும் என்று தோன்றியதேயில்லை - எத்தனைதான் வாழ்க்கை சௌகரியமாக இருந்தபோதும். இது தற்காலிக வீடு /ஊர் என்ற உணர்வு எப்போதும் இருந்து கொண்டே இருந்தது. home is home. என்கிற உணர்வு "நம் வீட்டில்தான்" வரும் - எத்தனைக் கஷ்டங்கள் இருந்தாலும். பல வருடம் புழங்கியக் காரணத்தால் டில்லியும் " என் ஊர்" என்று ஆகிவிட்டிருந்தது.
சமீபத்தில் எழுத்தாளர் C.S Lakshmi (அம்பை) தொகுத்த "The Unhurried City" என்ற புத்தகம் சில நாட்கள் முன்பு படித்துக்கொண்டிருந்தேன். அருமையான பழையப் படங்களுடன், சென்னையைப் பற்றி எழுத்தாளர்கள், கவிஞர்கள், அறிஞர்கள், கலைஞர்கள், பல்துறையிலும் வித்தகர்கள் என்று பலர் அவரவர் கோணத்திலிருந்து எழுதியக் கட்டுரை, கதை, கவிதைகள் என்று இந்தத் தொகுப்பு இருந்தது. தொகுப்பில் இருந்த கருத்துகள் பல்வித பார்வையில் இருந்தன. ஆனால் இந்தப் புத்தகத்தை என்னைப் படிக்கத் தூண்டியது, லஷ்மி எழுதிய முன்னுரை. முன்னுரை எழுதுவதே ஒரு கலை. தான் எடுத்துக்கொண்ட வேலைக்கு ஒரு ஆர்வத்துடனும் அந்தப் பொருளில் ஒரு பிடிமானத்துடனும் ( involvement) சரியான முறையில் ஆராய்ச்சி செய்து எழுதப்படும் சில முன்னுரைகள், புத்தகத்தைவிட அருமையாக, ஜனரஞ்சகமாக அல்லது ஆழமாக அமைந்துவிடும். அம்பை எழுதிய " வீட்டின் மூலையில் ஒரு சமையலறை" என்ற கதையில் ஒரு ராஜஸ்தான் குடும்பத்தில் வீட்டு மருமகள்கள் - நன்கு படித்த பெண்களும் கூட - எப்படி சமைப்பதும், வீட்டு வேலையுமே வாழ்வு என்று வாழ்கிறார்கள்; முடக்கப்படுகிறோம் என்ற பிரக்ஞைக் கூட இல்லாமல், என்று விவரித்திருப்பார். வீட்டில் இருக்கும் இந்தப் பெண்களுக்கு ஒரு மாறுதல் என்று குடும்பம் பிக்னிக் போவார்கள். அங்கும் இவர்கள் நேரம் சாப்பாட்டுக்கடையிலேயே கழியும். இந்தக் குடும்பத்து ஆண்கள் " மணமகள் தேவை" என்று விளம்பரம் கொடுக்கும்போது " நன்குப் படித்த, ஆனால் எதிர்த்துப் பேசாத, நல்ல அழகுள்ள ஆனால் கீழ்ப்படிதல் குணமுள்ள....." என்ற ரீதியில் தேடுவார்களாம். ( செய்தித்தாள்களைப் புரட்டினால் இன்றைக்கும் இதில் மாற்றம் இருக்கிறார்போல் இல்லையே?!!) இன்னொரு கதையில் பிரசவ வலி வரும் வரையில் வயலில் வேலை செய்யும் ஒரு பெண்ணைப் பற்றி எழுதியிருப்பார்.

அம்பையின் அவதானிப்புகளையும் அவருடைய எழுத்தில் இருக்கும் கூர்மையையும் ரசித்திருக்கிறேன். இந்த முன்னுரையும் அப்படியே. இந்தத் தொகுப்பில் சென்னைக்கு வந்து வாழ்க்கையை ஆரம்பித்த, வாழ்க்கையில் பிரகாசித்த பிரபலங்களைக் கோடிட்டுக் காண்பிக்கிறார் - உ.வே.சா முதல், பாரதியார், புதுமைப்பித்தன், மற்றும் மருத்துவம் படிக்க வந்த டாக்டர் முத்துலஷ்மி ரெட்டி, சென்னைக்கு வந்து பல அரசியல் கலந்துரையாடல்கள் நடத்திய காந்திஜி, என்று பட்டியலும் இவர்கள் சென்னை வந்தக் கதையும் என்று விவரங்களைத் தூவியிருக்கிறார்.

கிராமங்களிலிருந்து சென்னைக்குப் புலம் பெயர்தலின் ஆரம்பக்காலங்களைப் பற்றி விவரிக்கையில் அந்தக் காலத்தில் சென்னைப் பற்றி பிற ஊர்க்காரர்களின் கவலைகளையும், சென்னைக்கு புதிதாகக் குடியேறியவர்களின் பயங்களையும் நகைச்சுவையாக சொல்கிறார். 1925ல் வெளி வந்த " சென்னை நாகரீக காளி விந்தை" என்ற புத்தகத்தில் சென்னைப் பெண்கள் எப்படி கலாசாரம் இல்லாமல் - " நெற்றியில் குங்குமமில்லாமல் சாந்துப்பொட்டு இட்டுக்கொண்டு, உரக்கப்பேசி சிரித்துக்கொண்டு, என்று நவீனப் பெண்களைக் கிண்டல் செய்யும் அந்தக் காலக் கவிதையைச் சுட்டிக்காட்டுகிறார். பத்திரிகைகளிலும் இந்த " நவீன" பெண்கள் பற்றிய கேலிச் சித்திரங்கள் வந்ததையும் எடுத்துக்காட்டுகிறார்.

அந்தக் காலத்து சென்னையின் பூங்காக்களில் மாலையில் ரேடியோ பாடுமே அதைக்கூட குறிப்பிட்டுள்ளார். இசை மற்றும் கலாசார மையமாக சென்னை இருந்ததை விவரிக்கும்போது மியூஸிக் அகாடமி பற்றியின் ஆரம்பம் பற்றி எழுதுகிறார். 1928ல் ஆரம்பிக்கப்பட்டபோது இசைக் கச்சேரிகள் தவிர அங்கே இசை சம்பந்தமான பல சொற்பொழிவுகளுக்கும், கலந்துரையாடலுக்கும், பகிர்தலுக்கும் இடம் இருந்தது. ஆனால் இசையை இப்படி எந்தவிதமான "அமைப்புக்குள்ளும்" - institutionalization of music - கட்டுபடுத்தக்கூடாது என்ற கொள்கையில் இருந்த வீணை தனம்மாள் கிண்டலாகக் கேட்பாராம்: : " ஓ, அங்கே இசையைப் பற்றிப் " பேசுகிறார்கள்" என்று கேள்விப்பட்டேனே?" என்பாராம். இப்படி சுவாரசியமாகப் பல விஷயங்கள் ஆங்காங்கே தாளித்துக் கொட்டப்பட்டு அக்கறையாக எழுதப்பட்ட ஒரு முன்னுரை.

நிறையக் கருப்பு வெள்ளைப் படங்கள் - பழைய சென்னையைக் காண்பிக்க. என் கவனத்தை ஈர்த்த ஒன்று: குண்டும் குழியுமான ஒரு சாலையின் குறுக்கேக் கொட்டை எழுத்தில் துணியில் எழுதிய ஒரு பெரிய அறிவிப்பு: " காணவில்லை; பெயர் - தார் ரோடு. நிறம் - கருப்பு; அளவு - 75 அடி அகலம், ஒரு கிலோமீட்டர் தூரம்; தகவல் தெரிந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி - சென்னை மாநகராட்சி."

ஹ்ம்ம்.....இப்போதெல்லாம் இப்படிபட்ட நகைச்சுவையுணர்வுக்கே
" காணவில்லை" அறிவிப்புப் போட வேண்டியதாகிவிட்டது.

அம்பைக்கும் எனக்கும் ஒரு ஒற்றுமை. என்னைப்போலவே இவரும் பளிச்சென்று சொல்கிறார். " நான் சென்னையைச் சேர்ந்தவள் அல்ல. ( I did not belong to Chennai.), நான் வளர்ந்ததெல்லாம் பெங்களூரில்" என்று. சென்னைக்கு வெளியே வளர்ந்திருந்தாலும் சென்னை என் வாழ்க்கையில் ஊடுருவியிருந்தைப் போல இவருக்கும் இருந்திருக்கிறது. லஷ்மி சொல்கிறார்: " சென்னையில் வாழவில்லையே தவிர சென்னை வாழ்க்கையில் ஒரு அங்கம். காலையில் ஹிந்து பேப்பர்; காபி; ஆனந்தவிகடன், கல்கி.... அப்புறம் பண்டிகைகள் ; தீபாவளி பண்டிகை ரொம்ப முக்கியம். முதலில் விடிகாலையில் இருட்டில் எண்ணைக் குளியல் - பிறகு எங்கள் பங்கு பட்டாசுகள்; அதன் பிறகு சுடச்சுட இட்லி; பச்சைமிளகாயும் தேங்காயும் பொட்டுக்கடலையும் வைத்து அரைத்த சட்னியுடன் - கொஞ்சம் தாராளமாகவே - மொளகாப்பொடி எண்ணெய்; கமகமவென்று வறுத்த எள்ளு வாசனை ஆளைத்தூக்க. இதெல்லாம் வயிறு நிறைய சாப்பிட்டபின் எனக்கும் என் தம்பிக்கும் முக்கியமாக ஒரு வேலை காத்திருக்கும். எங்களுடைய உண்டியைக் குலுக்கி ஐந்தோ அல்லது ஆறு ரூபாயை எடுத்துக்கொண்டு மல்லேசுவரம் மார்க்கெட்டை நோக்கி நடைபோடுவோம் - பள பளவென்ற அட்டையுடன் வரும் ஆனந்தவிகடன் தீபாவளி மலர் வாங்க...."

இப்படி போகிறது அவர் பெங்களூரில், சென்னைப் பெண்ணாக வளர்ந்த விவரங்கள். வெளி நாடுகளில் / மாநிலங்களில் இருக்கும் பல குடும்பங்களில் இதே கதைதான்.

என் மகன்களிடமும் இந்த " தமிழ் நாட்டுக்கு வெளியே தமிழ் வாழ்க்கை முறை" பழகிவிட்டது. இன்று அமெரிக்காவில் இருந்தாலும், இப்போதே " ஊர்" திரும்பும் கேள்விகள் அவர்களுக்கும் வந்துவிட்டது. ஆனால் அவர்கள் "ஊர்" டில்லி. சென்னையல்ல. வீட்டில் தமிழ், வெளியில் ஹிந்தி என்ற வாழ்க்கை முறையில் ஊறியவர்கள். அவர்களுக்கு சென்னையில் பிடிமானம் இல்லை - எனக்கு என் தந்தையின் ஊரான தஞ்சாவூர் அந்நியமாகிப் போனது போல.
நான் பல வருடங்களுக்கு முன்னமேயே "ஊர்" திரும்பியிருக்க வேண்டுமோ? ஒரு வேளை என் மகன்கள் அமெரிக்காவிலேயேத் தொடர்ந்து இருக்க நேரிட்டால் அடுத்தத் தலைமுறையினருக்கு இந்தியாவே அந்நியமாகிப் போனால் ஆச்சரியப்படுவதற்கில்லை. அவர்களிடம் தமிழர் வாழ்க்கை முறை இருக்கலாம். ஆனால் வாழ்க்கை முறை வேறு. ஊர்ப்பாசம் வேறு. வாழ்க்கை முறை / கலாசாரம் என்பதெல்லாம் பூகோள எல்லைகளைக் கடந்தவை.

அப்படி என்றால், ஊர்ப்பாசம் என்பது பூகோள எல்லைகளுக்குக் கட்டுப்பட்டதோ?

இன்னும் புரியவில்லை. ஊர்ப்பாசம் எப்படி வருகிறது? பிறந்ததாலா? வளர்ந்ததாலா? பழகிப்போனதாலா? நம் ரசனைக்கு ஏற்றதாக ஒரு ஊர் இருப்பதாலா? வளர்ந்தப் பாசமா?, பிறந்தப் பாசமா? அல்லது பிழைப்புப் பாசமா? எந்த ஈர்ப்பு அதிகம்?

இதுபோல், இந்தியப் பெற்றோர்களுக்கு வெளி நாட்டில் பிறந்த குழந்தைகளுக்கு தேச பக்தி எந்த இடத்தில் இருக்கும்? பெற்றோர்களின் தேசத்திலிருந்து அவர்கள் தேச பக்தி வித்தியாசமாக இருக்கும்போது அன்பினால் பிணைக்கப்பட்ட அவர்கள் உறவில் அரசியலால் விரிசல் வர வாய்ப்பு உள்ளதோ? இரு வேற்று நாட்டு மனிதர்களின் திருமண பந்தத்திலும் இதே கேள்விகள்.

சுருக்கமாகச் சொன்னால் பூகோள எல்லைகளைத் தாண்டி எழுந்த /வளர்ந்த உறவுகள், மனிதன் வகுத்த பூகோள / அரசியலின் எல்லைகளின் பாசத்தில் ( ஊர்ப்பாசம் / தேசப்பாசம்) கட்டுப்பட வேண்டுமா? இந்தக் கட்டுப்படலின் எல்லை எங்கே நிற்கிறது?

தொடரும் கேள்விகள்.......

நன்றி: தமிழோவியம்.

Sunday, October 30, 2005

தீபாவெடி??

டில்லியில் யார் இந்தச் செயலை செய்திருப்பார்கள் என்று இதுவரை தெரியவில்லை. ஸ்ரீகாந்த் தன் வலைப்பதிவில் பட்டியலிட்டுக் கூறியுள்ளதுபோல், காரணம் எதுவும் நிஜமாகவே தென்படவில்லை. இந்தியா பாகிஸ்தான் உறவு - பூமாதேவிக்கு நன்றி - இதைவிட சுமூகமாக இருக்க முடியாது. சொல்லப்போனால், பூகம்பத்தால் குலைந்து போன trenches ( போர் வீரர்கள் பதுங்கும் குழிகள்?) இவற்றை மீண்டும் கட்ட உதவி செய்யவும் இந்தியா முன்வந்தது. பாகிஸ்தானின் trenches உபயோகம், இந்தியாவுடன் போரிடுவதற்குதான் என்பதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும் !
இப்படி இரு நாடுகளுக்குமிடையே ஒரு அமைதி நிலவும்போது பாகிஸ்தான் தூண்டிவிட்ட காஷ்மீர் தீவிரவாதிகள் இந்தச் செயலை செய்திருப்பார்கள் என்று சொல்ல முடியாது. புயல், பூகம்பம் என்று இயற்கைதான் சீற்றமாக இருக்கிறாள். அரசியல் மந்தமாகதானே இருக்கிறது? - ஈராக் எண்ணை விற்ற சமாசாரத்தில் மத்திய அமைச்சர் நட்வர்சிங்கிற்குப் பங்களிப்பு இருக்கிறது என்று சொல்லும் Volcker Report தவிர வேறு பெரிய அரசியல் நிகழ்வு எதுவும் இருக்கவில்லை.

டில்லியில் பல காரணங்கள் / ஊகங்கள் பேசிக்கொள்கிறார்கள். அவற்றில் ஓரளவு உண்மை இருக்கலாமோ என்று தோன்றுகிறது. ஆனால், மொத்தத்தில் யாருக்கு இவ்வளவு கோபம் என்று இன்னும் திட்டவட்டமாகப் புரியவில்லை.

இத்தனை கோரமான சம்பவத்திலும் ஒருவரைக் கட்டாயம் பாராட்டத் தோன்றியது. கோவிந்தபுரியில் இருந்த அந்த டெல்லி டிரான்ஸ்போர்ட் பஸ் டிரைவர். பயணிகள் உட்கார்ந்து பஸ் கிளம்பும் முன்பு ஆளில்லாமல் ஒரு பை பஸ்ஸில் கிடப்பதைக் கவனித்து எச்சரிக்கையடைந்து அவர் உடனே எல்லோரையும் கீழே இறங்க சொல்லிய அடுத்த சில வினாடிகளில் பஸ் வெடித்தது. டிவியில் பயணிகள் ஒவ்வொருவரும் நன்றியுடன் அந்தப் பஸ் டிரைவரைப் பற்றி பேசினார்கள்.

இருந்தாலும் டில்லி முதலமைச்சர் சொல்லியதுபோல், இது மிகவும் ஜாக்கிரதையாக முன்கூட்டியே திட்டமிட்ட செயல் - பண்டிகைக் காலம் - எல்லோரும் மும்முரமாக கடைகளைச் சுற்றும் சமயம் - அதுவும் சரோஜினி நகர், பஹார்கஞ்ச் என்று மத்தியதர மக்கள் அதிகம் வலம் வரும் சந்தைகளைக் குறிபார்த்துத் தாக்கியிருக்கிறார்கள்.

என்று விடுதலை ? - ஒன்றுமறியாத அப்பாவி மக்களைக் கொல்லும் தீவிரவாதத்திலிருந்து?

இதன் நடுவே நாளை மறு நாள் தீபாவளி. பல இல்லங்கள் புயலாலும், பூகம்பத்தாலும், குண்டு வெடிப்பினாலும் கலங்கியிருக்கும் இந்த வேளையில் மகிழ்ச்சியான தீபாவளி என்று சொல்லத் தோன்றவில்லை.

ஆனால் எல்லாவற்றையும் மீறி ஒளிக் கீற்றுக்கள் நம் மனங்களில் ஒளிரட்டும். நம்பிக்கை வளரட்டும். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

Thursday, October 27, 2005

மழை, வெள்ளம்.......இணையம்....

பாலத்துக்குக் கீழே நிறைய தண்ணீர் சென்றுவிட்டது - தமிழ்மணம், தமிழ் நாடு இரண்டிலுமே - என்றுதான் ஒரு மாத இடைவேளைக்குப் பின் பதியும் என் இந்தப் பதிவை ஆரம்பிக்க வேண்டும். திருச்சி, தொட்டியம் அருகே கிராமத்துக்கு சென்றுவிட்டு சென்னைத் திரும்பிய மறு நாள் அங்கே எல்லாம் வெள்ளக்காடாக இருப்பதைப் பார்த்ததும் ஒரு நாள் தாமதமாக வந்திருந்தால் மாட்டிக் கொண்டிருப்போமே என்றுதான் தோன்றியது. நல்ல வேளைத் தப்பித்தோம் என்ற சுய நல உணர்வைத் தடுக்க முடியவில்லை.

இரண்டு மாதம் முன்புதான் அங்கே அமெரிக்காவில் நியூ ஆர்லின்ஸ் புயலைப் பார்த்துவிட்டு இங்கே வந்தால் இங்கே பல வருடங்களுக்குப் பிறகு இப்படி ஒரு வெள்ளம். படகுகளில் பெட்டிப் படுக்கைகளுடனும் குழந்தைகள் மற்றும் குடும்பத்துடனும் பயணம் செய்யும் மக்கள். ஊரிலிருந்து வந்தவுடன் வந்தவுடன் முதல் வேலையாக கிராமத்தில் இருக்கும் நண்பர்கள் வீட்டுக்குப் போன் போட்டு விசாரித்தபோது அவர்கள் குரலில் இருந்த கவலையும் பயமும் என்னையும் தொற்றிக்கொண்டது. நல்ல வேளையாக மறு நாள் தண்ணீர் சற்று வடிந்துவிட்டது என்று கேட்டதும் சற்று நிம்மதி. ஆனாலும் பாவம் அவர்களுடைய வாழைத்தோட்டங்களும் வயல்களும் நீரில் மூழ்கியிருக்கும். ஆனால் கையைப் பிசைந்து கொண்டு நிற்காமல் பலர் வெள்ளத்தடுப்பு முயற்சிகளை மேற்கொண்டதைப் பார்க்கும்போது அவர்கள் சுறுசுறுப்பைப் பாராட்டத் தோன்றியது. ஆனால் NDTV யின் செய்தியாளர்கள் செய்தியுடன் கூடிய சம்பாஷணைதான் கடுப்பை ஏற்றியது. நுபுர் பாசு, மாயா சர்மாவிடம், " சரி இனிமே அவர்கள் ( தமிழகமக்கள்) 'தண்ணீர் கொடுங்கள்' என்று கேட்கமாட்டாங்களே? " என்ற தொனியில் பேசியது அநாகரித்தின் எல்லை.

வெள்ளம் எங்கோ திருச்சி போன்ற மாவட்டங்களில் மட்டுமல்ல. பயங்கர மழையினால் சென்னையிலும் இன்று இதே கதைதான். பல இடங்களில் மின்சாரம் இல்லை. ( ஏதோ அதிர்ஷ்டவசமாக என் வீட்டில் இன்னும் மின்சார பகவான் கருணை இருக்கிறது.) சாலைகள் நிலை சொல்லவே வேண்டாம். தன்ணீர் நிரம்பி, மரங்கள் விழுந்து ஒரே குழப்பம்தான்.

மழை, வெள்ளம் இவற்றுக்கிடையே இந்த வாரம் ஒரு விஷயம் என் கவனத்தை ஈர்த்தது.

தற்போது இணையத்தின் வீச்சு, மற்றும் தாக்கம் இவைகளைப் பற்றியும், இணையத்தை சர்வதேச அளவில் ஏதாவது கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கான முயற்சிகள் பற்றியும் ஊடகங்களில் விவாதிக்கப்பட்டு வருகின்றன. அடுத்த தகவல் சமூகத்தின் சர்வதேச உச்சி மாநாடு வரும் நவம்பர் மாதம் துனிசியா நாட்டின் ( வட ஆப்பிரிக்காவில் லிபியாவுக்கும் அல்ஜீரியாவுக்கும் மேலே இருப்பதாக இந்த வரைபடம் காண்பிக்கிறது ) தலைநகரான துனிஸ்ஸில் நடக்க இருக்கிறது. இந்த மாநாட்டின் முதல் கட்டம் ஸ்விட்சர்லாந்தின் ஜெனிவாவில் 2003ல் நடந்தது. இந்த விஷயம் பற்றி மேலும் அறிய இங்கே பாருங்கள்.

இணையத்தின் ஆரம்ப கால வளர்ச்சிகள் அமெரிக்காவில் நிகழ்ந்தது என்பதால் அதைக் கட்டுபடுத்தும் அஸ்திரங்கள் தன்னிடமே இருக்க வேண்டும் என்று அமெரிக்கா நினைக்கிறது. இதற்கு மற்ற உலக நாடுகள் - ஐரோப்பிய நாடுகள் உள்பட - ஆட்சேபம் தெரிவிக்கின்றன. இணையம் உலகெங்கும் பரவலாக படர்ந்து நிற்பதால் ஐ. நா சபையின் கண்காணிப்பிலோ அல்லது வேறு ஒரு சர்வதேச கண்காணிப்பாளரை ஏற்படுத்தியோ இணையம் ஒரு சர்வதேச கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்று மற்ற நாடுகள் எதிர்பார்க்கின்றன. அப்படி சர்வதேச அமைப்பின் கைகளில் இணையத்தின் ஆதிக்கம் இருக்குமேயானால் வணிகம், பாதுகாப்பு என்று பல அம்சங்களிலும் பரவியிருக்கும் இணையத்தில் சுலபமாக ஓட்டைகள் ஏற்பட்டு இணையம் பாதுகாப்பில்லாமல் ஆகிவிடும் என்று அமெரிக்கா சொல்லும் காரணத்தை மற்ற நாடுகள் நொண்டிச்சாக்காகதான் பார்க்கின்றன. அப்படி செய்தால் இணையத்தின் மீது தனக்கு இருக்கும் ஆதிக்கம் நீர்த்துப் போய்விடும் என்பதுதான் அமெரிக்காவின் முதல் கவலை ( - ICANN (Internet Corporation for Assigned Names and Numbers - என்ற இணைய விலாசங்கள் கொடுக்கும் முக்கிய அமைப்பு அமெரிக்காவில்தான் இருக்கிறது; தவிர பல இணையத் தொடர்புகளின் மூல சர்வர்களும் அங்கேதான் இருக்கின்றன -) என்று இதர நாடுகள் நினைக்கின்றன. இணையத்துக்கு அமெரிக்கா மட்டுமே மூலஸ்தானமாக இருக்கும் நிலை மாறி அமெரிக்காவுக்கு பதிலாக மற்றொரு மாற்று இணைய நிர்வாக அமைப்பு வர வேண்டும் என்ற கோரிக்கை வேகமாக வலுப்பெற்று வருகிறது. ஆரம்பித்தது அமெரிக்காதான் என்றாலும் இன்று இணையம் உலகமெங்கும் இன்றியமையாத தகவல் மையமாகிவிட்டதால் அமெரிக்கா இணையத்தின் மேல் தான் வைத்திருக்கும் "உரிமையை" (???) தளர விட்டுவிட வேண்டும் என்பது உலக நாடுகளின் கருத்து. அப்படி அமெரிக்கா ஆட்சேபித்தால் மாற்று அமைப்பு உருவாக வேண்டும் என்பது அடுத்த கட்ட சிந்தனை. வரும் மாநாட்டில் எப்படிபட்ட தீர்மானம் உருவாகிறது என்று பார்க்க வேண்டும். இணையத்தில் எல்லாவற்றுக்கும் மாற்று அமைப்பு தேடும் காலம் போலிருக்கிறது இது.

Saturday, September 24, 2005

இடைவேளை

ஊருக்குத் திரும்புவதிலும் இன்னும் சில சொந்த வேலைகளிலும் மூழ்கி இருப்பதால் இன்னும் கொஞ்ச நாளைக்கு இங்கிருந்து ஜூட்..... ஆனால் திரும்பி வரும்வரை இங்கே வருபவர்களுக்குக் கொஞ்சம் அசைபோட, ஆகஸ்ட் மாத இதழ் திசைகளுக்கு எழுதியதை இங்கு மீண்டும் பிரசுரிக்கிறேன்.

சிறிய இடைவேளைக்குப் பிறகு மீண்டும் சந்திப்போம்.


இதுலே கொஞ்சம்; அதுலே கொஞ்சம்..... அமெரிக்க கிராமீய நகர்ப்புறங்கள்.


அது ஒரு பஸ் டெர்மினஸ். புற நகர் ரயிலிலிருந்து இறங்கியவுடன் அருகிலேயே இருந்தது. ஒரு எட்டு நடைப் போட்டால் போய் விடலாம் என்று சாலையை இருபக்கமும் பார்த்துவிட்டு ( அப்படிப் பார்க்கவும் என்று போட்டிருந்ததே.) கடந்து இரண்டடி போயிருப்பேன் - நான் போக வேண்டிய பஸ், வந்து நின்றது. ஓடிப்போய் ஏற முயன்றபோது ஓட்டுனர் இறங்கினார். சிரித்துக்கொண்டே இன்னும் ஒரு பத்து நிமிஷம் பொறுங்கள். என் நேரம் இன்னும் வரவில்லை என்று சொல்லிவிட்டு நடந்தார். சரியாக பத்து நிமிஷம் கழித்து அவர் வந்தவுடன், பஸ்சில் ஏறி, நான் போக வேண்டிய நிறுத்தத்தை அவரிடம் குறிப்பிட்டு, இடம் வந்தவுடன் எனக்கு அறிவிக்க சொல்லி சீட்டில் போய் உட்கார்ந்தேன். வண்டியில் நான் மட்டும்தான். போகப்போக ஏதோ ஓரிரண்டு பேர். ஆனால் வெகு நேரம் ஆகியும் நான் இறங்க வேண்டிய நிறுத்தம் பற்றி ஓட்டுனரிடமிருந்து அறிவிப்பு வரவில்லை. கடைசி டெர்மினஸ்ஸ¤ம் வந்துவிட்டது. எல்லோரும் இறங்குவதைப் பார்த்து நானும் இறங்க வேண்டியதுதான் என்று முடிவுகட்டி இறங்கும்முன் ஓட்டுனரிடம் விசாரித்தேன் - என் பஸ் ஸ்டாப் வரவேயில்லையே என்று. அப்போதுதான் அவருக்கு ஞாபகம் வந்தது போலும். தலையில் லேசாக ஒரு தட்டுத் தட்டிக்கொண்டு "அடடா நீங்கள் இரண்டு ஸ்டாப் முன்னாலேயே இறங்கியிருக்க வேண்டும். ஒன்று செய்யுங்கள். இதோ இன்னும் இருபது நிமிடத்தில் என் அடுத்த டிரிப் ஆரம்பிப்பேன். நீங்கள் இதோ இந்தக் கடைவீதியில் ஒரு ரவுண்ட் போய் சரியாக 17 நிமிடங்களில் வந்து விடுங்கள். உங்களை அந்த பஸ் ஸ்டாப்பில் கொண்டு விடுகிறேன். ஆனால் சரியாக 17 நிமிடம். ரொம்பக் கடைகளில் உள்ளே போகாதீர்கள் - காணாமல் போய்விடுவீர்கள்" என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.

முன் ஜாக்கிரதை முத்தக்காவாக நான் 10 நிமிடத்திலேயே திரும்ப வந்து பஸ் அருகில் நின்று கொண்டேன். ஓட்டுனர் வந்தார். சீட்டில் உட்கார்ந்தவுடன் வண்டியை ஸ்டார்ட் செய்யாமல் ஜன்னல் வழியே வெளியே பார்த்துக்கொண்டிருந்தார். என் முகத்தில் தொக்கி நின்ற கேள்விக்கு பதில் சொல்வதுபோல், " இங்கே இன்னொரு பெண்மணி நின்று கொண்டிருந்தார். அவரைக்காணோமே என்று பார்க்கிறேன். ஆனால் எனக்கு நேரமாகிவிட்டதே" என்று கைக்கடிகாரத்தை ஒரு முறை பார்த்துவிட்டு, " ஹ்ம்ம்.. பாவம் அவருக்கு பஸ் அட்டவணை ஞாபகம் இருந்திருக்கும் என்று நினைக்கிறேன், " என்று சொல்லிவிட்டு தயங்கித் தயங்கி ஜன்னல் வழியே பார்த்துக் கொண்டே வண்டியை ஸ்டார்ட் செய்யத் தொடங்கினார். பிறகு சற்று நகர்ந்தும் அந்தப் பயணி வருவதாகத் தெரியவில்லை. வண்டிக்கு வேகம் கொடுத்து நகர ஆரம்பித்தவுடன் என் பக்கம் திரும்பினார். " யூனிவர்சிடி அவென்யூவில் இந்த பஸ் நிற்காது. அதற்குப் பக்கத்து சாலையில்தான் பஸ்ஸ்டாப். நான் ஒரு வேளை மறுபடி மறந்துவிடுவேன். நீங்கள் ஒன்று செய்யுங்கள். நான் இதோ இந்த சாலையில் நேரே போய், ஒரு முறை வலது பக்கம் திரும்புவேன். பிறகு இரண்டு முறை இடது பக்கம். இரண்டு முறை இடது நான் திரும்பியவுடன், உங்கள் பஸ் ஸ்டாப். உடனே எனக்கு ஞாபகப்படுத்தி விடுங்கள் " என்று ஜாக்கிரதையாக அறிவித்துவிட்டார். நானும் பஸ் செல்லும் இடம் வலம் திருப்பங்களை மனசுக்குள் குறிக்க ஆரம்பித்தேன். ஆனால் அவராவது மறப்பதாவது? ஒவ்வொரு திருப்பத்திலும் ரன்னிங் கமெண்டரி. இதோ இதற்கு அப்புறம் இங்கே... அப்புறம் இங்கே என்று பேசியபடி.

நிறுத்தம் வருவதற்கு ஒரு நிமிடம் முன்பு எனக்கு அடுத்தபடியாகத் திரும்பிப் போக வழி சொல்ல ஆரம்பித்தார். "இங்கே இறங்கியவுடன் நீங்கள் நீள வலது திரும்பினால் உங்கள் யூனிவர்சிடி அவென்யூ ஷாப்பிங். நிறைய செலவு செய்துவிட்டு பர்சில் பணம் காலியானபிறகு திரும்பிப்போக வேண்டுமில்லையா? மறுபடி இவ்வளவு தூரம் நடந்து இதே நிறுத்ததிற்கு வர வேண்டாம். அங்கேயே, தெருக்கோடியில் வலது திரும்பி, ஒரு இடது மாறினால் அடுத்த பஸ். அரை மணிக்கு ஒன்று. ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்" என்று நான் இறங்கி நடக்கும் வரை அறிவுரை. விட்டால் ஷாப்பிங் கூடவே வந்து அடுத்த பஸ்ஸில் ஏற்றிவிட்டுதான் போவார் போலிருந்தது.


இதுதான், - இந்த அக்கறைதான் - நகர்ப்புற மக்களுக்கும் கிராம - சிறிய நகர மக்களுக்கும் வித்தியாசம். நம் பக்கங்களிலும் சிறு ஊர்களில் இதுபோன்ற ஒரு அக்கறையைப் பார்த்திருக்கிறேன்.

சிறிய நகரங்கள், கிராமங்கள் என்றால் அங்கிருக்கும் மக்கள் உலகெங்கும் ஒரே மாதிரிதான் என்று நினைக்கிறேன். அடுத்தவரிடம் ஒரு கரிசனம், பொதுவாக எல்லாவற்றிலும் ஒரு அவசரமில்லாத நிதானமான வாழ்க்கை முறை. இப்படிதான் இன்னொரு முறை ஒரு ஓட்டுனர் முன் சீட்டில் உட்கார்ந்திருந்த பயணியுடன் ஊர் வம்பெல்லாம் பேசிக்கொண்டே வந்தார். கலிபோர்னியா மாகாண கவர்னர் Arnold Schwarzenegger ல் ஆரம்பித்து, ஈராக் போர், புஷ், வேலையில்லாப் பிரச்சனை என்று பல கோணங்களிலும் அரட்டை ஜோராக போய்க்கொண்டிருந்தது.

சிறிய ஊர் என்றாலே மானாவாரியாக நேரம், இடம் இரண்டுமே கொட்டிகிடக்கும். அமெரிக்க சிறு நகரங்கள் விதிவிலக்கல்ல. முதன்முதலில் சென்ற நவம்பரில் இங்கு வந்தபோது அமெரிக்கா என்றாலே நியூயார்க், போன்ற நகரங்களின் வானளாவிய கட்டிடங்கள்தாம் என் கற்பனையில் இருந்தன. ஆனால் இங்கு சன்னிவேல் நகரில் மருந்துக்குக்கூட ஒரு "வானளாவிய" கட்டிடம் கிடையாது. எவ்வளவு பெரிய Mall என்றாலும் எல்லாம் ராட்சஸ சைசுக்கு ஒரு பெரிய கட்டிடம் ஒன்றுதான். மிஞ்சிப்போனால் கீழேயும் மேலேயும் ஓரிரண்டு தளங்கள். அடுக்கே கிடையாது. வீடுகளும் அப்படியே. டவுன் டவுன் எனப்படும் வணிகத் தெருக்களில் ஆங்காங்கே உயர்ந்த கட்டிடங்கள் ஓரிரண்டு தென்படலாம். அகண்ட சாலையில் போகும்போது சுத்தமாக நீல நிறத்தில் வானம் ( பின்னே, வேற என்ன நிறத்தில் இருக்கும் என்று எதிர்பார்த்தேன்!) பார்த்துக்கொண்டு போவதே சுகமாக இருக்கிறது. இன்றைய நகர்ப்புற வாழ்க்கையில் வானமும், சூரியோதயமும், அஸ்தமனமும் தெரிவதே பெரிய விஷயமாகிப்போய்விட்டதே.

இங்கு சிலிகான் பள்ளத்தாக்கில் உள்ள ஊர்கள் எல்லாமே ஓரளவு இயற்கையை ஒட்டி பெயரிடப்பட்டுள்ளது. இங்குள்ள நம் மக்கள் வேடிக்கையாக சொல்வார்கள். " இங்கு முதலில் குடியேறியவர்கள் வந்தவுடன் கண்களில் இங்குள்ள சூரிய வெளிச்சம் பிரமாதமாகப் பட்டிருக்கும். அதனால் "Sunnyvale" என்று அழைக்க ஆரம்பித்திருப்பார்கள். அதுபோல், பக்கத்து ஊரான Mountain View வில் எங்கிருந்து பார்த்தாலும் சுற்றிலும் உள்ள மலைகள் பார்க்க அருமையாக இருக்கிறதல்லவா? அதனால் Mountain View என்று பெயர் வந்திருக்கும்." என்று சொல்வது வழக்கம். பெயர் காரணம் ஒரு பக்கம் இருக்கட்டும். பார்க்க ரம்மியமாக இருக்கும் 1500 சதுர மைல் பரப்பளவு கொண்ட சிலிகான் பள்ளத்தாக்கில் சன்னிவேல், மௌண்டன் வியூ போன்று, லாஸ் கடோஸ், சாண்டா கிளாரா, பாலோ ஆல்டோ, என்று இன்னும் சில சிறு நகரங்கள் உள்ளன. இவையனைத்தும் சாண்டா கிளாரா மாவட்டத்தில் ( Santa Clara County) அமைந்துள்ளது -( நாடு, மாகாணம், கௌண்டி, சிறு நகரம், கிராமம் )

சுமார் ஒரு மில்லியனுக்கும் மேல் ( 1,678,421) மக்கள் தொகை உள்ள இந்த மாவட்டத்தில் இந்தியர்களின் எண்ணிக்கை 4 சதவிகிதத்திற்கு மேல் !! அமெரிக்காவிலேயே இந்த சாண்டா கிளாரா மாவட்டம்தான் இந்தியர்களின் concentration அதிகம் என்று புள்ளி விவரம் கூறுகிறது. ஆனால் இதற்கு புள்ளிவிவரமே வேண்டாம். ஆங்காங்கே உள்ள பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள், கடைவீதி என்று ஒரு நடை நடந்தாலே போதும் எதிரே குறைந்தது பத்து பேராவது இந்தியராக அல்லது இந்தியத் துணைக்கண்டத்திலிருந்து ஒருவராக இருப்பார். இந்த பள்ளத்தாக்கு நகரங்களின் சரித்திரம் என்று பார்த்தால் அது ஆரம்ப கால Ohlone என்று சொல்லப்படுகிற ஆதிவாசி அமெரிக்க இந்தியர்களில் தொடங்குகிறது. 1972 ம் ஆண்டு நடந்த ஒரு அகழ்வாராய்ச்சியில் கி.மு. 3000 ஆண்டிலிருந்தே இந்தப் பள்ளத்தாக்கில் ஆதிவாசிகள் குடியிருந்ததைக் கண்டறிந்திருக்கிறார்கள். இதையும் இங்கே லாஸ் கடோஸ் என்ற ஊரில் ஒரு பெரிய பாலத்திற்கு அருகில் சுவர் சித்திரமாக ( Mural) வரைந்து வைத்திருக்கிறார்கள். அந்தச் சித்திரத்தில், நாலைந்து குடிசைகளின் பிண்ணனியில் ஒரு ஆதிவாசிக் குடும்பம், நாய்கள் பன்றிகள் புடைசூழ இருக்கிறது. ஆதிவாசிகளுக்குப் பின் இங்கு உலகின் எல்லா திசைகளிலிருந்தும் மக்கள் குடியேற ஆரம்பித்தார்கள். ஸ்பெயின் நாட்டிலிருந்து வந்த குடியேற்றம் முக்கியமானது. இதனால் ஆங்கிலம் பொதுவாக புழங்கும் மொழியானாலும் இன்றும் இங்கும் பல பொது இடங்களில் மும்மொழி பின்பற்றப்படுகிறது. ஆங்கிலம், ஸ்பானிஷ் மற்றும் ·பிரென்ச். இந்த ஸ்பானிஷ் குடியேறிகளின் முதன்மை வாழ்க்கை முறை விவசாயம் மற்றும் பண்ணைகளில் வீட்டு, விவசாய மிருகங்கள் பராமரித்தல். ( cattle ranching) என்று இருந்திருக்கின்றனர். கோதுமையும் பார்லியும்தான் முதன்மை தான்யங்கள். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தான்யங்களிலிருந்து, பழச் சோலைகள், காய்கறி பண்ணைகள் என்று பயிரினங்கள் பெருகின. அந்தக் காலத்திலேயே ஆப்பிரிக்காட் பழ விளைச்சலை நன்குப் பதப்படுத்தி உலர்ந்த பழங்களாகவும், சல்பர் போட்டு பழுக்க வைக்கப்பட்ட பழங்களாகவும் பேக் செய்து வியாபாரம் செய்திருக்கிறார்கள். அழகுற, சேதம் வராமல் பேக் செய்வதைத் தனி கலையாகவே, தனி தொழிலாகவே செய்திருக்கிறார்கள். அதோடில்லை. 1880களிலேயே குளிர்ப்பதனபடுத்தப்பட்ட ரயில் பெட்டிகளில் பழங்கள் விற்பனைக்கு எடுத்துச்செல்லப்பட்டிருக்கின்றன.சரித்திரத்தைப் பாதுகாக்கும் வகையில் சன்னிவேல் நூலகத்தில் பல தலைமுறையினராக இங்கே இருப்பவர்களின், இருந்தவர்களின் குரல்களிலும் இதர எழுத்து வடிவங்களிலும், இந்தப் பள்ளத்தாக்கின் சரித்திரம், விவசாயப் பொருளாதாரத்திலிருந்து இன்று உலகின் தொழில் நுட்ப இதயமாக மாறியது வரையிலான மாற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. உதாரணமாக வின்ஸ் காலா என்கிற உள்ளூர்காரர் சொல்கிறார். "என் தந்தை சிசிலியிலிருந்து 1920ல் உலகப் போருக்குப் பின்னர் இங்கு வந்தார். முதலாம் உலகப் போருக்கு சென்றிருந்த அவர் ஊர் திரும்பும்போது பெரிதாக சொத்து எதுவும் அங்கே அவருக்கு ஒன்றும் காத்திருக்கவில்லை. அதனால் அமெரிக்கா வந்துவிட்டார். என் அம்மாவின் அப்பா இப்படி இங்கேப் பிழைப்புக்காக குடியேறிய இளைஞர்களுக்கு என்றே உருவாக்கியதுபோல் நிறையப் பெண்களைப் பெற்றிருந்தார். அதில் ஒருவர் என் அம்மா. விவசாயக் குடும்பத்திற்கு ஏற்ற மாதிரி வளர்ந்த பெண். அப்பாவுடன் பண்ணை வாழ்க்கை அவருக்கு மிகப் பிடித்திருந்தது. பண்ணையில் கோழி, கோழிகளின் எச்சம் தோட்டத்திற்கு உரம் என்று சரியான கிராம வாழ்க்கை. அப்பா ஒயின் உற்பத்தியும் செய்தார். எங்களுக்கு வேண்டியது போக பாக்கி வெளியே விற்பார். அந்தக் காலத்தில் ஒரு காலன் விலை, 50 செண்ட்தான். ஆனால் பீப்பாயை வாங்குபவர்கள் கொண்டு வரவேண்டும். 1920ல் பொருளாதாரத் தேக்கம் வருவதற்கு முன்னால் அப்பா, இப்போது பழைய சான்பிரான்ஸிஸ்கோ சாலையருகே, டாசன் மூலை இருக்கிறதே அதற்கு வடக்கே ஒரு 10 ஏக்கர் நிலம் வாங்கிப் போட்டிருந்தார். முதலில் அங்கே வெறும் பழத் தோட்டம்தான் போட்டிருந்தார். பிறகுதான் அதில் வீடும் கட்டிக்கொண்டார். 2500 டாலரில் ஐந்து பெரிய அறைகளும் கீழே பேஸ்மெண்டும் கூடிய பெரிய வீடு. இப்போ அந்த விலைக்கு ஒரு கதவு கூட கிடைக்காது."இப்படி போகிறது அவரது கதை - அதன் மூலம் ஊர் வளர்ந்த கதையும்.இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர்தான் இந்த விவசாயமும், பழ உற்பத்தி மற்றும் பொட்டலம் கட்டும் தொழிலும் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்தது. காரணம், போருக்குத் தேவையான ஆயுத உற்பத்தியில் கவனம் சென்றது. இதுவே பின்னர் விவசாய சாதனங்கள் உற்பத்தி என்றும் விரிவடைந்தது. நூலகத்தில் 1875ம் வருடம் பிரசுரிக்கப்பட்ட ஒரு கையேட்டில் சன்னிவேலின் முதல் இரும்புப் பட்டறையான Joshua Hendy Iron works என்ற பட்டறை, தான் தயாரித்து விற்பனை செய்த விவசாயக்கருவிகளைப் படங்களுடன் விளம்பரம் செய்துள்ளது. அதே கையேட்டில் கிராமத்தில் உள்ள ஒவ்வொருவர் பெயர், அவர் தொழில், - விவசாயி, தச்சுர், கொல்லன், கணக்கர் என்ற ரீதியில் - அவர் இருக்கும் வீடு, இருக்கும் தெரு என்று ஒரு பட்டியல் உள்ளது. தொலைபேசி வந்திருக்காத காலம். ஆனால் கிட்டதட்ட அதுபோன்ற விவரங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளது.1880 களில் மார்டின் மர்பி என்பவர் இங்குப் பெரும் நிலத்தை வாங்கி எஸ்டேட் நிறுவியதும், அவரது வாரிசுகள் பிறகு பங்குபோட்டு பிரித்து பிறகு சன்னிவேல், மௌண்டன் வியூ போன்ற பல நகரங்களாக உருவெடுத்ததும், அடுத்துத் தொடர்ந்த கதை.இரண்டாம் உலகப்போருக்குப் பின், உணவு உற்பத்திக்கான இயந்திரங்கள் தயாரிப்புக் குறைந்து ஆயுதங்களும் மற்ற இயந்திரங்களும் தயாரிக்கும் நிறுவனங்கள் வர ஆரம்பித்தன. புகழ் வாய்ந்த விமானத் தயாரிப்பாளர் Lock Heed Martin 1950 களில் இங்கு சன்னிவேலில் தொடங்கியதும் கிராமம் சிறு நகரமாக மாறிற்று. தொழிற்சாலையில் வேலை செய்ய வெளியிடங்களிலிருந்து மக்கள் வர ஆரம்பிக்க தனித்தனி வீடுகள் மாறி " கூட்டுக் குடியிருப்புகள்" ( Condominiums) வர ஆரம்பித்தன.

பழமுதிர்சோலையாக இருந்து கன இயந்திரத் தயாரிப்பு ஸ்தலமாக உருவெடுத்த இந்த சாண்டா கிளாரா மாவட்ட நகரங்கள், சிலிகான் பள்ளத்தாக்காக மாறியது ஸ்டான்போர்ட் மாணவர்கள் இருவர் - Hewlett & Packard முதன் முதல் தங்களின் தொழில் நுட்ப நிறுவனத்தை ஒரு கேரேஜில் தொடங்கிய பின்தான். இன்றும் இந்த காரேஜ் அப்படியே பாதுகாக்கப்படுகிறது. இந்த ஜூலை மாதம் இதை அப்படியே பழைய நிலையிலேயே பாதுக்காத்து புதுப்பிக்க, பல ஆயிர டாலர்கள் செலவில் புது முயற்சியும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.அவர்கள் பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்த தொழில் நுட்ப ஆர்வம், பிறகு சட்டென்று மழைக்கால காளான் போல குப்பென்று அக்கம்பக்கம் முளைக்க ஆரம்பித்தது. ஒரு பக்கம் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் உற்பத்தி செய்யும் ஆராய்ச்சி மாணவர்கள்; இன்னொருபுறம் ஏற்கனவே வெற்றிகரமாக இயங்கும் சிலிகான் தொடர்புடைய தொழில் நுட்ப நிறுவனங்கள். இரண்டுமாக சேர்ந்து இங்கே மேன் மேலும் புதியவர்கள் ஆர்வத்தோடு புதிய நிறுவனங்கள், புதிய துறைகளில் ஆரம்பிக்க, இன்று சாண்டா கிளாரா பள்ளத்தாக்கும், சான்பிரான்ஸிஸ்கோவின் விரிகுடாப் பகுதியும் ( Bay Area) இணைந்து சிலிகான் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படும் அளவு உரு மாறியுள்ளது. இப்படி இந்த இடத்தில் மட்டும் அப்படி என்ன வித்தியாசமாக இருக்கிறது? ஏன் அமெரிக்காவில் மற்ற பல்கலைக்கழகங்கள் இருக்கும் இடங்களில் இப்படி கணினி சம்பந்தமானத் தொழில் பெருகவில்லை என்று ஒரு கேள்வியும் அவ்வப்போது எழுகிறது. இந்தப் பகுதி கணினி சார்ந்த தொழில் நுட்பத்தில் சிறக்க ஒரு காரணம், சமய, சந்தர்ப்ப, பூகோள ரீதிகளில் தன்னிச்சையாக உருவாகும் ஒரு அதீத வாய்ப்புதான். ஒரு குறிப்பிட்ட தொழில் அல்லது வணிக துறையில், வாய்ப்பு கணிசமாக உருவாகிய சூழ்நிலையில் ஒரு இடம் தானாகவே அந்தத் தொழிலில் சிறப்பு என்று ஒரு பெயர் பெற்றுவிடும் - அது சம்பந்தமாக மேன்மேலும் வல்லுனர்கள் அங்கேயே இருப்பதால் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ள - வியாபாரம் செய்ய என்று ஒரு குழுத் தன்மையும் அந்தத் தொழிலில் ஒரு சிறப்புத்தன்மையும் உருவாகிவிடும். சிலிகான் பள்ளத்தாக்கில் இதுதான் நிகழ்ந்துள்ளது. ஸ்விட்சர்லாந்தில் வாட்ச் தொழில் மாதிரி, திருப்பூரில் பனியன் மாதிரி.இன்று சிலிகான் பள்ளத்தாக்கு என்று ஒரு கற்பனை பெயரில் அழைக்கப்படும், சான்பிரான்ஸிஸ்கோ விரிகுடாப் பகுதி குட்டி நகரங்களின் கும்பலில் பெரிதும் சிறிதுமாக - ஒற்றை ஆள் வணிகத்திலிருந்து, தொடங்கி, நான்கு பேர், பத்துபேர், நூறுபேர், ஆயிரம் பேர் வேலை செய்யும் நிறுவனங்கள் என்று மொத்தம் 48,996 உள்ளன. ஆயிரத்துக்கு மேற்பட்டோர் வேலை செய்யும் நிறுவனங்கள் மட்டும் சுமார் 100க்கும் மேலே.இவ்வளவு பேர் இங்கே புழங்கிக்கொண்டிருந்தாலும் கொஞ்சம் கூட இந்த சிறு நகரங்களில் கும்பல், கூட்டம் என்ற உணர்வே இல்லாத சூழ்நிலை வியப்பாகதான் இருக்கிறது. பொதுவாக ஒரு அமைதி. காலை வேலையில் கூட சாலையில் டிராபிக் ஜாம் கிடையாது. ( ஆனால் சான்ஸ்பிரான்ஸிஸ்கோ, மற்றும் சான் ஹோஸே நகரங்களில் அது நிறையவே உண்டு. அவைப் பெரு நகரங்களாச்சே; இல்லாமல் பின்னே?) ஒன்பது மணியிலிருந்து மாலை ஆறு மணி வரை வேலை நேரம். நடுவில் ஒரு மணி நேரம் பகல் உணவு இடைவேளை. ஆனால் உலகில் எல்லா இடங்களிலும் கணினித்தொழிலில் இருப்பதுபோல அவரவர் வேலையைப் பொறுத்து செய்கிறார்கள். Flexi time. ஆனால் பொதுவாக மாலை வேளைகளில் தேவையில்லாமல் வேலை என்று ஆபீஸில் உட்கார்ந்து இருப்பதில்லை. பெரும்பாலும் இந்த சிலிகான் பள்ளத்தாக்கின் தொழில்நுட்ப நிறுவனங்கள் அல்லது ஒரு நிறுவனத்தின் பல்வேறு துறைகள் கட்டிடங்கள் ஒரே தெருவில் அல்லது அருகாமையில் இருப்பதால் வேலை செய்பவர்கள் அடிக்கடி கையில் காபி அல்லது கோக், என்று ஏதாவது எடுத்துக் கொண்டு அலுவலக வேலை சம்பந்தமாக குறுக்கும் நெடுக்கும் சாலைகளில் கட்டிடங்களிடையே நடந்து போய்வருவதும் சாதாரணம். மாலைகளிலும், வார இறுதி விடுமுறைகளிலும் முக்கியப் பொழுதுபோக்கு ஆரோக்கியமான வழிகளில் - வெளியே விளையாடுவது, நடப்பது, உடற்பயிற்சி, நண்பர்கள் சந்திப்பு, என்று பல விதங்களில். பூங்கா நகரம் என்று சொல்லக்கூடிய அளவு சன்னிவேல் நகரம் பூங்காக்களுக்கு விசேஷம். தண்ணீர் லாரிகள் கிடையாதே தவிர, பொதுவாக கலிபோர்னியாவில் தண்ணீர் தட்டுபாடு உண்டாம். அலங்கார நீரூற்றுக்களுக்கும், பூங்காக்களுக்கும் சுழற்சி செய்த தண்ணீர்தான் உபயோகிக்கப்படுகிறது. ஆனாலும் அடர்த்தியான மரங்களும், புதர்களும், செடிகளுமாக என்ன ஒரு பசுமை ! தண்ணீர் தட்டுப்பாடு என்பதை நம்ம முடியவில்லை.டில்லியின் லோதிப் பூங்கா மாதிரி இங்கேப் பெரும்பாலும் எல்லாமே பெரிய பூங்கா வனங்கள். பெரு நகரங்களில் இருப்பது போல், தீம் பார்க், Multiplex, IMax, போன்ற கேளிக்கைகள் பொழுதுபோக்கு கவர்ச்சிப் பொறிகள் (Entertainmnet Trappings) இல்லாததாலோ என்னவோ நிறைய இயற்கையான பொழுதுபோக்குகள். ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் பகுதிகளில் வாழ்ந்தால் திரைப் பிரபலங்கள் அக்கம்பக்கத்தார் ஆவதுபோல் , இங்கு Oracle தலைவர் Larry Ellison போன்ற கணினி பிரபலங்கள் பூங்காக்களில் ஹலோ சொல்லிக் கொண்டு போகலாம். பெரும்பாலான பூங்காக்களில் டென்னிஸ், மற்றும் மற்ற பந்து விளையாட்டுகள், உடற்பயிற்சி நிலையங்கள், ( Gym), என்று பல வசதிகள் உள்ளதாக இருக்கிறது. ஆனால் பகலில் சாதுவாக இருக்கும் டவுன் டௌன் கடைத்தெருக்கள் இரவு கல கலவென்று ஆகிவிடுகிறது. Mountain View நகரத்தில் உள்ள காஸ்டிரோ தெருவில் நிறைய ரெஸ்டாரெண்ட்களும் உண்டு. மெக்சிகன், தாய், இந்திய என்று எல்லாவித உணவுக் கூடங்களும் ரொம்பி வழிய ஆரம்பித்துவிடுகிறது. இங்கே தொழில் நுட்ப நிறுவனங்களில் வேலைப் பார்க்கும் பல நாட்டினருக்கும் ஏற்றாற்போல் வகை வகையான உணவகங்கள்.

பொதுவாக இங்கு எல்லா ரெஸ்டாரெண்டிலுமே, காபி கடைகளிலும் கடையை ஒட்டிய நடைபாதையில் மேஜை நாற்காலி போடப்பட்டு, தெருவை வேடிக்கைப் பார்த்துக் கொண்டே உணவு, காபி அருந்துவது எல்லோருக்கும் பிடித்த விஷயம். இரவு 11 மணிக்கு உணவகங்கள் மூடினாலும் நைட்கிளப், pub போன்றவை 11 மணிக்கு மேல்தான் களை கட்ட ஆரம்பிக்கிறது. 11 மணிக்கு மேல் இந்த இடங்களில் வாசலில் நுழைய இளைஞர்கள் வரிசையில் நிற்கிறார்கள். சிலிகான் பள்ளத்தாகில் பணமும் நிறையப் புழங்குவதால் இப்படிபட்ட பொழுதுபோக்குகளுக்கும் பஞ்சமில்லை. ஒரு பக்கம் விளையாட்டு, பார்க் என்று பொழுது போகிறது. இன்னொரு பக்கம் இரவு நடனம் என்று ஜாலியாகவும் இருக்கிறார்கள்.அலுவலகங்களுக்குப் பக்கத்தில் இருக்கும் பூங்காக்களில் மதிய உணவுக்குப் முன் அல்லது பின் பந்து விளையாடுபவர்களும் உண்டு. வெயில் காலத்தில் இரவு 9 வரை சூரியன் இருக்கிறதால், சுமார் மாலை ஆறிலிருந்து 9 மணி வரை இங்கே பலவிதங்களில் நேரம் செலவழிக்கப்படுகிறது. அதற்குப் பிறகும், இரவு 11 மணிக்கு பூங்கா விளக்குகள் அணைக்கப்படும்வரை, விளையாட்டுகள், உடற்பயிற்சி செய்வோர் என்று கலகலவென்றுதான் இருக்கிறது. மழைப் பெய்து ஒரு தூரல் போட்டு நின்றவுடன் சில சமயம் எங்கிருந்தோ மளமளவென்று ஈசல் பூச்சிகள் வந்து நம் வீட்டுக்குள் பறந்து வருமே, அதுபோல் மாலை வேளையானதும் பூங்காக்கள் மனிதர்களால் நிரம்ப ஆரம்பித்து விடும். இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம். - கணிசமானோர், இந்தியர்கள். - பலர் பெற்றோருடன். சில சமயம், பெற்றோர் மட்டும். இந்தியாவிலிருந்து வருபவர்களுக்கு, இந்திய சங்கங்களில் உள்ள பல வித கச்சேரிகள், கூட்டங்கள் இவைத் தவிர அடுத்த சந்திக்கும் இடம் பூங்காக்கள். "நான் வந்து ஆறு மாதம் ஆச்சு"; எந்த பிளைட்டில் போகிறீர்கள்", தமிழ்ப்படம், சந்திரமுகி, மன்மோஹன் சிங், வத்தல் தீர்ந்துவிட்டது, சரவண பவனில் ஊத்தப்பம் பிரமாதம் - ( பல சமயம் தமிழில்) - என்று காதில் வந்து விழும் விஷயங்கள் - இந்தியாவில் இருக்கிறோமோ என்று எண்ண வைக்கும். இங்கே பக்கத்து கௌண்டி ஒன்றில் Fremont என்ற முனிசிபாலிடியின் கௌன்சிலில் அனு நடராஜன் என்ற ஒரு தமிழரும் உண்டு.

பொதுவாக நம் மக்கள் கோவிலில்லா ஊரில் குடியிருக்க மாட்டார்கள். அப்படியே வசிக்க நேர்ந்தால், டிம்பக்டூ என்றாலும் இருக்கும் இடத்தில் முதல் காரியமாகமொரு கோவிலை எழுப்பிவிடுவார்கள். சன்னிவேல் கோவில் இங்கு சுற்று வட்டார பக்திமான்களுக்கு ஒரு வடிகால். ஊரிலிருந்து வரும் இந்தியர்கள் பலருக்கு இது ஒரு பெரிய சந்திக்கும் இடமாகவும் ஆகிறது. பிட்ஸ்பர்க் மற்றும் இதர வெளி நாட்டு கோவில்கள் போல இன்னும் இது செழிப்பாக கோபுரங்களுடன் உருவாகவில்லை. ஒரு பெரிய ஹால். உள்ளே மண்டபங்கள் - பலவித கடவுள் விக்கிரகங்கள் மற்றும் படங்களுடன். எம்மதமும் சம்மதம் கோவில். அவரவருக்குப் பிடித்த இஷ்ட தெய்வங்களைக் கொண்டு வைத்துள்ளார்கள். குரு நானக், புத்தர், ஜெயின் இவர்களெல்லோரும் பிள்ளையார், சிவன், ஸ்ரீரங்கம் ரங்கனாதர், திருப்பதி வெங்கடாஜலபதி இவர்களுடன் ஒரே இடத்தில். ஜரிகை வேலை செய்த சிவப்புத் துணி போர்த்து வைக்கப்பட்டிருந்த சீக்கிய குரு கிரந்த் சாஹிப் அருகில் குட்டிப் பிள்ளையாரும் இருந்தார்.இந்தியர்களின் பொழுதுபோக்கு இப்படி பூங்கா, கோவில், நண்பர்கள் என்றால், மற்ற அமெரிக்கர்கள் பலர் குடும்பத்துடன் - குழந்தைகளுடன் - பின் பக்கம் குட்டி சைக்கிள் இணைத்த பெரிய சைக்கிளில் மகளைப் பின்னால் வைத்துக் கொண்டு செல்லும் தாய், இரண்டு வயது குழந்தையை நம் திருவிழாவில் தோளில் தூக்கிப் போவதுபோல் ஜாலியாக தூக்கி மேலே வைத்துக் கொண்டு செல்லும் அப்பா, ராக்ஷ்ச சைஸ் கருப்பு அணிலுக்கு தன் சாப்பாடை வினியோகம் செய்யும் சீனக் குழந்தை, புறாக்களுக்கு தான்யம் இடும் வயதான வட இந்தியத் தாத்தா என்று தெருக்களும் பூங்காக்களும் சிலிகான் பள்ளத்தாக்கின் உயிர் நாடியைப் பிரதிபலிக்கும் வகையில் பலவித மக்களால் களைக் கட்டியிருக்கும். அமெரிக்காவின் மேற்குக் கடற்கரையோரப் பகுதி என்பதால் ஏகமாக கடற்கரைகள். வார இறுதியில் அவரவர் வெயில் குளியல், அல்லது அலைகள் மேல் மிதக்க (surfing) என்று குடும்பத்துடன் கிளம்பி விடுகிறார்கள். நதிகள், ஏரிகள் அருகில் இருந்தால் படகு ஓட்டுதல், மீன் பிடித்தல் என்று ஒரு வகை.மொத்தத்தில் விவசாயம், பழச் சோலை என்று இருந்த இந்த கிராமங்கள் இன்று தொழில் நுட்ப நகரங்களாக மாறியிருந்தாலும் அடிப்படையில் எளிமையான வாழ்க்கை முறை, நல்ல காற்று, குறைந்த விலைவாசி, குற்றங்கள் மிகக் குறைவு, என்று கிராமங்களின் இயற்கையையொட்டிய அத்தனை நல்ல விஷயங்களையும் வாரி வழங்கி, அதே சமயம் நகரங்களின் நவீன வசதிகளையும் உள்ளடக்கி - அமெரிக்க கிராமங்களில், குட்டி நகரங்களில் வாழ்க்கை உத்தமம்.

நன்றி: திசைகள்.

Friday, September 16, 2005

யோசிமிட்டி நேஷனல் பார்க்கில்

திடீரென்று தமிழ் மணத்தில் எல்லோரும் போட்டோவாப் போட்டுத் தள்ளுகிறார்கள். என் பங்குக்கு.....

யோசிமிட்டி நேஷனல் பார்க்கில்


மலைப்பாறைதான். ஆனால் வெல்வெட் போல இல்லை?


யோசிமிட்டி மலைப் பாறைகள் தொடர். இந்த மலைக்குப் பெயர் Half dome - பார்த்தால் கொஞ்சம் நாமக்கல் ஹனுமார் மாதிரி இருக்கோ? ( நான் நாமக்கல் அனுமாரைப் பார்த்ததில்லை. கேள்வி ஞானம்தான்) அல்லது பெங்குவின் மாதிரியும் இருக்கு என்று எனக்குத் தோன்றியது.


வானவில் காமிராவுக்குள் வருமா என்று பார்த்தேன். அட, வந்துவிட்டதே..





Gliding - ஞாயிற்றுக்கிழமையானதால் மூன்று பேர் ஜாலியாக கிளைடிங் கிளம்பிவிட்டார்கள். கிளைடிங் போவதற்கு உயர்ந்த இடத்திலிருந்து கீழே லாகவகமாக ஜம்மென்று (!!) குதிக்க வேண்டும். உயர்ந்த பாறைமேல் நின்று கொண்டு பெரிய கிளைடிங் "பட்டத்தைத்" தூக்கிக் கொண்டு இவர்கள் ஒவ்வொருவராக ஆயத்தம் செய்வதை வேடிக்கைப் பார்க்க சுவாரசியமாக இருந்தது. ஆனால் இவர்களுக்கு உதவுவதற்காக ஒருவர் செங்குத்தான பாறை மேல் பின்பக்கம் காண்பித்து நின்று கொண்டு இவர்களுக்கு உதவி செய்யும்போது எனக்குதான் ரத்த அழுத்தம் அதிகமாகியது. கொஞ்சம் சறுக்கினாலும்..... என்ற நினைப்பினால் - படத்தில் உள்ள பள்ளத்தாக்கைப் பாருங்கள். நான் சொல்லும் பயங்கரம் புரியும்.


கலிபோர்னியாவில் Gold Rush பற்றி நிறையக் கேள்விபட்டுள்ளோம். இது வேற மாதிரி தங்கம். சூரியன் மறையும் நேரத்தில் வானத்தில் தெரியும் வர்ணஜாலங்களே தனி. ஆரஞ்சு வர்ணக் கலவை இந்தப் பாறை மலை மீது பட்டு பாறை மலை, " தங்க" மலையாகிறது.



கரடிக்குப் பயந்தவங்க என் மேலே விழுங்க..... சூரியோதயத்தை ரசித்தவாறு இந்த இடத்தில் நாங்கள் மட்டும்தான். சுற்றிலும் வனத்தில் இருக்கும் மெல்லிய சப்தங்கள் - யோசிமிட்டி நீர்வீழ்ச்சிகள் விழும் ஓசை மட்டுமே என்று ரசித்துக்கொண்டிருந்த எங்களுக்குப் பின்னால் திடீரென்று யாரோ எதையோ உருட்டும் சப்தம். திரும்பிப் பார்த்தால், கரடி - குப்பைத் தொட்டியைக் கிளறி உணவு தேடிக்கொண்டிருந்தது. ஹை.. கரடி என்று முதலில் ஆர்வம் ஏற்பட்டாலும், அதன் பசியில் நாங்கள் கன்ணில் பட்டால்... என்ற பயம் ஒரு வினாடி கழித்துதான் வந்தது. கரடியைக் கண்டால் அசையாமல் நிற்க வேண்டும் என்று எப்போதோ எங்கேயோ படித்தது நினைவுக்கு வர, திடீரென்று எல்லோரும் அப்படியே நின்ற இடத்தில் கப்சிப். - statue!




படங்கள் எடுத்தது.
விஜய் சுந்தர் ஸ்ரீனிவாசன்; வெங்கட் ஸ்ரீனிவாசன்; அருணா ஸ்ரீனிவாசன்; ஸ்ரீனிவாசன்

Sunday, September 11, 2005

அடடே...... அப்படியா.....?!!

ஒரு வினாடி என்னைக் கொஞ்சம் கிள்ளிப் பார்த்துகொள்கிறேன். இந்த செய்தி உண்மைதானா என்று. இல்லே, பல சமயங்களில் "இப்படி இருந்தா நல்லாயிருக்குமே..." என்று தமாஷாக ஒரு கற்பனைக் கட்டுரை எழுதுவோமே அந்த ரகமா இது என்றும் கொஞ்சம் சந்தேகம் தட்டியது. செய்தியின் ஆதாரம் நம்பகமான இடம்தானா என்று பார்த்தேன். சுற்றுலாவுக்கான 100 சதவிகிதம் அக்மார்க் பத்திரிகை. அப்பழுக்கு சொல்ல முடியாது.

சரிதான் திருமதி ரேணுகா சௌத்ரி - இந்திய சுற்றுலா அமைச்சர் - இன்று ரொம்ப குஷியாக இருப்பார். - காரணம் இதோ:

Conde Nast Traveler என்ற சுற்றுலாப் பத்திரிகை வருடா வருடம் நடத்தும் "சுற்றுலாப்பயணிகள் தாங்கள் மிகவும் விரும்பும் சுற்றுலா இடம்" என்று தேர்ந்தெடுக்கும் போட்டி முடிவுகள் வெளி வந்துள்ளன. மிகவும் பிடித்த நாடுகள் என்ற வரிசையில் இந்தப் பத்திரிகையின் வாசகர்கள் தேர்ந்தெடுத்துள்ள நாடுகளில் 97.33% மதிப்பெண் பெற்று முதன்மையான இடத்தில் இருப்பது - நியூசிலாந்து. ( துளசி, கையைக் குடுங்க...:-)) அடுத்து, தாய்லாந்து (94.44), மூன்றாவது ஆஸ்திரேலியா (93.32%), அப்புறம் இதாலி(92.00).

ஐந்தாவது.....? வேற யார்? இந்தியாதான் (89.43%) !!! :-) அடுத்து பிரான்ஸ் 86.98 %, அப்புறம் USA 85.13 %, சிங்கப்பூர் 81.12%

முதல் இருபது என்ற வரிசையில் இந்தியாவின் இடம் 5 என்று பார்த்துவிட்டுதான் மேலே சொன்ன.... "ஒரு வினாடி.... etc..etc......" என்று ஒரே மகிழ்ச்சி.

தேர்வுக்கு எடுத்துக்கொண்ட முக்கிய அளவுகோல்களில் மூன்று - 1. இயற்கையழகு. 2. சுற்றுச்சூழல் 3. பாதுகாப்பு ( Safety).

இந்தியாவுக்கு இன்னும் பல வரிசைகளில் ( category) நல்ல மதிப்பெண்கள் கிடைத்துள்ளன. ஹோட்டல்களில் ஜெய்ப்பூரில் இருக்கும் Oberoi Rajvilas. 95.56% மதிப்பெண்கள் பெற்றுள்ளது. ஆசியா மற்றும் இந்தியத் துணைக்கண்டம் பகுதியில் முதல் இடம். சிங்கப்பூரின் பிரசித்தி பெற்ற ராபில்ஸ் ( Raafles Hotel) கூட 89.52% பெற்று நான்காவது இடத்தில்.

இதைப் படித்தவுடன் "ஆஹா, நம்ம சுற்றுலா இடங்கள் பிரமாதமாக ஆகிவிட்டது போலிருக்கே என்று அப்படியே நம்பிவிடவும் முடியவில்லை. ஏனென்றால், தூசி படிந்த, உடைந்த அரும் பொருட்கள் உள்ள அருங்காட்சியகங்களும், விமான நிலையம் அல்லது ரயில் நிலையம் விட்டு வெளியே வந்தவுடன் இருக்கும் குழப்பங்களும் இன்னும் இது, அது என்று கண்களையும் மனசையும் உறுத்தும் குறைகள் பல இந்தியாவில் இருக்கதான் செய்கின்றன. ஆனாலும் இதையெல்லாம் தாண்டி இந்தியாவை உலகிலேயே மிகவும் பிடித்த இடங்களில் ஒன்றாக இந்த வாசகர்கள் தேர்ந்தெடுக்கக் காரணம் இருக்க வேண்டும்.

இந்தியாவின் Spa மற்றும் ஹோட்டல்கள் போன்றவைகள் இந்த வாசகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. மிகவும் பிடித்த Spa வரிசையில் 97. 15% மதிப்பெண் பெற்று முதலிடத்தில் இருப்பது இமயமலைத்தொடரில் இருக்கும் ஆனந்தா Spa. ஆனால் பிடித்த நகரங்கள் வரிசையில் ஒரு இந்திய நகரம் கூட வரவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது. ஆக மொத்தம் கூட்டு மதிப்பாக கிடைத்த மதிப்பெண்களை வைத்து தயாரித்த வரிசையில் முதல் நூறில் இந்தியாவின் இந்த ஆனந்தா Spa இரண்டாவது இடம். இதிலும் முதல் இடம் துளசி ஊர்தான்.) 45 வது இடத்தில் மறுபடி இந்தியா, மொத்த மதிப்பெண்படி நிற்கிறது.

இவற்றைத் தவிர, உள் நாட்டில் எளிதான பயண வசதிகள், உலகின் எந்தப் பகுதியிலிருந்தும் நிறைய ஆகாய விமானத் தொடர்புகள் ( இந்தியாவின் உள்ளூர் விமான சேவையில் தனியார் துறையின் கவனிக்கத்தக்க பங்கை இங்கேக் குறிப்பிடாமல் இருக்க முடியாது) சினேகமான மக்கள் (!!)இவையெல்லாமும் காரணமாக இருக்கலாம் என்பது என் அவதானிப்பு.

எப்படியானாலும் எனக்கு இது சந்தோஷமான ஆச்சரியம்தான். முன்பெல்லாம் இயற்கையழகை இப்படி கொட்டி வைத்துக்கொண்டு இந்தியாவின் சுற்றுலா மூலம் வரும் வருவாய் பரிதாபமாக இருக்கிறதே என்று பக்கம் பக்கமாக எழுதிக் கடுப்பாகிப்போனப் பத்திரிகையாளர்களில் நானும் ஒருத்தி. ஒரு முறை சுற்றுலாத் துறை பற்றி செய்திக் கட்டுரை எழுதுவதற்காக டில்லியில் அன்றைய சுற்றுலா தலைமையதிகாரியாக இருந்தவரிடம் தகவல் சேகரிக்கும்போது அவர் கூறியதை இன்று நினைத்தால் சிரிப்பு வருகிறது.
" இன்னும் அதிகமாக சுற்றுலாப் பயணிகளை வரவழைக்க, நீங்க பாட்டுக்கு ஏன் அப்படி செய்யக்கூடாது? ஏன் இப்படி என்று ஏதாவது கேட்டுவிட்டு எழுதிவிடுவீர்கள். நாமும் செய்யலாம்தான். ஆனால் அப்புறம் ஏகமாக 'ஆகா, இந்தியா ஒரு சொர்க்கம்' என்று உலகத்தில் எல்லோரும் திரண்டு வருகிறார்கள் என்றே வையுங்கள். அப்படி ஆச்சுன்னா, இங்கே நம்பளாலே தாக்குப் பிடிக்க முடியுமா? நம்ப அடிப்படைக் கட்டுமானத்துறை - infrastructure - பெருமளவில் சுற்றுலாப் பயணிகள் வந்தால் தாங்குகிற மாதிரி இருக்கா? எல்லாம் ஓரளவு இப்போதைக்கு மித அளவில் இருந்தால் போதும். இருங்க... இப்போ நான் சொன்னதெல்லாம் off the record."

பின்னே, சுற்றுலாத் துறை தலைமை நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு அவர் வேறு எப்படி பேசுவார்?

சரி. இப்போது சில புள்ளி விவரங்களைப் பார்க்கலாம்:

  • இந்த வருடம் இந்திய சுற்றுலாத் துறை 5 மில்லியன் பயணிகள் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறதாம். 2000 ஆம் வருடம் இது 2.60 மில்லியனாக இருந்தது.
  • 2003 ல் 15 சதவிகித வளர்ச்சி இருந்த இந்தத் துறை 2004 ல் 22 சதவிகித வளர்ச்சி பெற்றுள்ளது.
  • வருவாயும் 2003 ல் 16 சதவிகித வளர்ச்சியாக இருந்தது 2004ல் 32 சதவிகித வளர்ச்சியாக மாறியுள்ளது.
  • இந்தியாவின் GDP யில் பலதரப்பட்ட சேவை தொழில்கள் மூலம் ( Service Industry) 54.2 % வருவாய் வருகிறது. இதில் விருந்தோம்பல் மற்றும் சுற்றுலாத் துறைக்கு குறிப்பிடத் தகுந்த அளவில் பங்கு உண்டு.
  • 2003-04 ல் சுற்றுலாத் துறை கொண்டு வந்த மொத்த வரவு ( Foreign exchange earnings ) US $ 3,533 மில்லியன்.
  • ஆனாலும் உலகளவில் இந்தியாவின் சுற்றுலாத்துறையின் பங்கு - பயணிகள், மற்றும் வருவாய் - பரிதாப நிலையில்தான் உள்ளது. 0.4 சதவிகிதம் மட்டுமே. இதைக் குறைந்த பட்சம் 1 சதவிகிதத்திற்குக் கொண்டு வரவேண்டும் என்று இந்திய அரசு முனைகிறது.

இந்தத் துறைகள் வளர்ச்சியடைவதில் ஒரு முக்கிய ஆதாயம் - சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் சம்பந்தமான வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும். வெளி நாட்டுக்குப் புலம் பெயர்ந்தோர் ஊருக்குப் போகும்போது அவர்கள் குடி பெயர்ந்த நாடுகளில் இருக்கும் வசதிகள் இந்தியாவிலும் கிடைக்க வாய்ப்பு அதிகரிக்கும்.

பொரிமாத் தோண்டி கனவு காண்கிறேனோ?!

பி.கு: சொற்குற்றம், பொருட்குற்றங்கள், புள்ளி விவரக் குற்றங்கள், வாசகர்கள் சுட்டிக் காட்டியபின் நிதானமாகத் திருத்தப்படும் - தவறாக இருந்தால் :-) தினமும் பத்திரிகைகளில் வரும் Errata பகுதி போல :-)

Saturday, September 10, 2005

காற்றீனாவின் தொடரும் பின்விளைவுகள்.

ஒரு வழியாக 11 நாட்களுக்கு பின் முதல் பலியாடைத் தேர்ந்தெடுத்துவிட்டார்கள். அமெரிக்காவின் FEMA ( Federal Emergency Management Agency) ( முதலில் இந்த இடத்தில் "முன்னாள் தலைவர்" என்று தவறுதலாக உபயோகித்திருந்த வார்த்தையை நீக்கியுள்ளேன். விளக்கம் - பின்னூட்டத்தில் ) நன்றி பெயரிலி.

புயலால் பாதிக்கப்பட்ட இடங்களின் நேரடி வேலையிலிருந்து தூக்கி அவரைத் தலைமையகத்திற்கு, வாஷிங்டனுக்கு மாற்றிவிட்டார்கள்.
ஆரம்பத்திலிருந்தே பல திசைகளிலிருந்தும் இவர் மீது எக்கச்சக்கமாக கணைகள் வந்து விழுந்து கொண்டிருந்தன. அதுவும் புயல் அடித்த முதல் இரண்டு நாள் நிவாரண வேலைகள் சரியாக ஆரம்பிக்கப்படாமல் இருந்த நிலையில், கன்வென்ஷன் செண்டரில் அடைக்கலம் புகுந்த மக்கள் திணறிக்கொண்டிருந்ததும் தனக்குத் தெரியாது என்று இவர் சொன்னது உச்சக்கட்டம். பத்திரிகைகள், டிவி, பொது மக்கள், என்று மொத்தமாக அனைவருக்கும் அதிர்ச்சி - என்ன சொல்கிறார் இவர் என்று. டிவியில், பாதிக்கப்பட்ட பகுதிகள் மக்கள் உதவி கிடைக்காமல் இந்த கன்வென்ஷன் செண்டரில் தவிப்பது எல்லாம் தொடர்ந்து ஒலிபரப்பாகிக்கொண்டிருந்தது. இவர் என்னடாவென்றால், நிதானமாக தனக்குத் தெரியவேயில்லை என்று ஒரே போடாகப் போடுகிறாரே என்று எல்லா திசைகளிலிருந்தும் அதிர்ச்சிகள் வெளிப்பட்டன. ஒரு பத்தியாளர் எழுதினார் - இவருக்கு அப்படி டிவி செய்திப் பார்க்க நேரமில்லையென்றால் FEMA பணத்தில் டிவி பார்த்து இவருக்கு செய்திகள் சொல்வதற்கு என்றே பிரத்தியேகமாக இரண்டு ஆளையாவது போட்டுக்கொள்ள வேண்டியதுதானே என்று நக்கலாக.

அதே சமயம், எல்லா திசைகளிலிருந்தும் தவறுகள் இருந்திருக்கும்போது, யாரையாவது பலி கொடுத்தால்தான் மக்கள் ஓரளாவது சமாதானாமாவார்கள் என்றுதான் இவர் ஒருவரை மட்டும் பலிகடா ஆக்கியுள்ளார்களோ என்று தோன்றுகிறது. தவிர, புயல் அடித்த மறு நாள் புஷ் அந்தப் பகுதிகளில் பார்வையிட வந்தபோது தன்னிடம் நிவாரணப் பணிகளின் நிலையை விவரித்தபோது புஷ் இவரையும் மற்றவர்களையும் முதுகில் தட்டிக் கொடுத்து " நல்லா செய்யறீங்க" என்று பாராட்ட்விவிட்டுப் போனார். CNN ல் இந்த பிரௌண் அகற்றப்பட்ட செய்தியை ஒலி பரப்பி, அங்கே பாதிக்கப்பட்டப் பகுதியில் மக்களிடம் அதுபற்றி கருத்தும் கேட்டனர். நல்ல காரியம்; இப்போதாவது செய்தார்களே என்ற ரீதியில் கருத்து கூறியவர்கள் உடனேயே நினைவு கூர்ந்தது சென்ற வார வருகையின் போது புஷ் இவர்களை வெகுவாகப் பாராட்டிவிட்டு சென்ற காட்சிதான். "அன்று பிரஸிடெண்ட் அவர்கள் முதுகில் தட்டிக் கொடுத்துப் பாராட்டியபோது நாங்கள் இங்கே யாரிடம் போவது, உதவி எங்கே கிடைக்கும் என்று அல்லாடிக்கொண்டிருந்தோம்" என்றார். " பிரௌண் மேல் அநாவசியமாகப் பழி சொல்வதில் அநியாயமானது. காற்றீனா, அமெரிக்கா கண்டறியாத பெரும் அளவில் இயற்கையின் பாதிப்பு; ஏஜன்ஸிகள் முடிந்ததை செய்து கொண்டுதானே இருக்கிறார்கள்" - என்ற ரீதியில் சில இடங்களிலிருந்து குரல்கள் எழும்பிக்கொண்டுதான் இருக்கின்றன. இதைப் பற்றி CNN நிருபர் கேட்டுவிட்டு, " இயற்கையின் சீற்றத்துக்கு ஒரு அதிகாரி எப்படி பொறுப்பாக முடியும்" என்றபோது கேட்கப்பட்டவருக்கு பெரும் கோபமே வந்துவிட்டது. "முதல் இரண்டு நாள் அவர்கள் யாருமே கண்ணில் படக்கூட இல்லை. என்ன வேலை செய்தார்கள் என்கிறீர்கள்". என்று ஒரு போடு போட்டார்.

பிரௌணக்கு நியூ ஆர்லின்ஸ் மக்கள் புயல் எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல் ஊரை விட்டு வெளியேறாமல் தங்கியிருந்ததுதான் அவர்களின் இமாலயத் தவறு என்ற கருத்து இருக்கிறது. இது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் கதை. வெளியேற நினைத்தாலும் இரண்டு முக்கியத் தடைகள் இருந்தன என்பதை அவர் கவனத்தில் கொள்ளவில்லை. ஒன்று வேகமாக வெளியேற முடியாமல் சாலைகளில் நெரிசல்; இரண்டு , பலருக்கு வாகனத்துக்கான பொருளாதர வசதி கிடையாது. இப்படிபட்டவர்களையும் எதிர்பார்த்துதானே திட்டங்கள் தயாராக இருந்திருக்க வேண்டும். அடிப்படைத் தயார் நிலையே இன்று கேள்விக்குறியாக இருக்கும்போது, இவ்வளவு தூரம் சிந்தித்திருக்க எங்கே வாய்ப்பு ?


குழப்பங்கள் காற்றீனா பாதிப்பில் மட்டும் இல்லை என்று தோன்றுகிறது. இயற்கையாலோ அல்லது தீவிரவாதத்தாலோ - அழிவு என்பது ஒருபக்கம் இருக்க, நிர்வாகத் தவறுகளும் சேதங்களை /பிரச்சனைகளை இன்னும் அதிகமாக்குகின்றன.

இன்றைய தினசரியில் ஈராக் போர், மற்றும் 9/11 தாக்குதல் இவைகளைப் பற்றி படித்த சில விஷயங்கள் இங்கேயுள்ள நிர்வாக அமைப்பில் ஓட்டைகள் உள்ளன என்று வெளிச்சம் போட்டுக் காண்பிக்கின்றன.

முதல் செய்தி

- 9 /11 தாக்குதலில் மாட்டிக்கொண்டு இறந்த 343 தீயடைப்பு வீரர்களுக்கும் தாங்கள் பணியிலிருந்த வடக்குக் கட்டிடம் இன்னும் சற்று நேரத்தில் விழுந்துவிடும் என்று தெரியாமல் போனதாலேயே அவர்களால் தப்பிக்க முடியாமல் போயிற்று என்று தப்பிப்பிழைத்தவர்கள் விவரித்த அந்தக் கடைசி 29 நிமிடங்களின் விவரம் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஒரு ஒலி நாடாவின் மூலம் தெரிய வந்துள்ளது. தெற்குக் கட்டிடம் கீழே விழுந்த பின்னரும் அதைப் பற்றியோ அல்லது இன்னும் சற்று நேரத்தில் தாங்கள் இருக்கும் வடக்குக் கட்டிடமும் விழுந்து விடும் என்பது போன்ற செய்திகள் அவர்களைப் போய்ச் சேரவில்லை. 9/11 கமிஷனின் முன்புத் தாக்குதல் விவரங்களைப் பதிவு செய்த முன்னாள் நியூயார்க் மேயர் ருடால்ப் கிலானி சொன்னது, "மற்றவர்களைக் காப்பாற்றும் பணியில் இருந்ததால் தீயணைப்பு வீரர்களால் வெளியேற முடியவில்லை" என்பதாகும். இது உண்மையில் சரிதான் என்றாலும், ஒரு வேளை அந்த வீரர்களுக்கு, தெற்குக் கட்டிடம் விழுந்த விஷயமும், இன்னும் 29 நிமிடங்களில் தாங்கள் இருந்த கட்டிடமும் விழும் என்ற விவரமும் தெளிவாகத் தெரிந்திருந்தால் ஒரு வேளை உடனேயே வெளியேறி தங்களைக் காப்பாற்றிக் கொண்டிருப்பார்களோ என்ற கேள்வி எழுகிறது.

இங்கே முக்கியமானத் தடங்கல் - செய்திப் பரிவர்த்தனை முறை சரியாக இல்லை. Communication failure. பிழைத்த வீரர் ஒருவர் குறிப்பாகத் தங்களிடமிருந்த தொடர்பு சாதனங்கள் சிறப்பானவை அல்ல என்கிற மாதிரி குறிப்பிட்டிருந்தார். இவர்களிடம் இன்னும் சக்தி வாய்ந்த தொடர்பு சாதனங்கள் இருந்திருந்தாலோ அல்லது வேறு வழிகளில் தொடர்பு கொள்ளப்பட்டிருந்தாலோ இவர்கள் பிழைத்திருப்பார்களோ?

இரண்டாவது செய்தி:

ஈராக், "பேரழிவு ஆயுதங்கள் திட்டம்" வைத்துள்ளது என்று கூறி விவரமாக ஐ. நா சபையில் தான் எடுத்துரைத்த ஆதாரங்கள் கடைசியில் மிகப்பெரிய பொய்யாகிவிட்டது - ஈராக்கிடம் அப்படி ஒரு திட்டமே இல்லாத நிலையில், என்று முன்னாள் Secretary of State - Colin Powell ஒரு தொலைக்காட்சி சானலின் பேட்டியில் ஏகமாக வருத்தப்பட்டுள்ளார். " என் வாழ்க்கையில் இது ஒரு அகலாதக் கரும்புள்ளியாகிவிட்டது " என்று கூறியுள்ளார். இதற்குக் காரணமாக இவர் பல முறை சுட்டுவது - Intelligence Failure. ஈராக்கின் " பேரழிவு ஆயுதங்கள் திட்டம்" பற்றி உளவு துறையினரிடம் இருந்த விவரங்களை ஒரு வாரம் கூடவே இருந்து அலசிய போவெல், உளவுத் துறையின் தலைமை அதிகாரியின் மீது ஏதும் குறை சொல்லவில்லை. ஆனால் இவர் கடைசியில் வருந்திக் கூறும் வரிகளில் அமெரிக்காவுக்கு ஒரு பெரும் பிரச்சனையாக இன்று உருவெடுத்துள்ள ஒரு போரின் ஆரம்பம் இருக்கிறது.

இந்த வரிகள் இன்று பெரும் இரைச்சலாகக் கேட்கிறது.

" என்னிடம் விவரிக்கப்பட்ட விவரங்கள் அத்தனையும் உண்மையல்ல; அவர்களுக்கு தகவல்கள் கொடுத்தவர்கள் அத்தனை நம்பகமானவர்கள் அல்ல; அவர்கள் சொல்வதை நம்புவது சரியல்ல என்று உணர்ந்த உளவுத் துறை அதிகாரிகள் சிலர் அன்று அங்கே இருந்தனர். ஆனால் அவர்கள் வாயைத் திறக்கவில்லை. அதுதான் என்ன மிகவும் ஆழமாக பாதித்தது." என்கிறார்.

உங்களை மட்டுமல்ல மிஸ்டர் போவெல். பல ஆயிரம் உயிர்களையும் கூட - அமெரிக்க வீரர்கள் மற்றும் ஈராக் மக்கள் / போர் வீரர்கள்.

ஆனாலும் ஈராக் மீது போர் தொடுத்ததில் இவருக்கு வருத்தமில்லையாம். " நல்ல வேளை; சதாம் தொலைந்தான்." என்கிறார்.

மொத்தத்தில், ஓட்டைகள் இங்கொன்றும் அங்கொன்றும் தெரிய ஆரம்பிக்கின்றன. அவை ஒன்று சேர்ந்து பெரிதாகிக் கப்பல் மூழ்காமல் சட்டென்று விழித்துக்கொள்வார்கள் என்று நம்புவோம்.

Friday, September 02, 2005

இயற்கையின் ஆவேசத்தில் அமெரிக்காவில் ஒரு ஆப்பிரிக்கா.

நம் இந்திய மாநிலங்கள் பலவற்றில் புயலும் வெள்ளமும் பார்த்துப் பழக்கப்பட்ட எனக்கு, நியூ ஆர்லின்ஸைத் தாக்கிய காற்றினாவின் இழப்புகளை சரிகட்டுவது, அமெரிக்கர்களின் சாமர்த்தியத்திற்கும், செழிப்பிற்கும் ஜுஜுபி வேலை என்றுதான் முதலில் நினைத்தேன்.
ஆனால் இயற்கையின் ஆவேசத்திற்குப் பின் மனிதர்களால் ஏற்பட்டுள்ள குழப்பம் ஆச்சரியத்தைதான் கொடுக்கிறது. போதாதற்கு வெள்ளத்தடுப்புச்சுவர்கள் வேறு உடைத்துக் கொண்டு மேலும் வெள்ளம்.

மற்ற நாடுகளில் ஒரு கஷ்டம் என்றால் விழுந்தடித்துக்கொண்டு உதவிக்கு வரும் இந்த நாட்டில் இன்று "உதவி", "உதவி" என்ற குரல்கள் கேட்ட வண்ணம் இருக்கின்றன. கறுப்பர்களின் எண்ணிக்கை இந்த நியூ ஆர்லின்சில் அதிகம் என்று கேள்விப்பட்டுள்ளேன். ஆனால் அதெப்படி சொல்லி வைத்தாற்போல் பாதிக்கபப்ட்டவர்களாக டிவியில் காண்பிக்கப்படுபவர்கள் அத்தனைபேரும் இவர்களாகவே இருக்கிறார்கள்? அடையாளத்துக்குக் கூட ஒரு வெள்ளை மனிதர்களைக் காணோம். இது புதிராகதான் இருக்கிறது. நியூ ஆர்லின்ஸிலிருந்து வரும் படங்களைப் பார்த்தால் அமெரிக்கா போலவே இல்லை. ஏதோ ஆப்பிரிக்கா அல்லது ஆசியாவில் உள்ள ஏழை நாடு ஒன்று போல இருக்கிறது என்று டிவி தொகுப்பாளர் ஒருவர் சொல்கிறார்.

நியூ ஆர்லின்ஸின் இன்றைய குழப்பத்திற்குக் காரணம் அமெரிக்க அரசாங்கம் தன் கவனத்தையெல்லாம் புதிதாக தீவிரவாதத்தை நோக்கி திருப்பியதால் இப்படிபட்ட இயற்கை சேதங்களுக்கான ஒதுக்கீட்டைக் குறைத்து விட்டதுதான் முக்கியக் காரணம் என்கிறார்கள். இது உண்மையாகவும் இருக்கலாம் என்றுதான் தோன்றுகிறது.

" கணக்குக் கற்றுக் கொள்ளுங்கள்; இல்லாவிட்டால் புஷ் சொல்லும் பொய்களை நம்பிக் கோட்டை விடுவோம்." என்று இன்று மெர்குரி நியூஸில் ஒரு பத்தியாளர் எழுதுகிறார். காரணம்? ஈராக் போரை இந்த சம்யத்தில் நிறுத்தினால் போரில் இறந்த 2000 சொச்சம் வீரர்களின் தியாகத்தைக் கேலி செய்வதுபோல் ஆகும் என்று புஷ் சொல்கிறார். அவர் கணக்கில் கொஞ்சம் வீக். நடந்துபோன நஷ்டத்தைக் கணக்கில் எடுத்துக் கொண்டு முடிவுகள் எடுத்தால் எதிர்காலத்தில், பொருளாதார மற்றும் உயிர் நஷ்டங்கள் இன்னும் எவ்வளவு அதிகமாக ஆகும் என்று கணக்குப் போட வேண்டாமா என்கிறார் இவர்.

இப்படி ஈராக் போர், தீவிரவாதம் என்று மூர்க்கத்தனமாக கவனம் சென்றதில் சொந்த வீட்டில் நிகழும் சேதங்களுக்குத் தயாரான நிலையில் இருக்கத் தவறிவிட்டார்களோ?

புயல் வருவதற்கு ஒரு வாரம் முன்பிருந்தே ஊரைக் காலி பண்ண சொல்லி அறிவிப்புகள் வந்த வண்ணம் இருந்தன. ஆனால் அதே சமயம் புயல் வந்தபின் ஏற்படும் சேதங்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவும் ஏற்பாடுகள் செய்திருக்க மாட்டார்களோ? குறைந்த பட்சம் அடிப்படைத் தேவைகளான உணவு, உடை மற்றும் மருந்துகள்? நம் ஊரில் புயல் / வெள்ளம் வந்த அடுத்த நாளே ஹெலிக்காப்டரில் உணவுப் பொட்டலங்கள் விழத் தொடங்குமே என்று ஞாபகம் வருகிறது. இங்கே ஏன் உதவிக்கு இப்படித் தாமதம், எப்படி இப்படி ஒரு குழப்பம், என்று நிஜமாகவே புரியவில்லை.

வழக்கம்போல் வலைப் பதிவாளர்கள் நிறைய எழுதித் தள்ளுகிறார்கள். பாதிக்கப்பட்ட இடத்திலிருந்து ஒருவர் கார் பேட்டரி மூலம் தன் பதிவில் பதிந்துள்ளார்.

புயலில் பாதிப்பு பற்றி பகிர்ந்துகொள்ள இருக்கும் பல தளங்களில் ஒன்று இங்கே.