Tuesday, March 29, 2005

சென்ற பதிவில், இப்போது அனுமதிக்கப்பட்டுள்ள மசோதா பற்றி எனக்கு எழுந்த சந்தேகங்கள் பற்றி கூறியிருந்தேன். இவற்றிற்கு பதில் தேட இங்கே சென்னையில் வக்கீலாக பணியாற்றும் - காப்புரிமைகள் விவகாரம் இவரது சிறப்பு துறைகளில் ஒன்று - திரு. A.A. மோஹன் அவர்களுடன் பேசினேன். அவருடன் பேசியதிலிருந்தும், இணையம் மற்றும் செய்தித்தாள்களை அலசியதிலிருந்தும் கிடைத்த விளக்கங்களை கேள்வி - பதிலாக கொடுத்திருக்கிறேன்.

1. இந்த காப்புரிமை சட்டத்தினால் நமது விஞ்ஞானிகளுக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கும் வெளி நாடுகளில் காப்புரிமை செய்வதன் மூலம் ஒரு பன்னாட்டு அங்கீகாரமும், முதலீடும் கிடைக்கும் என்று கமல் நாத் கூறியுள்ளார். நாம் இங்கே ஒரு மருந்து கண்டுபிடித்து அதன் அடிப்படையில் மருந்துகள் உற்பத்தி செய்து, அந்த product ஐ காப்புரிமை செய்ய முடியுமா?

பதில்: முடியும். ஆனால் பன்னாட்டு காப்புரிமை என்று எதுவும் கிடையாது. நம் நாட்டில் காப்புரிமை வாங்கியிருந்தாலும் வெளி நாட்டில் அந்தப் பொருளுக்கு அவர்கள் நாட்டு சட்டங்கள்படி காப்புரிமை பெற வேண்டும். பொதுவாக Patent வாங்க பிற நாட்டில் நிறைய செலவாகும். சில சிறிய நிறுவனங்களால் இப்படி பணம் செலவழிக்க வசதி இல்லாமல் இருக்கலாம். ஆனால் இப்படி செலவு செய்து வெளி நாட்டில் காப்புரிமை வாங்காது விட்டுவிட்டால், பிறகு நம் பொருளைக் காப்பியடித்து அங்கே யாராவது உற்பத்தி செய்யும்போது கையைப் பிசைந்து கொண்டு வேடிக்கை பார்க்க நேரும். அதனால் இங்கேதான் காப்புரிமை வாங்கியாச்சே; உலகத்தில் யாரும் இனி இதைக் காப்பியடிக்க முடியாது என்று நினைத்து அசிரத்தையாக இருக்கக் கூடாது.

2. கட்டாய லைஸென்ஸ் இந்திய நிறுவனங்களுக்கு எந்த விதத்தில் அனுகூலமாக இருக்கும்?

பதில் : வெளி நாட்டு நிறுவனம் தயாரிக்கும், காப்புரிமையுள்ள அத்தியாவசியமான மருந்து ஒன்று இங்கே ஒரு நிறுவனம் தயாரிக்க விரும்பி அதற்குத் தேவையான தயாரிக்க அடிப்படை வசதிகள்/ கட்டுமானங்கள் இருந்தால், ஓரளவு நியாயமான ராயல்டி கொடுத்துவிட்டு இங்கே தயாரிக்க முடியும்.

3. புதிய கண்டுபிடிப்புக்கு மட்டும்தான் காப்புரிமை. சிறிய மாற்றங்களுடன் மறுபடி அறிமுகப்படுத்தும் பொருட்களுக்கல்ல. இந்தச் சட்டத்தின் பயன்?
பதில்: ஒரு மருந்து சந்தையில் நம்பர் ஒன்றாக இருக்கும் நிலையில் அதன் காப்புரிமை காலாவதிகிறது என்று வையுங்கள். உடனே அதற்கு சற்று முன்னால் தயாரிப்பில் சின்ன மாற்றங்கள் செய்து அந்தப் "புது" படைப்பின் பேரில் புது காப்புரிமை பெறுகின்றன மேல் நாடுகளில் சில நிறுவனங்கள். நம் நாட்டில் அதுபோல் கண் துடைப்புகளுக்கு சான்சே இல்லாமல் இப்படி ஒரு விதியைக் கொண்டு வந்தாயிற்று. உண்மையிலேயே சிறப்பான, விரைவில் நிவாரணம் அளிக்கக் கூடிய மருந்தைக் கண்டுபிடிக்கும் உண்மையான வெளி நாட்டு கண்டுபிடிப்புகளுக்கு இதன் மூலம் இங்கே ஒரு பாதுகாப்பு கிடைக்கிறது.
4. காப்புரிமை பெற்ற மருந்துகளையும் இந்திய நிறுவனங்கள் தயாரித்து மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம். - ராயல்டி கொடுத்துவிட்டு. ஆனாலும் விலையேறாது என்கிறார் அமைச்சர். அது எப்படி?

பதில்: ஒன்று, இந்தியாவில் விற்பனையாகும் மருந்துகளில் பல இப்போதும் காப்புரிமைப் பிரச்சனைக்கு அப்பால்தான் இருக்கின்றன. அப்படியே காப்புரிமை இருக்கும் மருந்துகளைத் தயாரிக்கவும் ராயல்டி கொடுத்துவிட்டு எப்போதும்போல் தயாரித்து விற்க தடையேதும் இல்லை. மருந்துகளின் விலை சாதாரன மக்களால் கொடுக்க முடியாத அளவு ஏறாது. ஏனென்றால் நம் நாட்டில் மருந்துகள் விலையை நிர்ணயம் செய்ய Drug Price Control Order என்ற அமைப்பு இருக்கிறது. சாமான்யர்களால் கொடுக்க முடியாத அளவு விலையேறாமல் பார்த்துக்கொள்வது இதன் பொறுப்பு. இப்போது இந்த காப்புரிமை விஷயத்தில் ஒரு சரியான சட்டம் அமுலுக்கு கொண்டு வந்ததால் அடிப்படையில் WTO வுக்கு கொடுத்த உடன்படிக்கையின்படி TRIP complaiant ஆக இருக்கிறோம். அதே சமயம் நாம் நம் மக்களுக்கு விலையேறாமல் தடுக்க தேவையான பாதுகாப்புகளும் வைத்துள்ளோம் !!! :-)

5. மென்பொருட்கள் விஷயத்தில் குழப்பம் சற்று அதிகமாகவே இருக்கிறது. இரண்டு நாட்கள் முன்பு பிஸினஸ் லைன் தினசரியின் செய்திபடி பொதிந்த மென்பொருட்களுக்கு காப்புரிமை உண்டு. ".... The amended Bill provides for product patent in drugs, agri products and embedded software while patentability of plants remains outside the purview of the proposed Act..." - The Business Line dated March 23. 2005. Passage from the Lead story on the front page. ஆனால் இன்று எகனாமிக் டைம்சில் 3ம் பக்கத்தில் உள்ள ET in the Classroom பகுதியின்படி, "......The Bill has dropped the provision allowing patents for a computer programme's technical applications to the industry or its combination with hardware as those used in mobile phones....." ET March 28th.

என் குழப்பம் தீரவில்லை. embedded softwar க்கு காப்புரிமை உண்டா இல்லையா? மோஹனைக் கேட்டேன்.

" இந்த விஷயம் தற்போது வந்துள்ள திருத்தப்பட்ட மசோதாவில் தெளிவாக இல்லைதான். ஏற்கனவே டிசம்பரில் அறிவித்திருந்த "ordinance" இதைப் பற்றி மிகத் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தது - Industrial applications, technical applications to the industry, இவற்றில் பயன்படுத்தபப்டும் மென்பொருளுக்கு காப்ப்புரிமை உண்டு என்பதை. ஆனால் இப்போது திருத்தப்பட்ட சட்டத்தில் இப்படி தெளிவாக இல்லை. எந்த மாதிரியான மென்பொருளுக்கு காப்புரிமை உண்டு என்பது தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை. embedded என்ற வார்த்தைப் பிரயோகம் அதில் இல்லை. இதனால் காப்புரிமைக்கு விண்ணப்பம் கொடுக்கும் நிறுவனங்களின் விண்ணப்பத்த்தின் சாதக பாதகங்களை ஆராய்ந்துதான் முடிவு எடுக்கப்படும் என்று நினைக்கிறேன். Case by case அடிப்படையில் கொடுக்கப்படலாம். முடிவெடுக்க வேண்டிய அதிகாரியின் தீர்மானத்தைப் பொறுத்தது." என்றார் அவர்.
வரும் நாட்களில் குழப்பங்கள் தெளிகிறதா என்று பார்க்கலாம்.

5 comments:

Anonymous said...

நல்ல பதிவு. நிறைய தகவல்களை அறிந்து கொள்ள முடிநதது.
சட்டம் அமலுக்கு வந்ததும் அவசர சட்டம் காலாவதியாகிவிடும். எனவே சட்டத்தில் 'பொதிந்த' என்ற வார்த்தை இல்லை என்றால் குழப்பம் அதிகம் ஆகும்.
.
மாலன்

Anonymous said...

நல்ல பதிவு. நிறைய தகவல்களை அறிந்து கொள்ள முடிநதது.
தகவலுக்கு நன்றி

கங்கா
http://zendaily.blogspot.com

Kangs(கங்கா) - Kangeyan Passoubady said...

நல்ல பதிவு. நிறைய தகவல்களை அறிந்து கொள்ள முடிநதது.

தகவலுக்கு நன்றி

Anonymous said...

Useful post, thankx.
-podichchi

Anonymous said...

மாலன், கங்கா, பொடிச்சி, உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி




Aruna