Thursday, March 24, 2005

காப்புரிமை சமாசாரத்தை சந்திரன் தன் பதிவில் நன்றாக விவரித்துள்ளார். நான் மறுபடி அடிப்படைகளை விவரிக்க வேண்டாம் என்று நினைக்கிறேன். இன்னும் சிறிது கூடுதல் பின்புலம் விவரங்கள்:

  • 1995ல் WTO மாநாட்டில் செய்துகொண்ட பல உடன்படிக்கைகளில் 10 வருடத்தில், TRIPS ( Trade Related aspects of Intellectual Property Rights) விதிகளின்படி, முறையாக நாம் ஒரு காப்புரிமை சட்டம் வைத்துக்கொள்வோம் என்று ஒப்புக்கொண்டுள்ளோம்.
  • காப்புரிமை சட்டம் சரியாக இல்லாத நிலையில் நம்மை ஒரு தபால பெட்டி முறையை வைத்துக்கொள்ளும்படி மற்ற நாடுகள் வலியுறித்தின. அதாவது அவர்கள் ஒரு பொருளுக்கு காப்புரிமை இந்தியாவில் தேவை என்பதற்கான வேண்டுகோள் விடுத்து முன் பதிவு செய்வார்களாம். நாம் நிதானமாக 10 வருடம் கழித்து நமது சட்டம் கொண்டுவரும்போது இவர்கள் வரிசையில் வைத்து இருக்கும் அப்ளிகேஷன்களை நாம் பரிசீலனை செய்ய வேண்டும் என்றார்கள். அதாவது இடம் ரிஸர்வ் செய்ய கைக்குட்டை, பேப்பர் போட்டுவைப்பதுபோல. ஆனால் நாம் இந்த தபால் பெட்டி முறைக்கு பல வருடங்கள் ஒத்துக்கொள்ளவில்லை. அமெரிக்கா இதை ஆட்சிபித்தபோது, நம்மிடம் ஓரளவு காப்புரிமை கோரல்களுக்காக ஒரு நிர்வாக வழிமுறைகள் உள்ளன; அதே போதும் என்று சொல்லிவிட்டோம். தவிர, இந்த மாதிரி தபால் பெட்டி அப்ளிகேஷன்களெல்லாம் நமது காப்புரிமை வழக்குகளில் நம் இந்திய கோர்ட்டுகளில் செல்லுபடியாகாது. அதனால் இது தேவையில்லை என்று சொல்லிவிட்டோம். தபால் பெட்டியோ இல்லையோ, மருந்து காப்புரிமைகளுக்காக மட்டுமே 1996 லேயே 896 அப்ளிகேஷன்கள் வந்திருந்ததாக தெரிகிறது. தற்போதைய எண்ணிக்கை தெரியாது.
  • இப்போது காப்புரிமை அமுலுக்கு வந்துவிட்டதால் இந்த பழைய அப்ளிகேஷன்களை முதலில் பரிசீலனை செய்ய வேண்டும்.


சந்திரன் குறிப்பிட்டுள்ள அந்த ரைஸ்டெக் சமாசாரம் நடந்தது 1998ல். அந்த சமயத்தில் நான் சிங்கப்பூர் பிஸினஸ் டைம்ஸ் தினசரிக்கு டில்லியிலிருந்து கொண்டு செய்திகள் அனுப்பிக்கொண்டிருந்தேன். இந்த சர்ச்சை வெளிவந்தபோது அன்றைய Centre for Scientific and Industrial Research தலைமை அதிகாரி, மஷேல்கர், Activist வந்தனா சிவா இருவருமே இந்த அரிசி சமாசாரம் அப்படி ஒன்றும் பெரிய பிரச்சனையாக உருவாகாது; ஆனால் நாம் எவ்வளவு தூரம் நம் பாரம்பரிய உணவு வகைகள் பயிரிடுவதற்கான உரிமைகளைக் காப்பாற்றிகொள்வதில் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கு இது ஒரு நல்ல எச்சரிக்கை என்ற ரீதியில்தான் என்னிடம் பேசும்போது குறிப்பிட்டனர். சொல்லப்போனால் அந்த சமயங்களில் இப்படி அமெரிக்க நிறுவனங்கள், வேப்பிலை, மஞ்சள், பிறகு அரிசி என்று ஒன்றன் மீது ஒன்றாக ஏதோ ஒரு விதத்தில் patent வைக்க முற்பட்டது ஒரு விதத்தில் நாம் உஷாராக இருக்க உதவியது என்பேன். ஆனால் அதே சமயம், அட, நம்ம பாட்டி சொன்ன கைவைத்தியம்தானே.. வேப்பிலை அரைத்துப் போட்டால் போச்சு என்று பல விதங்களில் உபயோகித்து கொண்டு இருக்காமல், பல பாரம்பரிய செடிகள், தாவர வகைகளின், மூலிகைகளின் உபயோகம் பலவற்றையும் முறைப்படி நாம் patent செய்ய வேண்டியது இப்போது மிகவும் அவசியமாகிறது என்று மஷேல்கர் குறிப்பாக விவரித்தார்.
அதாவது, வேப்பிலை என்பது உலகமெங்கும் விளையும் ஒரு தாவரம். நாம் வேப்பிலைக்கு உரிமை கொண்டாட முடியாது. ஆனால் அந்த வேப்பிலைக்கு காயத்தை ஆற்றும் சக்தியோ அலல்து, பூஞ்சக்காளான் வராமல் தடுக்கும் சக்தியோ, வயிற்றுப்புண் நீக்கும் சக்தியோ இருப்பதை நாம் அறிந்திருந்தோமானால், பாட்டி சொன்ன வைத்தியம் என்று பேசாமல் வீட்டோடு உபயோகித்துக் கொண்டு இருக்காமல், அந்த சக்திகள் இருப்பதாக சொல்லும் பழைய ஆதாரங்களை நாம் தயாராக வைத்துக் கொண்டு உடனே காப்புரிமை செய்ய வேண்டும். இதற்கு பழைய சித்தர் பாட்டுகள், நாட்டுப் பாடல்கள் என்று ஆதரங்களை சேர்ப்பதில் / சேர்க்க ஊக்குவிப்பதில் கடந்த சில வருடங்களாக CSIR கவனம் செலுத்தியுள்ளது.


அதேபோல் தாவர வகை எனும்போது Geographical Appalations Act என்று ஒன்று உண்டு. அதாவது இப்போது சீலிநாட்டில் விளையும் ஒரு குறிப்பிட்ட திராட்சைப் பழம் அந்த பகுதிக்கு சிறப்பானது. அதேபோல் ஜெர்மனியில் விளையும் ஒரு குறிப்பிட்ட திராட்சையைக் கொண்டு தயாரிக்கப்படும் ஒயினுக்கும், பீருக்கும் அந்த நாடு இந்த Geographical Appellations Act கொண்டு வர முனைந்தது. ஒரு குறிப்பிட்ட தாவர வகை அந்தப் பகுதியில் இருக்கும் சீதோஷ்ண நிலையினால்தான் அல்லது வேறு ஒரு பூகோள சிறப்பினால்தான் அந்த சிறப்புத் தன்மையைக் கொண்டுள்ளது என்று நிரூபிக்கும் எந்தத் தாவர வகையையும் தன் Geographical Appellations Act கீழ் ஒரு நாடு பதிந்து கொள்ளலாம். வட இந்திய பாஸ்மதி, டார்ஜிலிங் தேயிலை, இதெல்லாம் இதன் கீழ் வரும்.


சரி. இந்த விஷயம் அப்புறம். முதலில் இப்போது அனுமதிக்கப்பட்டுள்ள மசோதா பற்றி எனக்கு எழுந்த சந்தேகங்கள்:

  • இந்த காப்புரிமை சட்டத்தினால் நமது விஞ்ஞானிகளுக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கும் வெளி நாடுகளில் காப்புரிமை செய்வதன் மூலம் ஒரு பன்னாட்டு அங்கீகாரமும், முதலீடும் கிடைக்கும் என்று கமல் நாத் கூறியுள்ளார். என் சந்தேகம். உதாரணமாக வேப்பிலைக்கு குடலை சுத்தம் செய்யும் சக்தி உள்ளது என்று நம் ஆராய்ச்சியாளர் ஒருவர் அமெரிக்காவில் இந்த குறிப்பிட்ட குணத்துக்கு காப்புரிமை வாங்க முடியுமா? வாங்கி அதன் அடிப்படையில் மருந்துகள் உற்பத்தி செய்து, அந்த product ஐ காப்புரிமை செய்ய முடியுமா?
  • புதிய கண்டுபிடிப்புகளுக்கு மட்டும்தான் காப்புரிமை அளிக்கபப்டும். ஏற்கனவே உபயோகத்தில் உள்ள ஒரு பொருளின் ஒரு புதிய அம்சத்திற்கு கிடையாது. இத்தனை நாளும் சாப்பிட்டு வந்த பாராசாட்டமால் மாத்திரைகளுக்கு புதிதாக கேன்ஸர் குணபப்டுத்தும் தன்மை இருப்பதாக இந்தியர் ஒருவர் கண்டுபிடித்தால் அதற்கு அமெரிக்காவில் காப்புரிமை பெற முடியுமா?
  • காப்புரிமை பெற்ற மருந்துகளையும் இந்திய நிறுவனங்கள் தயாரித்து மற்ற நாடுகளுக்கு எற்றுமதி செய்யலாம். - ராயல்டி கொடுத்துவிட்டு. ஆனாலும் விலையேறாது என்கிறார் அமைச்சர். அது எப்படி?
  • இந்தியாவில் காப்புரிமைக்காக போடப்படும் மனுக்களின் மீது ஆட்சேபம் தெரிவித்து காப்புரிமை பெறுவதைத் தடுக்க இடம் உள்ளது. காப்புரிமை பெறும் முன், பெற்ற பின்னரும் கூட. என்றும் சொல்லுகிறார். இது நல்ல சேதியாக இருக்கிறது. அதேபோல், கட்டாய உரிமம் என்ற முறையில் அத்யாவசியமான generic மருந்துகள் தயாரித்து சந்தையில் விற்கவும் வழி உள்ளது.
  • இந்த காப்புரிமைச் சட்டத்தில் தாவர வகைகள் இடம் பெறவில்லை. ஓ, அதான் green Brigade அமைதியாக இருக்கிறதோ? மசோதா பாஸ் ஆகி இரண்டு நாளாகியும் இன்னும் எதிர்ப்பு குரல்கள் கேட்கவில்லையே என்று பார்த்தேன் :-)


தொடரும் :-)

பி.கு: Wings On Fire போன பதிவில் பின்னூட்டத்தில் பொதிந்த மென்பொருளுக்கு காப்புரிமை கிடையாது என்று நான் சொல்லியிருந்தது சரியல்ல என்றார். அவர் சொல்வது இப்போது சரி. ஏனென்றால் மசோதா திருத்தங்கள் இடம்பெறும் முன் வந்த டிவி Ticker செய்தியில் முதலில் அப்படி போட்டிருந்தது. இப்போது திருத்தப்பட்ட மசோதாவில் பொதிந்த மென்பொருளுக்கு காப்புரிமை உண்டு.

1 comment:

நாலாவது கண் said...

அக்கா!

உங்கள் பதிவில் என் பெயரைப் பார்த்தேன். ஒரு கணம் கண் சிமிட்டிக் கொண்டேன். நன்றி! அடுத்து காப்புரிமையை என் கையில் கொடுத்துவிட்டு, தொடர்புடைய மற்ற விபரங்களை நன்றாகவே விவாதித்திருந்தீர்கள். கடைசியில் தொடரும் என்றுதானே போட்டிருந்தீர்கள்!

நீங்கள் எழுப்பிய கேள்விகள் சிலவற்றுக்கு என் இரண்டாம் பதிவில் பதில் போகிற போக்கில் இருக்கிறது. மற்ற கேள்விகளுக்கு பதிலை தெரிந்த கொள்ள நானும் சுரங்கங்களைத் தோண்டிக்கொண்டிருக்கிறேன். 'நிலக்கரி'... அல்லது 'பெட்ரோல்' கிடைத்தால் SMS அனுப்புகிறேன் - சந்திரன்.