Tuesday, August 23, 2005

மனம் நிறைந்த நல் வாழ்த்த்துக்கள் !! :-)



தமிழ் வலைப்பதிவுகள் என்று ஒரு பட்டியல் ஆரம்பித்தபோது இருக்கும் சில வலைப்பதிவுகளைப் படிக்க சௌகரியமாக இருக்க என்று ஆரம்பித்ததாக ஒரு முறை மதி எழுதியிருந்தார். ஆரம்பத்தில் மொத்த எண்ணிக்கை 50 சொச்சம் என்றுதான் நினைக்கிறேன். கிட்டதட்ட அதே சமயம் live journal ரகத்தில் வலைப்பூ என்று தொடங்கி, வாராவாரம் ஒரு பதிவாளர் ஆசிரியராகப் பொறுப்பெடுத்து புதிய /பழைய பதிவுகளையெல்லாம் படித்துத் தன் கருத்துக்களையும் எண்ணங்களையும் பகிர்ந்து கொண்டு வலைப்பூ ஒரு கலாய்க்கும் இடமாக இருந்தது.

முதலாம் வலைப்பூவும் ( Blogspot) இரண்டாம் வலைப்பூவும் ( Yarl) பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்தது, பின்னர் தமிழ் மணமாக அவதாரம் எடுத்து இன்றுடன் ஒரு வருடம் ஆகிவிட்டது !!!!

தமிழ் வளர்ச்சியில் தமிழ் மணம் நிச்சயமாக ஒரு மைல்கல்.

தமிழ் மணம் மேலும் தழைத்தோங்கவும், அயராது இந்த முயற்சியில் வெற்றிகரமாக செயல்படும் காசிக்கும் மதிக்கும் மற்றும் அவர்களுடன் இணையாக செயல்படும் அனைவருக்கும் மனம் நிறைந்த நல் வாழ்த்த்துக்கள்.

Saturday, August 20, 2005

தம்படிக் காசுப் பெயராத ஒரு "தொழில்"... :-)

ஒரு ஆங்கில வலைப்பதிவாளருக்கு டெல் கணினியில் ஏதோ பிரச்சனை. அந்த நிறுவனத்தின் நுகர்வோர் உதவி ஆட்கள் யாரும் சரியாக உதவுவதாகத் தெரியவில்லை. அவ்வளவுதான். தன் வலைப்பதிவில் அவர்களைப் போட்டுத் தாக்க, உடனேயே அவர் பதிவில் பின்னூட்டம் இட்டவர்களும் தங்கள் பதிவிலும் டெல் நிறுவனத்தைக் கிழி, கிழியென்று கிழிக்கத் தொடங்க, டெல் கம்பெனி தலையில் கைவைத்துக் கவலைப் பட ஆரம்பித்துவிட்டது. இந்த மாதிரி பதிவாளர்களின் தர்ம அடிதானா என்று தெரியாது, ஆனால், கடந்த புதன் கிழமையன்று, டெல் கணினிக்கு நுகர்வோர் திருப்தி மதிப்பீடு கணிசமாகக் குறைந்துள்ளது என்று மிச்சிகன் பல்கலைக்கழகம் வெளியிடும் சர்வே குறிப்பிட்டுள்ளது.

இப்படி பொதுவாக இங்கே சிலிகான் பள்ளத்தாக்கில்¢ருக்கும் நிர்வாகங்கள் பலவும் இன்று வலைப்பதிவுகளை எப்படியாவது புரிந்து கொள்ளவும் அங்கே என்னதான் நிகழ்கிறது என்று தெரிந்து கொள்ளவும் முயல்கிறார்கள். அதிலும், இவர்களுக்கு மிகப்பெரியப் புரியாத புதிர் என்னவென்றால், ஒரு தம்படிக் காசுப் பெயராத ஒரு "தொழில்" ( மாய்ந்து, மாய்ந்து அவரவர் நேரத்தையும் ஆர்வத்தையும் செலவழிக்கும் இதை வேறு எப்படி குறிப்பிடுவதாம்?!!) எப்படி பல ஆயிரம் பேரைக் கவர்ந்து இழுக்கிறது என்ற மாயைதான் ! பெரிய பெரிய நிறுவனங்கள் இதைப் புரிந்து கொள்ள ஆசைப்படுகின்றன. காரணம் வேறொன்றுமில்லை. டெல் மாதிரி, தங்கள் நிறுவனம் தாக்கப்படும்போது தன் தரப்பு வாதங்களை ( சப்பைக்கட்டுக்களை) வைத்து சமன் செய்யவும், முள்ளை முள்ளால் எடுக்கிற கதையாக, தேவையானால் எதிர் தாக்குதல் நடத்தவும் தங்கள் நிறுவனத்தின் ஆதரவிலேயே வலைப்பதிவு தளம் தொடங்கித் தங்கள் ஊழியர்களையும் வலைப் பதிய அனுமதித்து விட்டால் இது போன்ற பிரச்சனைகளை சமாளிக்கலாமோ என்ற யோசனைதான் இந்தப் பெரிய நிறுவனங்களின் வலைப்பதிவு ஆர்வத்திற்குக் காரணம்.

விளைவு? நேற்றும் இன்றும் சான்பிரான்ஸிஸ்கோவில், வலைப்பதிவாளர்களின் பெரிய உச்ச மாநாடு நடந்து கொண்டுள்ளது. பெரிய பெரிய தொழிலுலக வஸ்தாதுகளெல்லாம் 20, 21 வயது இளைஞர்களிடம் " கொஞ்சம் சொல்லிகொடுப்பா..." என்று தாடையைப் பிடித்துக் கெஞ்சாத குறையாக கெஞ்சிக்கொண்டிருக்கிறார்கள் என்று "மெர்குரி நியூஸ்" தலைப்புச் செய்தி வெளியிட்டுள்ளது. நேற்று இந்த மாநாட்டில் ஹீரோ, 21 வயதான Matt Mullenweg என்ற இளைஞர். வேர்ட் பிரஸ் உபயோகித்து நிறுவனங்களுக்குத் தோதாக வலைப்பதிவு உருவாக்கும் ஒரு புது மென்பொருள் சாதனம் செய்துள்ளார். மாநாட்டுக்கு வெளியேத் தன் புதிய சாதனத்தைப் பெருமையாக பறைசாற்றிக்கொண்டிருக்கும்போது அங்கே அரட்டையில் கலந்து கொள்ள Robert Scoble, என்ற இன்னொரு பதிவாளர் வந்து சேருகிறார். ``Scobleizer'' என்ற பதிவை எழுதும் இவர் மைக்ரோசாப்ட் நிறுவன ஊழியர். ஆனால் தன் நிறுவனத்தையும் விட்டு வைக்காமல் விமரிசனம் செய்கிறாராம் தன் பதிவில். இருந்தாலும் மைக்ரோசாப்ட் இவரை ஒன்றும் செய்யாமல் விட்டுவைத்துள்ளது என்று குறிப்பிடும் முல்லன்வெக், "இவர் இப்படி உள்ளது உள்ளபடி எழுதுவதால் இவரது பதிவுக்கு ஒரு நம்பகத்தன்மை உள்ளது; அதோடல்லாமல் இவரது வெளிப்ப்டையான கருத்துக்களினாலும் இவரது நம்பகத்தன்மையினாலும் மைக்ரோசாப்டின் இமேஜும் உயர்ந்துள்ளது. முன்போல் நம்மால் மைக்ரோசாப்டை வெறுத்தொதுக்க இயலவில்லை." என்கிறார். நிறுவனங்களுக்கு வலைப்பதிவுகள் புது தற்காப்பு சாதனம் ! இன்னொரு பதிவாளர், வலைப்பதிவுகள் பிரமாதமான Public Relations சாதனம் என்கிறார். அடுத்து என்ன அவதாரமாகப் பதிவுகள் உருவெடுக்குமோ தெரியவில்லையே !!

Wednesday, August 17, 2005

காலம் காலமாக ஒரு கேள்வி......

"You don't need a shrine to feel the divine around you"

வளவளவென்று ஏதோ அரட்டை போய்க்கொண்டிருந்த அந்த இடத்தில் சட்டென்று ஒரு மௌனம் - ஒரு நிமிடத்திற்கும் குறைவாகவே - நிலவியது. சொன்னது யாரோ தாடிவைத்த ஞானி அல்ல. கணினித் துறையில் ஆராய்ச்சிக்குப் படிக்கும் ஒரு மாணவி. போகிறபோக்கில் சொல்வதுபோல் சாதாரணமாக வார்த்தைகள் அவரிடமிருந்து இந்த வார்த்தைகள் வந்து விழுந்த மாதிரி இருந்தாலும் இப்படி ஆழமான கருத்து வெளிப்படுவதற்குப் பின்னால் நிறைய சிந்தனைகள் இருந்திருக்கின்றன என்று புரிந்தது.

புஷ்ஷின் புதுக் குழப்பமான, மனிதன் மற்றும் உலகின் ஆரம்பம் பற்றி, பரிணாம வளர்ச்சி பாடங்களுடன் கூடவே Intelligent Design பங்கு பற்றியும் பள்ளிக்கூட அறிவியல் வகுப்புகளில் சொல்ல வேண்டும் என்ற வலியுறுத்தலும், அதைத் தொடர்ந்து எழும்பியிருக்கும் சர்ச்சைகள் மற்றும் புஷ் விடுமுறையில் தங்கியிருக்கும் பண்ணை வீட்டுக்கு வெளியே ஈராக் போருக்கு எதிராக கூடாரமடித்து "விரதமிருக்கும்" தாய் சிண்டி, என்று பேச்சு எங்கோ போய் காஷ்மீரில் வந்து நின்றது. அப்போதுதான் அந்தப் பெண் அவர் குடும்பத்தின் கைலாச அனுபவத்தை விவரித்தார்.

சீனாவின் திபேத் ( இந்தப் பகுதி சீனாவைச் சேர்ந்ததாக இந்தியா ஏற்றுக்கொண்டுவிட்டபடியால் இப்படி கூறுவதுதானே சரி?) பகுதியில் இருக்கும் மானசரோவர் மற்றும் கைலாச மலைக்கு அவர் குடும்பம் சென்று வந்ததைப் பற்றி அங்கே மண்டியிருக்கும் இயற்கையழகை விவரிக்கும்போது, யாரோ கேட்டார்கள், " ஹிந்துக்களின் புண்னிய பூமி என்று நாம் போகிறோமே? அங்கே உள்ள கோவில் பெயர் என்ன? " என்று. " அங்கே ஏதும் கோவில் இல்லை. இமாலய மலையும் இயற்கை சுனைகளும்தான். யாத்திரை செல்கிறவர்கள் நம் கதைகளில் சொல்லப்படும் கைலாய மலை; சிவன் வாழும் இடம் என்று ஒரு நம்பிக்கையில்தான் போகிறார்கள்." என்றார். சொல்லிவிட்டு, ஒரு கனமான மௌனத்திற்குப் பின் ஆரம்பத்தில் சொன்ன வாக்கியத்தை நிறுத்தி நிதானமாக சொன்னார். இந்த அனுபவம் நம்மில் பலருக்கும் இருந்திருக்கும்.

கைலாயம் என்றில்லை. எந்த இடத்திலுமே, பிரமாண்டமான இயற்கையழகின் நடுவே காற்றின் ஓசை மட்டுமே பரவி இருக்க, மௌனமாக நின்று வெளியே இருக்கும் பிரமாண்டம் நம் உள்ளும், புறமும் வியாபிக்க விட்டுவிட்டு இயற்கையுடன் ஒன்றாக கலக்கும்போது மனசில் தோன்றும் அபரிதமான அமைதி இருக்கே..... அது நிஜமாகவே Divine. அவர் சொல்வதை அன்று அனைவருமே ஆமோதித்து, உணர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள்.

இவர் சொல்லும் இந்த மனோபாவம் இன்று பல இளைஞர்களிடம் காண்கிறேன். கடும் பனியில் ஊரே வெண் போர்வையில் இருக்க அமைதியான நடுநசிக்கு மேல் ஆராய்ச்சி நிலையத்திலிருந்து வீட்டுத் திரும்பும் போது அந்த அமைதியில் தன்னை மறப்பதாக ஒரு மாணவர் கூறினால், இன்னொருவர், Grand Canyan வரை நீண்ட வெற்று வெளியும் ஆகாசமுமே துணையாக அந்த அகண்ட வெளி தனக்குக் கோவில் போல புனிதமாக இருந்தது என்றார் இன்னொருவர்.

ஏன், எப்படி, ஏன் கூடாது என்று கேள்விகள் கேட்டு, சிந்தனைகளை வளர்த்து, தங்களுக்கு என்று வழியை நிர்மாணித்துக்கொள்ளும் இளைய தலைமுறையினர் எனக்கு மிகவும் பிடித்தமானவர்கள்.

சிந்திக்கும் மனிதர்களை உருவாக்கும் அஸ்திவாரமான கல்வித்துறையில் போய், கடிகாரத்தைத் திருப்பி வைக்கும் விதத்தில் புஷ் இப்படி ஒரு சர்ச்சையைக் கிளப்பியிருக்க வேண்டாம். பதிவுகளில் நிறைய பேர் இதைப் பற்றி அலசியாச்சு. நான் புதிதாக சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஆனால் இரண்டு நாள் முன்பு அந்த இளைஞர்களுடன் நடந்த சுவாரசியமான பேச்சு, மறுபடி சிந்தனையைத் தூண்டிவிட்டது. ஒருவிதத்தில் புஷ்ஷின் எண்ணம் சரியாக இருக்கலாம் - அதாவது, எல்லாவிதமான கோணங்களும், மாணவர்கள் அறிந்திருக்க வேண்டும் என்ற நோக்கில். ஆனால் உத்தேசங்களுக்கும், அனுமானங்களுக்கும், தனிப்பட்ட நம்பிக்கைகளுக்கும் விஞ்ஞானத்தில் ஏது இடம்? மாணவர்களுக்கு மாற்றுக் கருத்துகள் தெரிந்திருக்க வேண்டுமென்றால் இந்தக் கருத்துக்கள் சரித்திர வகுப்பிலோ, பிலாஸபி வகுப்பிலோ விளக்கப்படலாமே? விஞ்ஞானத்தில் கையை வைக்க வேண்டாமே?

இதில் சுவாரசியமான விஷயம், புஷ் கிளப்பிவிட்ட இந்த சர்ச்சையைப் பற்றிய சென்ற வாரக் கட்டுரையில் டைம் பத்திரிகை, நான்கு விஞ்ஞானிகளை " பரிணாம வளர்ச்சி மற்றும் கடவுள் இரண்டிலுமே ஒரே சமயம் நம்பிக்கை வைக்க முடியுமா" என்று கேட்டதற்கு, நான்கில் மூன்று விஞ்ஞானிகள் முடியும் என்று திட்டவட்டமாக பதிலளித்துள்ளனர். இவர்களில் Francis Collins, - இவர் National Human Genome research Institute, அமைப்பில் Director - சொல்லியிருக்கும் கருத்துக்களில் மேலே எடுத்துக் காட்டியுள்ள இளைஞர்களின் மனோபாவம் வெளிப்படுகிறது.

இவர் சொல்கிறார்: " காலம், இடம் கடந்து எங்கும் வியாபித்திருப்பதாக சொல்லப்படும் கடவுள், பரிணாம வளர்ச்சி என்ற ஒரு இயற்கையான முறை மூலம் உங்களையும் என்னையும் உலகத்தையும் உருவாக்கியிருந்தால் அது ஒரு பிரமாதமான செயல் திட்டம் இல்லையா? தவிர, அவருடைய செயல்களை நாம் இன்று கண்டுபிடிக்கும் திறமையையும் சந்தர்ப்பத்தையும் கொடுத்திருக்கிறார் என்று வைத்துக் கொண்டால் அது கொண்டாடப் பட வேண்டிய விஷயம். Human Genome Project க்கு நான் தலைமை வகிக்கிறேன்.... மனித DNA வில் அடங்கியிருக்கும் அத்தனை விஷயங்களும் வெளி வந்துவிட்டன. நான் ஒரு கிறிஸ்துவனும் கூட. விஞ்ஞான கண்டுபிடிப்புகள் என்னைப் பொறுத்தவரை ஒரு வழிபாடு. " என்று கூறும் இவர், முத்தாய்ப்பு வைத்தால்போல் சொல்லியிருக்கும் வார்த்தைகளில் ஆழம் இருக்கிறது. " விஞ்ஞானம் கடவுள் பற்றி நிச்சயமாக உண்டு இல்லை என்று நிரூபிக்க முடியாது. ஆனால் என்னைப் பொறுத்தவரையில், வாழ்க்கையின் அர்த்தம் பற்றி அடிப்படைக் கேள்விக்கான பதில்கள் எனக்கு விஞ்ஞானத்தில் இல்லை. மாறாக, என்னை யோசிக்க வைப்பவை, சரி, தவறு என்று ஆராய்ந்து பாகுபாடு செய்யத் தெரிந்திருக்கும் மனிதனின் அபாரமான சக்தியும், கிறிஸ்துவின் நிஜமான சரித்திரம் சொல்லித்தரும் உண்மைகளும்தான்."

காலப் போக்கில் எந்த கோட்பாடுகளுமே கேள்விகளுக்குட்பட்டுப் பிறகு ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படுகிறது. உலகம் தட்டையானது என்று ஆணித்திரமாக நம்பிய ஒரு சமுகம் காலப்போக்கில் ஆதாரங்களுடன் நிரூபணம் கிடைத்தபின்தான் எது உண்மை என்று புரிந்து கொண்டது. இன்று சத்தியம் போல் தோன்றுபவை நாளை மாறலாம். மனிதனின் ஞானம் இப்படிதான் படிப்படியாக விரிந்துள்ளது. இன்னும் எத்தனையோ கணக்கில் அடங்காத அளவு உண்மைகள் இயற்கையில் பொதிந்துள்ளன. காலப்போக்கில் விடைகள் வரும்.

ஆனால், நம்பிக்கை என்பது ஒருவரின் தனிப்பட்ட விஷயம். அதையும் விஞ்ஞானத்தையும் சேர்த்து குழப்பி....? ஹ்ம்ம்.....இங்கும் கல்வித்துறை அரசியல்வாதிகளிடம் பந்தாகிறது என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.

Saturday, August 06, 2005

சுனாமிப் பிரச்சனையில் வலைப் பதிவுகள் உதவி செய்தது போல் மும்பாய் பிரளயத்திற்கும் பதிவுகள் வெளியாகியுள்ளன. உதவ / பங்கு பெற விரும்புவர்கள் இங்கே பார்க்கவும்.

Tuesday, August 02, 2005

"தலைவலியும் காய்ச்சலும்...."

எல்லாப் பிரச்சனைகளுக்கும் " தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும் " என்று சொல்வது மிகக் குழந்தைத் தனமாக தெரிந்தாலும் சில சமயம் அமெரிக்காவின் சமீபத்திய நாஸா / டிஸ்கவரி - முயற்சியிலும், ஈராக் போரிலும் சொதப்பிக் கொண்டிருக்கும் சொதப்பல்களைப் பார்த்தால் இப்படி நினைக்கதான் தோன்றுகிறது. இந்த இரு சமாசாரங்களிலும் உள்ளடங்கியிருக்கும் கோடிக்கணக்கான செலவினங்களை விடுங்கள். பணயமாக வைக்கப்பட்டிருக்கும் உயிர்கள்?

முடிவெடுக்கும் நிலையில் உள்ளவர்கள் தங்கள் நெருங்கிய உறவினர்கள் இந்த வேலைகளில் ஈடுபட்டிருந்தால் இன்னும் அக்கறையாக செயல்படுவார்களோ?

ஈராக் போருக்கு முடிவு கட்ட ஒரு வழி, புஷ்ஷின் இரண்டு மகள்களையும் போருக்கு அனுப்புவதுதான் என்று இங்கே பாதி சீரியஸாகவும், பாதி கிண்டலாகவும் ஊடகங்களில் அலசப்படுகிறது.

கிண்டல்கள் ஒரு பக்கம் இருக்கட்டும். CNN சில நாள் முன்பு ஒரு செய்தித் துணுக்கு ஒளிபரப்பியது. ஈராக்கில் போரில் ஈடுபட்டிருக்கும் ஒரு அமெரிக்கப் படைவீரர் எப்படி இரண்டு ஈராக்கி புரட்சிக்காரர்களின் துப்பாக்கி குண்டிலிருந்து தப்பிய அனுபவம் அப்படியே வீடியோவில் படமாக்கப்பட்டிருந்தது. புரட்சிக்காரர்கள் அந்த அமெரிக்க வீரரைக் குறிவைப்பதும், ஒருவர் மற்றொருவருக்கு "ம்... சுட்டுத்தள்ளு" என்று கூறி தைரியம் கொடுப்பதையும் படங்கள் தெளிவாக திரையில் தெரிய, செய்தித் தொகுப்பாளர் படிப்படியாக பிண்ணனியில் விவரித்துக் கொண்டிருந்தார். தப்பி வந்த அமெரிக்க வீரரின் பெற்றோர் மகிழ்ச்சியுடன் தங்கள் மகன் தப்பியதை விவரித்தனர். கிட்டதட்ட 5 நிமிடம் இந்தச் செய்தி காண்பிக்கப்பட்டது. ஈராக் போரில் சுமார் 1700 அமெரிக்க வீரர்கள் மாண்டதாக அவ்வப்போது வெளியாகும் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

அதே CNN. இன்னொரு செய்திக் குறிப்பு. ஈராக் போரில் சுமார் 25000 சிவிலியன்கள் கொல்லப்பட்டிருப்பதாக சொல்லப்படும் ஒரு ஆய்வு. இந்தச் செய்தி திரையில் வாசிக்கப்பட்ட நேரம் - சுமார் ஒரு நிமிடத்துள். அதுவும் படங்கள் எதுவும் கிடையாது. போகிற போக்கில் வாசிக்கப்பட்டது.

இதன் நடுவே புஷ், ஆஸ்திரிலேயா பிரதமருடன் வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர் சந்திப்பில் ஒரு கேள்விக்கு பதிலளிக்கையில் கூறுவதும் அதே நாள் ஒளிபரப்பாகியது.

"..... இது ஒரு போர். போரில் வெல்லும் வரை போர் நிற்காது."

which victory you are talking about Mr. President? over a ghost town ? என்று கேட்கத் தோன்றுகிறது.

இன்னொரு பக்கம், நாஸா சொதப்பல்கள்.

நேற்று நியூயார்க் டைம்ஸில், டிஸ்கவரியின் பிரச்சனைகளையும், பலவித ஆபத்துக்களைக் கணக்கில் எடுக்காமல் முடிவுகள் எப்படியெடுக்கப்பட்டன என்று விவரமாக உள்ள இந்தச் செய்தியைப் படிக்கும்போது - ஒவ்வொரு வரியைப் படிக்கும்போதும் - வயிற்றில் பகீரென்று இருந்தது / இருக்கிறது. இந்த விண்கலத்திலிருந்து பிய்ந்து தூக்கியெறியப்பட்ட ஒரு நுரைப்பொதியும் ( Foam ) அதனால் கலத்தின் அடிப்பக்கத்தில் ஏற்பட்ட இடைவெளியும் எவ்வளவு தூரம் பாதிப்பை ஏற்படுத்தும் என்று இன்னும் தெளிவாகவில்லை. இப்போது கலத்தில் இருக்கும் விஞ்ஞானிகள் விண்வெளியிலேயே அந்த இடத்தை ரிப்பேர் செய்ய முனைகிறார்கள்.

இந்தச் செய்தியின்படி, டிஸ்கவரியின் முன்னேற்பாடுகளில், இந்தப் பிரச்ச்னை - பறக்கும் வேகத்தில் ஒரு நுரைத் துண்டு பிய்ந்து போகும் பிரச்சனை - ஒரு பொருட்டாகவே கருதப்படவில்லையாம். அப்படியே விழுந்தாலும், இந்த நிகழ்வால் 2003 ஆம் ஆண்டு சிதறி விழுந்த - இதேப் பிரச்சனையால் சிதறி விழுந்த - கொலம்பியாவின் நிலை டிஸ்கவரிக்கு ஏற்படும் சாத்தியக் கூறுகள் வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளன - reduced to "acceptable levels" - என்று விளக்கம் சொல்லப்படுகிறது.

"acceptable levels" ?? என்ன அர்த்தம் என்று புரியவில்லை. எனக்கு விஞ்ஞான ரீதியாக / தொழில் நுட்ப ரீதியாக புரியாமல் இருக்கலாம். ஆனால் மனிதாபிமான ரீதியில் சிந்திக்கும்போது, ஒருவித மிகையான தன்னம்பிக்கையுடன் எதையோ அவசியமில்லாத சுய பிம்பத்தை நிலை நாட்டவதற்காக அக்கறையும் நிதானமும் காட்ட வேண்டிய விஷயங்களில் கோட்டை விட்டு, பல உயிர்களுடன் விளையாடுகிறார்களோ என்று தோன்றுகிறது.

இப்போது, இந்த விண்கல ஏற்பாட்டின் தலைவர், பில் பார்ஸன்ஸ், இப்படி ஒரு "பிரமாதமான" ஸ்டேட்மெண்டை சொல்லியுள்ளார். " You have to admit when you're wrong. We were wrong. We're telling you right now, it should not have come off." !!
பிய்ந்தத் துண்டு இன்னும் ஒரு நிமிடம் முன்னாடி விழுந்திருந்தால் கொலம்பியாவின் கதிதான் ஆகியிருக்கும் என்று சொல்கிறார்கள்.

எப்படி இப்படி ஒரு கவனமின்மை நுழைந்தது? பல வருடங்களாகவே நிறைய விஷயங்களில்போதிய கவனம் செல்லவில்லை என்கிறது இந்தச் செய்தி. "போகிற வரைப் போகட்டும்" என்ற மனோபாவத்தில், " இதுவரைப் பழுதாகாவிட்டால் நோண்டிப்பார்க்க வேண்டாம்; அப்படியே விட்டுவிடு" என்ற ரீதியில் விடப்பட்டுள்ளது என்று இந்தச் செய்தி கூறுகிறது.

இதில் என்ன வேடிக்கை என்றால் கொலம்பியா சிதறலுக்குக் காரணத்தை ஆராய்ந்த குழு, நாஸாவின் கவனக்குறைவும், அக்கறையின்மையும்தான் காரணம் என்று கூறியபின், வேறொரு குழு அமைக்கப்பட்டு நாஸாவின் வாதங்கள் சரிதான் - இந்த ·போர்ம் பிரச்சனையைப் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் - என்ற வாதம் ஏற்றுகொள்ளப்பட்டுவிட்டது.

இப்படியெல்லாம் யோசனை செய்யும்போதே, பொதுவாக சின்ன விஷயங்களைக் கூட அக்கறையாகக் கணக்கில் எடுத்துக்கொண்டு செயல்படுவது போன்ற ஒரு நிர்வாக அமைப்பு உள்ளவர்கள், இப்படிபட்ட ராக்ஷஸ சைஸ் வேலையில் அலட்சியமாக இருப்பார்களா என்று மனசில் ஒரு கீற்று சந்தேகம் வந்துதான் போகிறது. ஆனாலும் நடப்பதைப் பார்த்தால் ஆச்சரியமும், ஆதங்கமும், கோபமும் ஒன்றாக ஒரு கலவை மனசுக்குள் உருவாகிறது. விண்கலத்தில் இருக்கும் "பயணிகளின்" குடும்பங்கள் இந்தச் செய்தியெல்லாம் படித்து எப்படி உணருவார்கள்?