Sunday, June 03, 2007

மீண்டும் தாப்பர்

கரண் தாப்பர் விடுவதாக இல்லை. மணிசங்கர் அய்யர், சென்ற வாரம் அம்பிகா சோனி, இந்த வாரம் மோன்டேக் சிங் அலுவாலியா என்று வரிசையாக தன் Devil's Advocate நிகழ்ச்சியில் இந்தியப் பொருளாதாரம் / பிரதமரின் CII உரை இவற்றைப் பற்றி கேள்விக்கணைகளைத் தொடர்கிறார்.

இன்றைய நிகழ்ச்சியில் சாராம்சம்:

தாப்பர்: சில வருடங்களுக்கு முன் மன்மோஹன் சிங் ஒரு அமெரிக்க கூட்டத்தில் தன் வெற்றிகளில் ஒன்றாக குறிப்பிட்ட விஷயம்: ' இந்தியாவில் அரசாங்கம் தொழில் முனைவர்களின் பின்னால் நின்று உபத்திரவமாக இருக்கும் நிலை மாறிவிட்டது" என்று சொன்னாராம். இன்று நிறுவனங்கள் தங்கள் உயர் அதிகாரிகளுக்கு அளவுக்கு மீறி எக்கசக்கமாகக் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று சொல்லி அப்படியே 'பல்டி' அடிக்கிறாரே? அரசாங்கம் மீண்டும் தொழிலதிபர்கள் என்ன செய்ய வேண்டும் / வேண்டாம் என்று தீர்மானிக்கும் காலம் திரும்பும் அறிகுறியா இது?"

அலுவாலியா: "நிச்சயமாக பிரதமர் அந்த அர்த்தத்தில் கூறவில்லை. ( டிவிக்கு வெளியே என் குரல்: தாப்பர் சார், கொஞ்சம் குறைச்சுக் கொடுங்க என்று பிரதமர் சும்மா ஒரு அறிவுரைதான் சொன்னார். உடனே கழுத்துமேல் கத்தி போடுவதுபோல் சொல்வது கொஞ்சம் அதிகப்படியா தோணலை?! :-) )

"தொழில்முறை வல்லுனர்கள் தொழில் நுட்பம் மற்றும் உயர் அதிகாரிகளின் சம்பளம் பற்றி அவர் குறிப்பிடவில்லை. இன்று பல தொழில்களில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களே முக்கியத் தலைமைப் பதவிகளில் இருக்கிறார்கள். பல உதாரணங்களில் நன்றாக லாபத்தில் இருக்கும் நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளைவிட, நஷ்டத்தில் அல்லது குறைந்த லாபத்தில் ஓடிக்கொண்டிருக்கும் பல நிறுவனங்களின் தலைமை அதிகாரிகள் எக்கச்சக்கமாக சம்பளம் - ஒரு ஆண்டுக்கு ரூ. 12 - 15 கோடிகள் என்ற ரீதியில் வாங்குகிறார்கள். ஒரு நிறுவனத்தில் வெளியிலிருந்து நியமிக்கப்பட்ட தொழில்முறை வல்லுனர்கள் இப்படி வாங்கினாலும் அவர்கள் திறமைக்கு விலை என்று கொள்ளலாம். ஆனால் இப்படி சம்பளம் பெறும் அதிகாரிகள் அந்தந்தக் குடும்ப நபர்களே. இதைத் தவிர்க்கலாம் என்பதுதான் பிரதமர் சொன்னதின் அர்த்தம்...."

இந்த "அதிகப்படி சம்பளம்" பிரச்சனைக்கு அலுவாலியாவின் யோசனை: ஒவ்வொரு நிறுவனமும் தங்கள் போர்டில் "சம்பள ஆய்வுக் கமிட்டி (Remuneration Committee) ஒன்றை நியமித்துக்கொண்டால் ஒரு வரையறை / வரம்பு இருக்கும்.

சில வருடங்களுக்கு முன் இந்திய நிறுவனங்கள் பல, நிர்வாகத்தைத் தங்கள் குடும்பத்துக்குள்ளேயே வைத்துக்கொள்வதிலிருந்து மாறுபட்டு, நிர்வாகத்தின் திறமையை அதிகரிக்கவும், குடும்பத்துக்கு வெளியேயிருந்து புதியக் கருத்துக்கள் நிர்வாகத்தில் இடம்பெற்று தொழில் செழுமை பெறும் என்ற எண்ணத்தினாலும், திறமையுள்ள தொழில்முறை வெளியார்களுக்கு முக்கியப் பொறுப்புகளைக் கொடுக்க ஆரம்பித்தன. இந்த மாறுதலைப் பற்றி ஒரு சிங்கப்பூர் பத்திரிகைக்கு அப்போது ஒரு செய்தித்தொகுப்பு எழுதினேன்.

ஆனால், சூரியோதயத்தில் (Sunrise Industries) இருக்கும் சிலச் செய்தித் தொடர்பு தொழில் நுட்ப நிறுவனங்கள் தவிர்த்து இதர தொழில்துறைகளில் - குறிப்பாக உற்பத்தித் துறையில் இந்த வழக்கம் தற்போது நின்று போய்விட்டதோ?