Tuesday, March 29, 2005

சென்ற பதிவில், இப்போது அனுமதிக்கப்பட்டுள்ள மசோதா பற்றி எனக்கு எழுந்த சந்தேகங்கள் பற்றி கூறியிருந்தேன். இவற்றிற்கு பதில் தேட இங்கே சென்னையில் வக்கீலாக பணியாற்றும் - காப்புரிமைகள் விவகாரம் இவரது சிறப்பு துறைகளில் ஒன்று - திரு. A.A. மோஹன் அவர்களுடன் பேசினேன். அவருடன் பேசியதிலிருந்தும், இணையம் மற்றும் செய்தித்தாள்களை அலசியதிலிருந்தும் கிடைத்த விளக்கங்களை கேள்வி - பதிலாக கொடுத்திருக்கிறேன்.

1. இந்த காப்புரிமை சட்டத்தினால் நமது விஞ்ஞானிகளுக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கும் வெளி நாடுகளில் காப்புரிமை செய்வதன் மூலம் ஒரு பன்னாட்டு அங்கீகாரமும், முதலீடும் கிடைக்கும் என்று கமல் நாத் கூறியுள்ளார். நாம் இங்கே ஒரு மருந்து கண்டுபிடித்து அதன் அடிப்படையில் மருந்துகள் உற்பத்தி செய்து, அந்த product ஐ காப்புரிமை செய்ய முடியுமா?

பதில்: முடியும். ஆனால் பன்னாட்டு காப்புரிமை என்று எதுவும் கிடையாது. நம் நாட்டில் காப்புரிமை வாங்கியிருந்தாலும் வெளி நாட்டில் அந்தப் பொருளுக்கு அவர்கள் நாட்டு சட்டங்கள்படி காப்புரிமை பெற வேண்டும். பொதுவாக Patent வாங்க பிற நாட்டில் நிறைய செலவாகும். சில சிறிய நிறுவனங்களால் இப்படி பணம் செலவழிக்க வசதி இல்லாமல் இருக்கலாம். ஆனால் இப்படி செலவு செய்து வெளி நாட்டில் காப்புரிமை வாங்காது விட்டுவிட்டால், பிறகு நம் பொருளைக் காப்பியடித்து அங்கே யாராவது உற்பத்தி செய்யும்போது கையைப் பிசைந்து கொண்டு வேடிக்கை பார்க்க நேரும். அதனால் இங்கேதான் காப்புரிமை வாங்கியாச்சே; உலகத்தில் யாரும் இனி இதைக் காப்பியடிக்க முடியாது என்று நினைத்து அசிரத்தையாக இருக்கக் கூடாது.

2. கட்டாய லைஸென்ஸ் இந்திய நிறுவனங்களுக்கு எந்த விதத்தில் அனுகூலமாக இருக்கும்?

பதில் : வெளி நாட்டு நிறுவனம் தயாரிக்கும், காப்புரிமையுள்ள அத்தியாவசியமான மருந்து ஒன்று இங்கே ஒரு நிறுவனம் தயாரிக்க விரும்பி அதற்குத் தேவையான தயாரிக்க அடிப்படை வசதிகள்/ கட்டுமானங்கள் இருந்தால், ஓரளவு நியாயமான ராயல்டி கொடுத்துவிட்டு இங்கே தயாரிக்க முடியும்.

3. புதிய கண்டுபிடிப்புக்கு மட்டும்தான் காப்புரிமை. சிறிய மாற்றங்களுடன் மறுபடி அறிமுகப்படுத்தும் பொருட்களுக்கல்ல. இந்தச் சட்டத்தின் பயன்?
பதில்: ஒரு மருந்து சந்தையில் நம்பர் ஒன்றாக இருக்கும் நிலையில் அதன் காப்புரிமை காலாவதிகிறது என்று வையுங்கள். உடனே அதற்கு சற்று முன்னால் தயாரிப்பில் சின்ன மாற்றங்கள் செய்து அந்தப் "புது" படைப்பின் பேரில் புது காப்புரிமை பெறுகின்றன மேல் நாடுகளில் சில நிறுவனங்கள். நம் நாட்டில் அதுபோல் கண் துடைப்புகளுக்கு சான்சே இல்லாமல் இப்படி ஒரு விதியைக் கொண்டு வந்தாயிற்று. உண்மையிலேயே சிறப்பான, விரைவில் நிவாரணம் அளிக்கக் கூடிய மருந்தைக் கண்டுபிடிக்கும் உண்மையான வெளி நாட்டு கண்டுபிடிப்புகளுக்கு இதன் மூலம் இங்கே ஒரு பாதுகாப்பு கிடைக்கிறது.
4. காப்புரிமை பெற்ற மருந்துகளையும் இந்திய நிறுவனங்கள் தயாரித்து மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம். - ராயல்டி கொடுத்துவிட்டு. ஆனாலும் விலையேறாது என்கிறார் அமைச்சர். அது எப்படி?

பதில்: ஒன்று, இந்தியாவில் விற்பனையாகும் மருந்துகளில் பல இப்போதும் காப்புரிமைப் பிரச்சனைக்கு அப்பால்தான் இருக்கின்றன. அப்படியே காப்புரிமை இருக்கும் மருந்துகளைத் தயாரிக்கவும் ராயல்டி கொடுத்துவிட்டு எப்போதும்போல் தயாரித்து விற்க தடையேதும் இல்லை. மருந்துகளின் விலை சாதாரன மக்களால் கொடுக்க முடியாத அளவு ஏறாது. ஏனென்றால் நம் நாட்டில் மருந்துகள் விலையை நிர்ணயம் செய்ய Drug Price Control Order என்ற அமைப்பு இருக்கிறது. சாமான்யர்களால் கொடுக்க முடியாத அளவு விலையேறாமல் பார்த்துக்கொள்வது இதன் பொறுப்பு. இப்போது இந்த காப்புரிமை விஷயத்தில் ஒரு சரியான சட்டம் அமுலுக்கு கொண்டு வந்ததால் அடிப்படையில் WTO வுக்கு கொடுத்த உடன்படிக்கையின்படி TRIP complaiant ஆக இருக்கிறோம். அதே சமயம் நாம் நம் மக்களுக்கு விலையேறாமல் தடுக்க தேவையான பாதுகாப்புகளும் வைத்துள்ளோம் !!! :-)

5. மென்பொருட்கள் விஷயத்தில் குழப்பம் சற்று அதிகமாகவே இருக்கிறது. இரண்டு நாட்கள் முன்பு பிஸினஸ் லைன் தினசரியின் செய்திபடி பொதிந்த மென்பொருட்களுக்கு காப்புரிமை உண்டு. ".... The amended Bill provides for product patent in drugs, agri products and embedded software while patentability of plants remains outside the purview of the proposed Act..." - The Business Line dated March 23. 2005. Passage from the Lead story on the front page. ஆனால் இன்று எகனாமிக் டைம்சில் 3ம் பக்கத்தில் உள்ள ET in the Classroom பகுதியின்படி, "......The Bill has dropped the provision allowing patents for a computer programme's technical applications to the industry or its combination with hardware as those used in mobile phones....." ET March 28th.

என் குழப்பம் தீரவில்லை. embedded softwar க்கு காப்புரிமை உண்டா இல்லையா? மோஹனைக் கேட்டேன்.

" இந்த விஷயம் தற்போது வந்துள்ள திருத்தப்பட்ட மசோதாவில் தெளிவாக இல்லைதான். ஏற்கனவே டிசம்பரில் அறிவித்திருந்த "ordinance" இதைப் பற்றி மிகத் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தது - Industrial applications, technical applications to the industry, இவற்றில் பயன்படுத்தபப்டும் மென்பொருளுக்கு காப்ப்புரிமை உண்டு என்பதை. ஆனால் இப்போது திருத்தப்பட்ட சட்டத்தில் இப்படி தெளிவாக இல்லை. எந்த மாதிரியான மென்பொருளுக்கு காப்புரிமை உண்டு என்பது தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை. embedded என்ற வார்த்தைப் பிரயோகம் அதில் இல்லை. இதனால் காப்புரிமைக்கு விண்ணப்பம் கொடுக்கும் நிறுவனங்களின் விண்ணப்பத்த்தின் சாதக பாதகங்களை ஆராய்ந்துதான் முடிவு எடுக்கப்படும் என்று நினைக்கிறேன். Case by case அடிப்படையில் கொடுக்கப்படலாம். முடிவெடுக்க வேண்டிய அதிகாரியின் தீர்மானத்தைப் பொறுத்தது." என்றார் அவர்.
வரும் நாட்களில் குழப்பங்கள் தெளிகிறதா என்று பார்க்கலாம்.

Thursday, March 24, 2005

காப்புரிமை சமாசாரத்தை சந்திரன் தன் பதிவில் நன்றாக விவரித்துள்ளார். நான் மறுபடி அடிப்படைகளை விவரிக்க வேண்டாம் என்று நினைக்கிறேன். இன்னும் சிறிது கூடுதல் பின்புலம் விவரங்கள்:

  • 1995ல் WTO மாநாட்டில் செய்துகொண்ட பல உடன்படிக்கைகளில் 10 வருடத்தில், TRIPS ( Trade Related aspects of Intellectual Property Rights) விதிகளின்படி, முறையாக நாம் ஒரு காப்புரிமை சட்டம் வைத்துக்கொள்வோம் என்று ஒப்புக்கொண்டுள்ளோம்.
  • காப்புரிமை சட்டம் சரியாக இல்லாத நிலையில் நம்மை ஒரு தபால பெட்டி முறையை வைத்துக்கொள்ளும்படி மற்ற நாடுகள் வலியுறித்தின. அதாவது அவர்கள் ஒரு பொருளுக்கு காப்புரிமை இந்தியாவில் தேவை என்பதற்கான வேண்டுகோள் விடுத்து முன் பதிவு செய்வார்களாம். நாம் நிதானமாக 10 வருடம் கழித்து நமது சட்டம் கொண்டுவரும்போது இவர்கள் வரிசையில் வைத்து இருக்கும் அப்ளிகேஷன்களை நாம் பரிசீலனை செய்ய வேண்டும் என்றார்கள். அதாவது இடம் ரிஸர்வ் செய்ய கைக்குட்டை, பேப்பர் போட்டுவைப்பதுபோல. ஆனால் நாம் இந்த தபால் பெட்டி முறைக்கு பல வருடங்கள் ஒத்துக்கொள்ளவில்லை. அமெரிக்கா இதை ஆட்சிபித்தபோது, நம்மிடம் ஓரளவு காப்புரிமை கோரல்களுக்காக ஒரு நிர்வாக வழிமுறைகள் உள்ளன; அதே போதும் என்று சொல்லிவிட்டோம். தவிர, இந்த மாதிரி தபால் பெட்டி அப்ளிகேஷன்களெல்லாம் நமது காப்புரிமை வழக்குகளில் நம் இந்திய கோர்ட்டுகளில் செல்லுபடியாகாது. அதனால் இது தேவையில்லை என்று சொல்லிவிட்டோம். தபால் பெட்டியோ இல்லையோ, மருந்து காப்புரிமைகளுக்காக மட்டுமே 1996 லேயே 896 அப்ளிகேஷன்கள் வந்திருந்ததாக தெரிகிறது. தற்போதைய எண்ணிக்கை தெரியாது.
  • இப்போது காப்புரிமை அமுலுக்கு வந்துவிட்டதால் இந்த பழைய அப்ளிகேஷன்களை முதலில் பரிசீலனை செய்ய வேண்டும்.


சந்திரன் குறிப்பிட்டுள்ள அந்த ரைஸ்டெக் சமாசாரம் நடந்தது 1998ல். அந்த சமயத்தில் நான் சிங்கப்பூர் பிஸினஸ் டைம்ஸ் தினசரிக்கு டில்லியிலிருந்து கொண்டு செய்திகள் அனுப்பிக்கொண்டிருந்தேன். இந்த சர்ச்சை வெளிவந்தபோது அன்றைய Centre for Scientific and Industrial Research தலைமை அதிகாரி, மஷேல்கர், Activist வந்தனா சிவா இருவருமே இந்த அரிசி சமாசாரம் அப்படி ஒன்றும் பெரிய பிரச்சனையாக உருவாகாது; ஆனால் நாம் எவ்வளவு தூரம் நம் பாரம்பரிய உணவு வகைகள் பயிரிடுவதற்கான உரிமைகளைக் காப்பாற்றிகொள்வதில் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கு இது ஒரு நல்ல எச்சரிக்கை என்ற ரீதியில்தான் என்னிடம் பேசும்போது குறிப்பிட்டனர். சொல்லப்போனால் அந்த சமயங்களில் இப்படி அமெரிக்க நிறுவனங்கள், வேப்பிலை, மஞ்சள், பிறகு அரிசி என்று ஒன்றன் மீது ஒன்றாக ஏதோ ஒரு விதத்தில் patent வைக்க முற்பட்டது ஒரு விதத்தில் நாம் உஷாராக இருக்க உதவியது என்பேன். ஆனால் அதே சமயம், அட, நம்ம பாட்டி சொன்ன கைவைத்தியம்தானே.. வேப்பிலை அரைத்துப் போட்டால் போச்சு என்று பல விதங்களில் உபயோகித்து கொண்டு இருக்காமல், பல பாரம்பரிய செடிகள், தாவர வகைகளின், மூலிகைகளின் உபயோகம் பலவற்றையும் முறைப்படி நாம் patent செய்ய வேண்டியது இப்போது மிகவும் அவசியமாகிறது என்று மஷேல்கர் குறிப்பாக விவரித்தார்.
அதாவது, வேப்பிலை என்பது உலகமெங்கும் விளையும் ஒரு தாவரம். நாம் வேப்பிலைக்கு உரிமை கொண்டாட முடியாது. ஆனால் அந்த வேப்பிலைக்கு காயத்தை ஆற்றும் சக்தியோ அலல்து, பூஞ்சக்காளான் வராமல் தடுக்கும் சக்தியோ, வயிற்றுப்புண் நீக்கும் சக்தியோ இருப்பதை நாம் அறிந்திருந்தோமானால், பாட்டி சொன்ன வைத்தியம் என்று பேசாமல் வீட்டோடு உபயோகித்துக் கொண்டு இருக்காமல், அந்த சக்திகள் இருப்பதாக சொல்லும் பழைய ஆதாரங்களை நாம் தயாராக வைத்துக் கொண்டு உடனே காப்புரிமை செய்ய வேண்டும். இதற்கு பழைய சித்தர் பாட்டுகள், நாட்டுப் பாடல்கள் என்று ஆதரங்களை சேர்ப்பதில் / சேர்க்க ஊக்குவிப்பதில் கடந்த சில வருடங்களாக CSIR கவனம் செலுத்தியுள்ளது.


அதேபோல் தாவர வகை எனும்போது Geographical Appalations Act என்று ஒன்று உண்டு. அதாவது இப்போது சீலிநாட்டில் விளையும் ஒரு குறிப்பிட்ட திராட்சைப் பழம் அந்த பகுதிக்கு சிறப்பானது. அதேபோல் ஜெர்மனியில் விளையும் ஒரு குறிப்பிட்ட திராட்சையைக் கொண்டு தயாரிக்கப்படும் ஒயினுக்கும், பீருக்கும் அந்த நாடு இந்த Geographical Appellations Act கொண்டு வர முனைந்தது. ஒரு குறிப்பிட்ட தாவர வகை அந்தப் பகுதியில் இருக்கும் சீதோஷ்ண நிலையினால்தான் அல்லது வேறு ஒரு பூகோள சிறப்பினால்தான் அந்த சிறப்புத் தன்மையைக் கொண்டுள்ளது என்று நிரூபிக்கும் எந்தத் தாவர வகையையும் தன் Geographical Appellations Act கீழ் ஒரு நாடு பதிந்து கொள்ளலாம். வட இந்திய பாஸ்மதி, டார்ஜிலிங் தேயிலை, இதெல்லாம் இதன் கீழ் வரும்.


சரி. இந்த விஷயம் அப்புறம். முதலில் இப்போது அனுமதிக்கப்பட்டுள்ள மசோதா பற்றி எனக்கு எழுந்த சந்தேகங்கள்:

  • இந்த காப்புரிமை சட்டத்தினால் நமது விஞ்ஞானிகளுக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கும் வெளி நாடுகளில் காப்புரிமை செய்வதன் மூலம் ஒரு பன்னாட்டு அங்கீகாரமும், முதலீடும் கிடைக்கும் என்று கமல் நாத் கூறியுள்ளார். என் சந்தேகம். உதாரணமாக வேப்பிலைக்கு குடலை சுத்தம் செய்யும் சக்தி உள்ளது என்று நம் ஆராய்ச்சியாளர் ஒருவர் அமெரிக்காவில் இந்த குறிப்பிட்ட குணத்துக்கு காப்புரிமை வாங்க முடியுமா? வாங்கி அதன் அடிப்படையில் மருந்துகள் உற்பத்தி செய்து, அந்த product ஐ காப்புரிமை செய்ய முடியுமா?
  • புதிய கண்டுபிடிப்புகளுக்கு மட்டும்தான் காப்புரிமை அளிக்கபப்டும். ஏற்கனவே உபயோகத்தில் உள்ள ஒரு பொருளின் ஒரு புதிய அம்சத்திற்கு கிடையாது. இத்தனை நாளும் சாப்பிட்டு வந்த பாராசாட்டமால் மாத்திரைகளுக்கு புதிதாக கேன்ஸர் குணபப்டுத்தும் தன்மை இருப்பதாக இந்தியர் ஒருவர் கண்டுபிடித்தால் அதற்கு அமெரிக்காவில் காப்புரிமை பெற முடியுமா?
  • காப்புரிமை பெற்ற மருந்துகளையும் இந்திய நிறுவனங்கள் தயாரித்து மற்ற நாடுகளுக்கு எற்றுமதி செய்யலாம். - ராயல்டி கொடுத்துவிட்டு. ஆனாலும் விலையேறாது என்கிறார் அமைச்சர். அது எப்படி?
  • இந்தியாவில் காப்புரிமைக்காக போடப்படும் மனுக்களின் மீது ஆட்சேபம் தெரிவித்து காப்புரிமை பெறுவதைத் தடுக்க இடம் உள்ளது. காப்புரிமை பெறும் முன், பெற்ற பின்னரும் கூட. என்றும் சொல்லுகிறார். இது நல்ல சேதியாக இருக்கிறது. அதேபோல், கட்டாய உரிமம் என்ற முறையில் அத்யாவசியமான generic மருந்துகள் தயாரித்து சந்தையில் விற்கவும் வழி உள்ளது.
  • இந்த காப்புரிமைச் சட்டத்தில் தாவர வகைகள் இடம் பெறவில்லை. ஓ, அதான் green Brigade அமைதியாக இருக்கிறதோ? மசோதா பாஸ் ஆகி இரண்டு நாளாகியும் இன்னும் எதிர்ப்பு குரல்கள் கேட்கவில்லையே என்று பார்த்தேன் :-)


தொடரும் :-)

பி.கு: Wings On Fire போன பதிவில் பின்னூட்டத்தில் பொதிந்த மென்பொருளுக்கு காப்புரிமை கிடையாது என்று நான் சொல்லியிருந்தது சரியல்ல என்றார். அவர் சொல்வது இப்போது சரி. ஏனென்றால் மசோதா திருத்தங்கள் இடம்பெறும் முன் வந்த டிவி Ticker செய்தியில் முதலில் அப்படி போட்டிருந்தது. இப்போது திருத்தப்பட்ட மசோதாவில் பொதிந்த மென்பொருளுக்கு காப்புரிமை உண்டு.

Tuesday, March 22, 2005

ரொம்ப நாளாக இந்த காப்புரிமை சமாசாரத்தை இந்தியா ஒத்திப் போட்டு வந்தது. உலக வர்த்தக அமைப்பின் உடன்படிக்கைபடி, கடந்த ஜனவரி 1 ந் தேதி இதை நாம் நிறைவேற்றியிருக்க வேண்டும். கடந்த பல மாநாடுகளில் இந்தியாவின் மீது இந்த விஷயத்தில் வளர்ந்த நாடுகளுக்கு ஒரு கடுப்பு இருந்து கொண்டே இருந்தது. குறிப்பாக மருந்து உற்பத்தியில் அங்கே உற்பத்தியாகும் மருந்துகளை நாம் இங்கே அபப்டியே உற்பத்தி செய்ய வேண்டுமென்றால் அதற்கு காப்புரிமை வைத்திருக்கும் நிறுவனத்திடமிருந்து அதற்கு உரிமம் பெற்றிருக்க வேண்டும். ஆனால் ஒரு மருந்தை அப்படியே இங்கே உற்பத்தி செய்யாமல், செய்யும் முறைகளை நமக்கேற்றவாறு சில மாற்றங்கள் செய்து நாம் இங்கே உற்பத்தி செய்தால் அதற்கு original காப்புரிமை வைத்திருக்கும் நிறுவனத்தின் அனுமதி தேவையில்லை. அதாவது ஒரு முடிவான பொருளுக்குதான் காப்புரிமை, அதன் செய்முறைகளுக்கல்ல என்ற வாதத்தின் அடிப்படையில் பல வெளிநாட்டு மருந்துகள் இங்கே உற்பத்தி செய்யப்பட்டு சகாயமான விலைக்கு கிடைத்து வந்தது. இந்த Pharma சமாசாரம் ஒரு பகுதிதான். இன்னும் இதில் எவ்வளவோ சாதக / பாதகங்கள் உள்ளன.

இப்போதுதான் டிவியில் ஓடும் செய்திக் குறிப்பைப் பார்த்துவிட்டு வருகிறேன். ஹார்ட்வேரில் பதிக்கப்பட்ட மென்பொருளுக்கு காப்புரிமை கிடையாதாம். Embedded software. எனக்குப் புரிந்த அளவில் இது இந்திய மென்பொருள் துறையை மிகவும் பாதிக்கும் என்று தோன்றுகிறது. ஆரம்ப காலத்திலிருந்தே நாம் பெரும்பாலும் இந்த embedded software செய்வதில்தாம் வேகமாக முன்னேறியுள்ளோம். தற்போது செல்போன்களில், டிவி, போட்டோ என்று உலகத்தையே அடக்கி உற்பத்தி செய்யும் நிலையில் இதற்கு தேவையான மென்பொருள் உற்பத்தியில் இந்திய நிறுவனங்கள்தாம் முதல் நிலையில் உள்ளன. இது மாதிரி இன்னும் எத்தனையோ சரக்குகளின் "குடலுக்குள்ளே" பொதிந்திருப்பது இந்திய நிறுவனங்களின் மென்பொருட்கள்.

மூன்றாவதாக விவசாய சம்பந்தமான காப்புரிமைகள். இதுவும் ஆரம்பத்திலிருந்தே மிகவும் சர்ச்சைக்குள்ளான விஷயம். இப்போதே வந்தனா சிவாவின் குரல் எனக்கு கேட்க ஆரம்பித்துவிட்டது :-)

தற்போது பார்லிமெண்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள - முதலில் எதிர்த்த இடதுசாரிகள் ஓரளவு இப்போது ஏற்றுகொண்ட - இந்த மசோதாவில் என்ன இருக்கிறது என்பதை இனிதான் சற்று கண்ணில் பூதக்கண்ணாடி போட்டுக் கொண்டு பரிசீலனை செய்ய வேண்டும்.

கூடிய விரைவில் வருகிறேன் - எனக்கு புரிந்த அளவு விஷய்ங்களுடன். மற்ற பதிவுகளும் இதைப் பற்றி அலச தயாராக இருந்தால் கலந்து கொள்கிறேன்.

Sunday, March 13, 2005

சில நாட்கள் முன்பு எனக்கு ஒரு சினேகிதியிடமிருந்து ஈமெயில் வந்திருந்தது. அது ஒரு கூட்டு கடிதம் ( Mass mail). அதை அப்படியே தமிழில் கொடுத்துள்ளேன். இத்துடன் இந்த மகளிர் வாரம் நிறைவு பெறுகிறது :-)

Andy Rooney என்கிற CBSன் 60 நிமிஷம் என்கிற நிகழ்ச்சியின் தொகுப்பாளர் எழுதுவதாக இந்த கடிதம் தொடங்குகிறது.

over to Andy !

முப்பது வயது மேற்பட்ட பெண்கள் எனக்கு பிடிக்கும். அவர்கள் நடு நிசியில் உங்களை எழுப்பி " என்ன யோசனை?" என்று கேள்வி கேட்க மாட்டார்கள். அவளுக்கு நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதில் அதில் அக்கறையில்ல.லை. 30 வயதுக்கு மேலுள்ள பெண் தனக்கு பிடிக்காத விளையாட்டை முணுமுணுத்துக் கொண்டே பார்க்கவும் மாட்டாள். அவளுக்கு என்ன பிடிக்குமோ அதைத் தான் செய்வாள். அது ஓரளவு நன்றகவே இருக்கும். 30 வயதுக்க்கு மேலான பென்ணுக்கு தான் யார், தனக்கு என்ன வேண்டும் என்ன பிடிக்கும், பிடிக்காது என்று திட்டவட்டமாக தெரிந்திருக்கும். அவள் பெரும்பாலும் பிறர் - குறிப்பாக நீங்கள் - அவளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று சற்றும் கவலைப் படமாட்டாள்.
அதோடில்லை. இந்த பெண்கள் சற்று அதிகமாகவே புகழுவார்கள். - புகழப்படுபவர்களுக்கு தகுதி உள்ளதோ இல்லையோ ! இருந்தாலும் எங்கே யாரை எவ்வளாவு புகழ வேண்டும் என்று அவர்களுக்கு தெரியும் ! ஒரு ரெஸ்டாரெண்ட் போகும்போது அல்லது சினிமா பார்க்கும்போது அனாகரிகமாக கத்தி அமர்க்களம் பன்ண மாட்டாள். தன் பெண் சினேதிகளிடன் கணவரை அறிமுகபப்டுத்தும்போது தயக்கமில்லாமல் செய்வாள். அவளுக்கு மற்ற இளம் பெண்கள் போல் கணவனைப் பற்றி அனாவசிய பயம் இருக்காது. இன்னொரு காரணம், அவளுக்கு அவளுடைய சினேகிதகள் மேல் நிறைய நம்பிகை உண்டு. !!!!
*******
இந்த கடிதத்தைப் பார்த்ததும் இன்று நிறைய இளைஞர்கள் தனியாக இருப்பதை விரும்புகிறார்கள் என்று எப்போதோ படித்த புள்ளி விவரம் நினைவுக்கு வந்தது. கல்யாணமாவது கத்தரிக்காயாவது? சுதந்திரமாக இருப்பதைவிட்டுவிட்டு...? என்று நினைக்கும் கூட்டம் அதிகமாகிறது என்று கேள்விபட்டேன். இதைப் பற்றி இனி அடுத்த வாரம். தற்போதைக்கு விடை பெறுகிறேன்.

Friday, March 11, 2005

டில்லியில் இருந்த சமயம் அது. ஒரு பேட்டிக்கு கிளம்பிக் கொண்டிருந்தேன். பேட்டி காண வேண்டியவர் ஒரு ஓவியர். வங்காளப் பெண். அவரைப் பற்றி பின்புலன் விஷயங்கள் சேகரிக்கும்போது அறிந்து கொண்ட ஒரு விஷயம் மனதில் கொஞ்சம் நெருடிக் கொண்டிருந்தது. ஒரு மாதிரி விலாசம் தேடி அவர் வீட்டுக்கு சரியான நேரத்திற்கு சென்று விட்டேன். ஆனால் வாசலில் இருந்த கேட்டைத் திறக்குமுன் மனசுக்குள் ஒரு சின்ன கலக்கம். சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டேன். அமைதியாக எல்லா வீடுகள் மாதிரிதான் இருந்தது. திறந்து உள்ளே போய் காலிங்க் பெல்லை அமுக்கியதும் கதவைத் திறந்தது அவரேதான். பார்க்கவும் சாதாரணமாகதான் ஒரு சூரிதார் அணிந்திருந்தார். வேறு வித்தியாசமாக ஏதும் தெரியவில்லை. அறையை சுற்றி நோட்டம் விட்டேன். ஒரு ஓவியர் வீடு என்று தெரிந்தது. கலை வண்ணம் மிக்க அலங்காரம். மற்றபடி நான் கேள்விபட்ட சமாசாரத்திற்கான அடையாளம் ஏதுமில்லை.

சற்று யோசித்தவாறே அமர்ந்தவளிடம் குடிக்க தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தார் வேலையாள். பேட்டிக்கு சுருதி சேர்க்கும் வண்ணம் ஏதேதோ சம்பிரதாயமாக பேச ஆரம்பித்தவள், சட்டென்று வாய் தவறி மனதில் தொங்கிக் கொண்டு, தொண்டைக் குழியில் மாட்டிக் கொண்டிருந்த கேள்வியைக் கேட்டேவிட்டேன்.

" நீங்கள் ஒரு சூன்யக்காரி என்று கேள்விபட்டேனே...."

கட கடவென்று சிரித்தார் அவர். " கரெக்ட்.. ஓ, அதனால்தான் கொஞ்சம் தயங்கினாற்போல் இருக்கிறீர்களா? சூன்யக்காரி என்றால், துடைப்பத்தின் மேல் ஏறி வருவேன் என்று எதிர்பார்த்தீர்களா?" என்று சிரித்து என்னுடன் இயல்பாக உரையாடத் தொடங்கியவுடன் என் உதறல் கொஞ்சம் நின்றது. நாற்காலியில் நன்றாக உட்கார்ந்து கொண்டு ஓவியம் பற்றிய பேட்டியைத் தொடங்கினேன். (சூன்யக் கலை பற்றி அப்புறம்..)

இப்ஸிதா ராய். ஓவியர். இந்தியாவின் முதல் 21ம் நூற்றாண்டு மாடர்ன் சூன்யக்காரி. தொழில் முறையில் சூன்யக் கலையில் படித்து தேர்ந்தவர். இந்தக் கலையைப் பற்றி Beloved Witch, Sacred Evil போன்ற புத்தகங்கள் எழுதியுள்ளார்.
சென்ற வாரம் எகனாமிக் டைம்ஸ் பத்த்ரிகையின் ஒரு துணை பதிப்பில், நடிகை சரிதா சூன்யக்காரியாக நடிக்கப்போவதாக செய்தி வெளி வந்திருந்தது. அந்தப் படம் இந்த இப்சிதா ராயின் Sacred Ecil என்கிற புத்தகத்தில் வரும் ஒரு உண்மை நிகழ்ச்சியை அடிப்படையா க வைத்து எடுக்கப்படுகிறது. தான் எப்படி இந்த துறைக்கு வந்தார், சூன்யக் கலையின் சிறப்புகள் என்று தன் அனுபவங்களையும் தான் ஈடுபட்ட சில குறிப்பிட்ட சூன்ய நிகழ்ச்சிகளையும் புத்தகமாக எழுதியுள்ளார். டில்லியில் அப்போது சூன்ய வகுப்புகளும் எடுத்து வந்தார். - 1994 ம் வருடம் என்று நினைக்கிறேன்.

அவரிடம் பேசினதெல்லாம் இப்போது அவ்வளவாக நினைவில்லை. அந்த பேட்டி வெளியான அந்த பழைய இதழும் இப்போது என்னிடம் காணவில்லை. ( மாயமாய் மறைந்ததோ??!!!)

ஆனால் வெகு நாட்களுக்குப் பிறகு இவர் பெயரைப் பத்த்ரிகையில் படித்ததும் எனக்கு அவரை சந்திக்க சென்ற அந்த நாள் நினைவிற்கு வந்துவிட்டது. அவர் கூறிய சில விஷயங்கள் - என் நினைவிலிருந்து தோண்ட முடிந்தவரை :-)

" சூன்யம் என்பது ஒரு சிறப்பான கலை. இந்த வித்தையின் வெற்றி, அடிப்படையில் பஞ்ச பூதங்களின் சக்தியை ஆக்கபூர்வமாக ஒருமுனைப்படுத்துவதில்தான் அடங்கியிருக்கிறது. இதன் மூலம் பல வியாதிகளையும் குணபப்டுத்த முடியும். அடிப்படையில் இது ஒரு அறிவு சம்பந்தமான துறை. எவரையும் துன்புறுத்த வேண்டும் என்று யாரும் இதை உருவாக்கவில்லை." இந்த ரீதியில் இருந்தது அவர் பேசியது.
கிட்டதட்ட இந்த பேட்டிக்காக இவரை சந்தித்த அடுத்த சில நாட்களில் இன்னொரு வேலை வந்தது. சேஜோ சிங் என்ற பெண் witch hunt என்ற பெயரில் இந்திய கிராமங்களில் "வேண்டாத" பெண்கள் துன்புறுத்துவது பற்றி ஒரு டாகுமெண்டரி படம் எடுத்திருந்தார். இந்தப் படத்தையும் பார்த்து இவரையும் பேட்டி காணும் வேலை.

பீஹார், மேற்கு வங்காளம் போன்ற இடங்களில் இன்றும் சூன்யக்காரிகள் என்று பெயர் சூட்டபட்டு பெண்கள் துன்புறுத்தப்படுகிறார்கள் என்று இந்தப் படம் விரிவாக விளக்கியது. சூன்யக் காரிகள் என்று அழைக்கப்பட்டு ஊர் மக்களிடமிருந்து ஒதுக்கப்பட்டு இருக்கும் மூன்று பெண்களின் பேட்டிகளும், இந்த சூன்யக்காரிகளை "குணமாக்கும்" ( நம்ம ஊர் பேய் விரட்டுதல்???) பூசாரி ஒருவரின் பேட்டியும் இதில் இருந்தது. ஒரு பெண்ணின் கணவர் விட்டுச் சென்ற நிலம் அவர் பெயரில் இருப்பதை அபகரிக்க நினைக்கும் உறவுக்காரர்கள் அந்தப் பெண்ணிற்கு சூன்யக்காரி பட்டம் கட்டி "தண்டிக்கப்படுகிறார்." இப்படி பழி சுமத்தபப்ட்ட பெண்ணிற்கு யாராவது ஆதரவாக பேசினல் அவர்களும் தண்டிக்கபப்டுவார்கள். சில சம்யம் குடும்பமே "சூன்யக் குடும்பம்" என்று தண்டிக்கப்படுமாம். இவர்களிடமிருந்து தண்டனையாக அதிகமாக பணம் செலுத்த வைப்பது, அவர்களால் முடியாவிட்டால் ஊரிலிருந்து தள்ளி வைப்பது, அடித்து துன்புறுத்துவது என்று இவர்கள் படும் இன்னல்கள் பல. இதில் கவனிக்க வேண்டிய விஷயம், வறுமை அதிகமாகும்போதெல்லாம் இப்படி சூன்யகாரி வேட்டையும் அதிகமாகிறதாம். தாங்கள் படும் கஷ்டங்களுக்கு யார் மேல் பழி போடலாம் என்று தேடுவது மனித இயல்பு. இதன் அடிப்படையில்தான் இந்த சூன்யக்காரிகள் வேட்டை நடக்கிறது என்று ஆராய்ச்சி செய்து, படமும் எடுத்த சேஜோ சிங் கூறினார். சில சம்யம் இந்தக் கொடுமைகளைக் கண்டும் காணாதது மாதிரி பஞ்சாயத்தும் போலீசும் இருக்கின்றன என்றார். பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் குற்றங்கள் நகர்புறங்களில் ஒரு மாதிரி என்றால் கிராமப்புறங்களில் இன்னொரு வகை.

இந்தப் படம் எடுக்கப்பட்டு 10 வருடம் ஆகிவிட்டது. இன்று நிலைமை எப்படி இருக்கிறது? அந்த சேஜோ சிங்கையும், இப்சிதா ராயையும் மறுபடி கண்டு பேட்டி எடுக்க வேண்டும் என்று தோன்றுகிறது. இளம் தலைமுறை செய்தியாளர்கள் யாராவது ரெடியா?
ஷோபா டேவின் நாவல்களில் ஒன்று கூட படித்தது கிடையாது. பொதுவாக அவர் புதினங்களுக்கு வரும் விமரிசனங்களைப் படித்தே அவற்றை பற்றி தெரிந்துவிடுவதால் படிக்க வேண்டும் என்ற ஆவல் இருந்ததில்லை.
ஆனால் ஷோபா டே என்கிற பெண் எனக்கு சுவாரசியமானவர். அவர் பத்திரிகைகளில் எழுதும் பத்திகளையும், பேட்டிகளில் அவர் கருத்துக்களையும் பொதுவாக படிப்பேன். மாடலாக ஆரம்பித்து, ஸ்டார் டஸ்ட்டில் ஹிந்தி சினிமா நட்சத்திரங்களைப் பற்றி "பூனை" போல் பத்திகள் எழுதி எழுபதுகளில் டஸ்ட் ( புழுதி :-) ) கிளப்பியவர். நான் அதைச் சொல்லவில்லை. ஆனால் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக, "Society", Celebrity, என்று பத்த்ரிகை உலகில் ஆசிரியராக முன்னிலைப் படுத்திக் கொண்டது, பிறகு எழுத்தாளராக உருவாகியது என்று வளர்ந்தவர் - முடிந்தவரை மேல் பூச்சுக்கள் இல்லாமல், பாவனைகள் இல்லாமல் இயல்பாக இருப்பதாக இவரைப் பார்த்தால் தோன்றும். மேல் தட்ட வர்க்கத்துடன் - ஆங்கில தின்சரிகளின் மூன்றாம் பக்கம் பிரசுரமாகும் பார்ட்டிகள், முக்கிய பிரமுகர்கள் என்று இவர் வளைய வந்தாலும், இவற்றுக்கப்பால் ஒரு வெளிப்படையான வாழ்க்கை வாழ்பவர். ஒளிவு மறைவு இல்லாமல் மனசில் பட்டதை சொல்வது ரசிக்கும்படி இருக்கும். இதில் என்ன வேடிக்கை என்னவென்றால் இவர் எழுதும் கதைகளில் ஏனோ தானோவென்று வாழும் பெண் பாத்திரங்கள் இருந்தாலும், விவாகரத்து, கூடா நட்பு என்று இந்திய பண்பாட்டுக்கு முரணாக பல அம்சங்கள் இருந்தாலும் இவருக்கு உண்மையில் திருமண வாழ்க்கையிலும் குடும்பம், தாய் போன்ற செண்டிமெண்ட் சமாசாரங்களிலும் மிகவும் பிடிப்பு உண்டு; நம்பிக்கை உண்டு. குறைந்த பட்சம் அப்படி தன்னை வெளிப்படுத்திக் கொள்வதில் வெகு முனைப்பாக இருப்பார். பேசாப்பொருளாக இருந்த பல விஷயங்களைப் பேசப் பல பெண்கள் தயங்குவதால் அவர்கள் சார்பாக தான் குரல் கொடுப்பதாக சொல்லியிருக்கும் இவர் இவற்றையெல்லாம் வியாபார நோக்குடனே எழுதுகிறார் என்ற குற்றச்சாட்டும் உண்டு. ஆனால் யாருக்குதான் பணம் சம்பாதிக்க பிடிக்காது? நான் ஒன்றும் சமூக சேவகி அல்ல என்ற ரீதியில் விமரிசங்களை அலட்சியம் செய்துவிடுவார்.

இவர் படைக்கும் கதாபாத்திரங்களிலிருந்து, இவர் கதை அமைக்கும் சூழல்களிலிருந்து இவர் மாறுபட்டவர் என்று ஒரு அபிப்பிராயம் ஏற்படுத்த இவர் மிக முயல்கிறார் என்று எனக்கு தோன்றும். மத்தியதர குடும்பத்து நெறிகள்தாம் தான் இன்றும் மதிப்பது என்பது அவர் அடிக்கடி சொல்லும் விளக்கம். எழுபதுகளில் அவர் மறுமணம் புரிந்து கொண்டு, உன் குழந்தைகள், என் குழந்தைகள் நம் குழந்தைகள் என்று 6 குழந்தைகளுடன் பெரிய கூட்டுக் குடும்பத்தை இவர் அமைத்தபோது அது பெரிதும் அலசப்பட்டது. விவாகரத்து, மறு மணம் என்பவை கசப்பான அனுபமாக இல்லாமலும் இருக்கலாம் என்று வாழ்ந்து காட்டுவது என்று முடிவெடுத்தவர் போல் இருக்கும் இவரைக் கவனித்தால். மறுமணம் புரிந்த பின்னர் ஒரு நல்ல மனைவியாகவும், பிறகு ஒரு நல்ல தாயாக தன் 6 குழந்தைகளுடன் ( 2 +2+2) உள்ள தன் பிணைப்பை பற்றி இவர் பேசாத பேட்டி இருக்காது. இவருடைய " Speed Post" Letters to my children, என்கிற புத்தகம் ஒரு அம்மா தன் குழந்தைகளுடன் தோழி போன்று எப்படி சினேகமாய், பக்க பலமாய், இருக்க வேண்டும் என்ற தன் கருத்துக்களை முன்வைத்துள்ளார். சில சமயம் இவர் இப்படியெல்லாம் தன்னை ஒரு குடும்பத்தலைவியாக, தாயாக, மனைவியாக முன்னிலைப் படுத்த ஏன் இவ்வளவு சிரமப்படுகிறார் என்று தோன்றும்.

இப்போது இவர் புதிதாக இன்னொரு நாவல் எழுதுவதில் முனைந்துள்ளார். கரு? "குடும்பம் ஒரு ஸ்தாபனம்" !! ஏன் இப்படி குடும்பம் என்கிர கருத்துக்கு இப்படி வக்காலத்து வாங்குகிறீர்கள் என்றால், "நாடு, இனம், மொழி இவையெல்லாவற்றையும் கடந்து காலங்காலமாக தொன்றுதொட்டு மனித இனம் முழுக்க ஒரே மாத்ரியாக நெறியுடன் கட்டுகோப்பாக இருக்கும் வேறு ஏதாவது அமைப்பு ஒன்று காட்டுங்கள் பார்க்கலாம். இத்தனை காலமும் அழியாது உலகம் முழுக்க இன்னும் மக்கள் நம்பிக்கை வைத்துள்ளார்கள் என்றால் இந்த ஸ்தாபனத்தில் நிச்சயம் ஏதோ அருமை இருக்க வேண்டும் " என்கிறார் !!

மொத்தத்தில் இவரைப் பற்றி இவர் கதைகள் மற்றும் இவர் வாழும் சமூக சூழல் காரணமாக இவரைப் பற்றி எழுந்துள்ள பிம்பத்திற்கும், தான் உண்மையில் இவற்றிலிருந்து வேறுபட்டவர் என்று இவர் அவ்வப்போது ஸ்தாபிக்க முயலுவதுமாக - ஷோபா டே ஒரு சுவாரசியமான கலவை.

Thursday, March 10, 2005

வெள்ளைமாளிகையில் ஒரு வலைப் பதிவாளர் !

மாய்ந்து மாய்ந்து வலைப் பதிந்து என்ன லாபம் என்று எப்போதாவது தோன்றினால் தொய்ந்து போகாதீர்கள். யார் கண்டார்கள் ஒரு நாள் ராஷ்டிரபதி பவனின் அங்கீகாரம் பெற்ற பத்திரிகையாளர்களில் ஒருவராக மாறலாம். அப்படிதான் அமெரிக்காவில், காரட் க்ரா·ப் (Garret Graff) என்ற ஒரு வலைப் பதிவாளர் அமெரிக்க ஜனாதிபதி மாளிகையின் ஒயிட் ஹவுஸில் நுழைந்து தகவல் சேகரிக்க அனுமதி பெற்றுவிட்டார். ஒரு வலைப் பதிவாளர் இப்படி அங்கீகாரம் பெறுவது இதுவே முதல் முறை. என்ற இவர் பதிவில் வாஷிங்டனில் நடக்கும் ஊடக் துறை வம்புகள் செய்திகள் இவைதாம் பிரதானம். இந்தச் செய்தியைப் படித்தவுடன் இந்தப் பதிவை எட்டிப் பார்த்தேன். வடிவமைப்பு, உள்ளே செய்திகள் எல்லாம் சிறப்பாகதான் இருக்கு. பலராலும் படிக்கப்படும் ஒரு பதிவைப் பொதுவாக ஒரு போக்குவரத்து சந்திப்பு என்று நான் நினைப்பேன். பல வலைப்பதிவாளர்களும் வந்து போகும் இடம் என்பதால். க்ரா·பின் பதிவு சுவாரசியமாக இருக்கிறது. விளம்பரங்கள், அவசியமான சுட்டிகள், வேலை வாய்ப்பு என்று களை கட்டி அமைந்துள்ளது.
வலைப் பதிவுகள் இந்தியாவில் இன்னும் அவ்வளவு கவனம் பெறவில்லை என்றாலும் ஆங்காங்கே குறிப்பிடப்படுகின்றன. எகனாமிக் டைம்சில் கட்டுரை முதலில் வெளியானதுக்கு பிறகு கூட Main Stream media வில் இந்தியப் பதிவாளர்களைப் பற்றி அதிகம் ஊடகங்களில் பற்றி காணோம். ஆனால் நேற்று ஹிந்துவின் மெட்ரோ பிளஸில் ஒரு கட்டுரை வந்துள்ளது. ( இன்னும் இணைய பதிப்பில் சுட்டி கிடைக்கவில்லை.) சென்னையில் வரும் supplement பத்திரிகையில் தமிழ் பதிவாளர்களைப் பற்றி ஒரு வரி இருக்க வேண்டாமோ? இல்லையே...! அதுசரி. தமிழ் பத்திரிகைகளே பதிவுகளைப் பற்றி கண்டு கொள்வதில்லையே? நானூற்றி சொச்சம் பேர் எழுதிக் கொண்டு இருக்கிறார்கள்; பலவித எண்ணங்கள் பதிவாகின்றன. சத்தம் போடாமல் ஒரு நிகழ்வு நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்ற உண்மை தமிழ் ஊடகங்களின் கவனத்தைப் பெறவில்லை என்பது ஆச்சரியமாகதான் இருக்கிறது.

Wednesday, March 09, 2005

நேற்று மார்கெட் போகும்போது அப்படியே சலவை நிலையம் போகும் வேலையும் இருந்தது. அங்கே இருக்கும் பெண் எப்போதும் நான் துணிகளைக் கொடுக்கும்போதும் வாங்கும்போதும் மௌனமாக கடமையாக - இயந்திரம் போல் செய்வார். நேற்று நான் போகும்போது அவர் முகத்தில் ஒரு புன்னகை. புது புடவைக் உடுத்திக்கொண்டு முகத்தில் ஒரு மலர்ச்சி இருந்தது. நானும் சிரித்துக் கொண்டே "என்ன, Women's Day" என்று கொண்டாட்ட மூடில் இருக்கிறீர்களா என்று பேச்சு கொடுத்தேன். அவரும் சிரித்துக் கொண்டே, கொண்டாட்டம்லாம் சரிதான் ஆனா, நம்மை யாராவது மதிச்சால்தானேங்க கொண்டாட்டம் எல்லாம்," என்று இயல்பாக கூற வந்தவர் சட்டென்று நிறுத்திக் கொண்டார். எனக்கு அவர் ஏதோ சொல்ல நினைப்பதுபோல் பட்டது... அவருடைய எண்ணச் சிதற்கள் கீழே விழும்போதே பிடித்துவிடும் ஆர்வத்தில் "என்ன சொன்னீங்க..."? என்று மறுபடி வினவும்போது அவர் சட்டென்று சுதாரித்துக் கொண்டார். அந்தக் கடையை அவரும் அவரது கணவருன்தான் நடத்துகிறார்கள். அவரது கணவர் கௌண்டர் பின்னாடி இருந்த அறையில் ஏதோ வேலை பார்த்துக் கொண்டிருந்தார். இந்தப் பெண் சொல்ல வந்ததை ஏன் முழுங்கினார் என்று புரிந்துவிட்டது. அவர் என்ன சொல்ல வந்தார் என்று உங்களுக்கும் அவர் கோடி காட்டிய ஒரு வரியிலேயே புரிந்திருக்கும்.
பத்மா அரவிந்த், என் நேற்றைய பதிவிற்கு அளித்த தன் பின்னூட்டத்தில், பெண்கள் இன்னல்படும் நிகழ்ச்சிகள் பலவற்றை சுட்டி காட்டி, நான் முன்னே சொல்லியிருந்த "ஆண்கள் மாற்றம்" எல்லாம் பரவாலாக இல்லை; மிகச் சிறிய சதவிகிதம்தான் அபப்டி மாற்றங்கள் நிக்ழந்துள்ளன என்று எழுதியுள்ளார். அவருக்கு என் பின்னூட்டத்தில் சொல்லியிருக்கும் கருத்தையே இங்கும் முன் வைக்கிறேன். பெண்களுக்கு எதிரான வன்முறைகள், அநியாயங்கள் இன்னும் பல இடங்களில் நடக்கின்றன என்பதாலேயே கண் முன்னால் தெரியும் நல்ல மாற்றங்களையும் அங்கீகரிக்க வேண்டும் இல்லையா ? சந்திரவதனா குறிப்பிட்டமாதிரி இன்றைய இளம் தலைமுறையில் மாற்றங்கள் இயல்பாகவே தெரிகிறது. மேலே சொன்ன லாண்டிரி பெண் பெண்கள் கணவனிடமிருந்து ஒரு " மதிப்பை", மரியாதையை எதிர்பார்க்கிறார்கள் என்று புரிகிறது. அது கிடைக்கவில்லை என்று அவர் உணருகிறார். "காலத்தின் கட்டாயத்தினால்", இன்று அவர் கௌண்டர் முன் நின்று கணவருக்கு இணையாக வேலை செய்தாலும் அவரை, அவர் எண்ணங்களை மதித்து நாலு வார்த்தை பேச ஆள் இல்லை என்று அவருள் ஒரு வருத்தம் தென்பட்டது. நான் மேலே கேட்ட கெள்விக்கு மழுப்பலாக சமாளித்தார். லேடீச் டே என்றால் நாங்க தெரிஞ்ச சினேகிதங்க ஒருவருக்கொருவர் இனிப்பு பகிர்ந்து கொள்வோம். ஆனால் அப்படி ஒன்றும் எனக்கு நிறைய சினேகிதிகளும் இல்லை, " என்றார்.

எனக்கு அவர் குடும்பத்தை தெரியாது. ஆனால் நிச்சயமாக அவருக்கு ஒரு மகன் இருந்திருந்தால் அவர் தன் மனைவியை இன்னும் சமமாக பாவிப்பார் என்பது என் ஊகம். மாற்றங்கள் என்பது ஒவ்வொரு தலைமுறையிலும் மில்லி மீட்டர் அளவாவது நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. சமூக மாற்றங்கள் பொதுவாக கலாசாரம், சரித்திர பிண்ணனி, என்று இப்படி பல வேர்களைப் பொறுத்து நிகழ்கிறது. பெண்களை தாழ்வாக நினைக்கும் சமூகப் பார்வை பழைய ஆசிய பழங்குடி மக்களிடமும் ஆப்பிரிக்க பழங்குடியினரிடமும் கிடையாது. அங்கே தாய் முறைதான் வம்சாவளி. ஆனால் ஜப்பானில் இன்னும் பெண்களுக்கு சம உரிமை அரிது. பல அலுவலகங்களில் இன்றும் தேநீர் தயாரித்து கொடுப்பது போன்ற உபசரிப்பு வேலைகள் பெண் சக பெண் ஊழியர்களால் செய்யப் படுகின்றன என்று கேள்விபட்டேன். ( ஜப்பானில் இருக்கும் பதிவாளர்கள் அவர்கள் அனுபவத்தையும் இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள் ) பொதுவாக குடும்பங்களிலும் நம் பழைய தலைமுறை மாதிரி பெண்களை ஒடுக்கும் நிறைய பழக்கங்கள் உண்டு. ( கெய்ஷா பெண்மணிகள் ஒரு உதாரணம்)

நடுவில் வரும் சில கலாசார தாக்கங்கள் எப்படி ஒரு சமூகத்தின் பார்வையை மாற்றுகின்றன என்பதற்கு ஜப்பானும் ஒரு உதாரணம். ஜப்பானில், பல வருடங்களுக்கு முன்னர் அரச குடும்பத்தின் பெண் வாரிசுகள் நாட்டை ஆண்டதாக சரித்திரம் இருந்தாலும் நடுவில் எப்போதோ அரசியல் சாசனத்தில் பெண் வாரிசுகள் அரசியாக முடியாது என்ற ஒரு கட்டுபாடு எப்படியோ இடம் பெற்றுவிட்டது. அதன்படி, இன்று ஜப்பானிய அரசியல் சாசனப்படி, இளவரசர் நருஹிட்டோவின் மகள் ராணியாக ஆள முடியாது. இன்று ஜப்பானின் அரசு குடும்பத்தில் வேறு ஆண் வாரிசுகளே இல்லாத நிலையில் இளவரசர் நருஹிட்டோவிற்கு அடுத்து யார் மகுடம் சூட்டுவது என்ற ஒரு கேள்வி எழும். இதற்கு வழி காண அரச குடும்பத்து பாட்டி ஒருவர் பெண் வாரிசுகள் அரசியாகலாம் என்று அரசியல் சாசனத்தை மாற்றும்படி சொல்லிக் கொண்டிருக்கிறார். அதற்கு அவர் ஏற்கனவே ஜப்பானின் சரித்திரத்தில் 8 அரசிகள் ஆண்டதை மேற்கோள் காட்டுகிறார்.

ஜப்பானில் மறுமுறை சரித்திரம் எழுதப்படும் என்று நம்புவோம். நம் ஊரில் மேலே சொன்ன சலவை நிலையப் பெண் போன்றவர்கள் உண்மையாகவே தாங்கள் மதிக்கப் படுவதாக என்ணும் நாள் விரைவில் வரும் என்றும் நம்புவோம்.

Tuesday, March 08, 2005

பெண்கள் தின வாழ்த்துக்கள் :-)

சக பெண் பதிவாளர்களுக்கும் வாசகிகளுக்கும் பெண்கள் தின வாழ்த்துக்கள் :-)

காலத்தின் போக்கில் மனிதர்கள் மாறும் விதம் எப்போதுமே சுவாரசியமானதுதான். நாம் எவ்வளவு தூரம் கடந்து வந்துள்ளோம் என்று சற்று திரும்பி நம் சென்ற தலைமுறைகளைப் பார்த்தால் புரியும்.

என் தாத்தா பாட்டியை பெயர் சொல்லி அழைத்தது இல்லை என்று சொல்லுவார்கள். இன்னும் எனக்குத் தெரிந்த பழைய தலைமுறை ஆண்கள் தங்கள் மனைவியரைப் பெயர் சொல்லி அழைத்தது இல்லை. மனைவியை அழைக்க பொதுவாக உபயோகிக்கப்படும் வார்த்தைகள் - "ஏய்", "இந்தா", "இங்கே வா", "அடியே", "டீ....." மனுஷி, "அவ", "ம்".... இன்னும் சில. அந்த கடைசியில் சொன்ன "ம்" க்கு கூட எத்தனை சக்தி தெரியுமோ? ஒரு கனைப்பு, ஒரு உறுமல், என்று மனைவியை அழைக்கும் "வார்த்தைகள்" பல உண்டு. சின்ன தாத்தா ஒருவர் தன் மனைவியை "இந்தா" என்று அழைக்கும் தொனியிலேயெ அவர் எதற்காக கூப்பிடுகிறார் என்று பாட்டிக்கு புரிந்து போய்விடுமாம். கடுப்பாக, சாந்தமாக, கோபமாக, எரிச்சலாக, அன்பாக ( எப்போவாவது) என்று அந்த "இந்தா" வில் ஆயிரம் உணர்வு வெளிப்பாடு இருக்குமாம். எப்போதும் மனைவியிடம் ஒரு கடு கடு முகத்துடன்தான் பேசுவாராம். ஏன்? ஆங்....அதெப்படி? கணவன் மனவி தங்கள் அன்பை வெளிப்படையாக காண்பித்துக் கொள்வது மகா குற்றமாயிற்றே? முகத்தில் கொஞ்சூண்டு சிரிப்புடன் பேசினாலே பெண்டாட்டிதாசன் என்று சொல்லிவிடுவார்களே....? அப்புறம் ஆண் என்கிற இமேஜ் என்ன ஆவது? தவிர இப்படி உருட்டி, மடக்கி கொஞ்சம் முறுக்காக இருந்தால்தான் "அவர்கள்" ஒரு "நிலையில்" இருப்பார்கள். "கொஞ்சம் இடம் கொடுத்தால் போச்சு. இவர்களுக்கு அதிகாரம் தலைக்கு ஏறிடும்." இது பரவலாக அந்த தலைமுறை ஆண்கள் தங்கள் மனைவியரைப் பற்றி சொல்லும் கமெண்ட். விதி விலக்குகள் உண்டு.. எங்கள் குடும்பத்திலேயே கூட. ஆனால் விதிவிலக்கு என்றுதான் சொல்கிறேன். பரவலாக மனைவி என்பவள் தன் உடமை, தனக்கு அடிபணிந்தவள், அடிபணிய கடமைப் பட்டவள் என்ற மனப்பான்மை ஓங்கியிருந்த காலம் அது. வேறொரு தாத்தா பாட்டி இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட கருப்பு/ வெள்ளை புகைப்படம் ஒன்றை அந்த தாத்தாவின் சந்ததியினரின் வீட்டில் பார்த்தபோது தோன்றிற்று. போட்டோவில் பாட்டியின் முகத்திலும் தாத்தாவின் முகத்திலும் " Cheese" சொல்லும் அளவு புன்னகை ! எப்போதும் மனைவியிடம் கடுகடுக்கும் அவருக்கு எப்படி அன்று முகத்தில் புன்னகை வந்தது என்று எனக்கு ஒரு எக்குத் தப்பாய் ஒரு கேள்வி தோன்றும். சரிதான், அதுவும் போட்டோ என்கிற "சாஸ்திர" கட்டுபாட்டிற்கு உடன் பட்டிருப்பார் என்று நானே பதிலும் சொல்லிக் கொள்வேன்.

இன்னொரு நண்பர் வீட்டில் பெரியப்பா ஒருவர். வீட்டில் எல்லோரும் அரட்டை, ஆட்டம் என்று கொட்டம் அடித்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் அந்த பெரியப்பாவின் வண்டி சத்தம் வாசலில் கேட்டதுமே அவரவர் சிட்டாய் மூலைகளுக்கு பறந்துபோய் ரொம்ப மும்முரமாய் "வேலை" பார்ப்பார்கள். இவருக்கு மெள்ளவே பேசத்தெரியாது. எப்பவும் மிரட்டலும் அதிகாரமும்தாம். ஆனால் இவ்ருடைய மனைவி நேர் எதிர். நகைச்சுவையொழுக பேசுவார். சிரிக்க சிரிக்க வீட்டு சமாசாரங்கள் பேசுவார் என்று சொல்வார்கள். நன்றாக பாடவும் பாடுவார். ஆனால் தனக்குள்ளேயேதான். தாத்தா காதில் விழாமல். ஊக்கம் கொடுத்திருந்தால் பெரிய பாடகியாகவே வந்திருப்பார். இன்னொரு பழைய தலைமுறை உறவினர், மருமகளுடன் கூட நேருக்கு நேர் பேச மாட்டார். மருமகள் என்பவள் வீட்டில் ஏவலுக்கு இன்னொரு ஆள். இதை இங்கே வை; அதை கொண்டுவா... தோட்டக்காரன் வந்தானா? என்று கேள்விகள், கட்டளைகள் பொதுவாக இருக்கும். யாரைச் சொல்கிறார் என்று மருமகள் புரிந்து கொள்ள வேண்டும். இதெல்லாம் தவிர, பெண்களின் பிரத்தியேக இயற்கை உபாதை நாட்களில் இந்த மாதிரி பழைய தலைமுறை சம்பிரதாயம் இருக்கும் வீடுகளில் பெண்கள் படும் கஷ்டம் சொல்லி மாளாது. மாட்டுத் தொழுவம்தான் இருப்பிடம். ஊர்வன, நெளிவன எப்போ வந்து தாக்குமோ என்று பயந்த வண்ணம் பகல் பொழுது கழியும். சில வீடுகளில் பெரிய மனது பண்ணி இரவு வேளைகளில் மட்டும் பின் பக்க தாழ்வாரத்தில் இடம் கிடைக்கும். வீட்டு ஆண்கள் இந்த சமயத்தில் தீட்டு பெண்களைப் பார்க்ககூட மாட்டார்கள். மாமியார் அல்லது வீட்டில் மற்ற பெண்கள் நாலடி தூரத்தில் வைக்கும் சாப்பாடு பெரும்பாலும் பரிதாப நிலையில் இருக்கும். முறுக்கு போன்ற திண்பண்டங்கள் கிரிகெட் பால் கணக்கில் விட்டெறியப்படும்போது சாமர்த்தியம் இருந்தால் கேட்ச் பிடித்துக் கொள்ளலாம்.

சரி, மேடையில் திரை மாறுகிறது. வருடம் 2000 சொச்சம். மேலே சொன்ன உறவினர்களின் அடுத்த தலைமுறை குடும்பங்களைப் பார்க்கிறேன். அவர்களுடைய மகன்கள், மகள்கள் என்று குடும்பம் விரிந்துள்ளது. ஆனால் பார்வையில்தாம் எவ்வளவு வித்தியாசம்? அறுபது வயதாகும் குடும்பத் தலைவர் தன் மனைவியுடனும், மருமகளுடனும் தோழமையுடன் பேசுகிறார். சினிமா, அரசியல் என்று வீட்டுப் பெண்களும் ஆண்களும் ஒன்று சேரும்போது கலகலவென்று சபை கூடுகிறது. மன வித்தியாசங்கள் இல்லாமல் இல்லை. அவையும் நேருக்கு நேர் பேசப்பட்டு சரிபடுத்தப் படுகிறது.

வெளியில் ரயில் பயணம் செய்யும்போது அடிக்கடி கன்ணில் படும் ஒரு காட்சி. மனைவிக்கு அனுசரனையாக கைக்குழந்தையைப் பார்த்துக் கொள்ளும் இளம் கணவர்கள். இரவு குழந்தை அழும்போது தன்னிச்சையாக நீ படுத்துக்கோ, நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லும் கணவர்கள். முகம் சுளிக்காமல் குழந்தை ஈரம் செய்தால் துணி மாற்றி பால் கரைத்து.... வெளியில் ஓடிப்போய் பழம் பிஸ்கெட் வாங்கி... மனைவிக்கு பிடிக்கும் என்று தேடிப் போய் பெண்கள் பத்திரிகை வாங்கி.... இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்... சில சமயம் மனசு நெகிழ்ந்துதான் போகிறது.

ஆண்கள்தாம் எவ்வளவு மாறிவிட்டனர் ?? !!

மகளிர் தினத்தில் மாறி வரும் ஆண்களுக்கு ஒரு "ஓ" போட வேண்டாமா? :-)

Monday, March 07, 2005

கைதட்டலோ / அழுகிய தக்காளியோ........ :-)

வலைப் பதிவுகளைத் தொடர்ந்து இந்த 22 மாதங்களாக கவனித்து வருபவள் என்ற முறையில் சில அடிப்படை என்ணங்களை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.
சென்ற வாரம் கண்ணன் எழுதியிருந்தார் - மாய்ந்து மாய்ந்து பதிவுகள் எழுதினாலும் யார் படிக்கிறார்கள் என்றே தெரிவதில்லை; பின்னூட்டங்கள் வருவதில்லை என்று எழுதியிருந்தார். அவ்வளவுதான்; ஊதிய தணல் நெருப்பாய் எரிவதுபோல் மட மடவென்று அந்த பதிவுக்கு போட்டி போட்டுக் கொண்டு பின்னூட்டம் வந்து சேர்ந்தது. பின்னூட்டம் வருகிறதோ இல்லையோ, நாம் எழுதுவதை சிலர் - பல சம்யம் பலர் - படிக்கிறார்கள் என்பதை இது நிரூபிக்கிறது. மீனா சொன்னதுபோல் பின்னூட்டம் விடாமல் இருக்க எத்தனையோ காரணங்கள் இருக்கலாம். கருத்து பெட்டி காலியாக இருக்கே என்று மனம் சோர்ந்துவிடாமல் என் கடன் பணி செய்து கிடப்பதே அல்லது, கருமமே கண்ணாயினார் என்பதுபோல் நம் மனதில் தோன்றுவதை உடனுக்குடன் எழுதி விண்வெளியில் நமது குடிலில் போட்டுவிட வேண்டும். கண்காட்சி மாதிரி ஸ்டால் போட்டச்சு என்றால் அதை அழகுறவும் ஆரோக்கியமானதுமாக வைத்துக் கொள்வது நம் வேலை. அதனால் இடையில் அவ்வப்போது தொய்ந்து போகாமல் எழுதுவது முக்கியம். என்ன எழுதுவது, எது, எப்படி, ஏன் என்பனவெல்லாம் தானே இயல்பாக வரும். இன்று சிக்கல் பதிவில், தமிழ்ப்பாம்புவின் ஒரு நோக்கு ( observation) சுவாரசியமாக இருந்தது. பல பதிவுகளின் தலைப்பில் பதிவாளர்களுக்கு தங்களைப் பற்றி தாங்களே சொல்லிக்கொள்வதிலிருக்கும் தயக்கம் வெளிப்படுவதாகவும், இது தமிழர்களுக்கே உரித்தான ஒரு இயல்பு என்றும் குறிப்பிட்டிருந்தார்.
என் நோக்கில் நம்முடைய இன்னொரு இயல்பான செயல் சட்டென்று ஒரு நட்பு வட்டத்தை உருவாக்கிக் கொள்வதுதான். உலகின் பல மூலைகளில் இருந்தாலும் முன் பின் பார்த்தறியாமல் இருந்தாலும் ஒரு சினேக பாவம் பல பதிவுகளில் / பின்னூட்டங்களில் இழையூடுகிறது. சீண்டல்களும், நகைச்சுவையும் பதிவுகளுக்கு சுவாரசியம் கூட்டுகின்றன என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இது சில சமயம் அளவு மீறி குழந்தைத் தனமாக ஆகிவிடாமலும் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அதேபோல் கொஞ்சம் அதிகமாகவே உணர்ச்சி வசப்படுதலும் தமிழர்கள் குணம். பதிவுகளும் இதை ஓரளவு பிரதிபலிக்கின்றன. இங்கும் எழுதும்போது சுய கட்டுப்பாடு ஓரளவு இருக்க வேண்டும். வார்த்தைப் பிரயோகத்தில் எள்ளி நகையாடுதலோ பிறரை புண்படுத்தும் வகையிலோ இருப்பதை தவிர்க்கலாமே. அப்போது பூக்களின் வாசம் இன்னும் மேன்மையாக இருக்கும்.

திசைகளின் வாரந்தோறும் பூ வாசம் என்று அந்தந்த வாரத்து பூக்களிலிருந்து சிலவற்றை மாதிரிக்கு காட்டும் பணி வேறு இன்றிலிருந்து ஆரம்பித்துள்ளது. இது இன்னும் நிறைய பேரை வலை பதிய தூண்டும் என்று நினைக்கிறேன். இதனால் வரும் நாளில் பதிவுகள் அருவியாக பெருகி விழும்போது, ஒருவருக்கொருவர் மற்ற பதிவுகளைப் படித்து ரசித்து நம் எழுத்துக்கும் மெருகூட்டுவது வலைப் பதிவுகளின் பரிணாம வளர்ச்சிக்கு உதவும்.
பதிவுகளை பலவாறு வகைப் படுத்தலாம். சொந்த அபிப்பிராயங்கள் - எல்லாத் துறையிலும் ; பயனுள்ள செய்திகள் / கற்றுக் கொள்ளத்தக்கவை; அனுபவம் பகிர்தல்; மற்றும் நகைச்சுவை அல்லது just fun and entertainment. இந்த நான்கு பெரிய வகையினுள் பல கிளைகளும் உண்டு - அரசியல், சினிமா, வாழ்க்கை, கலாசாரம், நாட்டு நடப்பு, சமூக இயல், பாஷன், அலங்காரம், உணவு, என்று எத்தனையோ வகை. பல புதிய பதிவுகளில் இப்படி நிறைய வித்தியாசமான அம்சங்களைக் காண்கிறேன். ஒரு missing விஷயம் பாஷன், அலங்காரம், உடை போன்ற life style சமாசாரங்கள். தமிழர்களுக்கு இவற்றில் ஆர்வம் கொஞ்சம் கம்மியோ?? பாண்டிபஜாரையும் உஸ்மான் ரோடையும் வலம் வந்தால் அப்படி தெரியவில்லையே ? :-)

சில பதிவுகளில் என்ன எழுதுவது என்ற ஒரு குழப்பம் காணபப்டுகிறது. எதையோ எழுத வேண்டும் என்று பக்கத்தை நிரப்பாமல், தான் என்ன சொல்ல விரும்புகிறோம் என்று மனசுக்குள் தெளிவாக்கிக் கொண்டு பிறகு எழுதினால் எழுத்தில் ஒரு கூர்மை இருக்கும். அதேபோல் என்ன எழுதுவது என்று விஷயத்துக்கும் ரொம்ப யோசிக்க வேண்டாம். தினம் நாம் எதிர்படும் - கண்ட, கேட்ட, அறிந்துகொண்ட விஷயங்களையே எளிமையாக சுவாரசியமாக எழுதலாம். ஆனால் எந்த விஷய்மானாலும் அதில் ஒரு பிடிப்போடு கொஞ்சம் சிரமம் எடுத்துக் கொண்டு எழுதினால் அதில் ஆழம் இருக்கும். எழுதும்போதே உங்களை ஒரு வாசகராக நினைத்துக் கொள்வது ஒரு நல்ல உத்தி. குஷ்வந் சிங் அடிக்கடி சொல்லுவார். " நான் எதைப் படிக்க விரும்புகிறேனோ அதைத் தான் எழுதுவேன்." என்று. அதேபோல் எழுதும் விதத்தில் craft க்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று நெடு நாள் விவாதம் இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை நான் எழுதுவதில் ஒரு விஷயம்/ செய்தி பகிர்தல் இருக்கா என்பதும் எழுதும் விதத்தில் படிப்பவர்களோடு ஒரு இணைப்பு அல்லது தொடர்பு ( RELATE) ஏற்படுத்த முடிகிறதா என்று பார்ப்பேன். craft எனக்கு அவ்வளவு முக்கியமாக படாது - நல்ல craft ஆக இருந்து படிப்பவர்களிடம் அது ஒரு தொடர்பு ஏற்படுத்தவில்லையென்றால் அந்த CRAFT வியர்த்தமே. அதுபோல் எழுதும்போதே யாருடன் பேசுகிறீர்கள், யார் படிப்பார்கள் என்று மனசில் ஒரு பிம்பம் வைத்துக் கொண்டு "பேசுங்கள்". பின்னூட்டம் வருவது மட்டுமே ஒரு பதிவுக்கு முக்கியம் அல்ல. அதேபோல், என்ன மாதிரி எழுதினால் பின்னூட்டம் வரும் என்று நினைத்துக் கொண்டு எதையோ தொடர்பில்லாமல், ஆழமில்லாமல் எழுதுவதும் உசிதமல்ல - என் பார்வையில்.

என் பதிவுகளில் மேலே கூறியவற்றை முழுவதுமாக பின்பற்றுகிறேனா என்பது படிப்பவர்களின் பார்வையைப் பொறுத்தது. என்னைப் பொறுத்தவரையில் அச்சு ஊடகத்தில் எழுதும்போது நான் பின்பற்றும் அதே சுய விதிகளைதான் பதிவுகளிலும் பின்பற்ற முயலுகிறேன். ஒரு வித்தியாசம் - பதிவுகள், மேடை நாடகம் மாதிரி. உடனுக்குடன் கைதட்டலோ / அழுகிய தக்காளியோ கிடைத்துவிடும். இதர ஊடகங்களில் சற்று நிதானமாகவே உணர முடியும் :-)
கிரிகெட் மேட்ச் நடக்கும்போது பெரிதாக தொங்கும் ஸ்கோர் பலகையைப் பார்த்தால் எண்கள் அவ்வப்போது ஸ்லோ மோஷனில் மெல்ல மாறிக்கொண்டிருக்கும். இருந்தார்ப்போலிருந்து திடீரென்று எண்கள் வேகமாக பட படவென்று மாறும். ஆட்டம் சூடு பிடிக்க தொடங்கிவிட்டது என்று புரிந்து போகும்.

அதுதான் நடந்து கொண்டு இருக்கு தமிழ் மணம் தளத்தில் இப்போது. நான் வேலை செய்யும்போது தமிழ் மணம் தளம் சிறிது படுத்தி ( minimise) எப்போதும் கீழே ஒரு ஓரமாக உட்கார்ந்து கொண்டிருக்கும். அரை மணிக்கு ஒரு முறை - சில சமயம் கால் மணிக்கு ஒரு முறை எடுத்து பார்க்கும்போது நிச்சயம் ஏதாவது சில பதிவுகள் இற்றை படுத்தப் பட்டிருக்கும். இடது ஓரம் புதிய பதிவுகள் ஏதாவது முளைத்திருக்கும். கிடு கிடுவென்று இந்த கௌண்டர்கள் நகருவதைப் பார்த்தால் ஒரே பிரமிப்பாக இருக்கும். புதுப்பித்த பதிவுகள் வேகமாக கீழே இறங்கி புதியனவைக்கு இடம் கொடுத்து conveyer belt மாதிரி நகர்ந்து கொண்டிருக்கும்.

இப்போது மாதிரிதான் இருக்கிறது. சென்ற வருடம் மார்ச் மாதம் வலைப்பூ ஆசிரியராக இருந்தது. அதற்குள் ஒரு வருடம் ஓடிவிட்டதா என்று மனசுக்குள் ஒரு குட்டி ஆச்சரியம்.

சென்ற வருடம் இந்த மகளிர் வாரத்தில் ( அப்போதுதான் பதிவுகள் 100 என்ற இலக்கத்தைத் தாண்டி மெல்ல நடை போட்டுக்கொண்டிருந்தது.) எழுதியிருந்தேன்; அடுத்த முறை நான் ஆசிரியராகும்போது ஆயிரம் பதிவுகளை வலம் வரும்படி இருக்க வேண்டும் என்று. ( இந்த பழைய வலைப்பூக்கு சுட்டி முகப்பில் எங்காவது கொடுக்கலாமே ?)

எழுதும்போதே, "16 ம் பெற்று பெரும் வாழ் அல்லது 100 ஆயுசு... என்றெல்லாம் வாழ்த்துவதுபோல், ஏதோ ஒரு வாய் வார்த்தையாக, ஆயிரம் என்று சொல்வதாகதான் எனக்கு தோன்றிற்று. ஒரு வருடத்தில் ஆயிரம் பதிவா..? சான்ஸே இல்லை - இன்னொரு 100 வந்தாலே பெரிய சாதனை அது என்றுதான் எண்ணினேன்.

ஆனால் இப்போது ஆயிரத்தில் பாதியை வேகமாக நெருங்குகிறது தமிழ் பதிவுகளின் எண்ணிக்கை. இந்திய மொழிகளில் அதிகம் பதிவுகள் உள்ள மொழி தமிழ். மற்ற எந்த மொழிகளிலும் தமிழ்மணம் போல் பதிவுகளை ஒருங்கிணைக்கும் சேவை கிடையாது. பொதுவாக எல்லா மொழிகளிலுமே பதிவாளர்கள் ஆங்காங்கே பரவலாகதான் இருக்கிறார்கள். தங்களுக்கு பரிச்சயமான பதிவுகளுக்கு மட்டும் மேய்வதுதான் வழக்கம் - எப்போதாவது தொடர்பு சுட்டிகளை ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ந்து பல்வேறு பதிவுகளை நிதானமாக மேய்வதும் வழக்கம். ஆனால் இந்த ஒரு குடையின் கீழ் உத்தியால் நிறைய பதிவாளர்கள் கவனம் பெறுகிறார்கள். இன்னும் பல புது பதிவாளர்களை இது காந்தம் போல் ஈர்க்கிறது.

இன்று வலைப்பூ ஆசிரியர் என்பது நட்சத்திர பதிவு என்றாகியுள்ளது. மதியும் காசியும் ஒளி வெள்ளம் அலைகளின் மேல் விழவேண்டும் என்று தீர்மானித்து எனக்கு அன்புக்கட்டளையும் இட்டுவிட்டனர். எனவே, அடியேன்தான் இந்த வாரம் உங்களுடன் பயணம் செய்யப்போகிறேன். 408 பதிவுகளையும் இந்த ஒரு வாரத்தில் படிக்க முடியுமா என்று மலைப்பாக இருக்கிறது. இருந்தாலும் நிச்சயம் பரவலாக உங்களுடன் சேர்ந்து வலம் வரலாமென்றிருக்கிறேன். எங்கே, Fasten Your Seat Belts...... :-)

தகவல் கசிவு?? - செய்தி????

உங்களுக்கு பின்சோ·பிஸ் ( கற்பனை பெயர் என்று பார்த்தாலே தெரியுது இல்லே?) நிறுவனத்தில் ஒரு நண்பர் இருக்கிறார் என்று வையுங்கள். நீங்களும் அவரும் காபி கிளப்பில் ( நிஜம் காபி கிளப்) அரட்டை அடிக்கும்போது ஒரு புது தயாரிப்பு வருவதைப் பற்றி தெரிவிக்கிறார். நீங்கள் உடனே வீட்டுக்கு வந்து அதை உங்கள் பதிவில் பதிக்கிறீர்கள்.

இப்போது அந்த நிறுவனத்தின் தயாரிப்பு ரகசியம் வெளியே வந்துவிட்டது என்று சொல்லி அந்த நிறுவனம் உங்களுக்கு அந்த தயாரிப்பு பற்றிய விவரங்களைக் கொடுத்தது யார் என்று கேட்டு வழக்கு தொடரமுடியுமா?

உங்களுக்கு தகவல் கொடுத்தவரைக் "காட்டிக் கொடுக்க" சொல்லி உங்களுக்கு உத்தரவிட வேண்டும் என்று நீதிமன்றத்திற்கு அந்த நிறுவனம் முறையிடலாமா?
இங்கே முடியுமா இல்லையா தெரியாது. ஆனால், அமெரிக்காவில். சிலிகான் பள்ளத்தாக்கு பத்திரிகை ஒன்றில் வெளியாகியுள்ள செய்தி ஒன்றின்படி ஆப்பிள் நிறுவனம் இரண்டு இணைய பத்திரிகைகளின் மீது வழக்கு தொடர்ந்துள்ளது. காரணம். இந்த நிறுவனத்தின் புதிய தயாரிப்பான "அஸ்டிராய்ட்" பற்றிய விவரங்கள் இந்த இணைய பத்திரிகைகளில் வெளி வந்துள்ளன. இவர்களுக்கு இப்படி உள் தகவலை கசிய செய்தவர்களை அடையாளம் காட்டும்படி வழக்கு. இன்னும் திட்டவட்டமாக தீர்ப்பு வழங்கப்படவில்லையென்றாலும் இங்கே நீதியரசர் ஓரளவு ஆப்பிள் நிறுவனத்துக்கு ஆதரவாகவே பேசியுள்ளார். அந்த நிறுவனத்தின் தயாரிப்பு பற்றி முன்கூட்டியே கசிய செய்தவர்கள் விவரம் வெளியிடப்பட வேண்டும் என்று.

இது பத்திரிகை சுதந்திரத்தை பாதிப்பதாக அந்த இணைய பத்திரிகைகளின் சார்பில் வாதாடும் Electronic Frontier Foundation என்கிற டிஜிடல் உரிமை பாதுகாப்பாளர்கள் சங்கம் கூறுகிறது. பொதுவாக செய்தி சேகரிப்பவர்கள் தங்கள் தகவல் ஆதாரங்களை வெளியே சொல்ல மாட்டார்கள். அது பொதுவாக பத்திரிகை தர்மமுமல்ல. ( சென்ற வருடம் இந்தியாவில் Draconian law என்று விமரிசிக்கப்பட்ட "பொடா" சட்டத்தில் இந்த அம்சம் -அரசாங்கத்துக்கு தேவையிருந்தால் செய்தியாளர்கள் தங்கள் தகவல் தருபவர்களை; ஆதாரங்களை வெளிக்காட்ட வேண்டும் என்ற பகுதி பெரிய எதிர்ப்புக்குள்ளானது நினைவிருக்கா?) கலிபோர்னியாவில் இதர ஊடகங்களில் இருக்கும் பத்திரிகையாளர்களின், எழுத்து மற்றும் செய்தி சேகரிக்கும் சுதந்திரத்தை வலியுறுத்தும் சட்டம், (First Amendment and the California Shield Law) இணைய பத்திரிகைகளுக்கும், வலை பதிவுகளுக்கும் சம அளவுகோலில் பின்பற்ற பட வேண்டும் என்கிறார்கள் இந்த டிஜிடல் உரிமை பாதுகாப்பாளர்கள் சங்கத்தினர்.
"செய்தியாளர்களின் உயிர் நாடியே தகவல் கொடுப்பவர்கள்தாம். இவர்களைக் காட்டிக் கொடு என்பது எப்படி நியாயமாகும்? செய்தியாளர் என்றால் எல்லாரும் ஒன்றுதான் - அச்சு மற்றும் எலெக்டிரானிக் ஊடகங்கள் மற்றும் இணையம் சார்ந்தவைகள். அவர்களுக்கு ஒரு நீதி, எங்களுக்கு ஒரு நீதியா? இணைய பதிப்பு என்றால் மட்டமா என்ன? நீதிமன்றங்கள், தகவல் தருபவர்களின் நம்பிக்கைக்கும் பத்திரிகை சுதந்திரத்திற்கும் இடையே இருக்கும் தொடர்பைப் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்" என்பது இவர்கள் வாதம்.

இந்த வழக்கு, இணைய செய்தி ஊடகங்கள் மேலும் வலைப்பதிவாளர்களின் மேலும் ஒளிபாய்ச்சுகிறது. இதர ஊடகங்களின் செய்தியாளர்கள் போல் இந்த இனைய செய்தியாளர்களும் அங்கீகரிக்கப்பட்ட தொழில் முறை பத்திரியாளர்களா? கேள்விகள் சுழல ஆரம்பித்துவிட்டன.

வழக்கு தொடரப்பட்ட இணைய ஊடகங்களுக்காக வாதாடும் Electronic Frontier Foundation உறுப்பினர் ஒருவர் கூறுவதுபோல், இது ஒரு நுழைவாயிலில் உள்ள விஷயம். உள்ளேயும் அனுமதிக்கப்படலாம், வெளியேயும் தள்ளப்படலாம். அபப்டி உள்ளே அனுமதிக்கப்பட்டால் ஆப்பிள் நிறுவனத்திற்கு இந்த தயாரிப்பு ரகசியம் கசிவின் மூல ஆதாரம் தேடும் அவசியம் எவ்வளவு தூரம் முக்கியம் என்று நீதிபதிகளால் ஆராயப்படும். அப்படி ஒரு வேளை First Amendment and the California Shield Law கீழ் இணைய ஊடகங்கள் அனுமதிக்கபப்டவில்லையென்றால், அவை இந்த சோதனைக்கு ஆளாக வேண்டிய அவசியமே இல்லை. அதாவது இவர்கள் தொழில்முறை செய்தி ஊடகங்களல்ல; சும்மா பொழுது போகாதவர்கள் வேலை ( கையெழுத்து பத்திரிகை???!) என்று விட்டு விடலாம். ஆனால் அப்படி விடவும் முடியாது. ஏனென்றால் ஆப்பிளின் தலைவர் ஸ்டீவ் இந்த இணைய பத்திரிகையின் ஆசிரியருக்கு ஒரு தொழிமுறை பத்திரிகையாளர் தகுதியையே இதுவரை அளித்துள்ளார் - ஸ்பெஷலாக பேட்டி கொடுத்தது உள்பட..
பத்த்ரிகையாளர்கள் யாராயிருந்தாலும் - தொழில்முறையோ, அல்லது இணையமோ - ஒரு நிறுவனத்தின் தயாரிப்பு ரகசியங்கள் பற்றி தகவல்கள் தெரிந்து கொள்ள அவர்களுக்கு உரிமையில்லை என்பது ஆப்பிள் நிறுவன அதிகாரியின் ஆணித்திரமான வாதம். தயாரிப்பு தகவல் முன்கூட்டியே கசிவதன் மூலம் ஒரு நிறுவனத்தின் போட்டி நிறுவனங்கள் போட்டி தயாரிப்புகள் தயாரித்து, சந்தையில் முன்கூட்டியே வெளிக்கொண்டுவரும் அபாயம் உள்ளது என்கிறார் இவர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதியோ இந்த நிறுவன தகவல் கசிவு, ஒரு நாட்டின் பாதுகாப்பு ரகசியக் கசிவுக்கு சமானம் என்கிறார். இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறதா என்ன? என்பது இவர் கேள்வி.
ஆப்பிளின் தகவல் கசிவுக்கு இணைய பதிப்புகள் மட்டுமே காரணமா அலல்து அதன் மற்ற ஊழியர்கள் கூட காரணமாக இருந்திருக்கலாமா என்று சரிவர ஆராயமல் ஊருக்கு முன்னால் முதல் காரியமாக பத்திரிகை சுதந்திரத்தின் மேல் கைவைக்க கூடாது என்று இந்த இணையத் தளங்களின் வக்கீல் சாடுகிறார்.

தீர்ப்பு அடுத்த வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

என்னுள் நிறைய கேள்விகள்? நீதிபதி சொல்வதுபோல் ஒரு நிறுவனத்தின் தொழில் ரகசியம் ஒரு நாட்டின் பாதுகாப்பு ரகசியம் போல் அத்தனை முக்கியத்துவம் வாய்ந்ததா? முன்கூட்டியே தயாரிப்பு செய்தியை இணைய தளம் வெளியிட்டது தவறா சரியா? அதை எதிர்க்கும் வழக்கு மூலம் பத்திரிகை சுதந்திரம் மறுக்கப்படுகிறதா? அச்சு ஊடகங்களில் இந்த கசிவு வந்திருந்தால் எப்படி அணுகியிருக்கப்படும்? பத்திரிகை சுதந்திரத்துக்கும், எழுத்து / பேச்சு சுதந்திரத்துக்கும் காப்புரிமை / ஒரு நிறுவனத்தின் ரகசியங்களைப் பாதுகாத்தல் இவற்றுக்கும் இடையே இருக்கும் லக்ஷ்மண் கோடு என்ன?
என்ன இருந்தாலும் தொழில் ரகசியம் கசிந்தது தவறுதான் என்று எனக்கு தோன்றுகிறது. ஆனால் அதற்கு இணையதளம் எப்படி பொறுப்பாகும்? அதன் வேலை செய்தி தருவது. அதையும் முந்தி தருவது. கிடைத்த தகவலை உடனே வெளியிடாமல் எப்படி இருக்க முடியும்? ஒரு பாரம்பரிய அச்சு அல்லது டிவி ஊடக அமைப்பு வெளியிட்டால் அது செய்தி; இணைய அமைப்பு வெளியிட்டால் அது ரகசியத் தகவல் கசிவா?

The onus lies with the company to protect its trade secrets. என்று நினைத்தேன். கூடவே இன்னொரு குரல்: ஒரு வேளை பரந்த நன்மை ( larger good) கருதி செய்தியாளர்கள் தாங்களாகவே எதைச் சொல்ல வேண்டும் எதை விட வேண்டும் என்று ஒரு நெறியைப் பின்பற்ற வேண்டும் என்று உள்ளே ஒரு அசரீரி. நான் எதற்கு செவி சாய்க்க வேண்டும் என்று யோசிக்கிறேன்.

ம்ம்ம்....... நாட்டு பாதுகாப்பு ரகசியத்தையும் தனி நிறுவன ரகசியத்தையும் ஒரே தராசில் வைக்க முடியாது. ஒன்று நாட்டு நலன் மற்றொன்று வணிக லாபம். பின்னது வெளி வந்தால் செய்தி. முன்னது வெளி வந்தால் தேசீய ரகசிய கசிவு. அதனால் ஒரு வணிக நிறுவனத்தின் தகவலை வெளியிட்டதன் மூலம் இணைய தள செய்தியாளர்கள் நெறி பிறழவில்லை; தவறு ஏதும் செய்யவில்லை என்றுதான் எனக்கு தோன்றுகிறது. I rest my case.

அடுத்த வாரம் க்யூபர்டினோ ( வழக்கு விசாரிக்கப்படும் ஊர்) நீதிபதி என்ன தீர்ப்பு வழங்குகிறார் என்று பார்க்கலாம்.

My blogger link is not working properly. So here are the links again.

http://www.siliconvalley.com/mld/siliconvalley/11059168.htm

http://www.siliconvalley.com/mld/siliconvalley/11049112.htm