Saturday, January 29, 2005

வழக்கம்போல் தாமதமாகவே சில பதிவுகளைப் படிக்கிறேன். இருந்தாலும் இது ரொம்பவே லேட்டு :-)

பிராமணத் தமிழ் எப்படி - ஏன், என்ற உஷாவின் கேள்வி சுவாரசியமானதுதான். சொல்லப்போனால் இந்தக் கேள்வி எல்லா வட்டாரத் தமிழுக்குமே பொருந்தும் இல்லையா? மதுரைத் தமிழ், திருநெல்வேலி தமிழ், சென்னை தமிழ் - இப்படி அந்தந்த வட்டாரங்களில் உபயோகிக்கப்படும் வார்த்தைப் பிரயோகத்தின், மூலம் எது என்று தேடுவது போல்தான் இந்த "மொழியின்" மூலம் தேடுவதும். ஆனாலும், அதெப்படி இந்தக் குறிப்பிட்ட சமூகத்தினர் தாங்கள் இருக்கும் வட்டாரத் தமிழின் தாக்கம் இல்லாமல் தாங்கள் பேசும் dialect ஐ விடாமல் பேசுகிறார்கள் என்று ஒரு கேள்வி எழுவதிலும் தவறேதுமில்லை. இந்த ஆராய்ச்சியில் என் தலையையும் சற்று நுழைத்ததில் என் மூளைக்கு எட்டியது -
இரண்டு காரணங்கள் :

1. இது ஒரு பழக்கப்பட்டுப் போன தாய்மொழி ஆகிவிட்டதால், குறைந்த பட்சம் தங்கள் வீட்டுக்குள் இந்த "மொழியில்" பேசுவது இயற்கை. வெளி நாட்டிலிருந்தாலும் நாம் சந்திக்கும்போது நமக்குள் தமிழ்தானே பேசுகிறோம்? அந்த ஊர் மொழியில் அல்லவே? ஆனால், இதுவும் பல குடும்பங்களில் வேறுபடும். டில்லியில் வளர்ந்த என் பிள்ளைகள் பெரும்பாலும் இந்தியில் பேசிக் கொள்கிறார்கள். அவர்கள் பழகும் சூழ்நிலையின் தாக்கம் அது. ஆனாலும் வீட்டில் எங்களுடன் தமிழ்தான் - அதுவும் "பிராமணத் தமிழ்". ஏனெனில் அது தாய்மொழியாகிவிட்டது. டில்லியிலிருந்து அவ்வப்போது சென்னை வரும்போது இங்கே அக்கம்பக்கத்து வீட்டார்களுடன் நான் பேசும் தமிழ் வித்தியாசமாக இருக்கிறது என்பார்கள். " சென்னை வரும்போது மட்டும் திடீரென்று நீங்கள் வித்தியாசமான தமிழ் பேசுகிறீர்களே, ஏன்?" என்று அவர்கள் சிறுவர்களாக இருந்தபோது கேட்பார்கள். அவர்கள் அறிந்ததெல்லாம் வீட்டில் நாங்கள் பேசும் தமிழ் மட்டும்தான். "வேறு" தமிழ் எதுவும் கேட்டதில்லை. இதனால் வந்த குழப்பம். பிறகு புரிந்து கொண்டார்கள் - மற்ற மொழிகளில் உள்ளதுபோல் தமிழில் இதுவும் ஒரு dialect என்று. கல்லூரியும் இவர்கள் வடக்கிலேயே படித்ததால் இவர்களுக்கு மற்ற தமிழ் dialect ல் பேச சந்தர்ப்பம் இருக்கவில்லை. ஆனால் என் உறவினர் பையன் ஒருவனுக்கு எக்கச்சக்க குழப்பம் நேர்ந்தது. டில்லியில் வளர்ந்த அவனுக்கு சென்னைப் பொறியியல் கல்லூரி ஒன்றில் இடம் கிடைத்தது. இங்கு வந்து சில நாட்கள் அவன் சென்னை தமிழுக்கும் தான் பழகியிருக்கும் "பிராமணத் தமிழுக்கும்" இடையே திணறிகொண்டிருந்தான். "ஆத்துக்கு போயிட்டு வரேன்", "நன்னாயிருக்கு", "படிச்சிண்டு இருக்கேன்" என்ற ரீதியில் அவன் பேசும்போது கல்லூரி நண்பர்கள் எக்கச்சக்கமாக அவனை கலாய்த்தார்கள். " ஆத்துலே குளத்திலே எல்லாம் போகாதேடா என்றார்கள்; பெண் லெக்சரர் ஒருவரை "லெக்சரர் சொல்றா" என்ற போது, " என்னடா லெக்சரரை மரியாதை இல்லாமல் சொல்கிறாய் என்றனர். விடுமுறைக்கு டில்லி போகும்போதெல்லாம் அம்மாவிடம் கதை கதையாக சொல்வான். ஆனால் ஒரு வருடத்தில் ஓரளவு சென்னை தமிழ் அவனுக்கு பழகிவிட்டது. இப்போதெல்லாம் டில்லியில் அவன் அம்மாவிடமும் இதர உறவினர்களிடம் முழுக்க முழுக்க சென்னை தமிழே பேச ஆரம்பித்துவிட்டான். அவன் முன்பு பழகியிரூந்த " பிராமண மொழி" போயே போச்சு. இப்போது அவனை கலாய்ப்பது அவனது உறவினர்கள் - தங்கள் "மொழியில்" பேசாமல் லோக்கல் தமிழில் பேசுகிறானே என்று. இதேபோல் சிறுவர்களாக இருந்தபோது நாங்களும் - என் சகோதரரும் சகோதரியும் - இந்த மொழி வித்தியாசத்தில் மாட்டிகொண்டிருக்கிறோம். ஆனால் எங்களுக்கு சட்டென்று மொழி மாற்றி பேசுவதும் பழகிவிட்டது. டில்லியில், வெளியே ஹிந்தியும் வீட்டில் தமிழும் பேசுவது போல. மொத்தத்தில் பிராமணத் தமிழ் என்பது ஒரு dialect. அவ்வளவுதான். இதை ஜாதி கண்ணோட்டத்தில் பார்ப்பது அவசியமில்லை.

2. இந்த பேச்சு மொழிக்கு காரணம் சமஸ்கிருத மொழியின் தாக்கமும் எழுத்து தமிழின் தாக்கமுமாக இருக்கலாம் என்பது என் ஊகம். பழங்காலத்தில் அந்தணர்களின் முக்கிய வேலை மந்திரங்கள் ஓதுவதுதான் என்று சொல்வார்கள். அந்தக் காலத்தில் படிப்பு என்பது சமஸ்கிருதமும் எழுத்து தமிழும்தான். படிக்கும் மொழியின் கலப்பு பேச்சு வழக்கிலும் கலந்திருக்கலாம். கீழ் வரும் வார்த்தைப் பிரயோகங்களைச் சற்று கவனித்தால் நான் சொல்ல வருவது புரியும்.அகம் - வீடு ( ஆம் அல்லது ஆத்து என்று பிறகு மருவியது) தீர்த்தம் / தூத்தம் / தேர்த்தம் - தண்ணீர் அதேபோல் "செய்துகொண்டு இருக்கிறேன்" என்ற எழுத்து தமிழை வேகமாக சொல்லும்போது நாளடைவில் "கொ" மறைந்து வெறும் "ண்டு" வில் நின்றிருக்கலாம். செய்து கொண்டு இருக்கிறேன் - வேகமாக சொல்லிப் பாருங்கள்..? "செய்துண்டு"; "செய்ஞ்சுண்டு"....... நன்றாக இருக்கிறது - நன்றா இருக்கு - நன்னா இருக்கு.
வைஷ்ணவத் தமிழில் சாப்பிடும் எதுவுமே அமுதுதான் :-) சாற்றமுது - சாறு - அமுது ( ரசம். - தக்காளி மற்றும் பருப்பின் ரசம்? ) திருக்கண்ணமுது - திருக்கண்ணன் - அமுது. கண்ணனுக்குப் பிடித்தது / படைத்தது என்பதால் இருக்குமோ? கரமேது - கறி ( கறிகாய்??) - அமுது

3. உஷா எழுப்பிய அடுத்த கேள்வி - ஏன் மற்ற மொழி பேசும் அந்தணர்களிடம் ஏன் இப்படி ஒரு பிராமண dialect இல்லை? அடிப்படையில் எழுதும் மொழிக்கும் பேச்சு மொழிக்கும் அதிக வித்தியாசம் இருக்கும் மொழி தமிழ்தான். ( ஐரோப்பிய மொழிகளில் ஜெர்மனிய மொழி என்று கேள்வி - அப்படியா? ) ஹிந்தி போன்ற மொழிகளில் ஓரளவு எழுதுவதும் உச்சரிப்பும் ஒரே மாதிரியாகதான் இருக்கும். அதனால் அந்த மொழி அந்தணர்களுக்கு ஒரு வேளை தாங்கள் படிக்கும் மொழிக்கும் பேசும் மொழிக்கும் அதிக வித்தியாசம் இல்லாமல் இருந்திருக்கலாம். இது என் ஊகம்.

தவிர இந்திய மொழிகள் அனைத்துக்குமே சமச்கிருதமும் தமிழும்தான் ஆதிமுலம் என்று சரித்திர ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். இதன்படி பார்த்தால் நான் முதலில் கூறியதுபோல் கற்கும் மொழியின் தாக்கம் அதிகமாகவே ஆரம்ப கால தமிழ் அந்தணர்களிடம் இருந்திருக்கலாம். அதுவே மருவி பின்னர் "பிராமண மொழியாக" மாறியிருக்கலாம்.

ஆக்கப்பூர்வமான மாற்று கருத்துக்களை வரவேற்கிறேன்.

விவாதம் எண் இரண்டு: சமீபத்தில் இந்தப் பேட்டியைப் படித்தேன். இதில் ".....சினிமா தமிழைவிட்டு விலகி பலகாலமாகிவிட்டது." என்ற கருத்தை சினிமா பார்ப்பதில் ஆர்வம் உள்ளவர்கள் எப்படி எடுத்துகொள்கிறார்கள் என்று அறிந்துகொள்ள ஆவலாக உள்ளேன் - Any takers? :-)

No comments: