Saturday, April 30, 2005

மரங்களும் விழுதுகளும்

பத்மா, துளசி மற்றும் தாரா இவர்கள் பதிவுகளில் வயதானவர்கள் - முதியோர் இல்லத்தின் அவசியம் என்ற பிரச்சனை விவாதிக்கப்பட்டுள்ளது.

எல்லாம் சரிதான். அவர்கள் சொல்வது எல்லாமே ஓரளவு யதார்த்தம். இருந்தாலும் மயிலாடுதுறை சிவா பாட்டிக்கு எழுதிய பதிவைப் படித்தீர்களா? மூன்றாவது தலைமுறைக்கு இருக்கும் இந்தப் பிரியமும் பிணைப்பும் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே தாத்தா / பாட்டி - அதுவும் மூன்று வாரங்கள் - பிக்னிக், கல்யாணம், கோவில் இதெல்லாம் போய் பாக்கி மிஞ்சும் ஓரிரண்டு நாள் பழக்கம் மட்டுமே - என்று சந்திக்கும்போது இருக்குமா?

பெற்றோர்கள் சேர்ந்து வாழ வேண்டுமா இல்லை சுதந்திரமாக அவர்கள் / நாம் இருக்க வேண்டுமா என்பதற்கு என்னைப் பொறுத்தவரை இன்னும் சமாதானமாக பதில் கிடைக்கவில்லை. எல்லாவிதமான விவாதங்களிலும் ஓரளவு உண்மை இருக்கதான் செய்கிறது.

என் கேள்வி இதுதான் :

நன்றாக இருக்கும்போது சுதந்திரமாக இருந்துவிட்டு பின்னர் வயோதிகத்தினால் உடம்பு முடியாமல் மகன் அல்லது மகள் வீட்டில் வந்து உட்காரும்போது அவர்களிடம் பேரன் பேத்திகளுக்கு / மருமகன் அல்லது மருமகளுக்கு / மூன்றாம் தலைமுறையினருக்கு, திடீரென்று பிணைப்பு / கரிசனம் / ஒட்டுதல் எல்லாம் இயல்பாக வருமா? கடமை என்று பொறுத்துப் போவதை நான் இங்கே சொல்லவில்லை.

இயல்பாக பாசம் என்று ஒன்று பொங்குமே? அதைப் பற்றி சொல்கிறேன். தினம், தினம் பள்ளியிலிருந்து ஓடி வந்து "பாட்டி இன்னிக்கு ஸ்கூல்லே என்ன ஆச்சு தெரியுமா" என்பதில் ஆரம்பித்து குழந்தைகளோடு சேர்ந்து வளரும் பாட்டி தாத்தாக்கள் கொடுத்து வைத்தவர்கள்.

பல வருடங்கள் தனியாக சுதந்திரமாக இருந்துவிட்டு முடியாமையால். இயலாமையால், ஓரிடத்தில் அண்டி வாழும்போது அங்கே இயல்பான ஒட்டுதலும் புரிந்துணர்வும் இருக்குமா? வந்தவர்களுக்கும் எங்கேயோ வந்தாற்போல் நிலத்தில் விழுந்த மீனாக தவிப்பு. இருப்பவர்களுக்கும் தங்கள் வாழ்க்கை முறையில் யாரோ நுழைந்தாற்போல் ஒரு சங்கடம். சேர்ந்தே இருந்திருந்தால் இப்படி இருக்காதோ? மன வித்தியாசங்கள் இருந்தாலும் வெளிப்படையாக பேசி தெளிவு படுத்திக் கொண்டு திட்டினால் திட்டி, சிரித்தால் சேர்ந்து சிரித்து.... நல்லது கெட்டது பகிர்ந்து, இணைந்து வாழ மனம் பண்பட்டுப் போகுமோ?

சேர்ந்து இருந்தாலே மனக்கசப்பு வந்துவிடும் என்று பயப்படுகிறோம். உண்மையில்லாமல் இல்லை. ஆனால் நான், என்னுடையது, நான்தான் அல்லது என்னுடையதுதான் சிறந்தது - one upmanship போன்றவற்றை தவிர்த்து சேர்ந்து வாழ பழகிக் கொண்டால் குடும்பம் என்ற சொல்லுக்கு அர்த்தம் இருக்கும் என்று நினைக்கிறேன்.

இப்படி சேர்ந்து வாழும் என் உறவினர் ஒருவர் சொல்லுவார்: மருமகள் அவள் வழி அவளுக்கு. என் வழி எனக்கு. முடிந்தவரை நாங்கள் (பெற்றோர்கள்) அவர்கள் வாழ்க்கை முறையில் அனாவசியமாக தலையிடுவதில்லை. அவர்களும் எங்கள் சௌகரிய / அசௌகரியங்களை விமரிசிப்பதில்லை. இணைகோடுகளாக செல்லும் தண்டவாளம் மாதிரி அவரவர் பாதையில் அவரவருக்கு Space கொடுத்துக் கொண்டு செல்கிறோம் என்பார். இப்போது பேரன்கள் பேத்திகள் என்று துபாய், அமெரிக்கா, நியூசிலாந்து என்று அவரவர் பிரியமாக அழைக்க இவர்கள் அவ்வப்போது பயணம் சென்று கொண்டிருக்கின்றனர்.

இவர்களைப் பார்க்கும்போது மனசில் நிறைய நம்பிக்கை வருகிறது. வயதான காலத்தில் நிச்சயம் விழுதுகளைச் சார்ந்து இருக்கவே விழைவார்கள். பணத்தால் / உடலால் அல்ல - மனசில் விழும் சொல்லத்தெரியாத ஒரு பயத்தினால்..... நம்முடையது என்று இருக்கும் பந்தத்தின் அருகில் இருக்கவே விரும்புவார்கள். தைரியமாக, அமைதியாக இருக்கும் விதிவிலக்கான பெரியவர்கள் இருக்கலாம். ஆனாலும் பெரும்பாலோர் தன் விழுதுகளுடன் இருப்பதையே விரும்புகிறார்கள்.

ஒரே ஊரில் இருக்கும்போது அதிகம் பிர்ச்சனையில்லை. பெரியவர்கள் இருக்கும் இடத்துக்கு பக்கத்திலேயே பிள்ளைகள் /பெண்களும் ஜாகை அமைத்துக் கொண்டால் சுதந்திரத்திற்கு சுதந்திரம் ஆயிற்று. தினம் சந்திக்க முடிவதால் ஒட்டுதலுக்கு ஒட்டுதலும் ஆயிற்று. பேரன் பேத்திகள் பாட்டி / தாத்தா வீட்டுக்கும் தங்கள் வீட்டுக்குமாக பாலம் அமைத்துக் கொண்டிருப்பார்கள்.

சிங்கப்பூரில் இப்படி பெற்றோர் வீட்டுக்கு அருகில் வீடு அமைத்துக் கொள்ளும் தம்பதியினருக்கு வீடு வாங்குவதில் சலுகையும் உண்டு. என்னைக் கேட்டால் இப்படி அமைந்தால் இது உன்னதம். ஆனால் அமெரிக்கா போன்ற இடங்களுக்கு பிள்ளைகள் செல்லும்போது பல பெற்றோருக்கு கூட இருப்பது முடியாத நிலை. அவ்வளவு ஏன்? இந்தியாவிலேயே டில்லி / கல்கத்தா என்று பிள்ளைகள் சென்று விடும்போது சென்னைப் பெற்றோர் சென்னையிலேயே இருக்கதான் பிரியப்படுகிறார்கள். "என் பூஜை, கோயில், நண்பர்கள் இதெல்லாம் விட்டுவிட்டு அங்கே தூர தேசத்தில் என்னால் எப்படி இருக்க முடியும்? " என்பது கேட்டுக் கேட்டு, பழகிப்போன விளக்கம். அமெரிக்காவாகட்டும், டில்லி கல்கத்தாவாகட்டும், வெளியூர் சென்றுவிட்ட பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் என்பவர்கள் வருடம் ஒரு முறை சந்திக்கும் - பிக்னிக், கல்யாணம், கோவில்கள், நண்பர்கள் என்று போன நேரம் போக பாக்கி நேரத்தில் சந்திக்கும் உறவுகளாகதான் ஆகிவிடும்.

வெளியூர்களுக்கு ஏற்ற வகையில் தங்கள் வாழ்க்கை முறைகளை மாற்றிக் கொண்டு வாழ பெரியவர்கள் கற்றுக் கொள்ளாத பட்சத்தில், பிள்ளை / மகள் ஊருக்கு செய்யும் ஆறு மாத விஜயங்களும் விரைவில் அலுத்துவிடும். " ஊரில் என் குடிசையே எனக்கு வசதி" என்று கிளம்பி விடுவார்கள். எல்லாம் உடம்பில் தென்பு இருக்கும் வரையில். பிறகு உடல் உபாதைகளுக்கு பணம் கொடுத்து உதவிக்கு ஏற்பாடு செய்து கொண்டாலும், மனம் விழுதுகளின் அருகாமைக்கு ஏங்க ஆரம்பித்துவிடும்.

இந்த நிலையில்தான் பல வயதானவர்கள் முதியோர் இல்லங்களுக்கு போகும் சூழ்நிலை ஏற்படுகிறது. "இல்லம்" Home என்றாலே மனதில் ஏதோ நெருடுகிறது இல்லையா? இதைத் தவிர்க்க இன்று பல கட்டிட அமைப்பாளர்கள் முதியோர்களுக்கான எல்லா வசதிகளும் நிறைந்த "அபார்ட்மெண்ட்கள்" என்று விளம்பரப்படுத்தி விற்க ஆரம்பித்துள்ளார்கள். டாக்டர், ஆஸ்பத்திரி, என்று பல வசதிகளும் எளிதாக கிடைக்கும் வகையில் இருக்கும் இந்த அபார்ட்மெண்டுகள் இன்று பிரபலமாகி வருகின்றன.

டில்லியில் இப்படிதான் ஹிமான்ஷ¤ ரத் என்பவர் 8 வருடங்கள் முன்பு " AgeWell" என்று ஒரு நிறுவனத்தை ஆரம்பித்தார். தங்களிடம் பண வசதி நிறைய இருந்தும் இப்படி பிள்ளைகள் வெளியூர்களில் இருக்கும் நிலையில் தனிமையில் சிரமப்படும் முதியவர்களுக்காக என்றே ஆரம்பித்தார். " Helpage போன்ற அமைப்புகளில் இந்த மாதிரி வசதி உள்ள முதியோர்கள் இருக்க விருப்பபட மாட்டார்கள். முதியோர் இல்லம் என்ற சொல்லே நம் சமூகத்தில் ஏதோ, ஏழ்மை /ஒதுக்கப்படவர்கள் என்று ஒரு எதிர்மறையான பாதிப்பை ஏற்படுத்துகிறது. வெளியூர்களுக்கு சென்று வாழப் பிரியப்படாமலும், அதே சம்யம் வெளியூர்களில் இருக்கும் தங்கள் பிள்ளைகளை தங்களுக்கு அருகே வந்துவிடும்படி வற்புறுத்தாமலும் அமைதியாக காலத்தைக் கழிக்க நினைக்கும் இவர்களுக்கு பல சம்யம் துணையும் தேவைப்படுகிறது. இந்த மாதிரி சமயங்களில் துணைக்குப் போக என்றே நாங்கள் எங்கள் மெம்பர்களுக்கு பழக்குகிறோம். -சினிமா, பாட்டு கச்சேரி, டாக்டர் என்று இபப்டி வயதானவர்களுடன் துணைக்கு போக நாங்கள் பீஸ் (Fees) வசூலிக்கிறோம் - தேவையின் நேரத்தைப் பொறுத்து. பணம் கொடுத்து இபப்டி பல சேவைகளைப் பெற்றூகொள்ள இன்றைய வசதியான முதியோர்கள் தயங்குவதில்லை." என்று என் அன்றைய பேட்டியில் கூறியிருந்தார். இன்று அவர் அமைப்பு எப்படி செயல்படுகிறது என்று தெரியவில்லை. ஆனால் அவரைப் பற்றி இப்போது தேடியபோது இந்தத் தளம் கிடைத்தது. குடைந்து பாருங்கள்.

நானும் என் நண்பர்கள் சிலரும் கூட இப்படி ஒரு யோசனையை பலமாக சிந்திப்பதுண்டு. Old Age Home என்றால்தான் ஏதோ போல் இருக்கிறது. ஓர் பல அடுக்கு கட்டிடத்தில் பல முதியோர்கள் தங்கள் வீட்டிலேயே இருக்கலாம். அங்கே இப்படி AgeWell போன்ற பணம் அளித்து பெறப்படும் சேவைகள் - வெளியே செல்ல துணை, பேச்சுதுணை, கச்சேரிக்கு துணை, டிரைவர், வாகனம், Indoor விளையாட்டு கூடங்கள், இணையான நண்பர்கள், தினம் வந்து போகும் மருத்துவர்கள், அருகிலேயே ஆஸ்பத்திரி, 24 மணி நேரமும் வளாகத்தில் இருக்கும் ஆம்புலன்ஸ், காலாற நடக்க தோட்டம், ஜிம், தினம் வெளியூரில் இருக்கும் பிள்ளைகள் குடும்பத்துடன் அரட்டை அடிக்க வசதியாக இணைய வசதிகள், இப்படி எங்கள் கனவு கட்டிடம் இருக்கிறது. இங்கே வயதானவர்கள் மட்டும் என்றில்லை. மற்ற குடும்பங்களும் இருக்க வேண்டும். பள்ளி செல்லும் குழந்தைகள், ஆபீசுக்கு ஓடும் இளைஞர்கள் என்ற சாதாரண குடும்ப சூழலும் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் ஏதோ முதியோர்கள் Reservation வனம் மாதிரி தனிமையுணர்வு வந்து விடும்.

இப்படி யோசனை செய்யும்போதே திடீரென்று ஒரு யதார்த்தம் மனசில் வந்து போயிற்று. இன்று சென்னையே இப்படி ஒரு பெரிய முதியோர்கள் அபார்ட்மெண்ட் போல் ஆகிக்கொண்டிருக்கிறதோ என்று தோன்றியது. நடுத்தர குடும்பங்கள் ஒவ்வொன்றிலும் குழந்தைகள் வெளி நாட்டில் இருக்கும் நிலையில் பல முதியோர்கள் தனியாகதான் இருக்கிறார்கள். ஆனால், அக்கம் பக்கம் இருப்பவர்கள், தூரத்து சொந்தம் எல்லாம் அவசரத்துக்கு ஓடி வந்து கைகொடுக்கும் மனம் உடையவர்களாகவும் இருக்கிறார்கள். சென்னையின் மகத்துவம் இது என்றும் தோன்றிற்று.

இருந்தாலும் AgeWell போன்ற அமைப்பும் என் கனவு கட்டிடமும் இன்று இங்கே ரொம்ப அவசியம்.

Wednesday, April 20, 2005

ஒரு நிகழ்வு, இரு வேறு காலக் கட்டங்கள்.

".......... நடந்து முடிந்த பாகிஸ்தான், இந்திய தலைவர்கள் சந்திப்பு வெற்றிகரமாக முடியவில்லை. இரு தரப்பிலும் அதிருப்தி. சின்ன சின்ன சங்கேதங்கள், வார்த்தைப் பிரயோகம் போன்றவை முரண்பட்ட நிலையைப் பிரதிபலித்தன. முஷாரப் இந்த முறை சுத்தமாக வாங்கிப் போக மட்டுமே வந்துள்ளார்; கொடுக்கத் தயாராக இல்லை......"

முஷார·பின் இந்த வார விஜயம் பற்றி பரவலாக ஒட்டு மொத்த ஊடகங்களும் நல்ல விதமாக பேசும்போது நான் எப்படி இப்படி எதிர்மறையாக கூறுகிறேன் என்று வியக்காதீர்கள். 2001 ல் ஆக்ரா மாநாட்டுக்காக அவர் வந்திருந்தபோது நடந்த செய்திகளைப் பற்றி சிங்கப்பூர் தமிழ் முரசுக்கு எழுதியக் கட்டுரையில் இருந்து எடுத்த துண்டு அது.

" டில்லியிலிருந்து எண்ணக்குறிப்புகள்" என்று நான் அப்போது எழுதிக்கொண்டிருந்த அந்த வாரப் பத்தியில், ஆக்ரா மாநாடு தோல்வியடைந்ததற்கு இரு தரப்பிலும் சரியான அணுகு முறை இல்லாததும் ஒரு காரணம் என்று எழுதியிருந்தேன். இரு நாடுகளுக்கிடையே உள்ள உறவுகளிலும் ஒரு லயம் இழைவதும், மறைவதும் தனி மனிதர்களுக்கிடையே இருப்பதுபோல் பல விதங்களில் அணுகுமுறையைப் பொறுத்து இருக்கிறது ; சிறு சிறு செயல்கள், சின்ன சின்ன அசைவுகள், சொற்கள், இவை அனுப்பும் சங்கேதங்களில் இருக்கிறது என்று குறிப்பிட்டு இருந்தேன்.

ஆனால் இந்த முறை, இந்த இரு தரப்பிலும் சங்கேதங்கள் - body language, மற்றும் நல்லுறவுக்கான மனமார்ந்த விழைவு என்று பலவிதங்களிலும் சரியான அணுகு முறை இருந்தது. ஊடகங்களைக் கவருவதில் முஷார·ப் என்றுமே மன்னர். இந்த முறையும் அவர் ஏமாற்றவில்லை. "இந்த முறை நான் வித்தியாசமான மனதுடன் வந்துள்ளேன்" ( I have come with a new heart) என்று சத்தியம் செய்யாத குறையாக கூறியது முதல், கமல் நாத் போட்டோ எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறியவுடன் தன் காமராவை உடனே எடுத்துக் கொடுத்தது வரை நமது ஊடகங்களின் கவனத்தைக் கவர்ந்துள்ளார்.

இந்த முறை பாகிஸ்தான் அதிபரின் வருகையைப் பற்றி வந்த செய்தியெல்லாவற்றையும் படிக்கும்போதும் பார்க்கும்போதும் 2001, ஆக்ரா மாநாட்டின் அப்பட்டமான தோல்வி ஞாபகத்துக்கு வந்து கொண்டே இருந்தது. அன்றைய முஷார·பின் அணுகுமுறையில் ஒரு hostile பார்வை இருந்தது. பேச்சு வார்த்தை ஆரம்பிக்கும் முன்பே காஷ்மீர்தான் முக்கியப் பிரச்சனை; அதில் தீர்வு தெரிந்தால்தான் மற்ற எந்த உறவுக்கும் வழிகோல முடியும் என்ற ரீதியில் பேசினார். ஒரு உடன்பாடு கையெழுத்து இடும் சம்யத்தில் இரு தரப்பிலும் வார்த்தை பிரயோகம் பற்றி பலத்த வேறுபாடு இருந்தது.

இந்த முறை, எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற்போல் மற்ற முக்கிய தலைவர்களையும் - சோனியா, வாஜ்பாய், அத்வானி - சந்தித்து சென்றிருக்கிறார். காஷ்மீர் பிரச்சனை இப்போதைக்கு அப்படியெல்லாம் தீர்ந்துவிடாது; நாளை யாருடன் கைகுலுக்க வேண்டியிருக்குமோ, எதற்கும் இப்போதே ஒரு தனிமனிதராக நட்புறவு ( Personal Rapport) காண்பித்து நல்லுறவு பாதை போட்டு வைத்துக்கொள்ளலாமே என்ற ஒரு புரிந்துணர்வு வந்துவிட்டது என்று நினைக்கிறேன்.

என்னைப் பொறுத்தவரையில் முஷார·பின் அணுகுமுறையில் இது ஒரு நல்ல மாற்றம். காஷ்மீரையும் பேசிக்கொண்டே பக்கவாட்டில் மற்ற உறவுகள் மேம்படவும் வழி செய்ய முடியும் என்ற நம் நிலைப்பாடோடு ஒத்துக்கொள்கிறாரே! " காஷ்மீர் பிரச்சனை தலைவர்கள் பேசி முடிவெடுக்க வேண்டிய விஷயம்; காஷ்மீரைப் பொறுத்தவரையில் தன் அணுகுமுறை தற்போது ஒரே முனையாக ( "unifocal" ) இல்லையென்று அவர் கூறியுள்ளதும் முக்கியமான மனமாற்றம் என்றே தோன்றுகிறது. முஷாரா·ப் யதார்த்தத்தை எதிர்கொள்ள தயாராகிவிட்டரா? அல்லது அவருடைய Public Relations உத்திகளில் இதுவும் ஒன்றா? என்னுடைய Die-hard positive மனசு முதலில் சொன்னதையே தேர்வு செய்கிறது.

Wednesday, April 13, 2005

சார்.... தபால்...

சில நாள் முன்பு பாலாஜி -பாரி தபால்காரர் பற்றி ஒரு பதிவு எழுதியிருந்தார். அந்தப் பதிவு ஏற்படுத்திய நினைவோட்டம் இது.

கொரியர் சேவைகள், கணினி, செல்போன் என்று மாறிவரும் தொழில் நுட்ப யுகத்தில் தபால் துறை எப்படி சமாளிக்கிறது என்று நான் சில சமயம் யோசிப்பதுண்டு - என் சகோதரியிடமிருந்து சில மாதங்கள் முன்பு ஒரு கடிதம் வரும் வரையில்! தொலைபேசியிலேயே எல்லா விஷய்ங்களும் பேசிவிடுவதால் கடிதம் என்ற பழக்கமே எங்களிடையே விட்டுப் போயிருந்தது. ஆனால் ஒரு முறை கணினி உபயோகிக்க முடியாமல், ஆனாலும் போனில் பேசிய சமாசாரங்கள் தவிர எழுத வேண்டிய விஷயங்கள் இருந்ததால் அவள் ஒரு தபால் துறை கவரில் - பழுப்பு நிறத்தில் ஓரத்தில் ஸ்டாம்பு பதிந்து இருக்குமே, ஞாபகம் இருக்கா? - நாலு பக்கம் எழுதி அனுப்பினாள். அந்தக் கவரைப் பார்த்தபோதே எனக்கு வினோதமாக இருந்தது. எவ்வளவு நாளாச்சு இப்படி ஒரு கவரைப் பார்த்து ! சில சமயம் வயதான வீட்டுப் பெரியவர்களிடமிரூந்து இப்போதும் நாலு வரி எழுதி கார்டு வரும். தபால் துறை வாழ்க என்று சொல்ல வைக்கும் சின்ன சின்ன சந்தோஷங்கள். சில வயதானவர்களுடன் கடிதம்தான் சரியான தொடர்பு கொள்ள சௌகரியமான சாதனம். தொலைபேசியில் பேச அவர்களுக்கு அவ்வளவு வசதியாக ( Comfortable) இருப்பதில்லை. தொலைபேசி என்பது ஏதோ தந்திபோல் அவசரத்திற்குதான் என்ற எண்ணம் பலருக்கு இன்னும் இருக்கிறது. ( டெலிபோன் பில்லைப் பார்த்தால் இவர்கள் எண்ணமே தேவலாம் !)

வெளியூர்களிலிருந்தபோது எழுபதுகளில் ஆப்பிரிகாவில் நாங்கள் இருந்த சர்க்கரை ஆலை குடியிருப்பில் வெளி நாட்டுக்குப் பேச வேண்டுமென்றால் தொழிற்சாலையில் அலுவலகத்துக்குள் போய்தான் டிரங்க் கால் போட வேண்டும். சென்னை நம்பரைக் கொடுத்து தொடர்புக்கு " விண்ணப்பித்துவிட்டு" காத்திருப்போம். சில சமயம் அரை மணி அல்லது ஒரு மணி நேரம் கூட ஆகும் - call materialise ஆவதற்கு. சில சமயம் கிடைக்காமலும் ஏமாற்றத்தோடு திரும்புவோம். அப்படியே கால் கிடைத்தாலும், சத்தம் தெளிவாக இருக்காது - ஹலோ / ஹலோ என்று கூவுவதிலேயே பாதி நேரம் ஓடிவிடும். அப்போதெல்லாம் - ஏதோ குரல் கேட்கதான் தோலைபேசியே தவிர, மற்றபடி விஷயங்கள் கடிதங்கள் மூலம்தான் பரிமாறிகொள்ளப்படும். எனக்கு கடிதம் எழுத என்றே, தேசீய பறவை படம் போட்ட வெளிர் நீல வெளி நாட்டு கவர்களை அப்பா சென்னையில் நிறைய வாங்கி தயாராக வைத்திருப்பார். குறைந்தது 10 நாட்களுக்கு ஒரு முறை இரண்டு பக்கமிருந்தும் கடிதங்கள் போய்க் கொண்டிருக்க வேண்டும் - அதுவும் உங்கள் "......" தேதியிட்ட கடிதம் கிடைத்தது என்ற வரிகள் கட்டாயம் இருக்க வேண்டும். அதே போல் நாங்கள் எழுதும் கடிதங்களிலும் கட்டாயம் தேதி இருக்க வேண்டும். ஒரு முறை தேதி போடாமல் கடிதம் எழுதிவிட்டு அப்பாவிடமிருந்து பதில் கடிதத்தில் - உன் தேதி போடாத கடிதம் கிடைத்தது என்று பதில் வரும். கடிதம் வந்தவுடன் முதலில் எழுதிய தேதியைப் பார்ப்பார். தாமதமாக வந்ததோ, தபால்துறை அன்றைக்கு வாங்கிக் கட்டிக்கொள்ளும். இங்க பார், அருணா "..........." தேதியில் எழுதின கடிதம் இப்போதான் சாவகாசமாக இன்று வந்திருக்கு என்று அம்மாவிடம் அங்கலாய்ப்பார்.

கல்லூரியில் ஹாஸ்டலில் தங்கிப் படித்தபோதெல்லாம்கூட இதே கதைதான். அம்மாவிடமிருந்து வாரம் தவறாமல் எண்ணி பத்தே வரிகளில் கடிதம் / போஸ்ட் கார்ட், வந்துவிடும் - ".....கட்டாயம் வாரா வாரம் கடிதம் எழுத மறக்காதே" என்ற பின்குறிப்புடன். ( கூடவே மறக்காதே லிஸ்டில் டானிக் சாப்பிடு, எண்ணெய் தேய்த்துக்கொள்; ஒழுங்காக பாடத்தில் கவனம் செலுத்து; போன்ற அறிவுரைகள் தவறாமல் இருக்கும். அம்மா, அப்பா மாதிரி இந்தக் கடிதம் எழுதும் பழக்கம் வெகு நாள் எனக்கும் இருந்தது. படிக்கும் காலங்களில் யார் யாருக்கு எப்போ எழுதினேன் / பதில் எழுதிவிட்டேனா என்று ஒரு அட்டவணையே போட்டு வைத்திருப்பேன். அப்புறம் கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதைதான்.

என் தாத்தா ஒருவர் இப்படிதான் நிறைய கடிதங்கள் எழுதுவார். ஒரு போஸ்ட் கார்டில் ( கட்டாயம் போஸ்ட்கார்டுதான். இன்லாண்ட் கவரெல்லாம் நினைக்ககூட மாட்டார் "எதுக்கு வேஸ்ட்? ஒரு கார்டு போட்டால் போறாதா?" அந்தக் கார்டிலேயே அத்தனை குடும்ப விஷயமும் அடங்கிவிடும். நுணுக்கி நுணுக்கி சின்ன எழுத்தில்.

அப்பாவுக்கு கடைசி வரை தொலைபேசியில் பேசுவது சௌகரியமாகவே இல்லை. டில்லியிலிருந்து சென்னைக்கு பேசும்போது அம்மாவிடம் கதையளந்துவிட்டு, அப்பாவிடம் கொடுங்கள் என்றால், போனை வாங்கி எண்ணி இரண்டு வார்த்தைதான் பேசுவார். " பேசாமல் கடிதம் எழுதேம்மா... நானும் நிதானமாக படிப்பேன் இல்லையா?" என்பார். என் சோம்பேறித்தனம் அவருக்கு சற்று அலுப்பாக இருந்ததோ என்னவோ; ஒரு முறை சிரித்துக் கொண்டே சொன்னார் - "பக்கம் பக்கமாக பத்திரிகைகளுக்கு கட்டுரை எழுதுகிறாய். உட்கார்ந்து கடிதம் எழுத முடியவில்லையே உனக்கு" ! அவ்வளவுதான். எனக்கு நன்றாகவே உறைத்தது. அதானே, போனில்தான் பேசுகிறோமே என்று நினைத்துக் கொண்டு என்ன மடத்தனம் செய்கிறோம்? கடிதம் எழுதினால் வைத்துக் கொண்டு நிதானமாக படிப்பார் இல்லையா? அதன் பிறகு மீண்டும் அவ்வப்போது கடிதம் எழுத ஆரம்பித்தபின்தான் எனக்கும் நிம்மதியாக இருந்தது.

இன்று தபால் துறையின் பெரிய வருமானம், அச்சு மற்றும் எலக்டிரானிக் ஊடகங்களின் "உங்கள் கேள்விகளை/ பதில்களை / விடைகளை ஒரு கார்டில் எழுதிப்போடுங்கள்" என்று வரும் அறிவிப்புகள், மற்றும் பெருவாரியான Junk Mail என்று நாம் குறிப்பிடும் விளம்பர வகை தபால்கள் போன்றவைதான். இந்த தொழில் நுட்ப காலத்தில் தபால் துறை ஒன்றும் பின் தங்கிவிடவில்லை என்பதே ஒரு மகிழ்ச்சி தரும் அம்சம். நிறைய தொழில் நுட்பம் புகுத்தியிருக்கிறார்கள். ஈ போஸ்ட் - கணினி /இணைய வசதி இல்லாதவர்கள் கூட ஈ மெயில் எழுத பெற்றுக்கொல்ள வசதியாக ஆரம்பிக்கப்பட்ட சேவை - போன்ற சேவைகள் மூலம் தபால் துறையை நவீனப்படுத்தல் வேகமாக நடந்து கொண்டுள்ளது. பெரும்பாலும் சார்டிங் வேலைகள் இயந்திரமயமாக்கப்பட்டுவிட்டன. ஒரு திறமையான சார்ட்டர் ஒரு மணி நேரத்தில் 1000 கடிதங்கள் பிரித்து தொகுப்பார் என்றால் பிரிக்கும் இயந்திரங்கள் 30,000 கடிதங்களை அதே நேரத்தில் செய்யும். ஆனால் இதற்காக அதிகம் ஆட்குறைப்பு செய்யப்படவில்லை. பதிலாக வேறு பிரிவுகளில் அவர்கள் இயங்க பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் புதிதாக வேலைக்கு எடுத்துக்கொள்ளப்படும் விகிதம் குறைக்கப்பட்டுள்ளது.

India Post இந்தியா முழுவதும் ஒரு வருடத்தில் 1575 கோடி தபால்கள் அனுப்புகிறது. 155,618 போஸ்ட் ஆபீஸ்கள் இயங்குகின்றன - அண்டார்டிகாவில் உள்பட. அண்டார்டிகாவில் முதன் முதலில் "மைத்திரி" என்ற இந்திய ஆராய்ச்சி நிலையம் அமைத்தவர்களுள் ஒருவரை டில்லியில் பேட்டி காண சென்றபோது அவர் முதலில் எனக்கு கொடுத்தது அந்த ஆராய்ச்சி நிலையம் போஸ்ட் ஆபீஸ் முத்திரை தாங்கிய முதல் நாள் கவர். கிராமப்புறங்களில் இருக்கும் போஸ்ட் ஆபீஸ் எண்ணிக்கை 139,081. மூலை முடுக்கெல்லாம் இருக்கும் தபால் பெட்டிகள் எண்ணிக்கை 564,701. மொத்தம் 4.2 லட்சம் பேர் தபால் துறையில் வேலை செய்கிறார்கள். இன்னும் 3 லட்சம் பேர் உபரியாக ( extra departmental ) வேலை செய்கிறார்கள். ராணுவம், ரயில் நிர்வாகம், இவற்றுக்கு அடுத்தபடியாக இந்தியாவின் மிகப்பெரிய படியளப்பவர் / எஜமானர் தபால்துறைதான்.

அதுசரி, கடிதங்கள் / கடிதம் எழுதும் பழக்கம் இன்று மியூஸியத்தில் வைக்கும் நிலையில் தபால் துறை எப்படி உயிர் வாழுகிறது? வணிகத் துறை இன்று தபால் துறைக்கு பெருமளவில் உதவுகிறது. வீட்டு வாசலில் தொங்கும் நம் தபால்பெட்டியை நிரப்புவது எல்லாவிதமான வணிக சம்பந்தமான விளம்பர உத்திகள். விதம் விதமாக பத்திரிகைகள் இன்று சந்தாவை அதிகரிக்க சலுகைகள் பல்விதங்களில் கொடுக்க, இங்கே தபால்காரர் நம் வீட்டுக்கு பல முறை வருகிறார். கடையில் வாங்குவதைவிட வருடச் சந்தாவில் பல பத்திரிகைகள் லாபமாக இருக்கே ! தவிர, டன் டன்னாக அச்சில் வெளியாவது எல்லாம் எப்படியோ எங்கேயோ நம்மை வந்து அடைய வேண்டுமில்லையா? இதில் தபால் துறை பெரும்பங்கு வகிக்கிறது. தவிர இருக்கவே இருக்கிறது தொலைகாட்சி / பத்த்ரிகைகள், ரேடியோ போன்ற ஊடகங்களின் போட்டிகள் வகையறா. இதிலும் கணிசமான போக்குவரத்து தபால் துறைக்கு கிடைக்கிறது.

இதெல்லாம் போக இன்று தபால் துறை ஒரு வங்கி மாதிரி இயங்க ஆரம்பித்துவிட்டது. இவர்கள் தளத்தில் போய்ப் பாருங்கள். ஒரு நிதி நிர்வாகத்தின் அத்தனை பிரிவுகளும் உள்ளன. இன்சுரன்ஸ் உள்பட. போதாதற்கு இப்போதெல்லாம் மிகப் பாதுகாப்பான, வங்கிகளைவிடவும் அதிக வட்டி கிடைக்கும் முதலீட்டு அமைப்பாக இருப்பது போஸ்ட் ஆபீஸ் பத்திரங்கள்தாம். நிறைய பென்ஷன்காரர்கள் தங்கள் ரிடையர்மெண்ட் பணத்தை கண்ணை மூடிக்கொண்டு போஸ்ட் ஆபீஸில் போட்டு விடுகிறார்கள்.

தவிர, வருமானத்தை உயர்த்த, மூலை முடுக்கில் இருக்கும் போஸ்ட் ஆபீஸ்களில் வணிகக் கடைகளை கூட அமைக்கலாமா என்ற யோசனையும் இருப்பதாக எங்கோ படித்தேன். ஆனால் அதற்கு முதலில் போஸ்ட் ஆபீஸ் கட்டிடங்களை கவனிக்க வேண்டும் இன்றும் பெரும்பாலான போஸ்ட் ஆபீஸ்கள் படு பழசான விக்டோரியா காலத்து கட்டிடங்களிலேயே இயங்குகின்றன. சமீபத்தில் அதிசயமாக எப்போதோ சென்னையில் பொழியும் மழையில், பூக்கடை போஸ்ட் ஆபீஸின் கோலத்தை ஹிந்து வெளியிட்டு இருந்தது. ஒழுகும் கூரை, சிதிலமாகிப்போன சுவர், சேறும் சக்தியுமாக நுழைவாயில் - வாடிக்கையாளர்களும், போஸ்ட் ஆபீஸில் வேலைசெய்பவர்களும் படும் கஷ்டத்தைப் படம் போட்டுக் காட்டிய மறு நாள் போஸ்ட் ஆபீஸ்கள் கட்டிடங்களை புதுப்பிக்க பணம் ஒதுக்கப்பட்ட செய்தி வந்தது. இதேபோல் கீழ்ப்பாக்கத்தில் Flowers Road போஸ்ட் ஆபீஸ¤க்கு சமீபத்தில் போனபோது பல கணினிகள் ஒரு மூலையில் பெட்டிகள் கூட பிரிக்கப்படாமல் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. விசாரித்ததில் போஸ்ட் ஆபீஸ் கணினி மயமாக்கல் முயற்சியின் முதல் அத்தியாயம் என்று புரிந்தது. " கட்டிடம் மிகப் பழசுங்க. இந்த மாடர்ன் சாமான்களெல்லாம் வைக்க ஏத்தாற்போல் புதுப்பிக்கணும் அல்லது இடம் மாற வேண்டும். அந்தக் காலத்தில் வாடகைக்கு எடுத்த இடம் இது. புது இடம் மாறலாம் என்றால் அதிகம் வாடகை ஆகிறது. எப்போ இடம் மாற்றம் வருமோ அல்லது கட்டிடம்தான் புதுப்பிக்க படுமோ தெரியவில்லை," என்று அங்கே வேலை செய்யும் ஒருவர் கூறினார். உயர்ந்த கூரையில் காரைகள் பெயர்ந்து, ஒட்டடைகள் படர்ந்து ஜன்னலில் அருகில் இருக்கும் மரத்தின் வேர் / கிளைகள் உள்ளே எட்டிப் பார்க்க, கண்ணாடி உடைந்த ஜன்னல் ஒன்றில் "சிங்கப்பூர் போஸ்ட்" முத்திரை தாங்கிய சாக்குப் பை ஒன்று பாதி மறைத்திருக்க, ( ஹ்ம்ம்.... இதிலும் ஓசியாக வந்த சாக்குதானா கிடைத்தது?) போஸ்ட் ஆபீஸ் சீர்திருத்தம் எப்போதான் இடம் பெறும் என்ற கவலையைக் கொண்டு வந்தது.

போஸ்ட் ஆபீஸ் நிர்வாகத்தில் நிறைய புதுமைகளைக் கொண்டுவருவது இருக்கட்டும்; இப்போதைக்கு இந்தத் துறை ரூ. 1500 கோடிகள் நஷ்டத்தில்தான் இயங்குகிறது.

ஒரு போஸ்ட் கார்டுக்கு ஆகும் செலவு 336 பைசாஇதில் வருமானம் - 25 பைசா. நிகர நஷ்டம் 311. அல்லது ஒரு கார்டுக்கு அரசு அளிக்கும் தள்ளுபடி (subsidy) 311 என்றும் வைத்துக் கொள்ளலாம்.

ஆனாலும் நஷ்ட அளவைக் குறைக்க பல திட்டங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன - தனியார் துறைக்கு பாதி வேலைகளைப் பகிர்ந்து கொள்வது, நிறைய வியாபாரம் இல்லாத போஸ்ட் ஆபீஸ்களை எடுத்துவிட்டு, அடிப்படை ஸ்டாம்பு, கவர் விற்பனைகளை சாதாரண கடைகளில் விற்க அனுமதி அளிப்பது போன்ற திட்டங்கள். பின்னே? தபால் துறையும் ஒரு நாள் காலத்திற்கேற்ப ஜீன்ஸ¤க்கு மாற வேண்டாமா?

Saturday, April 02, 2005

இதை எழுதும் போது போப்பாண்டவரின் நிலை "கவலைக்கிடமாக" என்ற அறிவிப்பில்தான் இருக்கிறது. அவ்வப்போது நினைவிழக்கிறார். மற்றபடி கோமாவில் விழவில்லை என்கிறது வாடிகன்.

பலவருடமாக கோமாவில் இருந்து பெற்றோரும் கணவரும் எதிர் முனைகளில் வாதாட, ஒரு வழியாக இரண்டு நாள் முன்பு மறைந்த Schiavo வின் நினைவு வருகிறது. தான் இறுதியை நெருங்கிவிட்டோம் என்று தோன்றிய பிறகு போப்பாண்டவர் தனக்கு சிகிச்சை ஏதும் தேவையில்லை என்று மறுத்துவிட்டு ஆஸ்பத்திரிக்குப் போகாமல் தன் இடத்திலேயே இருக்க முடிவு செய்துவிட்டார். ஒரு வேளை அவர் கோமாவில் முழுக நேர்ந்தால் அவருக்கு உயிரைக் காப்பாற்ற முயற்சிகள் செய்வார்களா? அல்லது ஒரு முயற்சியும் செய்ய மாட்டார்களா? முந்தையது என்றால் இத்தனை நாளும் வாடிகன் ஆதரித்து வந்த கொள்கையாகும். பின்னது என்றால் வாடிகன் மிகவும் எதிர்த்த கொள்கையாகும் இல்லையா?

தான் ஆஸ்பத்திரி போக வேண்டாம் என்று முடிவெடுத்த சமயம் ஒரு வேளை போப்பாண்டவருக்கு தோன்றியிருக்குமோ - Schiavo வும் கோமாவில் இருந்தாலும் அமைதியாக தொந்தரவில்லாமல் மறைய வேண்டும் என்றுதான் நினைத்திருப்பாள் என்று நினைத்திருப்பாரோ?

வயது ஒரு கேள்வியே அல்ல. மருத்துவ எல்லைகளின்படி தான் பிழைக்க வாய்ப்பில்லை என்று அறிந்தபின்னர் அவர் சிகிச்சை தேவையீலை என்று முடிவெடுத்தார். Schiavo விஷயத்தில் வருடக்கணக்கில் சிகிச்சையளித்தும் பலனளிக்காமல் மருத்துவ எல்லைகளைத் தாண்டிய நிலையில் அந்தப் பெண்ணும் தன் விருப்பத்தை சொல்லக் கூடிய நிலையில் இருந்திருந்தால் அவரைப் போல் ஒரு முடிவைதான் சொல்லியிருப்பாளோ?

தெரியவில்லை.

புரியவில்லை.

ஆனாலும் பல விதங்களில் John Paul II, பெருவாரியாக மக்களைக் கவர்ந்தவர். 400 சொச்சம் வருடங்களுக்குப் பிறகு இத்தாலியர் அல்லாத முதல் போப்பாணடவர். மக்களிடையே வெகு இயல்பாக பழகி அவர்கள் மனங்களை வென்றவர். தன்னைச் சுட முயற்சித்த ஒருவனை சிறையில் கண்டு சாதாரண நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு சகஜமாக பேசும் புகைப்படம் ஒன்றைக் கண்டபோது அவரின் இந்தப் பண்பும் அன்பும் மனதைத் தொட்டது.

ஆனாலும் அபார்ஷன், பெண்களுக்கு மதச் சடங்குகளில் / சர்ச்சுகளில் சம உரிமை மறுப்பு, போன்ற விஷயங்களால் பெண் உரிமைவாதிகளுக்கு இவரிடம் மகா கோபம். இன்று பிபிசி பேட்டியில், Catholics for Free Choice என்ற அமைப்பைச் சேர்ந்த ஒருவர் அழுத்தமாக கூறினார்: " அவர் எவ்வளவோ நல்லது செய்துள்ளார் மறுக்கவில்லை. நானும் இந்த இரண்டு மூன்று நாட்கள் அவரைப் பற்றி எதுவும் வன்மையாக ஏதும் சொல்ல மனம் வராது. ஆனாலும் ஒன்று சொல்ல விரும்புகிறேன். Lots of people are suffering and they are suffering, BECAUSE of the Church. Not INSPITE of the Church." இவ்வளவு ஆணித்திரமாக இவர் கூறக் காரணம் என்ன என்று கூகிளினேன். இந்த அமைப்பைப் பற்றி தகவல்கள் இருந்தாலும் இவர் குறிப்பிடுகிற அந்த Sufferings" என்ன என்று முழுமையாக புரிந்து கொள்ள முடியவில்லை. அறிந்தவர்கள் பகிர்ந்து கொள்ள முடியுமா?

இதன் நடுவே புதிய போப்பாண்டவர் தேர்ந்தெடுக்கும் முறையைப் பற்றி ஹிந்துவில் இந்தக் கட்டுரை நன்றாக அலசியுள்ளது. எல்லாக் கார்டினல்களும் தாங்கள் தேர்ந்தெடுத்தபின் அந்தக் காகிதங்களை எரிய விடுவார்களாம். புகைபோக்கியில் வெளியே புகை கறுப்பாக வெளி வந்தால் போப்பாண்டவர் தேர்வு எதுவும் முடிவாகவில்லை என்று அர்த்தமாம். தேர்வு வெற்றிகரமாக நடந்துவிட்டால் எரிவதில் ஏதோ ஒரு பொடியைச் சேர்த்து புகை வெள்ளையாக வெளியே வரும்படி செய்வார்களாம் !