Thursday, October 06, 2011

ஸ்டீவ் ஜாப்ஸ்......

விஞ்ஞான ரீதியாகவோ அல்லது சமூகத்தில் பெரிய சாதனைகள் புரிந்தோ, பெரிதளவில் மனித வாழ்வில் மாற்றங்கள் ஏற்படுத்தும் மேதைகளும் ஒரு விதத்தில் கடவுள் தன்மை கொண்டவர்களோ என்று சில சமயம் எனக்குத்தோன்றும்..... தங்கள் மனதில் தோன்றும் ஒரு ஒளியை நோக்கி அசராமல், தளராமல் தொடர்ந்து தங்களுக்கு சரியென்று தோன்றும் திசையில் பயணிக்கும் இவர்கள் தங்கள் உள்ளுணர்வின்படி செயல் புரிந்து சாதனைகள் செய்கிறார்கள்.

அப்படி என்னை மிகவும் அசத்தியவர்களில் ஒருவர் ஆப்பிளின் ஸ்டீவ் ஜாப்ஸ்.  பலவிதங்களில் அவர் வாழ்க்கையில் அசத்தியிருந்தாலும்,  அதில் மகுடம் வைக்கத்தகுந்தது - ஞான ஒளி தேடி இந்தியா வந்துவிட்டு,  பின்னர் இங்குள்ள நிலையைப் பார்த்து ஏமாற்றம் அடைந்து - நீம் கரோலி பாபாவும், (இவரைத் தேடித்தான் இந்தியா வந்தார் -  70 களில்) கார்ல்மார்க்சும் சேர்ந்து சாதித்ததைவிட தாமஸ் எடிசன் அதிகம் சாதித்தார் என்று தெளிந்து தன் ஊருக்கு  திரும்பிப் போய், தொழில்நுட்பத்தில் முழு மூச்சாக இறங்கி, ஆப்பிளை ஆக்கினார் பாருங்க....... அங்க நிக்கிறார்.....

இவரின் மறைவு, கணினி பயன்படுத்தும் ஒவ்வொருவரையும் ஏதோ ஒருவிதத்தில் நிச்சயம் தொடும்.


2005 ல் ஸ்டான்போர்ட் பல்கலைகழக பட்டமளிப்பு விழாவில் அவர் நிகழ்த்திய உரையைக் கேட்டபின் நான் அன்று  பதிந்த பதிவிலிருந்து  சில வரிகள்.

///ஆப்பிள்காரர் பேச்சு உண்மையில் ரொம்ப சுவாரசியமாகவும் நெகிழ்வாகவும் இருந்தது. சில பொன் துளிகள்:

  • நான் எந்தப் பட்டமும் பெற்றதில்லை. நான் ஒரு drop out. உண்மையில், பட்டமளிப்பு என்று நான் பங்கு கொள்ளும் விழா இதுவாகதான் இருக்கும்.

  • உங்களுக்கு எதுப் பிடிக்கிறதோ அதில் நம்பிக்கை வைத்து செய்யுங்கள். பிடித்தது எது என்று இன்னும் பிடிபடவில்லையென்றால் அது என்ன என்று தேடுங்கள். எனக்கு என்ன வேண்டும் என்று எனக்கே தெரியவில்லை என்று கிடைத்ததை வைத்துக் கொண்டு செட்டில் ஆகிவிடாதீர்கள். உள் மனசு சொல்வதைக் கேட்கப் பழகுங்கள். அதன்படி நடக்க முயலுங்கள்.

  • சென்ற வருடம் எனக்கு கான்ஸர் என்று முடிவானபின் என் வாழ்நாள் சில மாதங்களே என்றனர். அப்போதுதான் என் மனசில் நான் இன்னும் செய்ய வேண்டிய வேலைகள் பாக்கி நிறைய இருப்பது புரிந்தது. வாழ்க்கையில் நம் எல்லோருக்கும் பொதுவான, நிச்சயமான ஒன்று இறப்பு. இது எப்போது வேண்டுமானாலும் நிகழலாம் என்று புரிந்து கொண்டால் நம்மில் இருக்கும் பாதி குழப்பங்கள் தீர்ந்துவிடும். நாளை இறந்துபோய்விட்டால் என்ற கேள்வியை உங்கள் முன் வைத்துக் கொண்டால் பல சாதனைகளை உங்களையறியாமலேயே செய்துவிடுவீர்கள்.

  • உங்களுக்கு என்று பாதை வகுத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு என்று வாழ்க்கை குறிப்பிட்ட அளவுதான். அதையும் பிறர் சொல்படி வாழ்ந்து வீணாக்காதீர்கள். புள்ளிகள் வைப்பது முக்கியம். அவற்றை எப்படி இணைப்பது என்று குழம்பாதீர்கள். புள்ளிகள் வைத்துவிட்டால் கோடுகள் தானே வந்து சேரும். ///////////

ஹ்ம்ம்..... என்ன ஒரு பிரமாதமான மனிதர் !!!


1 comment:

Sugumarje said...

Nice Recalls :)