Sunday, March 29, 2009

ஒரு மணி நேரம்; 60 நிமிடங்கள்; 360 வினாடிகள்

மணிக்கணக்கில் மின்சாரத் தடை இருந்து பழக்கப்பட்டவர்கள்தாம் நாம். அதனால்
ஒரு மணி நேரம் மின்சாரம் இல்லாம இருக்கிறது அப்படி ஒண்ணும் கஷ்டமான விஷயம் இல்லேதான். ஆனாலும் ஒவ்வொரு வினாடியும் எப்படி போகிறது, கடிகார முள் எப்படி நகருகிறது என்று நன்றாக கவனிக்க முடிந்தது - இந்த பூமிக்கான சில மணித்துளிகளில் :-)

தவிர, மின்சாரம் தடையின்றி கிடைக்க Inverter, ஜெனெரேடர் என்று வசதிகளுடன் பழகிவிட்ட இந்த நாளில் நாம்பளாகவே மின்சாரத்தை ஒரு மணி நேரம் நிறுத்தி வைக்கிறப்போ, அது கொஞ்சம் வித்தியாசம்தான்.

கப்யூடரிலிருந்து எல்லாத்தையும் அணைச்சிட்டு, இரண்டு மெழுகுவர்த்தியும் பனை ஓலை விசிறியுமா சோபாவில் உட்கார்ந்து கடிகாரத்தை பார்த்தேன்... சே... இதென்ன பைத்தியக்காரத்தனம்/ இப்பதானே அணைச்சிட்டு வந்து உட்கார்ந்தோம்? டேபிளின் மேல் கையில் கிடைச்ச பத்திரிகையை எடுத்து புரட்ட ஆரம்பிச்சேன். ஹு..ஹும். மங்கலான வெளிச்சத்தில் படிக்க சுவாரசியமாகவே இல்லை. பத்திரிகையை மூடி வைத்தேன்.

ஆனா, ஒண்ணுமே செய்யாம ஒரு மணி நேரம் சும்மாவே எப்படி உட்கார்ந்து இருப்பது? அப்பதான் 24 மணி நேரமும், உபயோகமோ இல்லையோ ஏதோவொரு 'செய்கையில்' நாட்கள் ஓடிவிடுவது புரிந்தது. அந்த காலத்தில் முனுவர்களின் தவத்துக்கு கடவுள்கள் கேட்ட வரம் கொடுத்தாராம் என்றால், ஏன் மாட்டாராம்? ஒன்றும் செய்யாமல் ஒரு மணி நேரம் இருப்பதே பிரம்ம பிரயத்தனம் என்றால், நாட் கணக்கில் இருப்பது சூப்பர் சாதனை அல்லவா? இன்னிக்கு அப்படி யாராவது நாட்கணக்கில் "சும்மா" இருந்தால் ஒலிம்பிக் தங்க மெடலே கொடுத்தாலும் தகும்!!!

பனை ஓலை விசிறியை விசிறிக்கொண்டு என்ன செய்யலாம் என்று நோட்டம் விட்டபோது, போன் கண்ணில் பட்டது. ஆஹா.... போன் பேச வெளிச்சம் வேண்டாம் - யாரையாவது அரட்டைக்கு இழுக்கலாம் என்று எழுந்த போது, உள்ளே ஒரு அசரீரி. அதென்ன அப்படி ஒரு கட்டுப்பாடு இல்லாம? ஒன்றுமே செய்யாமல், யாருடனும் பேசாமல் ஆத்மார்த்தமாக சிந்தித்துக்கொண்டு ஒரு மணி நேரம் உன்னால் இருக்க முடியாதா?

ஹ்ம்ம்... உள்ளே எழுந்த சவாலை ஏற்றுக் கொண்டு பேசாமல் அமர்ந்தேன். ஆனால், உட்கார முடியவில்லை. எழுந்து நடந்தபோது ஜன்னல் வழியே சிறிது நேரம் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன். ஆஹா... இது சுவாரசியம் என்று தோன்றியதில் பனை ஓலை விசிறி சகிதம் நாற்காலியை இழுத்துப் போட்டுக்கொண்டு செட்டில் ஆகிவிட்டேன். வீட்டருகில் இருந்த மரம் சமீபத்தில்தான் விழுந்திருந்தது. ( மற்றொரு இழப்பு பூமிக்கு) இப்போ கூடத்து ஜன்னல் வெளியே பெட்ரோல் பங்கும், சாலை சந்திப்பும் நன்றாகவே தெரிந்தது. சரி; எத்தனை வாகனங்கள் சிவப்பு விளக்கை தாண்டுகின்றன என்று பார்க்கலாம். ஆஹா...அதிசயம்; எல்லா வாகனங்களும் கனக்கச்சிதமாக சிவப்பில் நின்று, பச்சையில் ஒழுங்கா போய்கிட்டு இருந்தது. சே... இப்படி சுவாரசியமில்லாம ஓட்டறாங்களே' னு நகரும் வாகனங்களையும் பெட்ரோல் போட இறங்கும் ஓட்டுனர்களையும் பார்த்தபடி மனம் எங்கோ மேய்ந்தபடி இருந்தது.

எத்தனை விதமான வண்டிகள்? மனிதர்கள்? - அவர்கள் ஓட்டும் / பயணிக்கும் வண்டிகள், அவர்கள் எண்ணங்களையும், கவலைகளையும், சந்தோஷங்களையும் சுமந்து போகின்றனவோ?

நம்மைத் தாண்டி வெளி உலகை கவனிக்கும் ஒவ்வொரு சமயத்திலும் உணரும் அதே உணர்ச்சி மீண்டும் எழுந்தது; நானும் என் கவலைகள்/ மகிழ்ச்சிகள்/ என்று இருக்கும் "நான்' எவ்வளவு மிகச் சிறியது - insignificant - ஒரு விதமான முக்கியத்துவமும் இல்லாத - பிரமாண்டமான மக்கள் சமுத்திரத்தில் எத்தனை சிறிய ஒரு நீர்த் துளி... என்ற உணர்வு......

ரயில் பயணம் ஞாபகம் வந்தது. டில்லிக்கும் சென்னைக்கும் அடிக்கடி பயணம் செய்யும்போது இப்படி ஜன்னல் ஓரமாக உட்கார்ந்து வெளியே "ஓடும்" உலகை வேடிக்கை பார்ப்பதில் எனக்கு அலாதி ஆனந்தம். நீண்ட இரண்டு நாள் பயண அலுப்பே இதில் மறைந்துவிடும் என்பது மட்டுமல்ல. அந்த ரயில் ஜன்னல் நேரங்கள் என்னுடையவை - சிந்திக்க, அசை போட, திட்டம் இட, என்னைச் சுற்றி 'ஓடும்" உலகை கவனிக்க என்று... பல விதங்களில் அந்த ரயில் பயண தனிமையை ஆவலுடன் ஓரளவு எதிர்பார்ப்பதும் உண்டு.

இந்த 'பூமிக்கான மணித்துளிகள்" மீண்டும் என் ரயில் ஜன்னல் கணங்களை கொண்டு வந்து கொடுத்தாற்போல் இருந்தது.

ஆனாலும் ஒரு மணி நேரம் முடிந்து, ஸ்விட்சை தட்டி விளக்கு போட்டு, மெழுகுவர்த்தியை எனக்கு நானே ஹாப்பி பர்த்டே சொல்லி அணைத்து ( இவற்றை செஞ்ச வரிசையை கவனிக்கவும் - முதல்லே மின்சார விளக்கு போட்டுட்டு, அப்புறம்தான் மெழுகுவர்த்தியை நிறுத்தணும்....!!!) உடனேயே, "நான்" "என்" உலகிற்கு திரும்பின போது "அப்பாடா...." என்று சந்தோஷமாகதான் இருந்தது :-)

Saturday, March 28, 2009

பூமிக்கு ஒரு நன்கொடை

நன்கொடை 'னு செஞ்சோம் என்றால் நம்ம கையை விட்டு பணம் கொடுக்கணுமில்லையா? ஆனா இந்த நன்கொடை செஞ்சா நமக்கு பணம் வரும்படி....!! அதனாலே இந்த நன்கொடை இன்னிக்கு இரவு 8.30 லேர்ந்து 9.30 வரை செய்யப்போறேன். நீங்களும் செய்யலாமே...!!! பூமியை "காப்பாற்றிய" மாதிரியும் ஆச்சு - ஒரு மணி நேரம் மின்சார செலவும் மிச்சம்.... Money saved is money earned இல்லையா?!!! :-)

Sunday, March 01, 2009

ஆஸ்கார் விருதும், பலன் எதிர்பாரா உழைப்பும்

ஏ ஆர் ரஹ்மானின் ஆஸ்கார் விருது பாராட்டு மழையின் நடுவே நிறைய விமரிசனங்களும் பொழிந்து கொண்டுள்ளன - அமிதாப் பச்சனின் விமரிசனம் உள்பட. இந்தியா is the flavour of the day என்ற நிலையில், இந்திய களம் ஒன்று அமைத்து செய்தால் வெற்றி பெறும் என்று எழுதப்படாத விதி உருவாகியிருக்கிறது. அதுவும் இந்தியாவின் வறுமை / ஊழல் மற்றும் இதர நலிந்த பக்கங்கள் என்ற ரீதியில் படம் எடுத்தாலோ / புத்தகம் எழுதினாலோ ( புக்கர் விருதைப் பெற்ற அரவிந்த் அடிகாவின் White Tiger - ) நிச்சயம் வெற்றி என்று ஒரு பிம்பம் ஏற்பட்டுள்ளது.

ஆனால், விமரிசங்களுக்கப்பால், இந்தியர் ஒருவரின் திறமை உலகளவில் அங்கீகரிக்கப்ப்ட்டதில் நிச்சயம் நான் பெருமை கொள்கிறேன். நான் இன்னும் படம் பார்க்கவில்லை. ஆனால், படம் முழுதும் மின்சாரம் பாய்ந்தாற்போல் ஒரு விறுவிறுப்பும், அடிப்படை மனித சுபாவங்களையும் படம் பிடித்து காட்டுகிறது என்று கேள்விபட்டேன்.

எப்போது ஒரு படைப்பு ஜாதி, நாடு, மொழி என்று விளிம்புகளைத் தாண்டி பலதரப்ப்ட்ட மக்களை சென்று அடைகிறதோ, அந்தப் படைப்பு நிச்சயம் உலக தரம் வாய்ந்தது. ரெஹ்மானின் இசை அதை சாதித்து இருக்கிறது என்பதில் நிச்சயம் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

ரெஹ்மானின் ஒரிஜினல் பாடலுக்கான ஆஸ்கார் விருதை பகிர்ந்து கொள்பவர், பாடலாசிரியர் குல்சார். ரெஹ்மான் மழையில் இவரை அனேகம் பேர் மறந்து போனார்கள்!! டைம் ஆப் இந்தியாவில் அவரது பேட்டி குறிப்பிடத் தகுந்ததாக இருந்தது. ஸ்லம் டாக் என்ற பெயர், under dog என்று சொல்வது போலதான் என்கிறார். இந்தியாவின் வறுமையை படம் பிடித்து காண்பிப்பது சரியா என்ற கேள்விக்கு, அதிலென்ன தவறு என்று கேட்பவர், சத்யஜித் ரே பற்றியும் இப்படித்தானே சொன்னார்கள்' வறுமை என்பது வாழ்க்கையில் ஒரு அம்சம். இந்தப்படம், வாழ்க்கையிலிருந்து ஒரு பகுதியை எடுத்துக் காட்டுகிறது; அவ்வளவுதான் என்கிறார். "These critics are missing the point that Slumdog, just like Pather Panchali, isn’t about poverty. It’s a slice of life. The best of cinema, like the best of literature worldwide, including Dickens, has portrayed poverty, because it’s a part of life. If you fail to see that, it’s your limitation. " என்பது இவரது கருத்து.

அர்த்தமுள்ள வாதம்.

சர்ச்சைகளுக்கும் பாராட்டுகளுக்கும் அப்பால் ரெஹ்மான் சொல்லிய இரண்டு கருத்துக்கள் மிக முக்கியமானவை. ஆஸ்கார் விருதை பெற்றுக் கொண்டு அவர் கூறிய, " அன்பு, வெறுப்பு என்ற இரு பாதையில் நான் எப்போதும் அன்பைத் தேர்வு செய்தேன்...." என்ற வாக்கியம் இன்று பட்டி தொட்டிகளிலெல்லலம் முழங்குகிறது. வெறும் கவர்ச்சியான வாக்கியமாக இல்லாமல், அவர் அனுபவித்து, உணர்வு பூர்வமாக சொன்ன அந்த வார்த்தைகளின் புரிதல், பத்தில் ஒரு பங்கு பேரிடம் போய்ச் சேர்ந்தால் கூட போதும் - நம் சமூக வாழ்க்கையில் அதிசயத்தக்க மாற்றங்கள் நிகழும்.

இரண்டாவதாக அவர் சொல்லியது வெற்றியைத் தேடி உழைக்கும் பல இளைஞர்கள் கவனிக்கப்பட வேண்டிய அம்சம்.

விருது கிடைக்க வேண்டும் என்ற எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல், இயல்பான தன்னுடைய ஆர்வத்திலும், உழைப்பின் மேலும் நம்பிக்கை வைத்து, கடமையே கண்ணாக உழைப்பது அவரது சுபாவம். "I’ve realised when you work without thinking about awards and money, it pays off” என்ற அவர் கருத்தில் வெற்றிகரமான வாழ்க்கையின் அடிப்படை தத்துவம் அடங்கியுள்ளது.