Tuesday, October 02, 2007

காந்திஜி & கஸ்தூரி பா

வளரும் காலத்தில் நமக்கு கிடைக்கும் சில வாசிப்புகள், சில சந்திப்புகள், சம்பவங்கள் மற்றும் அனுபவங்கள் நம் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தி பல விதங்களில் நம் எண்ணங்களையும் கொள்கைகளையும் உருவாக்குகிறது அல்லவா? அந்த வகையில் காந்திஜியின் "சத்திய சோதனை" பள்ளியில் படிக்கும் காலத்தில் படித்தது. பின்னர், அப்பா 1963ல் சேவாகிராமம் போயிருந்தபோது வாங்கி வந்த "எமது பா" என்கிற கஸ்தூரி பா பற்றிய இரண்டு புத்தகங்கள் - (சுசீலா நய்யார் எழுதியது - தமிழாக்கம், கோ. கிருஷ்ணமூர்த்தி - சர்வோதயப் பிரசுரம் ) இன்றும் என் சிந்தனைகளின் வேரில் இவர்களின் தாக்கம் ஆழமாக இருக்கிறது. குறிப்பாக, கஸ்தூரி பா. காந்திஜியின் அதே அளவு பிடிவாதமும் கருணையும் கொண்டவர்.

சுய சரிதத்தில், பா விடம் தான் நடந்து கொண்ட கடுமையான தருணங்களை காந்திஜி எழுதியிருப்பதைப் படிக்கும்போது, " எப்படி காந்திஜி இந்த மாதிரி இருந்தார்!!" என்று எண்ணத் தோன்றியதுண்டு. ஆனால், தன் தவறுகளை அவர் வெளிப்படையாக சொல்லக் காரணம் - தன் தவறை உணர்ந்து தன்னை மாற்றிக்கொள்ளும் முயற்சி ஒரு பக்கம்; மறு பக்கம் தன் வாழ்க்கையே ஒரு திறந்த புத்தகம் என்றவர் தன் வாழ்க்கையில் தன் தவறுகள் மூலம் தான் கற்றுக்கொண்ட வாழ்க்கை பாடங்கள் பிறருக்கும் உபயோகமாக இருக்கட்டும் என்ற சிந்தனையும் கூட.

காந்திஜியின் கொள்கைகளில் பா வும் சளைத்தவரில்லை. ஆனால் இன்று நினைக்கும்போது கஸ்தூரி பாவின் மற்ற குணங்களும் சுவாரசியமாக இருக்கின்றன. காந்திஜி போன்ற பிடிவாத, கோபக்காரராக இருந்த கணவருக்கு ஈடு கொடுத்து வாழ்க்கையை லாவகமாக வாழ்ந்தவர். அதே சமயம் தன் உரிமையை நிலை நாட்டுவதில் அசர மாட்டார். "எமது பா" என்ற புத்தகத்தில் பாவின் இந்த சுதந்திரத் தன்மையையும், தனக்குச் சரியென்று மனசில் பட்டதை கணவரிடம் அவ்வப்போது அழுத்தமாக எடுத்துச்சொல்வதும் வழக்கம் என்று சுசீலா நய்யார் குறிப்பிடுகிறார்.

"... அதிகம் எழுத்தறிவில்லாதிருந்தபோதும், அவர் (கஸ்தூரி பா) தன் சுதந்திரத்தின் மதிப்பை உணராதிருந்தவரல்ல என்பது தெளிவு... யாருக்கும் அஞ்சி தன் மனம்போல் நடவாமல் இருந்தவர் அல்ல..."

கல்யாணம் ஆன புதிதில் காந்திஜி தன் மனைவி அனுமதியின்றி எங்கும் வெளியில் போகக்கூடாது என்று கட்டுப்படுத்தியிருந்தார். "மனைவியின் தூய்மையை சந்தேகிக்க காரணம் எதுவும் இல்லை. ஆனால் பொறாமை காரணத்தை எங்கே தேடப்போகிறது?என் மனைவி எங்கே போகிறாள் என்று எனக்குத் தெரிந்தாக வேண்டும்...." என்ற ரீதியில் தன் பொறாமைக் குணத்தை சுயசரிதையில் விவரித்துள்ளார். ஆனால் கஸ்தூரி பா தான் போக விரும்பும் இடங்களுக்கு அவர் இஷ்ட்டப்படி போய்க்கொண்டுதான் இருந்தார். " நான் அடக்க அடக்க அவள் அதிகம் மீறிக்கொண்டு கிளம்பவே நான் அதிகம் ஆத்திரம் கொண்டேன்." காந்திஜி விவரிக்கிறார்.

தன் இஷ்ட்டப்படி பா வெளியே போய் வந்தாலும் கணவரின் ஆத்திரத்தையும் கோபத்தையும் பொறுமையாக சமாளித்தார்.

அன்று தன் பொறாமைக் குணத்தால் இப்படி மனைவியை அடக்கினாலும், பின்னர் வாழ்க்கையைப் புரிந்து கொள்ளும் காலமும் வந்தது என்று விவரிக்கும் காந்திஜி, தன் சுயசரிதையில் குறிப்பிடுகிறார். ".... கஸ்தூரிபாய் தன் இஷ்டம்போல் நடந்து கொண்டதில் குற்றம் ஏதும் இல்லை என்று நான் கருதுகிறேன். மனதில் கல்மிஷம் ஏதும் இல்லாத பெண் சுவாமி தரிசனத்திற்கோ, யாரையேனும் பார்க்கவோ போகும் விஷயத்தில் எதற்காகப் பிறருடைய உத்தரவுக்குப் பணிய வேண்டும்? நான் அவளுக்கு உத்தரவு இடலாமென்றால் அவள் மட்டும் ஏன் எனக்கு இடக்கூடாது? ஆனால் இந்த விஷயம் இப்போதுதான் புரிகிறது...."

இப்படிச் சின்ன சின்னதாக அவர்கள் இருவரின் வாழ்க்கைகளில் நிறைய பாடங்கள்.

அதேபோல் காந்திஜியின் அஹிம்சை வழி தென்னாப்பிரிக்காவில் ஆரம்பித்தது என்பது சரித்திரம். உலகெங்கும் இன்று அஹிம்சை வழி பிரபலமாகிவிட்டது. அக்டோபர் 2 ந் தேதி, உலக அஹிம்சை தினமாக அனுசரிக்கப்படும் என்று ஐ. நா. சபை அறிவித்துள்ளது.

ஆனால் அவரது சுயசரிதையை ஆழமாகப் படித்தால் ஆரம்ப நாட்களிலேயே சில சம்பவங்களில் - குறிப்பாக இங்கிலாந்து போன விஷயத்தில் - இதற்கான மனோபக்குவம் அவருக்கு வந்துவிட்டது என்று புரியும்.

தென்னாப்பிரிக்காவுக்கு முன்னரே அஹிம்சை தத்துவத்தின் அறிகுறிகள் அவர் வாழ்க்கையில் ஏற்பட்டது எங்கே என்று பார்க்கலாம்.

அவர் வெளி நாட்டுப் பிரயாணம் செய்ததைக் குறித்து, அவர் சாதியினரிடையே பலத்த புயல் எழுந்தது. ஆசாரமான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அந்தக் காலத்தில் கடல் கடந்து பயணம் செய்வது கூடாது. அந்தக் கட்டுப்பாட்டை மீறி அப்படி யாராவது போனால் அவர்களை சாதியிலிருந்து வெளியேற்றுவதும் அவர்கள் உறவை மற்றவர்கள் துண்டிக்க வேண்டும் என்பது கட்டுப்பாடு. காந்திஜிக்கும் இந்தப் பிரச்சனை இருந்தது.

ஆனால் இதை அவர் எதிர்கொண்ட விதமே தனி.

அவருடைய வார்த்தைகளிலேயே பார்க்கலாம் - சுய சரிதையிலிருந்து :

".... நான் வெளி நாட்டுப்பயணம் செய்ததைக் குறித்து என் சாதியாரிடையே எழுந்த புயல், இன்னும் இருந்து கொண்டே இருந்தது. அது, சாதியை இரண்டு கட்சிகள் ஆக்கிவிட்டது. இதில் ஒரு கட்சியினர் என்னை உடனேயே சாதியில் சேர்த்துக்கொண்டு விட்டனர். மற்றக் கட்சியினரோ, எனக்கு விதித்திருந்த சாதிக்கடுப்பாட்டை நீக்குவதில்லை என்று உறுதி கொண்டிருந்தனர். முதல் கட்சியாருக்குத் திருப்தி அளிக்க வேண்டும் என்பதற்காக என் சகோதரர் ராஜ்கோட்டுக்குப் போகும் முன்பு என்னை நாசிக்குக்கு அழைத்துச் சென்றார். அங்கே புண்ணிய நதியில் நீராடச் செய்தார். பிறகு ராஜ்கோட்டிற்குப் போனதும், சாதியாருக்கு ஒரு விருந்தும் வைத்தார். இதெல்லாம் எனக்குப் பிடிக்கவே இல்லை. ஆனல் என்னிடம் சகோதருக்கு இருந்த அன்போ எல்லையற்றது. அதேபோல் எனக்கும் அவரிடம் எனக்கு பக்தி உண்டு. ஆகையால் அவர் சொன்னதே சட்டம் என்று மதித்து அவர் விரும்பியபடியெல்லாம் யந்திரம்போல் செய்தேன். இவ்விதம் என்னை சாதியில் சேர்த்துக்கொள்ளும் பிரச்சனை ஒருவாறு தீர்ந்தது.

என்னைச் சாதியில் சேர்த்துக்கொள்ள மறுத்த கட்சியினரிடம் என்னைச் சேர்த்துக்கொள்ள வேண்டும் என நான் முயலவே இல்லை. அக்கட்சியின் தலைவர்களிடம் எனக்கு வெறுப்புத்தோன்றவும் இல்லை.அவர்களில் சிலர் என்ன வெறுத்தனர். ஆனாலும் அவர்கள் மனம் புண்படும் காரியம் எதையும் செய்துவிடக்கூடாது என்பதில் நான் கவனமாக இருந்தேன். சாதிக்கட்டுபாடு சம்பந்தமான விதிமுறைகளையெல்லாம் மதித்து நடந்து கொண்டேன். அந்தக் கட்டுப்பாடுகளின்படி, என் மாமனார், மாமியார், தமக்கை, மைத்துனர் உட்பட என் உறவினர் யாரும் எனக்குச் சாப்பாடு போடக்கூடாது. ஆகையால் அவர்களில் யார் வீட்டிலும் நான் தண்ணீர் கூட குடிப்பதில்லை. இந்தக் கட்டுப்பாட்டை ரகசியமாக மீறிவிட அவர்கள் தயாராக இருந்தனர்.
பகிரங்கமாக செய்யாததை ரகசியமாக செய்வது என் இயல்புக்கே நேர் விரோதமானது.


இவ்விதம் என் மீது குறை கூறுவதற்கே கொஞ்சமும் இடம் கொடாமல் நான் நடந்து கொண்டதன் பலனாக எனக்குச் சாதித்தொல்லை ஏற்படுவதற்கே சந்தர்ப்பம் இல்லாமல் போய்விட்டது. அது மாத்திரம் அல்ல. என்னைச் சாதியிலிருந்து ஒதுக்கிவைக்கப்பட்டவனாக இன்னும் கருதிக்கொண்டிருந்தவர்களில் பெரும்பாலோர் என்னிடம் அன்போடும் தாராளமாகவும் நடந்து கொண்டார்கள். சாதிக்காக ஏதாவது செய்யவேண்டும் என்று எதிர்பாராமலேயே என் தொழிலிலும் அவர்கள் உதவி செய்தனர்.

இந்த நல்ல காரியங்களெல்லாம் என்னுடைய எதிர்ப்பின்மையின் பலனே என்பது எனது திட நம்பிக்கை. சாதியில் என்னைச் சேர்த்துக்கொண்டாக வேண்டும் என்று நான் கிளர்ச்சி செய்திருந்தால், சாதியை இன்னும் பல கட்சிகளாகப் பிரித்துவிட முயன்றிருந்தால், சாதியாருக்கு நான் ஆத்திரத்தை மூட்டியிருப்பின், அவர்களும் நிச்சயம் எதிர்த்துப் பதிலுக்கு பதில் செய்திருப்பார்கள். இங்கிலாந்திலிருந்து நான் திரும்பியதும் புயலிலிருந்து ஒதுங்கிவிடுவதற்கு பதிலாக, நான் கிளர்ச்சிச் சூழலில் சிக்குண்டு, பொய் நடிப்பை மேற்கொள்வதற்கு உடந்தையாகவும் இருந்திருப்பேன்..........."

சில நாட்கள் முன்பு புத்தக அலமாரியை ஒழுங்கு படுத்தும்போது இந்தப் புத்தகங்கள் கண்ணில் பட்டன. பக்கங்கள் மங்கிப் போயிருந்தாலும் தொட்டவுடன் பழைய ஞாபகங்களும் கூடவே எட்டிப் பார்த்தன. "சத்திய சோதனை" புத்தகத்தின் உள்பக்கம் என் அண்ணன் தன் பெயரை விதம் விதமாக எழுதிப்பழகியிருப்பான். கடந்து போன நாட்கள் மனதில் நிழலாட, புத்தகங்களைப் படிக்கலானேன்.

மீண்டும் அலமாரியில் வைக்கும்போது, அவ்வப்போது இப்படிப் பழையப் புத்தகங்களைப் புரட்டுவது அவசியமென்று தோன்றியது.

நம் வாழ்க்கையையே நின்று திரும்பிப்பார்ப்பது போல....

Friday, August 17, 2007

ஒரு தூரதிருஷ்டி பார்வையில்

மன்மோஹன் சிங் தளர்வதாக இல்லை; இடதுசாரியும் விடுவதாயில்லை. அரசைக் கவிழ்ப்பது நோக்கமில்லை என்று சொல்லும் இடதுசாரி, ஒரு வேளை "விட்டுகொடுத்து" விட்டாலும், அணு ஒப்பந்தம் அமுலுக்கு வந்தாலும் ஒப்பந்தக் காலமான 40 வருடம் ( கொசுறு 10 வருடக்காலமாம்) சொச்சத்தில் என்ன மாதிரியான மாற்றங்கள் நமது நாட்டில் அல்லது உலகளவில் வரும் என்று தெரியாது.

வெற்றிகரமாக - மன்மோஹன் சிங்க் நம்பிக்கை வைப்பது போல் -இந்தியாவுக்கு ஆதாயமாகவும் இருக்கலாம். அல்லது இடதுசாரி கவலைப்படுவது போல் நாம் அணு சோதனை செய்ய நேர்ந்தால், அதன் காரணமாக ஒப்பந்த முறிவும் ஏற்படலாம்.

Hyde Act காரணம் காட்டி அமெரிக்காவும் ஒப்பந்தத்தை முறித்துக்கொள்ளலாம்; இந்தியாவும் தன் காரணங்களைச் சொல்லி எப்போது வேண்டுமானாலும் விடுபடலாம். ஒப்பந்த முறிவுக்கு சாத்தியக் கூறுகள் இருக்கின்றன. ஆனால், இதனால் விளைவுகள் என்ன? இரு நாடுகளுக்கும் பாதகங்கள் என்ன? முறிக்கும் நிலை வரை இரு நாடுகளுமே போகுமா? அப்படி நேர்ந்தால், அமெரிக்கா திருப்பித் தரச் சொன்னாலும் இந்தியா, தான் பெற்றுக்கொண்டவற்றை திருப்ப வேண்டிய அவசியமில்லா சூழ்நிலை என்ன, என்று பத்திரிகையாளர் சித்தார்த் வரதராஜன் சொல்கிறார். "...Under a worst-case scenario where the U.S. ignores its obligation to ensure the continuous operation of Indian reactors, presumably citing the Hyde Act, India would be under no obligation to entertain an American request for the return of nuclear items...."

ஏன், எப்படி என்று இவர் இங்கே விவரிக்கிறார்.

மற்றொரு பக்கம், இப்படி வெளியிலிருந்து பெறப்படும் உதவிகள் மூலம் - அமைக்க இருக்கும் நான்கு புதிய அணு சக்தி ஆலைகள், இந்தியாவுக்கு மேலும் 30,000 MW சக்தி உற்பத்தி செய்யும் என்று நேற்று வந்த செய்தி கூறுகிறது. என் பார்வையில் இதுவும் ஒரு முக்கிய கோணம். 16 வது Electric Power Survey கொடுத்த அறிக்கையின்படி, 2000 -01 ல் மொத்தம் 1,01630 MW சக்தி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

இதில் நிலக்கரி மூலம் ( Thermal ) - 72,359 MW;
தண்ணீர் சக்தி மூலம் ( Hydel) - 25,142 MW;
அணு சக்தி மூலம் - 2,860 MW;
காற்று மூலம் (Wind power) - 1,269 MW.
( சூரிய சக்தி பெருமளவில் உற்பத்தி செய்யப்படவில்லை - அல்லது குறிப்பிடப்படவில்லை)

ஆக, உற்பத்தி முழுவதுமான கணக்கில் அணு சக்தி மூலம் கிடைத்தது வெறும் 3 சதவிகிதத்திற்கும் கீழ். இப்போது வெளியுதவிகள் மூலம் இந்த உற்பத்தி அதிகரிக்கலாம் - நேற்றைய செய்தியின்படி 30000 MW. இருந்தாலும் மொத்த உற்பத்தியில் அணு சக்தியின் பங்கு மிகக் குறைந்த சதவிகிதம்தான் தேறும்.

இந்த இத்தணூண்டு அளவு கிடைக்கும் சக்திக்காகவா ஒரு அரசாங்கமே ஊசலாடும் அளவு விவாதம் இடம் பெறுகிறது என்று தோன்றுகிறது. இதுக்காக ஏன் நம் அரசு உயிரைப் பிடித்துக்கொண்டு போராடுகிறது என்ற கேள்வி எழுகிறது. ஆராய்ந்ததில் எனக்கு கிடைத்த விடைகளும், என் கேள்விகளும்.

இந்தியாவில் என்றல்ல; உலகம் முழுவதிலும் அணு மூலம் கிடைக்கும் சக்தி 3 சதவிகிதம் மட்டுமே. இயற்கையை மூலதனமாக வைத்து உருவாக்கப்படும் சக்திதான் பெரும்பாலும் இதுவரை உலகை இயக்குகிறது. நாளுக்கு நாள் சக்தியின் தேவை அதிகரித்துக்கொண்டே போகிறது. சக்தியின் தேவை நமக்கு அதிகரிக்கும் அளவு இயற்கையும் வேகமாக வற்றாத ஊற்றாக நமக்கு சக்தியை அள்ளி அளிக்க வேண்டும்.

ஆனால் நிஜம் அப்படி இல்லை. இந்தியா உள்பட உலகெங்கிலும் இயற்கை மூலம் கிடைக்கும் சக்தி வறண்டு விடும் அபாயம் இருக்கிறது.
பெருமளவு தண்ணீர் மின்சாரம் உற்பத்தி செய்ய, பெரும் அணைகள் கட்ட வேண்டும் - பல மக்கள் வாழும் பகுதிகளில் அவர்களை இடம் பெயர்த்து செய்ய வேண்டிய அவசியம் - இது நடைமுறையில் கடினமான ஒன்று. மாற்று வழி - சிறு அணைகள் - அப்போதும் மக்கள் இடப்பெயற்சி அவசியம் - தவிர இப்படிபட்ட சிறு அணைகள் மூலம் கிடைக்கும் மின்சாரம் கடுகளவே. நம் ராட்சச தேவைகளுக்கு பற்றாது. பெரும் வாளியை நிரப்ப, ஸ்பூனால் மொண்டுவிட்டு நிரப்பும் கதை. கடைசி பட்ச அபாயம், எதிர்காலத்தில் நீர் வறட்சியும் ஏற்படலாம். காற்றின் மூலம் கிடைக்கும் சக்தியும் மிகக் குறைச்சலே - ஆனால் இந்தக் கோணத்தில் அதிக பட்ச உற்பத்தி செய்யும் வழிகளைப் பற்றிய ஆராய்ச்சிகளில் முதலீடு செய்வது அவசியம்.

ஆனால் சூரிய சக்தி மற்றும் காற்று சக்தி உற்பத்தியில் ஒரு முக்கிய குறை - அவை சீசன் பொருத்தது எப்போதும் ஒரே சீராக இராது.

இயற்கை வழியாக சக்தி உற்பத்தி செய்யப்படும் மற்றொரு வழி - நிலக்கரி - அதாவது Thermal Power. இன்று இதன் மூலம்தான் அதிக பட்சம் நமக்கு கிடைக்கிறது. ஆனால் நிலக்கரி அட்சயப் பாத்திரம் இல்லை. ஒரு நாள் முழுக்க சுரண்டிவிடுவோம். அப்புறம்??

ஆக, நாளடைவில் இயற்கையும் வறண்டு, மனிதன் வேறு மாற்று வழிகளை நாட வேண்டிய சூழ்நிலை ஏற்படும். மாற்று வழிகளில் ஒன்றுதான் அணு சக்தி. இப்போதிலிருந்தே இதையும் பலப்படுத்தி, இயற்கை மூலம் உற்பத்தி செய்வதை - இயற்கையைச் சுரண்டும் வேகத்தை சற்று மட்டுப்படுத்தி உபயோகித்தால், இயற்கை வழிகளை / வளங்களை இன்னும் சில காலம் இழுக்கலாம். அல்லது, இயற்கையும் கொஞ்சம் இளைப்பாறி, தன்னைப் புதுப்பித்துக்கொண்டு நமக்கு வளம் தரலாம்.

ஆக, நம் தேசீய / வெளியுறவு கொள்கைகளை பாதிக்காத ( பாதிக்கவில்லை என்று பிரதமர் உறுதியாகச் சொல்கிறார் ) வகையிலும், இதர சுற்றுச்சூழல் பிரச்சனைகளில் கவனம் எடுத்துக்கொண்டும் அணு சக்தி உற்பத்தியை பெருக்க முடிந்தால் ஒரு தூரதிருஷ்டி பார்வையில் நமக்கு அது ஆதாயமே.

Wednesday, August 15, 2007

சுதந்திர தின வாழ்த்துக்கள்


60 வயது நிறைந்துவிட்டது.

60 வருட நிறை குறைகளை அலசும் பலவித செய்திகளைப் படித்துவிட்டு, நிகழ்ச்சிகளைப் பார்த்துவிட்டு, மனதில் ஆயிரம் எண்ணங்கள் அலை மோதினாலும், காலையில் செங்கோட்டையில் பூக்களை சிந்தியபடி, அந்தக் கொடி கம்பீரமாகப் பறக்கத் தொடங்கிய அந்த ஒரு கணத்தில், மனதில் ஒரு ஆழ்ந்த அமைதி. அந்த முகம் தெரியாத "இந்தியா" என்ற உணர்வு - வெறும் அடையாளம் என்பதையும் மீறி மனதில் தாக்கும் அந்த உணர்வு தழைக்க, செழிக்க அமைதியாகப் பிரார்த்தனை.

அவ்வளவுதான். மற்றொரு வருடம் உருண்டோடுகிறது.

என்ன சாதித்துவிட்டோம் என்று குறைகளைப் பற்றி மட்டுமே நினைத்து வருந்தாமல், அவற்றை எப்படி அகற்றி இன்னும் மேன் மேலும் எப்படி நாமும் வளர்ந்து பிறருக்கும் நல் உதாரணமாக இருக்கலாம் என்ற எண்ணங்களில் செயல்படுவோம்.

60 வருடங்களாக ஜனநாயகமாக வெற்றிகரமாக செயல்படுகிற அதே வேகத்துடன், நலிந்தோர் தழைக்கவும், பெருகி வரும் மக்கள் எண்ணிக்கை ஒரு பெரும் ஆக்கப்பூர்வமான சக்தியாக பரிமளிக்கவும் வழிகள் தேடுவோம்.
கிளைகளாக, விழுதுகளாக, உலகம் முழுக்கப் பரவியிருந்தாலும் இந்தியர் என்ற வேரில், உணர்வில் பெருமிதம் கொள்வோம்.

அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்.

Friday, August 10, 2007

அணு ஒப்பந்தம்

அணு ஒப்பந்தம் - சில சந்தேகங்கள்.

குமுதம் 15.8.2007 இதழில் இந்திய - அமெரிக்க அணு ஒப்பந்தம் ( ஆயுத??!! - "அணு ஆயுத" என்று இந்தப் பத்தியில் உபயோகித்த வார்த்தையைப் பார்க்க நேர்ந்தால் அமெரிக்க காங்கிரஸ் முதலில் இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு மறு வேலை பார்ப்பார்கள் :-) ) தொடர்பாக ஒரு பத்தியாளர் தன் வருத்தங்களை விவரித்துள்ளார்.

வெளியுறவு அமைச்சின் வலைப் பக்கத்தில் வைத்துள்ள இந்த
அணு ஒப்பந்தம் மொத்தம் 22 பக்கம். விஞ்ஞானம் அதிகம் தெரியாத எனக்கு பாதிக்கு மேல் சுத்தமாகப் புரியவில்லை. ஆனாலும் விடாமல் ஆங்காங்கே "மேய்ந்துவிட்டு" என்னதான் சொல்கிறார்கள்; இந்தியாவுக்கு என்ன ஆதாயம் / நஷ்டம் என்று ஏதாவது புரிகிறதா என்று இரண்டு மூன்று முறை படித்துப் பார்த்தேன்.

எனக்குப் புரிந்தவரையில் பெரும்பாலும் இதில் இந்தியாவுக்கு அனு(ணு!)கூலம் போல்தான் படுகிறது. இந்த ஒப்பந்தம் பற்றி முன்னாள் அணு சக்தி கமிஷனின் தலைவர், எம்.ஆர். சீனிவாசன் போன்ற விவரம் அறிந்தவர்களிடையே விவாதங்கள் நிகழ்ந்தபோது மன்மோஹன் சிங் என்ன செய்யப்போகிறார் என்று நானும் என் பங்குக்கு இங்கே கவலையைப் பதிவு செய்திருந்தேன்.

அது பிரதமர் காதில் விழுந்துவிட்டது :-)

ஆனால் பலர் அப்படி நினைக்கவில்லை. பா.ஜ.க நாட்டை அடகு வைத்துவிட்டார் என்று சொல்வதை குமுதம் பத்தியாளர் ஏற்றுக்கொள்கிறார். இந்த ஒப்பந்தத்தில் எந்தப் பகுதி அப்படி எண்ண வைக்கிறது என்று புரியவில்லை. குறிப்பாக, " இரு நாடுகளின் பொது நலனுக்கு ஏற்ற விஷயங்களில் உலகளாவிய அளவில் ராணுவ நடவடிக்கைகளில் அமெரிக்கா இறங்கும்போது இந்தியா ஒத்துழைக்க வேண்டும்.." என்று ஒரு அம்சம் இந்த ஒப்பந்தத்தில் இருப்பதாக குமுதம் பத்தியில் சொல்லப்பட்டிருக்கிறது.

எனக்குப் புரிந்தவரையில் மேலே சுட்டியில் உள்ள அணு ஒப்பந்தத்தில் இப்படி ஒரு அம்சம் இருப்பதாகத் தெரியவில்லை. இன்று வெளியான ஒரு விரிவான பேட்டியில் தற்போதைய அரசின் Principal Scientific Advisor திரு ஆர். சிதம்பரம் "எல்லாம் சரியாகதான் இருக்கு" என்கிறார்.

தேவையில்லாமல் குழப்பிக்கொண்டு எதிர்காலத்தில் ஆக்கப்பூர்வமாக பயன் இருக்கக்கூடிய ஒரு ஒப்பந்தத்தைப் பற்றி மக்களிடையே பீதியும் அவநம்பிக்கையையும் விழும் சூழ்நிலை உருவாகிறதா?

அல்லது உண்மையிலேயே எங்கேயோ "பொடி" இருக்கிறதா?

சரியான விளக்கங்கள், புரிதல்கள், இன்னும் தேடிக்கொண்டிருக்கிறேன். வரும் திங்கள் கிழமை இந்த விவகாரம் பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு வரும் என்கிறார்கள். அங்கே என்ன சொல்கிறார்கள் என்று பார்க்கலாம்........

பிறகு சேர்த்தது: - 11. 08. 07. ஒரு வாசகருக்காக நான் எழுதிய பதில் இங்கே முன் பக்கமும் இருந்தால் விளக்கங்கள் முழுமையாக இருக்கும் என்று தோன்றியதால் அதை இங்கே சேர்க்கிறேன்.

// நான் சொன்னதுபோல் விளக்கங்கள் /புரிதல்கள் தேடிக்கொண்டிருக்கிறேன். ஆனால் உங்களுக்கு ஒரு சடுதியான பதில்: "ஆயுத" - கேள்விக்குறிக்கு காரணம் - இது அணு ஆயுத ஒப்பந்தம் அல்ல. Not Nuclear Weapons Deal - மாறாக ஒப்பந்தத்தின் தலைப்பே சொல்வதுபோல் - "Agreement for Cooperation Between the Government of India and the Government of the United States of America concerning peaceful uses of Nuclear Energy" - Nuclear Deal. அதாவது அணு சக்தியை அமைதியான வழியில் உபயோகிப்பதற்கான வழிமுறைகளில் ஒப்பந்தம். - அணு ஒப்பந்தம். "ஆயுதம்" இல்லை. நீங்கள் கவலை தெரிவித்திருக்கும் பல விஷயங்கள் இதில் சம்பந்தமேயில்லை என்று ஒப்பந்தத்தைப் படித்தால் புரியும். அமைச்சகம் முழுமையாக வெளியுட்டள்ளதா... "நுனிப்புலா" - அப்படி சரியான விவரங்கள் இல்லையென்றால் மக்கள் எங்கு போய் வழக்காடுவார்கள் என்றெல்லாம் எனக்குத் தெரியாது. உலகின் ஒரு முக்கிய ஜனநாயக அரசின் அமைச்சகத்தின் இணையத்தளத்தில் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்ட ஒரு முக்கிய ஒப்பந்தம், முழுமையானதாக / அக்மார்க் அசலாகதான் இருக்கும் என்பது என் நம்பிக்கை. இந்த ஒப்பந்தப்படி இரு நாடுகளுக்கிடையேயான எல்லாவித அணு சம்பந்தமான ஒத்துழைப்புகளும் அமைதியான உபயோகங்களுக்கே - அதே சமயம் அவரவர் நாட்டில் உள்ள சட்ட திட்டங்களுக்குக் கட்டுபட்டு - ( இங்கேதான் சற்று விளக்கம் தேவைப்படுகிறது எனக்கு) பயன்படுத்தப்படும் என்று அடிக்கடி வலியுறுத்தப்பட்டுள்ளது. Article 2 - Scope of Cooperation என்ற பகுதியைப் படியுங்கள். இதில் 4th clause: The Parties affirm that the purpose of this agreement is to provide for peaceful Nuclear cooperation and not to affect the unsafeguarded nuclear activities of either Party. Accordingly, nothing in this agreement shall be interpreted as affecting the rights of the Parties to use for their own purposes nuclear material, non - nuclear material, equipment, components, information or technology transferred to them pursuant to this Agreement. This Agreement shall be implemented in a manner so as not to hinder or otherwise interfere with any other activities involving the use of nuclear material, non - nuclear material, equipment, components, information or technology and military nuclear facilities produced, acquired or developed by them independent of this Agreement for their own purposes.என் புரிதல்: இந்த ஒப்பந்தப்படி நாம் அமெரிக்க உதவிகளைப் பெற்றுக்கொண்டோமானால், அவை வெறும் அமைதியான பயன்பாட்டுக்கு மட்டுமே உபயோகிப்பட வேண்டும். ஆனால் அதே சமயம், இந்த ஒப்பந்தத்தின் மூலம் பெற்ற உதவிகளின் / பொருட்களை / டெக்னாலஜியைப் பயன்படுத்தாமல், நாம் இத்தனை நாளும் செய்து வந்த அணு ஆயுத ஆராய்ச்சிகளின் மூலம் நாம் சொந்தமாக ஏற்படுத்திக்கொண்ட வசதிகள் /ஆராய்ச்சிகள் /டெக்னாலஜி மூலம் நம் "இஷ்டப்படி" நம் சொந்த உபயோகத்துக்குப் பயன் படுத்திக்கொள்ளலாம். சுருக்கமாச் சொன்னா - நான் கொடுத்த சாமானை வைச்சு நீ ஆயுதம் செய்யாதே; நீயாகவே ஏற்கனவே சேர்த்து வைத்திருக்கிறதை வைச்சு நீ என்ன வேணா செஞ்சுக்கோ.... நான் குறுக்கிடலே. இப்படி எல்லா ஷ்ரத்துகளும் இரு நாடுகளுக்கும் பொருந்தும் வகையில் ஒப்பந்தம் இருக்கிறது.//

ஒப்பந்தத்தில் உள்ள Article சிலவற்றை மேலே கோடிக்காட்டியுள்ளேன். இன்று, இன்னும் சில Articles, Anil Kakodkar, Chairman of the Atomic Energy Commission அளித்த இந்த பேட்டியில் இன்னும் விரிவாக அலசப்பட்டுள்ளது.

Wednesday, July 18, 2007

மலையும், காடும், நீரும், மரமும்

ஒரு போட்டோ எடுக்கும்போது ஒவ்வொருவருக்கும் ஒரு கோணம் / ஒரு நினைவில் நிற்கும் காட்சி என்று மனதில் ஒரு ஆர்வம் துளிர்க்கும். என்னைப் பொறுத்தவரையில் இயற்கைக் காட்சிகளில் என் காமிரா லென்ஸ் குறிவைப்பது பெரும்பாலும் - இது போன்ற ஒரு composition.

புகைப்படப் போட்டிக்கு


1. ஏற்காடு - ஜூன் 2007


2. லேக் டாஹோ ( Lake Tahoe - US) - ஜூலை 2006


ஊர் எதுவானாலும் மலையும், காடும், நீரும், மரமும் ஒரே கலவையில் உருவானதுதானே !! ஆனால் இரண்டாவது போட்டோவில் வானத்தின் நீலம் இன்னும் அழுத்தமாக விழுந்ததன் காரணம் என்னவாக இருக்கும்?

Thursday, July 12, 2007

பெயரிலி என்கிற ரமணீதரனுக்கு //முழுமையாகப் பத்து வசனங்கள் கோவிந்தசாமி பற்றியும் இணையத்தமிழ் வரலாற்றினையும் பற்றி அருணா அவர்களைச் சுடச் சுட முன்னாலே போய்த் திடீரென நின்று // கேட்க ஆசையாம். அவருக்காக இந்தப் பதிவு. அவர் பதிவிலும் போட்டுவிட்டேன். இது என் வசதிக்காக.



" ரமணீதரன், அப்படியெல்லாம் ரொம்பக் கஷ்டப்படாதீர்கள். தமிழ் கணினி, மற்றும் தமிழ் இணைய அரசியலில் நுழைய எனக்கு விருப்பமில்லை. ஆனால், நா. கோவிந்தசாமி எப்படி முதன் முதலில் தட்டச்சு செய்த தமிழை வலையேற்றினார் என்பதற்கும், இணையத் தமிழின் பிதா என்று நான் கூறியதற்கும் ஆதாரம், இங்கே

என் மற்றொரு வலைப்பதிவில் பதிந்துள்ளேன். ஏழு கடல் தாண்டி அருணா ஸ்ரீனிவாசனைக் கேள்வி கேட்கும் சிரமம் உங்களுக்கு வேண்டாமே என்று எனக்கு நேரடியாக தெரிந்த ஆதாரங்களைக் கொடுத்துள்ளேன். எள்ளல், நக்கல் இவற்றுக்கு செலவழித்தது போக நேரம் பாக்கி இருந்தால், சிரமம் பார்க்காமல் இங்கேயும் எட்டிப் பாருங்கள். அதிலிருந்து ஒரு பகுதி:

"Today if you want to read Tamil messages on the Internet, they are transported in graphic mode. The Tamil letters are converted into graphic mode, called Graphic Interchange Format and you get the graphic images or the letters. But to communicate in the long run, this would be too troublesome and time consuming. The images take a lot of time in the conversion process. Text mode is the only solution"

என்று எகனாமிக் டைம்ஸிற்காக என் பேட்டியில் அவர் சொல்லியபோது, உலகின் இதர பகுதிகளிலும் இவ்வாறு தமிழ் எழுத்தை வலையேற்றும் முயற்சிகள் நடந்துவருவதையும் கூறினார். அதுவரையில் இணையத்தில் ஏற்றப்பட்ட தமிழ் எழுத்துக்கள் அப்படி GIF முறையில் ஏற்றப்பட்டுக்கொண்டிருந்தன. தட்டச்சு செய்து நேரடியாக ஏற்ற பல முயற்சிகள் ஒரே சமயத்தில் நடந்து வந்தாலும் 1995ல் முதன் முதலில் "தட்டச்சு செய்து" நேரடியாக ஏற்றப்பட்ட தமிழ் கோவிந்தசாமியுடையது என்ற வகையில் அவர் தமிழ் இணையத்தின் பிதா என்று நான் குறிப்பிட்டதில் தவறேதும் இல்லை.

மனமிரூந்தால் இதையும் படியுங்கள்.

ஒருவரைப் பற்றிக் குறிப்பிடப்பட்ட பதிவில் அவருடைய நினைவுகளைப் பற்றி நாமறிந்த சிறு குறிப்பைப் பகிர்ந்து கொள்வது மனித இயல்பு. ஒரு வேளை நான் இணையத் தமிழ் ஆர்வலர்கள் என்று கட்டுரை எழுத நேர்ந்தால் நிச்சயம் பலரின் பங்காற்றல்கள் பற்றியக் குறிப்புகள் அதில் இருக்கும்.

இருந்தாலும், இன்று நீங்கள். நாளை இன்னும் வேறு யாருக்காவது இணையத் தமிழ் வரலாறு பற்றியோ அதில் பங்காற்றியவர்களைப் பற்றியோ சந்தேகம் எழலாம். அவர்களைப் போன்றவர்களுக்காக திரு கல்யாணசுந்தரம், மற்றும் முரசு நெடுமாறன், போன்ற நான் சந்தித்த ஆர்வலர்களின் அனுபவங்களையும், செய்திக் கட்டுரைகளையும் - என் கையில் கிடைத்தவரையிலும் - மேலே ஆரம்பத்தில் கொடுத்த சுட்டியில் கொடுத்துள்ளேன். மற்றவர்களைப் பற்றி அறிந்ததுண்டு - சிலருடன் கருத்து பரிமாற்றமும் உண்டு - ஆனால் சந்தித்ததில்லை.

நன்றி.

Friday, July 06, 2007

மொழிபெயர்ப்பு

கூகுள் தேடல்களில் அடிக்கடி " translate this page " என்ற குறிப்பு தென்படும். - ஜப்பானிய, சீன மொழிகளில் உள்ள கோப்புகளின் சுட்டிகள் வரும் இடங்களில்.

இதுபோல் தமிழ் கோப்புகளும் தானாகவே மாற்றப்படுகின்றனவா? இல்லையென்றால் ஏன்?

இது போல் தானாகவே மொழிபெயர்ப்பு செய்யும் தொழில் நுட்பம் தமிழுக்கு இருக்க வேண்டும். இருந்தால் எனக்குத் தெரியப்படுத்துங்கள். இல்லையென்றால், உலகம் முழுக்க பரவி, விரிந்து இருக்கும் தமிழ் மென் பொருளாளர்களே, இந்த வசதியை விரைவில் கொண்டுவர வழி செய்ய முடியுமா?

Sunday, July 01, 2007

8

ஹ்ம்ம்... நானும் களத்தில் இறங்கியாச்சு.

எட்டு போட உங்களையும் அழைத்து இருக்கிறேன் என்று "கூகிள் சாட்டில்" பத்மா தெரிவித்தவுடனேயே மனதில் தோன்றிய எண்ணம் அடக்கடவுளே !! மாட்டிக்கிட்டேனா என்றுதான் :-) சாதனை ஒன்றுமேயில்லையே என்று ஓடிவிடலாம் என்பதுதான் reflex reaction :-) ( எட்டை எழுதி முடிக்கும்போது - ராதா ஸ்ரீராமும் கூப்பிட்டுட்டாங்க)

ஒவ்வொருமுறையும் யாராவது இப்படி அழைக்கும்போதும் நழுவறது நல்லதில்லேன்னு உள்ளே ஒரு குரல். ( துளசி... வேறு ஒரு வரிசை விளையாட்டில் உங்கள் அழைப்பும், அன்று சில காரணங்களால் என் இயலாமையைச் சொன்னதும் நினைவு வருகிறது - மீண்டும் மன்னிக்கவும்.) சரி. மாட்டுனதுதான் மாட்டுனோம்.... ஒழுங்கா கொடுத்த வேலையைச் செய்து, நான் பெற்ற இந்த இன்பம் (!!) இன்னும் எட்டு பேரையும் அடையட்டும் என்ற எண்ணத்தில் சுய தம்பட்டத்தில் துணிந்து இறங்கிவிட்டேன்!

நாம் எவ்வளவுதான் சாதாரணமானவர்களாக இருந்தாலும் நம் வாழ்க்கையில் மனம் நிறைந்த அனுபவங்கள் இல்லாமல் இருக்காது. அதனால் சாதனை என்று இல்லாவிட்டாலும் இதம் தரும் அனுபவங்கள் என்ற வகையில் சிலவற்றைப் பகிர்ந்துகொள்ளலாம் என்று தோன்றுவதால் - இதோ என் வரிசை.

1. தமிழக அரசு ஆஸ்பத்திரிகளிலும் பிறகு ஐரோப்பிய தொண்டூழிய நிறுவனங்களின் ஆஸ்பத்திரிகளிலும் மருத்துவராக வேலைப் பார்த்த தந்தையுடன் கிராமங்களில் ஜீப்பில் சென்று அவருடைய மொபைல் கிளினிக்கில் என் சகோதரனுடன் சேர்ந்து உதவுவது, தீபாவளிப் பண்டிகை - மத்தாப்பு ( பட்டாசு பயம் தெளிய ரொம்ப வருஷம் ஆச்சு) புது உடை/மருதாணி /வளையல் சமாசாரங்கள், பனாரஸில் ( இன்று வாரணாசி) இருந்த என் அக்காவும் அவள் குழந்தைகளின் வருடாந்திர வருகை போன்றவை என் சிறு வயது உற்சாகங்கள் என்றால், வளர்ந்தபின் கல்லூரி நாட்களில் சின்னச் சின்ன சந்தோஷங்கள் - முதன் முதலில் மேடையில் பேசிய அனுபவம் (முழுசாக 5 நிமிடம்!!); சராசரி மாணவி என்ற விதத்தில் பரிட்சைகள் பாஸ் செய்ததே ஆனந்தம்தான் ( முதல் ரேங்க் வாங்கவேண்டும் என்ற பேராசையெல்லாம் இல்லாத "எளிமையான" சுபாவம் :-) சின்னச் சின்ன விளையாட்டுப் போட்டிகள் - சந்தர்ப்பம் கிடைத்தபோதெல்லாம் கல்லூரி நிகழ்ச்சிகளில் கூட்டாக சேர்ந்து ஏதேதோ வேலைகள்.... எல்லாமே உற்சாகம் தரும் அனுபவங்கள்...

2. பின்னர் கல்லூரி படிப்பு முடிந்து வீட்டிற்கு வந்த சில நாட்களில் ஹிந்து பேப்பரில் யதேச்சையாகக் கண்களில் பட்ட ஒரு விளம்பரம் - பம்பாயில் ( அப்போது அது பம்பாய்தான்) இருந்த பிரிட்டிஷ் இன்ஸ்டிட்யூட் என்ற கல்வி நிறுவனத்தின் ஜர்னலிஸம் கோர்ஸ் - தபால் மூலம். உடனே மனதுள் ஒரு ஆர்வம் துளிர்விட்டது. பெற்றோரிடம் கொஞ்சம் தயக்கத்துடன் சொன்னேன். உடனேயே அம்மா ஏன் இவ்வளவு யோசிக்கிறாய். உனக்கு ஆர்வம் இருந்தால் படியேன்; செலவைப் பற்றி கவலைப்படாதே, என்றார்கள். அன்று ஒரு சந்தோஷம்.

3. ஒரு குடும்பத்தலைவியின் வாழ்க்கையில் குடும்பம் - குழந்தைகள் - வீடு - ஒரு முக்கியப் பகுதி. கணவர் மட்டும் சம்பாதிக்கும் பல குடும்பங்களைப் போல வீட்டு நிர்வாகம் / குழந்தைகள் / இதர வெளி வேலைகள் என்று இரூந்த அன்றைய என் சுழற்சியில் சாதனை ஏதும் இல்லை என்று பிறருக்கு தோன்றலாம். ஆனால், வீட்டு வேலைகளிலும் சுணக்கம் அலுப்பு ஏதுமில்லாமல் சுவாரசியமாக, ஒவ்வொரு வேலையையும் ரசித்து, இயல்பாக செய்யும் அளவு ஒரு ஈடுபாடு இருந்தது ஒரு சாதனை என்று எனக்கு இந்த "வயதான" (??) காலத்தில், இப்போது தோன்றுகிறது!

4. என் மற்றொரு பகுதி எழுத்து. அன்று திக்கித்திணறி பத்திரிகையாளர் தொழிலுக்குப் படித்துவிட்டாலும் பிள்ளையார் சுழி போட பதிமூன்று வருடங்கள் கழித்துதான் நேரம் கிடைத்தது. 1987ல் டில்லியிலிருந்து பூடானுக்கு மாறிய சமயம் தில்லியில் உள்ள NCERT அமைப்பின் Women's Studiesதுறையிலிருந்து பதின்ம வயதினருக்காக ஆங்கிலத்தில் ஒரு புத்தகம் எழுத அழைப்பு வந்தது. இந்தியமொழிகளில் நவீனங்களில் பெண்களின் வளர்ச்சி / முன்னேற்றம் / மாற்றம் படிப்படியாக எவ்வாறு சித்தரிக்கப்பட்டுள்ளது என்பது பற்றிய ஆராய்ச்சித் தொகுப்பிற்காக "தமிழ் நவீனங்களில்பெண்கள்" பற்றி ஆங்கிலத்தில் எழுத ஒரு வாய்ப்பு. அந்த வேலையை எடுத்துக்கொண்டு பூடான் போய்விட்டேன். தட்டச்சு சுத்தமாகத் தெரியாமல் கையால் எழுதி பின்னர் புதிதாக ஒரு டைப்ரைட்டர் வாங்கித் தடவித் தடவி கணவர் உதவியுடன் கற்றுக்கொண்டு மூன்று வருடத்தில் புத்தகத்தை ( Portrayal of Women in Tamil Fiction - NCERT - 1993) முடித்தது என் எழுத்தின் முதல் சந்தோஷம். சின்னப் புத்தமென்றாலும், அந்த சந்தோஷத்தின் பின்னால் தூணாக நின்றவர்கள், அதன் ஆராய்ச்சிகளில் உதவிய இந்தியன் எக்ஸ்பிரஸ் முன்னாள் ஆசிரியர் என்.எஸ் ஜகன்நாதனும், அன்றைய இந்தியா டுடே ஆசிரியர் மாலனும், என் எழுத்தில் நம்பிக்கை வைத்து வேலையை என்னிடம் கொடுத்த அன்றைய NCERT - Women's Studies முனைவர் இந்திரா குல்ஷ்ரேஷ்டாவும்.

5. பின்னர், "இதயம் பேசுகிறது" பத்திரிகைப் போட்டி ஒன்றில் முதல் பரிசாக வெளிவந்த கதையும் அந்த ஒருப் பக்கக் கதைக்கு நாலு பக்க அளவில் வந்த வாசகர்கள் கடிதக்குவியலும் (!!!), மற்றும் எதிர்வீட்டில் இருந்த நேபாளியப் பெண்ணின் அனுபவம் என் பேனாவில் வெளிப்பட்டு குமுதத்தில் இன்னொரு சிறுகதையாக வெளிவந்த அனுபவம், பின்னர் புத்த மதமும் இந்து மதமும் என்று பெங்களூர் டெக்கான் ஹெரால்டில் எழுதிய ஒரு ஆய்வுக் கட்டுரை என்று ஏற்பட்ட சின்னச் சின்ன எழுத்து சந்தோஷங்கள் டில்லி திரும்பியபின் அடங்காத வேட்கையாயிற்று.

6. உள்ளூர் பத்திரிகை ஒன்றில் ரிப்போர்டர் வேலைக் கிடைத்தபோது... ம்.. ஜென்ம சாபல்யம் என்று தோன்றியது. ஆனால் கொஞ்ச நாள்தாம். சுயமாகத் தொழில் செய்யும் எண்ணம் வலுத்தது. செய்திக் கட்டுரை எழுதும் யோசனைகளை எடுத்துக்கொண்டு பத்திரிகை அலுவலகங்களின் மேல் படையெடுப்பு தொடங்கியது. ஒவ்வொரு முயற்சி வெற்றியடையும்போதும், வாராவாரம் - சில சமயம் தொடர்ந்து சில நாட்கள் எங்காவது என் செய்திக் கட்டுரைகள் வந்துகொண்டேயிருக்க, அது ஒரு மாதிரி சந்தோஷம். தினம் தினம் கெடுவிற்குள் கொடுக்க வேண்டிய வேலைகள் அதிகரிக்க, ஆர்வமும் அதிகரித்துக்கொண்டேயிருந்தது. சந்திக்கும் பலதரப்பட்ட மனிதர்கள், ஒவ்வொரு துறையிலும் இருக்கும் நுணுக்கங்கள் என்று வாழ்க்கையையே பிரமிப்பாக உணர்ந்த நேரங்கள். ஒன்றுக்கொன்று சம்பந்தமேயில்லாத பல்வேறு துறைகளைப்பற்றி அறிந்து கொள்ளும்போதும், அவற்றில் இருக்கும் நிபுணர்களை சந்திக்கும்போதும் ஒவ்வொரு முறையும் "கற்றது கைமண் அளவு...." வாக்கியம் உள்ளே ஒலிக்க, கைமண் என்ன...சுண்டுவிரல் நகக்கணு அளவுகூட நம்மிடம் இல்லையென்ற நிஜம் தாக்க, மனசில் ஒரு பிரமிப்பும், பணிவும் குடியேறிய அற்புதமான அனுபவங்கள் அவை! ஒவ்வொருக் கட்டுரையும் ஒரு அனுபவம்.

7. கொடுக்கப்பட்ட வேலைகளைக் குறித்த நேரத்தில் கொடுத்து, 'நட்சத்திர சுயேச்சைப் பத்திரிகையாளர் என்று பத்திரிகையாசிரியர்களால் அன்பாக அழைக்கப்பட்டதும் இதம் தரும் அனுபவம் - ஒவ்வொரு முறையும் என் கட்டுரைகளை யாராவது பாராட்டும்போதும் மனம் நிறைந்து, முகம் மலர்ந்த பெற்றோர்; ஆரம்ப நாட்களில் ஒரு முறை ஹிந்துவில் வெளிவந்த என் கட்டுரையை எடுத்துக்கொண்டு என் உறவினர் ஒருவர் 'நம்ம குழந்தை எழுதியிருக்காடா' என்று பேப்பரை உறவினர்களிடம் காண்பித்த பாசம்; பின்னர் சில வருடங்கள் கழித்து, சிங்கப்பூரில் உலக வர்த்தக ஸ்தாபனத்தின் முதல், "அமைச்சர்கள் மாநாடு" ( First Ministerial Conference of WTO) போன்ற பல முக்கிய நிகழ்வுகளில் எகனாமிக் டைம்ஸின் சுயேச்சை நிருபராக செயல்பட்ட அனுபவம்; சிங்கப்பூர் தமிழ் முரசில் எழுதியப் பத்திகள் தங்களைப் பெரிதும் ஊக்கப்படுத்துவதாக நேரிலும் போனிலும் சொல்லிய இளைஞர்கள்; மற்றொரு சமயம் ஒரு மாநாட்டில் அடையாளம் கண்டுகொண்டு என்னிடம் பேச வந்த வாசகர் ஒருவர் சட்டென்று கையிலிருந்த பேனாவை எடுத்துக்கொடுத்து ' உங்களுக்கு ஏதேனும் கொடுக்க விரும்புகிறேன் - இப்போது இதுதான் இருக்கிறது' என்று கொடுத்த அன்பு; மனதுக்கு இதமான சினேகிதங்கள் /ஊறவுகள்/குடும்பம்/ விசாலமாக, சுயமாக சிந்திப்பவர்களாக வளர்ந்துள்ள மகன்கள் என்று இப்படி சின்னச் சின்னதாக நிறைவுகள்........

8. கூட்டிக் கழித்து பார்க்கும்போது முடிந்தவரையில் வெறும் கொள்கையாக இல்லாமல் நேர்மையை யதார்த்தமான வாழ்க்கைமுறையாக வாழ முடிகிற வாழ்க்கையும், எந்தவித நெருடல் இல்லாத மனமும், எழுத ஆரம்பித்துள்ள புத்தக வேலைகளும் மனதை நிறைக்க, தனிப்பட்ட முறையில் "குறையொன்றும் இல்லை....." என்றுதான் தோன்றுகிறது.

உபரியாக மறக்க முடியாத அனுபவங்களில் - சிறுவயதில் பள்ளியிலிருந்து மழையில் நனைந்தபடி வீட்டுக்குச் செல்வதற்குள் மூச்சுத் திணறியது; பின்னர் அதேபோல் ஒவ்வொரு முறையும் வெளியில் நடக்கும்போது மழையில் நனைய நேரிட்டால் அதேபோல் மூச்சுத் திணறலும் சிறு வயது ஞாபகமும் விடாமல் வருவது; ( ஒரு முறை பஸ்சிலிருந்து இறங்கி டில்லி டைம்ஸ் ஆப் இந்தியா அலுவலகத்துக்குள் போவதற்குள் காற்றும் மழையும் வலுத்து, காற்றில் குடை பறக்க, உடல் தொப்பமாக நனைந்து, கட்டிடத்துள்ளே நனைந்தபடியே சென்ற என்னை எல்லோரும் பார்க்கும் தர்மசங்கடத்தைத் தவிர்க்க முடியாமல், உடை சிறிது காயும் வரையில் ரிசப்ஷனிலேயேக் காத்திருந்துவிட்டு, பின்னர் சந்திக்கச் சென்ற எடிட்டரைப் பார்த்து ( "சே... என்ன மழை..." என்று தர்மசங்கடமாக அசடு வழிந்து...) ஹ்ம்ம்.... இன்றும் மழை வந்தால் ஒரே உதறல்தான் - முடிந்தவரையில் வெளியில் மாட்டிக்காம பார்த்துக்கொள்வேன்! தூரத்தில் வானத்தில் ஒரு துளி மேகம் என்றால் அம்மா குடையில்லாமல் வெளியே நகரமாட்டேனே!

மற்றொரு அனுபவம் - சென்னைக்கு வந்த புதிதில், சமையலறையில் கிரைண்டரைப் போட்டுவிட்டு மும்முரமாக எகனாமிக் டைம்ஸ¤க்கு அன்றைக்கு கொடுக்க வேண்டிய கட்டுரையில் மூழ்கி, கிரைண்டர் போட்டதையே மறந்து, அது சூடாகி, பற்றி எரிந்து குபுகுபுவென்று எரிந்து புகை வீடெல்லாம் நிரப்ப, மெள்ள நான் வேலை செய்து கொண்டிருந்த அறையில் "வாசனை" வரும்போது, 'என்ன இது பக்கத்து வீட்டில் என்ன செய்கிறார்கள்... ஏதோ எரியற வாசனை வருதே என்று "யோசித்து" இன்னும் சில நிமிடங்கள் கழிந்து வாடைத் தாங்காமல் வெளியே வந்தால் - அய்யோ கடவுளே இதென்ன... எங்கேயிருந்து இப்படி நெருப்பு என்று தவித்து - ஓடிப்போய் பார்த்து - உடனே பயந்து சமையலறையைவிட்டு வெளியே வந்து நின்று - ஒரு கணம் என்ன செய்வது ஸ்தம்பித்து போய் ( அதன் அர்த்தம் அன்றுதான் முழுமையாகப் புரிந்தது) உடனே சுதாரித்துக்கொண்டு - தீவிரமாக மனக்கணக்கு போட்டேன் - ஆபத்து என்றால் முதலில் பாதுகாக்கப்படவேண்டியது உயிர் - அய்யோ - உள்ளே என் ஒன்றுவிட்ட பெரிய மாமனார் ( 80 சொச்சம் வயது) தூங்குகிறாரே... ஓடி அவரை எழுப்பி - வெளியே நிக்கவைத்துவிட்டுவிட்டு பக்கத்துவீடுகளில் காலிங் பெல் அடித்து "நெருப்பு நெருப்பு" என்று சப்தம்போட்டுவிட்டு - மீண்டும் சமையலறை ஓடி வந்து கிரைண்டர் ஸ்விட்சை அணைக்கச் சென்றவள் - என்றைக்கோ செய்திருந்த புண்ணியத்தில் அதைத் தொடாமல், நகர்ந்து வாசலில் மெயினை முதலில் அணைத்துவிட்டு - அதற்குள் பக்கத்து வீட்டுக்காரர்கள் ஒருவர் ஒருவராக வந்து வாளி வாளியாகத் தண்ணீர் பிடித்து அணைத்து - தடுமாற்றத்தில் தீயணைப்புக்கு போன் செய்வதாக நினைத்துக்கொண்டு 100ம் நம்பருக்கு ( அது அவசரப் போலீஸ் இல்லையோ) போன் செய்து - தீயணைப்பு நம்பர் சமயத்தில் வேலை செய்யவில்லை என்று திட்டிக்கொண்டு நடுவில் கணவர் ஆபீஸ், நண்பர்கள் என்று கூப்பிட்டு அவர்களை தீயணைப்பு அலுவலகத்துக்குப் போன் போடச்சொல்லி ( நெருப்பு அணைந்த பின் வந்தனர்) - ஹ்ம்ம்.. நிகர லாப, நஷ்டம் - கணவரும், துபாயிலிருந்து வந்திருந்த என் கணவரின் ஒன்று விட்ட சகோதரனுமாக சேர்ந்து கன்னங்கரேலென்று புகை படிந்த அறைகளைக் கழுவியது; என் முழங்கால் வலி அதிகமானது; நெருப்பு பற்றிய கிரைண்டர் இருந்த மேடைக்குக் கீழே காஸ் சிலிண்டர் வெடிக்காமல் பேராபத்திலிருந்து தப்பியது நிச்சயம் கடவுளின் குறுக்கீடு என்று என் நம்பிக்கை இன்னும் ஆழமானது; கிரைண்டரின் முழு உருவமும் மறைந்து இரண்டு கற்கள் மட்டும் நின்றது; கொசுறாக, அருகில் இருந்த மர ஸ்டேண்ட் கருப்பு பொடியாக நின்றது.

அடுப்பில் வைத்துவிட்டு வேறு வேலையில் மூழ்கும் சாதனையில், குழம்பு வைக்கும் கல்சட்டியை, குழம்பு வற்றிக் கல் இரண்டாக உடையச் செய்ததும் ( அடுப்பில் வைத்துவிட்டு, டில்லி லஜ்பத் நகர் மார்கெட்டுக்குப் போய்விட்டுத் திரும்பி வரும் வரைக்கும் குழம்புடன் சேர்ந்து கல்லும் கொதித்துக்கொண்டிருந்தது) ரசம் வைக்கும் ஈயச்சொம்பை, ஒரு மணி நேரம் கழித்து வந்து அடுப்பின் அடியிலிருந்து 10 கிராம் அளவு ஈயமாக எடுத்த அனுபவமும் உண்டு. ( அய்யோ, ரசச் சொம்பைக் காணோமே.. என்ற தேடல் வேறு...)என் அடுப்பில் பாலை வைத்துவிட்டு - யார் வீட்டிலோ பாலைத் தீய விடுகிறார்கள்; வாசனை வருகிறது என்று வேறு வேலையில் மூழ்கியிருந்த இருந்த 'சாதனை'யும் உண்டு!

இனி, நான் அழைக்க விரும்பும் எட்டு பேர்..... மன்னிக்கவும் ஒன்பது பேர்..... யாராவது முன்னாலேயே எட்டு போட்டிருப்பாங்களோ அல்லது யாராவது தன்னடக்கமா மறுத்துவிடுவார்களோ என்ற நினைப்பில் ஒரு நம்பர் அதிகமா கூப்பிட்டு விட்டேன்!! இன்னும் எட்டு பேர் அழைக்க ஒரு லிஸ்ட் இருக்கு - வேறு யார்கிட்டவாவது அவங்க மாட்டறாங்களான்னு பார்க்கலாம் :-)

மாலன்
பாலாஜி பாரி
தாரா
நாராயண்
தருமி
தமிழ் சசி
செல்வராஜ்
மீனாக்ஸ்
தாணு

விளையாட்டின் விதிகள்:

1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும் (Players start with 8 random facts about themselves.), அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.

2. தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.

3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுபேரை அழைக்க வேண்டும்

Sunday, June 03, 2007

மீண்டும் தாப்பர்

கரண் தாப்பர் விடுவதாக இல்லை. மணிசங்கர் அய்யர், சென்ற வாரம் அம்பிகா சோனி, இந்த வாரம் மோன்டேக் சிங் அலுவாலியா என்று வரிசையாக தன் Devil's Advocate நிகழ்ச்சியில் இந்தியப் பொருளாதாரம் / பிரதமரின் CII உரை இவற்றைப் பற்றி கேள்விக்கணைகளைத் தொடர்கிறார்.

இன்றைய நிகழ்ச்சியில் சாராம்சம்:

தாப்பர்: சில வருடங்களுக்கு முன் மன்மோஹன் சிங் ஒரு அமெரிக்க கூட்டத்தில் தன் வெற்றிகளில் ஒன்றாக குறிப்பிட்ட விஷயம்: ' இந்தியாவில் அரசாங்கம் தொழில் முனைவர்களின் பின்னால் நின்று உபத்திரவமாக இருக்கும் நிலை மாறிவிட்டது" என்று சொன்னாராம். இன்று நிறுவனங்கள் தங்கள் உயர் அதிகாரிகளுக்கு அளவுக்கு மீறி எக்கசக்கமாகக் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று சொல்லி அப்படியே 'பல்டி' அடிக்கிறாரே? அரசாங்கம் மீண்டும் தொழிலதிபர்கள் என்ன செய்ய வேண்டும் / வேண்டாம் என்று தீர்மானிக்கும் காலம் திரும்பும் அறிகுறியா இது?"

அலுவாலியா: "நிச்சயமாக பிரதமர் அந்த அர்த்தத்தில் கூறவில்லை. ( டிவிக்கு வெளியே என் குரல்: தாப்பர் சார், கொஞ்சம் குறைச்சுக் கொடுங்க என்று பிரதமர் சும்மா ஒரு அறிவுரைதான் சொன்னார். உடனே கழுத்துமேல் கத்தி போடுவதுபோல் சொல்வது கொஞ்சம் அதிகப்படியா தோணலை?! :-) )

"தொழில்முறை வல்லுனர்கள் தொழில் நுட்பம் மற்றும் உயர் அதிகாரிகளின் சம்பளம் பற்றி அவர் குறிப்பிடவில்லை. இன்று பல தொழில்களில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களே முக்கியத் தலைமைப் பதவிகளில் இருக்கிறார்கள். பல உதாரணங்களில் நன்றாக லாபத்தில் இருக்கும் நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளைவிட, நஷ்டத்தில் அல்லது குறைந்த லாபத்தில் ஓடிக்கொண்டிருக்கும் பல நிறுவனங்களின் தலைமை அதிகாரிகள் எக்கச்சக்கமாக சம்பளம் - ஒரு ஆண்டுக்கு ரூ. 12 - 15 கோடிகள் என்ற ரீதியில் வாங்குகிறார்கள். ஒரு நிறுவனத்தில் வெளியிலிருந்து நியமிக்கப்பட்ட தொழில்முறை வல்லுனர்கள் இப்படி வாங்கினாலும் அவர்கள் திறமைக்கு விலை என்று கொள்ளலாம். ஆனால் இப்படி சம்பளம் பெறும் அதிகாரிகள் அந்தந்தக் குடும்ப நபர்களே. இதைத் தவிர்க்கலாம் என்பதுதான் பிரதமர் சொன்னதின் அர்த்தம்...."

இந்த "அதிகப்படி சம்பளம்" பிரச்சனைக்கு அலுவாலியாவின் யோசனை: ஒவ்வொரு நிறுவனமும் தங்கள் போர்டில் "சம்பள ஆய்வுக் கமிட்டி (Remuneration Committee) ஒன்றை நியமித்துக்கொண்டால் ஒரு வரையறை / வரம்பு இருக்கும்.

சில வருடங்களுக்கு முன் இந்திய நிறுவனங்கள் பல, நிர்வாகத்தைத் தங்கள் குடும்பத்துக்குள்ளேயே வைத்துக்கொள்வதிலிருந்து மாறுபட்டு, நிர்வாகத்தின் திறமையை அதிகரிக்கவும், குடும்பத்துக்கு வெளியேயிருந்து புதியக் கருத்துக்கள் நிர்வாகத்தில் இடம்பெற்று தொழில் செழுமை பெறும் என்ற எண்ணத்தினாலும், திறமையுள்ள தொழில்முறை வெளியார்களுக்கு முக்கியப் பொறுப்புகளைக் கொடுக்க ஆரம்பித்தன. இந்த மாறுதலைப் பற்றி ஒரு சிங்கப்பூர் பத்திரிகைக்கு அப்போது ஒரு செய்தித்தொகுப்பு எழுதினேன்.

ஆனால், சூரியோதயத்தில் (Sunrise Industries) இருக்கும் சிலச் செய்தித் தொடர்பு தொழில் நுட்ப நிறுவனங்கள் தவிர்த்து இதர தொழில்துறைகளில் - குறிப்பாக உற்பத்தித் துறையில் இந்த வழக்கம் தற்போது நின்று போய்விட்டதோ?

Monday, May 28, 2007

"ஹிட்ச் ஹைக்கர்" - புத்தகம்

பல ஆங்கில வார்த்தைகளுக்கு பொருத்தமாக தமிழ் வார்த்தை கிடைக்காது திண்டாடுவோம். அப்படித்தான் ஹிட்ச் ஹைக்கர் - என்ற வார்த்தைக்கு தமிழில் என்ன என்று சில சமயம் யோசித்து இருக்கிறேன்.

வழிப்போக்கன்? பாதசாரி? மனம் போனபடி பயணிக்கும் பயணி? ஓசி சவாரி??
எந்த வார்த்தையைப் போட்டால் சரியாக இருக்கும் என்று புரிந்ததேயில்லை.

ஆனால் லண்டனில் வழக்கறிஞராக இருக்கும் தமிழர் வினோத் ஜியார்ஜ் ஜோசப் எழுதிய "ஹிட்ச் ஹைக்கர்" ( Hitchhiker - by, Vinod George Joseph) என்ற நாவலைப் படித்தவுடன் ஒரு புது வார்த்தை தோன்றியது.

"கிடைத்த வாகனத்தில் சவாரிக்கும் பயணி!"

கச்சிதமாக ஒரு வார்த்தை கிடைக்காவிட்டாலும் இந்தக் கதையின் நாயகனைப் போல் பல மதங்களின் ஆக்கிரமிப்பில் மாட்டிக்கொண்டு தமக்கென்று ஒரு பாதையில்லாமல் வாழ நேருபவர்களை இப்படிக் குறிப்பிடலாம் என்று தோன்றியது.

கதையின் களம் தமிழகம் - ஜாதிகள் என்னும் நதிகள் சங்கமம் ஆகாமல் தனித்தனியே பெருக்கெடுத்து ஓடும் சூழ்நிலை. இந்துவாக இருந்து கிறிஸ்துவர்களாக மதம் மாறிய பெற்றோர்கள் - தந்தை ஒரு சர்ச்சில் வாட்ச்மேன். சர்ச்சின் உதவியால் மகன் எபனேசர் பொறியியல் கல்லூரியில் படித்து மென்பொருள் வல்லுனராக உயருகிறான்.

கல்வியால் வாழ்க்கை நிலை உயர்ந்தாலும் சமூகத்தில் அவன் ஜாதியின் கண்களாலேயேப் பார்க்கப்படுகிறான். உயர்ஜாதி இந்துக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த காயத்ரிக்கு அவன் மேல் சுரக்கும் பரிதாபமும், அவளுடைய தீவிரமான இடதுசாரிக் கொள்கைகளும் அவளுள் அவன் மேல் காதல் எனும் பிரமையைத் தோற்றுவிக்கின்றன. ஜாதியின் காரணமாக அவனை எதிர்க்கும் தன் குடும்பத்தை மீறி அவனைத் திருமணம் கொள்வதன் மூலம் தன் கொள்கைப்பிடிப்பை நிலை நாட்டலாம் என்று நினைக்கிறாள். ஆனால் அவளைக் கைப்பிடிக்கவென்றே மீண்டும் இந்துமதத்திற்கு மாறும் எபெனேசர் அவளுக்கு அதிர்ச்சியளிக்கிறான்.

புகழேந்தியாக மாறிய எபனேசரைத் தான் காதலிக்கவில்லை; எனவே அவனைத் திருமணம் செய்ய முடியாது என்று கூறிவிடுகிறாள். ஆனால் சர்ச் புகழேந்தியை மீண்டும் எபனேசராக ஏற்றுக்கொள்ள விரும்புகிறது.

ஆனால் எபனேசர் என்கிற புகழேந்தி இப்போது மதங்களுக்கப்பாற்பட்ட ஒரு சாதாராண மனிதனாக வாழ முடிவு செய்து மதங்களின் பிடியிலிருந்து வெகு தூரம் ஓடிவிடுகிறான்.

இதுதான் கதை.

பாத்திரப்படைப்பு மிகக் கச்சிதமாக அமைந்திருக்கிறது. ஆரம்ப பகுதிகளில் எபனேசரின் பள்ளி மற்றும் வளரும் பருவங்களை விவரிக்கும் விதமாகட்டும் பின்னால் காயத்திரி அவள் குடும்பம், கொள்கைகள் என்று ஆழமான சிந்தனைகளை விவாதிக்கும் இடங்களாகட்டும் மெல்லியதாக நிலவும் ஒரு யதார்த்தம் நம்மைக் கதையுடன் ஒன்ற வைக்கிறது. இந்தக் கதையைப் படிக்கும் தமிழகத்தில் வளர்ந்த தமிழர் ஒவ்வொருவரும் கட்டாயம் ஆங்காங்கே தங்கள் பழைய நினைவுகளை நினைவுகூருவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

பாவனைகள், செயற்கையம்சங்கள் எதுவும் கலக்காத தெளிந்த நீரோடைபோல் செல்லும் எளிய நடை, நம் அடுத்தவீட்டில் நடப்பவற்றை பார்ப்பதுபோல் சுவாரசியமாகவும், யதார்த்தமாகவும் கொண்டுவந்து நிறுத்துகிறது.

ஆரம்ப கால - பள்ளி பருவ நிகழ்ச்சிகளை சற்று குறைத்து இருக்கலாம். இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பு கூடியிருக்கும்.

மற்றபடி ஆழமான கருத்தைச் சொல்லும் எளிமையான கதை.

பதிப்பாளர்:

Books for ChangePrice - Rs.350 - US$ 22.
www.booksforchange.net

Sunday, May 20, 2007

மணியான பேட்டி.


".....எப்படி வேண்டுமானாலும் நீங்கள் என்னிடம் போக்கு மாக்காக கேள்விகள் கேட்டாலும், என் வாயில் சொற்களைத் திணித்தாலும், எனக்குச் சரியென்று தோன்றுவதைத்தான் நான் சொல்லுகிறேன். நான் சொல்வதிலும் புதிதாக ஒன்றுமில்லை. எப்போதுமே நான் எங்கள் கட்சிக்குள், மற்றும் மந்திரிசபையின் ஆலோசனைக் கூட்டங்கள் என்று எல்லா இடத்திலும் பேசுவதைத்தான் சொல்கிறேன். - வெறும் பொருளாதார வளர்ச்சி என்பதை மட்டுமே கருத்தில் கொண்டு வரும் திட்டங்களினால் சாதாரண மனிதர்களின் தேவைகள் புறக்கணிக்கப்பட்டு, ஏற்கனவே பணக்காரர்களாக இருக்கும் வர்க்கத்தினர் மேலும் பணம் சேர்க்கதான் வழி வகுக்கின்றன. இப்போதும் ஒன்றும் தாமதமாகிவிடவில்லை. பாதி வழியில் நாம் பாதையை மாற்றி நமக்கு / நம் தேசத்தின் சாதாரண மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் நம் வழிகளை மாற்றிக்கொள்ளலாம். We must take a Midterm review and make Course Corrections....."

பொருளாதார வளர்ச்சி ஒரு பக்கம் மகிழ்ச்சியளித்தாலும் இந்தியாவில் வளர்ச்சியின் பலன் சரியாக அனைவரையும் - அனைத்துதரப்பட்ட மக்களையும் சரியாகச் சென்றடைவில்லையோ என்ற கவலை நம்மில் பலருக்கு இருக்கலாம். சாதாரண மக்களின் அடிப்படைத் தேவைகள் இன்னும் சரிவர கவனிக்கப்படவில்லை; கல்வி, சுகாதாரம், குடி நீர் வசதி போன்றக் குறியீடுகள் இன்னும் அதள பாதாளத்தில்தான் இருக்கின்றன' இந்த நிலை எப்போது மாறும்.... என்று நம்மில் பலர் கவலைப் படுகிறோம். ஏன் இவற்றை சரி செய்ய இன்னும் ஒரு குவியத்தோடு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் கேள்வியெழுகிறது.

இந்த சமயத்தில் சி.என்.என். ஐ.பி.என் நிகழ்ச்சியான சாத்தானின் வக்காலத்து - Devil's Advocate - நிகழ்ச்சியில் இன்று மணிசங்கர் ஐயரின் மணியான பேட்டி.

சில நாட்கள் முன்பு CII நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது மேலே கூறியக் கருத்துக்களை வெளியிட்டிருந்தார். உடனே மணி சங்கர் தன் அரசு / யு.பி.ஏ அரசை விமர்சிக்கிறார் என்று காது மூக்கு, மசாலா வைத்து அவரை மாட்டிவிடும் தொனியில் நம்ம கரண் தாப்பர் கேள்விகள் கேட்டாலும், மணி சங்கர் கொஞ்சம் கூட அசராமல் தன் நிலையை மிகப் பொறுமையாக வெளிப்படுத்தினார். கச்சிதமாகவும், கொஞ்சம் கூட அலட்டிக்கொள்ளாமல், உணர்ச்சி வசப்படாமல் கரணின் கொக்கிகளையும், எலிப் பொறிகளையும் கையாண்ட விதம் சுவாரசியமாக இருந்தது.

மணி சங்கரின் கவலை மன்மோஹன் சிங்குக்கும் சிதம்பரத்திற்கும் இல்லாமல் இருக்காது. "Economic policies with a human face" என்று மன்மோஹன்ஜி சொன்னது இன்னும் காதுகளில் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது. பொருளாதாரக் கொள்கைகளை அப்படியே திருப்பிச் சுருட்டத் தேவையில்லை. வளர்ச்சி கட்டாயம் இருக்க வேண்டும். வளர்ச்சித் திட்டங்கள் அவசியம். ஆனால் கூடவே பலன்கள் அனைவரையும் போய் அடையுமாறு பார்த்துக்கொள்ள வழிகள் கண்டுபிடிக்கும் திறமையும் அவர்களுக்கு உண்டு என்றல்லவா நம்புகிறோம்? எங்கே முக்கியத்துவம் - Priorities - கொடுக்க வேண்டும் என்பதில்தான் கவனம் சிதறிவிட்டது.

பாதிவழித் திருத்தங்கள் - course correction - அவசியம் என்று தோன்றுமிடங்களில் தயங்காமல் செய்வார்களா? அல்லது ஊதற சங்கைப் போட்டு உடைப்பார்களா?

Friday, April 13, 2007

கேள்விகள் ஆயிரம்

இந்த வார விகடனில் மதன்:

கேள்வி: ரவீந்திரநாத் தாகூரைவிட வீறுகொண்ட தேசப்பற்றுடன் எழுச்சி மிக்க பாடல்களை எழுதிய பாரதியார், தாகூரைப்போல இந்திய முழுவதிலும் புகழ் பெற முடியாமைக்குக் காரணம் என்ன?

பதில்: தயவுசெய்து மன்னியுங்கள்...புகழைப் பொறுத்தவரையில் தாகூரோடு ஒப்பிட்டால், 'பாவம், பாரதி' என்றுதான் சொல்ல வேண்டியிருக்கும். இறந்தபிறகு புகழ் அடைந்தவர் பாரதி. இருந்தபோதே புகழ் பெற்றவர் தாகூர். காந்திஜி, நேரு மட்டுமல்ல... உலகளாவிய இலக்கிய மேதைகள் எஸ்ரா பவுண்ட், யீட்ஸ், ரோமேய்ன் ரோலண்ட், ரஷ்ய இலக்கிய மேதை பாஸ்டர்நாக் ( நோபல் பரிசு வாங்கியவர்) போன்றவர்களெல்லாம் தாகூருக்கு நெருக்கமானவர்கள். ...............ரஷ்ய மொழியில் தாகூரின் எழுத்துக்களை மொழி பெயர்த்தவர் பாஸ்டர் நாக்! நம்முடைய 'ஜன கண மன...' மட்டுமல்ல, 'அமர் ஸோனார் வங்காள..' என்று துவங்கும் அவருடைய கவிதையை தேசீய கீதமாக பங்களாதேஷ் ஏற்றுக்கொண்டது. ஆக இரண்டு நாடுகளுக்கு தேசீய கீதம் எழுதியவர் தாகூர் மட்டுமே! 1930 ல் ஐன்ஸ்டீனும் தாகூரும் சந்தித்து நீண்ட நேரம் உரையாடினார்கள். புகழ் பெற்ற அந்த உரையாடலை 'நியூயார்க் டைம்ஸ்' முழுப்பக்கம் வெளியிட்டது. ஏழு முறை அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஜப்பானுக்கு சுற்றுப் பயணம் செய்தார் தாகூர் அந்நாட்டுத் தலைவர்களெல்லாம் அவருக்கென்று நேரம் ஒதுக்கினார்கள்..................... தாகூருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது உச்சக்கட்டம்! தமிழ் மண்ணில் பிறந்து வாடிய பாரதி எங்கே? இதற்காக நாம் வெட்கப்பட வேண்டாமா?

பத்திரிகையில் உள்ள பதில் முழுக்க இங்கே பதியவில்லை. நடு நடுவே புள்ளிகளுடன் இடைவெளிவிட்டுப் பதிந்துள்ளேன்.

பாரதியார் இருந்தவரையில் அனேக சிரமங்கள் அனுபவித்தார் என்பதும்; ஏழ்மையில் இறந்தார் என்பதும்; என்பது மதன் சொல்வதுபோல் நாம் வெட்கப்படும் - கசக்கும் உண்மை.

இன்றும் நம்மில் பலர் பல திறமைகளோடு குடத்திலிட்ட விளக்காக இருக்கிறார்கள். ஒரு சிறிய வட்டத்தை மீறி அவர்கள் திறமை வெளியுலகுக்குத் தெரிவதில்லை.

பல நாட்களாக என்னுள் ஓடும் கேள்விகள் மீண்டும் இன்று தலைதூக்கின.
தமிழர்கள் ஆகிய நாம், நம்முள் இருக்கும் திறமையானவர்களைப் பாராட்டி வெளி உலகுக்கு அறியச் செய்வதில் தவறுகிறோமா? வெளியுலகுக்கு இருக்கட்டும்; திறமையானவர்களை விசாலமான மனதுடன் நமக்குள்ளேயே கூட அங்கீகரிக்கவும் தயங்குகிறோமோ? அல்லது, நமக்கு நம்மைப் பற்றி / நம் திறமைகளைப் பற்றி 'மார்கெடிங்' செய்யும் திறமை அவ்வளவாக போறாதோ? நமக்கு மக்கள் தொடர்புத் திறமை ( Public Relations) குறைச்சலோ? அல்லது நாம் அவ்வளவு தன்னடக்கம் உள்ளவர்களா? நம் திறமைகள் பரந்த அளவில் அங்கீகரிக்கப்படவேண்டும் என்று முனையாமல் இருக்கிறோமோ? என்றுமே குடத்திலிட்ட விளக்காக இருப்பதில் நமக்கு திருப்தியோ?

மதனின் பதில் மட்டுமல்ல, சில நாட்கள் முன்பு மற்றொரு செய்தியும் இந்தக் கேள்விகளைக் கொண்டு வந்து என் முன் நிறுத்தியது. சமீபத்தில் கூகுள், ஹிந்தி Transliteration வசதியை டூல் பாரில் கொடுத்துள்ளது. அட, நாம்தான் முரசு அஞ்சல், கலப்பை, சுரதா என்று சளைக்காமல் பதிந்து கொண்டு இருக்கோமே என்கிறீர்களா? ஆனாலும் பிளாக்கரில் தமிழை ஏன் காணோம்?!! இரண்டு வருடம் முன்பு இந்திய மொழிகளில் தமிழில்தான் அனேக வலைப்பதிவுகள் இருந்ததாக ஞாபகம். இன்றைய நிலை தெரியாது. ஆனாலும் பன்மொழி வலைப்பதிவுகளில் கவனம் செலுத்தும் கூகிள் தமிழை மறக்கலாமோ? அல்லது தினம் ஒரு புது ஐடியாவோடு நம் முன் நிற்கும் கூகிளில் ஒரு தமிழர் கூட இல்லையா? - அல்லது..... சரி; முந்தைய பாராவை மறுபடி படியுங்கள்.

Disclaimer 1: தாகூரின் பெருமையை / திறமையைப் பற்றி இங்கே மாற்றுக்கருத்து இல்லை. நம்மை நாமே குறைவாக மதிப்பிடும் தாழ்வு மனப்பான்மையும் இல்லை. இது ஒரு சுய அலசல் முயற்சி மட்டுமே.
Disclaimer 2: ஒரு வேளை பிளாக்கரில் தமிழ் transliteration வசதி இருந்து எனக்கு அது தெரிந்திராவிட்டால், கடைசி பாராவை மன்னிக்கவும். இங்கே அதைக் குறிப்பிட்டால் நானும் தெரிந்துகொள்வேன். பிறருக்கும் உபயோகமாக இருக்கலாம்.

Wednesday, April 04, 2007

ஏப்ரல் 1

எங்கே நிஜத்தைச் சொல்லுங்க... யாரெல்லாம் இதைப் படிச்சுட்டு வீட்டுக்கு அட்டைப் பெட்டி தினம் தினம் வரும்'னு நம்புனீங்க?


அடக் கடவுளே..... நான் நம்பிட்டேங்க :-) ஹ்ம்ம்... போட்டிப் போட்டுக்கொண்டு இந்த இணைய ஜாம்பவான்களெல்லாம் வியாபாரம் செய்ய புதுசு புதூசா உத்தியைக் கொண்டு வராங்களா... நானும் ஒரு பொட்டியை வரவழைக்கலாமா'ன்னு உண்மையிலுமே யோசனை செய்ய ஆரம்பித்து விட்டேன் !

யார் கண்டா? இதுவும் கூடிய சீக்கிரம் உண்மையானாலும் ஆகலாம்....! போற போக்கிலே ஏப்ரல் 1 ந் தேதி விளையாட்டுக்கு விஷயமே இல்லாமல் எல்லாமே சாத்தியம்'ங்கற நிலை வந்துடும் !

Monday, February 26, 2007

லாலுஜி, மிக்க நன்றிஜி :-)

ஒரு காலத்துலே ஏகமா நஷ்ட்டத்துலே இருந்தாங்க.

இந்த வருடம் ரூபாய் 20,000 கோடி லாபமாம். போன வருடத்தை விட இந்த வருடம் நிறைய விலைக்குறைப்பு வேறு. எப்படிங்க இப்படி லாபம் காட்டுறீங்க? ஆனாலும், நம்பள மாதிரி சாதாரணவங்களுக்கு ரொம்பவே சந்தோஷம். இதெல்லாம் விட எனக்கு என்ன ரொம்ப சந்தோஷ்ம்னா.... 45 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு 3 தட்டு வண்டியிலே கீழ் இருக்கை /படுக்கை வசதி ஒதுக்கப்படுமாம்.

இந்த ஒரு விஷயத்துக்காக,

ரயில் மந்திரி லாலுஜி, மிக்க நன்றிஜி :-) ஒவ்வொருதடவை ரயில் பயணம் ரிசர்வேஷன் செய்யும்போதும் மேல்தட்டுதான் கிடைத்தது என்று செய்துவிட்டு, அங்கே போய் - சின்ன பசங்ககிட்ட அய்யா, அம்மான்னு கெஞ்சி கீழ் இருக்கையை கேட்டு வாங்கி - ஹ்ம்ம் இனி இந்த தர்ம சங்கடம் இல்லே... ஒரு வேளை லாலுஜி குடும்பத்துலேயும் யாருக்காவது முழங்கால் மூட்டு வலி இருக்குமோ??? :-)

பின்னால் சேர்த்தது.

திரு அளித்த கருத்துக்கு பதில் எழுத ஆரம்பித்த விஷயம் இன்னும் பரவலாக பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும் என்று தோன்றியதால்டைங்கே மீண்டும் கொஞ்சம் சேர்த்து இருக்கிறேன்.

சென்டிரல் ரயில்வே ஸ்டேஷன் சமீபத்துலே போயிருக்கீங்களா? ஓரளவு சுத்தமாகவே இருக்கு - பிளாட்பாரங்கள் மட்டும். ஆனா வெளியே இன்னும் சகிக்க முடியாமல்தான் இருக்கு. அதுவும் அந்த கூவம் பாலம் அருகில். வாலாஜா சாலை பக்க நுழைவாயில் போன்ற இடங்கள். ரயில் பாதைகள் - ஹ்ம்ம்.. கேட்கவே வேண்டாம்.

ரயிலிலும், பஸ்ஸிலும் பயணம் செய்பவர்கள்தாம் ஆகட்டும், பிளாஸ்டிக் கவர்கள், மிஞ்சிய காப்பி, இன்னும் வகையறா, வகையறா - நின்ற இடத்திலேயே கொட்டுவதைப் பார்க்கும்போது.... நற..நற... ( என் பற்கள் உடையும் சப்தம் கேட்டதா?)

சென்ற வாரம் இபப்டித்தான் பெங்களூரில் என் அருகில் பிளாட்பாரத்தில் உட்கார்ந்திருந்த ஒரு இளைஞன் தான் குடித்துக்கொண்டிருந்த பிளாஸ்டிக் காபி கப்பை நடந்து போய் ரயில் பாதை இடுக்கில் போட்டுவிட்டு வந்தான். என் அருகில் மீண்டும் அமர்ந்து செல் போனில் பேசியவனை ஒரு நிமிடம் கூர்ந்து பார்த்தேன். பெங்களூரில்லேதோ IT நிறுவனத்தில் வேலை செய்பவராக இருக்கும் என்று தோன்றியது. பல நாடுகள் பயணம் செய்திருப்பார். அங்கேயெல்லாம் இப்படி போட்டு இருப்பாரா என்று தோன்றியது. அடுத்த வினாடி அவரிடம் பேச ஆரம்பித்து விட்டேன். " உங்களுக்கு ஒரு வேண்டுகோள்." என்றேன்.

"ஆங். சொல்லுங்க."

" நீங்க இப்ப காபி கப்பை ரயில் பாதை இடுக்கிலே போட்டதை பார்த்தேன். வெளி நாட்டுலே இப்படி செய்து இருப்பீங்களா? தயவு செய்து இனிமே இதுபோல் செய்யாதீங்க. இதுபோல் யாராவது செய்வதை நீங்கள் பார்த்தாலும் இனிமேல் நீங்கள் தடுக்க ஆரம்பியுங்கள்" என்றேன்.

அவருக்கு ஒரு வினாடி துணுக்கென்று இருந்தாலும் அடுத்த கணம் மென்மையாக சிரித்து மன்னிப்பு கோரினார். இனி எப்படியிருப்பாரோ தெரியாது. குறைந்த பட்சம் அடுத்த முறை காபி குடித்தவுடன் அவர் கை கொஞ்சம் தயங்கும். குப்பைத்தொட்டி இல்லாத இடங்களில் ஒரு பிளாஸ்டிக் பையை நம் கைப்பையில் வைத்திருந்தால் உள்ளே போட்டுக்கொண்டு, பின்னர் குப்பைத்தொட்டி கண்களில் பட்டதும் போடலாமே?

ரயில்களில் ( பல சம்யங்களில் விமான நிலையங்களிலும் கூட) கழிவறைகளிலிருந்து வரும் துர்நாற்றம் நம் மனசை நோகச்செய்து விடும். நிர்வாகங்கள்தாம் இந்த இடங்கள் பராமரிப்பிற்கு காரணம் என்றாலும் ஓரளவு நம் ஜனங்களும் காரணமே. ஆரம்பக் கல்விக்கூடங்களில் எதைக் கற்றுக்கொடுக்கிறார்களோ இல்லையோ, அடிப்படை சுத்த/பத்த விஷயங்களை சொல்லிக்கொடுக்க வேண்டும். கழிவறைகளே இல்லாமல் இருக்கும் நம் சிற்றூர்களிலும் மற்றும் நகர்ப் புறங்களில் வசதி குறைவானவர்கள் இருக்கும் இடங்களிலும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டு சுத்தத்தின் அவசியம் பற்றி விழிப்புணர்வு ஏற்படச் செய்ய வேண்டும். இந்த விஷயத்தில் சுலப் மற்றும் எக்ஸ்னோரா போன்ற தொண்டூழிய அமைப்புகள் செய்யும் சேவைகள் பிரபலப்படுத்தப் பட வேண்டும். ஒவ்வொரு நகர / கிராம வட்டத்திலும் இவை போன்ற அமைப்புகள் ஏற்பட வேண்டும். பொது இடங்களில், குறிப்பாக உணவுப் பண்டங்கள் விற்கப்படும் இடங்களின் அருகாமையில், பொது வாகனங்களில் நிறைய குப்பைத்தொட்டி இருக்க வேண்டும்.

இன்னும் நிறைய "டும்" போட்டுக்கொண்டே போகலாம்.

மற்றொரு விஷயம் - நம் ஊர் விமான நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் நம் சாமான்களை நாமே தள்ளிக்கொண்டு போக வசதியாக ஓரளவு நல்ல தரை. ஆனால் வெளியே வந்ததும் வாகனங்கள் நிற்கும் இடத்துக்கு போக ரொம்ப தூரம் போக வேண்டும் - அதுவும் வழியெல்லாம் குண்டும் குழியும். இதை தவிர்க்க ஆரம்பத்திலேயே உதவிக்கு ஆள் வைத்துக்கொள்ள வேண்டும். அதேபோல் நம்மூரில் பொது இடங்களில் வித்தியாசமான உடல் அமைப்பு பெற்றவர்களுக்காக தனி வசதி - ramp - இருப்பதேயில்லை. பிளாட்பாரங்களுக்கு போக படியேறிதான் போக வேண்டும். சறுக்கு பாதை இல்லாமல் சாமானை தூக்கிக்கொண்டு போவது வேதனை. ஆங்காங்கே " Disabled" என்று பெயர் பலகை மட்டும் இருக்கும் - கழிவுக்கூடம், சில ரயில் பெட்டிகள் என்று. ஆனால் அந்த ரயில் பெட்டியில் ஏறுவதற்கு ஏற்றாற்போல் ramp இருக்காது. இப்போதெல்லாம் புதுக் கட்டிடங்களில் ramp வைக்கிறார்கள். ஆனால் இப்படி வித்தியாசமான உடல் அமைப்பு பெற்றவர்களின் சௌகரியத்திற்காக நாம் செல்ல வேண்டிய தூரம் இன்னும் ரொம்ப தூரம்.

மேலே குறிப்பிட்ட பல "வேண்டும்"கள் லாலுஜியின் கண்களில் பட வேண்டும் என்று ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன். :-)

ஆனாலும், எங்கேயோ இன்னும் இப்படி குறைகள் இருந்தாலும், உலகிலேயே அதிகம் பேர் பயணம் செய்யும் ஒரு ரயில் நிர்வாகம் இத்தனை தூரம் சமாளிப்பதே பெரிய விஷயம்தான்.