Saturday, January 29, 2005

காலையில் காபி சாப்பிடும்போது கையில் செய்தித்தாளை வைத்துக் கொண்டு படிக்கும் அனுபவம் இருக்கிறதே அதற்கு இணை ஏதும் கிடையாது. ( காலையில் காப்பி கோப்பையை எடுத்துக் கொண்டு கணினி முன்னால் உட்காருபவர்கள் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.) செய்திகளைப் பக்கம் பக்கமாக அலசி நிதானமாக டேபிளில் பரத்தி வைத்துக் கொண்டு அல்லது தரையில் உட்கார்ந்து கொண்டு படிப்பது சுவாரசியம்தான். சாப்பாடு தயாராகிவிட்டதா? பரவாயில்லை. பேப்பரை நாலாக மடித்து டேபிளில் தட்டுப் பக்கத்தில் வைத்துக் கொண்டு சாப்பிட்டுக் கொண்டே படிக்கலாம். அட வெளியே செல்ல நேரமாகிவிட்டதா? அதனால் என்ன? அந்தப் பேப்பரை அப்படியே மடித்து கையில் சுருட்டிக்கொண்டு ( கஷ்கத்தில் அடக்கி கொண்டு?) புறப்பட வேண்டியதுதான். பஸ்ஸில் / ஆட்டோவில் / காரில் ( அதாவது ஓட்டுனர் சீட்டில் வேறு ஒருவர் இருக்கும்போது !) செல்லும்போது விட்ட இடத்திலிரூந்து தொடரலாம். படித்துமுடித்துவிட்டால், சமயத்தில் இது விரித்து உட்காரவும் பயன் படும். ரயில் பயணங்களில் துடைக்கும் "துணி"யாகவும் பயன்படும். மின்சாரத் தடங்கல் போன்ற தொழில் நுட்ப தடங்கல்கள் எதுவும் குறுக்கிடாமல் செய்திகளை உள் வாங்கிக்கொள்ளலாம். நினைத்தபோதெல்லாம் திரும்பத் திரும்ப படிக்கலாம். கண்கள் இரண்டாம் பத்தியைப் படிக்கும்போதே பக்கத்து பக்கத்தில் கொட்டை எழுத்தில் உள்ள வேறு செய்திக்குத் தாவலாம். ( எலியை அமுக்கிவிட்டு "இறங்குமா" இறங்காதா" என்று ஸ்கிரீனையே முறைத்துக் கொண்டிராமல்...!) வாசலில் பேப்பர்காரர் போடும் பேப்பரை எடுத்துவருவதோடு நம்ம வேலை முடிந்தது. இதெல்லாவற்றையும்விட கருப்பு வெள்ளையாக அச்சில் படிக்கும்போது நிறைய விஷ்யங்கள் இன்னும் நன்றாக புரிகிறார்போல் இருக்கு. ஹ்ம்ம்... இப்படியெல்லாம் எழுதியதால் மூத்த தலைமுறை லிஸ்டில் சேர நானும் தயாராகிக் கொண்டிருக்கிறேன் என்று நினைத்துவிடாதீர்கள்! நான் இன்னும் கணினி வழி செய்திகளைதான் பெரும்பாலும் நம்பியிருக்கிறேன்.

இருந்தாலும் இன்று - ஜனவரி 29 - Newspaper day என்று கொட்டையாக செய்த்தாளில் போட்டிருக்கிறார்களே. குறைந்த பட்சம் ஒரு பிறந்த நாள் வாழ்த்து சொல்லி நீடூழி வாழ்க என்று சொல்ல வேண்டாமா? அதான் செய்தித்தாளின் மகிமையை மேலே அப்படி சிலாகித்துள்ளேன்.

செய்தித்தாளின் மகிமை இன்னும் பல வருஷங்களுக்கு மங்காது என்று 9 வருடம் முன்பு சிங்கப்பூரில் நடந்த ஒரு மாநாட்டில் கூட பேசப்பட்டது. (Asian Newspaper Publishers Conference). இதைப் பற்றிய என் பழைய செய்தி ஒன்றை இங்கே மறுபதிப்பு செய்துள்ளேன்.

அந்தக் காலத்திலேயே, செய்திதாள் என்பது காணாமல் போயிடுமா என்றெல்லாம் கவலைப் பட்டார்கள். அதெல்லாம் ஆகாது என்று சமாதானம் சொல்லிக் கொண்டார்கள். செய்தித்தாள் ஏன் அவ்வளவு சீக்கிரம் மறையாது என்று சிங்கப்பூரில் அன்று பேசியவர்கள் சொல்லிக்கொண்ட காரணங்களில் எது சரியோ இல்லையோ ஒன்று மட்டும் சத்தியம். அதுதான் செய்தியின் விலை. மிஞ்சிப் போனால் 2 அல்ல்து 3 ரூபாயில் பக்கம் பக்கமாக செய்திகள் வீட்டு வாசலில் வந்து விழும்போது, அதே பக்கங்களை இணையத் தொடர்புக்கும் கணினிக்கும் செலவழிக்க அவ்வளவு சுலபமாக மனசு வந்துடுமா? உலகெங்கிலும் இன்னும் செய்தித்தாள்கள் நல்ல ஆரோக்கியமாக இருக்க இது ஒரு முக்கிய காரணம் என்று நினைக்கிறேன்.

இதே மாநாட்டில் Online Newspaper காலமும் காலாவதியாகி, செய்தி என்பது பாக்கெட்டில் போட்டுக்கொண்டு விரும்பிய இடத்தில் சௌகரியமாக எடுத்துக் கொண்டு போக, உட்கார்ந்து படிக்க தோதாக ( நம்ம அச்சு செய்தித்தாள் மாதிரி !) ஒரு குட்டி மாத்திரை சைஸ் உருவத்தில் இருக்கும் என்று அப்பவே தொழில் நுட்ப வாத்யார்கள் எல்லாம் சொன்னார்கள். அந்த ஆரூடம் எல்லாம் இப்போ என்ன ஆச்சு என்று தெரியலை. செய்திதாளுக்கு இணையாக Online Newspapers அதே ஆரோக்கியத்தோடு சுற்றி கொண்டிருக்கிறது. நேரம், சௌகரியம், இடம், தேவை, இவற்றைப் பொறுத்து இரண்டுக்கும் தேவை இருந்து கொண்டுதான் இருக்கிறது. தண்டவாளம் போல் இரண்டும் சம வேகத்தில் ஓடிக்கொண்டிருக்கின்றன.

இன்னும் பல தலைமுறைகளுக்கு ஓடும் என்பது என் ஆருடம் :-)

No comments: