Monday, January 31, 2005

சசியின் டைரி பதிவில், அழிந்து கொண்டிருக்கும் தமிழக வரலாறு என்று எழுதியிருந்தார். அவர் கவலையில் நியாயம் இருக்கிறது. இந்த வாரம் ஹிந்துவில் வந்த கட்டுரை நல்ல யோசனைகளைக் கொடுத்துள்ளது. இந்தப் புகழ் பெற்ற பயணக் கட்டுரையாளர்கள் இருவரும் ( இந்தியர்தாம்) நம் கண்காட்சியகங்களை, நமது பாரம்பரியமும், சரித்திரமும் நன்றாக விளங்கும் வண்ணம் மாற்றியமைக்க வேண்டும் என்று எழுதியுள்ளனர் - மற்ற நாடுகளில் உள்ள கண்காட்சியகங்களை மேற்கோள் காட்டி. ஒரு முறை மதுரை கண்காட்சியகத்தில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பொருட்கள் தூசியும் தும்பையுமாய், கிழிந்த கோலத்தில், அழுக்காய் வைத்திருந்த நிலையைப் பார்த்து மிகவும் மனம் வருந்தினேன். மதுரையில் மட்டுமல்ல. பல இடங்களில் நமது கண்காட்சியகங்கள் மிக பரிதாபமான நிலையில்தாம் உள்ளன. மைசூரில் அரண்மனை வைத்திருந்த விதத்தைப் பார்த்தபோதும் என் மனதில் இப்படிதான் ஓர் ஆயசம் வந்து உட்கார்ந்து கொண்டது. தமிழ்நாட்டு அரண்மனைகள் எந்த நிலையில் உள்ளன?
எதிர்கால தலைமுறையினருக்கு - ஏன், இன்றைய தலைமுறைக்கே கூட - நமது சரித்திரம் தெரிந்திருப்பது அவசியம். இது பாடப்புத்தகங்களினால் அல்ல. இந்த மாதிரி கண்காட்சியகங்களினால் சரித்திரத்தையும் விஞ்ஞான உண்மைகளையும் நன்றாக மனதில் பதிய வைக்க முடியும். இந்தக் கட்டுரையாளர்கள் கட்டுரையின் ஆரம்பத்தில் சொல்லியிருப்பதுபோல் மகாபலிபுரட்தில் சிற்ப வேலைப் பாதியில் நின்றதற்கு "கடல் கொந்தளிப்பும்" ஒரு காரணமாக இருக்கலாமோ?

கற்சிற்பங்களில் உள்ள "கங்கையின்" வருகை இதைத்தான் குறிக்கிறதோ என்ற கேள்வி யோசிக்க வைக்கிறது. ஏற்கனவே பூம்புகார் "கடல் கொண்டதும் சுனாமியாக இருக்கலாம் என்ற சிந்தனை சுழன்றுகொண்டிருக்கிறது. இப்படி ஒரு வேளை பல சரித்திர அனுபவங்கள் இருந்தும் இன்றைய தலைமுறையான நமக்கு இதைப் பற்றி தெரியாமல் போய்விட்டதே. யாரோ ஒரு பேட்டியில் சொன்னார்; "சுனாமி வருகிறது என்றால், "எங்கே..எங்கே.. என்று கடற்கரைக்கு வேடிக்கைப் பார்க்க போவார்கள் நம்ம ஜனங்கள்" - சரித்திர அறியாமை அழிய வேண்டுமானால் கண்காட்சியகங்களின் தரம் உயர்வது - சரித்திர உண்மைகள் மக்களை சென்றடையும் வண்ணம் செய்வது மிக முக்கியம். தொழில் நுட்ப வசதிகள் உள்ள இந்த காலத்தில் சரித்திரங்களை நிஜம் போல் காட்டுவது கஷ்டமில்லையே? முப்பரிமாண சித்தரிப்புகள் சுவாரசியமாகவும் இருக்கும் நெஞ்சில் நீண்டு நிற்கும்.

Museum என்றவுடனே, " அதாங்க, அந்த செத்த காலேஜ்" என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். இன்று அருங்காட்சியகங்கள் இருக்கும் நிலையைச் சரியாக சித்தரிக்கும் பெயர் !!

No comments: