Sunday, April 16, 2006

லோக் பரித்ரன்

இது... இது... இதைத்தான் எதிர்பார்த்தேன் ரொம்ப காலமாக......

"அனுபவம் பத்தாது. இவர்களால் என்ன செய்துவிட முடியும்? சிறு பிள்ளைகள்.... சுதந்திரப் போராட்டம் பற்றி / தியாகிகள் பற்றி தெரியுமா? தமிழ் நாட்டைப் பற்றி என்ன தெரியும்? நம் மக்களைப் பற்றி என்ன தெரியும்? Green horns... அரசியலைப் பற்றி என்ன தெரியும் இவர்களுக்கு?" என்றெல்லாம் பெரிய அரசியல்வாதிகளிடமிருந்து விமரிசனங்கள் வரலாம்.

ஆனால் இவர்களின் இந்த ஆர்வம் என்னை பிரமிக்க செய்தது. ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு ஓட்டு வங்கி உள்ளது. இன்னும் சிலர் மாற்றி மாற்றி ஓட்டுப் போட்டு பார்ப்பார்கள். ஆனால் யாருக்குப் போட்டு என்ன பிரயோசனம் நாம மாறவே போறதில்லே.... தேர்தலே ஒரு வேஸ்ட் என்ற ரீதியில் ஈசிச் சேரில் சாய்ந்து கொண்டு அல்லது டிவி பார்த்துக்கொண்டு ஓட்டுச் சாவடி பக்கமே போகாமல் வீட்டிலிருக்கும் ஒரு வர்க்கம் உண்டு. அது கணிசமான சதவிகிதம்.

" இந்த சதவிகிதம்தான் எங்களின் குறி" என்கிறார்கள் இவர்கள்.

அப்படிப் போடு !

படித்தவர்கள், திறமையுள்ளவர்கள், நண்பர்கள் சேர்ந்து ஆங்காங்கே வெற்றிகரமாக பலதுறைகளில் இறங்கும்போது ஏன் அரசியலில் / ஆட்சியில் குதிக்க தயங்குகிறார்கள் என்று தோன்றும். ஆக்கப் பூர்வமான சிந்தனையுள்ள பல இளைஞர்கள் தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் ஆர்வமாக உழைப்பதைப் பார்க்கும்போது இவர்கள் சக்தி பொது வாழ்வில் இன்னும் பரவலாக உபயோகப்படலாமே என்று தோன்றும்.

இதோ குதித்துவிட்டார்கள் இவர்கள்.

மனம் நிறைய வாழ்த்துவோம்.

பின்னர் சேர்த்தது:

லோக் பரித்ரன் பற்றி நான் எழுதியிருந்தது அப்படி ஒன்றும் அது சிலாகிக்க வேண்டிய நிகழ்வு அல்ல என்று சில விமரிசனங்களும் வந்தன. விமரிசகர்களுக்கு ஒரு சிறு விளக்கம்.

ஒரு காலத்தில் சுதந்திரப் போராட்டம் என்கிற ஒரு பொதுத் தாகம் இளைஞர்களை பொது வாழ்க்கைக்கு இழுத்தது. சுதந்திரம் பெற்றோம்; உன்னதமான அரசியல் தலைவர்களைப் பெற்றோம். பின்னர் சுதந்திர இந்தியாவில் எமர்ஜென்ஸி, மொழிப் பிரச்சனை, என்று பல விதங்களில் பொதுத் தாகங்கள் இளைஞர்களை பொது வாழ்விற்கு இழுத்தன. இன்று அப்படிப்பட்ட நாடு தழுவிய இன்னல் / crisis - குறிப்பாக சொல்லும்படி இல்லாவிட்டாலும், ஊழல், நிர்வாக சீர்கேடுகள், மத/ஜாதி வேறுபாடுகள், என்று கண்ணுக்குத் தெரிந்தும் / தெரியாத ஆயிரமாயிரம் பிரச்சனைகள் ஊடுருவி நிற்கும் சமயத்தில் வருங்காலத் தலைவர்கள் என்ற கேள்வி நிரப்படாமலேயே வெற்றிடமாக இருக்கிறது.

இந்த நிலையில் குடும்பம் மற்றும் இதர பின்வாசல்கள் வழியே தலைவர்களாக உருவாவதை நாம் எதிர்க்கிறோம். சினிமா போன்ற அடித்தள மக்களிடம் சென்றடையும் "தலைவர்களை" நாம் பெரிதாக பொருட்படுத்துவதில்லை. இன மற்றும் ஜாதியின் பேரால் தலைவர்கள் உருவாகும் கலாசாரத்தை, இன்னும் ஜாதி பாகுபாடுகள் அதிகரிக்க காரணம் என்ற ஒரே காரணத்தினாலேயே தவிர்க்க நினைக்கிறோம்.

ஆக, தலைவர்கள் உருவாக இன்று பெரிதான / வலுவான ஒரு தூண்டுகோல் - சுதந்திரப்போராட்டம் அல்லது எமர்ஜென்ஸி போன்று - தூண்டுகோல் என்ன? குவியமாக ஒன்று இல்லை. ஆனால் பன்முனைத் தாக்குதல் நடத்த ஆயிரம் காரணங்கள் உள்ளன. பசி, ஏழ்மை, என்று ஒரு பக்கமும் அதீத செல்வம் என்று இன்னொரு புறமும் சமூக இடைவெளி விரிந்து கொண்டே போகிறது. ஊழல் நிர்வாகச் சீர்கேடுகளினால் இன்னொரு பக்கம் நாம் தினசரி வாழ்க்கையில் அல்லல்கள் பல சந்திக்க நேருகிறது. மக்களின் நடைமுறை வாழ்விற்கான அடிப்படை பிரச்சனைகளான நீர், சுகாதாரம், கல்வி என்று ஓட்டைகள் பல நிரப்பட வேண்டியுள்ளது.

இந்நிலையில் எந்த வாசலையாவது திறந்துவிட வேண்டாமா? ஆரோக்கியமான இளம் சக்திகள் பொது வாழ்வில் நுழைய?

இந்த எதிர்பார்ப்புதான் நான் இவர்களை ஆதரிப்பதற்கு காரணம்.

மீண்டும் பின்னர் சேர்த்தது

என் ஆவலில் / எதிர்பார்ப்பில் மண்.

லோக் பரித்ரன் கட்சி உடைந்து விட்டது. முளைக்கும் முன்பே அழுகிய செடியாகிவிட்டது.

இவர்கள் எந்த விதத்திலும் வித்தியாசமில்லை; இந்திய அரசியலின் தாக்கம் இங்கும் உள்ளது என்பது இப்போது புரிகிறது. மற்றபடி இளைஞர்களின் வரவை அரசியலில் ஆதரிக்கும் என் ஆவலில் / எதிர்பார்ப்பில் மண் என்பதில் எனக்கு மிகுந்த ஏமாற்றம்தான்.

15 comments:

thiru said...

கட்சியின் கொள்கை, நாடும் மக்களும் சந்திக்கிற பிரச்சனைகளுக்கு இந்த அறிவுஜீவி இளைஞர்கள் வைத்திருக்கும் திட்டம் என்ன? கட்சியின் இணையதளத்திலும், பத்திரிக்கை செய்திகளிலும் வெளிப்படையாக இல்லையே! இதுவும் ஒரு புதிய கட்சி என்ற விதத்தில் இருக்கிற கட்சிகளுடன் இவர்களையும் சேர்த்துக்கொள்ளலாம்.

உதாரணமாக: பத்திரிக்கை நேர்காணலில் அவர்களது கருத்தில் நர்மதை அணைக்கட்டு பிரச்சனையில் பாதிக்கப்படுகிற மக்களின் வாழ்வு, வேதனை பற்றி பரித்ரன் ஆட்கள் புரிந்துகொண்ட மாதிரி தெரியலையே! மேட்டுக்குடி மக்களின் அரசியல் இப்படித்தானோ?

Aruna Srinivasan said...

நர்மதா அணை விஷ்யம் மற்றும் அவதிப்படும் மக்கள் பற்றி பெரும் அரசியல் தலைவர்கள் கூட அதிகம் பேசாமல் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

இவர்கள் இன்னும் முளைக்கவே ஆரம்பிக்கவில்லை. அதற்குள் "மேட்டுக்குடி மக்களின் அரசியல்" என்று முத்திரை குத்தி, முடிவு கட்டி ஓரம் கட்டுவது எப்படி நியாயமாகும்? இவர்கள் முதலில் கால் வைக்கட்டும்; முளைக்கட்டும்; எவ்வளவு தூரம் மக்கள் நலன் / தேச நலன் இவர்கள் பார்வையில் இருக்கிறது என்று போகப்போக புரிந்து கொள்ள அனுமதிக்கலாமே முதலில்?

போகிற போக்கில் எங்கோ வெளியே இருந்துகொண்டு இந்த நாடே உருப்படாது என்று பேசும் மேட்டுக்குடி இளைஞர்களை விட ஏதாவது செய்ய வேண்டும் என்று முனையும் இவர்கள் ஆயிரம் மடங்கு தேவலாம்.

நாமக்கல் சிபி said...

//நர்மதா அணை விஷ்யம் மற்றும் அவதிப்படும் மக்கள் பற்றி பெரும் அரசியல் தலைவர்கள் கூட அதிகம் பேசாமல் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
//

குருவி தலையில் பனங்காய் வைத்தாற்போல் இப்போதே இதெல்லாம் அவர்களிடம் எதிர்பார்க்க முடியுமா? கொஞ்சம் கொஞ்சமாகத்தான் பார்க்க வேண்டும்.

நந்தகுமார் பழனிசாமி said...

யார் வேண்டுமானாலும் அரசியலில் ஈடுபடலாம் என்கிற அடிப்படையில் இவர்கள் ஈடுபடுவதில் புதிதாக ஒன்றும் இல்லை. மக்கள் வாழ்வை ஒட்டி இவர்கள் அரசியல் நடவடிக்கைகள் அமைந்தாழொழிய இவர்களால் மீடியாவில் செய்தி வருவதைத் தவிர வேறு ஒன்றும் நிகழாது. மேல் நடுத்தர தட்டு மக்களின் கற்பனாவாத அரசியல் நிகழ்வுகளில் இருந்து மக்கள் அரசியல் நோக்கி இவர்கள் நகர்வார்களா?

thiru said...

அருணா,

நாட்டை முன்னேற்ற வேண்டும் என்ற நல்லெண்ணம் பாராட்டத்தக்கதே! அதற்காக கொள்கைகளும் திட்டங்களும் இல்லாமல் நாட்டை முன்னேற்றுகிறோம் பேர்வழி என புறப்படுவது தான் இடிக்கிறது. கொள்கையில்லாமல் பிறந்த பலநூறு கட்சிகள் பற்றி நாடறியும். இருக்கிற கட்சிகளும் கொள்கை என தனிமனித துதிபாடல்கள், திட்டங்கள் இல்லாமை என மக்கள் பணத்தை ஏப்பம் விடுகிறது!

//போகிற போக்கில் எங்கோ வெளியே இருந்துகொண்டு இந்த நாடே உருப்படாது என்று பேசும் மேட்டுக்குடி இளைஞர்களை விட ஏதாவது செய்ய வேண்டும் என்று முனையும் இவர்கள் ஆயிரம் மடங்கு தேவலாம்.//

அப்படி இருக்கிற மேட்டுக்குடியினருக்கும் இந்த இளைஞர்களுக்கும் வேறுபாடில்லை என சொல்லவில்லை. மேட்டுக்குடி அரசியல், அணைக்கட்டுகளால் பாதிக்கபட்ட பழங்குடியினர் வாழ்க்கையை பார்க்கும் பார்வையை தான் குறிப்பிடுகிறேன்!

காலம் பதில் சொல்லும் இவர்கள் மற்ற கட்சிகளிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறார்கள் என்பதை! அதுவரை காத்திருப்போம்!

Pavithra Srinivasan said...

Bravo, Aruna. I believe too, that finally, someone's at least *willing* to make a difference. These people want to, at any rate. They ought to be given a chance to prove themselves (sorry for the English - am at offcie. :) )

Anonymous said...

திரு சார் இவர்கள் மத்த கட்சிகளிலிருந்து எவ்வாறு வேறுபடுறாங்கன்னு கேக்கமுன்னாடி கொஞ்சம் யோசியுங்க. அவங்க ஐஐடின்னு சொல்றப்பவே வித்தியாசம் தெரியல்லயா?
--------------------------------
போகிற போக்கில் எங்கோ வெளியே இருந்துகொண்டு இந்த நாடே உருப்படாது என்று பேசும் மேட்டுக்குடி இளைஞர்களை விட ஏதாவது செய்ய வேண்டும்
------------------------------------
காலிபோர்னியாவும் இதே வெளிக்குள்ளே அடங்குமாங்க?

மா சிவகுமார் said...

காந்தி அடிகள் தென் ஆப்பிரிக்காவிலிருந்து வந்த உடன், தீவிர அரசியலில் ஈடுபடவில்லை. அவருடைய
ஆசிரியர் கோகலேயின் அறிவுரைப்படி நாடு முழுவதும் பயணம் செய்து பலதரப்பட்ட மக்களை
சந்தித்தார். பல ஆண்டுகள் பொது வாழ்க்கையில் செலவளித்து விட்ட காந்தியடிகளுக்கே இது தேவை
என்றால், ஐஐடியில் பட்டம் பெற்று ஒரு சில நிறுவனங்களில் பணிபுரிந்து விட்டதாலேயே, நாட்டை வழி
நடத்த தகுதி பெற்று விட்டதாக எப்படி இவர்கள் நினைக்கலாம்?

75 கோடி ஏழைகள் வாழும் இந்த நாட்டை வெறும் அறிவு பூர்வமாக நிர்வகித்து விடலாம் என்பது நடக்குமா?

Anonymous said...

If they communicate well and be patient they will find a place to act. paarkkalaam.

Aruna Srinivasan said...

திரு,

//காலம் பதில் சொல்லும் இவர்கள் மற்ற கட்சிகளிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறார்கள் என்பதை! அதுவரை காத்திருப்போம்!
//

இதைத்தான் நானும் சொல்கிறேன் இல்லையோ? :-)

சிபி, என் நம்பிக்கையைப் பகிர்ந்து கொள்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.

நந்தகுமார், இன்றைய அரசியல் கட்சிகள் அனைத்தும் மக்கள் வாழ்வை ஒட்டி //மக்கள் அரசியல்// நடத்துகிறார்கள் என்ற உங்கள் நம்பிக்கையை பாராட்டுகிறேன்.

பவித்ரா, கருத்து சொல்வதே ஆடி /அமாவாசை கதை. இதில் ஆங்கிலம் வேறா? பரவாயில்லே.. விட்டுடறேன்.:-)

சிவகுமார், உங்கள் கருத்துடன் ஒத்துப்போகிறேன். பொது வாழ்வில் தங்கள் சிரத்தையையும், திறமையையும் ஓரளவு நிரூபித்துவிட்டு, மக்களிடம் கலந்து அவர்கள் குறைகள் புரிந்து கொண்டு பின்னர் களத்தில் இறங்கியிருக்கலாம். அது முறையாக - பாரம்பரிய வழியாக - இருந்திருக்கும். ஆனாலும், அதற்கெல்லாம் இன்றைய "மின்" வேகக் காலத்தில் நேரமில்லை என்று ஒரு லாங் ஜம்ப் எடுத்துவிட்டார்களோ என்னவோ? Let's wait and see what strategies they have up their sleeves! பொறுத்திருந்து பார்ப்போமே? தூக்குவதும், உட்கார வைப்பதும் 5 வருடத்திற்கு ஒரு முறை நம் கையில் வருகிறதே?

Anonymous said...

"லோக் பரித்ரன்" என்ற பெயரைக் கேட்டவுடனே எனக்குப் பரித்ரானாய சாதூனா.. என்ற பாட்டுத்தான் ஞாபகம் வருகிறது. "க்ராஸ் பெல்ட்" களின் கட்சி என்று பரைசாற்றிக்கொள்ள இதைத் தவிர வேறு பெயர் தேவையில்லை.

நாமக்கல் சிபி said...

//"க்ராஸ் பெல்ட்" களின் கட்சி என்று பரைசாற்றிக்கொள்ள இதைத் தவிர வேறு பெயர் தேவையில்லை//

அட! யாரா இருந்தாத்தான் என்ன?
நல்லது செய்யன்னு சொல்லொகிட்டு முன்வந்திருக்கிறார்கள். வாய்ய்பு கொடுத்து பார்த்தால் போகிறது.

இதற்கு முன்பு யாருமே ஆட்சி செய்யவில்லையா என்ன?

Aruna Srinivasan said...

லோக் பரித்ரன் பற்றி நான் எழுதியிருந்தது அப்படி ஒன்றும் அது சிலாகிக்க வேண்டிய நிகழ்வு அல்ல என்று சில விமரிசனங்களும் வந்தன. விமரிசகர்களுக்கு ஒரு சிறு விளக்கம்.

ஒரு காலத்தில் சுதந்திரப் போராட்டம் என்கிற ஒரு பொதுத் தாகம் இளைஞர்களை பொது வாழ்க்கைக்கு இழுத்தது. சுதந்திரம் பெற்றோம்; உன்னதமான அரசியல் தலைவர்களைப் பெற்றோம்.

பின்னர் சுதந்திர இந்தியாவில் எமர்ஜென்ஸி, மொழிப் பிரச்சனை, என்று பல விதங்களில் பொதுத் தாகங்கள் இளைஞர்களை பொது வாழ்விற்கு இழுத்தன. இன்று அப்படிப்பட்ட நாடு தழுவிய இன்னல் / crisis - குறிப்பாக சொல்லும்படி இல்லாவிட்டாலும், ஊழல், நிர்வாக சீர்கேடுகள், மத/ஜாதி வேறுபாடுகள், என்று கண்ணுக்குத் தெரிந்தும் / தெரியாத ஆயிரமாயிரம் பிரச்சனைகள் ஊடுருவி நிற்கும் சமயத்தில் வருங்காலத் தலைவர்கள் என்ற கேள்வி நிரப்படாமலேயே வெற்றிடமாக இருக்கிறது.

இந்த நிலையில் குடும்பம் மற்றும் இதர பின்வாசல்கள் வழியே தலைவர்களாக உருவாவதை நாம் எதிர்க்கிறோம். சினிமா போன்ற அடித்தள மக்களிடம் சென்றடையும் "தலைவர்களை" நாம் பெரிதாக பொருட்படுத்துவதில்லை. இன மற்றும் ஜாதியின் பேரால் தலைவர்கள் உருவாகும் கலாசாரத்தை, இன்னும் ஜாதி பாகுபாடுகள் அதிகரிக்க காரணம் என்ற ஒரே காரணத்தினாலேயே தவிர்க்க நினைக்கிறோம்.

ஆக, தலைவர்கள் உருவாக இன்று பெரிதான / வலுவான ஒரு தூண்டுகோல் - சுதந்திரப்போராட்டம் அல்லது எமர்ஜென்ஸி போன்று - தூண்டுகோல் என்ன? குவியமாக ஒன்று இல்லை. ஆனால் பன்முனைத் தாக்குதல் நடத்த ஆயிரம் காரணங்கள் உள்ளன. பசி, ஏழ்மை, என்று ஒரு பக்கமும் அதீத செல்வம் என்று இன்னொரு புறமும் சமூக இடைவெளி விரிந்து கொண்டே போகிறது. ஊழல் மற்றும் நிர்வாகச் சீர்கேடுகளினால் இன்னொரு பக்கம் நாம் தினசரி வாழ்க்கையில் அல்லல்கள் பல சந்திக்க நேருகிறது. மக்களின் நடைமுறை வாழ்விற்கான அடிப்படை பிரச்சனைகளான நீர், சுகாதாரம், கல்வி என்று ஓட்டைகள் பல நிரப்பட வேண்டியுள்ளது.

இந்நிலையில் நாளைய இந்தியாவாவது - அடுத்த தலைமுறையாவது நிஜமாகவே 'ஒளிரும் இந்தியாவில்' வாழமாட்டார்களா என்ற எண்ணம் வலுவெடுக்கிறது. அந்த நாளைய தலைவர்கள் உருவாக எந்த வாசலையாவது திறந்து வைக்க வேண்டாமா?

லோக் பரித்ரான் போன்று பொது வாழ்க்கையில் காலடி எடுத்து வைக்கும் இளைஞர்களை போற்ற வேண்டாம் - ஏளனம் செய்யாமல் / ஊக்கத்தைத் தடை செய்யாமல் இருந்தாலே ஓரளவாவது இளைஞர்கள் பொது வாழ்க்கையில் பங்கு பெற முன்வரமாட்டார்களா / நாளைய அரசியல் தலைவர்கள் உருவாக மாட்டார்களா என்ற ஒரு எதிர்பார்ப்புதான் இவர்களை நான் ஆதரிப்பதற்கு காரணம்.

நான், தனது, தனது சுகம் மட்டுமே என்று வாழ்வது இன்றைய அங்கீகரிக்கப்பட்ட வாழ்க்கை நடைமுறை. இந்த நிலையில் பொதுச் சிந்தனை சிறு குருத்தாக தோன்றும்போது எப்பாடுபட்டாவது அதைப் பாதுகாத்து போற்ற நினைக்கிறது மனம்.

Sivabalan said...

இது ஒரு நல்ல தொடக்கம்!! செல்ல வேண்டிய தூரம் மிக அதிகம்!!

joejothish said...

please discuss something about muullaperiyar problem,3 lakhs life are struggling in between kerala and tamilnadu politiciens