Wednesday, January 05, 2005

இன்று காலையில் உறவினர் ஒருவரை சென்டிரல் ஸ்டேஷனில் விடச் செல்லும்போது வழக்கம்போல் பீச் ரோடில் சென்றோம். சென்னையில் எனக்கு மிகவும் பிடித்த சாலை இது. நீண்ட அகலமான பாதை என்பதோடு கடலை வேடிக்கைப் பார்த்துக் கொண்டே போவது நான் மிகவும் ரசிக்கும் விஷயங்களில் ஒன்று. இன்றும் சாந்தோம் அருகில் வந்தவுடன் ஜன்னல் ஓரமாக நெருங்கி உட்கார்ந்து கடலைப் பார்க்க ஆரம்பித்தவுடன் சட்டென்று ஏதோ வித்தியாசமாக உறைத்தது. கடற்கரை சாலையிலிருந்து எங்கோ தூரத்தில் கடலும் அதற்கு முன்னால் பரந்த மணலும்தான் என் மனதில் பதிந்து போன காட்சி. ஆனால் இப்போது கடல் அலைகள் சட்டென்று நெருங்கி வீசிக்கொண்டிருந்தது. குத்து மதிப்பாக கண்களை பழக்கமான தூரத்தில் ஓடவிட்டவளுக்கு இது ஒரு ஷாக். ரயில் நிலையத்திலிருந்து திரும்பி வரும்போது காரை காந்தி சிலைக்கு அருகில் நிறுத்திவிட்டு சற்று நடக்க ஆரம்பித்தோம்.

சுனாமிக்குப் பின் இப்போதுதான் முதல் முறையாக கடற்கரைப் பக்கம் செல்லுகிறேன். பத்து நாட்களாக சுனாமியின் விளைவுகளைப் படித்தும் தொலைக் காட்சியில் பார்த்தும் இருந்தாலும் இன்று நேரில் இந்த கடலின் அருகாமையைப் பார்த்தபோது சட்டென்று முதுகுத் தண்டில் சிலீரென்றது. நான் எப்போதும் பெரிதும் ரசிக்கும் கடல் அலைகள் இன்று மனதில் ஏனோ ஒரு பயத்தைத் தோற்றுவித்தன. நானா அப்படி பொங்கி எழுந்தேன்? என்று ஒன்றும் தெரியாத அப்பாவியாக இன்று அலைகள் வழக்கம்போல் எழும்பிய வண்ணம் இருந்தன. கடற்கரையில் ஆங்காங்கே பலர் முன் போல் நடந்து கொண்டும் உடற்பயிற்சி செய்து கொண்டும் இருந்தனர்.

கடல் நன்றாகவே முன்னுக்கு வந்திருந்தது. வழக்கமாக கால் புதையும் மண்ணில் பத்து நாட்களுக்குப் பிறகும் இன்னும் ஈரம். காந்தி சிலையின் கீழ் இருக்கும் பூங்காவில் அலைகள் வந்து போன அடையாள்ம். உப்பு படிந்த நடைபாதை / சாலை - எல்லாம் நடந்து முடிந்த பிரளயத்திற்கு மௌன சாட்சிகள்.
காலை மணி 6.40. கிட்டதட்ட இதே நேரம் பத்து நாட்கள் முன்பு...... எங்களைப் போல் இன்னும் சிலரும் கடலைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தனர் - மௌனமாக - கண்களில் மிரட்சியோடு. உடற்பயிற்சி செய்துகொண்டிருந்த ஒருவர் அலைகள் தாக்கிய விதத்தை யாரிடமோ சொல்லிக் கொண்டிருந்தார்.
மனசில் சொல்லத்தெரியாத சங்கடம் வந்து உட்கார்ந்து கொண்டது. எவ்வளவு பேர் எப்படி எல்லாம் தவித்தார்களோ? அதுவும் எங்கேயோ வெளியில் சுற்றிவிட்டு ஊர் திரும்பி இப்படி பார்க்கும்போது நம் மக்கள், நம் ஊர் என்று மனதில் ஒரு பரிவு அதிகமாகவே இருந்ததை உணர்ந்தேன். பூமியின் பெரும்பகுதியைத் தாக்கிய ஒரு விளைவில், இப்படி தோன்றுவது ஒரு சுய நலமான எண்ணமாக இருக்கலாம். ஆனாலும் இயற்கையின் சீற்றம் நம் வீட்டு வாசலில் வந்து இடிக்கும்போது......?

2 comments:

ரவியா said...

//இப்படி தோன்றுவது ஒரு சுய நலமான எண்ணமாக இருக்கலாம். ஆனாலும் இயற்கையின் சீற்றம் நம் வீட்டு வாசலில் வந்து இடிக்கும்போது......?
//

it is quite natural !

b said...

You write really beautiful especially your language(tamil) is clear and nice. presentation is also very good. just today i saw your blog. this is one of the best tamil blogs. do write more. regards.