Saturday, December 24, 2005

தும்பா ? வாலா?

"...ஒரு கல்லூரியை இடிக்கக்கூடாது என அதன் 100 வருஷப் பாரம்பரியத்தைச் சொல்லிப் போராடித் தடுத்த தமிழ்நாடு, ஆயிரம் வருஷப் பாரம்பரியம் கொண்ட நீர் நிலைகளை, நம் சொத்தாக உணரவில்லை என்பதுதான் பெரிய சோகம் !...."

மண்டையில் அடித்தால்போல் ஆணித்திரமாக உறைக்கும் வரிகள். இந்த வார விகடனில் ஒரு கட்டுரை.

" கடந்த நூறு வருடங்களில் ஆயிரம் மில்லி மீட்டருக்கு அதிகமான மழை தமிழகத்தில் ஏறக்குறைய 10 முறையாவது பெய்திருக்கிறது. 1903ம் ஆண்டு....60'ல் 1227 மி.மி; 69'ல் 1032 மி.மி; 85ல் 1275மி.மீ;" எனப் பட்டியலிட்டு, அப்போதெல்லாம் மழை இப்படி மக்கள் வசிக்கும் வீடுகளில் அத்துமீறி நுழையவில்லை; ஆறுகளின் கரைகள் காணாமல் போகவில்லை. ஏரிகள் உடையவில்லை. குளங்கள் வழியவில்லை. இப்போது மட்டும் ஏன் இவ்வளவு பெரிய இழப்புகள்? என்று கட்டபொம்மன் கணக்கில் கேள்விகளை எடுத்துக்கொண்டு சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியரான டாக்டர் ஜனகராஜனின் கதவைத் தட்டியுள்ளார்கள்.

விளைவு, அருமையாக ecology ( தமிழில் என்ன என்று யாராவது கூறி உதவ முடியுமா?) ரீதியில் விளக்கம். ஜனகராஜன், எப்படி இயற்கை நமக்களித்திருக்கும் நீர் நிலைகளைப் பாதுகாக்கத் தவறிவிட்டோம் என விளக்குகிறார். ஆனால் இந்தியா உணவுத் தேவையில் தன்னிறைவு அடையக் காரணமான பசுமைப் புரட்சியும் இன்றைய நிலைக்கு ஒரு காரணம் என்று கூறுவதுதான் ஆச்சரியமாகவும் புரியாமலும் இருக்கிறது. கிணறுகள் மூலம் நிலத்தடி நீரை உபயோகப்படுத்த முற்பட்டதால் விவசாயிகள் குளம், ஏரி போன்ற நீர் நிலைகளைப் பாதுகாக்காமல் விட்டுவிட்டார்கள் என்பது இவர் சொல்லும் ஒரு கோணம். நீர்ப் பாசனத்துக்கு இந்த இயற்கை நீர் நிலைகளை நம்பியிருந்தால் இவைத் தூர்ந்து போக விட்டிருக்க மாட்டார்கள் என்கிறார். என் மூளைக்கு எட்டியவரையில் இது எப்படி என்று புரியவில்லை. பாசனத்திற்கு, நீர் நிலைகளின் நீர் போதாமல்தானே நிலத்தடி நீருக்குத் தாவினார்கள்?

ஆனால் மொத்தத்தில் கவனம் பெற வேண்டியக் கட்டுரை.

இதேபோல் NDTV யில் 24 hours என்ற நிகழ்ச்சியில் ஜார்கண்ட் மாநிலத்தில் தேநீர் கடை வைத்துக்கொண்டு பிழைப்பு நடத்தியபடி ஆதிவாசிகளின் குறைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்வதற்காகவே ஒரு சுயேச்சைப் பத்திரிகையாளராக பணி செய்யும் தயாமணி பர்லாவுடன் 24 மணி நேரம் சுற்றுகிறார் என்டிடிவியின் ராதிகா போர்டியா. தயாமணி ஒரு ஆதிவாசி; குழந்தைப்பருவத்தில் கொத்தடிமை நிலையில் இருந்துவிட்டுப் பின்னர் ராஞ்சி பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் வாங்கி, கிடைத்த நல்ல வேலையை உதறிவிட்டு ஆதிவாசிகளின் குரல்களுக்கு ஒரு பிரதிநிதியாக பத்திரிகைகளில் எழுத ஆரம்பித்தவர்.

இவருடைய தேநீர் கடையில் பல பத்திரிகையாளர்கள் கூடி செய்திகள் / நாட்டு நிலவரங்கள் அலசுவதும் வழக்கமாம். எண்டிடிவியின் இந்த நிகழ்ச்சிக்கான சுட்டி இல்லை. ஆனால் தயாமணியைப் பற்றி மேலும் அறிய இங்கே பார்க்கலாம்.

நாம் பெரும்பாலும் தும்பைவிட்டு வாலைப் பிடிக்கிற கதையாக முக்கியமாக எந்த விஷயங்களில் அக்கறை காட்டி போராட்டம் நடத்த வேண்டுமோ, அதைச் செய்யாமல் மேம்போக்காக எதெதெற்கோப் போராடிக்கொண்டிருக்கிறோம். பாரம்பரிய மிக்க கட்டிடத்திற்கு நடத்திய ( குவீன் மேரீஸ் கல்லூரி) போராட்டம் தேவைதான். அதில் சந்தேகமில்லை - பழைய மாணவி என்ற முறையில் நானும் அதில் பங்கேற்றேனே! ) ஆனால் இன்னும் பல முக்கிய விஷயங்களை நாம் போராடிப் பெற தவறுகிறோம்.

தெருவில் நடந்தால் சுற்றுப்புற அசுத்தமும், சுகாதாரக்கேடுகளும், பசியும், பட்டினியும், பெண்களுக்குப் பாதுகாப்பின்மை, என்று ஆரம்பித்து எத்தனையோ "எரியும்" விஷயங்கள் மனசை உலுக்குகின்றன; எப்போது விழித்துக்கொள்வோம் ? சினிமா நடிகர்கள் பேசுவதும், அரசியல் பேரங்களும், விளையாட்டு வீரர்களும் மகக்ள் கவனத்தையும் நியூஸ்பிரிண்ட் பக்கங்களையும் தொலைக்காட்சி நேரங்களையும் ஆக்கிரமிப்பு செய்யும் அதே அளவு நம் வாழ்க்கையின் அடிப்படைப் பிரச்சனைகள் நமக்கு உறைக்க வேண்டாமா?

ஆனாலும் அசாத்திய சகிப்பு தன்மைதான் நமக்கு !! அல்லது "கண்டும் காணாமல்" போகும் அளவு நாம் ஊறி விட்டோமோ?

தும்பைவிட்டு வாலைப் பிடிக்கும் குணம் மட்டும் இருந்துகொண்டேதான் இருக்குமோ? ஊடகங்களும் பெரும்பாலும் இப்படி தும்பு - வால் ரீதியில்தானே இயங்குகின்றன?

மேலே குறிப்பிட்ட இரண்டு ஊடகங்களிலும் அவ்வப்போது அபத்தமாக வரும் செய்திகள் /கட்டுரைகளுக்குப் பிராயச்சித்தமாக இது போன்ற செய்திகள் / நிகழ்ச்சிகள் ஈடுகட்டுகின்றன என்பது என் எண்ணம்.

Monday, December 05, 2005

தேசிய அக்கறை

ஒரு பார்வையில் குற்றம் கண்டுபிடிப்பது சரியல்லதான். ஆனாலும் இன்றைய டைம்ஸ் ஆப் இந்தியாப் பத்திரிகையைப் பிரித்துப் படித்தவுடன் ஏதோ உறுத்தியது. தற்போது ஒரு வாரமாக மும்பையில் இருப்பதால் சென்னையின் புயல், வெள்ளப் பாதிப்பைத் தூரத்தில் இருந்து பார்க்கும்படி உள்ளது. திரும்பிச் சென்றபின்தான் நிலவரத்தை நேரில் பார்க்க வேண்டும். இதன் நடுவில் தினம் தொலைக்காட்சி, இணையம் என்று சென்னை நிலவரத்தைத் தேடித்தேடிப் பார்த்துக்கொண்டிருந்தோம். நாங்கள் இருக்கும் இடத்தில் சென்னைச் செய்தித்தாள் கிடைக்காமல் எங்கேயோப் போய் வாங்கிக் கொடுத்தார்கள். இந்த நிலையில் தினசரி காலையில் கிடைக்கும் உள்ளூர் பேப்பரில் நம்மூர் செய்திகளைத் தேடத்தானே தோன்றும் ?

ஆனால் செய்தித்தாளைப் பிரித்தால் - முதல் பக்கம் வேண்டாம் - எங்காவது உள்ளே கூடவா சென்னை வெள்ள நிலவரம் பற்றி செய்தி இருக்காது? இல்லையே...... உள்ளே ஒரு மூலையில், நிவாரண உதவிகள் அளிக்க அரசு உறுதி பற்றி முழுசாக ஒற்றை வாக்கியம்தாம் சென்னை மழை பற்றி மொத்த செய்தி. ஆனால் தூத்துக்குடி அருகே ஒரு கிராமத்தில் ஆசிரியையிடம் கடும் தண்டனை வாங்கிய மாணவர்கள் என்று ஒருப் பெட்டிச் செய்தி - நாலு பத்திகளில்.

மாணவர்களை அநியாயமாகத் தண்டித்த இந்தச் செய்தி முக்கியம்தான். அதே சமயம், அதே மாநிலத்தில் - நாட்டில் ஒரு முக்கியமானப் பகுதியில் - வெள்ளம் மழை என்றால் தேசியச் செய்தித்தாள்களில் செய்திகள் வர வேண்டாமா? உள்ளூர் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து Local வாசனையுடன் பத்திரிகைகள் வருவது இன்றைய Trend. ஆனால் இந்த அளவு மற்ற மாநிலங்களின் முக்கியச் செய்திகளைக் கூட இருட்டடிப்பு செய்வதை எப்படி நியாயப்படுத்துகிறார்கள் என்று புரியவில்லை.

இந்த சமயத்தில் மனதில் தோன்றும் ஒரு ஒப்பு நோக்கையும் தவிர்க்க முடியவில்லை. நியூ ஆர்லின்ஸின் வெள்ளச் செய்திகளை மேற்கு மூலையில் இருக்கும் சான் ஹோஸே மெர்குரி நியூஸில் பத்திப் பத்தியாக தலைப்புச் செய்திகள் / இதர விவரங்கள் படித்த நினைவு வருகிறது. ஏன் இந்த தேசிய அக்கறை, டைம்ஸ் ஆப் இந்தியாவில் காணவில்லை என்று தோன்றுகிறது. ஹிந்துஸ்தான் டைம்ஸில் சற்று பரவாயில்லை. உள்ளே மூன்று பத்தி இஞ்சுகளில் செய்தியும், பக்கத்தில் ஒரு படமும்.

உள்ளூர் முக்கியத்துவம் இருக்க வேண்டியது பத்திரிகைகளுக்கு அவசியமாக இருக்கலாம். ஆனால் தேசீயப் பார்வை இல்லாமல் குறுகிப் போய்க்கொண்டிருக்கின்றன. இது சரியல்ல.