Monday, February 28, 2005

இந்த பட்ஜெட்டில் எனக்கு சந்தோஷமே. பெரும்பாலோர் அப்படிதான் நினைப்பார்கள். டிவி நிருபர்கள் மைக்கைத் தூக்கிக்கொண்டு பொது மக்களிடம் கேட்கும்போது பெரும்பாலானவர்கள் - " சமையல் காஸ், பெட்ரோல் விலை ஏறாது; சந்தோஷம் " என்பார்கள்.

ஆனால் இந்த பட்ஜெட்டில் எல்லோரையும்விட கிரெடிட் கார்ட் நிறுவனங்களுக்கு அதிக சந்தோஷம் இருக்கப்போகிறது. புதிய பட்ஜெட் அறிவிப்பினால் இனி எல்லோரும் நிறைய கிரெடிட் கார்ட் உபயோகிப்பார்கள் என்று நினைக்கிறேன்.

பட்ஜெட் அறிக்கையில் ஒன்று ஒன்றாக சிதம்பரம் சொல்லிக்கொண்டு வந்தபோது சென்ற தடவையில் அறிவித்ததில் அதிகம் மாற்றம் இல்லை என்று தோன்றிற்று. என்னடா இது சர்ச்சைக்கு இடமில்லாமல் செய்கிறாரே, அதெப்படி, என்று பார்த்துக்கொண்டிருந்தேன். கிராமப்புர மற்றும் கட்டுமான வளர்ச்சி திட்டங்களுக்கு அதிக ஒதுக்கீடு, நெசவுத்தொழிலுக்கு கன இயந்திரங்கள் இறக்குமதி செய்ய வரி சலுகை, நீர் பாசனத்துக்கு 400 கோடி, விவசாயத்திற்கு சலுகை / மான்யம் ரூ. 16000 கோடிகளுக்கு மேல் என்று எல்லாம் சரியாகவே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

வரி வசூலிப்பில் அதிகம் மாற்றம் இல்லை. ஆனால் திட்டங்கள் பல உள்ளன. இந்த நிலையில் ரூ. 6000 கோடி வரவு வரும் என்று வேறு சொல்கிறார். எங்கே பூனை என்று தேடினேன். வந்தது கடைசியில். வங்கிகளில் ஒரு நாளில் ரூ. 10000க்கு மேல் பணம் எடுப்பவர்கள் 1 சதவிகிதம் வரி செலுத்த வேண்டும் என்றாரே பார்க்கலாம். பார்லிமெண்டில் ஒரே அமளி. நகைக்கடைக்கு போய் 50,000 ரூபாய்க்கு ஒரு நெக்லஸ் வாங்கினீர்களானால், வழியில் வங்கியிலிருந்து பணம் எடுத்து கொடுத்துவிடலாம் என்று கணக்கு போட்டீர்களானால், மறக்காமல் 50,050 எடுங்கள். வங்கியிலிருந்து, ஒரு நாளில் எடுக்கப்படும் ஒவ்வொரு ரூ. 10,000 க்கும் .01 சதவிகிதம் வரி உண்டு. இதைத் தவிர்க்க வேண்டுமானால் கிரெடிட் கார்ட் அல்லது காசோலை உபயோகிக்க வேண்டும்.

பார்லிமெண்டில் எழுந்த அமளியின் எதிரொலி இன்னும் இரண்டு நாட்களாவது நாடெங்கும் அலசப்படும். வருடாவருடம் ஏதாவது கலாட்டா எழுந்து ஏதாவது ஒரு அறிவிப்பு வாபஸ் பெறப்படும். இந்த முறை இந்த அறிவிப்பு வாபஸ் ஆகாமல் இருக்க வேண்டுமே என்று விழைகிறேன். பெரிய செலவினங்கள் எல்லாம் கணக்கில் கொண்டுவரப்பட்டு கறுப்பு பணத்தை வேரிலேயே தாக்கலாம் என்பது நிதியமைச்சரின் எண்ணம். பின்னர் பத்திரிகையாளர் சந்திப்பிலும் கேள்விகள் கேட்கபட்டபோது, " 10000 ரூபாயை எடுக்க ஆட்டோவில் ஆள் அனுப்பினாலும் குறைந்தது 20 ரூபாய் ஆகும். வெளி ஊர் காசோலை என்றால் கமிஷன் ஆகும். இதனால் இந்த பத்து ரூபாய் கூட கொடுக்க வேண்டியுல்ளதே என்று யாரும் வருந்தப்போவதில்லை. நானும் இந்த .01 சதவிகிதம் மூலம் பெரிதாக வருமானத்தை எதிர்பார்த்து இப்படி செய்யவில்லை. ஒரு கணக்கு tax trail இருக்க வேண்டும் என்பதுதான் என் எண்ணம். எதிர்ப்பவர்கள் கவலையும் அதுவே" என்று சிரித்தவாறே விளக்கினார்.


என்னைப் பொறுத்தவரை இது சூப்பர் ஐடியா. இதுபோல், இன்னொரு நல்ல யோசனையும் உள்ளது. தற்போது வருமான வரிக்காக கணக்கு காண்பிக்க வைத்திருக்கும் ஆறில் ஒன்று என்ற விதியில் ( அதாவது வீடு, கார், வெளி நாட்டு பயணம், செல்போன், கிரெடிட் கார்ட் மற்றும் ரூ. 25000 வருட சந்தாக்கு மேல் இருக்கும் கிளப் உறுப்பினர் இதில் எது ஒன்று இருந்தாலும் வருமான கணக்கு காண்பிக்க வேண்டும்) செல் போன் நீக்கப்பட்டுவிட்டது. ஆனால் மின்சார கட்டணம் வருடத்திற்கு ரூ. 50000 க்கு மேல் உள்ளவர்கள் இந்த லிஸ்டில் உண்டு. ஒரு வீட்டின் செலவினங்களின் மூலம் வருமானத்தை அளக்கும் யோசனை மிக கெட்டிக்கார கணக்கு. வரி வசூலிப்பில் நூதன யோசனைகளை அறிமுகப்படுத்தியுள்ளார். பிரச்சனைகளின் ஆதாரத்தில் தாக்கும் திட்டங்கள்.
அப்புறம் அந்த ரூ. 50000 நகை வாங்கும்போது ஏதாவது பெரிய கம்பெனி முத்திரையா (Branded) என்று பாருங்கள். ஏனெனில் இனி Branded நகைக்கு தனியாக 2 % வரி உண்டு. சாதாரண இமிடேஷனுக்கு அல்லது சாதாரண brand அல்லாத நகைக்கு எக்ஸைஸ் வரி 8 % ஆக குறைந்துள்ளது. Branded என்றால் 10%.
வருமான வரி சீரக்கப்பட்டுள்ளது. கடந்த புதன் கிழமை பதிவின் பின்னூட்டத்தில் வருமான வரியில் மாற்றங்கள் தேவை என்று நாராயண் கேட்டது பாதி நடந்துவிட்டது :-) அவருக்கு பதில் எழுதுகையில், "ஒரு லட்சம் -( ஒரு லட்சம் மட்டுமே, மேலே ஒரு பைசா கூடாது (!) - வருமானம் உள்ளவர்கள் பாடு தேவலை. கொஞ்சம் மேலே போச்சோ... ஸ்லேப் கணக்கு, ரிவர்ஸ் கியரில் போய் ரூ. 50001லிருந்து ஆரம்பித்துவிடுகிறது. 50000 - 60000; @ 10% plus அடுத்த ஸ்லேப் - 60001 - 1,50,000; @ 20% ; என்று சுளையாக தாளிக்க வேண்டும்" என்று எழுதியிருந்தேன். இனி அப்படியிருக்காது. ஒட்டு மொத்தமாக அடிமட்ட விலக்கு 1 லட்சம் என்று ஆகிவிட்டது. அதனால் 1 லட்சத்து 10 என்று வருமானம் காண்பித்தால் ரிவர்ஸில் 50000 லிருந்து ஆரம்பிக்காமல் நேரடியாக 1,50,000 வரை ஒரே சீராக 10 % வரி. 1,50,000 லிருந்து 2,50,000 வரை 20 %. அதற்கு மேல் 30%.
பெண்களுக்கான வருமான வரி exemption ரூ. 1. 25 லட்சமாக ஆக உயர்ந்துள்ளது. மூத்த குடிமக்களுக்கு 1. 50 லட்சம்.

கிராமப்புறங்களில் 60 லட்சம் வீடுகள் அமைக்க திட்டம். கிராமப்புறம், விவசாயம், கட்டுமான வேலைகள் என்று முக்கிய விஷயங்களில் நிறைய கவனம் காட்டியுள்ளது மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. அதே சமயம் நகரங்களில் உள்ள ஏழைகளுக்கு வசதிகள் ஏதும் குறிப்பாக தென்படவில்லை. அதுவும் மும்பாயில் சமீபத்தில் குடிசைப் பகுதிகள் தகர்க்கப்ட்டதைப் பார்த்தபோது நகரங்களில் குடியேறி பலவிதங்களில் இன்னல்படுபவர்களுக்கு வேலை வாய்ப்பு மற்றும் இருக்க இடம், என்று அடிப்படை வசதிகள் கிடைக்க வழி அரசு செய்ய வேண்டும் என்று தோன்றிற்று.

கூடிய விரைவில் ஸ்டான்·போர்ட், ஹார்வேர்ட் போன்ற பல்கலைகழகங்கள் செல்பவர்கள் இனி பெங்களூர் செல்லத் தொடங்குவார்கள். அங்கு இருக்கும் Indian Institute of Science உலக தரம் வாய்ந்ததாக மாற்ற, ஆராய்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

கிராமப் புறங்களில் கடனுதவி அதிகரிக்கவும் பொதுவாக நுண்கடனுதவி நல்ல முறையில் பரவவும் திட்டங்கள் உள்ளன. இவற்றைபற்றி தேவையுள்ளவர்களுக்கு இன்னும் தெளிவாக விளக்கவும் நுண்கடன்கள் பெற உதவிகள் செய்யவும் வங்கிகள் ஒத்துழைக்கும்படி அறிவுறுத்தபப்ட்டுள்ளன. இந்த வகையில் வங்கியுடனும் நுண்கடன் பெறுபவர்களுக்கு இடையே பரஸ்பரம் உதவ நுண் கடனுதவி அளிக்கும் நிறுவனங்களை - Banking Coreespondents என்ற பெயரில் வணிக வங்கிகள் தங்கள் பிரதிநிதியாக அமைத்துக்கொள்ளலாம்.
இப்போதைக்கு உடனுக்குடன் தோன்றிய எண்ணங்கள் இவை. மிச்சம் விஷயங்கள் பிறகு.

விரிவான விவரங்களுக்கு இங்கே சில சுட்டிகள்.

Saturday, February 26, 2005

இன்று HeadLines Today - இந்தியா டுடே க்ரூப்பின் TV வார்ப்பு - சேனலில் இந்தியா டுடே என்க்ளேவ் நிகழ்ச்சியில் நம்ம (!!! - இல்லையா பின்னே? இவரும் இவரது வீட்டுக்காரரும் இந்தியாவுக்கு ரொம்ப சினேகிதமாச்சுங்களே... ) ஹில்லாரியின் பேச்சையும், தொடர்ந்து, கேள்வி பதில் பகுதியையும் பார்த்தேன். நிச்சயம் வெள்ளை மாளிகைக்குள் நுழையும் தகுதி உள்ளவர். இந்தியாவின் முதன்மை தொழிலதிபர்களும் இளைய தலைமுறை அரசியல்வாதிகளும் பங்கு கொண்ட நிகழ்ச்சியில் கேள்விகளும் அவரை எதிர்கால ஜனாதிபதியாகவே நினைத்து முன் வைக்கப்பட்டன.

பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன் வேலையை ஹில்லாரி பிரமாதமாக செய்தார். சந்தைகளைத் திறக்க சொல்லி ஊருக்கு உபதேசம் செய்யும் அமெரிக்கா போன்ற நாடுகள் விவசாயம் போன்றவற்றில் இன்னும் protectionist ஆக இருப்பதேன் என்று டிராக்டர் வியாபாரம் செய்யும் ஆனந்த் மகேந்திரா கேட்டபோது, " இந்தியா போன்ற நாடுகளும் அப்படி இருக்கும்போது அமெரிக்கா இருப்பதில் தவறென்ன என்று கேள்வியைத் திருப்பி போட்டுவிட்டு சமாளித்தார். ஆனால், அவுட் ஸோர்சிங் விஷ்யத்தில் அவர் சொன்னது பொதுவாக அனைத்து நாடுகளுமே கடைபிடிக்க வேண்டிய நல்ல பாலிஸி. தன் நாட்டை ஆள்பவர்களுக்கு அவர் சொன்ன அறிவுரையை நாமும் பரிசீலனை செய்யலாம். அவர் கூறியது: " அவுட் ஸோர்ஸிங்கினால் அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்பு குறைகிறதே என்று அதைத் தடுக்காமல் இன்னும் விரிந்த மனப்பான்மையோடு இந்தப் பிரச்சனையை எதிர்கொள்ள வேண்டும் என்றார். உதாரணமாக புதுசு புதுசாக வித்தியாசமான துறைகளில் இன்னும் எப்படி வேலை வாய்ப்பை உருவாக்கலாம் என்றுதான் ஒரு அரசு யோசிக்க வேண்டுமே ஒழிய, உலகப் பொருளாதாரத்தில் ஒரு துறை வளர்வதைத் தடுக்கும் வகையில் முட்டுகட்டைகள் போடுவது ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவாது என்பது அவர் கருத்து.

வெல்டன் ஹில்லாரி. இதைத்தான் நானும் ரொம்ப நாளாக சொல்லிவருகிறேன். :-)

Friday, February 25, 2005


Zoom in and observe :-) Posted by Hello

சில சமயம் சில போட்டோக்கள் நம் கவனத்தை சட்டென்று ஈர்க்கும். நான் ஒரு தொழில்முறை போட்டோகிரபர் அல்ல. அமெச்சூர் வகையிலும் சேர்த்தியில்லை. ஆனால் அவ்வப்போ வெளியில் போறபோது கேமிராவும் கூட வரும். ஏதோ கண் போன போக்கில் சுட்டுக் கொண்டிருப்பேன் - வீட்டு ஆல்பத்துக்காக. 34 வருடங்கள் முன்பு படிப்பு முடிந்து பத்திரிகையாளர் கோர்ஸ் படித்துக்கொண்டிருந்தபோது அப்பா /அம்மா உபயோகித்துக்கொண்டிருந்த பழைய "ஆக்·பா" காமிராவில் அப்பாவின் " How to Make Good Pictures" ( Black & White - Kodak Manual for Amateur Photographers - எந்த வருடப் பதிப்பு என்று அதில் போட்டிருக்கவில்லை; நிச்சயம் கலர் உலகம் வருவதற்கு பல வருடங்கள் முன்னால்) என்ற புத்தகம்தான் குரு. அருமையான புத்தகம். பிரமாதமான கறுப்பு வெள்ளை போட்டோக்கள். இன்று பார்த்தாலும் சந்தோஷமாக இருக்கிறது.
நிழல் படம் என்று நினைத்துக்கொண்டு என் மேஜையருகே இருக்கும் கண்ணாடி பெயிண்டிங், வரவேற்பறையில் கோணலாக போட்ட நாற்காலி, அரையிருட்டில் செடி என்று எதையோ எடுத்துக் கொண்டிருப்பேன். எத்தனை வருடம் ஆனாலும், இன்றுவரை முழு திருப்தியாக ஒரு படம் எடுக்கவில்லை என்று தோன்றுகிறது.

இருந்தாலும் நல்ல படங்கள் கண்களில் தென்படும்போது ஒரு உற்சாகம் வந்து தொற்றிக்கொள்ளும். இங்கே இருக்கும் படம் ஒன்றும் பிரமாதமானதல்ல. இருந்தாலும் இந்த விளம்பரம் பார்த்தவுடன் என்னை கவர்ந்தது ; யோசிக்க வைத்தது. இதில் பெரிதாக கருத்தோ கதையோ இல்லை. சொல்லப்போனால், ஸ்டேட் பேங்கில் கார் லோன் வாங்க சொல்லி தூண்டும் இந்த விளம்பரம் அதற்கு உதாரணமாக காட்டுவது பின்பக்கம் பார்க்கும் கண்ணாடியில் வரிசையாக தெரியும் கார்கள் - சகல சௌகரியங்களுடன் கூடிய ஸ்டேட் பேங்க் லோன் வாங்கி நீங்கள் மற்றவர்களைவிட பல கிலோமீட்டர் முன்னால் போகிறீர்கள் என்பது இந்த விளம்பர copy சொல்கிறது. ரொம்ப Plain.
ஆனால் என் கவனம் விளம்பர வாசகம் அல்ல. போட்டோ. கார் உள்ளிருந்து வெளியே தெரியும் சாலை out of focus ல் - சற்று மங்கலாக தெரியும்படி எடுக்கப்பட்டுள்ளது. அதே சமயம் உள்ளே rear view கண்ணாடியில் நல்ல தெளிவாக பின்னால் வரும் கார்கள். கொஞ்ச நேரம் எனக்கு புரியவில்லை. எப்படி இதை எடுத்திருப்பார்கள் என்று யோசிக்க வைத்தது. கண்ணடியில் தெரியும் பிம்பங்களை குவியத்தில் வைத்து எடுத்திருக்கிறார்கள். அதனால் எதிரே விரியும் சாலை, குவியத்திற்கு அப்பால் போய் கலங்கலாக தெரிகிறது. இல்லை, ஒரு வேளை தனித்தனியே எடுத்து போட்டோ ஷாப் வகையறா செய்திருப்பார்களா? கொஞ்ச நேரம் யோசித்ததில் முந்தைய வகையாயிருக்கும் என்று முடிவுக்கு வந்தேன். என் ஊகம் சரிதானா?

Wednesday, February 23, 2005

இந்திய பத்திரிகையுலகில் பட்ஜெட் ஜுரம் வந்தாச்சு கடந்த இரண்டு வாரமாக எகனாமிக் டைம்ஸ் அலசல்கள் / எதிர்பார்ப்புகள் வெளியிட்டுக்கொண்டிருக்கிறது. பிஸினஸ் டுடே, நிதியமைச்சர் சிதம்பரத்திற்கு சென்ற பட்ஜெட் திட்டங்கள் நன்றாகவே செயல்பட்டிருப்பதாக சொல்லி மதிப்பீடு " A" கொடுத்துள்ளது.
சரி.

இப்போது பிஸனஸ் டுடேயின் சென்ற பட்ஜெட் ப்ரோகிரஸ் ரிபோர்ட்:

சென்ற பட்ஜெட்டில் அறிவிப்புகளும், அறிவிப்புகள் நடைமுறையில் செயல்பட்டவிதமும்.

( கூடவே இந்த மதிப்பீடுகள் பற்றி அலைகளின் மதிப்பீடு :-) )

  • Common Minimum Programmeல் ஒப்புக்கொண்ட திட்டங்களுக்கான செலவு ரூ. 10,000 கோடிகள்.

    ரூ. 12,000 கோடிகள் வரவு காண்பிக்கப்பட்டுள்ளது.


அலைகள்: ஓகே. பாஸ் :-)

அனைவருக்கும் அடிப்படை கல்வியளிக்க வசதி:

கல்விக்கான உபரி வரி 2 சதவிகிதம் போட்டதில் ரூ. 4000 -5000 கோடிகள் வருவாய் வந்துள்ளது. ( என்னுடைய சென்ற பட்ஜெட் பற்றிய ஜூலை 10, 2004, பதிவில் இதன் முலம் வரக்கூடிய வருவாய் ரூ. 2500 கோடிகள் என்று எதிர்பார்க்கப்படுவதாக எழுதியுள்ளேன் )

அலைகள்: ரொம்ப சந்தோஷம். ஆனால் அனைவருக்கும் கல்வி கிடைக்கச் செய்ய இந்த வருவாய் எப்படி செலவழிக்கப்பட்டது என்பது தெரியாமல் திட்டத்தின் அடிப்படை நோக்கம் சக்ஸஸ் என்று எப்படி சொல்ல முடியும்?

வறுமைக் கோட்டிற்கு கீழ் இருக்கும் குடும்பங்களில் ஒருவருக்கு 100 நாள் வேலைவாய்ப்பு கொடுக்கும் திட்டம்.

"வேலைக்கான உணவு" ( Food for work) என்ற திட்டம் இந்தியாவின் மிக வறுமையான 150 மாவட்டங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. National employment Guarantee Act என்ற சட்டம் அமுலுக்கு வந்துள்ளது.

அலைகள்: முதல் சமாசாரம் கேட்க நன்றாக இருக்கிறது. நல்ல ஆரம்பம். பின்னது? ஹ்ம்ம்.. இன்னுமொரு சட்டம் /திட்டம். எவ்வளவு தூரம் செயல்பாட்டில் நோக்கை இது அடைய உதவும் என்று பொறுத்திரூந்து பார்க்க வேண்டும்.

நிதி சமாசாரத்தில் அதிக கவனம். இதில் சீர்திருத்தங்கள்.

வருவாய் பற்றாக்குறை, 2009க்குள் ஜீரோ லெவலுக்கு வருவதற்கு உதவும் வண்ணம் Fiscal Responsibility and Budget Management Act என்ற சட்ட அறிவிப்பு.

அலைகள்: மேலே சொன்னதே இதற்கும் - இன்னொரு அறிவிப்பு. ரிஸல்ட்டுக்கான நேரம் இன்னும் வரவில்லை.

விவசாயத்திற்கான கடனுதவி இன்னும் மூன்று வருடங்களில் இரண்டு மடங்காக வேண்டும்.

விவசாயக் கடனுதவி 30 சதவிகிதம் உயர்ந்துள்ளது.

அலைகள்: பரவாயில்லை. இந்த போக்கு தொடர்ந்தால், மூன்று வருடத்தில் இலக்கை எட்டிவிடும்.

கட்டுமான வேலைகளில் இன்னும் அதிக முனைப்பு.

தேசீய நெடுஞ்சாலை திட்டத்திற்கு ரூ. 1, 72,000 கோடிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

அலைகள்; அதெப்படி? நெடுஞ்சாலை மட்டுமே அடிப்படை கட்டுமான துறையாகுமா? துறைமுக வசதி, மின்சாரம், போன்ற கட்டுமான துறைகள்? மற்ற அடிப்படை வாழ்க்கை தேவைகளான தண்ணீர், கல்வி, சுகாதாரம் போன்றவை?

நிதி பங்கீடு இன்னும் பரவலாகவும் ஆக்கபூர்வமாகவும் இருக்க வேண்டும்.

12 வது நிதி கமிஷனில் மாநிலங்களின் வரி பங்கு ஒரு சதவிகிதப் புள்ளி ( one percentage point) உயர்ந்துள்ளது. இதன் மூலம் மாநிலங்களுக்கு கூடுதலாக ரூ. 15,000 கோடிகள் கிடைக்கும்.

அலைகள்: OHT :-) over head transmission - அதாவது, அவ்வளவா புரியாத சமாசாரங்க :-)
தொலைத் தொடர்பு மற்றும் இன்ஷ¥ரன்ஸ் இவற்றில் அந்நி¢ய முதலீடு வரம்பு உயர்த்தப்படும்.

.......பட்டது. தொலைத் தொடர்பில் 74 சதவிகிதமாக.

அலைகள்: அப்பழுக்கு சொல்ல முடியாத செயல்பாடு.

பொதுத் துறையை புதுப்பிக்க ஒரு போர்ட் உருவாக்கப்படும்; NTPC யில் கொஞ்சம் பங்குகள் விற்கப்படும்.

போர்ட் உருவாக்கப்பட்டது. என் டி பி சி யில் 5 சதவிகிதம் பங்குகள் விற்கப்பட்டது.

அலைகள்: மேலே சொன்னதே.

முதலீட்டு துறை உருவாக்கப்படும்.

......பட்டது; ரத்தன் டாடா தலைமையில்.

அலைகள்: ஓகே. குறையன்றுமில்லை. இந்த போர்ட்கள், கமிஷன்கள் இத்தியாதி அமைப்புகள் எல்லாம் எப்படி அவை நியமிக்கப்பட்ட இலக்கை நோக்கி செயல்படுகின்றன என்று ஆய்வதற்கு இன்னும் கொஞ்ச காலம் அவற்றை கவனிக்க வேண்டும். இன்னும் மதிப்பீட்டு நேரம் வரவில்லை.

சிறப்பு பொருளாதார வட்டங்களை ( Specail Economic Zones) ஒழுங்குபடுத்த ஒரு மசோதா அறிமுகப்படுத்தப்படும்.

....பட்டது. ஆனால் அமைச்சர்கள் குழுவின் பரிசீலனையில் உள்ளது.

அலைகள்: மதிப்பீட்டுக்கு இன்னும் தயாராகாத அம்சம்.

Friday, February 18, 2005

ரேடியோ கேட்கும் வழக்கம் FM அலைவரிசைகளின் வரவிற்கு பிறகு அதிகரித்துள்ளது - ( அல்லது ரசிகர்கள் கூடுவதனால் புதிய அலைவரிசைகள் கூடியுள்ளனவா ?! ) புதுசாக சாடிலைட் ரேடியோக்கள் வேறு வந்துள்ளன.

ரேடியோ நிறுவனம் எதுவாக இருந்தாலும் எல்லா அலைவரிசைகளிலும் பெரும்பாலும் சினிமா சம்பந்தப்ட்ட நிகழ்ச்சிகள், சுவாரசியமாக தொகுக்கும் தொகுப்பாளர்கள் என்றுதான் 24 மணி நேர நிகழ்ச்சிகளும் இருக்கின்றன. சாலையில் போக்குவரத்து நிலை, விஞ்ஞானம், வினா விடை, போன் செய்து பேசும் நிகழ்ச்சிகள் என்று விதம் விதமாக இருக்கின்றன. ஒரு காலத்தில் நானும் இப்படி ரேடியோ கேட்டுக் கொண்டிருந்தது நினைவுக்கு வருகிறது. விவித பாரதியை முடுக்கிவிட்டால் போரடிக்கும் வேலைகளும் வேகமாக முடிந்துவிடும். அதனால் வேலைகளை ரேடியோ நிகழ்ச்சிகளுக்கு ஏற்றாற்போல் வைத்துக்கொள்வேன். நான் பள்ளியில் / கல்லூரியில் படிக்கும்போது டிவி கிடையாதே. ரேடியோதான் ( அல்லது சினிமா தியேட்டர்) பிரதான பொழுதுபோக்கு. ( தெருவில் பாண்டி விளையாட்டு தவிர :-) பள்ளியில் காலை பிரேயரில் வரிசையில் நிற்கும்போது முந்தைய நாள் கேட்ட பாடல்களைப் பற்றி தோழிகளோடு பகிர்ந்து கொள்வது ரொம்ப முக்கியம். "அந்தப் பாடலைக் கேட்டாயா?இதைக் கேட்டாயா?" என்று ஆர்வத்துடன் பகிர்ந்து கொள்ளும்போது ஏதோ நாமே இசையமைத்தாற்போல் திருப்தி.

இப்போது மறுபடி அந்த மாதிரி ரேடியோ கேட்கும் வழக்கம் வந்துள்ளது என்று தோன்றுகிறது - நிகழ்ச்சிகளில் பங்கு பெறும் ரசிகர்களின் ஆர்வத்தைப் பார்க்கும்போது. போன் செய்து பங்கேற்கும் நிகழ்ச்சியில் பலர் தங்கள் கருத்துக்கள், விருப்பங்களை நன்றாகவே வெளிப்படுத்ஹ்டுகிறார்கள். முன்பை விட ரேடியோ என்கிர இந்த மீடியம் இப்போது அதிகம் interactive ஆக இருக்கிறது. நேயர்கள் பங்கேற்பு அதிகம் இருக்கிறது.

இப்படிதான்சென்ற வாரம் ரேடியோ கேட்டுக் கொண்டிருந்தபோது ஒரு சுவாரசியமான விவாதம். (எந்த அலைவரிசை என்று நினைவில்லை) Professional அலல்து மேற்படிப்பு படிப்பவர்கள் கட்டாயம் ( குறிப்பாக பெண்கள்) அந்தப் படிப்பிற்கு ஏற்றாற்போல் வேலை செய்யதான் வேண்டுமா? வெறும் ஆர்வத்துக்காக ஒரு படிப்பைப் படிக்கலாமா கூடாதா என்பது கேள்வி.
நிறைய நேயர்கள் பலவிதங்களில் தங்கள் கருத்துகக்ளை வெளிப்படுத்தினார்கள். கூடும் / கூடாது என்று. என்னை யோசிக்க வைத்த விஷயம் தொகுப்பாளரின் கருத்து எவ்வளவு தூரம் இந்த மாதிரி விவாதங்களில் வெளிப்பட வேண்டும் என்பது. பொதுவாக இந்த மாதிரி விவாதங்களில் இரு விதமான கருத்துக்களும் சரியாக இருக்கும் நிலை இருக்கும். தொகுப்பாளர் தன் கருத்தையும் சொல்லலாம். ஆனால் ஒரு judgemental பாவனையோடு அதுதான் சரி என்ற தொனி இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஆனால் இந்த குறிப்பிட்ட நிகழ்ச்சியில் தொகுப்பாளர் தன் கருத்தை சற்று அதிகமாகவே வலியுறுத்தினார் என்று தோன்றியது. அவரவர் ஆர்வத்துக்கு ஏற்றாற்போல் படித்தபின் தேவையில்லை என்றால் தொழில் செய்ய வேண்டிய அவசியம் இல்லை; அந்தத் துறையைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என வெறும் ஆர்வத்தினால் அந்தப் படிப்பு படிப்பதில் தவறில்லை என்ற கருத்தை ஒரு நேயர் வெளியிட்டார். அதற்கு பதிலளித்த தொகுப்பாளர், மேற்படிப்பு அல்லது தொழில் கல்வி படிப்பவர்கள் அதை " வீணாக்குவது" கூடாது; அதைத் தொழில் முறையில் பயன்படுத்தியே ஆக வேண்டும்; படித்த கல்வியை இப்படி "வீணாக்குவதற்கு" பதிலாக அந்தச் செலவு வேறு யாருக்காவது உபயோகப்பட்டிருக்கலாமே என்ற தொனியில் பேசினார். "இது என் கருத்து மட்டுமே" என்ற ரீதியில் அவர் பேசியிருக்கலாம் என்று தோன்றியது.

தொழில் கல்வி மற்றும் உயர் கல்விக்கு பல்கலைகழகங்களில் இடம் கிடைப்பதே குதிரைக் கொம்பாக இருக்கும்போது ஒருவரின் கல்விக்காக செலவழிக்கப்படும் resources அந்தக் கல்வியின் பயன் சரியான முறையில் சமூகத்தை சேர வேண்டும் என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனாலும் தனிப்பட்ட மனிதன் என்ற முறையில் பார்க்கும்போது, ஒரு துறையில் இயற்கையான ஆர்வத்தோடும் உந்துதலோடும் கல்வி கற்பதே சிறந்தது.

வேலை மெனக்கெட்டு இஞ்சினீயர், டாக்டர் என்று படித்துவிட்டு அந்த அறிவை பிறருக்கு உபயோகமாக பயன்படுத்தாமல் சும்மாயிருப்பது தவறு என்றுதான் தோன்றுகிறது. இருந்தாலும் இன்னொரு பக்கம், கல்வி என்பது பொருள் ஈட்டுவதற்கோ அல்லது சமூக சேவை செய்வதற்கோ மட்டுமல்ல; கல்வி கற்பதே ஒரு இனிமையான அனுபவம் என்றும் என் மனதுக்குப் படுகிறது. இதைப் படித்து இப்படியாக வேண்டும்" என்ற ஒரு "முடிவினை" நோக்கி கல்வி பயிலுவதைவிட, ஒரு குறிப்பிட்ட துறையில் ஆர்வத்தோடு கற்கும் அனுபவம் முக்கியம். இந்த இயற்கையான ஆர்வம்தான் நாளடைவில் ஒரு சமூகத்தில் creativity, innovation போன்ற புதிய பாதைகளுக்கு வழி கோலும் என்று நான் நினைக்கிறேன்.

Thursday, February 17, 2005

கலிபோர்னியாவில் மகன் வீட்டில் இருந்தபோது சில பர்னிச்சர் வாங்க நினைத்தோம். இகியா, "ஆபீஸ் மாக்ஸ்" என்று ஏறி இறங்கிவிட்டு, இன்னும் மலிவாக எங்கு கிடைக்கலாம் என்று தேடிக்கொண்டிருந்தோம். ( ஹ்ம்ம்.. எங்கே போனால் என்ன, இந்த "மலிவா வாங்கணும் என்கிற புத்தி மட்டும் போக மாட்டேங்குதே? :-))

சரிதான்; மலிவாதான் வேண்டுமென்றால் craigslist.com போய் தேடுங்கள் என்று மகன் சொல்லிவிட்டான். நானும் விடுவதாயில்லை. அங்கே தேட ஆரம்பித்தேன். அம்மாடி... என்ன மாதிரியான ரேஞ்சுலே எவ்வளவு சாமான்கள்! நாய்க்குட்டி, பூனையிலிருந்து, கார்கள், வீடுகள் என்று அத்தனையும் ஒரே தளத்தில்! எல்லாம் used goods :-) உட்கார்ந்த இடத்திலிருந்து கொண்டு பொறுக்கலாம். இந்த தளத்தை மேய்ந்தபோது சுவாரசியமாக இருந்தது. பேனாவிலிருந்து மனைவி / கணவன் வரை எல்லாவற்றிற்கும் இங்கே தேவை லிஸ்ட் இருந்தது. வெளியே போய் சாப்பிட போரடித்தால் வீட்டுக்கு சப்ளை செய்பவர் யாரென்று தேடி ஆர்டர் செய்யலாம். இசைப் பயிற்சியா? விதம் விதமாக வகுப்புகள். தோட்ட வேலையா? எக்கச்சக்க சாமான்கள். மொத்தத்தில் வாழ்க்கையின் அத்தனை அம்சங்களும் தேட / வாங்க /விற்க. e -bay அல்லது Bazee.com போல்தான். ஆனாலும் கலிபோர்னியாவில் இது ரொம்ப பாபுலர். 12 நாடுகளில், 92 நகரங்களில், 7. 5 மில்லியன் வாடிக்கையாளர்கள். ஒவ்வொரு மாதமும் 4 மில்லியன் கிளாசிபைட் விளம்பரங்கள்; 100,000 வேலை வாய்ப்பு விளம்பரங்கள்; என்று பிரமாதமாக வளர்ந்து வருகிறது. e-bay க்கு இதில் ஓரளவு பங்கு உண்டாம்.

அதுசரி. இப்போ என்ன இந்த கிரெய்க்ஸ்லிஸ்ட் சமாசாரம் இங்கே?

அதுவா? இந்த தளம் இன்று நம்ம பெங்களுர் வரை எட்டுகிறது என்று பிஸனஸ் டுடே செய்தி ஒன்று சொல்கிறது. பெங்களூரில் வீடு, டிவி, பூனை, நாய், மற்றும் தட்டு முட்டு சாமான்கள் வாங்க / விற்க !!

இதில் ஒருவர் விளம்பரம் கொடுத்துள்ளார். "...எனக்கு இந்தியர்களை மிகவும் பிடிக்கும். இந்தியர் ஒருவரை காதலித்து மணம் புரிய விரும்புகிறேன். இந்தியாவுக்கு விரைவில் வர இருக்கிறேன். போட்டோ அனுப்புங்கள்..." இந்த ரீதியில் !!

ஏற்கனவே "Are you Bangalored?" என்ற BPO வை கண்டிக்கும் வாசகம் அச்சு செய்த டீ ஷர்ட்டுகள் அங்கே பிரபலம். இப்போ இப்படி! பெங்களூரில் வியாபாரத் தொடர்பு இருப்பவர்களுக்கு சௌகரியமாக இந்த விளம்பரங்களும் !
இதுபோல், யாஹ¥ வரை படங்களில் இப்போ இந்திய நகரங்கள் சிலவும் உண்டு என்று கேள்விபட்டேன். ஆனால் யாஹ¥ மேப்ஸ் தளத்தில் கண்டுபிடிக்கமுடியவில்லை. யாருக்காவது விவரம் தெரியுமா?

Wednesday, February 09, 2005

நேபாளத்தில் மன்னர் ஆட்சியைப் பிரகடனப்படுத்திவிட்டு, பத்திரிகைகள் சுதந்திரத்தையும் ஒடுக்கியுள்ளார். அரசுக்கு எதிராக எதுவும் வெளியிட முடியாத நிலையில் பத்திரிகைகள் நூதன விதத்தில் தங்கள் எதிர்ப்பை காட்டுகின்றன என்று இந்த செய்தி சொல்கிறது.

தங்கள் தலையங்கங்களில், பாலே நடனம், Archery, மரம் நடுதல், காலுறையை ( socks) சுத்தமாக வைத்திருப்பதன் அவசியம், போன்ற சமாசாரங்களைப் பற்றி எழுகின்றனவாம் ! :-) இது ஒரு விதமான Satire என்று சொல்லும் ராஜேந்திர தஹால் என்கிற ஒரு பத்த்ரிகையாசிரியர், "இதுவும் ஒரு வகையில் எங்கள் அதிருப்தையையும் எதிர்ப்பையும் காட்டும் வழி" என்கிறாராம் ! சுவாரசியமான வழிதான். சரியான நெத்தியடி நக்கல் !! ஆனால் இதெல்லாம் மன்னருக்கு உறைக்குமா என்ன? இன்று ஹிந்திவில் மன்னர் ஆட்சியைக் கைபற்றியது சரிதான் என்று சில வாசகர்கள் எழுதியிருந்ததைப் படித்தேன். வருத்தமாக இருந்தது. ஜனநாயக முறைகளில் ஒரு அரசைத் தண்டிக்க வழி இருக்கும்போது இப்படி இவர்கள் நம்பிக்கையிழக்கலாமா என்று தோன்றியது. இந்தியா ஏன் பூடான் அரசின் மன்னர் ஆட்சியைப் பற்றி விமரிசனம் ஒன்றும் சொல்லவில்லை என்று ஒருவர் கேட்டிருந்தார். ஒன்று மன்னர் ஆட்சி என்பது அங்கே பெயருக்குதானே தவிர உண்மையில் அரசாங்கம் மக்களால் தேர்ந்தெடுகக்ப்பட்டுள்ளது. ஏற்கனவே பெரும்பான்மையான அதிகாரங்களை தன் மந்திரிசபையிடம்தான் கொடுத்துள்ளார். வம்சாவளியின் காரணமாக தான் மன்னராக பொறுபேற்றிருந்தாலும் தன் நாட்டில் ஜனநாயகம் தழைக்க வேண்டும் என்று விரும்பி 2001ல் இதற்கு ஒரு திட்டம் ஆரம்பித்துள்ளார். இதன் படி இன்னும் சில வருடங்களில் இவர் தன் மன்னர் பதவியை துறந்து நாட்டில் தேர்தல் வைத்து அரசை அமைக்க வேண்டும். 1981லிருந்தே இதற்கு அஸ்திவாரம் போட ஆரம்பித்துவிட்டார். 1998ல் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிகளால் ஒரு பாராளுமன்றம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்புக்கு, இரண்டுக்கு மூன்று என்கிற விதத்தில் வாக்களிக்கபட்டு மன்னரை அகற்றும் முழும் சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. மக்கள் இதற்கு பெரும் எதிர்ப்பு தெரிவித்தனர் என்பது வேறு சமாசாரம்.

மக்களாட்சியைக் கொண்டுவருவதற்கான இந்த வரைபடம் இந்த வருடம் அறிவிக்கப்படும் என்று இங்கே நமது குடியரசு தின விழாவிற்கு வந்தபோது நமது பத்திரிகையாளர்களிடம் கூறியுள்ளார்.

2003 முதல், கிராமங்களில் மக்களால், தேர்தல் முறையிலேயே தலைவர்கள் தேர்ந்தெடுகப்படுகின்றனர். தவிர, அரசுக்கு எதிராக மக்கள் பொது நல வழக்கு தொடரவும் சுதந்திரம் உண்டு.

இந்த நாட்டின் முக்கால்வாசி வளர்ச்சி திட்டங்களுக்கு இந்தியாதான் கொடை வள்ளல். பதிலுக்கு தங்கள் வெளியுறவு விஷயங்களில் பூடான் இந்தியாவைக் கலந்தாலோசிக்க வேண்டும் - 1949ல் கொண்ட உடன்படிக்கையின்படி. இப்படி நகமும் சதையுமாக இருந்தாலும் மன்னர் எங்கே "அந்தப் பக்கம்" ( அதாங்க, அவங்க பக்கத்தில் இருக்கும் இன்னொரு giant சீனா) சாய்ந்துவிடுவாறோ என்று நமக்கு எப்பவும் உள்ளே ஒரு கலக்கம். நமது எல்லைப் பாதுகாப்புக்கு இவரது சுமூக உறவு மிக முக்கியம்.

பூடான் மன்னர் ஆட்சிக்கு பல விதங்களில் விமரிசனங்கள் இல்லாமலில்லை. அகதிகள் விஷ்யம் பெரும் தலைவலி. அருகில் இருக்கும் நேபாளம் மற்றும் பங்களாதேஷ் இவற்றிலிருந்து குடியேறியவர்கள் அதிகம். 1988ல் பூடான் அரசு குடியேறிகளைத் தவிர்க்க /தடுக்க ஒரு முடிவெடுத்தது. இதன்படி 1958க்கு பிறகு வந்தவர்களுக்கு பூடான் குடியுரிமை மறுக்கப்பட்டது. இதன் காரணமாக நிறைய நேபாளிகள் வெளியேறுபடி ஆயிற்று. ஆனால் நேபாளம் இவர்களை ஏற்க மறுத்தது - அவர்கள் பூடான் பிரஜைகள் என்று கூறி. இப்போது இங்கேயும் இல்லாமல் அங்கேயும் இல்லாமல் யு. என் கட்டியுள்ள முகாம்களில் வாழ்பவர்கள் எண்ணிக்கை, சுமார், 100,000. இந்த விஷயத்தில் பூடான் அரசு இன்னும் சற்று கருணையோடு இருந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. ஆனாலும் வரைபடத்தில் ஒரு புள்ளி அளவுகூட இல்லாத நிலப்பரப்பைக் கொண்ட கடுகளவேயான நாடு, அண்டை நாடுகளிலிருந்து வரும் குடியேறிகளைத் தடுக்க முயற்சிப்பதில் என்ன தவறு? அமெரிக்கா, சிங்கப்பூர் என்று அவரவர் தன் நாட்டு நிலப்பரப்பில் குடியேறிகள் அதிகம் நுழைந்துவிடாமல் தற்காத்துக்கொள்ளவில்லையா? எல்லோருமே இந்தியா போல் இருந்துவிடுகிறார்களா? டில்லி, கல்கத்தா, சென்னை என்று ஆங்காங்கே அகதிகள் குடியிருப்புகளைப் (வெறும் முகாம்கள் இல்லை!) பராமரித்துக் கொண்டு? மன்னரின் காபினெட்டில் Drukpa என்ற அவரது மதப் பிரிவைச் சேர்ந்தவர்களே அதிகம் என்பதிலிருந்து Drukpa கலாசாரத்தை - பக்கூ என்ற உடை அணியச்செய்வது போன்றவை- மக்கள் மீது திணிக்கிறார் என்பது வரை நிறைய விமரிசனங்கள் உண்டு. ஆனாலும் என்னைப் பொறுத்தவரையில் கூட்டிக் கழித்து பார்த்தால், இவர் ஒரு ஜனநாயக மன்னர் என்பது என் அபிப்பிராயம் - இவர் உண்மையிலேயே மன்னர் ஆட்சிக்கு முடிவுரை கூறும் திட்டத்தை நிறைவேற்றி, தனக்குப் பின் தன் மகன்களில் ஒருவருக்கு பட்டம் சூட்டாமல் இருப்பாரானால், நிஜமாகவே சரித்திரத்தில் இடம் பெறுவார்.

பி.கு: பத்து குழந்தைகள் ( இதிலே அஞ்சு; அதிலே அஞ்சு) பிறந்தபிறகு இவரது திருமணம் நடந்தது. 1988ல் இவரது நான்கு (ஆமாம், நான்கு!!!) மனைவியருடன் நடைபெற்ற இந்த திருமண விருந்தாளிகளில் பட்டியலில் நாங்களும் இருந்தோம். அந்த நால்வரும் சகோதரிகள் என்று சொன்னார்கள். மன்னர் திருமணத்தின்போது இளவரசர்களும் இளவரசிகளும் விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களில் மூத்த இளவரசர் என் மகனின் கிளாஸ்மேட். - அட இதை இப்போ சொல்லியே ஆக வேண்டுமா? :-) ஹ்ம்ம்.... names drop செய்யும் ஆசை யாரை விட்டது? :-)

Sunday, February 06, 2005

எல்லோரும் சேர்ந்து மூச்சு பிடித்துக் கொண்டு பலமாக இழுத்தார்கள். ஹ்ம்ம்.... நகர்ந்தால்தானே? மேலிருந்து ஒருவர் ஏதோ சைகை காண்பித்தார். எல்லோரும் நின்றார்கள்;

மறுபடி ஒரு சைகை. ஹ்ம்ம்.... எல்லோரும் இழுத்தார்கள்....ம்ஹ¤ம்.. நகருவதாக தெரியவில்லை. மறுபடி நின்றது.

இன்னொரு ஒரு பெரிய தம் பிடித்து இழு..இழு...இழுத்தார்கள். ஒரு இஞ்ச் நகர்ந்திருக்கும்; மறுபடி நின்றாகிவிட்டது. அடுத்த சைகையில் இன்னும் பலமாக...இழு..இழூ.. நகரு..நகரு.... பெண்கள், முடியாதவர்கள் நகந்து ஓரமா நில்லுங்க... எல்லோரும் ஓடி வரும்போது அடிபடுவீர்கள்...... இன்னும் கொஞ்சம் ..ஹ்ம்ம்.. இழுங்க.....சட்டென்று நகர ஆரம்பித்துவிட்டது. ஹோவென்று எல்லோரும் கையைத் தட்டி சந்தோஷத்தை வெளிப்படுத்தினார்கள். மறுபடி ஒரு பெரிய சைகை, எல்லோரும் கூடி இழுக்க........

............தேர் நகர்ந்தது.

ஊர் கூடி தேர் இழுப்பது என்பார்களே.. அது என்ன என்று இன்று அனுபவித்தேன். எப்போதோ சிறு வயதில் கிராமத்தில் தேர் விழாவிற்கு போனதாக ஞாபகம். பின்னர் ரொம்ப நாள் கழித்து சென்ற வருடம் தான்தோன்றி மலையில் தேர் புறப்படத் தயாராக இருந்தபோது மேலே ஏறிச் சென்று சுவாமியை சேவித்தோம்.

இன்னிக்கு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் தேர். கோவிலை முழுவதும் சென்ற வருடம் புனருத்தாரணம் செய்திருந்தார்கள். தேர் மட்டும் பழசாக இருப்பானேன்? ஒரு வருடத்திற்குள் தேரையும் புதுப்பித்து இன்று புறப்பாடும் ஆகிவிட்டது. பலவித நிறங்களில் கைவேலை செய்த துணித் தோரணங்கள், அலங்காரச் சிலைகள், மரவேலைப்பாடுகள்ளென்று அமர்க்களமாக இருந்தது தேர்.

காலை ஏழுமணிக்கு என்று அறிவித்திருந்தார்கள். ரொம்ப தாமதம் இல்லாமல் 7.20க்கு பூஜையெல்லாம் முடித்து நகர்த்த ஆரம்பித்தார்கள். தேர் சக்கரங்கள் முன் நான்கு மரப்பலகைகள் செங்குத்தாக நிற்க வைக்கப்பட்டிருந்தன. முட்டு கொடுத்து ஏற்றுவதற்கு என்று ஊகித்துக் கொண்டேன். இரும்பு வடம் நீளமாக தரையில் கிடந்ததை மேலிருந்து அர்ச்சகர் சைகை செய்ததும் தூக்கி எடுத்து வைத்துக் கொண்டார்கள். நான் சும்மா பேருக்குத் தொட்டுப் பார்த்துவிட்டு வந்து ஓரமாக நின்றுகொண்டுவிட்டேன். கும்பல் அலைமோதியது. முதல் முதல் வடத்தை தூக்கி நகர்த்த ஆரம்பித்தவுடன் உடனே தேர், பஸ் மாதிரி நகர்ந்து விடுமாக்கும் என்று நினைத்தேன். இரண்டு மூன்று முறை எல்லோரும் கோஷமிட்டுக் கொண்டு இழுத்தும் இஞ்ச் கூட நகராதபோதுதான் தேரின் அளவையும், கனத்தையும் அனுமானம் செய்ய முடிந்தது. இத்தனைக்கும் இந்த புதுப்பித்த தேர் பழைய தேரைவிட சற்று சின்னதாக அமைத்திருப்பதாக பக்கத்தில் இருந்தவர்கள் பேசிக் கொண்டார்கள். அந்த காலத்தில் இன்னும் பலசாலிகளாக இருந்திருப்பார்கள். இழுத்தவுடன் தேர் நகர்ந்திருக்கும். ஆனால் இன்றைய தலைமுறை fast food தலைமுறையாயிற்றே....:-)

ஆனால் ஆரம்பம்தான் இப்படி. தேர் சற்று நகர்ந்து மரப்பல்கைகளைத் தாண்டியவுடன் momentum ( தமிழில் என்ன சொல்வது ??!!) பிடிக்க ஆரம்பித்து வேகமாக எல்லோரும் இழுத்துக்கொண்டு ஓட ஆரம்பித்தார்கள்.

அவ்வளவுதான். தோரணங்கள் அழகாக அசைந்தாட, ஒயிலாக தேரில் பார்த்தசாரதி வீதி வலம் வர ஆரம்பித்தார். சுமாராக ஒரு மணி நேரத்திற்கும் ஆயிற்று திரும்ப தேர் நிலையில் வந்து நிற்க.

இன்று கும்பலில் என்னை யோசிக்க வைத்த ஒரு விஷயம். நிறைய இளம் முகங்களைக் கண்டேன். "ஏன் அம்மா, அப்பா வரவில்லையா" என்று யாரோ ஒருவர் ஒரு இளைஞரிடம் கேட்டுக் கொண்டிருந்தது காதில் விழுந்தது. இவர் பதில். " இல்லே.. இவ்வளவு கார்த்தாலே எழுந்து கிளம்ப முடியாது அவர்களால்..." !!! கோவில் = வயதானவர்கள் ??!!

வாகன ஓட்டுனர் சிலையைப் பார்த்தால் அர்ச்சுனனுக்கு தேர் ஓட்டிய பார்த்தசாரதி மாதிரிதான் இருந்தது. அப்படியானல் உள்ளே இருந்த மூர்த்தி யாராக இருக்கும். விசாரித்து பின்னர் எழுதுகிறேன். இல்லை, தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

Friday, February 04, 2005

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு எளிமையான வாழ்வு ஒரு தடையா?

சாமான்கள் நிறைய வாங்குவது, தேவைக்கு மேல் கண்ணில் கண்டதையெல்லாம் வாங்குவது என்பது பொதுவாக நல்ல வாழ்க்கை முறை அல்ல என்று பெரியவர்கள் சொல்வார்கள். ஆனால் இன்று நாம் காண்பது சந்தைப் பொருளாதாரம்; ஏகப்பட்ட நுகர்வோர் பொருட்கள். முன்பெல்லாம் ஏதாவது வீட்டிற்கு சாமான் வாங்கினால் அது வாழ் நாள் முழுக்க வைத்திருப்பதுதான் வழக்கம். அதனலேயே நல்ல தேக்கு மரங்களில் நாற்காலிகள் என்ற ரீதியில் காலத்தால் சீக்கிரம் தேய்மானம் பெறாத சாமான்களை வாங்குவார்கள். "ஆயுசுக்கும் வர வேண்டாமா?" என்பதுதான் அன்றைய சிந்தனை. பல வருடங்கள் முன்பு நாங்கள் பம்பாயில் ( அன்று அது பம்பாய்தானே) இருந்தபோது ஒரு உறவினர் வீட்டில் சோபா செட் வாங்கினார். அப்போது யாரோ அவரிடம் "என்னப்பா, பம்பாயிலேயேதான் இருக்கப் போறியா" என்றார். இவர் பதில்: "ஆமாம் சோபா செட் வாங்கியாச்சு. இங்கயே செட்டில் ஆனமாதிரிதான்!" என்றார். 30 வருடங்கள் முன்பு சோபா செட் வாங்கிவிட்டால் அது ஒரு பெரிய முதலீடு. இன்று இப்படி சொல்ல முடியுமா? அதேபோல் டிவி. அன்று ஒரு டிவி வாங்கும்போது ஏதோ சாதித்த உணர்வு. துடைத்து துடைத்து மாய்ந்துவிடுவோம். இன்றோ வீட்டுக்கு குறைந்தது இரண்டு டிவி. அதுவும் இரண்டு வருடத்திற்கு ஒரு முறை மாடல் மாற்றிக் கொண்டு. கார்கள், வாஷிங் மெஷின்கள், விதம் விதமாக துணி மணிகள் - ஒரு குடும்பத்தில் இப்படிப் பெருகும் சாமான்களை அடுக்கிக் கொண்டே போகலாம். முன்பெல்லாம் ஒரு பொருள் வாங்கினால் அது முழுக்க அதன் தேய்மானம் வரைக்கும் உபயோகப்படுத்திவிட்டுதான் தூக்கியெறிவோம். அப்புறமும் கூட recycle என்ற முறையில் அந்தப் பொருளை கடைசி வரை இன்னும் எப்படி உபயோக்க்கிலலாம் என்று பார்ப்போம். பழையப் பட்டுப் புடவைகள் திரைச்சீலையாகும்; சில துணிகள் சோபா கவராகும்; படு கந்தல் ஆகிவிட்டால் அப்புறமும் விடாமல் துடைக்கும் கந்தல் துணியாகப் பயன்படும். இன்று பழைய உடைகள் அவ்வப்போது அங்கங்கே தானம் கொடுக்கப்பட்டுவிடுகிறது. (முன்பெல்லாம் தெருவில் விற்கும் பழைய பேண்ட் - பிளாஸ்டிக் சாமான் வியாபாரம் இப்போ அவ்வளவா காணோமே!) சுனாமிக்குப் பின் குவிந்த பழைய துணிகளே ஒரு சாட்சி. ஒரு சாமான் ரிப்பேராகிவிட்டால், பழுது பார்ப்பது கிடையாது. தூக்கிப் போட்டுவிட்டு வேற புதிதாக லேட்டஸ்ட் மாடல் வாங்கிவிடுகிறோம். தயாரிப்பாளர்களும் போட்டிப் போட்டுக் கொண்டு நுகர்வோர் சாமான்களை உற்பத்தி செய்து தல்ளுகிறார்கள். இதில் எக்கச்சக்க போட்டி என்பதால் ஒருவரை விட ஒருவர் விலை குறைத்தோ அல்லது அதிக வசதிகள் செய்து கொடுத்தோ நுகர்வோரை இழுக்கப் பார்க்கிறார்கள்.
இப்படி நுகர்வோர் சாமான்கள் சந்தையில் குவியக் குவிய மக்கள் வாங்குகிறார்கள் - வாங்கிக் கொண்டே இருக்கிறார்கள். தொழில் உற்பத்தி அதிகரிக்க வேண்டியுள்ளது. உற்பத்தி அதிகரிக்கும்போது நாட்டின் பொருளாதாரமும் வளர்ச்சியடைகிறது. தவிர வேலை வாய்ப்பு கூடுகிறது.
சரி. ஆனால் எனக்கு ஒரு கேள்வி எழுகிறது. ஒரு வேளை நாம் பழைய மாதிரி எளிமையான வாழ்க்கை முறைக்கு சென்று விடுகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். இந்த சாமான்கள் விற்பனையாகாது. (ஹ்ம்ம்... அப்படி கூட ஆகுமா என்ன?!!) விற்பனையில்லையென்றால் தொழில் உற்பத்தி மங்கிவிடும். உற்பத்தி மங்கினால் பொருளாதாரமும் சுருங்கிவிடும்?? உற்பத்தியும் மங்கக் கூடாது. ஆனால் அதே சமயம் நுகர்வோர் கலாசாரம் பெருகுவதையும் ஊக்குவிக்கக்கூடாது. வேலை வாய்ப்பும் கூட வேண்டும். என்ன வழி?
எனக்குத் தோன்றியது என்னவென்றால் கல்வி, சுகாதாரம், சாலைகள், குடிதண்ணீர் போன்ற வளர்ச்சித் திட்டங்களிலும் தொழில் நுட்ப வளர்ச்சியிலும் முதலீடு / உற்பத்தி அதிகமாவது ஊக்குவிக்கப் பட வேண்டும். தொழில் நுட்பம் மற்றும் பல்விதமான சேவைகளில் ( Financial servcices, IT, bio tech related ) வித்தியாசமான துறைகளில் உற்பத்தி / முதலீடு செய்யலாம்; உலக வர்த்தக ஸ்தாபன உடன்பாட்டின்படி, அங்கத்தினர் அனைவரும் நெசவு உற்பத்திக்களுக்கான இறக்குமதி quotaவை நிறுத்த வேண்டும். இது நாள்வரை அமெரிக்கா, ஐரோப்பா போன்ற வளர்ந்த நாடுகள், இந்தியா, சீனா போன்ற நாடுகளிலிருந்து வாங்கும் நெசவு உற்பத்திகளுக்கு உச்சவரம்பு வைத்திருந்தன. இதன்படி அந்த வருடத்திற்கான உச்ச வரம்பைத் தாண்டி நம் உற்பத்திகளை ஏற்றுமதி செய்ய முடியாது. ஆனால் இந்த வருடம் ஜனவரி ஒன்றிலிருந்து உலக வர்த்த உடன்பாட்டுப்படி அந்த நாடுகள் இந்த உச்ச வரம்பை அகற்ற வேண்டும்.
இதனால் இந்தியா போன்ற நாடுகளின் நெசவு ஏற்றுமதிக்கு நல்ல வாய்ப்பு. இன்னும் ஐந்து வருடங்களில் 100 டாலர் பில்லியன் வருவாய் வரக்கூடிய தொழிலாக உருவாக வாய்ப்பு உள்ளது என்கிறார்கள். ஆனால் நம் நெசவு உற்பத்தியோ அப்படி பெரிய அளவில் ஏற்றுமதி செய்யுமளவு அதிகரிக்கவில்லை. சொல்லபோனால், பழைய உச்சவரம்பு இருந்த நாளிலேயே, அந்த உச்ச வரம்பு அளவைத் தொடும் அளவு கூட நம் உற்பத்தி இருந்ததில்லை. இந்த நிலையில் சீனா, தாய்லாந்து போன்ற நாடுகள் தங்கள் உற்பத்தியைப் பெருக்கி அமெரிக்க /ஐரோப்பிய சந்தைகளை பிடிப்பதில் முனைந்துள்ளன.

இந்தச் சூழ்நிலையில் இங்கே இரண்டு தரப்பு வாதங்கள் வைக்கப்படுகின்றன. ஒன்று நெசவுத்தொழிலில் பெரும் இயந்திரங்களை உபயோகித்து உற்பத்தி அதிகரிக்கப்பட்டு ஏற்றுமதி சந்தையைப் பெருக்க வேண்டும் என்பவர்கள் ஒரு புறம். மறுபுறம், அப்படி பெரிய அளவில் தானியங்கி இயந்திரங்கள் உபயோகப்படுத்தும்போது உற்பத்தி பெருகலாம்; ஆனால் வேலை வாய்ப்பு குறைகிறது என்பது இன்னொரு சாரார் வாதம். இரண்டிலும் நியாயம் இருப்பதுபோல்தான் எனக்குத் தோன்றுகிறது.

உற்பத்தியும் பெருக வேண்டும்; வேலை வாய்ப்பும் அதிகரிக்கப்பட வேண்டும். இதற்கு Mass Production என்பதற்கு பதிலாக Production by massess என்று இருக்க வேண்டும் என்கிறார்கள். என்னதான் அதிகம் பேர்களை ஈடுபடுத்தினாலும் இயந்திரங்களின் வேகத்திற்கும் / துல்லியத்துக்கும் மனிதர்களால் முடியுமா? உற்பத்தி செலவும் அதிகமாக இருக்குமே? சீனா போன்ற நாடுகள் விற்கும் விலைக்கு ஈடுகட்ட முடியுமா? இல்லையென்றால், ஏற்றுமதிக்கான நல்ல வாய்ப்பை விட வேண்டி வருமா?

எனக்குத் தோன்றிய ஒரு எண்ணம். சீனா போன்ற நாடுகளின் போட்டிக்கு ஏற்ற மாதிரி நம் நெசவு உற்பத்தியையும் / தரத்தையும் அதிகரிக்க வேண்டும் - Mass production மூலமாக. ( 100 மில்லியன் வேலை வாய்ப்புகள் கூடும் என்று இந்த செய்தி சொல்கிறது) அதே சமயம், நெசவுத் தொழில் போன்ற பாரம்பரிய துறைகளில் வேலை வாய்ப்பு குறைவதால் மற்ற புதிய துறைகளில் வேலை வாய்ப்பு அதிகரிக்கப் பட வேண்டும். ஒரு நெசவுக் குடும்பத்தில் ஒருவருக்காவது நல்ல கல்வி பெறும் சூழ்நிலை அளிக்கப்பட்டு வேறு வித்தியாசமான தொழிலில் திறமை வளர செய்ய வேண்டும். தொழில்நுட்பம், Bio-tech, என்று அறிவு சார்ந்த தொழில்களும், Financial services, கல்வி, சுகாதாரம், ஹோட்டல் மற்றும் சுற்றுலா போன்ற சேவை (Services sector) சார்ந்த வேலை வாய்ப்புகள் அதிகரிக்கப்பட்டு அவற்றில் நெசவு போன்ற பாரம்பரிய தொழில் செய்த குடும்பங்களுக்கு ஒரு மாற்று தொழில் கற்று தரப்பட வேண்டும்.

இது விஷயமாக உங்களுக்கு ஏதும் யோசனைகள் உள்ளதா?

பி.கு: வேற ஒண்ணுமில்லை. பட்ஜெட் வருகிறதே...:-)