Wednesday, January 19, 2005

தைப் பிறந்தால் வழி பிறக்கிறதோ இல்லையோ... புதுப் பதிவுகள் பிறக்கும் போலிருக்கிறது. நேற்றுதான் முத்துவின் பதிவைப் பற்றி சொன்னேன். இன்று மாலன். மைக்ரோசாப்டின் புது வரவான "spaces" ல் ஒரு Space எடுத்துக் கொண்டுவிட்டார். அதுசரி ஏற்கனவே அவருடைய ஜன்னலில் தூசி படிந்திருக்கு போலிருக்கே என்றால் - அது வேறு இது வேறு என்றார். சரி இதில் அப்படி என்னதான் இருக்கு என்று எட்டிப் பார்த்தால்தானே புரிகிறது. வழக்கம்போல் ஒரு சுவாரசியமான சர்ச்சைக்கு கொக்கி போட்டுள்ளார். இவர் எழுப்பியுள்ள கேள்விக்கு என் பதில் " ஆமாம் ; இல்லை ! இரண்டுமே! ஒரு சமுகத்தின் பார்வைகள் அமையும் விதத்தில் எந்த அளவு டிவி, சினிமா, பத்திரிகைகள் போன்ற ஊடகங்களுக்கு பங்கு இருக்கிறது என்பது நெய் / தொன்னை அல்லது முட்டை / கோழிக்குஞ்சு போன்ற சமாசாரம். சமூகத்தின் பார்வைகளைதான் ஊடகங்கள் பிரதிபலிக்கின்றன. அதே சமயம் நிழலில் வரும் பாத்திரங்களை அல்லது "தத்துவங்களைப்" பார்த்து பார்வைகளும் மாறுகின்றன என்பதும் நிஜமே. ஆனால் சமூகப்பர்வைகள் மாறுகின்றன என்று குற்றம் சாட்டி ஒட்டு மொத்தமாக ஊடகங்களைப் பழி சொல்வதும் சரியல்ல. எத்தனைதான் பார்த்தாலும் படித்தாலும் கேட்டாலும், வள்ளுவரின் " எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு." என்ற அறிவுரையைப் பின்பற்றிக் கொண்டிருந்தால் சுசி. கணேசன் எழுப்பியுள்ள கவலைக்கும் இடம் இருந்திருக்காது. இருந்தாலும் இப்படி நிஜமாகவே ஒரு நகர்ப் புறத்தில் நடந்தால் - யார் கண்டார்கள் ? மக்கள் விவேகமாகவே, யதார்த்தமாகவே எடுத்துக்கொள்வார்களோ என்னவோ?

பார்வைகள், பார்க்கும் நபர்களின் மன முதிர்ச்சியைப் பொறுத்து இருக்கிறது.

இதன் நடுவே "மெய்ப்பொருள்" காண்பதன் / தேடுவதின் அவசியம் மறுபடி வந்துவிட்டது. 2002 பிப்ரவரியில் குஜராத் / கோத்ராவில் நடந்த "ரயில்" சம்பவத்தை ஆய்வதற்கு நியமிக்கப்பட்ட பானர்ஜி கமிட்டியின் Interim report வந்துள்ளது. அது விபத்துதான் - விஷமிகளால் திட்டமிட்டு நடத்தப்ட்ட செயல் அல்ல என்று அந்த அறிக்கை சொல்லுகிறது. எதிர்பார்த்தாற்போல் பிஜேபி வட்டாரங்களிலிருந்து எதிர் வாதங்களும் வந்துள்ளன.

ஆர். கே லஷ்மணின் திருவாளர் பொதுஜனம் கணக்காக நான் மதில் மேல் உட்கார்ந்து கொண்டு இரண்டு வாதங்களையும் படித்துக் கொண்டிருந்தபோது பானர்ஜி அறிக்கையில் இருந்த ஒரு வரி சட்டென்று யோசிக்க வைத்தது. ".....On the basis of available evidence, the committee found it unbelievable that 'kar sevaks' ( to the extent of 90 percent of the total occupants) armed with 'trisuls', would allow to get themsleves burnt without a murmur by miscreant acitivity - like a person entering the S-6 coach from outside and setting it on fire...".

எல்லோரும் விழித்திருந்த காலை வேளை அது. 60 லிட்டர் பெட்ரோல் ஊற்றப்பட்டது என்று மோடி அரசில் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழு கூறியிருந்தது. என் மனதில் எழுந்த கேள்வி; 60 லிட்டர் முழுவதும் ஊற்ற எவ்வளவு நேரம் பிடிக்கும்? அத்தனை நேரமும் அங்கேயிருந்தவர்கள் எப்படி சும்மா வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்திருப்பார்கள்? தீய நோக்கோடு ஒருவன் உள்ளே நுழைந்து பெட்ரோல் ஊற்ற ஆரம்பித்தவுடனேயே ( பெட்ரோல் வாசனையே சந்தேகப் பட வைத்திருக்குமே?) அவனை எதிர்த்திருக்க மாட்டார்களோ? அல்லது பெண்கள், குழந்தைகளை மட்டுமாவது வெளியே தப்பிக்க வைத்து இருக்க மாட்டார்களோ? பிழைத்து வெளி வந்தவர்கள் சொன்ன விஷயங்கள் என்ன?

பானர்ஜி அறிக்கையின் வாதத்தில் உண்மையிருக்கலாம்; அல்லது திட்டமிட்ட செயலாகவும் இருக்கலாமோ? ஹ்ம்ம்.... உண்மை ஆணித்திரமாக நிரூபிக்கப் படும் வரையில் இவை பதிலில்லாக் கேள்விகளாகவே இருக்கும்.


1 comment:

Boston Bala said...

வெள்ளந்தியாக இருப்பவர்கள் ஊடகங்கள்/புத்தகங்கள் மூலம் corrupt ஆகிறார்களா? (அல்லது) மாற்று சிந்தனைகளின் மூலம் தங்களின் ஆணிவேர் தாக்கங்களில் இருந்து விடுபடாமல் இருக்கிறார்களா? -- என்னும் தங்கள் கேள்வி பல அலைகளை என்னுள் கொடுக்கிறது.