Friday, March 11, 2005

ஷோபா டேவின் நாவல்களில் ஒன்று கூட படித்தது கிடையாது. பொதுவாக அவர் புதினங்களுக்கு வரும் விமரிசனங்களைப் படித்தே அவற்றை பற்றி தெரிந்துவிடுவதால் படிக்க வேண்டும் என்ற ஆவல் இருந்ததில்லை.
ஆனால் ஷோபா டே என்கிற பெண் எனக்கு சுவாரசியமானவர். அவர் பத்திரிகைகளில் எழுதும் பத்திகளையும், பேட்டிகளில் அவர் கருத்துக்களையும் பொதுவாக படிப்பேன். மாடலாக ஆரம்பித்து, ஸ்டார் டஸ்ட்டில் ஹிந்தி சினிமா நட்சத்திரங்களைப் பற்றி "பூனை" போல் பத்திகள் எழுதி எழுபதுகளில் டஸ்ட் ( புழுதி :-) ) கிளப்பியவர். நான் அதைச் சொல்லவில்லை. ஆனால் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக, "Society", Celebrity, என்று பத்த்ரிகை உலகில் ஆசிரியராக முன்னிலைப் படுத்திக் கொண்டது, பிறகு எழுத்தாளராக உருவாகியது என்று வளர்ந்தவர் - முடிந்தவரை மேல் பூச்சுக்கள் இல்லாமல், பாவனைகள் இல்லாமல் இயல்பாக இருப்பதாக இவரைப் பார்த்தால் தோன்றும். மேல் தட்ட வர்க்கத்துடன் - ஆங்கில தின்சரிகளின் மூன்றாம் பக்கம் பிரசுரமாகும் பார்ட்டிகள், முக்கிய பிரமுகர்கள் என்று இவர் வளைய வந்தாலும், இவற்றுக்கப்பால் ஒரு வெளிப்படையான வாழ்க்கை வாழ்பவர். ஒளிவு மறைவு இல்லாமல் மனசில் பட்டதை சொல்வது ரசிக்கும்படி இருக்கும். இதில் என்ன வேடிக்கை என்னவென்றால் இவர் எழுதும் கதைகளில் ஏனோ தானோவென்று வாழும் பெண் பாத்திரங்கள் இருந்தாலும், விவாகரத்து, கூடா நட்பு என்று இந்திய பண்பாட்டுக்கு முரணாக பல அம்சங்கள் இருந்தாலும் இவருக்கு உண்மையில் திருமண வாழ்க்கையிலும் குடும்பம், தாய் போன்ற செண்டிமெண்ட் சமாசாரங்களிலும் மிகவும் பிடிப்பு உண்டு; நம்பிக்கை உண்டு. குறைந்த பட்சம் அப்படி தன்னை வெளிப்படுத்திக் கொள்வதில் வெகு முனைப்பாக இருப்பார். பேசாப்பொருளாக இருந்த பல விஷயங்களைப் பேசப் பல பெண்கள் தயங்குவதால் அவர்கள் சார்பாக தான் குரல் கொடுப்பதாக சொல்லியிருக்கும் இவர் இவற்றையெல்லாம் வியாபார நோக்குடனே எழுதுகிறார் என்ற குற்றச்சாட்டும் உண்டு. ஆனால் யாருக்குதான் பணம் சம்பாதிக்க பிடிக்காது? நான் ஒன்றும் சமூக சேவகி அல்ல என்ற ரீதியில் விமரிசங்களை அலட்சியம் செய்துவிடுவார்.

இவர் படைக்கும் கதாபாத்திரங்களிலிருந்து, இவர் கதை அமைக்கும் சூழல்களிலிருந்து இவர் மாறுபட்டவர் என்று ஒரு அபிப்பிராயம் ஏற்படுத்த இவர் மிக முயல்கிறார் என்று எனக்கு தோன்றும். மத்தியதர குடும்பத்து நெறிகள்தாம் தான் இன்றும் மதிப்பது என்பது அவர் அடிக்கடி சொல்லும் விளக்கம். எழுபதுகளில் அவர் மறுமணம் புரிந்து கொண்டு, உன் குழந்தைகள், என் குழந்தைகள் நம் குழந்தைகள் என்று 6 குழந்தைகளுடன் பெரிய கூட்டுக் குடும்பத்தை இவர் அமைத்தபோது அது பெரிதும் அலசப்பட்டது. விவாகரத்து, மறு மணம் என்பவை கசப்பான அனுபமாக இல்லாமலும் இருக்கலாம் என்று வாழ்ந்து காட்டுவது என்று முடிவெடுத்தவர் போல் இருக்கும் இவரைக் கவனித்தால். மறுமணம் புரிந்த பின்னர் ஒரு நல்ல மனைவியாகவும், பிறகு ஒரு நல்ல தாயாக தன் 6 குழந்தைகளுடன் ( 2 +2+2) உள்ள தன் பிணைப்பை பற்றி இவர் பேசாத பேட்டி இருக்காது. இவருடைய " Speed Post" Letters to my children, என்கிற புத்தகம் ஒரு அம்மா தன் குழந்தைகளுடன் தோழி போன்று எப்படி சினேகமாய், பக்க பலமாய், இருக்க வேண்டும் என்ற தன் கருத்துக்களை முன்வைத்துள்ளார். சில சமயம் இவர் இப்படியெல்லாம் தன்னை ஒரு குடும்பத்தலைவியாக, தாயாக, மனைவியாக முன்னிலைப் படுத்த ஏன் இவ்வளவு சிரமப்படுகிறார் என்று தோன்றும்.

இப்போது இவர் புதிதாக இன்னொரு நாவல் எழுதுவதில் முனைந்துள்ளார். கரு? "குடும்பம் ஒரு ஸ்தாபனம்" !! ஏன் இப்படி குடும்பம் என்கிர கருத்துக்கு இப்படி வக்காலத்து வாங்குகிறீர்கள் என்றால், "நாடு, இனம், மொழி இவையெல்லாவற்றையும் கடந்து காலங்காலமாக தொன்றுதொட்டு மனித இனம் முழுக்க ஒரே மாத்ரியாக நெறியுடன் கட்டுகோப்பாக இருக்கும் வேறு ஏதாவது அமைப்பு ஒன்று காட்டுங்கள் பார்க்கலாம். இத்தனை காலமும் அழியாது உலகம் முழுக்க இன்னும் மக்கள் நம்பிக்கை வைத்துள்ளார்கள் என்றால் இந்த ஸ்தாபனத்தில் நிச்சயம் ஏதோ அருமை இருக்க வேண்டும் " என்கிறார் !!

மொத்தத்தில் இவரைப் பற்றி இவர் கதைகள் மற்றும் இவர் வாழும் சமூக சூழல் காரணமாக இவரைப் பற்றி எழுந்துள்ள பிம்பத்திற்கும், தான் உண்மையில் இவற்றிலிருந்து வேறுபட்டவர் என்று இவர் அவ்வப்போது ஸ்தாபிக்க முயலுவதுமாக - ஷோபா டே ஒரு சுவாரசியமான கலவை.

No comments: