Friday, February 04, 2005

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு எளிமையான வாழ்வு ஒரு தடையா?

சாமான்கள் நிறைய வாங்குவது, தேவைக்கு மேல் கண்ணில் கண்டதையெல்லாம் வாங்குவது என்பது பொதுவாக நல்ல வாழ்க்கை முறை அல்ல என்று பெரியவர்கள் சொல்வார்கள். ஆனால் இன்று நாம் காண்பது சந்தைப் பொருளாதாரம்; ஏகப்பட்ட நுகர்வோர் பொருட்கள். முன்பெல்லாம் ஏதாவது வீட்டிற்கு சாமான் வாங்கினால் அது வாழ் நாள் முழுக்க வைத்திருப்பதுதான் வழக்கம். அதனலேயே நல்ல தேக்கு மரங்களில் நாற்காலிகள் என்ற ரீதியில் காலத்தால் சீக்கிரம் தேய்மானம் பெறாத சாமான்களை வாங்குவார்கள். "ஆயுசுக்கும் வர வேண்டாமா?" என்பதுதான் அன்றைய சிந்தனை. பல வருடங்கள் முன்பு நாங்கள் பம்பாயில் ( அன்று அது பம்பாய்தானே) இருந்தபோது ஒரு உறவினர் வீட்டில் சோபா செட் வாங்கினார். அப்போது யாரோ அவரிடம் "என்னப்பா, பம்பாயிலேயேதான் இருக்கப் போறியா" என்றார். இவர் பதில்: "ஆமாம் சோபா செட் வாங்கியாச்சு. இங்கயே செட்டில் ஆனமாதிரிதான்!" என்றார். 30 வருடங்கள் முன்பு சோபா செட் வாங்கிவிட்டால் அது ஒரு பெரிய முதலீடு. இன்று இப்படி சொல்ல முடியுமா? அதேபோல் டிவி. அன்று ஒரு டிவி வாங்கும்போது ஏதோ சாதித்த உணர்வு. துடைத்து துடைத்து மாய்ந்துவிடுவோம். இன்றோ வீட்டுக்கு குறைந்தது இரண்டு டிவி. அதுவும் இரண்டு வருடத்திற்கு ஒரு முறை மாடல் மாற்றிக் கொண்டு. கார்கள், வாஷிங் மெஷின்கள், விதம் விதமாக துணி மணிகள் - ஒரு குடும்பத்தில் இப்படிப் பெருகும் சாமான்களை அடுக்கிக் கொண்டே போகலாம். முன்பெல்லாம் ஒரு பொருள் வாங்கினால் அது முழுக்க அதன் தேய்மானம் வரைக்கும் உபயோகப்படுத்திவிட்டுதான் தூக்கியெறிவோம். அப்புறமும் கூட recycle என்ற முறையில் அந்தப் பொருளை கடைசி வரை இன்னும் எப்படி உபயோக்க்கிலலாம் என்று பார்ப்போம். பழையப் பட்டுப் புடவைகள் திரைச்சீலையாகும்; சில துணிகள் சோபா கவராகும்; படு கந்தல் ஆகிவிட்டால் அப்புறமும் விடாமல் துடைக்கும் கந்தல் துணியாகப் பயன்படும். இன்று பழைய உடைகள் அவ்வப்போது அங்கங்கே தானம் கொடுக்கப்பட்டுவிடுகிறது. (முன்பெல்லாம் தெருவில் விற்கும் பழைய பேண்ட் - பிளாஸ்டிக் சாமான் வியாபாரம் இப்போ அவ்வளவா காணோமே!) சுனாமிக்குப் பின் குவிந்த பழைய துணிகளே ஒரு சாட்சி. ஒரு சாமான் ரிப்பேராகிவிட்டால், பழுது பார்ப்பது கிடையாது. தூக்கிப் போட்டுவிட்டு வேற புதிதாக லேட்டஸ்ட் மாடல் வாங்கிவிடுகிறோம். தயாரிப்பாளர்களும் போட்டிப் போட்டுக் கொண்டு நுகர்வோர் சாமான்களை உற்பத்தி செய்து தல்ளுகிறார்கள். இதில் எக்கச்சக்க போட்டி என்பதால் ஒருவரை விட ஒருவர் விலை குறைத்தோ அல்லது அதிக வசதிகள் செய்து கொடுத்தோ நுகர்வோரை இழுக்கப் பார்க்கிறார்கள்.
இப்படி நுகர்வோர் சாமான்கள் சந்தையில் குவியக் குவிய மக்கள் வாங்குகிறார்கள் - வாங்கிக் கொண்டே இருக்கிறார்கள். தொழில் உற்பத்தி அதிகரிக்க வேண்டியுள்ளது. உற்பத்தி அதிகரிக்கும்போது நாட்டின் பொருளாதாரமும் வளர்ச்சியடைகிறது. தவிர வேலை வாய்ப்பு கூடுகிறது.
சரி. ஆனால் எனக்கு ஒரு கேள்வி எழுகிறது. ஒரு வேளை நாம் பழைய மாதிரி எளிமையான வாழ்க்கை முறைக்கு சென்று விடுகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். இந்த சாமான்கள் விற்பனையாகாது. (ஹ்ம்ம்... அப்படி கூட ஆகுமா என்ன?!!) விற்பனையில்லையென்றால் தொழில் உற்பத்தி மங்கிவிடும். உற்பத்தி மங்கினால் பொருளாதாரமும் சுருங்கிவிடும்?? உற்பத்தியும் மங்கக் கூடாது. ஆனால் அதே சமயம் நுகர்வோர் கலாசாரம் பெருகுவதையும் ஊக்குவிக்கக்கூடாது. வேலை வாய்ப்பும் கூட வேண்டும். என்ன வழி?
எனக்குத் தோன்றியது என்னவென்றால் கல்வி, சுகாதாரம், சாலைகள், குடிதண்ணீர் போன்ற வளர்ச்சித் திட்டங்களிலும் தொழில் நுட்ப வளர்ச்சியிலும் முதலீடு / உற்பத்தி அதிகமாவது ஊக்குவிக்கப் பட வேண்டும். தொழில் நுட்பம் மற்றும் பல்விதமான சேவைகளில் ( Financial servcices, IT, bio tech related ) வித்தியாசமான துறைகளில் உற்பத்தி / முதலீடு செய்யலாம்; உலக வர்த்தக ஸ்தாபன உடன்பாட்டின்படி, அங்கத்தினர் அனைவரும் நெசவு உற்பத்திக்களுக்கான இறக்குமதி quotaவை நிறுத்த வேண்டும். இது நாள்வரை அமெரிக்கா, ஐரோப்பா போன்ற வளர்ந்த நாடுகள், இந்தியா, சீனா போன்ற நாடுகளிலிருந்து வாங்கும் நெசவு உற்பத்திகளுக்கு உச்சவரம்பு வைத்திருந்தன. இதன்படி அந்த வருடத்திற்கான உச்ச வரம்பைத் தாண்டி நம் உற்பத்திகளை ஏற்றுமதி செய்ய முடியாது. ஆனால் இந்த வருடம் ஜனவரி ஒன்றிலிருந்து உலக வர்த்த உடன்பாட்டுப்படி அந்த நாடுகள் இந்த உச்ச வரம்பை அகற்ற வேண்டும்.
இதனால் இந்தியா போன்ற நாடுகளின் நெசவு ஏற்றுமதிக்கு நல்ல வாய்ப்பு. இன்னும் ஐந்து வருடங்களில் 100 டாலர் பில்லியன் வருவாய் வரக்கூடிய தொழிலாக உருவாக வாய்ப்பு உள்ளது என்கிறார்கள். ஆனால் நம் நெசவு உற்பத்தியோ அப்படி பெரிய அளவில் ஏற்றுமதி செய்யுமளவு அதிகரிக்கவில்லை. சொல்லபோனால், பழைய உச்சவரம்பு இருந்த நாளிலேயே, அந்த உச்ச வரம்பு அளவைத் தொடும் அளவு கூட நம் உற்பத்தி இருந்ததில்லை. இந்த நிலையில் சீனா, தாய்லாந்து போன்ற நாடுகள் தங்கள் உற்பத்தியைப் பெருக்கி அமெரிக்க /ஐரோப்பிய சந்தைகளை பிடிப்பதில் முனைந்துள்ளன.

இந்தச் சூழ்நிலையில் இங்கே இரண்டு தரப்பு வாதங்கள் வைக்கப்படுகின்றன. ஒன்று நெசவுத்தொழிலில் பெரும் இயந்திரங்களை உபயோகித்து உற்பத்தி அதிகரிக்கப்பட்டு ஏற்றுமதி சந்தையைப் பெருக்க வேண்டும் என்பவர்கள் ஒரு புறம். மறுபுறம், அப்படி பெரிய அளவில் தானியங்கி இயந்திரங்கள் உபயோகப்படுத்தும்போது உற்பத்தி பெருகலாம்; ஆனால் வேலை வாய்ப்பு குறைகிறது என்பது இன்னொரு சாரார் வாதம். இரண்டிலும் நியாயம் இருப்பதுபோல்தான் எனக்குத் தோன்றுகிறது.

உற்பத்தியும் பெருக வேண்டும்; வேலை வாய்ப்பும் அதிகரிக்கப்பட வேண்டும். இதற்கு Mass Production என்பதற்கு பதிலாக Production by massess என்று இருக்க வேண்டும் என்கிறார்கள். என்னதான் அதிகம் பேர்களை ஈடுபடுத்தினாலும் இயந்திரங்களின் வேகத்திற்கும் / துல்லியத்துக்கும் மனிதர்களால் முடியுமா? உற்பத்தி செலவும் அதிகமாக இருக்குமே? சீனா போன்ற நாடுகள் விற்கும் விலைக்கு ஈடுகட்ட முடியுமா? இல்லையென்றால், ஏற்றுமதிக்கான நல்ல வாய்ப்பை விட வேண்டி வருமா?

எனக்குத் தோன்றிய ஒரு எண்ணம். சீனா போன்ற நாடுகளின் போட்டிக்கு ஏற்ற மாதிரி நம் நெசவு உற்பத்தியையும் / தரத்தையும் அதிகரிக்க வேண்டும் - Mass production மூலமாக. ( 100 மில்லியன் வேலை வாய்ப்புகள் கூடும் என்று இந்த செய்தி சொல்கிறது) அதே சமயம், நெசவுத் தொழில் போன்ற பாரம்பரிய துறைகளில் வேலை வாய்ப்பு குறைவதால் மற்ற புதிய துறைகளில் வேலை வாய்ப்பு அதிகரிக்கப் பட வேண்டும். ஒரு நெசவுக் குடும்பத்தில் ஒருவருக்காவது நல்ல கல்வி பெறும் சூழ்நிலை அளிக்கப்பட்டு வேறு வித்தியாசமான தொழிலில் திறமை வளர செய்ய வேண்டும். தொழில்நுட்பம், Bio-tech, என்று அறிவு சார்ந்த தொழில்களும், Financial services, கல்வி, சுகாதாரம், ஹோட்டல் மற்றும் சுற்றுலா போன்ற சேவை (Services sector) சார்ந்த வேலை வாய்ப்புகள் அதிகரிக்கப்பட்டு அவற்றில் நெசவு போன்ற பாரம்பரிய தொழில் செய்த குடும்பங்களுக்கு ஒரு மாற்று தொழில் கற்று தரப்பட வேண்டும்.

இது விஷயமாக உங்களுக்கு ஏதும் யோசனைகள் உள்ளதா?

பி.கு: வேற ஒண்ணுமில்லை. பட்ஜெட் வருகிறதே...:-)

No comments: