Saturday, November 26, 2005

புளூக்கர் விருது !!

இல்லீங்க. எழுத்துப்பிழை அல்ல. புளூக்கர் என்றுதான் சொன்னேன் !!

ஆறு மாசமா சென்னை மழைப் போல ( ஹ்ம்ம்.. இப்படி சொல்லவும் ஒரு காலம் வந்ததே...) விடாமல் வலைப் பதிவில் எழுதுகிறீர்களா? எழுதி எழுதி புத்தகமேப் போடலாம் என்று ஜோக்கடித்துக்கொண்டிருக்கிறீர்களா? யார் கண்டார்கள்? நீங்கள் ஒரு வேளை புளூக்கர் விருது வாங்கிவிடுவீர்களோ என்னவோ?

புக்கர் விருது தெரியும். அதென்ன புளூக்கர் விருது?

இன்று என் தபால் பெட்டியில் வந்த ஒரு செய்தித் தொகுப்பிலிருந்து வந்த செய்தி


ஆயிரம் / இரண்டாயிரம் / நாலாயிரம் டாலர்கள் என்றெல்லாம் கண்ணில் பட்டது.

இதை நடத்துபவர்களுக்கு ஜனவரி 30க்குள் போட்டிக்கான விண்ணப்பங்கள் போய்ச் சேர வேண்டுமாம். ஹ்ஹ்ம்ம்.. சீக்கிரம்.

முக்கிய பி.கு: புளூக்கர் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும்.

போச்சுடா - சப்பென்று ஆகிவிட்டதோ? :-)

Friday, November 18, 2005

தகவல் திருவிழா

திசைகள் நவம்பர் இதழில் எழுதியது.

துனிசியாவில் தகவல் தொழில் நுட்பத்திருவிழா.

இந்த மாதம் - நவம்பர் 2005 - 16ந் தேதியிலிருந்து 18 ந் தேதி வரை வட ஆப்பிரிக்க நாடான துனிசியாவில், ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவில் இரண்டு நாள் ஒரு தகவல் திருவிழா நடக்கப்போகிறது. அதென்ன தகவல் திருவிழா?

தகவல் தொழில் நுட்பம் பெருகி வரும் இந்நாளில் அபரிதமானத் தகவல்கள் சில சமயம் நம்மைக் குழப்புகின்றன. அல்லது சில சமயம் சரியானத் தகவல்கள் சரியான முறையில் தேவையானவர்களுக்கு சென்றடைவதில்லை. உலகில் ஒரு பக்கம் சிலர் தகவல் வெள்ளத்தில் திக்குமுக்காடுகிறார்கள்; வேறு சிலரோ அடிப்படைத் தகவல் சாதனத்துக்கூட வசதி இல்லாமல் தகவல் வரட்சியில் இருக்கிறார்கள். இந்த இடைவெளிக்குப் பாலம் கட்டுவதுதான் இந்தத் திருவிழாவின் - ஐக்கிய நாடுகள் சபையின் உலகத் தகவல் சமூக உச்சி மாநாடு ( World Summit on Information Society.) - WSIS.நோக்கம்.

சமீபத்தில் இந்திய வலைப்பதிவுலகில் ஒரு சர்ச்சை ஓடிக்கொண்டிருந்தது. ஒரு கல்வி நிறுவனம் பற்றி ஒரு இளைஞர் பத்திரிகையில் வந்தத் தகவல்களை வைத்து ஒரு ஆங்கில வலைப்பதிவாளர் தன் வலைப்பதிவில் அந்தக் கல்வி நிறுவனம் பற்றி கேள்விகளை எழுப்பினார். அந்த நிறுவனம் தன்னிடம் இருப்பதாக ஊடகங்களில் பெரிதும் விளம்பரப்படுத்தப்படும் சிறப்புகள் மிகைப்படுத்தப்பட்டவை என்று குற்றம் சாட்டி அடுத்தடுத்துக் கருத்துகள் வலையுலகில் வர ஆரம்பித்தன. அதே சமயம், இன்னொரு பக்கம் அந்த நிறுவனத்தை வேண்டுமென்றே அபாண்டமாகத் தாக்குவதாக பதில் வாதங்கள் அந்த நிறுவனத்தின் மாணவர்கள் / ஆதரவாளர்கள் சொல்வதாக வெளியாயின.

அவ்வளவுதான்; புகைப் பெரும் நெருப்பாகப் பற்றிக் கொண்டது. அவர் எழுதியதைக் கண்டித்தும் ஆதரித்தும் சரமாரியாக ஆங்கில வலைப் பதிவுலகில் விவாதங்கள் நடந்தன. பாதிக்கப்பட்ட நிறுவனம் அந்த வலைப்பதிவாளர் மீது அவதூறு வழக்குப் போட்டது. அவர் வேலை செய்துகொண்டிரூந்த நிறுவனத்தையும் அது விடவில்லை. அவர் அந்த நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்படாவிட்டால் அந்த அலுவலகம் முன்பு மறியல் செய்யப்போவதாக சொன்னவுடன், அந்த வலைப்பதிவாளர், தன் நிறுவனத்தின் மீது பழி வராமல் இருக்கத் தன் வேலையை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

ஊடகங்களில் அந்த நிறுவனம், வணிக நிறுவனம்போல் பெருமளவு செலவழித்து விளம்பரம் செய்து தங்கள் நிறுவனத்திற்கு மாணவர்களைக் கவர முயற்சித்ததோ அல்லது அந்த நிறுவனத்தின் தரம் பற்றி சர்ச்சைகள் கிளம்பியதோ, அல்லது யார் தரப்பு வாதம் சரி என்பதோ இப்போது கேள்வியல்ல. கல்வியும் இன்று ஒரு லாபகரமான வணிகங்களில் ஒன்று என்பதைப் புற்றீசல் போல் பெருகி வரும் வணிக ரீதியிலான கல்வி நிறுவனங்கள் உணர்த்துகின்றன. குறிப்பாக தொழில் கல்வி நிறுவனங்கள் இந்த வகையில் நிறையவே உள்ளன. ஒரு கல்வி நிறுவனத்தின் தரத்தை மதிப்பிடும் குறியீடுகளைக் கொண்டும், அந்த நிறுவனத்திற்குத் தொழிலுலகில் இருக்கும் மதிப்பையும் ஆராய்ந்துப் பார்த்து, தேர்ந்து எடுத்துச் சேருவது இன்று பயனீட்டாளர்களின் பொறுப்பாகிவிடுகிறது.

ஆனால் பேச்சு /எழுத்து சுதந்திரம் பற்றி பல கேள்விகளை இந்தப் பிரச்சனை எழுப்புகிறது. ஒருவரைப் பற்றியோ அல்லது ஒரு நிறுவனத்தைப் பற்றியோ கருத்தைச் சொல்வதற்கு ஏதும் வரம்பு / வரைமுறை இருக்க வேண்டுமா? குற்றம் / குறை தென்படில், அதைச் சுட்டிக்காட்ட ஏதும் நியதிகள் உள்ளதா? பேச்சு சுதந்திரம் என்ற பெயரில் தனி மனிதரையோ அல்லது நிறுவனத்தையோத் தாக்குவது சரியா? அப்படியே தாக்கிக் கருத்து வெளி வந்தாலும், பாதிக்கப்பட்டவர்கள் பாதித்தவர்களைக் கடுமையாக தண்டிக்க விழைவது சரியா? மேலே கண்டப் பிரச்சனையில் அந்த நிறுவனம் விமரிசனம் வாழ்வில் ஒரு அம்சம் என்று பேசாமல் இருந்திருக்கலாம். ( ஒரு பத்திரிகைப் பேட்டியில் அந்த நிறுவனத்தின் சார்பாக ஒருவர் கூறினார் - வலைப்பதிவுகளில் எழுதப்படுவதைத் தாங்கள் ஒரு பொருட்டாக மதிப்பதில்லை என்று. அப்படியானால், அந்த வலைப்பதிவாளர் மீது வழக்கேத் தொடர்ந்திருக்க வேண்டாமே என்ற கேள்வி எழுகிறது.) அல்லது தங்கள் நிலையை விளக்கி ஊடகங்களில் இன்னொரு முழு பக்க விளம்பரம் கொடுத்திருக்கலாம். இப்படி செய்யாமல், எழுதியவர்கள் மேல் வழக்குத் தொடர்ந்ததோ அல்லது கருத்துக் கூறியவர்களில் ஒருவர் தன் வேலையை ராஜினாமா செய்ய வைத்ததோ சரியா?

இதேபோல் சில மாதங்கள் முன்பு, ஒரு பெரிய இந்தியப் பத்திரிகை நிறுவனம் வேறொரு வலைப் பதிவாளர் மீது அவதூறு வழக்குத் தொடர்ந்தது. இன்னும் உலகளவில் சொல்லப்போனால், கைதான அமெரிக்கப் பத்திரிகையாளர் நியூயார்க் டைம்ஸ் ஜூடித் மில்லர் மீதானக் குற்றச்சாட்டு, ( தனக்குத் தகவல் கொடுத்தவர் பெயர் சொல்ல மறுத்தக் குற்றம் - பின்னால் மனம் மாறி அல்லது குற்றச்சாட்டிலிருந்து விடுபட, மசிந்தார் என்பது வேறு விஷயம் ) மற்றும் சீனாவில் தினாமன் சதுக்க 15 வது ஆண்டு நிறைவு நினைவு கூர்தல் விஷயங்களை ஊடகங்கள் "கண்டுகொள்ள வேண்டாம்" என்று சீன அரசாங்கம் எச்சரித்ததைப் பற்றி வெளியிடவேண்டாம் என்ற ஆணை இருந்தும் மீறி, இந்தத் தகவலை மின் அஞ்சல் மூலம் வெளியுலகுக்குத் தெரியபப்டுத்தி, அதனால் கைதான சீன நிருபர் ஷி தவோ, என்று தகவல் பரிமாற்றத்தின் பாதகமான விளைவுகளைச் சந்தித்தவர்கள் பலர்.

இந்த நிலையில் மேலே உள்ளக் கேள்விகள் அவசியமாகின்றன. கருத்துச் சுதந்திரம் நசுக்கப்பட வேண்டுமா? வலிமையுள்ளவர்கள் கருத்துச் சுதந்திரத்தை நசுக்கினால் உண்மைகள் எப்படி வெளியே வரும்? ஆனால் தனி மனிதர் அவதூறாக மாறாமல் கருத்துச் சுதந்திரத்தின் கண்ணியம் கடைப்பிடிக்க முடியுமா? இரண்டுக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன? யார் நிர்ணயிப்பது?

கேள்விகளும் பதில்களும் அவரவர் பார்வையைப் பொறுத்தது. ஆனால் இப்படி பல விஷயங்களில் எது சரி எது சரியல்ல என்ற பாகுபாடு இன்று மங்கலாக உள்ளது. நிஜம் எங்கேயோ நடுவேப் பொதிந்துள்ளது. தகவல் வெள்ளத்தின் விளைவுகள் இவை.

இன்னொரு பக்கம், தகவல் வெள்ளத்தினால் - தகவல் தொழில் நுட்ப மேன்மையால் கிடைக்கும் அனுகூலங்களும் ஏராளம். 2000 ம் ஆண்டு அகமாதாபத் பூகம்பத்தின் போது உடனுக்குடன் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு உதவி கிடைக்கவும், காணாமல் போனவர்கள் உறவினர்கள், நண்பர்கள் சேரவும் காரணமாக இருந்தது தகவல் தொடர்பு சாதனங்கள். 2004 சுனாமியின் போதும் இதே நடந்தது. அதே சுனாமியின்போது இந்தோனேஷியாவில் பாதிப்பு வந்ததுமே ஒரு எச்சரிக்கைத் தகவல் உடனுக்குடனே இதர ஆசிய நாடுகளை வந்து சேர்ந்திருந்தால் ஓரளவேனும் பாதிப்பைக் கட்டுப்படுத்தியிருக்கலாம் என்றும் சொல்லப்பட்டது. இப்படி ஆக்கலும் அழித்தலும் என்று பலவித பரிமாணங்கள் கொண்டுள்ளது இன்றையத் தகவல் பரிமாற்றம்.

ஒரு சமுதாயத்தில் பலவித நல் விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடிய தகவல் பரிமாற்றம், ஒரு சமுதாயத்தின் பார்வையையும் மாற்றக்கூடிய சக்தி படைத்ததாகும்.

கணினி, இணையம், செயற்கைக்கோள் தொலைக்காட்சித் தொடர்புகள் என்று பலவிதத் தகவல் மற்றும் தொடர்பு சாதனங்களின் தொழில் நுட்ப வளர்ச்சியால் பலவிதங்களிலும் பல திசைகளிலிருந்தும் வினாடிக்கு வினாடி செய்திகள் / தகவல்கள், அவை உருவாகும் நேரத்திலேயே, பூகோள ரீதியான தடங்கல் ஏதுமின்றி நம்மை வந்தடைகின்றன. இவை, நம் அன்றாட வாழ்க்கையில், நாம் செய்யும் வேலைகளில், நம் எண்ணங்களில் என்று பலவிதங்களில் ஏற்படுத்தும் பாதிப்புகள் கணிசமானது.

அதேபோல், சுனாமி, சூறாவளி, பூகம்பம் அல்லது பஞ்சம், போர் என்று உலகின் எந்த மூலையில் மக்கள் பாதிக்கப்பட்டாலும் உடனுக்குடன் உலக மக்கள் பலவித உதவிகளை வாரி வழங்க உதவுகின்றன. மருத்துவம், பொருளாதாரம், தொழில் நுட்பம், மற்றும் கலை வளர்ச்சி என்று பல விதங்களில் பரிமாறிக்கொள்ளப்டும் தகவல்கள் மனிதனின் வாழ்க்கை இன்னும் மேம்பட உதவுகின்றன.

ஆனால் இதே தகவல் பரிமாற்றங்கள், அனாவசிய வதந்திகளும் ஆதாரமில்லாத செய்திகளும், தனி நபர் தாக்குதல்களும் உருவாகவும் காரணமாகின்றன. இப்படி நல்லதும் பொல்லாததுமாகக் கலந்து தகவல் உலகம் இன்று உலகளவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது.
செய்தி அல்லது தகவல் என்பது இன்றைய வாழ்க்கையில் ஒரு இன்றியமையாத அம்சமாகிவிட்ட நிலையில் எவ்வளவு தூரம் நமக்கு வந்து சேரும் தகவல்கள் உண்மையானவை/ நம்பத்தகிந்தவை? யார் எந்த செய்திகளை வெளியிடுகிறார்கள்? ஒரு செய்தியின் பின்புலம் என்ன? எவ்வளவு தூரம் இந்தத் தகவல் பரிமாற்றங்கள் சாதரண மக்களைப் பாதிக்கின்றன? பொருளாதார லாபங்கள் எவ்வளவு தூரம் தகவல்கள் பரிமாற்றங்களை உருவாக்குகின்றன?

இப்படி ஆயிரம் கேள்விகள் இன்று தோன்றுகின்றன. பலவிதமான ஊடகங்களின் மூலம் ஏற்படும் பிரமாண்டமான தகவல் வெடிச்சிதறலின் ஒவ்வொரு துணுக்கும் நம்மை வந்து சேரும்போது அதனூடே பலவித பரிமானங்கள் அடங்கியுள்ளது. இதில் உண்மை எங்கே என்று தேடுவது சாமான்யமான காரியம் அல்ல. பல சமயங்களில் ஒன்றுமில்லாத சமாசாரங்கள் ஊடங்களிடையே பெரிதாக சித்திரம் தீட்டப்படும். சாதாரண மக்களின் வாழ்க்கையில் முக்கியமாக இருக்கும் பல விஷயங்கள் இந்த அதீதத் தகவல் வெள்ளத்தில் எங்கோ அடிபட்டுக் காணாமல் போய்விடும். வெள்ளமாகக் கொட்டும் தகவல் காட்டாற்றில், உண்மை என்பதை, பல சமயங்களில் வைக்கோல் போரில் ஊசித் தேடும் வேலையாகதான் ஆகிவிடுகிறது.

இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம், இந்தத் தகவல் வெள்ளம் சமாசாரங்களெல்லாம் உலகெங்கிலும் தொழில் நுட்ப மற்றும் பொருளாதார வளர்ச்சி இருக்கும் ஒரு குறிப்பிட்ட சதவிகித சமுதாயத்தினரிடையேதான். கணிசமான அளவு உலக மக்கள் இன்னும் இந்தத் தகவல் மழையின் பயனை அடையாமல் இருக்கிறார்கள். இந்த தொழில் நுட்ப இடைவெளியைக் ( Digital Divide ) குறைக்கவும், தகவல் பரிமாற்ற தொழில்நுட்பங்களின் ஆதாயங்கள் உலகில் எல்லா மக்களையும் சென்றடையவும் உலக நாடுகள் உட்கார்ந்து திட்டமிடுவது அவசியம் என்று தொடங்கியதுதான் ஐக்கிய நாடுகள் சபையின் உலகத் தகவல் சமூக உச்சி மாநாடு ( World Summit on Information Society.) - WSIS.
1998 ல் நடைபெற்ற உலகத் தொலைத் தொடர்பு சங்கத்தின் ( International Telecommunication Union - ITU) மாநாடு ஒன்றில், வட ஆப்பிரிக்காவில் உள்ள துனிசியா நாடு பரிந்துரைத்ததின் பேரில் இப்படி ஒரு உலகத் தகவல் சமுக உச்சி மாநாடு ஒன்றை நடத்த ஐ. நா சபையிடம் கோர வேண்டும் என்று ஆரம்ப வித்திடப்பட்டது. உலகத் தொலைத் தொடர்பு சங்கம் இந்த உச்சி மாநாட்டை இரண்டு பகுதிகளாக நடத்தத் தீர்மானித்தது. ஐ நா சபையின் ஜெனரல் அசெம்பளியின் ஒப்புதலும் கிடைத்தது.

இப்படியாகதானே கடந்த டிசம்பர், 2003ல் உச்சி மாநாட்டின் முதல் கட்டம் ஜெனிவாவில் நடந்தேறியது. இப்போது இரண்டாம் கட்டம், துனிசியாவில், இந்த மாதம் - நவம்பர் 2005 - 16ந் தேதியிலிருந்து 18 ந் தேதி வரை இரண்டு நாள் நடக்கப்போகிறது. " மற்ற உச்சி மாநாடுகளிலிருந்து இந்த மாநாடு சற்றே வேறுபடுகிறது - பொதுவாக உலகில் இருக்கும் பலவித அபாயங்கள் பற்றிதான் மாநாடுகளில் அலசுவார்கள். இங்கோ, தகவல் பரிமாற்றத்தை எப்படி உலகைற்கு ஆதாயமான வழிகளில் உபயோகித்துக்கொள்ளலாம் என்று திட்டமிடப்படுகிறது. " என்று ஐ நா சபையின் தலைவர் கோபி அனான் கூறியுள்ளார். ஐ நா சபையின் Millennium Development Goals என்ற திட்டம் நிறைவேறவும் இந்த உச்சி மாநாட்டில் தகவல் தொடர்புகள் மூலம் வழிகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தனி மனிதர் வாழ்க்கை முன்னேற, அறிவு சார்ந்த வளர்ச்சி பெற, உலகில் ஜனநாயகம் தளர, பரஸ்பரம் நட்பு விரிய, என்று சுமார் 67 குறிக்கோள்கள் அடையாளம் காணப்பட்டு வரையரைக்கப்பட்டுள்ளது. இந்த குறிக்கோள்கள் ஜெனிவாவில் 2003 ல் நடந்த முதல் கட்ட மாநாட்டில் அறிவிக்கப்பட்டது. (Declaration of Principles)

அடுத்து எப்படி குறிக்கோள்களை அடையப்பபோகிறார்கள் என்பது Plan of Action அறிக்கையில் உள்ளது.

இந்த திட்ட அறிக்கையில் குறிப்பிடத்தகுந்த சில அம்சங்கள்: உலகில் அரசாங்கங்களுக்கு எத்தனை முக்கிய பங்கு உள்ளதோ அதே அளவு / சொல்லப்போனால் அதைவிட அதிகமாகவே - உலக மக்களுக்குத் தகவல்கள் சரியான முறையில் சென்றடையச் செய்வதில் தனியார் நிறுவனங்களுக்குப் பொறுப்பு உள்ளது. தகவல் தொடர்பு சாதனங்களைச் சரியான முறையில் பயன்படுத்தி தகவல்கள் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவதில் பொது மக்களுக்கும் அதிக பொறுப்பு உள்ளது. தகவல் தொடர்பு தொழில் நுட்பங்களை உபயோகித்து அறிவுசார் வளர்ச்சி, சாதாரண மக்களையும் சென்றடையச் செய்வதும், எந்த ஒரு தகவலும் தங்குத் தடையில்லாமல் சாதாரண மக்களுக்கும் கிடைக்க வழி வகைகள் செய்வதும், இந்த திட்ட அறிக்கையின் முக்கிய அம்சங்களில் ஒரு பகுதி. உறுப்பினர் நாடுகளில் மகளிருக்கு இந்தத் தகவல் தொடர்பு தொழில் நுட்பங்களின் ஆதாயங்கள் முழுமையாகப் போய்ச்சேரவும் பிரத்தேயக வழி செய்யப்படும். வளர்ந்த நாடுகள் வளரும் நாடுகளுக்கும் பின் தங்கிய நாடுகளுக்கும் தகவல் தொடர்பு தொழில் நுட்ப வளர்ச்சிக்கு உதவ வேண்டும்.ஆனால் பக்கம் பக்கமாக உள்ள குறிக்கோள்கள் பகுதியிலாகட்டும், செயல் திட்டம் வரையறுத்துள்ள பகுதியிலாகட்டும் கண்ணில் விளக்கெண்ணெய் போட்டு தேடினாலும் ஆரம்பத்தில் குறிப்பிட்டப் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் வகையில், சரியான தகவல்கள் பொதுமக்களைப் போய்ச் சேர திட்டவட்டமான வழிகள் ஏதும் அடையாளம் காணப்பட்டாற்போல் தெரியவில்லை. அதேபோல் சமுத்திரம் போல் தகவல்கள் வந்து விழுந்த வண்ணம் இருக்கும் இணையத்தை ஏதாவது ஒரு நெறி முறைக்குள் கொண்டுவரப்படுமா என்பதும் இன்னும் தெளிவாகவில்லை.இன்று பெரும்பாலும் இணையத் தளங்களின் சேவை மையங்கள் ( Servers) அமெரிக்காவில் இருப்பதாலும், இணையம் முதன் முதலில் வேரூன்றியது அங்கேதான் என்பதாலும், இன்றும் இணையத் தள முகவரிகள் அளிக்கும் மையம் அமெரிக்காவில் இருப்பதாலும் இன்று அமெரிக்கா ஒரு மையக்கட்டுப்பாட்டகம் போல் இயங்குகிறது. இந்த நிலை மாறி, இணையத்தின் கட்டுபாடுகள் இதர உலக நாடுகளிடம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்று ஐரோப்பிய, ஆசிய நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் இப்படி செய்தால், இணையத்தின் பாதுகாப்புக்குப் பங்கம் வந்துவிடும் என்று அமெரிக்கா சொல்கிறது. இப்படி பல விவாதங்கள் இருந்தாலும், இணைய ஆளுமைக்கு ( Internet Governance) ஒரு வரைபடம் தயாரிப்பதும் இந்த மாநாட்டின் முக்கிய அமசம்.சரி. இப்படி எல்லாம் பல திட்டங்கள் ஜெனிவாவில் முன் வைக்கப்பட்டது. இப்போது துனிசியாவில் என்ன செய்யப்போகிறார்கள்? அந்த செயல் திட்டங்களை ஒவ்வொரு நாட்டிலும், உறுப்பினர் நாடுகளின் மூலை முடுக்கெல்லாம், நடைமுறையில் செயலாக்க என்ன முறைகள் கையாளப்பட வேண்டும் என்பது விவாதிக்கப்படும்.

இதில் சுவாரசியமான விஷயம், ஐ நா தலைவர் கோபி அனான், இந்தத் தகவல் தொடர்பு உலகின் சாதாரண மக்களையும் சென்றடையச் செய்வதில் இளைஞர்களுக்கு முக்கியப் பங்கு இருக்கிரது என்று அறிவித்துள்ளது. காரணம் இணையத்தில், மற்றும் தகவல் தொழில் நுட்பத்தில் சென்ற தலைமுறையினரைவிடவும், அதிக அளவு ஆர்வமும், திறமையும் உடையவர்களாக இன்றைய இளையத் தலைமுறை இருப்பதுதான். அப்படியென்றல், வரும் நவம்பர் 16 - 18 தேதிகளில் துனிசியா மாநாட்டில் நடக்க இருக்கும் மாநாட்டில் இளம் காற்று நிறையவே வீச வாய்ப்புண்டோ? இருக்கலாம் !

நன்றி: திசைகள்

பின் குறிப்பு: இந்த மாநாட்டில் அமெரிக்காதான் இணையத்தின் மகாராஜாவாக இப்போதைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது. இணையத்தின் கட்டுப்பாடு பரவலாக உலக நாடுகளிடையே பகிரப்பட வேண்டும் என்றும், உலக நாடுகள் அனைத்தும் பங்கு பெறும் ஒரு சர்வதேச அமைப்பின் கீழ் இணைய மேற்பார்வை இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வந்த ஐரோப்பிய நாடுகள் இந்த மாநாட்டில் ஏன் தங்கள் குறிக்கோளை அழுத்தி நடைமுறைக்குக் கொண்டு வர முயலவில்லை என்று இணையத்தையும் இந்த மாநாட்டையும் கவனித்தவர்கள் ஆச்சரியப்படுகிறார்கள். வரும் நாட்களில் ஊடகங்களில் இதுவும் ஆராயப்படலாம்.

Thursday, November 17, 2005

ஒரு காத்திருத்தல்

சில சமயம் சில செய்திகள் நம் கண்களில் பட்டாலும் படிக்காமல் போய்விட நேரும் அப்படி எத்தனையோ தவறவிட்டுள்ளேன். அப்படிப்பட்டக் கட்டுரை ஒன்று இன்று என் கண்களில் பட்டது. நல்ல வேளை, இதைப் படிக்காமல் விட்டுவிடவில்லை என்ற எண்ணம் இதைப் படித்து முடித்ததும் தோன்றியது. அதிலிருந்து முடிந்த அளவு தமிழாக்கம் செய்து இங்கே கொடுக்கிறேன்.

நியூயார்க் டைம்ஸில் கருத்துப் பக்கத்தில் ஹெலன் கூப்பர் எழுதியது:

பெண்கள் வாழ லாயக்கற்ற இடங்களில் உலகத்திலேயே மிக மோசமான இடத்தில் வாழும் பெண்களின் ஒரு காத்திருத்தல்.

என் தாய் நாடான லைபீரியாவிலிருந்து காங்கோவில் உள்ள புகாவு என்ற இடத்திற்குப் போவது முடியாத காரியம். ஆப்பிரிக்காவில் எல்லா ஊர்களையும் போல, அடர்த்தியான காடுகளும், இடைவிடாத போர்களும் புழுதி மண்டிக்கிடக்கும் சாலைகளும் இந்த இரண்டு ஊர்களுக்குமிடையே போக்குவரத்தைக் கடினமாக்கிவிட்டிருந்தன.

இருந்தாலும் இரண்டு ஊர்களும் அனேகமாக ஒரே மாதிரிதான் இருந்தன. சொல்லப்போனால், விமானத்தளம் என்று சொல்லப்பட்ட அந்தச் சிறிய ஒத்தையடிப் பாதைக் கணக்கில் இருந்த விமானத் தளத்தில் என் கால் பதித்தவுடனே, " ஆஹா, கடைசியில் ஒரு வழியாக நம்ம ஊருக்கு வந்துட்டாற் போல் இருக்கே" என்றுதான் புகாவு விமான நிலையத்தில் இறங்கியதும் தோன்றியது. இது ஒரு ஆறு மாதத்திற்கு முன் நடந்த விஷயம். ஆப்பிரிக்க நாடுகளில் வறுமையையும் வளர்ச்சித் திட்டங்கள் நடைபெறும் விதங்களையும் பற்றி செய்தி சேகரித்துக் கொண்டிருந்தேன். ஆனால், அக்ரா, கானா, எதியோப்பியா, மேக்லே, கிஸ்மு, கென்யா என்று எந்த நாட்டுக்குப் போனாலும் வறுமையையும் ஊழலையும் மீறி, அங்கே இருந்த வளர்ச்சியும் செழுமையும் என் தாய் நாடான லைபீரியாவை விட எவ்வளவோ மேல் என்றுதான் எனக்குத் தோன்றியது.

அதாவது நான் புகாவிற்கு வந்து சேரும்வரை. ஏறக்குறையப் பாலைவனமான எதியோப்பியாவையும், கென்யாவையும் பார்த்தப் பிறகு, லைபீரியாவில் என் ஊரான மோன்ரோவியாவில் உள்ளதுபோல் அடர்ந்த மழைக்காடுகளும் வாழைமரங்களும் நாசியில் வந்து சுகமாகப் படரும் மழையின் ஈர மண் வாசனையுமாக புகாவு எனக்கு ஒரே பசுமையாகக் காட்சியளித்தது. மோன்ரோவியோவில் உள்ளதுபோலவே தேயிலைக் காடுகளும், மலைகளும் பள்ளத்தாக்குகளும் அந்த ஊரைச் சுற்றி இருந்தன.

அதேபோல், தொடர்ந்துப் போர்களினால் சீரழியப்பட்ட மக்கள் தொகை அதிகம் உள்ள நாட்டில் ஏற்படும் ஒருவித ஆயாச உணர்வும் கூடவே ஏற்படுகிறது. ஆயிரக்கணக்கான சிறுவர்கள் சாலைகளில் வேறு வேலையெதுவும் இல்லாமல் வெட்டியாகக் குப்பைகளைக் கிளறும் காட்சி. இந்தக் கண்டத்தில் அடிக்கடி ஏற்படும் போரினால் வியாபாரம் இல்லாமல் குண்டுகளால் துளையிடப்பட்ட கட்டிடங்கள். எப்போதாவது கண்களில் தென்படும் வாகனக்கள் - 10 / 20 பேரை அடைத்துக்கொண்டு. அதுவும் பெரும்பாலும் ஐ நாவின் SUV வண்டிகள்.

ஆனால் இவற்றையெல்லாம் மீறி என்ன கவனத்தைக் கவர்ந்தது புகாவுவின் பெண்கள். ஊருக்குள் வண்டியில் செல்லும்போதே கண்களில் பட்ட இந்தப் பெண்களை நான் என் வாழ்நாள் முழுவதும் பார்த்துள்ளேன். முதுமையானப் பெண்கள் - முதுமையென்றால் ஆப்பிரிக்காவில் 35 வயது - முதுகில் பெரிய மூங்கில் பார்னக்களைச் சுமந்து கொண்டு சந்தையில் விற்க செல்லும் பெண்கள். சுமையுடன் மலையேறி குச்சி சேகரிப்பவர்கள். சாலையோரங்களில் பழங்கள், கொட்டைகள், அவித்த முட்டைகள் விற்பவர்கள்.

வீட்டு முற்றத்தில் உட்கார்ந்து தம்பிகளுக்கும், தங்கைகளுக்கும் வாளித் தண்ணீரில் குளிப்பாட்டிக் கொண்டிருந்த இளம் பெண்களும் தென்பட்டார்கள். 10 வயதுப் பெண் ஒருத்தி தூக்க முடியாமல் வாளியொன்றைத் தூக்கிக் கொண்டு வந்தாள். தன் 4 வயது தங்கையைக் குளிப்பாட்ட.

இந்த ஊர் பெண்கள் என் ஊர்ப் பெண்களின் பிரதிபலிப்புதான். எங்கள் லைபீரியாவில் இபப்டிப் பெண்கள் நிறையக் கஷ்ட்டப்பட்டுள்ளார்கள் - எதிரிக் கட்சிகளின் சண்டையில் மகன்கள் கடத்தப்படுவதைப் பார்த்தப் பெண்கள்; இந்த உட்பூசலில்களில் / சண்டைகளில் சென்ற கணவர்கள் வீடு திரும்பி வந்ததனால் எய்ட்ஸ் நோய் வரப் பெற்றப் பெண்கள்; உட்பூசல்களில் சண்டையிடும் ஆண்களினால் வன்புணரப்பட்டப் பெண்கள்; இப்படிப் பிறந்த குழந்தைகளையும் தோளில் சுமந்து கொண்டு, தலையில் தண்ணீர் தூக்கிக்கொண்டு நடையாக நடக்கும் / வேலைகளை மௌனமாகச் செய்யும் பெண்கள்; இத்தனை துயரிலும் மீனும் முட்டையும் விற்கும் பெண்கள்;

இந்தப் பெண்கள்தாம் சென்ற வாரம் ஓட்டுப் போடச்சென்றார்கள். ஜனாதிபதிப் பதவிக்குப் போட்டியிட்ட கால்பந்தாட்ட வீரர் ஜியார்ஜ் வீ ( George Weah) ஜெயிக்காவிட்டால் நாட்டில் அமைதி கிடையாஹ்டு என்று சவால் விட்டு மார்தட்டிய கட்சிக்காரர்களின் கூவலை இந்தப் பெண்கள் காதில் போட்டுக்கொள்ளவேயில்லை.

அவர்களின் மிரட்டலையெல்லாம் அலட்சியம் செய்துவிட்டு, இந்தப் பெண்கள், 67 வயதான எலென் ஜான்ஸன் (Ellen Johnson-Sirleaf ) என்றப் பெண்ணை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுத்துவிட்டனர். ஒரு ஆப்பிரிக்க நாட்டின் தலைவராகும் முதல் பெண்மணி. உடனேயே, அந்தக் கால் பந்தாட்ட வீரர் ஜியார்ஜ் கும்பல் இந்தத் தேர்தலில் கள்ள ஓட்டுக்கள் இடம் பெற்றுள்ளன என்று குற்றம் சாட்டியது - சர்வதேசப் பார்வையாளர்கள் அப்படியெல்லாம் நடக்கவில்லை என்று சொல்லியபோதிலும் கூட - எனக்கு வியப்பைத் தரவில்லை. ஆப்பிரிக்காவில் உள்ள ஆண்கள் இப்படியெல்லாம் ஒரு மாயையில் சிக்கியிருப்பது சகஜம்தான்.

ஹார்வேடில் படித்த ஒரு வங்கி அதிகாரியான எலென் ஜான்ஸன் என்ன சாதிப்பார் என்று எனக்குத் தெரியாது. ஒரு வின்னி மண்டேலாவைப் போல் ஆப்பிரிக்கப் பெண்களுக்குக் களங்கமேற்படுத்தியப் பெண்களும் இருந்திருக்கிறார்கள். ஆனால் 25 வருடம் போர்களினால் இந்த நாட்டை சீரழித்த ஆண்களுக்கு ஒருப் பாடம் புகட்டுவார் என்று தோன்றுகிறது.

லைபீரியாவில் இந்தத் தேர்தல் முடிவுகள் வெளி வர ஆரம்பித்த சமயத்தில், இந்த புகாவு நகரத்தில் நான் காரில் நுழையும்போது என் கண்களில் பட்ட ஒரு பெண் மட்டும் என் முன் பசுமையாக நிற்கிறாள். அவள் தன் 30 களில் இருக்கும் ஒரு வயதானவள். நான் அவளைப் பார்த்தபோது சூரியன் மறையும் அந்திப் பொழுதாக இருந்தது.

தன் முதுகில் பெரியக் கட்டைகளை ஏற்றிக்கொண்டு குந்து கொண்டு மலையின் ஏற்றத்தில் ஏறிக்கொண்டு இருந்தாள். பாரத்தில் அவளின் மார்பு கீழே விழுந்துவிடும் அளவு குனிந்து உச்சியில் இருந்த வீட்டை நோக்கி நடந்து கொண்டு இருந்தாள். அவள் பின்னே அவள் கணவன். இன்னும் அவளை வேகமாக நடக்க சொல்லி. அவன் கையில் ஏதுமில்லை. கையை வீசிக்கொண்டு முன்னே நடந்தான்.

இன்று திரும்பி புகாவுக்குச் செல்ல வேண்டுமென்று தோன்றுகிறது. சென்று அந்தப் பெண்ணிடம் லைபீரியாவில் நடந்ததைச் சொல்ல வேண்டும்; இந்தத் தேர்தலைப் பற்றி சொல்லிவிட்டு அவளிடம் நான் சொல்ல வேண்டும்; 'பெண்ணே.. உங்களுக்கும் இப்படி ஒரு காலம் வரும்' என்று.

Friday, November 11, 2005

எல்லாம் ஒரு காலம் !

சில சமயம் சில விஷயங்களைக் கேட்கும்போது வாயடைத்துப் போய்விட்டது என்போம் அல்லவா? அந்த அனுபவம் எனக்கு சமீபத்தில் ஏற்பட்டது. என் உறவினர் பெண் ஒருவர் - நன்குப் படித்து, அரசாங்கத்தில் ஒரு உயர் அதிகாரியாக இருப்பவர் - கூறிய ஒரு கருத்தைக் கேட்டபோது.

சம்பாஷணையின் ஒரு பகுதியை மட்டும் - எனக்கு அதிர்ச்சியைத் தந்தப் பகுதியை - இங்கே தருகிறேன்.

" என் பெண் வெளி நாட்டில் சென்று படிப்பதையோ /வாழ்வதையோ நான் நிச்சயம் விரும்பவில்லை. "

"ஏன்??!!"

" அங்கேயெல்லாம் பெண்கள் தாங்களே வீட்டு வேலைகளைச் செய்துகொண்டு / வேலைக்கும் போய்க் கொண்டு கஷ்டப்பட வேண்டியிருக்கிறது. இங்கேயென்றால் நாம் சம்பாதிக்கும் பணத்தில், தாராளமாக, சமையலுக்கு, மேல் வேலைக்கு, வண்டி ஓட்ட, தோட்டக்காரன் என்று நாலு வேலைக்காரர்களை வைத்துக்கொண்டு சுகமாக இருக்கலாம். அங்கே போய் ஏன் என் பெண் கஷ்டப்பட வேண்டும் ? " !!!!

"அது சரி. இதே வாதம் உன் பிள்ளைக்குப் பொருந்தாதா?அவன் வெளி நாட்டில் சென்று வாழ்வதில் உனக்கு ஒன்றும் பிரச்சனையில்லையா? "

" அவன் ஆண். அவன் வீட்டு வேலைகளை அவன் மனைவிப் பார்த்துக்கொள்வாள்." !!!!!!!!!!!!!!!!!!!!!!!

அடுத்த அரை மணி நேரம் நடந்த மீதி சம்பாஷணை /விவாதம் இவற்றை உங்கள் ஊகத்துக்கு விட்டுவிடுகிறேன் !!

கூடவே, நேற்று இந்துப் பத்திரிகையின் சென்னை - மெட்ரோ ப்ளஸ் பகுதியில் வந்தக் கட்டுரை ஒன்றையும் தமிழ்படுத்தி, உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

அவன் - அவள்.

"அவன் சொல்கிறான்: " ஹ்ம்ம்... இங்கே நாம ஆம்பிளங்கதான் எப்பவும் கஷ்டப்பட வேண்டியிருக்கு. பெண்கள்பாடு தேவலை. ஒரு வேளை அதான் அவங்க இப்படி சோம்பேறித்தனமாக இருக்காங்களோ என்னவோ? இங்கே ஒரு "ப்ளீஸ்"; அங்கே ஒரு புன்சிரிப்பு; என்று இப்படியே அவங்க சாமர்த்தியமா சாதிச்சுக்குவாங்க. ஒரு "சாரி" என்ற வார்த்தை; கொஞ்சம் முறைப்பு காண்பிச்சாப் போதுமே; கொலைப்பழியிலிருந்து கூட தப்பிச்சுக்குவாங்க.

அவங்களுக்கென்ன? எப்ப வேணுமானாலும் கையை மடக்கினா ஓசி சவாரி கிடைச்சிடும். எப்பவும் உலகம் கண்களிலே அவங்கதான் படுவாங்க. ஆம்பிளைங்களும் அவங்களுக்கு "இல்லை"னு சொல்லத் தயங்குவாங்க.
ஆனாலும் இது ரொம்ப பாரபட்சமான உலகம்டா சாமி; உலகமே ரொம்ப மோசமா தாறுமாறாப் போய்கிட்டு இருக்கு. எல்லாத்துலேயும் பெண்களுக்குதான் இப்ப காலம். ஆம்பிளைங்கபாடு திண்டாட்டம்தான். எவ்வளவு கஷ்டப்படவேண்டியிருக்கு? ராப்பகலா உழைச்சாலும், ஓவர் டைம் வேலை செய்தாலும் அது யாருக்குப் புரியுது? ஆனா அதே ஒரு பெண் ஒரு நாள் செஞ்சாக் கூட 'நான் செஞ்சேன்' என்று தான் வேலை செஞ்சது உலகத்துக்கே கேட்கிறார்ப்போல தண்டோராப் போட்டு அறிவிச்சுடுவாங்க.

......... இன்னும் கொஞ்சம் இந்த ரீதியிலே ஆண் புலம்பல்.

அடுத்துப் பெண் சொல்கிறாள்: " ஆமாங்க. அதிர்ச்சியாதான் இருக்கு. ஐயோ பாவம் . ஆண்கள் எப்படி உழைக்கிறாங்க!! பெண்கள் என்ன கிழிச்சிட்டாங்க இன்னிக்கெல்லாம் இருந்தா, ஆபீஸ்லேர்ந்து வீட்டுகு வந்தப்புறம், என்னப் பெரிய வேலை? ராத்திரி சமையல் செஞ்சுட்டு, குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுத்துட்டு, நாய்க்குட்டிக்குச் சாப்பாடுபோட்டுட்டு, டேபிளைத் துடைத்து, பாத்திரம் ஒழிச்சுப்போட்டுத் தேய்த்து வைத்துவிட்டு, சமையல் அறையைத் துடைத்துச் சுத்தம் செஞ்சுட்டு, மறு நாளைக்கு சாமான் எல்லாம் இருக்கான்னு பாத்துட்டு, கணவன் துணியை இஸ்திரிப் போட்டு, ( ஐயோ பாவம், அவன் நாளைக்கு ஆபீஸ் போகணுமே) .... அவ்வளவுதான் செய்யணும். என்ன..? இரண்டு பேருக்கும் ஒரே சம்பளம்தானே என்கிறீங்களா? அட என்ன இருந்தாலும் அவுங்க ஆண்பிள்ளையாச்சே?

இந்தப் பெண்களுக்கு நல்லா வேணும். அவங்கதானே பெண் சுதந்திரம்; சமத்துவம் என்றெல்லாம் கூவினாங்க? சரிதான்; சமமா ஆபீஸ¤லே வேலைப் பாருங்க. ஆண் மாதிரியே சம்பாதிங்க. நல்லது. ஆனா வீட்டு நிர்வாகம் பெண்களுது ஆச்சுங்களே? நீங்கதான் செய்யணும் - அடிப்புடிச்ச வாணலியைத் தேய்ச்சுக் கழுவுற "சுகமான" வேலை உள்பட.. இதெல்லாம் தவிர ஆபீஸ¤லே உங்கத் திறமையைக் கண்டுக்காம சேர வேண்டிய சம்பளமோ பதவியுயர்வோ தராம இருப்பாங்க. அதெல்லாம் கண்டுக்காதீங்க.
அப்புறம் பாருங்க; ஒரு குழந்தைப் பிறந்துச்சுன்னு வையுங்க. அந்தப் பெண்ணுக்கு ஆயிரம் கவலை வந்து உட்கார்ந்துக்கும். குழந்தையை யார் பார்த்துப்பாங்க?எப்படி சமாளிக்கிறது? இப்படி யோசிச்சு யோசிச்சே வேலை மற்றும் குழந்தை இரண்டையும் ஜால வித்தை செஞ்சு சமாளிக்க ஆரம்பிப்பாள். அதே ஆண் என்ன செய்வாரு? குழந்தை பிறந்தவுடனே "பாட்டில்" உடைத்துக் கொண்டாட ஆரம்பிப்பாரு.

அதெல்லாம் சரி. இப்பதான் புது யுக ஆண்; இந்தக் காலத்துலே ரொம்ப அனுசரணையாக இருக்கார்னு கேள்விப்படறோமே? ( ஆதர்ச ஆண் விளம்பரம்? மற்றும் குழந்தையைத் தூக்கிக்கொண்டு பனித்த கண்களுடன் - எல்லா விளம்பரத்துலேயும் சிரிப்பாரே - அந்த ஆண்??) அதுக்கென்ன? ஏதோ வாஷிங் மெஷின்லே இரண்டு பட்டனை அமுக்கி வீட்டு துணிகளைத் தோய்க்க நம்மளுக்கு " உதவி" செய்யறாரு இல்லே... அதாலே, இப்படி எல்லா சீரியல் விளம்பரத்துலேயும் ஆதர்ச ஆண் என்று தலையைக் காண்பிச்சிட்டுப் போவாரு. அதோட இல்லே; இப்படி வீட்டு வேலையிலே " உதவி" செய்யறதக் காரணம் காட்டியே, நம்கிட்ட பேங்க் போறது, வரி கட்ட இன்கம்டாக்ஸ் ஆபீஸ் போறது, இல்லேனா கம்யூடர்லே வேலை என்று அவங்க செய்ய வேண்டிய வேலையெல்லாம் நம்ம பக்கம் தள்ளி விடுவாங்க.

இருந்தாலும் ஆதர்ச ஆண்கள் இருக்கதான் செய்யறாங்க. காபி ஷாப்லே கொஞ்சம் புன்னகை செஞ்சா, நம்ம ஐஸ் காபிலே கூடக் கொஞ்சம் ஐஸ் போட்டுத் தரவாங்க; சினிமாத் தியேட்டர்லே கும்பல்லே அடிச்சுப் பிடிச்சு பாப்கார்ன் வாங்கத் திண்டாடும்போது இன்னும் பாக்கி இருக்கிற காலே அரைக்கால் ஆதர்ச ஆண்கள் நமக்காக கியூலே நின்னு வாங்கித் தருவாங்க - அவங்க சகாக்களாலே நாம் கும்பலிலே நசுங்கி அவதிப்பட வேண்டாமே என்ற கரிசனத்துலே.

ஏதோ இப்படி சில சௌகரியங்களும் இன்னும் நமக்கு பாக்கி இருக்கேன்னு சந்தோஷப்படுவோம். போற வரைக்கும் போகட்டும். அதுவரைக்கும் தயவு செஞ்சு சந்தோஷப்பட்டுக்குவமே? என்ன பெண்களே, புரியுதா?

இந்தக் கட்டுரையை அப்படியே சென்னைத் தமிழில் எழுதினால் எப்படி இருக்கும் என்று பார்த்தேன் :-) இந்தச் சுட்டியில் இருப்பதைப் படித்துவிட்டு, சென்னைத் தமிழில் இன்னும் இதற்கு மெருகேற்ற விரும்புவர்கள் தாராளமாக செய்யலாம்.

Thursday, November 10, 2005

அரசியலில் /அரசாங்கத்தில் / தனிப்பட்ட முறையில் அவரது சாதனைகளை இன்று எல்லா ஊடகங்களிலும் காண்கிறோம். அவற்றுடன் கூட எனக்கு அவரிடம் இன்னும் மிகவும் பிடித்தது, அவருடைய Disarming smile. ஆனால் ஒரு படம் போடலாமென்று பார்த்தால், படம் ஏனோ இன்று இங்கே ஏற மாட்டேனென்கிறது. படம் இல்லாவிட்டால் என்ன? சொல் இருக்கிறதே.

இந்திய ஜனாதிபதி பதவிக்கு ஒரு அர்த்தம் கொடுத்த, அருமையான மனிதர், கொச்சேரி ராமன் நாராயணனுக்கு என் வணக்கமும் அஞ்சலியும்.

Thursday, November 03, 2005

தொடரும் கேள்விகள்.......

(தமிழோவியம் தீபாவளி மலருக்காக எழுதியது.)

சமீப காலமாக ஒரு கேள்வி என் மனதில் அவ்வப்போது எழுந்து கொண்டிருக்கிறது. எனக்கு இன்னும் சரியான பதில் புலப்படவில்லை. உங்களுக்குத் தெரிகிறதா என்று பாருங்களேன்.

ஊர்ப்பாசம் என்பது எப்படி வருகிறது? ஒரு இடத்தில் பிறந்ததால் வருகிறதா? வளர்ந்ததால்? குடிபெயர்ந்து ஓரிடத்தில் பழகிப்போனதால்? இல்லை, ஒரு ஊரின் - நமக்குப் பிடித்தமான பிரத்யேகமான சிறப்புகளால்?

நியூ ஆர்லின்ஸில் காற்றீனா தாக்கியபோது நிறைய பேர் ஊர்ப்பாசத்தால் வெளியேறவில்லையாம். உயிருக்கும் மேலாக நேசிக்கும் அளவு தங்கள் ஊரின் மேல் பிடிமானம் இருப்பது எதனால்? அப்படியே உயிரைக் காப்பாற்றிக்கொள்ள நியூஆர்லின்சைவிட்டு ஓடி வேற்று நகரத்துக்கு வந்த சிலரால் அங்கே ஒட்ட முடியவில்லை. தங்கள் ஊரின் அருமை பெருமைகளை நினைத்து மாய்ந்து போனார்கள். சான் ஹோசே மெர்குரி நியூஸ் பத்திரிகையின் பழைய நிருபர் ஒருவர் நியூ ஆர்லின்ஸைத் தன் ஊராகத் தேர்ந்தெடுத்து வாழ்ந்துவிட்டு இப்போது புயலிலிருந்து தப்பிக்க வேறு மாநிலத்துக்கு வந்தபின் தன் ஊரைவிட்டு வர வேண்டிய சோகத்தைப் பற்றி எழுதினார். அடைக்கலம் புகுந்த இடத்தில் யாரோ நியூ ஆர்லின்ஸ் மடி கிராஸ் மணிகளை இவருக்குக் கொடுத்தபோது, அது சரியான நியூ ஆர்லின்ஸ் மணிகளல்ல என்று வாங்க மறுத்துவிட்டு மனசுக்குள் பொருமுகிறார். " நம்ம ஊர் மணிகளின் பாரம்பரியம் பற்றி இவர்களுக்கு என்ன தெரியும். பிப்ரவரி மாதம் வந்தவுடனே தெருவிலே குழந்தைக் குட்டிகளோட வரிசையாக நின்று கொண்டு நியூ ஆர்லின்ஸ் திருவிழா ஊர்வலம் வருவதை வேடிக்கைப் பார்த்துக்கொண்டு நம்ம இங்க இப்படி கொண்டாட்டமா இருக்கிறப்போ மத்த ஊர்க்காரங்க எல்லாம் என்னதான் செய்யறாங்க என்று நம்ம ஊர்க்காரங்க ஒவ்வொத்தரும் தங்கள் மனசுக்குள் ஒரு நமுட்டு சிரிப்போட நினைச்சுப்போமே; அந்த நம்ம ஊர் ஆளுங்க இல்லையே இவங்க? இவங்களுக்கு நம்ம மணிகளின் அருமை எப்படி புரியும்?"

எப்படி ஒரு ஊர்ப்பாசம்? இத்தனைக்கும் இவர் பிறந்து வளர்ந்த ஊர் நியூ ஆர்லின்ஸ் அல்ல. இப்படி நமக்கும் நிறைய அனுபவங்கள் இருக்கலாம். பிறந்ததனால் மட்டுமே ஒரு ஊரின் மேல் பாசம் வருவதில்லை என்று நினைக்கிறேன். பிறந்த ஊர்ப்பாசம் போல பிறந்த நாட்டுப் பாசமும் வளர்ந்த / பழகிய சந்தர்ப்ப சூழ்நிலைகளைப் பொறுத்து ஆழமில்லாமல் போகுமோ? அப்படி போனால் அது தவறென்று சொல்ல முடியுமா? இந்தியாவில் பிறந்திருந்தாலும் முழுக்க முழுக்க வெளி நாட்டில் வளரும் குழந்தைகளுக்கு எந்த நாட்டின் மேல் பாசம் இருக்கும்? தமிழ் நாட்டில் பிறந்திருந்தாலும் வெளி மாநிலங்களில் வளர்ந்தத் தமிழர்களுக்குத் தமிழ் நாட்டின் மேல் பாசம் இல்லாமல் போய்விடுமோ?

எந்த ஊரிலிலுமே 3 அல்லது 4 அதிக பட்சம் ஏழு வருடங்களுக்கு மேல் வாழ்ந்திராத என் வாழ்க்கையை ஒரு நாடோடி வாழ்க்கை என்று நான் சொல்வதுண்டு. யாதும் ஊரே யாவரும் கேளிர் வகை.
"உங்க சொந்த ஊர்?" - "Where do you come from?" "where do you belong?" போன்ற அறிமுகக் கேள்விகளுக்கு இப்போதும் நான் ஒரு கணம் யோசித்துவிட்டுதான் பதில் சொல்கிறேன். Where do I belong?
பொதுவாக சென்னை என்று முன்பெல்லாம் குறிப்பிடும்போது என்ன சொல்கிறோம் என்று தோன்றும். சென்னையில் வாழ்ந்ததேயில்லை. எதை வைத்து சென்னை என் ஊர் என்று சொல்ல முடியும் என்று தோன்றும். பிறந்த ஊர் முசிறி என்று பெயர்தான் தெரியும். என் மூன்று வயதில் குடும்பம் அங்கிருந்து நகர்ந்துவிட்டது. அங்கிருந்த வாழ்க்கை பற்றி என் சகோதரியும் பெற்றோர்களும் சொல்லிதான் கேள்வி. அப்பாவின் ஊர் தஞ்சாவூர் பக்கம் ஒரு சிற்றூர் என்பதும் அம்மா ஊர் திருச்சி பக்கத்தில் இன்னொரு சிற்றூர் என்பது குடும்ப சரித்திரத்தில் ஒரு அடிக்குறிப்பு. ஆனால் இந்த ஊர்களைப் பற்றி கேள்வி ஞானம்தான். மற்றபடி பரிச்சயமில்லை. யாராவது வயதானவர்கள் அந்தக் கால வழக்கப்படி, "உங்களுக்கு எந்தப் பக்கம்" என்று கேட்டால், என் கணவர் சட்டென்று " என் மனைவி, தஞ்சாவூர் பக்கம்" என்று சொல்லும்போது எனக்கு தூக்கிவாரிப்போடும். தஞ்சாவூரா? நானா? அது எப்படி இருக்கும் என்று கூட தெரியாதே, என்று நினைப்பேன். என் சகோதரி பத்மினி சொல்லிதான் நிறைய என் பெற்றோர்களின் ஊர் விஷயங்கள் தெரிந்து கொண்டேன். என்னிடம் அவர் சொன்ன கதைகள் சுவாரசியமாக இருக்கவே அவற்றை ஆவணப்படுத்த வேண்டும் என்பதற்காகவே அவரது பெயரில் ஒரு வலைப்பதிவும் தொடங்கி அவரிடம் கட்டுரைகள் வாங்கிப் போட்டு வருகிறேன்.

இந்த ஊர்களுக்கு எப்போதாவது சிறு வயதில் திருவிழா, கல்யாணம் என்று செல்வதோடு சரி. இந்த நிலையில் எந்த முகாந்திரத்தை வைத்துக்கொண்டு என் ஊர் என்று சொல்வேன்? பிறகு, நான் வளரும் காலத்தில் அப்பா அவ்வப்போது மாற்றலாகி சென்று கொண்டிருந்த தமிழ் நாட்டு ஊர்களையெல்லாம் சொன்னால் தமிழ் நாட்டுக்கு வெளியே இருப்பவர்களுக்குப் புரியுமோ என்று தோன்றும். பொத்தாம் பொதுவாக சென்னை என்று சொல்லிவிட்டால் நிம்மதி. ஆக மொத்தம் எனக்குப் பிறந்த / வளர்ந்த ஊர்ப்பாசம் என்று ஒன்று ஒட்டாமலேயே போயிற்று. ஆனால் பிறந்த பகுதி, வளர்ந்த நாடு என்று பொதுவாக தமிழ் நாட்டின் மீதும், இந்தியா மேலும் பாசம் இருக்கிறதே? இதுதான் ஒவ்வொரு முறையும் வெளி நாட்டு வாழ்க்கையிலிருந்து அவ்வப்போது பிடித்து இழுத்து வந்துள்ளது. இந்த சொல்லத் தெரியாத பற்றுதல்தான், தான்சானியா, பூடான் மற்றும் சிங்கப்பூர் என்று சுற்றிய நாடுகளிலிருந்து வேலை ஒப்பந்தத்தைப் பாதியிலேயே நிறுத்திக்கொண்டு - சொந்தக் காரணங்களால் - வரத் தூண்டியுள்ளது. எந்த ஊர் என்று இல்லை; இந்தியாவில் இருந்தால் போதும் என்ற நினைப்புதான் அப்போது. இதன் பெயர் ஊர்ப்பாசம் என்று சொல்வதா என்று புரியவில்லை. சிங்கப்பூரைவிட்டு வரும்போது, பல நண்பர்கள் மாய்ந்து போய்விட்டார்கள். இந்தியாவில் அப்படி என்ன இருக்கிறது என்று இப்படி ஓடி ஓடிப் போகிறர்£கள் என்று. அதுதானே எனக்கும் புரியவில்லை.

எழுபதுகளில் கிழக்காப்பிரிக்காவில் தன்சானியாவில் குடியிருந்தபோது இந்தியக் குடும்பங்களிடையே - இந்தியர்கள் என்ற ஒரு "ஊர்ப்பிணைப்பு" இருந்தது. தினம் சந்திப்பு, விழாக்கள், பண்டிகைகள் என்று கலகலவென்று இருக்கும் ( அதுவே இந்தியாவில் ஒரே ஊரில் இருந்தாலும் அப்படி இருந்திருப்போமா என்பது சந்தேகம் - வெளி நாட்டில் / வெளி மாநிலங்களில் இருக்கும் பலரும் இதை உணர்ந்திருப்பார்கள் ) அப்போது எங்களிடையே அடிக்கடி அடிபடும் ஒரு பேச்சு - "எப்போது இந்தியா திரும்பலாம்? வேலை செய்யும் ஒப்பந்தக் காலத்தை இந்த வருடத்தோடு முடித்துக்கொள்ளலாமா? அடுத்த வருடம் நிச்சயமாக இந்தியா போய்விடப்போகிறோம் " என்ற ரீதியிலேயே பேச்சு இருக்கும். இந்த "going for good" சம்பாஷணை இல்லாமல் ஒரு நாளும் கழிந்ததில்லை. பத்து வருடம் கொட்டைப் போட்ட குப்தாஜி, அடுத்த வருடம் நிச்சயம் போகிறேன் என்பார். " டில்லி, கனாட் பிளேஸில் இன்னும் ஒரு இடம் வாங்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன்" அதை வாங்கிவிட்டால், நிச்சயம் என் லட்சியம் பூர்த்தியாகிவிடும். திரும்ப வேண்டியதுதான்" என்று ஒரு கமாவுடன் அவரது " going for good " பேச்சு முடியும். இப்படியே அவர் இன்னும் பதினைந்து வருடம் சொல்லிவிட்டு ஒரு வழியாக ரிடையர் ஆகிவிட்டுதான் இந்தியா வந்தார். இப்படி "Pushing the bars for ever" என்ற ஒரு மனோபாவத்துடனும் ஊர்ப் பாசமும் சேர்ந்து பலருக்கு வாழ்க்கையின் பெரும் பகுதி கேள்வியிலேயே நிற்கும். இன்னும் சிலர் இந்தக் கேள்விக்கணைகளை லட்சியம் செய்யாமல் அடுத்த தலைமுறைக்கு வேரூன்ற முயலுவார்கள்.

இப்படி வேரூன்றியத் தலைமுறைகள்தாம் சேர்ந்து இன்று அமெரிக்காவையும் சிங்கப்பூரையும் வளப்படுத்திக்கொண்டிருக்கின்றன. ஆமாம், அமெரிக்காவையும் சிங்கப்பூரையும் " குடியேறியவர்கள் நாடு" ( country of immigrants) என்று சொல்வதுண்டு இல்லையா?

இப்படிப் புலம் பெயர்ந்தோர் என்பது ஒரு நாட்டைவிட்டு நாடு சென்று குடியேறுபவர்களுக்கு மட்டுமல்ல. ஒரு நாட்டிலேயே ஓரிடத்திலிருந்து வேறு ஊரில் வாழ்பவர்களுக்கும் பொருந்தும். இன்று இந்தியாவிலிருந்து மற்ற நாடுகளில் குடியேறி வாழ்பவர்களின் பிரச்சனைகள் / குழப்பங்கள், பல வருடங்கள் முன்பு கிராமங்களிலிருந்து நகரத்திற்குப் பிழைப்புத் தேடி சென்றவர்களுக்கும் பொருந்தும். இன்று Indian Diaspora / Chinese Diaspora என்பதுபோல் திருநெல்வேலி, தஞ்சாவூர், திருச்சி அல்லது இன்னும் பல குட்டிக் கிராமங்களிலிருந்து புலம் பெயர்ந்தவர்களும் ஒரு விதத்தில் அந்தந்தப் பகுதிகளின் Diaspora தான் - திருச்சிக்காரர்கள், தஞ்சாவூர்க்காரர்கள் என்று diaspora வட்டம் சுழலும்.

இந்தக் கணக்கின்படி பார்த்தால் மாநகரங்களான - மும்பாய், டில்லி போன்றவைகளும் " புலம் பெயர்ந்தோர்" நகரங்கள்தாம். தமிழர்கள் அன்று கிராமங்களிலிருந்து நகரங்களுக்குக் குடியேறினார்கள். பிறகு வெளி மாநிலங்களுக்கு; பிறகு அயல் நாடுகளுக்கு என்று "புலம் பெயர்" வட்டம் விரிந்து கொண்டு போயிற்று.

பல வருடங்கள் முன்பு என் அம்மா வழி தாத்தா தன் அரசாங்க வேலையிலிருந்து ஓய்வு பெற்ற பின் திருச்சி பக்கத்தில் தன் கிராமத்த்தில் வீடு கட்டிக்கொண்டு "செட்டில்" ஆனார். அவருடைய சகோதர்களும் அவ்வண்ணமே செய்தார்கள். ஊர்ப்பாசம் அவ்வளவு இருந்தது அவர்களுக்கு.
அன்று ஊர்ப்பாசம் என்று ஊர் திரும்பிய அந்த சகோதரர்களின் நிலையை இன்று வெளி நாடுகள் / ஊர்களிலிருந்து தமிழ் நாட்டில் தங்கள் ஊர்களுக்குத் திரும்பும் இந்தியப் புலம் பெயர்ந்தோருடன் ஒப்பிடத் தோன்றுகிறது. ஊர்ப்பாசம் என்று ஒரு தலைமுறையினர் திரும்பி வந்தாலும் அவர்களின் அடுத்தத் தலைமுறையினருக்கு அந்த அளவு ஊர்ப்பாசம் இருப்பதில்லை. அதுவும் வளர்ந்தப் பிள்ளைகள் என்றால் கேட்கவே வேண்டாம். அவர்களால் பெற்றோரின் ஊர்ப்பாசத்தையும் புரிந்து கொள்ள முடியாது. தாங்கள் வளர்ந்த ஊருக்கும் பெற்றோரின் ஊருக்கும் இடையே உள்ள வாழ்க்கை முறை வித்தியாசங்களும் மற்றும் பல சந்தர்ப்பங்களில் மொழிப் பிரச்சனையும் அவர்களைத் தண்ணீருக்கு வெளியே விழுந்த மீன் குஞ்சுகளாகத் திணறச்செய்யும். இந்த வாழ்க்கை முறை சங்கடங்களுக்குப் பயந்து பலர் ஊர் திரும்ப யோசனை செய்வார்கள்.

அந்தக் காலத்தில் என் மூதாதையர் - மூத்த தலைமுறையினர் - ஓய்வு பெற்று கிராமம் திரும்பியபோது என் மாமாக்கள் - தாத்தாக்களின் மகன்கள் - பம்பாய், சென்னை என்று நகரங்களில் நல்ல வேலைகளில் - குடும்பம் / வேலை என்று வாழ்க்கையின் பளு /அழுத்தம் நிரம்பிய Prime Time வயதுகளில் இருந்தார்கள். அவர்களால் எப்படி கிராமத்தில் வாழ முடியும்? கடைசியில், தாத்தாக்கள், பிள்ளைகள் வந்து இருக்கப்போகிறார்கள் என்று நினைத்து கிராமத்தில் கட்டியப் பெரிய வீடுகளில் தனியாக - தாத்தா/ பாட்டி - வாழ்ந்தனர்.

வெளி நாடுகளுக்கு இளைஞர்களை அனுப்பிவிட்டு "வயோதிகர்கள் ஊராக" மாறிக்கொண்டிருக்கும் இன்றையச் சென்னையைப் போல அன்றைய கிராமம் இருந்தது.

இன்றும் இந்த ஊருக்குத் திரும்பலமா கேள்வி பலப் புலம் பெயர்ந்தோரை - அது டில்லித் தமிழரோ அல்லது அமெரிக்கத் தமிழரோ - ஆட்டுவித்துக்கொண்டுதான் இருக்கிறது. திரும்பும் சிலரின் அடுத்த தலைமுறையினருக்கு பெற்றோரின் "ஊர்" ஒட்டாது. ஊர்ப்பக்கம் மீண்டும் குடியேறுவதற்கு முன்னோடியாகப் பலர் வருடாந்திர / அல்லது அவ்வப்போது, ஊருக்கு விஜயங்கள் பல செய்திருப்பார்கள் - அவர்கள் பெற்றோரையும் சுற்றோரையும் பார்க்க, குலதெய்வத்துக் கோவிலில் மொட்டையடித்து காதுகுத்த, பெரியப்பா / ம்மா/ மாமா /மி இவர்களுடைய பிள்ளைகள் கல்யாணம், என்று ஏதேதோ காரணம் சொல்லிக்கொண்டு ஊருக்கு ஒரு பத்து நாள் / இரண்டு வாரம் என்று பெட்டி நிறைய எல்லோருக்கும் ஏதேதோ வாங்கிக்கொண்டு சிரித்து, வம்பு பேசி என்று ஆடிவிட்டு மறுபடி தங்கள் தங்கள் பொந்துகளில் போய் அடைந்து கொண்டு, என்று வாழ்க்கை ஓடியிருக்கும். ஆரம்ப காலங்களில் குழந்தைகள் இவர்களைப் போலவே ஆசையுடன் ஊர்ப்பக்கம் வருவார்கள். எல்லோரும் நகரத்திலிருந்து / வெளி நாட்டிலிருந்து வந்திருக்காங்க என்று கொண்டாடுவது குழந்தைகளுக்குப் பிடித்துப்போயிருக்கும்.

ஆனால் சற்று வளர்ந்து பள்ளி, காலேஜ், தங்கள் அலைவரிசைக்கு நண்பர்கள், மற்றும் நீச்சல், டென்னிஸ், பாட்டு நடனம், என்று சிறப்பு பயிற்சிகளில் கவனங்கள், நண்பர்கள் வட்டம், என்ற ரீதியில் அவர்கள் வாழ்க்கை முறை மாறிப்போவதில், ஊரில் இருக்கும் உறவினரோ, வாழ்க்கை முறையோ அத்தனைதூரம் ஈர்க்காது. இந்த இரண்டுகெட்டான் வயது சமயத்தில்தான் பெற்றோருடன் விடுமுறையில் ஊர்ப்பக்கம் போவதற்கு பிள்ளைகள் சங்கடப்படத்தொடங்குவார்கள். எண்ணையும் தண்ணீரும் போல பெற்றோரின் வேருடன் ஒட்ட முடியாமல் ஒரு தர்ம சங்கடம். "ஊருக்கா? நாங்க வந்து என்ன செய்யப்போகிறோம்? நீங்க போயிட்டு வாங்க. நாங்க இங்கே பாத்துக்குறோம்" என்பது போன்ற பதில்கள் வர ஆரம்பிக்கும்.

இந்த நிலையில் புலம் பெயர்ந்தவர்கள் ஊருக்கு வந்து செட்டில் ஆக நினைப்பது மகாக் கடினமான வேலை. இதற்கெல்லாம் பயந்து பலர் இருக்கும் ஊரிலியே முடிந்த வரை இருந்து விடலாம் என்று பார்ப்பார்கள். அது இன்னும் புதைகுழி போல் ஆக ஆரம்பிக்கும். ஒரு பக்கம் தாங்கள் வளர்ந்த சூழ்நிலையைப் பெற்றோர் தேட ஆரம்பிக்க, பிள்ளைகள் தாங்கள் வளர்ந்த/ வளரும் சூழ்நிலையைவிட்டு வெளியேறத் தயங்க, அது ஒரு தர்ம சங்கடமான நிலை.

என்னைப் பொறுத்த வரையில் என் பெற்றோர் வளர்ந்த தஞ்சாவூர், அல்லது திருச்சி அருகே உள்ள கிராமங்கள் என் ஊர் அல்ல. எங்கேயும் அடர்ந்து பல வருடங்கள் இருந்திராக்காததால், வளர்ந்த எந்த ஊரிலும் ஆழமான ஊர்ப்பாசம் வரவில்லை. என் மகன்களின் கதையும் கிட்டதட்ட இதேதான் - நாங்களும் மாற்றலாகிச் சென்று கொண்டிருந்ததால். ஆனாலும் அவர்களின் பெரும்பாலான வருடங்கள் இந்தியாவில் டில்லியில் கழிந்ததால் அவர்களைப் பொறுத்தவரையில் டில்லிதான் சொந்த ஊர். தமிழ் நாடு அவர்களைப் பொறுத்த வரையில் பெற்றோர் ஊர் மட்டுமே. எனக்கு எப்படி என் பெற்றோரின் கிராமங்கள் ஆனவோ அதுபோல்.

இதேபோல் வெளி நாடுகளில் வாழும் பல தமிழ்க் குடும்பங்களில் அங்கே பிறந்து வளர்ந்த குழந்தைகளுக்கு அவர்கள் வளரும் ஊர்தான் அவர்களுக்கு சொந்த ஊர். இந்தியா / தமிழ் நாடு, அயல் நாடாக ஆவதில் ஆச்சரியம் இல்லை. யாராக இருந்தாலுமே பொதுவாக ஒரு மனிதனின் ஐந்து வயதிலிருந்து 20 வயது வரை வளரும் சூழ்நிலையும், ஊரும்தான் அவன் / அவள் மனதில் ஆழமாகப் பதிந்து போயிருக்கும். அந்த சூழ்நிலை மற்றும் ஊரும்தான் அவனைப் பொறுத்தவரையில் "சொந்த ஊர்" - Home. அதற்குப் பின் வாழும் இடங்களெல்லாம் வசதிக்காக, வேலைக்காக, மற்ற ஏதோ வாழ்க்கை சௌகரியங்களுக்காக என்ற ரீதியில்தான் இருக்கும். ஆனால் உள் மனதில் ஒரு பிணைப்பு என்பதும் " feeling at home" உணர்வும் எழுவது இந்த 5 -20 வயதுகளில் வளர்ந்த ஊர்தான்.

இந்த மாதிரியான இரு நாட்டு - சில சமயம் பன்னாட்டு - சூழ்நிலையில் வளரும் குழந்தைகளுக்கு எந்த ஊரின் மீது தேச பக்தி இருக்கும் என்பது விடைத் தெரியாத கேள்விதான். அதுபோல் சௌகரியத்துக்காகவோ அல்லது பல நாள் வாழ்ந்த ஒட்டுதலாலோ வேற்று நாடுகளின் குடிமக்களாக மாறுபவர்களின் ஊர்ப்பாசமும் அடி மனதில் அந்த 5லிருந்து 20 வயது வரை வளர்ந்த ஊரில்தான் இருக்கும். ஆனால் இதற்கும் சில விதி விலக்குகள் உண்டு.

எப்படியென்றால், " சொந்த ஊரை / நாட்டை" விட்டு வெளியே வாழ்ந்தாலும் சில குடும்பங்களில் வீட்டுக்குள்ளே தங்களின் ஊர்ப்பழக்க வழக்கங்களையும், வாழ்க்கை முறையயும் துளிக்கூட மாற்றிக்கொள்ளாமல், புலம் பெயர்ந்த ஊரின் தாக்கங்கள் தங்கள் வீட்டுக்குள்ளே அண்டாமலும் சிலர் இருப்பார்கள். இந்தக் குடும்பங்களில் இளையத் தலைமுறையினருக்கு இரட்டை வாழ்க்கை முறை பழகிப்போயிருக்கும் - அல்லது இந்த தர்ம சங்கட நிலையை இயல்பாக ஏற்றுக்கொண்டிருப்பார்கள். வீட்டுக்குள் வந்தால் இந்தியா/தமிழ்நாடு/ கிராமம் என்றும், வெளியே போனால் வேறு ஒரு நாடு / மாநிலம் / ஊர் என்றும் வாழக் கற்றுக்கொண்டிருப்பார்கள். ஆங்கில நாவலாசிரியை ஜும்பா லஹரியின் கதைகளில் இந்த Jekyll and Hyde மாதிரியான வாழ்க்கையைப் பற்றி நிறைய வரும். ஆங்கில சினிமா Bend it Like Beckham, ஹிந்தி சினிமா Dil Wallen Dhuniya Leh Jaayenge போன்றவற்றின் கதைக் களன்கள், இப்படிபட்ட இரட்டை வாழ்க்கை முறையில் தர்ம சங்கடமாக வாழும் தலைமுறையினரைச் சுற்றிதான் அமைக்கப்பட்டுள்ளன.

இதில் மிகப்பெரிய பிரச்சனை ஆற்றில் ஒரு காலும் சேற்றில் ஒரு காலுமாக இருக்கும் "சாண்ட்விச்" பெற்றோர்கள் - ஒரு பக்கம் பெற்றோர், மறுபக்கம் பிள்ளைகள் - இருவரையுமே திருப்தி படுத்த வேண்டும். ஊரில் இருக்கும் அவர்களுடைய பெற்றோரைத் திருப்தி படுத்துவதற்காகவோ அல்லது இன்னும் தங்கள் ஊர்ப்பாசத்தையும் அங்குள்ள வாழ்க்கை முறையை விட முடியாமலும் இருக்கும் இவர்கள் தங்கள் பிள்ளைகளிடம் அந்த வாழ்க்கை முறையைத் திணிக்கப்பார்ப்பார்கள். வேற்றூரின் சூழ்நிலையில் வளரும் பிள்ளைகளுக்கோ இவர்களது பிடிவாதம் புரிவதில்லை. In Rome, live like Romans என்பது பெற்றோர்களுக்கு ஏன் புரிவதில்லை என்று அவர்களுக்குத் தோன்றும். ஆனால் வீட்டில் இருக்கும் குடும்பப் பழக்க வழக்கங்களுக்கும் வெளியில் மற்ற கலாசாரப் பழக்கங்களுக்கும் உள்ள வித்தியாசங்களைப் புரிந்து கொள்ள சொல்லிகொடுத்து வளர்க்கும்போது இரண்டு விதமான - இன்னும் பலவிதமான வாழக்கை முறைகளையும் புரிந்துகொண்டு, அவற்றை மதித்து வளரும் மனப்பக்குவம் குழந்தைகளுக்கு வந்துவிடும். இது கொஞ்சம் கழைக்கூத்தாடி வேலை போன்றதேயானாலும், எங்கே இருந்தாலும் வாழ்க்கையை இயல்பாக வாழக்கற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் வரும் என்பதால் வளர்ப்பில் இந்த அளவு சிரமமும் சிரத்தையும் காட்டுவது நல்லதே.

இந்தப் பிரச்சனையைத் தவிர்க்க சிலர் குழந்தைகள் சிறியவர்களாக இருக்கும்போதே " ஊர்ப்பக்கம்" திரும்பி விடுவார்கள்.
என் தாத்தாக்கள் ஓய்வு பெற்று கிராமத்தில் மீண்டும் குடியேறியதைப் போல் நாங்களும் நான்கு வருடம் முன்பு சென்னைக்கு வந்து சேர்ந்தோம். வந்தபின் கொஞ்சம் கொஞ்சமாக "என் ஊரில்" கால் ஊன்றத் தொடங்கினேன். பல தலைமுறைகளாக அல்லது பல வருடங்களாக சென்னையை / தமிழ் நாட்டை விட்டு வெளியில் வட இந்தியாக்களில் வாழும் தமிழ் புலம் பெயர்ந்தோர் பலர் சென்னைக்கும் தமிழுக்கும் அந்நியப்பட்டுவிட்டது போல் பேசுவதைக் கேட்டிருக்கிறேன். வட இந்தியாவிற்குப் புலம் பெயர்ந்த பலர் சென்னைக்கு / தமிழ் நாட்டுக்குத் திரும்ப ஏனோ அஞ்சுவதையும் பார்த்துள்ளேன். சென்னைக்காப் போகிறீர்கள்? உங்களால் சென்னை வாழ்க்கை முறையை ஏற்றுக்கொள்ள முடியுமா என்றும் கேட்டிருக்கிறார்கள். அன்றும் சரி. இன்றும் சரி. என் வேருக்குத் திரும்புவது எனக்கு பெரிய விஷயமாகப் பட்டதில்லை. சென்னையில் வாழ்ந்திராவிட்டாலும் நான் அந்நியமாக மட்டும் உணர்ந்ததேயில்லை. மாறாக இது/ தமிழ் நாடு என் இடம் என்ற நினைப்பு என்றுமே இருந்தது.

என் நினைப்பு என்னை ஏமாற்றவில்லை. இந்த நான்கு வருடங்களில் சென்னை நன்றாகவே பழகியும் பிடித்தும் விட்டது. நிறைய விஷயங்களில் என் வாழ்க்கை முறை சென்னை வாழ்க்கை முறையுடன் ஒத்துப் போவதால் இயல்பாக இருக்கிறது. வீட்டிலும் வெளியிலும் ஒரே மொழி என்பதே ஒரு வித்தியாசமான அனுபவம்.

இரவு 10 மணிக்குமேல் மரங்கள் அடர்ந்த ராஜா அண்ணாமலை வீதிகளில் செல்லும்போது அந்த அமைதியான நேரத்தில் சென்னையின் அமரிக்கையான அழகு புரிகிறது. பெற்றோரும் உற்றோரும் இருந்த, /இருக்கும் ஊர் என்று சென்னைக்கு வந்துவிட்டாலும், தமிழ் நாட்டில் எந்த ஊரிலும் இப்படி சௌகரியமாகவே உணர்ந்திருப்பேன் என்று நினைக்கிறேன். ஆனால் டில்லி வாழ்க்கைப் பழகிப்போனதில் டில்லியும் இன்னொரு "என் ஊர்" என்ற நினைப்பு மட்டும் மாறவில்லை.

ஆனால் நான் இருந்த எந்த வெளி நாட்டிலும் அங்கேயே இருந்து விட வேண்டும் என்று தோன்றியதேயில்லை - எத்தனைதான் வாழ்க்கை சௌகரியமாக இருந்தபோதும். இது தற்காலிக வீடு /ஊர் என்ற உணர்வு எப்போதும் இருந்து கொண்டே இருந்தது. home is home. என்கிற உணர்வு "நம் வீட்டில்தான்" வரும் - எத்தனைக் கஷ்டங்கள் இருந்தாலும். பல வருடம் புழங்கியக் காரணத்தால் டில்லியும் " என் ஊர்" என்று ஆகிவிட்டிருந்தது.
சமீபத்தில் எழுத்தாளர் C.S Lakshmi (அம்பை) தொகுத்த "The Unhurried City" என்ற புத்தகம் சில நாட்கள் முன்பு படித்துக்கொண்டிருந்தேன். அருமையான பழையப் படங்களுடன், சென்னையைப் பற்றி எழுத்தாளர்கள், கவிஞர்கள், அறிஞர்கள், கலைஞர்கள், பல்துறையிலும் வித்தகர்கள் என்று பலர் அவரவர் கோணத்திலிருந்து எழுதியக் கட்டுரை, கதை, கவிதைகள் என்று இந்தத் தொகுப்பு இருந்தது. தொகுப்பில் இருந்த கருத்துகள் பல்வித பார்வையில் இருந்தன. ஆனால் இந்தப் புத்தகத்தை என்னைப் படிக்கத் தூண்டியது, லஷ்மி எழுதிய முன்னுரை. முன்னுரை எழுதுவதே ஒரு கலை. தான் எடுத்துக்கொண்ட வேலைக்கு ஒரு ஆர்வத்துடனும் அந்தப் பொருளில் ஒரு பிடிமானத்துடனும் ( involvement) சரியான முறையில் ஆராய்ச்சி செய்து எழுதப்படும் சில முன்னுரைகள், புத்தகத்தைவிட அருமையாக, ஜனரஞ்சகமாக அல்லது ஆழமாக அமைந்துவிடும். அம்பை எழுதிய " வீட்டின் மூலையில் ஒரு சமையலறை" என்ற கதையில் ஒரு ராஜஸ்தான் குடும்பத்தில் வீட்டு மருமகள்கள் - நன்கு படித்த பெண்களும் கூட - எப்படி சமைப்பதும், வீட்டு வேலையுமே வாழ்வு என்று வாழ்கிறார்கள்; முடக்கப்படுகிறோம் என்ற பிரக்ஞைக் கூட இல்லாமல், என்று விவரித்திருப்பார். வீட்டில் இருக்கும் இந்தப் பெண்களுக்கு ஒரு மாறுதல் என்று குடும்பம் பிக்னிக் போவார்கள். அங்கும் இவர்கள் நேரம் சாப்பாட்டுக்கடையிலேயே கழியும். இந்தக் குடும்பத்து ஆண்கள் " மணமகள் தேவை" என்று விளம்பரம் கொடுக்கும்போது " நன்குப் படித்த, ஆனால் எதிர்த்துப் பேசாத, நல்ல அழகுள்ள ஆனால் கீழ்ப்படிதல் குணமுள்ள....." என்ற ரீதியில் தேடுவார்களாம். ( செய்தித்தாள்களைப் புரட்டினால் இன்றைக்கும் இதில் மாற்றம் இருக்கிறார்போல் இல்லையே?!!) இன்னொரு கதையில் பிரசவ வலி வரும் வரையில் வயலில் வேலை செய்யும் ஒரு பெண்ணைப் பற்றி எழுதியிருப்பார்.

அம்பையின் அவதானிப்புகளையும் அவருடைய எழுத்தில் இருக்கும் கூர்மையையும் ரசித்திருக்கிறேன். இந்த முன்னுரையும் அப்படியே. இந்தத் தொகுப்பில் சென்னைக்கு வந்து வாழ்க்கையை ஆரம்பித்த, வாழ்க்கையில் பிரகாசித்த பிரபலங்களைக் கோடிட்டுக் காண்பிக்கிறார் - உ.வே.சா முதல், பாரதியார், புதுமைப்பித்தன், மற்றும் மருத்துவம் படிக்க வந்த டாக்டர் முத்துலஷ்மி ரெட்டி, சென்னைக்கு வந்து பல அரசியல் கலந்துரையாடல்கள் நடத்திய காந்திஜி, என்று பட்டியலும் இவர்கள் சென்னை வந்தக் கதையும் என்று விவரங்களைத் தூவியிருக்கிறார்.

கிராமங்களிலிருந்து சென்னைக்குப் புலம் பெயர்தலின் ஆரம்பக்காலங்களைப் பற்றி விவரிக்கையில் அந்தக் காலத்தில் சென்னைப் பற்றி பிற ஊர்க்காரர்களின் கவலைகளையும், சென்னைக்கு புதிதாகக் குடியேறியவர்களின் பயங்களையும் நகைச்சுவையாக சொல்கிறார். 1925ல் வெளி வந்த " சென்னை நாகரீக காளி விந்தை" என்ற புத்தகத்தில் சென்னைப் பெண்கள் எப்படி கலாசாரம் இல்லாமல் - " நெற்றியில் குங்குமமில்லாமல் சாந்துப்பொட்டு இட்டுக்கொண்டு, உரக்கப்பேசி சிரித்துக்கொண்டு, என்று நவீனப் பெண்களைக் கிண்டல் செய்யும் அந்தக் காலக் கவிதையைச் சுட்டிக்காட்டுகிறார். பத்திரிகைகளிலும் இந்த " நவீன" பெண்கள் பற்றிய கேலிச் சித்திரங்கள் வந்ததையும் எடுத்துக்காட்டுகிறார்.

அந்தக் காலத்து சென்னையின் பூங்காக்களில் மாலையில் ரேடியோ பாடுமே அதைக்கூட குறிப்பிட்டுள்ளார். இசை மற்றும் கலாசார மையமாக சென்னை இருந்ததை விவரிக்கும்போது மியூஸிக் அகாடமி பற்றியின் ஆரம்பம் பற்றி எழுதுகிறார். 1928ல் ஆரம்பிக்கப்பட்டபோது இசைக் கச்சேரிகள் தவிர அங்கே இசை சம்பந்தமான பல சொற்பொழிவுகளுக்கும், கலந்துரையாடலுக்கும், பகிர்தலுக்கும் இடம் இருந்தது. ஆனால் இசையை இப்படி எந்தவிதமான "அமைப்புக்குள்ளும்" - institutionalization of music - கட்டுபடுத்தக்கூடாது என்ற கொள்கையில் இருந்த வீணை தனம்மாள் கிண்டலாகக் கேட்பாராம்: : " ஓ, அங்கே இசையைப் பற்றிப் " பேசுகிறார்கள்" என்று கேள்விப்பட்டேனே?" என்பாராம். இப்படி சுவாரசியமாகப் பல விஷயங்கள் ஆங்காங்கே தாளித்துக் கொட்டப்பட்டு அக்கறையாக எழுதப்பட்ட ஒரு முன்னுரை.

நிறையக் கருப்பு வெள்ளைப் படங்கள் - பழைய சென்னையைக் காண்பிக்க. என் கவனத்தை ஈர்த்த ஒன்று: குண்டும் குழியுமான ஒரு சாலையின் குறுக்கேக் கொட்டை எழுத்தில் துணியில் எழுதிய ஒரு பெரிய அறிவிப்பு: " காணவில்லை; பெயர் - தார் ரோடு. நிறம் - கருப்பு; அளவு - 75 அடி அகலம், ஒரு கிலோமீட்டர் தூரம்; தகவல் தெரிந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி - சென்னை மாநகராட்சி."

ஹ்ம்ம்.....இப்போதெல்லாம் இப்படிபட்ட நகைச்சுவையுணர்வுக்கே
" காணவில்லை" அறிவிப்புப் போட வேண்டியதாகிவிட்டது.

அம்பைக்கும் எனக்கும் ஒரு ஒற்றுமை. என்னைப்போலவே இவரும் பளிச்சென்று சொல்கிறார். " நான் சென்னையைச் சேர்ந்தவள் அல்ல. ( I did not belong to Chennai.), நான் வளர்ந்ததெல்லாம் பெங்களூரில்" என்று. சென்னைக்கு வெளியே வளர்ந்திருந்தாலும் சென்னை என் வாழ்க்கையில் ஊடுருவியிருந்தைப் போல இவருக்கும் இருந்திருக்கிறது. லஷ்மி சொல்கிறார்: " சென்னையில் வாழவில்லையே தவிர சென்னை வாழ்க்கையில் ஒரு அங்கம். காலையில் ஹிந்து பேப்பர்; காபி; ஆனந்தவிகடன், கல்கி.... அப்புறம் பண்டிகைகள் ; தீபாவளி பண்டிகை ரொம்ப முக்கியம். முதலில் விடிகாலையில் இருட்டில் எண்ணைக் குளியல் - பிறகு எங்கள் பங்கு பட்டாசுகள்; அதன் பிறகு சுடச்சுட இட்லி; பச்சைமிளகாயும் தேங்காயும் பொட்டுக்கடலையும் வைத்து அரைத்த சட்னியுடன் - கொஞ்சம் தாராளமாகவே - மொளகாப்பொடி எண்ணெய்; கமகமவென்று வறுத்த எள்ளு வாசனை ஆளைத்தூக்க. இதெல்லாம் வயிறு நிறைய சாப்பிட்டபின் எனக்கும் என் தம்பிக்கும் முக்கியமாக ஒரு வேலை காத்திருக்கும். எங்களுடைய உண்டியைக் குலுக்கி ஐந்தோ அல்லது ஆறு ரூபாயை எடுத்துக்கொண்டு மல்லேசுவரம் மார்க்கெட்டை நோக்கி நடைபோடுவோம் - பள பளவென்ற அட்டையுடன் வரும் ஆனந்தவிகடன் தீபாவளி மலர் வாங்க...."

இப்படி போகிறது அவர் பெங்களூரில், சென்னைப் பெண்ணாக வளர்ந்த விவரங்கள். வெளி நாடுகளில் / மாநிலங்களில் இருக்கும் பல குடும்பங்களில் இதே கதைதான்.

என் மகன்களிடமும் இந்த " தமிழ் நாட்டுக்கு வெளியே தமிழ் வாழ்க்கை முறை" பழகிவிட்டது. இன்று அமெரிக்காவில் இருந்தாலும், இப்போதே " ஊர்" திரும்பும் கேள்விகள் அவர்களுக்கும் வந்துவிட்டது. ஆனால் அவர்கள் "ஊர்" டில்லி. சென்னையல்ல. வீட்டில் தமிழ், வெளியில் ஹிந்தி என்ற வாழ்க்கை முறையில் ஊறியவர்கள். அவர்களுக்கு சென்னையில் பிடிமானம் இல்லை - எனக்கு என் தந்தையின் ஊரான தஞ்சாவூர் அந்நியமாகிப் போனது போல.
நான் பல வருடங்களுக்கு முன்னமேயே "ஊர்" திரும்பியிருக்க வேண்டுமோ? ஒரு வேளை என் மகன்கள் அமெரிக்காவிலேயேத் தொடர்ந்து இருக்க நேரிட்டால் அடுத்தத் தலைமுறையினருக்கு இந்தியாவே அந்நியமாகிப் போனால் ஆச்சரியப்படுவதற்கில்லை. அவர்களிடம் தமிழர் வாழ்க்கை முறை இருக்கலாம். ஆனால் வாழ்க்கை முறை வேறு. ஊர்ப்பாசம் வேறு. வாழ்க்கை முறை / கலாசாரம் என்பதெல்லாம் பூகோள எல்லைகளைக் கடந்தவை.

அப்படி என்றால், ஊர்ப்பாசம் என்பது பூகோள எல்லைகளுக்குக் கட்டுப்பட்டதோ?

இன்னும் புரியவில்லை. ஊர்ப்பாசம் எப்படி வருகிறது? பிறந்ததாலா? வளர்ந்ததாலா? பழகிப்போனதாலா? நம் ரசனைக்கு ஏற்றதாக ஒரு ஊர் இருப்பதாலா? வளர்ந்தப் பாசமா?, பிறந்தப் பாசமா? அல்லது பிழைப்புப் பாசமா? எந்த ஈர்ப்பு அதிகம்?

இதுபோல், இந்தியப் பெற்றோர்களுக்கு வெளி நாட்டில் பிறந்த குழந்தைகளுக்கு தேச பக்தி எந்த இடத்தில் இருக்கும்? பெற்றோர்களின் தேசத்திலிருந்து அவர்கள் தேச பக்தி வித்தியாசமாக இருக்கும்போது அன்பினால் பிணைக்கப்பட்ட அவர்கள் உறவில் அரசியலால் விரிசல் வர வாய்ப்பு உள்ளதோ? இரு வேற்று நாட்டு மனிதர்களின் திருமண பந்தத்திலும் இதே கேள்விகள்.

சுருக்கமாகச் சொன்னால் பூகோள எல்லைகளைத் தாண்டி எழுந்த /வளர்ந்த உறவுகள், மனிதன் வகுத்த பூகோள / அரசியலின் எல்லைகளின் பாசத்தில் ( ஊர்ப்பாசம் / தேசப்பாசம்) கட்டுப்பட வேண்டுமா? இந்தக் கட்டுப்படலின் எல்லை எங்கே நிற்கிறது?

தொடரும் கேள்விகள்.......

நன்றி: தமிழோவியம்.