Friday, December 31, 2004

A quick note from Changi airport. Jayanthi Shankar has sent this mail giving a contact address for donations in TN.

"..An appeal for old clothes
Looks like many affected people are suffering without food, shelter and clothes. Old clothes can be donated to one kind volunteer,Mr. Ramkimobile - 98400 95437(chennai)
He is willing arrange to take the old clothes.
Can also be given in him at his address--new.no 100,old no. 50,Naga Medicals BuildingSecond floorJones Road,Saidapet,chennai - 15.
Please kindly spread this mail to as many of your friends,..
This is sent to those not residing in chennai also so that this can be spread to their respective friends,.
thank you,rgds, Jayanthi Sankar..."

I am travelling back from the US. REd Cross is repeatedly posting requests in the US newspapers that I read for contributions. So,
For those who are not in TN:
Redcross world over welcomes donations in terms of money/cheques. They say money is easier to handle than cloths and food which, they say, are difficult to transport to affected areas.

more links for donations:

www.bayareatamilmanram.org

As for the disaster, I have no words to even to think about it. On coming back home, I can't imagine the depth of the aftermath that awaits me there.

Thursday, December 16, 2004

பல மனிதர்கள் என்னுள் ஏதோ ஒரு விதத்தில் நல்ல பாதிப்பை ஏற்படுத்தியுள்ளார்கள் - தெரிந்தவர்கள், பழகியவர்கள், உறவுகள், நண்பர்கள், பிரபலங்கள், அதிகம் பழக்கம் இல்லாவிட்டாலும் சட்டென்று மனசில் ஆழமாக பதிந்தவர்கள் என்று ஒரு லிஸ்டே இருக்கிறது. அலைகள் வந்து மோதுவது போல் அவர்கள் பாதிப்பு பல சம்யங்களில் என் எண்ணங்களை மாற்றியிருக்கலாம்; பழகும் / பேசும் விதங்களை மாற்றியிருக்கலாம்; அல்லது தூரத்தே நின்று அவர்களை நான் பார்த்து ரசித்திருக்கலாம். ஆனால் இதுவரை எந்த மனிதரையும் நான் ஆதர்சமாகக் கொண்டதில்லை - ஜே. கிருஷ்ணமூர்த்தி, காஞ்சியின் பெரிய பெரியவர், மகாத்மா காந்தி, நேருஜி, ரமண மகரிஷி, விவேகானந்தர் என்று என் எண்ணங்களை சீர் அமைத்தவர்கள் வரிசை கூட உண்டு. ஆனால் இவர்கள் யாரையும் நான் வழிபாடு செய்ததில்லை. எந்த ஒரு தனிமனிதரும் என்னுள் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்ததில்லை. அவர்கள் வாழ்க்கைகள் / வாக்குகள் மூலமாக பொதுவாக வாழ்வைப் பற்றி அவ்வப்போது ஒரு தெளிவு கிடைத்துள்ளது என்ற முறையில் இவர்களிடம் ஒரு மரியாதை உண்டு.


ஆனால் ஒருவரின் முகம் /குரல் மட்டும் எப்போதும் ஆழ்மனசில் எங்கோ நன்றாக பதிந்துவிட்டது. எனக்குப் பாட வராது. ஆனாலும் என்னைப் பொறுத்தவரை இவர் ஒரு ஆதர்சப்பிறவி. சாதிக்க இதற்கு மேலொன்றுமில்லை என்ற அளவு புகழ் எய்தினாலும் அது ஏதும் தன்னுதில்லை என்ற பாவனையுடன் கடைசி வரை எளிமையாக வாழ்ந்தவர். தன் இசை ஒன்றே வாழ்வாக, வாழ்க்கையே இசையாக வாழ்ந்தவர். தனக்கும் தன் இசைக்கும் உறுதுணையாக நின்ற கணவரிடமும் தன் குடும்பத்தாரிடமும் அளவில்லாத பிரியத்துடன் வாழ்ந்தவர். இவர் வாழ்க்கையிலும் மேடு பள்ளம் இருந்திருக்கிறது. இருந்தாலும் அவரது எளிமை, unassuming சுபாவம், இத்தனைக்கும் இடையில் ஆழமாக தன் இசையில் ஒரு பக்தி, எந்த நிலையிலும் தன் இசையின் தரம் குறையக் கூடாது என்ற உறுதியான உணர்வு, மனசின் எளிமையைப் பிரதிபலிக்கும் அந்தப் புன்சிரிப்பு..... இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

எம் எஸ் சுப்புலஷ்மி மறைந்து மூன்று நாளாகிவிட்டது. நியூயார்க், மேன்ஹாட்டன் என்று சுற்றுலா கிளம்பிக் கொண்டிருக்கும்போது காலையுணவுக்கு உட்காரும் சமயம் என் உறவினர் சொன்னார். "இப்போதுதான் நெட்டில் பேப்பர் பார்த்துவிட்டு வந்தேன்" என்று. சாப்பாடு உள்ளே இரங்கவில்லை. பின்னர் ஊர் சுற்றும்போதும் அவ்வப்போது சட்டென்று ஏதோ சொல்லத்தெரியாத ஒரு இழப்பு மனசில் தாக்கிற்று.
எம் எஸ் வாழ்க்கை சுத்தமாக ரோஜா மலர் பாதையல்ல. எல்லோரையும் போல் சங்கடங்கள், சவால்கள், வேதனைகள் என்று இருந்திருக்கிறது. ( சமீபத்தில் வெளி அந்த அவரது வாழ்க்கை சரித்திர நூல்கள் சிலவற்றை புரட்டுங்கள் புரியும்.) இருந்தாலும் எல்லாவற்றையும் மீறி அவரது உள்ளுக்குள் இருக்கும் மனிதம், Persona - மிளிர்ந்தது.

முதன் முதலில் பூடானில் அரசரின் அழைப்பின் பேரில் அங்கே கச்சேரி செய்ய வரும்போதுதான் முதன் முதலில் அவரையும் கணவர் சதாசிவத்தையும் சந்தித்தேன். மகள் விஜயா ராஜேந்திரன் உடனிருந்தார். நான் கற்பனை பண்ணியிருந்ததற்கு நேர் மாறாக சிறிய உருவம். முகத்தின் சிரிப்பு மட்டும் பளீரென்று பிரகாசித்தது - மூக்குத்தியின் பிரகாசம் எல்லாம் தெரியவேயில்லை! அன்பாக நாங்கள் ( நானும் சில நண்பர்களும்) கொண்டுபோயிருந்த சாப்பாட்டை ரசித்தவிதம் ( அட, இந்தப் பால் பாயசத்தைப் பாருங்களேன் முந்திரிப் பருப்பு, திராட்சையெல்லாம் போட்டு எவ்வளவு ருசியாக என்று கணவரிடம் சிலாகித்து - அந்த ஹிமாலய மலைகளுக்கு நடுவே புதைந்து இருக்கும் இக்கணூண்டு பிரதேசத்தில் வாய்க்கு ருசியாக பால் பாயசத்தோடு நம் தமிழ் சாப்பாடு கிடைத்ததே என்று குழந்தை போல் வியந்து), உட்கார்ந்து எங்களுடன் சகஜமாக உறையாடின விதம் எல்லாம் அன்று கனவு போல் இருந்தது.

அதன் பின் பல முறை அவரை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. விடுமுறையில் சென்னை வரும்போது - அல்லது - டில்லியில் பத்திரிகைளுக்காக சில பேட்டிகள். ( " பேட்டியா? அதெல்லாம் வேண்டாம்மா. நாம வெறுமே பேசிக்கொண்டிருக்கலாம். உங்களுக்கே ( இந்த"..ங்க" மரியாதையெல்லாம் வேண்டாம் என்றால் கேட்டால்தானே?) ஏதாவது எழுதணும் என்று தோன்றினால் பிறகு எழுதிக் கொள்ளுங்கள் என்று கையிலிருந்து பேனாவையும் நோட்புக்கையும் வாங்கி கீழே வைத்து விட்டார். பேசும்போதும் இயல்பாக தோளில் கைப்போட்டு அன்பாக பேசும் சுபாவம். "இப்பக் கூட கச்சேரி அன்றைக்கு எனக்கு கொஞ்சம் பயமாகதான் இருக்கும்" என்று சொல்லும் அவரது அக்கறை என்னை அசத்தும். விடாமல் தினம் பல மணி நேரம் சாதகம் செய்யும் ஒரு perfectionist. UN ல் பாடும் முன் ஜலதோஷத்தினால் பாதித்த தன் குரலுடன் எப்படி கச்சேரி செய்யப் போகிறோமோ என்ற கவலை மனதை வாட்ட, கச்சேரி ஆரம்பிக்கும் சமயம் கூட குரலே எழும்பாமல் மனசில் ஒரு பிரளயம் சூழ்ந்திருக்க, தான் இருந்த நிலையை அவர் விவரித்தவிதத்தை பிரமிப்புடன் கேட்டுக்கொண்டிருந்தேன். " எல்லோரும் ரெடி. சபையில் அமைதி. தொண்டையைக் கனைச்சுப் பார்க்கிறேன். குரலே எழும்பவில்லை. என்ன செய்யப் போகிறேன் என்றே தெரியவில்லை. மனசில் அப்படியே பெரிய பெரியவாளை ( காஞ்சி) நினைச்சிண்டு கண்ணை மூடிண்டேன். அவ்வளவுதான் எனக்குத் தெரியும். பாட்டு என் குரலில் இருந்து தானே வர ஆரம்பித்தது. என்னிக்கும் மறக்க முடியாத அனுபவம் அது." என்று பல வருஷங்கள் கழிந்த பின்னரும் மன நெகிழ்ச்சியோடு விவரித்தார்.

அவரிடம் குரல் வளமும் இசையில் ஆர்வமும் இருந்ததை சரியானபடி உலகறியச் செய்த அவருக்கு மிகச் சரியான கணவர் சதாசிவம். வாய்க்கு வாய், "அவருக்குப் பிடிக்கும், "அவர் சொன்னார்" என்ற சொற்கள் பேசும்போது நிறைய இருக்கும்.

கடைசி பல மாதங்களாக அவருக்கு உடலில் பல கோளாறுகள் வந்து சிரமப்படும்போது கேட்க ரொம்ப வருத்தமாக இருந்தது. எத்தனை பேரின் வாழ்க்கையில் தன் இசையால் மலர்ச்சியும் இதமும் தந்த ஒரு ஆத்மா இப்படி சிரமப்படுகிறாரே என்று வேதனையாக இருந்தது. ஒரு வழியாக உடல் உபாதைகளிலிருந்து விடுபட்டார் என்றுதான் தோன்றுகிறது.

Greatness Personified. But MS was someone who never realised that or perhaps she consciously avoided getting that fact go into her head !! Either way - she was one person I have constantly admired and have always liked to emulate.

May she be in peace whereever she is.

Saturday, December 11, 2004

மதம் பற்றி பள்ளி வகுப்புகளில் சொல்லிக் கொடுப்பதில் தவறில்லை!!

இதென்ன மறுபடி முரளி மனோகர் ஜோஷி சமாசாரம் போலிருக்கிறதே... அவர் மீண்டும் எப்போ கல்வி அமைச்சர் ஆனார் என்று ஆச்சரியப்படாதீர்கள். ஒரு மாறுதலுக்காக இந்த முறை இந்த மதம் v/s கல்வி விவாதம் அமெரிக்க நகரங்களில் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.

சாதாரணமாக இங்கே உள்ளூர் தினசரிகளில் 99.99 சதவிகிதம் உள்ளூர் சமாசாரங்கள்தாம் இடம் பெறும். வெளி நாடு என்றால் ஐரோப்பா கண்டம். மிஞ்சிப்போனால் சீனா / எப்பவாவது பிலிப்பைன்ஸ், பங்களாதேஷ், பாகிஸ்தான். இந்தியா? மதக் கலவரங்கள் அல்லது பூகம்பம் நடக்கும்போது மட்டும்.

இங்கு வந்து பல நாட்கள் தினசரியைப் புரட்டுவது சில நிமிடங்களில் முடிந்து விடும். உள்ளூர் சமாசாரங்கள் எனக்கு சம்பந்தம் இல்லை என்று கொஞ்சம் தள்ளி நின்று விடுவேன். எந்த ஊர் / நாடு போனாலும் பொதுவாக அந்த இடங்களின் தினசரிகளில் இரண்டு பகுதிகளை மேய்வேன். ஒன்று, classified விளம்பரங்கள். மற்றொன்று வாசகர் கடிதங்கள். ஒரு சமூகத்தின் நடப்பு நிலையை அப்படியே பிரதிபலிப்பவை இவை என்பது என் எண்ணம். நாயைக் காணவில்லை என்ற விளம்பரமும் என் மகளை எங்காவது பார்த்தால் இந்த நம்பரில் தொடர்பு கொள்ளுங்கள் என்ற விளம்பரமும் அருகருகே இருக்கும்போது - பலமுறை நாய் விளம்பரம் பெரிதாக அக்கறையோடு; மகள் விளம்பரம் சின்னதாக ஏனோதானோவென்று - நம் மனதில் ஏதோ இடிக்கும். பக்கம் பக்கமாக கலர் கலராக கார் விளம்பரங்கள். அடுத்து வீடு. அடுத்து நுகர்வோர் பொருள்கள் - மனாவாரியாக.
இதன் நடுவில் அசுவாரசியமாக தினசரியைப் புரட்டியவளை இந்த மதம் v/s கல்வி செய்தி எழுந்து உட்கார வைத்தது.

நடந்தது இதுதான். இங்கே, Cupertino என்ற பக்கத்து ஊரில் உள்ள ஒரு சரித்திர பள்ளி ஆசிரியர் - பெயர், வில்லியம்ஸ்- அமெரிக்க சரித்திரத்தில் கடவுளுக்கு முக்கிய பங்கு உண்டு; அமெரிக்க அரசியல் சாசனத்தை உருவாக்கிய தலைவர்களுக்கு கடவுள் நம்பிக்கை இருந்தது என்ற ரீதியில் சரித்திர உதாரணங்களை எடுத்து காட்டி விளக்கியுள்ளார். இது இந்தப் பகுதியில் இருக்கும் பல கிறிஸ்துவர் அல்லாத பெற்றோர்களுக்குப் பிடிக்கவில்லை. பள்ளி தலைமையாசிரியரிடம் புகார் கொடுத்தவுடன் அவர் வில்லியம்ஸிடம் கடவுள் பற்றி குறிப்பிடும் சரித்திர கோப்புகளைத் தன் பாடத்திட்டத்திலிருந்து எடுத்துவிடும்படி சொல்லியிருக்கிறார். வில்லியம்ஸ் உடனே கோர்ட்டுக்குப் போய்விட்டார். அரசியல் சாசனத்தைப் பற்றி முழுமையாக தன் மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்க முடியாமல் பள்ளி நிர்வாகம் தன் அடிப்படை உரிமையைத் தடுப்பதாக அவரது வழக்கு.

இதுதான் விஷயம். வில்லியம்ஸ் செய்ததில் தவறேதும் இல்லை என்று ஒரு சாராரும், அதெப்படி அவர் வகுப்பில் கடவுள் நம்பிக்கையை புகுத்தலாம்? அவர் ஒரு கிறித்துவர்; அதனால் தன் கிறிஸ்துவ மதத்தைத் தன் மாணவர்களிடம் பரப்ப இப்படி ஒரு வழியைக் கையாளுகிரார்; இது கிறிச்துவர் அல்லாத மற்ற மதத்தவர்களை மிகவும் பாதிக்கிறது" என்று மற்றொரு சாராரும் விவாதித்துக் கொண்டிருக்கின்றனர்.

மேலெழுந்தவாரியாக கிடைத்த விவரங்களை வைத்துப் பார்த்தால் வில்லியம்ஸ் செய்ததில் ஏதும் தவறு இருப்பதாக தெரியவில்லை. அமெரிக்க சாசனத்தை உருவாக்கிய தலைவர்கள் கடவுள் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால் அதை சரித்திர உண்மையாக சொல்வதில் தவறேதும் எனக்குத் தெரியவில்லை. சொல்லப்போனால் அமெரிக்க சரித்திரத்தில் / அரசியலில் இந்தக் கடவுள் நம்பிக்கை ஆழமாகவே இருக்கிறது. இங்கே எல்லா வணிக இடங்களிலும் உபயோகிக்கப்படும் Quarter - கால் சென்ட் - நாணயத்தில், டாலர் நோட்டுகளில், ஜியார்ஜ் வாஷிங்டன் படம் போட்டு பக்கத்தில் "Liberty" என்ற சொல்லும், " In God we Trust" என்ற அவரது வாக்கியம் பொறித்துள்ளது. வில்லியம்ஸ், அமெரிக்க சரித்திரத்தை இப்படி விரிவாக விளக்குவதற்காக கடவுள் பற்றி பேசியிருக்கலாம்.

ஆனால் சில பெற்றோர்கள் சொல்வது போல் நிஜமாகவே தம் மாணவர்களின் மத நம்பிக்கையில் ஊடுருவும் வகையில் அவர் நடந்து கொண்டிருந்தால் அது attempting to influence / or propagating one religion - என்ற வகையில் கண்டிக்கத் தக்கதே. இது விஷ்யமாக பலர் எழுதியதில் Bill Evers ( இவர் Mercury News தினசரியில் எழுதியதைத் தேடினேன். கிடைக்கவில்லை. கிடைத்தால், 9.12.04.தேதியிட்ட செய்தித்தாளைப் பாருங்கள்.) என்ற Educationist சொல்வதில் எனக்கும் உடன்பாடு உள்ளது. இவர் சொல்வது போல், மதம் பற்றி வகுப்புகளில் பேசுவது வேறு. மதத்தைக் கல்வியில் புகுத்துவது வேறு.

முந்தையது அறிவு சார்ந்த விஷயதானம். மற்றது, மதப் பிரசாரம். இரண்டுக்குமுள்ள வேறுபாடு நமக்கு நன்றாகவே தெரியுமே? வில்லியம்ஸ் இதில் எதைச் செய்தார் அல்லது செய்ய முனைந்தார் என்பது அவருக்கே வெளிச்சம்.

மொத்தத்தில் இந்த விவகாரம் பரபரப்பாக இன்று அமெரிக்காவில் பல இடங்களில் எதிரொலிக்கிறது - தேசீய ரீதியில் தொலைக் காட்சியில் மற்றும் பல ஊடகங்களில்.


உங்கள் அபிப்பிராயம் என்ன?


Wednesday, December 01, 2004

இங்கு வந்து இன்றுடன் இரண்டு வாரம் ஆகிறது. இந்த இடத்தைப் பற்றி நிறைய கேள்விப்பட்டுள்ளேன். சினிமாவில் / டிவியில் பார்த்துள்ளேன். அங்கு போய்தான் பாருங்களேன் -பார்த்தால் பிரமிப்பாக இருக்கும் என்று பலர் சொல்ல கேட்டுள்ளேன். சரி அப்படி என்னதான் இருக்கு இந்த இடத்தில் என்று ஒரு வழியாக வந்தும்விட்டேன். சரி என் முதல் அபிப்பிராயம் என்ன?
பலமுறை கேள்விபட்டும் பிம்பங்களைப் பார்த்தும் இருந்ததால் பிரமிப்பு இருக்கவில்லை. விமான நிலையத்தில் இறங்கியதும் முதலில் உறைத்தது சுங்கம் மற்றும் immigration வரிசைதான். அம்மாடி.. மிக நீளமாக இருந்த வரிசை இன்று முடிந்தால் போல்தான் என்று தோன்றியது. ஆனாலும், சரிதான் எவ்வளவு நீளமாக இருந்தால் என்ன? அதுதான் திறமையான நிர்வாகம் எங்கு திரும்பினாலும் என்று சொல்கிறார்களே, அதனால் வரிசை வேகமாக நகர்ந்துவிடும் என்று எதிர்பார்த்தேன். ம்..ஹ¤ம். சரியாக ஒரு மணி நேரம் ஆகியது. அதுவும் சொல்லிவைத்தாற்போல் நாங்கள் நின்றிருந்த வரிசையில் இருந்த அதிகாரி ஏனோ ஒவ்வொருவருக்கும் அதிக நேரம் எடுத்துக் கொள்வதாக தோன்றியது. இந்திய சுங்க / immigration பற்றி இனி அலுத்துக் கொள்ளக்கூடாது என்று முதல் அபிப்பிராயம் உதயம் ஆனது. ( அதற்கேற்றாற் போல் இங்கே உள்ளூர் செய்தித் தாளில் இன்று ஒரு உள்ளூர் வாசகர் கடிதம் எழுதியிருந்தார். இந்திய சுங்க /immigration சோதனைகள் எவ்வளவு திறமையாக /வேகமாக செயல்படுகின்றன என்று. எனக்கென்று இதெல்லாம் கண்களில் படுகிறதே?
சரி இப்போ புரிந்திருக்குமே எங்கே வந்து இறங்கியுள்ளேன் என்று? ஆமாம். அமெரிக்காவேதான். விஸா கிடைத்த பிறகு பயணத் திட்டம் விரிவாகப் போடலாம் என்று வெறுமே டிக்கெட் மட்டும் எங்கள் டிராவல் ஏஜண்டிடம் பதிவு செய்திருந்தோம். விஸா என்னவென்றால் கிடைத்தே விட்டது. அப்புறம் ஒரு வாரத்திற்குள் பயணம் - எல்லாம் மள மளவென்று ஆகிவிட்டது. ( அப்பாடி இங்கே அலைகளில் எட்டிப் பார்க்க முடியாதத்தற்கு விளக்கம் கொடுத்தாகிவிட்டது. எதை வைத்து விஸா கொடுக்கிறார்கள் அல்லது நிராகரிக்கிறார்கள் என்பது புரியவே இல்லை. போன வருடம் கிடைக்கவில்லை. இந்தவருடம் பேட்டி எடுத்த அதிகாரி நல்ல மூடில் இருந்தார் என்று வைத்துக் கொள்ள வேண்டும். இத்தனைக்கும் எங்கள் இரண்டு மகன்களும் இங்கே இருக்கிறார்கள் என்று குறிப்பிட்டு இருந்தோம். இருவரும் "பச்சைக் கார்டு" வைத்திருக்கிறார்களா என்று அந்த அமெரிக்க அதிகாரி, தூதரகத்தில் கொஞ்சம் கடுகடுவென்று கேட்ட விதத்தைப் பார்த்தால் சரி, நமக்கு இவர் கொடுக்கப்போவதில்லை என்று நினைத்தேன். ஆனால் ஏனோ தெரியவில்லை - பெய்தால் ஒரே மழை என்ற ரீதியில் 10 வருடம் என்று போட்டுக் கொடுத்துவிட்டார். அதேபோல் இங்கே இறங்கியதும் immigration அதிகாரி "எவ்வளவு நாள் தங்கப் போகிறீர்கள்? திரும்பிப் போகும் டிக்கெட்டைக் காண்பியுங்கள்" என்றார். சரி, எண்ணி 6 வாரம் என்று முத்திரைக் குத்தப் போகிறார் என்று நினைத்திருந்தேன். பார்த்தால், 6 மாதம் என்று குத்தியிருக்கிறார். சரிதான் இனி அடிக்கடி அமெரிக்கா வர வேண்டியதுதான். ( டிக்கெட் மட்டும் மரத்தில் எங்காவது காய்க்கிறதா என்று பார்க்கிறேன் !)
அமெரிக்கா பதிவுகள் இன்னும் ஒரு மாதம் தொடரும் - டிசம்பர் 29 வரை. இங்கே நான் இருபது சூரிய நகரம் - Sunnyvale / Sanfransico. அதுசரி... இந்தப் பக்கம் இருக்கும் வலைப் பதிவாளர்கள் யார் யாரோ??!! சற்று தெரியப் படுத்தினால் சந்திக்க முடியுமா என்று பார்க்கலாம்.