Sunday, October 30, 2005

தீபாவெடி??

டில்லியில் யார் இந்தச் செயலை செய்திருப்பார்கள் என்று இதுவரை தெரியவில்லை. ஸ்ரீகாந்த் தன் வலைப்பதிவில் பட்டியலிட்டுக் கூறியுள்ளதுபோல், காரணம் எதுவும் நிஜமாகவே தென்படவில்லை. இந்தியா பாகிஸ்தான் உறவு - பூமாதேவிக்கு நன்றி - இதைவிட சுமூகமாக இருக்க முடியாது. சொல்லப்போனால், பூகம்பத்தால் குலைந்து போன trenches ( போர் வீரர்கள் பதுங்கும் குழிகள்?) இவற்றை மீண்டும் கட்ட உதவி செய்யவும் இந்தியா முன்வந்தது. பாகிஸ்தானின் trenches உபயோகம், இந்தியாவுடன் போரிடுவதற்குதான் என்பதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும் !
இப்படி இரு நாடுகளுக்குமிடையே ஒரு அமைதி நிலவும்போது பாகிஸ்தான் தூண்டிவிட்ட காஷ்மீர் தீவிரவாதிகள் இந்தச் செயலை செய்திருப்பார்கள் என்று சொல்ல முடியாது. புயல், பூகம்பம் என்று இயற்கைதான் சீற்றமாக இருக்கிறாள். அரசியல் மந்தமாகதானே இருக்கிறது? - ஈராக் எண்ணை விற்ற சமாசாரத்தில் மத்திய அமைச்சர் நட்வர்சிங்கிற்குப் பங்களிப்பு இருக்கிறது என்று சொல்லும் Volcker Report தவிர வேறு பெரிய அரசியல் நிகழ்வு எதுவும் இருக்கவில்லை.

டில்லியில் பல காரணங்கள் / ஊகங்கள் பேசிக்கொள்கிறார்கள். அவற்றில் ஓரளவு உண்மை இருக்கலாமோ என்று தோன்றுகிறது. ஆனால், மொத்தத்தில் யாருக்கு இவ்வளவு கோபம் என்று இன்னும் திட்டவட்டமாகப் புரியவில்லை.

இத்தனை கோரமான சம்பவத்திலும் ஒருவரைக் கட்டாயம் பாராட்டத் தோன்றியது. கோவிந்தபுரியில் இருந்த அந்த டெல்லி டிரான்ஸ்போர்ட் பஸ் டிரைவர். பயணிகள் உட்கார்ந்து பஸ் கிளம்பும் முன்பு ஆளில்லாமல் ஒரு பை பஸ்ஸில் கிடப்பதைக் கவனித்து எச்சரிக்கையடைந்து அவர் உடனே எல்லோரையும் கீழே இறங்க சொல்லிய அடுத்த சில வினாடிகளில் பஸ் வெடித்தது. டிவியில் பயணிகள் ஒவ்வொருவரும் நன்றியுடன் அந்தப் பஸ் டிரைவரைப் பற்றி பேசினார்கள்.

இருந்தாலும் டில்லி முதலமைச்சர் சொல்லியதுபோல், இது மிகவும் ஜாக்கிரதையாக முன்கூட்டியே திட்டமிட்ட செயல் - பண்டிகைக் காலம் - எல்லோரும் மும்முரமாக கடைகளைச் சுற்றும் சமயம் - அதுவும் சரோஜினி நகர், பஹார்கஞ்ச் என்று மத்தியதர மக்கள் அதிகம் வலம் வரும் சந்தைகளைக் குறிபார்த்துத் தாக்கியிருக்கிறார்கள்.

என்று விடுதலை ? - ஒன்றுமறியாத அப்பாவி மக்களைக் கொல்லும் தீவிரவாதத்திலிருந்து?

இதன் நடுவே நாளை மறு நாள் தீபாவளி. பல இல்லங்கள் புயலாலும், பூகம்பத்தாலும், குண்டு வெடிப்பினாலும் கலங்கியிருக்கும் இந்த வேளையில் மகிழ்ச்சியான தீபாவளி என்று சொல்லத் தோன்றவில்லை.

ஆனால் எல்லாவற்றையும் மீறி ஒளிக் கீற்றுக்கள் நம் மனங்களில் ஒளிரட்டும். நம்பிக்கை வளரட்டும். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

Thursday, October 27, 2005

மழை, வெள்ளம்.......இணையம்....

பாலத்துக்குக் கீழே நிறைய தண்ணீர் சென்றுவிட்டது - தமிழ்மணம், தமிழ் நாடு இரண்டிலுமே - என்றுதான் ஒரு மாத இடைவேளைக்குப் பின் பதியும் என் இந்தப் பதிவை ஆரம்பிக்க வேண்டும். திருச்சி, தொட்டியம் அருகே கிராமத்துக்கு சென்றுவிட்டு சென்னைத் திரும்பிய மறு நாள் அங்கே எல்லாம் வெள்ளக்காடாக இருப்பதைப் பார்த்ததும் ஒரு நாள் தாமதமாக வந்திருந்தால் மாட்டிக் கொண்டிருப்போமே என்றுதான் தோன்றியது. நல்ல வேளைத் தப்பித்தோம் என்ற சுய நல உணர்வைத் தடுக்க முடியவில்லை.

இரண்டு மாதம் முன்புதான் அங்கே அமெரிக்காவில் நியூ ஆர்லின்ஸ் புயலைப் பார்த்துவிட்டு இங்கே வந்தால் இங்கே பல வருடங்களுக்குப் பிறகு இப்படி ஒரு வெள்ளம். படகுகளில் பெட்டிப் படுக்கைகளுடனும் குழந்தைகள் மற்றும் குடும்பத்துடனும் பயணம் செய்யும் மக்கள். ஊரிலிருந்து வந்தவுடன் வந்தவுடன் முதல் வேலையாக கிராமத்தில் இருக்கும் நண்பர்கள் வீட்டுக்குப் போன் போட்டு விசாரித்தபோது அவர்கள் குரலில் இருந்த கவலையும் பயமும் என்னையும் தொற்றிக்கொண்டது. நல்ல வேளையாக மறு நாள் தண்ணீர் சற்று வடிந்துவிட்டது என்று கேட்டதும் சற்று நிம்மதி. ஆனாலும் பாவம் அவர்களுடைய வாழைத்தோட்டங்களும் வயல்களும் நீரில் மூழ்கியிருக்கும். ஆனால் கையைப் பிசைந்து கொண்டு நிற்காமல் பலர் வெள்ளத்தடுப்பு முயற்சிகளை மேற்கொண்டதைப் பார்க்கும்போது அவர்கள் சுறுசுறுப்பைப் பாராட்டத் தோன்றியது. ஆனால் NDTV யின் செய்தியாளர்கள் செய்தியுடன் கூடிய சம்பாஷணைதான் கடுப்பை ஏற்றியது. நுபுர் பாசு, மாயா சர்மாவிடம், " சரி இனிமே அவர்கள் ( தமிழகமக்கள்) 'தண்ணீர் கொடுங்கள்' என்று கேட்கமாட்டாங்களே? " என்ற தொனியில் பேசியது அநாகரித்தின் எல்லை.

வெள்ளம் எங்கோ திருச்சி போன்ற மாவட்டங்களில் மட்டுமல்ல. பயங்கர மழையினால் சென்னையிலும் இன்று இதே கதைதான். பல இடங்களில் மின்சாரம் இல்லை. ( ஏதோ அதிர்ஷ்டவசமாக என் வீட்டில் இன்னும் மின்சார பகவான் கருணை இருக்கிறது.) சாலைகள் நிலை சொல்லவே வேண்டாம். தன்ணீர் நிரம்பி, மரங்கள் விழுந்து ஒரே குழப்பம்தான்.

மழை, வெள்ளம் இவற்றுக்கிடையே இந்த வாரம் ஒரு விஷயம் என் கவனத்தை ஈர்த்தது.

தற்போது இணையத்தின் வீச்சு, மற்றும் தாக்கம் இவைகளைப் பற்றியும், இணையத்தை சர்வதேச அளவில் ஏதாவது கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கான முயற்சிகள் பற்றியும் ஊடகங்களில் விவாதிக்கப்பட்டு வருகின்றன. அடுத்த தகவல் சமூகத்தின் சர்வதேச உச்சி மாநாடு வரும் நவம்பர் மாதம் துனிசியா நாட்டின் ( வட ஆப்பிரிக்காவில் லிபியாவுக்கும் அல்ஜீரியாவுக்கும் மேலே இருப்பதாக இந்த வரைபடம் காண்பிக்கிறது ) தலைநகரான துனிஸ்ஸில் நடக்க இருக்கிறது. இந்த மாநாட்டின் முதல் கட்டம் ஸ்விட்சர்லாந்தின் ஜெனிவாவில் 2003ல் நடந்தது. இந்த விஷயம் பற்றி மேலும் அறிய இங்கே பாருங்கள்.

இணையத்தின் ஆரம்ப கால வளர்ச்சிகள் அமெரிக்காவில் நிகழ்ந்தது என்பதால் அதைக் கட்டுபடுத்தும் அஸ்திரங்கள் தன்னிடமே இருக்க வேண்டும் என்று அமெரிக்கா நினைக்கிறது. இதற்கு மற்ற உலக நாடுகள் - ஐரோப்பிய நாடுகள் உள்பட - ஆட்சேபம் தெரிவிக்கின்றன. இணையம் உலகெங்கும் பரவலாக படர்ந்து நிற்பதால் ஐ. நா சபையின் கண்காணிப்பிலோ அல்லது வேறு ஒரு சர்வதேச கண்காணிப்பாளரை ஏற்படுத்தியோ இணையம் ஒரு சர்வதேச கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்று மற்ற நாடுகள் எதிர்பார்க்கின்றன. அப்படி சர்வதேச அமைப்பின் கைகளில் இணையத்தின் ஆதிக்கம் இருக்குமேயானால் வணிகம், பாதுகாப்பு என்று பல அம்சங்களிலும் பரவியிருக்கும் இணையத்தில் சுலபமாக ஓட்டைகள் ஏற்பட்டு இணையம் பாதுகாப்பில்லாமல் ஆகிவிடும் என்று அமெரிக்கா சொல்லும் காரணத்தை மற்ற நாடுகள் நொண்டிச்சாக்காகதான் பார்க்கின்றன. அப்படி செய்தால் இணையத்தின் மீது தனக்கு இருக்கும் ஆதிக்கம் நீர்த்துப் போய்விடும் என்பதுதான் அமெரிக்காவின் முதல் கவலை ( - ICANN (Internet Corporation for Assigned Names and Numbers - என்ற இணைய விலாசங்கள் கொடுக்கும் முக்கிய அமைப்பு அமெரிக்காவில்தான் இருக்கிறது; தவிர பல இணையத் தொடர்புகளின் மூல சர்வர்களும் அங்கேதான் இருக்கின்றன -) என்று இதர நாடுகள் நினைக்கின்றன. இணையத்துக்கு அமெரிக்கா மட்டுமே மூலஸ்தானமாக இருக்கும் நிலை மாறி அமெரிக்காவுக்கு பதிலாக மற்றொரு மாற்று இணைய நிர்வாக அமைப்பு வர வேண்டும் என்ற கோரிக்கை வேகமாக வலுப்பெற்று வருகிறது. ஆரம்பித்தது அமெரிக்காதான் என்றாலும் இன்று இணையம் உலகமெங்கும் இன்றியமையாத தகவல் மையமாகிவிட்டதால் அமெரிக்கா இணையத்தின் மேல் தான் வைத்திருக்கும் "உரிமையை" (???) தளர விட்டுவிட வேண்டும் என்பது உலக நாடுகளின் கருத்து. அப்படி அமெரிக்கா ஆட்சேபித்தால் மாற்று அமைப்பு உருவாக வேண்டும் என்பது அடுத்த கட்ட சிந்தனை. வரும் மாநாட்டில் எப்படிபட்ட தீர்மானம் உருவாகிறது என்று பார்க்க வேண்டும். இணையத்தில் எல்லாவற்றுக்கும் மாற்று அமைப்பு தேடும் காலம் போலிருக்கிறது இது.