Saturday, March 27, 2004

நம்ம ஊரில்மட்டும்தான் தேர்தலா? அமெரிக்காவிலும் இது தேர்தல் வருஷமாயிற்றே? அங்கே மறுபடி புஷ் வருகிறாரா இல்லை கெர்ரி வரப்போகிறாரா; இங்கே யார் வருகிறார்கள் என்று வேடிக்கை பார்க்க இந்த வருஷம் சுவாரசியமாகதான் இருக்கப்போகிறது. இங்கே சென்னையில் அமெரிக்க தூதரகம் அவர்கள் தேர்தலை முன்னிட்டு அலசல்கள், விவாதங்கள் என்று ஒரு கூட்டத்தொடரை இந்த வாரத்தில் ஆரம்பித்துள்ளது.

முதல் கூட்டத்தில் சேஷன் ( இந்தியாவில் தேர்தல் என்ற உடனே அவர் ஞாபகம் வந்துவிட்டது போலும்) துவங்கிவைத்து பேசினார். நக்கல், கிண்டல் என்று வழக்கமான பேச்சு. அவருக்குக் கொடுக்கப்பட்ட தலைப்பு "தேர்தல்கள் இந்தியாவின் வெளி நாட்டு கொள்கையை எவ்விதம் பாதிக்கின்றன" என்பது.

" அவையோர் அவமதிப்பாக கருதவில்லையென்றால், இந்தத் தலைப்பில் நான் பேச வேண்டியது ஒரே வாக்கியத்தில் முடிந்து விடும்; தேர்தல்கள் இந்தியாவின் வெளிநாட்டுக்கொள்கையை எந்தவிதத்திலும் பாதிப்பதில்லை." என்று ஆரம்பித்தார். 700க்கும் மேற்பட்ட கட்சிகள் இருந்தாலும் இந்திய கட்சிகள் வெளிநாட்டு விவகாரங்களில் தேசீய உணர்வுடன் ஒரே நிலைப்பாட்டில்தான் இருக்கின்றன என்பது அவர் பேசியதின் சாராம்சம்.

ஆனால் பேச்சில் அவ்வப்போது இந்திய அமெரிக்க "சமீபத்திய" நட்பு பார்வையை சற்று அலசினார். அவருக்கு ஏற்றாற்போல் சமீபத்தில் Powell வேறு வந்து "Nato Alley" என்ற குட்டையைக் குழப்பிவிட்டுப் போய்விட்டார். நம்மவருக்கு பேச கேட்கவா வேண்டும்? அதேபோல் உலக வர்த்தக அரங்கில் அமெரிக்காவின் மேம்போக்கான கொள்கைகளை - கங்கூன் மாநாட்டில் விவசாய சலுகை போன்ற் விஷயங்களில் விட்டுகொடுக்காமல் பிடிவாதம் பிடித்தது, மற்றும் இந்தியாவைப் பாதிக்கும் வகையில் outsourcing தடுப்பு சட்டங்கள், இவற்றை கடுமையாக சாடினார்.

ஆனால் அமெரிக்க தூதர் ரிச்சர்ட் ஹெய்ன்ஸ் விடுவாரா? சில முக்கியமான விவகாரங்களில் - அதாவது விவசாயம் போன்றவை - இந்தியா தாரளமயமாக்குதலையும் உலக மயமாக்குவதையும் விரைந்து தழுவ வேண்டும் என்று சொல்லிவிட்டு அதையும் நம் நலனுக்குதான் சொல்வதாகவும் கூறினார். " உஅலக்ச் சந்தையைத் தழுவ வேண்டும் என்று உங்கள் நலனுக்காதான் வலியுறுத்துகிறேன். எங்கள் நலனுக்காக இல்லை. In your interest only; not in our interest".

அவர் இதைக் கூறியபோது என்னுள் ஒரு குரல் : " அட. ரொம்ப சரியாச் சொன்னீங்க ஹெய்ன்ஸ். இதையேதான் நாங்களும் outsourcing விவகாரத்தில் வலியுறுத்துகிறோம். உங்கள் வேலைகளை இந்தியா போன்ற நாடுகளுக்கு அனுப்பி விடுங்கள். உங்களுக்கும் கணிசமாக செலவு குறையும். உங்கள் பொருளாதாரம் மேம்படும். எங்கள் குழந்தைகளுக்கும் இங்கே வேலை கிடைக்கும். பின்ன என்ன இத்தனை சுலபமான 'win-win' தீர்வை விட்டுவிட்டு ஏதோ வேலைகளை இந்தியாவுக்கு அனுப்பக்கூடாது என்று அடம் பிடிக்கின்றீர்களே...

ஆனால் சேஷன் சொன்ன ஒரு கார்டூனை வெகுவாக ரசித்தேன். ஒரு அமெரிக்க சிறுமி தன் அப்பாவிடம் சொல்ல்கிறாள்.

அப்பா: ஏன் அம்மா? ஹோம் வொர்க் செய்யவில்லையா?

சிறுமி: என் வேலையை இந்தியாவுக்கு outsource செய்துவிட்டேன் அப்பா!!

Saturday, March 20, 2004

டிவியில் விசுவின் அரட்டை அரங்கம் ஓடிக்கொண்டிருந்தது. மாமியார் சுவாரசியமாக அதில் ஆழ்ந்திருந்தார். துணி காயப்போட்டுகொண்டிருந்த அந்தப் பெண் சட்டென்று ஒரு துணியைக் கீழே போட்டார். பின்னர் மாமியாரிடம் திரும்பி, சட்டை கீழே விழுந்துவிட்டது; போய் எடுத்து வருகிறேன் என்று சொல்லிவிட்டு கீழே போனார். கீழே போனவுடன் பக்கத்திலிருந்த ஒரு போன் பூத்தில் சென்று குடும்ப நண்பர் ஒருவருக்கு மட மடவென்று போன் போட்டார். "இனிமேலும் என்னால் தாங்க முடியாது. நல்ல வேளையாக என் பாஸ்போர்ட் வெளியில்தான் இருக்கிறது. என்னிடம் பணம் இல்லை. நான் வீட்டில் அணியும் இந்த உடையுடன் இப்படியே உங்கள் வீட்டுக்கு இப்போது நான் வந்துவிடுகிறேன். எப்படியாவது என்னை இந்தியாவுக்கு என் பெற்றோரிடம் அனுப்பிவிடுகிறீர்களா?" என்று கேட்டார். மறுமுனையில் ஆதரவாக பதில் வந்தது. அடுத்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் தன் பெற்றோரிடம் அவர் இந்தக் கதையைச் சொல்லிக்கொண்டிருந்தார்.

என் தூரத்து உறவினர் பெண் ஒருவர் சமீபத்தில் துபாயிலிருந்து திரும்பி வந்திருக்கிறார் - ஒரேயடியாக தன் துபாய் வாழ்க்கைக்கும் மண வாழ்க்கைக்கும் முழுக்குப் போட்டுவிட்டு. இரண்டு வருடம் முன்பு நடந்த அவர் திருமணத்திற்கு நானும் சென்றிருந்தேன். எல்லோரும் போல் அட்சதை போட்டு வாழ்த்தும்போது அவர் வாழ்க்கை இப்படி ஆகும் என்று யாருக்குத் தெரியும்? என்ன கதை என்கிறீர்களா? எல்லாம் வழக்கமான அதே கதைதான்; மனைவியைக் கொடுமைப்படுத்தும் கணவன். காரணம் அவள் அழகாக இல்லையாம்; இதென்ன கூத்து என்று தோன்றவில்லை?

உடலால், வார்த்தையால் பல கொடுமைகளுக்கு ஆளான கதை வேறொருவர் மூலம்தான் எனக்கு தெரிய வந்தது. என்னிடம் அந்தக் கதையைச் சொன்னவர் அந்தப் பெண்ணுக்கு மிக நெருங்கிய உறவினர் என்பதால் அவர் சொன்ன செய்தி உண்மையாகதான் இருக்க வேண்டும். அப்படியே மிகைப்படுத்தப்பட்ட செய்தியாக இருந்தாலும், அதில் ஓரளவேனும் உண்மை இருக்க வேண்டும். அந்த ஓரளவு உண்மையான சமாசாரம் கூட என்னால் திரும்ப சொல்லக் கூசும் வண்ணம் கொடுமையானது.

இந்த நிலையில் அந்தப் பெண் எப்படி 2 வருடம் பொறுத்துக்கொண்டு இருந்தார்? ஏன் முன்பே வரவில்லை - என்ற கேள்விக்கு வழக்கமான பதில்தான் வருகிறது. சமூக நிலை. 'அப்பா எத்தனை கஷ்டப்பட்டு திருமணம் செய்துவித்தார்? நான் யோசிக்காமல், என்னால் முடிந்ததை முயற்சி செய்யாமல், எப்படி எடுத்தேன் கவிழ்த்தேன் என்று ஓடி வர முடியும்?" பண்புடன் வளர்க்கப்பட்ட பெண்ணிடமிருந்து வந்த பொறுப்புள்ள பதில்தான்.

ஆனால் எங்கேயோ தவறு என்று புரிந்தவுடன் வெளியே வர முயற்சிக்காமல் இது என்ன விவேகமற்ற தயக்கம் என்று ஒரு கோபம்தான் மேலோங்கியது. அந்தப் பெண்ணின் உயிருக்கே ஏதேனும் ஆகியிருந்தால்? புகுந்த வீட்டு கொடுமையில் இறந்தவர்கள் லிஸ்டில் இன்னும் ஒரு நம்பராக முடிந்திருப்பாரே?

தகராறு செய்யும் மாப்பிள்ளைகளை நிராகரித்து திருமணத்தை நிறுத்தும் பெண்கள் இருந்தாலும், இது மாதிரியும் நிறையப் பெண்கள் இருக்கிறார்கள் என்பதுதான் இன்றைய நிதர்சனம். கல்வி, விழிப்புணர்வு இவற்றுக்கெல்லாம் மேலே ஒரு சமூக உணர்வு இவர்களைக் கட்டிப் போடுகிறது. இவர் குடும்பத்தில் பெற்றோர் இவருக்கு ஆதரவாக, துபாயில் உள்ள இவரது கணவனின் மேல் நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளனர். ஆனால் சில குடும்பங்களில் பெற்றோரே நாலு பேர் என்ன சொல்வார்கள் என்று பயப்படுகிறார்கள்; அடித்தாலும் உதைத்தாலும் உன் இடம் புகுந்த இடம்தான் என்று சொல்லும் பெற்றோரைப் பற்றியும் கேள்விப்பட்டுள்ளேன்.

அநியாயம் நடந்தால் எதிர் கொள்ள என்றுதான் தைரியம் வரும்? விழிப்புணர்வு என்பதெல்லாம் பேச்சோடு சரியா என்று ஒரு ஆயாசம் வந்து உட்காருகிறது. குடும்பம் என்றில்லை. பொதுவாகவே, நாலு பேர் என்ன சொல்வார்கள்; எல்லோரையும் போல் இருந்துவிட்டு போவோம்; என்கிற ரீதியிலேயே பெரும்பாலோர் உள்ளனர். இந்த "மந்தை" சுபாவத்தைவிட்டு வெளியே வந்தால்தானே வாழ்க்கை எவ்வளவு விசாலமானது; பல கோணங்கள் கொண்டது என்று புரியும் ?

Saturday, March 13, 2004

வலைப்பூவில் மாலன் எழுப்பிய கேள்விகளை இப்போது பார்க்கலாம் என்று நினைக்கிறேன்:

".....வலைப்பூ என்பது (personal) web log. ஒரு நபரின் நாட்குறிப்பின் பக்கங்களைப் போல. அதில் கவிதை இருக்கலாம். கவலை இருக்கலாம். ஒரு அனுபவம், வம்பளப்பு, கிசுகிசு, புலம்பல், ருத்ர தாண்டவம் எது வேண்டுமானாலும் இருக்கலாம். (நாம் எல்லா நாளும் ஒரே மனநிலையிலா இருக்கிறோம்?)ஆனால் எது இருந்தாலும் அதில் ஒரு அந்தரங்கத் தொனி, personal touch, இருக்க வேண்டும்."

ரொம்ப சரி. பின்னே பிரச்சனை எங்கே?

".... இப்படிதான் இருக்க வேண்டும்." என்று சொல்வதைத்தான் நான் ஏற்றுக்கொள்ளவில்லை. வலைப்பூவில் நான் முதல் நாள் பதிவில் சொன்னதையேதான் மறுபடி வலியுறுத்த விரும்புகிறேன்.

" ஒரு வலைப்பூ எப்படி இருக்க வேண்டும், அதன் நியதிகள் நியமங்கள் என்ன அல்லது வலைப்பூக்களின் குணாதிசியங்கள் என்ன என்ற ஆராய்ச்சி அவசியமில்லை என்பது என் அபிப்பிராயம். வலைப்பூக்களின் சிறப்பே அவற்றின் சுதந்திரமும், Spontaneityயும் தான் என்பது என் கருத்து. இலக்கியம் போல இன்று வலைப்பூக்கள் ஒரு தனி மனிதரின் மன வெளிப்பாடாக உருவாகியிருக்கிறது." என்று கூறியுள்ளதை மீண்டும் இங்கு பதிக்கிறேன். அதே சமயம், எந்த ஒரு அவையிலும் பின்பற்ற வேண்டிய ஒரு அடிப்படை நாகரிகம் இருக்கிறது. இணையத்துக்கும் அது பொருந்தும். தனி மனிதர்களைத் தாக்குவதோ அல்லது வார்த்தை வன்முறைகளோ எழுத்து சுதந்திரம் என்ற பெயரில் இடம் பெறுவதைத் தவிர்க்கலாம். வலைப்பூக்கள் அந்தரங்கமானவைதான். என் குடிலில் எனக்கு தோன்றியதைப் பதிவது என் விருப்பம். ஆனால் ஒரு டைரியில் எழுதி என் பீரோவுக்குள் பூட்டி வைத்துக்கொண்டேன் என்றால் பிரச்சனையில்லை. எப்போது என் எண்ணங்களை வெளியே பிறர் பார்வைக்கு கொண்டு வருகிறோனோ அப்போது சில அடிபப்டை நாகரிகங்களை மனதில் கொள்வது அவசியம் என்று நினைக்கிறேன்.

வலைப் பூவோ, வலைப்பதிவோ, வலைப் பக்கமோ, வலைத்தளமோ, இணையக் குழுக்களோ, எதுவாக இருந்தாலும் அவற்றின் அடிப்படை நோக்கம் மற்றவர்கள் கவனத்தை ஈர்ப்பதும் தன் கருத்துகக்ள் மற்றும் தன் எண்ணங்கள் பிறரை அடைய வேண்டும்; தான் பெற்ற அனுபவங்களைப் பிறருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதுதான் - it is basic urge of human beings to reach out and share.

ஒரு நிறுவனம் தனக்காக வலைத்தளம் ஆரம்பிக்கும்போது நிறுவனத்தைப் பற்றிய அறிமுகம், அதன் குறிகோள்கள், சரித்திரம், நோக்கங்கள் என்று பலவகை சமாசாரங்களைப் பதிந்து வைக்கும். வியாபாரம் விரிவுபடுத்த தொடர்புகள் சம்பந்தமான தகவல்களும் இருக்கும். பெரிய நிறுவனமாக இருந்தால் தங்கள் நிறுவனத்தில் வேலை செய்பவர்கள், வியாபார சம்பந்தம் உடையவர்கள் என்று தொடர்பு சுட்டிகளும், செய்திகளும் பக்கம் பக்கமாக இருக்கும்.

தனி மனிதர்கள் வலைப்பக்கம் / தளம் என்று பணம் கொடுத்து வைத்துக் கொள்கிறார்கள். பலருக்கு தங்கள் திறமையை உலகுக்கு அறிமுகப்படுத்த இது ஒரு ஷோ கேஸ். சிலர் இதை வேறு விதங்களிலும் உபயோக்கிறார்கள் - உதாரணமாக தன் எண்ணங்களைப் பதிவு செய்ய. நான் ஒரு பெரிய நிறுவனத்தின் CEO என்றால் என் நிறுவன தளத்தில் ஒரு கடிதம் மூலம் என் நிறுவனத்தில் வேலை செய்பவர்களுடன் பல விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளலாம். ஆனால் வேறு சில தனிபட்ட எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள இந்த தளம் சரியாக இருக்காது என்று நினைத்தால் தனியாக எனக்கென்று ஒரு வலைப்பக்கம் / தளம் உருவாக்கி அதில் எனக்கு தோன்றியதைப் பதிவு செய்யலாம். அது அப்போது வலைப்பூ ஆகிறது. இந்த வலைப்பூவை ஒரு ஓசி இடத்தில் - blogspot போல - பதிகிறேனா அல்லது பணம் கொடுத்து எனக்கென்று ஒரு இடம் ஒதுக்கிக் கொள்கிறேனா என்பது வேறு விஷயம். என்னுடைய பிரதான தளத்திலிருந்து என் வலைப்பூ வேறுபட்டுள்ளது என்பதுதான் முக்கியம். இதைத்தான் மாலனும் குறிப்பிடுகிறார் என்று நினைக்கிறேன். இந்த வலைப்பூவில் நான் என் நிறுவன சம்பந்தமான விஷயங்களையும் வெளியிடலாம்; என் சொந்த விருப்பு வெறுப்புகளையும் மற்றும் கற்பனையையும் வெளியிடலாம். பரந்த இணையத்தில் இது என் மூலை. இதை என் விருப்பம்போல் போட்டோக்கள் போட்டோ, கார்டூன்கள் வரைந்தோ / கடன் வாங்கியோ அல்லது வேறு எப்படியோ அழகு படுத்துவதில் தவறென்ன? இவற்றையெல்லாம் செய்வதாலேயே என் வலைப்பூ ஒரு வலைத்தளமாகவோ, பக்கமாகவோ அல்லது ஒரு வலை இதழாகவோ மாறிவிடப்போவதில்லை. அப்படியே என் வலைப்பூவை நான் ஒரு வலை இதழ்போலவோ, வலைப்ப்பக்கம் போலவோ பாவிக்கிறேன் என்று வைத்துக் கொண்டாலும் அதில் என்ன தவறு? நான் முதலில் சொன்னதுபோல் இது என் மூலை. இதை எப்படி நிர்வகிக்க வேண்டும் என்பது என் முடிவல்லவா? இதில் ஏன் இலக்கணம் புகுத்த வேண்டும்?

அது என் சுதந்திரம். இதைத்தான் நான் வலியுறுத்துகிறேன். ஆனால் வலைப்பூக்களில் போட்டோக்கள் வெளியிடுவதை மாலன் ஆட்சேபிப்பதற்கு ஒரு காரணம் இருக்கலாம். சென்னை போன்ற இடங்களில் போட்டோக்கள் இறங்குவதற்கு வெகு நேரம் ஆகிறது. இது ஒரு பிரச்சனைதான். இதைத் தவிர்க்க பதிவாளர்கள் ஒரே பதிவில் நிறைய போட்டோக்கள் போடாமல் சாம்பிளுக்கு ஒன்று போட்டுவிட்டு மிச்சத்தை போட்டோக்களுக்கு என்றே தனியாக இருக்கும் பதிவுகளில் வெளியிடலாம். உதாரணமாக மதி செய்வதுபோல் fotolog.com உபயோகிக்கலாம். இதன் மூலம் வலைப்பூவில் உள்ள கட்டுரை இறங்கும் நேரத்தை போட்டோ முட்டுக் கட்டை போடுவதைத் தவிர்க்கலாம்.

வலைப்பூ ஆசிரியர்கள் வலைப்பூக்களை அலசுவதை விட்டுவிட்டு எதை எதையோ பேசுகிறார்கள் என்பது மாலனின் இன்னொரு குற்றச்சாட்டு. மதி வலைப்பூ ஆரம்பித்த போது வலைப்பூவின் ஒரு முக்கிய நோக்கம் மற்ற வலைப்பூக்களின் நிறை குறைகளை அலசுவது என்று குறிப்பிட்டிருந்தார். ஒத்துக்கொள்கிறேன். ஆனால் இந்த அலசல் மட்டுமே செய்தால் மாணவர்கள் விடைத்தாளை அலசுவதுபோல் இருக்கும் என்பது என் அபிப்பிராயம். வலைப்பூக்களைப் பற்றியும் பொதுவான வேறு சில நாட்டு / உலக நடப்புகளையும் சேர்த்து அலசினால் சுவாரசியம் இருக்கும் என்று நினைக்கிறேன். மாலனின் கருத்துக்களை வெளியிட்டதும் இந்த நோக்கில்தான்.

இது போன்ற சமாசாரங்களைப் பகிர்ந்து கொள்ள தமிழ் வலைப்பதிவாளர்களின் யாஹ� குழுமம் இருந்தாலும் பத்ரி சொன்னதுபோல் ஒரு கூட்டு வலைப்பூ தேவை என்றே நினைக்கிறேன். இப்போது வலைப்பூக்களில் கருத்து பரிமாற்றத்திற்கு நிறைய இடமில்லை - "மறு மொழியில்" இரண்டு வரிக்கு மேல் பதிய முடிவதில்லை. ஆனால் ஒரு கூட்டு அமைப்பில் பலர் ஒரே சமயத்தில் தங்கள் பலவித சிந்தனைகளைப் பரிமாறிகொள்ள முடியும் - படித்தவற்றை எளிதாக ஒரு சுட்டி மூலம் லிங்க் கொடுத்து விடலாம். சொல்லப்போனால் வலைப்பூக்கள் இப்படிதான் ஆரம்பித்தன. படித்தவற்றையும், கண்களால் கண்டவற்றையும் பிறருக்கு சொல்ல சுட்டிகள் உப்யோகித்து தன் கருத்துக்களையும் பதியும் வழக்கம்.

மடலாற்குழுக்களைப் பற்றி மாலனின் கருத்துக்களில் எனக்கு ஆட்சேபணையில்லை. பெரிய கட்டுரையாக / கதையாக இருந்தால் வலைப்பூ ஆரம்பித்து சுட்டிகள் கொடுத்து விடலாமே? இந்தக் குழுக்களின் இலக்கணம் அல்லது வரை முறை அந்தந்த ஒருங்கிணைப்பாளர் முடிவு செய்ய வேண்டிய விஷயம். ஆனால் என் வலைப்பூ நான் முடிவு செய்ய வேண்டிய விஷயம். வாசகர்களை ஈர்க்க என்ன செய்ய வேண்டும் என்பது என் தலைவலி. கற்றுக் கொள்வதும் பிழைகளைத் திருத்திக் கொள்வதும் / கொள்ளாததும் என் கையில்தான்.

மொத்தத்தில் வலைப்பக்கம் அல்லது தளம் என்பது ஏதோ தொழில் நுட்ப சமாசாரம் என்று ஒதுங்கியவர்கள் கூட இன்று வலைப்பூக்கள் என்று ஆரம்பித்து தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள முடிகிறது.

பொதுவாக இலக்கியம் என்கிறோமே - இதில் இலக்கியம் முதலில் வந்ததா? அல்லது இலக்கணம் முதலில் வந்ததா? எனக்கு தெரியாது. ஆனால் என் ஊகம் - ஆதிகாலத்தில் மன வெளிப்பாடுகள் - expressions - முதலில் வெளி வந்திருக்க வேண்டும். திரும்பத் திரும்ப பாடப் பாட, சொல்ல சொல்ல, அதில் ஒரு முறை தோன்றியிருக்க வேண்டும். பின்னர் இது என்றால் இப்படிதான் இருக்க வேண்டும் என்று ஒரு இலக்கணம் தோன்றியிருக்க வேண்டும். இன்று வலைப்பூ அந்த ஆரம்ப நிலையில் இருக்கிறது. இலக்கணம் பின்னால் வரலாம் - வராமலும் இருக்கலாம். அதைக் காலம் முடிவு செய்யும்.

இப்போதுதான் துளிர்க்க ஆரம்பித்திருக்கும் இந்த இணைய சாதனத்தை இன்னும் சிறப்பாக நம்மவர்கள் பயன் படுத்த முடியும் என்றே நம்புகிறேன்.