Saturday, September 24, 2005

இடைவேளை

ஊருக்குத் திரும்புவதிலும் இன்னும் சில சொந்த வேலைகளிலும் மூழ்கி இருப்பதால் இன்னும் கொஞ்ச நாளைக்கு இங்கிருந்து ஜூட்..... ஆனால் திரும்பி வரும்வரை இங்கே வருபவர்களுக்குக் கொஞ்சம் அசைபோட, ஆகஸ்ட் மாத இதழ் திசைகளுக்கு எழுதியதை இங்கு மீண்டும் பிரசுரிக்கிறேன்.

சிறிய இடைவேளைக்குப் பிறகு மீண்டும் சந்திப்போம்.


இதுலே கொஞ்சம்; அதுலே கொஞ்சம்..... அமெரிக்க கிராமீய நகர்ப்புறங்கள்.


அது ஒரு பஸ் டெர்மினஸ். புற நகர் ரயிலிலிருந்து இறங்கியவுடன் அருகிலேயே இருந்தது. ஒரு எட்டு நடைப் போட்டால் போய் விடலாம் என்று சாலையை இருபக்கமும் பார்த்துவிட்டு ( அப்படிப் பார்க்கவும் என்று போட்டிருந்ததே.) கடந்து இரண்டடி போயிருப்பேன் - நான் போக வேண்டிய பஸ், வந்து நின்றது. ஓடிப்போய் ஏற முயன்றபோது ஓட்டுனர் இறங்கினார். சிரித்துக்கொண்டே இன்னும் ஒரு பத்து நிமிஷம் பொறுங்கள். என் நேரம் இன்னும் வரவில்லை என்று சொல்லிவிட்டு நடந்தார். சரியாக பத்து நிமிஷம் கழித்து அவர் வந்தவுடன், பஸ்சில் ஏறி, நான் போக வேண்டிய நிறுத்தத்தை அவரிடம் குறிப்பிட்டு, இடம் வந்தவுடன் எனக்கு அறிவிக்க சொல்லி சீட்டில் போய் உட்கார்ந்தேன். வண்டியில் நான் மட்டும்தான். போகப்போக ஏதோ ஓரிரண்டு பேர். ஆனால் வெகு நேரம் ஆகியும் நான் இறங்க வேண்டிய நிறுத்தம் பற்றி ஓட்டுனரிடமிருந்து அறிவிப்பு வரவில்லை. கடைசி டெர்மினஸ்ஸ¤ம் வந்துவிட்டது. எல்லோரும் இறங்குவதைப் பார்த்து நானும் இறங்க வேண்டியதுதான் என்று முடிவுகட்டி இறங்கும்முன் ஓட்டுனரிடம் விசாரித்தேன் - என் பஸ் ஸ்டாப் வரவேயில்லையே என்று. அப்போதுதான் அவருக்கு ஞாபகம் வந்தது போலும். தலையில் லேசாக ஒரு தட்டுத் தட்டிக்கொண்டு "அடடா நீங்கள் இரண்டு ஸ்டாப் முன்னாலேயே இறங்கியிருக்க வேண்டும். ஒன்று செய்யுங்கள். இதோ இன்னும் இருபது நிமிடத்தில் என் அடுத்த டிரிப் ஆரம்பிப்பேன். நீங்கள் இதோ இந்தக் கடைவீதியில் ஒரு ரவுண்ட் போய் சரியாக 17 நிமிடங்களில் வந்து விடுங்கள். உங்களை அந்த பஸ் ஸ்டாப்பில் கொண்டு விடுகிறேன். ஆனால் சரியாக 17 நிமிடம். ரொம்பக் கடைகளில் உள்ளே போகாதீர்கள் - காணாமல் போய்விடுவீர்கள்" என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.

முன் ஜாக்கிரதை முத்தக்காவாக நான் 10 நிமிடத்திலேயே திரும்ப வந்து பஸ் அருகில் நின்று கொண்டேன். ஓட்டுனர் வந்தார். சீட்டில் உட்கார்ந்தவுடன் வண்டியை ஸ்டார்ட் செய்யாமல் ஜன்னல் வழியே வெளியே பார்த்துக்கொண்டிருந்தார். என் முகத்தில் தொக்கி நின்ற கேள்விக்கு பதில் சொல்வதுபோல், " இங்கே இன்னொரு பெண்மணி நின்று கொண்டிருந்தார். அவரைக்காணோமே என்று பார்க்கிறேன். ஆனால் எனக்கு நேரமாகிவிட்டதே" என்று கைக்கடிகாரத்தை ஒரு முறை பார்த்துவிட்டு, " ஹ்ம்ம்.. பாவம் அவருக்கு பஸ் அட்டவணை ஞாபகம் இருந்திருக்கும் என்று நினைக்கிறேன், " என்று சொல்லிவிட்டு தயங்கித் தயங்கி ஜன்னல் வழியே பார்த்துக் கொண்டே வண்டியை ஸ்டார்ட் செய்யத் தொடங்கினார். பிறகு சற்று நகர்ந்தும் அந்தப் பயணி வருவதாகத் தெரியவில்லை. வண்டிக்கு வேகம் கொடுத்து நகர ஆரம்பித்தவுடன் என் பக்கம் திரும்பினார். " யூனிவர்சிடி அவென்யூவில் இந்த பஸ் நிற்காது. அதற்குப் பக்கத்து சாலையில்தான் பஸ்ஸ்டாப். நான் ஒரு வேளை மறுபடி மறந்துவிடுவேன். நீங்கள் ஒன்று செய்யுங்கள். நான் இதோ இந்த சாலையில் நேரே போய், ஒரு முறை வலது பக்கம் திரும்புவேன். பிறகு இரண்டு முறை இடது பக்கம். இரண்டு முறை இடது நான் திரும்பியவுடன், உங்கள் பஸ் ஸ்டாப். உடனே எனக்கு ஞாபகப்படுத்தி விடுங்கள் " என்று ஜாக்கிரதையாக அறிவித்துவிட்டார். நானும் பஸ் செல்லும் இடம் வலம் திருப்பங்களை மனசுக்குள் குறிக்க ஆரம்பித்தேன். ஆனால் அவராவது மறப்பதாவது? ஒவ்வொரு திருப்பத்திலும் ரன்னிங் கமெண்டரி. இதோ இதற்கு அப்புறம் இங்கே... அப்புறம் இங்கே என்று பேசியபடி.

நிறுத்தம் வருவதற்கு ஒரு நிமிடம் முன்பு எனக்கு அடுத்தபடியாகத் திரும்பிப் போக வழி சொல்ல ஆரம்பித்தார். "இங்கே இறங்கியவுடன் நீங்கள் நீள வலது திரும்பினால் உங்கள் யூனிவர்சிடி அவென்யூ ஷாப்பிங். நிறைய செலவு செய்துவிட்டு பர்சில் பணம் காலியானபிறகு திரும்பிப்போக வேண்டுமில்லையா? மறுபடி இவ்வளவு தூரம் நடந்து இதே நிறுத்ததிற்கு வர வேண்டாம். அங்கேயே, தெருக்கோடியில் வலது திரும்பி, ஒரு இடது மாறினால் அடுத்த பஸ். அரை மணிக்கு ஒன்று. ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்" என்று நான் இறங்கி நடக்கும் வரை அறிவுரை. விட்டால் ஷாப்பிங் கூடவே வந்து அடுத்த பஸ்ஸில் ஏற்றிவிட்டுதான் போவார் போலிருந்தது.


இதுதான், - இந்த அக்கறைதான் - நகர்ப்புற மக்களுக்கும் கிராம - சிறிய நகர மக்களுக்கும் வித்தியாசம். நம் பக்கங்களிலும் சிறு ஊர்களில் இதுபோன்ற ஒரு அக்கறையைப் பார்த்திருக்கிறேன்.

சிறிய நகரங்கள், கிராமங்கள் என்றால் அங்கிருக்கும் மக்கள் உலகெங்கும் ஒரே மாதிரிதான் என்று நினைக்கிறேன். அடுத்தவரிடம் ஒரு கரிசனம், பொதுவாக எல்லாவற்றிலும் ஒரு அவசரமில்லாத நிதானமான வாழ்க்கை முறை. இப்படிதான் இன்னொரு முறை ஒரு ஓட்டுனர் முன் சீட்டில் உட்கார்ந்திருந்த பயணியுடன் ஊர் வம்பெல்லாம் பேசிக்கொண்டே வந்தார். கலிபோர்னியா மாகாண கவர்னர் Arnold Schwarzenegger ல் ஆரம்பித்து, ஈராக் போர், புஷ், வேலையில்லாப் பிரச்சனை என்று பல கோணங்களிலும் அரட்டை ஜோராக போய்க்கொண்டிருந்தது.

சிறிய ஊர் என்றாலே மானாவாரியாக நேரம், இடம் இரண்டுமே கொட்டிகிடக்கும். அமெரிக்க சிறு நகரங்கள் விதிவிலக்கல்ல. முதன்முதலில் சென்ற நவம்பரில் இங்கு வந்தபோது அமெரிக்கா என்றாலே நியூயார்க், போன்ற நகரங்களின் வானளாவிய கட்டிடங்கள்தாம் என் கற்பனையில் இருந்தன. ஆனால் இங்கு சன்னிவேல் நகரில் மருந்துக்குக்கூட ஒரு "வானளாவிய" கட்டிடம் கிடையாது. எவ்வளவு பெரிய Mall என்றாலும் எல்லாம் ராட்சஸ சைசுக்கு ஒரு பெரிய கட்டிடம் ஒன்றுதான். மிஞ்சிப்போனால் கீழேயும் மேலேயும் ஓரிரண்டு தளங்கள். அடுக்கே கிடையாது. வீடுகளும் அப்படியே. டவுன் டவுன் எனப்படும் வணிகத் தெருக்களில் ஆங்காங்கே உயர்ந்த கட்டிடங்கள் ஓரிரண்டு தென்படலாம். அகண்ட சாலையில் போகும்போது சுத்தமாக நீல நிறத்தில் வானம் ( பின்னே, வேற என்ன நிறத்தில் இருக்கும் என்று எதிர்பார்த்தேன்!) பார்த்துக்கொண்டு போவதே சுகமாக இருக்கிறது. இன்றைய நகர்ப்புற வாழ்க்கையில் வானமும், சூரியோதயமும், அஸ்தமனமும் தெரிவதே பெரிய விஷயமாகிப்போய்விட்டதே.

இங்கு சிலிகான் பள்ளத்தாக்கில் உள்ள ஊர்கள் எல்லாமே ஓரளவு இயற்கையை ஒட்டி பெயரிடப்பட்டுள்ளது. இங்குள்ள நம் மக்கள் வேடிக்கையாக சொல்வார்கள். " இங்கு முதலில் குடியேறியவர்கள் வந்தவுடன் கண்களில் இங்குள்ள சூரிய வெளிச்சம் பிரமாதமாகப் பட்டிருக்கும். அதனால் "Sunnyvale" என்று அழைக்க ஆரம்பித்திருப்பார்கள். அதுபோல், பக்கத்து ஊரான Mountain View வில் எங்கிருந்து பார்த்தாலும் சுற்றிலும் உள்ள மலைகள் பார்க்க அருமையாக இருக்கிறதல்லவா? அதனால் Mountain View என்று பெயர் வந்திருக்கும்." என்று சொல்வது வழக்கம். பெயர் காரணம் ஒரு பக்கம் இருக்கட்டும். பார்க்க ரம்மியமாக இருக்கும் 1500 சதுர மைல் பரப்பளவு கொண்ட சிலிகான் பள்ளத்தாக்கில் சன்னிவேல், மௌண்டன் வியூ போன்று, லாஸ் கடோஸ், சாண்டா கிளாரா, பாலோ ஆல்டோ, என்று இன்னும் சில சிறு நகரங்கள் உள்ளன. இவையனைத்தும் சாண்டா கிளாரா மாவட்டத்தில் ( Santa Clara County) அமைந்துள்ளது -( நாடு, மாகாணம், கௌண்டி, சிறு நகரம், கிராமம் )

சுமார் ஒரு மில்லியனுக்கும் மேல் ( 1,678,421) மக்கள் தொகை உள்ள இந்த மாவட்டத்தில் இந்தியர்களின் எண்ணிக்கை 4 சதவிகிதத்திற்கு மேல் !! அமெரிக்காவிலேயே இந்த சாண்டா கிளாரா மாவட்டம்தான் இந்தியர்களின் concentration அதிகம் என்று புள்ளி விவரம் கூறுகிறது. ஆனால் இதற்கு புள்ளிவிவரமே வேண்டாம். ஆங்காங்கே உள்ள பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள், கடைவீதி என்று ஒரு நடை நடந்தாலே போதும் எதிரே குறைந்தது பத்து பேராவது இந்தியராக அல்லது இந்தியத் துணைக்கண்டத்திலிருந்து ஒருவராக இருப்பார். இந்த பள்ளத்தாக்கு நகரங்களின் சரித்திரம் என்று பார்த்தால் அது ஆரம்ப கால Ohlone என்று சொல்லப்படுகிற ஆதிவாசி அமெரிக்க இந்தியர்களில் தொடங்குகிறது. 1972 ம் ஆண்டு நடந்த ஒரு அகழ்வாராய்ச்சியில் கி.மு. 3000 ஆண்டிலிருந்தே இந்தப் பள்ளத்தாக்கில் ஆதிவாசிகள் குடியிருந்ததைக் கண்டறிந்திருக்கிறார்கள். இதையும் இங்கே லாஸ் கடோஸ் என்ற ஊரில் ஒரு பெரிய பாலத்திற்கு அருகில் சுவர் சித்திரமாக ( Mural) வரைந்து வைத்திருக்கிறார்கள். அந்தச் சித்திரத்தில், நாலைந்து குடிசைகளின் பிண்ணனியில் ஒரு ஆதிவாசிக் குடும்பம், நாய்கள் பன்றிகள் புடைசூழ இருக்கிறது. ஆதிவாசிகளுக்குப் பின் இங்கு உலகின் எல்லா திசைகளிலிருந்தும் மக்கள் குடியேற ஆரம்பித்தார்கள். ஸ்பெயின் நாட்டிலிருந்து வந்த குடியேற்றம் முக்கியமானது. இதனால் ஆங்கிலம் பொதுவாக புழங்கும் மொழியானாலும் இன்றும் இங்கும் பல பொது இடங்களில் மும்மொழி பின்பற்றப்படுகிறது. ஆங்கிலம், ஸ்பானிஷ் மற்றும் ·பிரென்ச். இந்த ஸ்பானிஷ் குடியேறிகளின் முதன்மை வாழ்க்கை முறை விவசாயம் மற்றும் பண்ணைகளில் வீட்டு, விவசாய மிருகங்கள் பராமரித்தல். ( cattle ranching) என்று இருந்திருக்கின்றனர். கோதுமையும் பார்லியும்தான் முதன்மை தான்யங்கள். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தான்யங்களிலிருந்து, பழச் சோலைகள், காய்கறி பண்ணைகள் என்று பயிரினங்கள் பெருகின. அந்தக் காலத்திலேயே ஆப்பிரிக்காட் பழ விளைச்சலை நன்குப் பதப்படுத்தி உலர்ந்த பழங்களாகவும், சல்பர் போட்டு பழுக்க வைக்கப்பட்ட பழங்களாகவும் பேக் செய்து வியாபாரம் செய்திருக்கிறார்கள். அழகுற, சேதம் வராமல் பேக் செய்வதைத் தனி கலையாகவே, தனி தொழிலாகவே செய்திருக்கிறார்கள். அதோடில்லை. 1880களிலேயே குளிர்ப்பதனபடுத்தப்பட்ட ரயில் பெட்டிகளில் பழங்கள் விற்பனைக்கு எடுத்துச்செல்லப்பட்டிருக்கின்றன.சரித்திரத்தைப் பாதுகாக்கும் வகையில் சன்னிவேல் நூலகத்தில் பல தலைமுறையினராக இங்கே இருப்பவர்களின், இருந்தவர்களின் குரல்களிலும் இதர எழுத்து வடிவங்களிலும், இந்தப் பள்ளத்தாக்கின் சரித்திரம், விவசாயப் பொருளாதாரத்திலிருந்து இன்று உலகின் தொழில் நுட்ப இதயமாக மாறியது வரையிலான மாற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. உதாரணமாக வின்ஸ் காலா என்கிற உள்ளூர்காரர் சொல்கிறார். "என் தந்தை சிசிலியிலிருந்து 1920ல் உலகப் போருக்குப் பின்னர் இங்கு வந்தார். முதலாம் உலகப் போருக்கு சென்றிருந்த அவர் ஊர் திரும்பும்போது பெரிதாக சொத்து எதுவும் அங்கே அவருக்கு ஒன்றும் காத்திருக்கவில்லை. அதனால் அமெரிக்கா வந்துவிட்டார். என் அம்மாவின் அப்பா இப்படி இங்கேப் பிழைப்புக்காக குடியேறிய இளைஞர்களுக்கு என்றே உருவாக்கியதுபோல் நிறையப் பெண்களைப் பெற்றிருந்தார். அதில் ஒருவர் என் அம்மா. விவசாயக் குடும்பத்திற்கு ஏற்ற மாதிரி வளர்ந்த பெண். அப்பாவுடன் பண்ணை வாழ்க்கை அவருக்கு மிகப் பிடித்திருந்தது. பண்ணையில் கோழி, கோழிகளின் எச்சம் தோட்டத்திற்கு உரம் என்று சரியான கிராம வாழ்க்கை. அப்பா ஒயின் உற்பத்தியும் செய்தார். எங்களுக்கு வேண்டியது போக பாக்கி வெளியே விற்பார். அந்தக் காலத்தில் ஒரு காலன் விலை, 50 செண்ட்தான். ஆனால் பீப்பாயை வாங்குபவர்கள் கொண்டு வரவேண்டும். 1920ல் பொருளாதாரத் தேக்கம் வருவதற்கு முன்னால் அப்பா, இப்போது பழைய சான்பிரான்ஸிஸ்கோ சாலையருகே, டாசன் மூலை இருக்கிறதே அதற்கு வடக்கே ஒரு 10 ஏக்கர் நிலம் வாங்கிப் போட்டிருந்தார். முதலில் அங்கே வெறும் பழத் தோட்டம்தான் போட்டிருந்தார். பிறகுதான் அதில் வீடும் கட்டிக்கொண்டார். 2500 டாலரில் ஐந்து பெரிய அறைகளும் கீழே பேஸ்மெண்டும் கூடிய பெரிய வீடு. இப்போ அந்த விலைக்கு ஒரு கதவு கூட கிடைக்காது."இப்படி போகிறது அவரது கதை - அதன் மூலம் ஊர் வளர்ந்த கதையும்.இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர்தான் இந்த விவசாயமும், பழ உற்பத்தி மற்றும் பொட்டலம் கட்டும் தொழிலும் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்தது. காரணம், போருக்குத் தேவையான ஆயுத உற்பத்தியில் கவனம் சென்றது. இதுவே பின்னர் விவசாய சாதனங்கள் உற்பத்தி என்றும் விரிவடைந்தது. நூலகத்தில் 1875ம் வருடம் பிரசுரிக்கப்பட்ட ஒரு கையேட்டில் சன்னிவேலின் முதல் இரும்புப் பட்டறையான Joshua Hendy Iron works என்ற பட்டறை, தான் தயாரித்து விற்பனை செய்த விவசாயக்கருவிகளைப் படங்களுடன் விளம்பரம் செய்துள்ளது. அதே கையேட்டில் கிராமத்தில் உள்ள ஒவ்வொருவர் பெயர், அவர் தொழில், - விவசாயி, தச்சுர், கொல்லன், கணக்கர் என்ற ரீதியில் - அவர் இருக்கும் வீடு, இருக்கும் தெரு என்று ஒரு பட்டியல் உள்ளது. தொலைபேசி வந்திருக்காத காலம். ஆனால் கிட்டதட்ட அதுபோன்ற விவரங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளது.1880 களில் மார்டின் மர்பி என்பவர் இங்குப் பெரும் நிலத்தை வாங்கி எஸ்டேட் நிறுவியதும், அவரது வாரிசுகள் பிறகு பங்குபோட்டு பிரித்து பிறகு சன்னிவேல், மௌண்டன் வியூ போன்ற பல நகரங்களாக உருவெடுத்ததும், அடுத்துத் தொடர்ந்த கதை.இரண்டாம் உலகப்போருக்குப் பின், உணவு உற்பத்திக்கான இயந்திரங்கள் தயாரிப்புக் குறைந்து ஆயுதங்களும் மற்ற இயந்திரங்களும் தயாரிக்கும் நிறுவனங்கள் வர ஆரம்பித்தன. புகழ் வாய்ந்த விமானத் தயாரிப்பாளர் Lock Heed Martin 1950 களில் இங்கு சன்னிவேலில் தொடங்கியதும் கிராமம் சிறு நகரமாக மாறிற்று. தொழிற்சாலையில் வேலை செய்ய வெளியிடங்களிலிருந்து மக்கள் வர ஆரம்பிக்க தனித்தனி வீடுகள் மாறி " கூட்டுக் குடியிருப்புகள்" ( Condominiums) வர ஆரம்பித்தன.

பழமுதிர்சோலையாக இருந்து கன இயந்திரத் தயாரிப்பு ஸ்தலமாக உருவெடுத்த இந்த சாண்டா கிளாரா மாவட்ட நகரங்கள், சிலிகான் பள்ளத்தாக்காக மாறியது ஸ்டான்போர்ட் மாணவர்கள் இருவர் - Hewlett & Packard முதன் முதல் தங்களின் தொழில் நுட்ப நிறுவனத்தை ஒரு கேரேஜில் தொடங்கிய பின்தான். இன்றும் இந்த காரேஜ் அப்படியே பாதுகாக்கப்படுகிறது. இந்த ஜூலை மாதம் இதை அப்படியே பழைய நிலையிலேயே பாதுக்காத்து புதுப்பிக்க, பல ஆயிர டாலர்கள் செலவில் புது முயற்சியும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.அவர்கள் பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்த தொழில் நுட்ப ஆர்வம், பிறகு சட்டென்று மழைக்கால காளான் போல குப்பென்று அக்கம்பக்கம் முளைக்க ஆரம்பித்தது. ஒரு பக்கம் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் உற்பத்தி செய்யும் ஆராய்ச்சி மாணவர்கள்; இன்னொருபுறம் ஏற்கனவே வெற்றிகரமாக இயங்கும் சிலிகான் தொடர்புடைய தொழில் நுட்ப நிறுவனங்கள். இரண்டுமாக சேர்ந்து இங்கே மேன் மேலும் புதியவர்கள் ஆர்வத்தோடு புதிய நிறுவனங்கள், புதிய துறைகளில் ஆரம்பிக்க, இன்று சாண்டா கிளாரா பள்ளத்தாக்கும், சான்பிரான்ஸிஸ்கோவின் விரிகுடாப் பகுதியும் ( Bay Area) இணைந்து சிலிகான் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படும் அளவு உரு மாறியுள்ளது. இப்படி இந்த இடத்தில் மட்டும் அப்படி என்ன வித்தியாசமாக இருக்கிறது? ஏன் அமெரிக்காவில் மற்ற பல்கலைக்கழகங்கள் இருக்கும் இடங்களில் இப்படி கணினி சம்பந்தமானத் தொழில் பெருகவில்லை என்று ஒரு கேள்வியும் அவ்வப்போது எழுகிறது. இந்தப் பகுதி கணினி சார்ந்த தொழில் நுட்பத்தில் சிறக்க ஒரு காரணம், சமய, சந்தர்ப்ப, பூகோள ரீதிகளில் தன்னிச்சையாக உருவாகும் ஒரு அதீத வாய்ப்புதான். ஒரு குறிப்பிட்ட தொழில் அல்லது வணிக துறையில், வாய்ப்பு கணிசமாக உருவாகிய சூழ்நிலையில் ஒரு இடம் தானாகவே அந்தத் தொழிலில் சிறப்பு என்று ஒரு பெயர் பெற்றுவிடும் - அது சம்பந்தமாக மேன்மேலும் வல்லுனர்கள் அங்கேயே இருப்பதால் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ள - வியாபாரம் செய்ய என்று ஒரு குழுத் தன்மையும் அந்தத் தொழிலில் ஒரு சிறப்புத்தன்மையும் உருவாகிவிடும். சிலிகான் பள்ளத்தாக்கில் இதுதான் நிகழ்ந்துள்ளது. ஸ்விட்சர்லாந்தில் வாட்ச் தொழில் மாதிரி, திருப்பூரில் பனியன் மாதிரி.இன்று சிலிகான் பள்ளத்தாக்கு என்று ஒரு கற்பனை பெயரில் அழைக்கப்படும், சான்பிரான்ஸிஸ்கோ விரிகுடாப் பகுதி குட்டி நகரங்களின் கும்பலில் பெரிதும் சிறிதுமாக - ஒற்றை ஆள் வணிகத்திலிருந்து, தொடங்கி, நான்கு பேர், பத்துபேர், நூறுபேர், ஆயிரம் பேர் வேலை செய்யும் நிறுவனங்கள் என்று மொத்தம் 48,996 உள்ளன. ஆயிரத்துக்கு மேற்பட்டோர் வேலை செய்யும் நிறுவனங்கள் மட்டும் சுமார் 100க்கும் மேலே.இவ்வளவு பேர் இங்கே புழங்கிக்கொண்டிருந்தாலும் கொஞ்சம் கூட இந்த சிறு நகரங்களில் கும்பல், கூட்டம் என்ற உணர்வே இல்லாத சூழ்நிலை வியப்பாகதான் இருக்கிறது. பொதுவாக ஒரு அமைதி. காலை வேலையில் கூட சாலையில் டிராபிக் ஜாம் கிடையாது. ( ஆனால் சான்ஸ்பிரான்ஸிஸ்கோ, மற்றும் சான் ஹோஸே நகரங்களில் அது நிறையவே உண்டு. அவைப் பெரு நகரங்களாச்சே; இல்லாமல் பின்னே?) ஒன்பது மணியிலிருந்து மாலை ஆறு மணி வரை வேலை நேரம். நடுவில் ஒரு மணி நேரம் பகல் உணவு இடைவேளை. ஆனால் உலகில் எல்லா இடங்களிலும் கணினித்தொழிலில் இருப்பதுபோல அவரவர் வேலையைப் பொறுத்து செய்கிறார்கள். Flexi time. ஆனால் பொதுவாக மாலை வேளைகளில் தேவையில்லாமல் வேலை என்று ஆபீஸில் உட்கார்ந்து இருப்பதில்லை. பெரும்பாலும் இந்த சிலிகான் பள்ளத்தாக்கின் தொழில்நுட்ப நிறுவனங்கள் அல்லது ஒரு நிறுவனத்தின் பல்வேறு துறைகள் கட்டிடங்கள் ஒரே தெருவில் அல்லது அருகாமையில் இருப்பதால் வேலை செய்பவர்கள் அடிக்கடி கையில் காபி அல்லது கோக், என்று ஏதாவது எடுத்துக் கொண்டு அலுவலக வேலை சம்பந்தமாக குறுக்கும் நெடுக்கும் சாலைகளில் கட்டிடங்களிடையே நடந்து போய்வருவதும் சாதாரணம். மாலைகளிலும், வார இறுதி விடுமுறைகளிலும் முக்கியப் பொழுதுபோக்கு ஆரோக்கியமான வழிகளில் - வெளியே விளையாடுவது, நடப்பது, உடற்பயிற்சி, நண்பர்கள் சந்திப்பு, என்று பல விதங்களில். பூங்கா நகரம் என்று சொல்லக்கூடிய அளவு சன்னிவேல் நகரம் பூங்காக்களுக்கு விசேஷம். தண்ணீர் லாரிகள் கிடையாதே தவிர, பொதுவாக கலிபோர்னியாவில் தண்ணீர் தட்டுபாடு உண்டாம். அலங்கார நீரூற்றுக்களுக்கும், பூங்காக்களுக்கும் சுழற்சி செய்த தண்ணீர்தான் உபயோகிக்கப்படுகிறது. ஆனாலும் அடர்த்தியான மரங்களும், புதர்களும், செடிகளுமாக என்ன ஒரு பசுமை ! தண்ணீர் தட்டுப்பாடு என்பதை நம்ம முடியவில்லை.டில்லியின் லோதிப் பூங்கா மாதிரி இங்கேப் பெரும்பாலும் எல்லாமே பெரிய பூங்கா வனங்கள். பெரு நகரங்களில் இருப்பது போல், தீம் பார்க், Multiplex, IMax, போன்ற கேளிக்கைகள் பொழுதுபோக்கு கவர்ச்சிப் பொறிகள் (Entertainmnet Trappings) இல்லாததாலோ என்னவோ நிறைய இயற்கையான பொழுதுபோக்குகள். ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் பகுதிகளில் வாழ்ந்தால் திரைப் பிரபலங்கள் அக்கம்பக்கத்தார் ஆவதுபோல் , இங்கு Oracle தலைவர் Larry Ellison போன்ற கணினி பிரபலங்கள் பூங்காக்களில் ஹலோ சொல்லிக் கொண்டு போகலாம். பெரும்பாலான பூங்காக்களில் டென்னிஸ், மற்றும் மற்ற பந்து விளையாட்டுகள், உடற்பயிற்சி நிலையங்கள், ( Gym), என்று பல வசதிகள் உள்ளதாக இருக்கிறது. ஆனால் பகலில் சாதுவாக இருக்கும் டவுன் டௌன் கடைத்தெருக்கள் இரவு கல கலவென்று ஆகிவிடுகிறது. Mountain View நகரத்தில் உள்ள காஸ்டிரோ தெருவில் நிறைய ரெஸ்டாரெண்ட்களும் உண்டு. மெக்சிகன், தாய், இந்திய என்று எல்லாவித உணவுக் கூடங்களும் ரொம்பி வழிய ஆரம்பித்துவிடுகிறது. இங்கே தொழில் நுட்ப நிறுவனங்களில் வேலைப் பார்க்கும் பல நாட்டினருக்கும் ஏற்றாற்போல் வகை வகையான உணவகங்கள்.

பொதுவாக இங்கு எல்லா ரெஸ்டாரெண்டிலுமே, காபி கடைகளிலும் கடையை ஒட்டிய நடைபாதையில் மேஜை நாற்காலி போடப்பட்டு, தெருவை வேடிக்கைப் பார்த்துக் கொண்டே உணவு, காபி அருந்துவது எல்லோருக்கும் பிடித்த விஷயம். இரவு 11 மணிக்கு உணவகங்கள் மூடினாலும் நைட்கிளப், pub போன்றவை 11 மணிக்கு மேல்தான் களை கட்ட ஆரம்பிக்கிறது. 11 மணிக்கு மேல் இந்த இடங்களில் வாசலில் நுழைய இளைஞர்கள் வரிசையில் நிற்கிறார்கள். சிலிகான் பள்ளத்தாகில் பணமும் நிறையப் புழங்குவதால் இப்படிபட்ட பொழுதுபோக்குகளுக்கும் பஞ்சமில்லை. ஒரு பக்கம் விளையாட்டு, பார்க் என்று பொழுது போகிறது. இன்னொரு பக்கம் இரவு நடனம் என்று ஜாலியாகவும் இருக்கிறார்கள்.அலுவலகங்களுக்குப் பக்கத்தில் இருக்கும் பூங்காக்களில் மதிய உணவுக்குப் முன் அல்லது பின் பந்து விளையாடுபவர்களும் உண்டு. வெயில் காலத்தில் இரவு 9 வரை சூரியன் இருக்கிறதால், சுமார் மாலை ஆறிலிருந்து 9 மணி வரை இங்கே பலவிதங்களில் நேரம் செலவழிக்கப்படுகிறது. அதற்குப் பிறகும், இரவு 11 மணிக்கு பூங்கா விளக்குகள் அணைக்கப்படும்வரை, விளையாட்டுகள், உடற்பயிற்சி செய்வோர் என்று கலகலவென்றுதான் இருக்கிறது. மழைப் பெய்து ஒரு தூரல் போட்டு நின்றவுடன் சில சமயம் எங்கிருந்தோ மளமளவென்று ஈசல் பூச்சிகள் வந்து நம் வீட்டுக்குள் பறந்து வருமே, அதுபோல் மாலை வேளையானதும் பூங்காக்கள் மனிதர்களால் நிரம்ப ஆரம்பித்து விடும். இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம். - கணிசமானோர், இந்தியர்கள். - பலர் பெற்றோருடன். சில சமயம், பெற்றோர் மட்டும். இந்தியாவிலிருந்து வருபவர்களுக்கு, இந்திய சங்கங்களில் உள்ள பல வித கச்சேரிகள், கூட்டங்கள் இவைத் தவிர அடுத்த சந்திக்கும் இடம் பூங்காக்கள். "நான் வந்து ஆறு மாதம் ஆச்சு"; எந்த பிளைட்டில் போகிறீர்கள்", தமிழ்ப்படம், சந்திரமுகி, மன்மோஹன் சிங், வத்தல் தீர்ந்துவிட்டது, சரவண பவனில் ஊத்தப்பம் பிரமாதம் - ( பல சமயம் தமிழில்) - என்று காதில் வந்து விழும் விஷயங்கள் - இந்தியாவில் இருக்கிறோமோ என்று எண்ண வைக்கும். இங்கே பக்கத்து கௌண்டி ஒன்றில் Fremont என்ற முனிசிபாலிடியின் கௌன்சிலில் அனு நடராஜன் என்ற ஒரு தமிழரும் உண்டு.

பொதுவாக நம் மக்கள் கோவிலில்லா ஊரில் குடியிருக்க மாட்டார்கள். அப்படியே வசிக்க நேர்ந்தால், டிம்பக்டூ என்றாலும் இருக்கும் இடத்தில் முதல் காரியமாகமொரு கோவிலை எழுப்பிவிடுவார்கள். சன்னிவேல் கோவில் இங்கு சுற்று வட்டார பக்திமான்களுக்கு ஒரு வடிகால். ஊரிலிருந்து வரும் இந்தியர்கள் பலருக்கு இது ஒரு பெரிய சந்திக்கும் இடமாகவும் ஆகிறது. பிட்ஸ்பர்க் மற்றும் இதர வெளி நாட்டு கோவில்கள் போல இன்னும் இது செழிப்பாக கோபுரங்களுடன் உருவாகவில்லை. ஒரு பெரிய ஹால். உள்ளே மண்டபங்கள் - பலவித கடவுள் விக்கிரகங்கள் மற்றும் படங்களுடன். எம்மதமும் சம்மதம் கோவில். அவரவருக்குப் பிடித்த இஷ்ட தெய்வங்களைக் கொண்டு வைத்துள்ளார்கள். குரு நானக், புத்தர், ஜெயின் இவர்களெல்லோரும் பிள்ளையார், சிவன், ஸ்ரீரங்கம் ரங்கனாதர், திருப்பதி வெங்கடாஜலபதி இவர்களுடன் ஒரே இடத்தில். ஜரிகை வேலை செய்த சிவப்புத் துணி போர்த்து வைக்கப்பட்டிருந்த சீக்கிய குரு கிரந்த் சாஹிப் அருகில் குட்டிப் பிள்ளையாரும் இருந்தார்.இந்தியர்களின் பொழுதுபோக்கு இப்படி பூங்கா, கோவில், நண்பர்கள் என்றால், மற்ற அமெரிக்கர்கள் பலர் குடும்பத்துடன் - குழந்தைகளுடன் - பின் பக்கம் குட்டி சைக்கிள் இணைத்த பெரிய சைக்கிளில் மகளைப் பின்னால் வைத்துக் கொண்டு செல்லும் தாய், இரண்டு வயது குழந்தையை நம் திருவிழாவில் தோளில் தூக்கிப் போவதுபோல் ஜாலியாக தூக்கி மேலே வைத்துக் கொண்டு செல்லும் அப்பா, ராக்ஷ்ச சைஸ் கருப்பு அணிலுக்கு தன் சாப்பாடை வினியோகம் செய்யும் சீனக் குழந்தை, புறாக்களுக்கு தான்யம் இடும் வயதான வட இந்தியத் தாத்தா என்று தெருக்களும் பூங்காக்களும் சிலிகான் பள்ளத்தாக்கின் உயிர் நாடியைப் பிரதிபலிக்கும் வகையில் பலவித மக்களால் களைக் கட்டியிருக்கும். அமெரிக்காவின் மேற்குக் கடற்கரையோரப் பகுதி என்பதால் ஏகமாக கடற்கரைகள். வார இறுதியில் அவரவர் வெயில் குளியல், அல்லது அலைகள் மேல் மிதக்க (surfing) என்று குடும்பத்துடன் கிளம்பி விடுகிறார்கள். நதிகள், ஏரிகள் அருகில் இருந்தால் படகு ஓட்டுதல், மீன் பிடித்தல் என்று ஒரு வகை.மொத்தத்தில் விவசாயம், பழச் சோலை என்று இருந்த இந்த கிராமங்கள் இன்று தொழில் நுட்ப நகரங்களாக மாறியிருந்தாலும் அடிப்படையில் எளிமையான வாழ்க்கை முறை, நல்ல காற்று, குறைந்த விலைவாசி, குற்றங்கள் மிகக் குறைவு, என்று கிராமங்களின் இயற்கையையொட்டிய அத்தனை நல்ல விஷயங்களையும் வாரி வழங்கி, அதே சமயம் நகரங்களின் நவீன வசதிகளையும் உள்ளடக்கி - அமெரிக்க கிராமங்களில், குட்டி நகரங்களில் வாழ்க்கை உத்தமம்.

நன்றி: திசைகள்.

2 comments:

துளசி கோபால் said...

இப்படி ஒரு நவீன கிராமம்தான் நான் இருக்கறது.
எப்ப வர்றீங்க அருணா?

Aruna Srinivasan said...

துளசி, கொஞ்சம் (!!!!) தாமதமாக என் பதில் - இங்கே புயல் வெள்ளமெல்லாம் பார்த்தால் அடுத்து எங்கே கிளம்பலாம் என்று யோசிக்க ஆரம்பித்துவிட்டேன். :-)