Monday, February 26, 2007

லாலுஜி, மிக்க நன்றிஜி :-)

ஒரு காலத்துலே ஏகமா நஷ்ட்டத்துலே இருந்தாங்க.

இந்த வருடம் ரூபாய் 20,000 கோடி லாபமாம். போன வருடத்தை விட இந்த வருடம் நிறைய விலைக்குறைப்பு வேறு. எப்படிங்க இப்படி லாபம் காட்டுறீங்க? ஆனாலும், நம்பள மாதிரி சாதாரணவங்களுக்கு ரொம்பவே சந்தோஷம். இதெல்லாம் விட எனக்கு என்ன ரொம்ப சந்தோஷ்ம்னா.... 45 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு 3 தட்டு வண்டியிலே கீழ் இருக்கை /படுக்கை வசதி ஒதுக்கப்படுமாம்.

இந்த ஒரு விஷயத்துக்காக,

ரயில் மந்திரி லாலுஜி, மிக்க நன்றிஜி :-) ஒவ்வொருதடவை ரயில் பயணம் ரிசர்வேஷன் செய்யும்போதும் மேல்தட்டுதான் கிடைத்தது என்று செய்துவிட்டு, அங்கே போய் - சின்ன பசங்ககிட்ட அய்யா, அம்மான்னு கெஞ்சி கீழ் இருக்கையை கேட்டு வாங்கி - ஹ்ம்ம் இனி இந்த தர்ம சங்கடம் இல்லே... ஒரு வேளை லாலுஜி குடும்பத்துலேயும் யாருக்காவது முழங்கால் மூட்டு வலி இருக்குமோ??? :-)

பின்னால் சேர்த்தது.

திரு அளித்த கருத்துக்கு பதில் எழுத ஆரம்பித்த விஷயம் இன்னும் பரவலாக பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும் என்று தோன்றியதால்டைங்கே மீண்டும் கொஞ்சம் சேர்த்து இருக்கிறேன்.

சென்டிரல் ரயில்வே ஸ்டேஷன் சமீபத்துலே போயிருக்கீங்களா? ஓரளவு சுத்தமாகவே இருக்கு - பிளாட்பாரங்கள் மட்டும். ஆனா வெளியே இன்னும் சகிக்க முடியாமல்தான் இருக்கு. அதுவும் அந்த கூவம் பாலம் அருகில். வாலாஜா சாலை பக்க நுழைவாயில் போன்ற இடங்கள். ரயில் பாதைகள் - ஹ்ம்ம்.. கேட்கவே வேண்டாம்.

ரயிலிலும், பஸ்ஸிலும் பயணம் செய்பவர்கள்தாம் ஆகட்டும், பிளாஸ்டிக் கவர்கள், மிஞ்சிய காப்பி, இன்னும் வகையறா, வகையறா - நின்ற இடத்திலேயே கொட்டுவதைப் பார்க்கும்போது.... நற..நற... ( என் பற்கள் உடையும் சப்தம் கேட்டதா?)

சென்ற வாரம் இபப்டித்தான் பெங்களூரில் என் அருகில் பிளாட்பாரத்தில் உட்கார்ந்திருந்த ஒரு இளைஞன் தான் குடித்துக்கொண்டிருந்த பிளாஸ்டிக் காபி கப்பை நடந்து போய் ரயில் பாதை இடுக்கில் போட்டுவிட்டு வந்தான். என் அருகில் மீண்டும் அமர்ந்து செல் போனில் பேசியவனை ஒரு நிமிடம் கூர்ந்து பார்த்தேன். பெங்களூரில்லேதோ IT நிறுவனத்தில் வேலை செய்பவராக இருக்கும் என்று தோன்றியது. பல நாடுகள் பயணம் செய்திருப்பார். அங்கேயெல்லாம் இப்படி போட்டு இருப்பாரா என்று தோன்றியது. அடுத்த வினாடி அவரிடம் பேச ஆரம்பித்து விட்டேன். " உங்களுக்கு ஒரு வேண்டுகோள்." என்றேன்.

"ஆங். சொல்லுங்க."

" நீங்க இப்ப காபி கப்பை ரயில் பாதை இடுக்கிலே போட்டதை பார்த்தேன். வெளி நாட்டுலே இப்படி செய்து இருப்பீங்களா? தயவு செய்து இனிமே இதுபோல் செய்யாதீங்க. இதுபோல் யாராவது செய்வதை நீங்கள் பார்த்தாலும் இனிமேல் நீங்கள் தடுக்க ஆரம்பியுங்கள்" என்றேன்.

அவருக்கு ஒரு வினாடி துணுக்கென்று இருந்தாலும் அடுத்த கணம் மென்மையாக சிரித்து மன்னிப்பு கோரினார். இனி எப்படியிருப்பாரோ தெரியாது. குறைந்த பட்சம் அடுத்த முறை காபி குடித்தவுடன் அவர் கை கொஞ்சம் தயங்கும். குப்பைத்தொட்டி இல்லாத இடங்களில் ஒரு பிளாஸ்டிக் பையை நம் கைப்பையில் வைத்திருந்தால் உள்ளே போட்டுக்கொண்டு, பின்னர் குப்பைத்தொட்டி கண்களில் பட்டதும் போடலாமே?

ரயில்களில் ( பல சம்யங்களில் விமான நிலையங்களிலும் கூட) கழிவறைகளிலிருந்து வரும் துர்நாற்றம் நம் மனசை நோகச்செய்து விடும். நிர்வாகங்கள்தாம் இந்த இடங்கள் பராமரிப்பிற்கு காரணம் என்றாலும் ஓரளவு நம் ஜனங்களும் காரணமே. ஆரம்பக் கல்விக்கூடங்களில் எதைக் கற்றுக்கொடுக்கிறார்களோ இல்லையோ, அடிப்படை சுத்த/பத்த விஷயங்களை சொல்லிக்கொடுக்க வேண்டும். கழிவறைகளே இல்லாமல் இருக்கும் நம் சிற்றூர்களிலும் மற்றும் நகர்ப் புறங்களில் வசதி குறைவானவர்கள் இருக்கும் இடங்களிலும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டு சுத்தத்தின் அவசியம் பற்றி விழிப்புணர்வு ஏற்படச் செய்ய வேண்டும். இந்த விஷயத்தில் சுலப் மற்றும் எக்ஸ்னோரா போன்ற தொண்டூழிய அமைப்புகள் செய்யும் சேவைகள் பிரபலப்படுத்தப் பட வேண்டும். ஒவ்வொரு நகர / கிராம வட்டத்திலும் இவை போன்ற அமைப்புகள் ஏற்பட வேண்டும். பொது இடங்களில், குறிப்பாக உணவுப் பண்டங்கள் விற்கப்படும் இடங்களின் அருகாமையில், பொது வாகனங்களில் நிறைய குப்பைத்தொட்டி இருக்க வேண்டும்.

இன்னும் நிறைய "டும்" போட்டுக்கொண்டே போகலாம்.

மற்றொரு விஷயம் - நம் ஊர் விமான நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் நம் சாமான்களை நாமே தள்ளிக்கொண்டு போக வசதியாக ஓரளவு நல்ல தரை. ஆனால் வெளியே வந்ததும் வாகனங்கள் நிற்கும் இடத்துக்கு போக ரொம்ப தூரம் போக வேண்டும் - அதுவும் வழியெல்லாம் குண்டும் குழியும். இதை தவிர்க்க ஆரம்பத்திலேயே உதவிக்கு ஆள் வைத்துக்கொள்ள வேண்டும். அதேபோல் நம்மூரில் பொது இடங்களில் வித்தியாசமான உடல் அமைப்பு பெற்றவர்களுக்காக தனி வசதி - ramp - இருப்பதேயில்லை. பிளாட்பாரங்களுக்கு போக படியேறிதான் போக வேண்டும். சறுக்கு பாதை இல்லாமல் சாமானை தூக்கிக்கொண்டு போவது வேதனை. ஆங்காங்கே " Disabled" என்று பெயர் பலகை மட்டும் இருக்கும் - கழிவுக்கூடம், சில ரயில் பெட்டிகள் என்று. ஆனால் அந்த ரயில் பெட்டியில் ஏறுவதற்கு ஏற்றாற்போல் ramp இருக்காது. இப்போதெல்லாம் புதுக் கட்டிடங்களில் ramp வைக்கிறார்கள். ஆனால் இப்படி வித்தியாசமான உடல் அமைப்பு பெற்றவர்களின் சௌகரியத்திற்காக நாம் செல்ல வேண்டிய தூரம் இன்னும் ரொம்ப தூரம்.

மேலே குறிப்பிட்ட பல "வேண்டும்"கள் லாலுஜியின் கண்களில் பட வேண்டும் என்று ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன். :-)

ஆனாலும், எங்கேயோ இன்னும் இப்படி குறைகள் இருந்தாலும், உலகிலேயே அதிகம் பேர் பயணம் செய்யும் ஒரு ரயில் நிர்வாகம் இத்தனை தூரம் சமாளிப்பதே பெரிய விஷயம்தான்.

14 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நாங்க இளவயசுக்காரங்களா போகும்போது கிடைச்ச சீட்ட கேட்க இப்படி யாரும் வந்துடக்கூடாதேன்னு வேண்டிக்கிட்டே போவோம்.வந்தா கேக்கறதுக்குமுன்னாடியே இளகின மனசு குடுத்துடுவோம்.:-)
லாலுஜி க்கு நன்றி தான் சொல்லனும்.
ஏசிஏழை ரதம் வேற விட்டுருக்காராம்.

Aruna Srinivasan said...

//நாங்க இளவயசுக்காரங்களா போகும்போது கிடைச்ச சீட்ட கேட்க இப்படி யாரும் வந்துடக்கூடாதேன்னு வேண்டிக்கிட்டே போவோம்.//

லட்சுமி,
அப்படீங்களா சமாசாரம்? :-)நானும் இப்படி யோசிச்ச காலம் இருந்ததுன்னு இப்பதான் ஞாபகம் வருது... :-)

//வந்தா கேக்கறதுக்குமுன்னாடியே இளகின மனசு குடுத்துடுவோம்.:-)//

அதான்... நாட்டுலே அப்பப்போ மழை பெய்யுது.... நல்லாயிருங்க :-)

thiru said...

அருணா அக்கா,

லாலுஜீக்கும் முட்டுவலி இருக்கலாம் :). ரயில்களை இன்னும் சுத்தமாக்க முயற்சி செய்தாங்கன்னா நல்லா இருக்கும். கடந்த சில வருடங்களில் ரயில்வே எவ்வளவோ முன்னேறியிருக்கிறது. இந்த வளர்ச்சி தொடர வேண்டும். இதன் பலன் அனைத்து மக்களுக்கும் சென்று சேரவேண்டும். நல்ல திட்டங்களுக்காக லாலுவுக்கு பாராட்டுக்கள்!

Anonymous said...

அருணா கேட்ட பெயரா இருக்கே :-)
இன்னும் நாப்பத்தி ஐந்து ஆகவில்லை என்றாலும், கிடுகிடுவென்று மேலே ஏறும் உடல் இப்படியே
இருக்க, எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன் :-)))))
your old friend

வல்லிசிம்ஹன் said...

அருணா,
நல்ல சேதி.
கீழ் பெர்த்தா இருக்கணுமெ சாமின்னு நினைச்சுப்பேன் ஒவ்வொரு தடவையும்.
ரயில்ல ஏறும்போதே கோச் படி (ஸ்டெப்ஸ்) ப்ளாட்ஃபார்மில தாழ்த்தி இருக்காதான்னும் ஆசைப்படறது உண்டு.
அதுக்கும் ஏதாவது வழி செய்தா தேவலை.

செல்வநாயகி said...

லாலுவுக்கு இந்த விடயத்தில் தாராளமாகப் பாராட்டுக்களை அள்ளி வழங்கலாம்.

அருணா உங்களை அடிக்கடி பார்க்கமுடிவதில்லையே இங்கு:(( திசைகளுக்கு என்ன ஆச்சு? thisaigal.com என்று போட்டால் வரமறுக்கிறதே.

Aruna Srinivasan said...

திரு, உங்களுக்கு எழுதிய பதில்தான் "பின்னால் சேர்த்தது" என்று முன்பக்கம் போட்டுவிட்டேன். :-)

வல்லி, என் "வேண்டும்" லிஸ்ட் எல்லாம் லாலு காதில் விழுந்து சீக்கிரம் எல்லா ரயில் பெட்டிகளிலும் நமக்கு ஏற்றாற்போல் ramp வைக்கப்போறாங்களாம் :-)

செல்வா

ரொம்ப நாளைக்கப்புறம் உங்களை இங்கே சந்திக்கிறதுலே எனக்கும் மிக்க மகிழ்ச்சி. திசைகள் பற்றி அதன் வலைப்பதிவில் அறிவிப்பு செய்திருந்தோமே.... இன்னும் அடுத்த கட்டம் முடிவாகவில்லை. ஏதேனும் முடிவு செய்தால் தெரியப்படுத்துகிறோம்.

Aruna Srinivasan said...

அனானி சார் / அம்மா?

45 வயதுக்குற்பட்ட நீங்க எப்படி "old" ஆக இருக்க முடியும்? பயங்கர "கடி" ? :-)

அதுசரி. 45க்கு கீழே இருக்கும் என் நன்பர்கள் லிஸ்ட் முழுக்க தேட வைக்கிறீங்களே... கொஞ்சம் வெளியேதான் பேர் சொல்றது? அட.. ஒரு Clue வாவது? :-)

Anonymous said...

நண்பன் இல்லை நாற்பத்தி நாலு வயசு நண்பி :-)

Aruna Srinivasan said...

//நண்பன் இல்லை நாற்பத்தி நாலு வயசு நண்பி :-) //

நண்பி, சான்ஸே இல்லே.அம்னீசீயாவோ என்னவோ ? ஒரு வேளை Alzheimer? 55 லேயாவா!! ஹ்ம்ம்.. பேசாம ஒரு மயில் அல்லது போனில் விசுவரூப தரிசனம் கொடுத்து விடுங்கள் :-) அம்பேல் கொடுத்துட்டேன் :-)

Jazeela said...

இரயிலில் பயணித்தேன் நாளாகிப் போச்சு. உங்க பதிவைப் படித்ததும் ஆசை வந்திடுச்சு. ம்ம்ஹும்.

/மேலே குறிப்பிட்ட பல "வேண்டும்"கள் லாலுஜியின் கண்களில் பட வேண்டும் என்று ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன். :-)/// லாலுஜிக்கு ஒரு தனிமடல் எழுதிட வேண்டியதுதானே?

Aruna Srinivasan said...

ஜெஸிலா,

தனி மடல் எழுதியெல்லாம் அப்படி மாறுதல் வந்துவிடுமா என்ன ! :-) பொதுவிலே சொன்னாவாவது கவனம் பெற வாய்ப்புண்டு. குறைந்த பட்சம் தமிழ் வலைப்பதிவுகள் படிக்கும் ரயில் அதிகாரிகள் ?? !!

MyBlog said...

The problem in most places is that,even if you want to put the waste in a proper place,there is no waste bin.
Even in the trains,it would be better if the railways arrange for a waste-bin in each compartment.

Sorry for the comments in english.

PRABHU RAJADURAI said...

my (learning) experience at
http://marchoflaw.blogspot.com/2006/06/blog-post_10.html