Friday, July 30, 2004

முக்கியமான வேலை ஒன்றில் மூழ்க இருப்பதால் ( அது என்ன என்று வெற்றிகரமாக ஆனபின் சொல்கிறேன்!) மூன்று மாதத்திற்கு அலைகளை சற்று நிறுத்தலாம் என்று நினைக்கிறேன். அடுத்து நவம்பர் 1ந் தேதி மீண்டும் சந்திப்போம்.அப்படி ஒரு வேளை நடுவில் பிரளயம், பூகம்பம் அல்லது பாகிஸ்தான் - இந்தியா நட்புறவு பலம் போன்ற செய்திகள் ஏதாவது நிகழ்ந்து அதற்கு அருணா சொல்வது என்ன என்று தெரிய வேண்டுமே (!!!!) என்று நினத்தீர்களானாலும் நவம்பர் மாதம் வரைப் பொறுத்திருக்க வேண்டுகிறேன் :-)

Tuesday, July 27, 2004

உணர்வுகள் என்னமோ அதேதான். பதவிதான் வேறு.

என்ன இப்படி ஒரேடியாகக் காணாமல் போய்விட்டேன் என்று நினைக்கிறீர்களா?கலிபோர்னியாவில் இருக்கும் மகன் - மூத்தவன் - மூன்று வருடம் கழித்து மூன்று வார விடுப்பில் வருகை. ஒவ்வொரு நிமிடமும் முக்கியம் என்று தோன்றுவது இயல்புதானே? அரட்டை, ஊர் சுற்றல் சமையல், சாப்பாடு, நண்பர்கள் / உறவினர்கள் சந்திப்பு என்று மூன்று வாரம் ஓடிப்போய் விட்டது. நான் கல்லூரியில் படிக்கும்போது விடுமுறைக்கு வீட்டுக்குப் போகும்போதும் பிறகு திருமணமாகி பிறந்த வீட்டுக்கு ஒவ்வொரு முறை போகும்போதும் அம்மா / அப்பா எப்படி உணர்ந்திருப்பார்கள் என்று இப்போ எனக்குப் புரிகிறது. அப்போதும் ஊருக்குப் போவதற்கு முன்னும் பின்னும் மனசில் ஒரு பாரம் இருக்கும். சொல்லத்தெரியாத வேதனையும் அதே சமயம் யதார்த்தத்தை ஏற்றுகொள்ளும் மனப் பக்குவமும் என்று ஒரு கலவை உணர்வு மனசில் சுழலும். காலச்சக்கரத்தில் இப்போ நான் நகர்ந்து என் பெற்றோர் இருந்த இடத்துக்கு வந்துள்ளேன். உணர்வுகள் என்னமோ அதேதான். பதவிதான் வேறு.

அதுசரி. வலைப்பதிவுகளில் இந்த மூன்று வாரம் என்ன ஆச்சு என்று மேய வேண்டாமோ? பதிவுகள் விரைவில் வழக்கம்போல் தொடரும்.

Monday, July 12, 2004

மீண்டும் விடுப்பு !! :-)

மறுபடியும் ஊருக்குப் போகிறேன். கொஞ்ச நாள் இங்கே எட்டிப்பார்க்க முடியாது. போய்விட்டு வந்து பிறகு சந்திக்கிறேன்.

Saturday, July 10, 2004

சாதாரணர்களை மனதில் கொண்டு அமைக்கப்பட்ட பட்ஜெட்.

சொந்த வேலையாக டில்லிக்கு சென்றுவிட்டதால் அலைகளில் சென்ற சில நாட்களாக பதிவு செய்ய முடியவில்லை. பட்ஜெட் பற்றி கூட இன்னும் கூர்ந்து கவனிக்க நேரம் கிடைக்கவில்லை. ஆனால் மேலெழுந்தவாரியாக ஒரு பறவைப் பார்வைப் பார்த்ததில் மனதில் சந்தோஷம்தான் நிரம்புகிறது. நிஜமாகவே கண்ணில் விளக்கெண்னெய் விட்டுக்கொண்டு சிதம்பரம் உழைத்திருக்கிறார். இதுவரை யாருக்கும் தோன்றியிராத வழிகளில் திட்டம் போட்டுள்ளார். அரசு வருவாயை அதிகரிக்க அந்த பங்குச் சந்தை பரிமாற்ற வரி ( tax on securities transactions) Brilliant Idea. ஆனால் பங்குச் சந்தைகாரர்களுக்குதான் படு கடுப்பு.

அதுபோல் Education Cess 2 % சூப்பர் ஐடியா. வரி செலுத்தும்போதும் ஒரு நல்ல காரணத்துக்காக கொடுக்கிறோம் என்று திருப்தியும் இருக்கும். ஆனால் இதில் எனக்கு ஓரிரண்டு கவலை இருக்கு. ஒன்று, இதன் மூலம் இந்த வருடம் மட்டும் - பாக்கி இருக்கும் 8 மாதங்களில் - 2500 கோடி ரூபாய்கள் வரும் என்று சொல்லப்படுகிறது. அடுத்த வருடங்களில் முழு வருட வருவாய் 4500 அல்லது 5000 கோடிகளைத் தொடும் என்றும் சொல்கிறார்கள். என் கவலை என்னவென்றால் இப்படி வசூலிக்கப்படும் பணம் சரியாக தேவையான திட்டங்களில் - தேவையுள்ள இடங்களுக்கு சென்றடைய வேண்டுமே என்பதுதான். இந்தப் பணத்திற்கு தனியாக கணக்கு இல்லாத நிலையில், இது மொத்தமாக இதர வளர்ச்சி திட்டங்களுக்கு என்று ஒதுக்கபட்டுள்ள ரூபாய் 10000 கோடிக் கணக்கில் சேர்ந்துவிடும். அதிலிருந்து பின்னர் கல்வி சம்பந்தமான திட்டங்களுக்கு எடுத்துக்கொள்ளப் படும். இப்படியில்லாமல் இந்த கல்விக்கென்று வசூலிக்கப்படும் வரிப் பணம் கல்வித் துறைக்கு மட்டுமே முழுவதும் செலவழிக்கப்பட்டால் - செலவழிக்கப்படும்படி சரியாக திட்டங்கள் அமைக்கப்பட்டால் நன்றாக இருக்கும்.

இன்று தனியார் பள்ளிகள்தாம் அரசு பள்ளிகளைவிட தரமான கல்வியைத் தருகின்றன என்று ஒரு கருத்து இருக்கிறது. அது ஓரளவு உண்மையும் கூட. அதே சமயம், உயர் கல்வி விஷ்யத்தில் நிலைத் தலைகீழ். ஐ ஐ டி, REC, அண்ணா பல்கலைக் கழகம், டில்லியில் AIIMS மருத்துவ ஆராய்ச்சி நிலையம் என்று அரசு கல்வி நிலையங்கள்தாம் தரத்தில் உயர்ந்து நிற்கின்றன. அரசு பள்ளிகளும் இந்தத் தரத்தைத் தொடும் அளவு கவனமாக பணம் உபயோகிக்கப்பட வேண்டும். நமது பள்ளிகளில் ஆரம்ப நிலையில் பல குழந்தைகள் சேர்ந்தாலும், பாதியிலேயே படிப்பை நிறுத்திவிடுவது, அண்டை நாடுகளைவிட இந்தியாவில் அதிக சதவிகிதம் என்று UNESCO ஆராய்ச்சி கூறியுள்ளது. இதற்கு ஒரு முக்கிய காரணம் அரசு பள்ளிகளில் படிக்கும் சூழ்நிலை ஆர்வத்தைத் தூண்டும் வண்ணம் இல்லையென்பது மட்டுமல்ல; பயமுறுத்தி பள்ளி என்றாலே விலகி ஓடும் வண்ணமும் பல பள்ளிச் சூழல்கள் உள்ளன. இந்த நிலை மாற வேண்டும். ஆசிரியர்களின் சொல்லிக்கொடுக்கும் தரத்தை அதிகரிக்கலாம்; கல்வியார்வத்தைத் தூண்டும் சாதனங்களை வழிமுறைகளைப் பின்பற்றலாம்; பல பள்ளிகள் மரத்தைட்யிலும் கூடாரங்களிலும் உள்ளன. நல்ல சுகாதாரமான கட்டிடங்களை எழுப்பலாம்; கணினி, மற்றும் நவீன பரிசோதனை சாலைகள் தவிர, குடிதண்ணீர், உணவு போன்ற அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்கலாம். இதற்கெல்லாம் இந்தக் கல்வி வரிப் பணம் உபயோகிக்கப்படவேண்டும்.

பட்ஜெட்டில் சில குறிப்பிட்ட துறைகளில் Foreign Direct Investment அதிகரிக்கப்பட்டிருக்கிறது. வரவேற்க வேண்டிய விஷயம். சிறு சேமிப்பாளர்களுக்க்கு / மூத்த குடிமகன்கள் சேமிப்புக்கு அபாயம் இல்லை. தகவல் தொழில் நுட்பத் துறையில் கணினி விலை இன்னும் குறைய ஆரம்பித்துவிடும். பொதுவாக சாதாரணர்களை மனதில் கொண்டு அமைக்கப்பட்ட பட்ஜெட். முக்கியமான விஷயம், இந்த பட்ஜெட்டில் அதிகமாக Roll Back இருக்காது என்று நினைக்கிறேன். எ·கு -Steel சுங்க வரி விஷயம் மட்டும் மறு பரிசீலனைக்கு வரலாம்.

Thursday, July 01, 2004

"வரவு எட்டணா செலவு பத்தணா "

நிதி அமைச்சர் சிதம்பரம் எக்கச்சக்கமாக கணக்குப் போட்டுக் கொண்டிருக்கிறார். 8 ம் தேதி அளிக்க வேண்டிய பட்ஜெட் பற்றி சொல்லவில்லை. அதைத் தவிரவும் இன்னும் என்ன எல்லாம் செய்து செலவுகளைக் குறைத்து கையிருப்பை எப்படி புத்திசாலித்தனமாக கையாளலாம் என்று கணக்குப் போட்டுகொண்டிருக்கிறார். நம்ம வீட்டுக் கணக்கிலே கூட பட்ஜெட் போடும்போது பழைய கடன் இருந்தால் கடனுக்கு வட்டி என்று ஒரு தொகை ஒதுக்க வேண்டும் இல்லையா? நம் குடும்ப பட்ஜெட்களைப் போல் - அதாவது கடன் வாங்கும் குடும்பங்களில் - அரசாங்க வரவு செலவு திட்டங்களிலும் வாங்கிய கடனுக்கு வட்டி என்று கொடுப்பதே பெரிய தொகையாக இருக்கும். ஆனால் அசலை ஓரளவு கட்டிவிட்டால் நமது வட்டித் தொகையாவது கொஞ்சம் குறையும் இல்லையா? அதைத்தான் சமீபகாலமாக நமது அரசு அடிக்கடி செய்து வருகிறது. முடிந்தபோது கடன்களைத் திருப்பிகொடுத்து வருகிறது. இப்போது உலக வங்கி மற்றும் Asian Development Bank போன்ற ஸ்தாபனங்களுக்குக் கொடுக்க வேண்டிய கடன்களில் சுமார் 2 அல்லது 3 பில்லியன் டாலர் அளவு திருப்பிக் கொடுத்துவிடலாமா என்று நிதியமைச்சு யோசனை செய்கிறது. இந்தக் கட்டுரையின்படி, நமக்கிருக்கும் மொத்த கடன் சுமார் 100 பில்லியன் டாலர்கள்.

பட்ஜெட் சம்யம் வரும்போதெல்லாம் நம் காதில் அடிக்கடி விழும் ஒரு வார்த்தை - Fiscal Deficit அதாவது பட்ஜெட்டில் விழும் துண்டு -( நம்ம கணக்கில் வேஷ்டி சைஸ் என்று வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளுங்கள் ) ஒவ்வொரு வருடமும் நிதியமைச்சர் இந்த "வரவு எட்டணா செலவு பத்தணா " கதையைச் சொல்லி கொஞ்சம் துண்டு விழுகிறது - அதை விரைவில் சரிகட்டி விடலாம் என்ற ரீதியில் பேசுவார். 1996 -97ல் சிதம்பரத்தின் பட்ஜெட் ஒரு Dream Budget என்று சிலாகிக்கப்பட்டு பின்னர் அதுவே Nightmare ஆனதாக விமரிசிக்கவும் பட்டது. அதனால் இந்த முறை தன் பட்ஜெட் உரையில் நிச்சயம் இதை நினைவூட்டும் வன்ணம் ஏதேனும் சொல்லுவார் என்று நினைக்கிறேன். இந்த பற்றாக்குறை துண்டு என்பது சில வருடங்களுக்கு முன் GDPயில் 4 சதவிகிதமாக இருந்தது, கொஞ்சம் கொஞ்சமாக ஏறி, 5 அப்புறம் 5 புள்ளி சொச்சம், என்ற ரீதியில் வளர்ந்து இப்போது அது 5 புள்ளி 8 சதவிகிதத்தில் உள்ளது. அந்த வருட பட்ஜெட் அளிக்கும்போது இந்த பற்றாகுறை துண்டு 1 சதவிகிதம் ரேஞ்சிற்கு மேல் போகக் கூடாது என்பது என் எதிர்பார்ப்பு என்று கூறினார். ஆனால் அது இப்போதைக்கு நடப்பதாக தெரியவில்லை என்பது மட்டுமல்ல. துண்டு வேஷ்டியாகி, ஆறு கஜம் புடவையாகும் அளவு பெரிதாகிக்கொண்டிருக்கிறது..

இந்த மாதிரி பட்ஜெட்டில் துண்டு விழுந்து அரசாங்கத்திற்கு செல்விற்கு பணம் தேவைப்படும்போதெல்லாம் பங்குச் சந்தையில் கடன் வாங்கும். Tresuery Bill என்று சொல்லப்படுகிற இந்த அரசு பத்திரங்கள் மூன்று மாதம் அல்லது ஒரு வருடம் என்ற கால அளவில் திரும்பப் பெறும் வண்ணம் இருக்கும். நம்மைப் போல் சாதாரணர்களுக்கு இவைமில்லை. பொதுவாக முதலீடு செய்யும் நிறுவனங்கள் இவற்றை வாங்கும். இதைத் தவிர உலக வங்கி போன்ற இடங்களிலிருந்தும் அரசுக்கு கடன் உதவி கிடைக்கிறது இல்லையா? இப்படி கடனுக்கு கொடுக்க வேண்டிய வட்டி மட்டும் இந்த வருடம் ( 2004-05) 1,29500 கோடி ரூபாய் என்று சொல்லப்படுகிறது. இதைத் தவிர திருப்பி கொடுக்க வேண்டிய அசலையும் சேர்த்தால் இந்த வருடம் திருப்ப வேண்டிய கடன் 3,34197 கோடிகளாம்.

கூடிய விரைவில் சில வருடங்களில் கடன்கள் குறைந்து - மறைந்து (??!!) நிதி பற்றாகுறை நீங்கி புடவை, வேஷ்டியாகி, துண்டாகி கர்ச்சீப்பாகி, பின் சுத்தமாக கடனேயில்லாமல் மாறும்போது இந்தியா வளர்ந்த நாடுகளின் முண்ணனியில் நிற்கும் என்று நான் கனவு காண்கிறேன்.

இன்றுடன் ஹாங்காங் சீனாவுடன் மறுபடி இணைந்து 7 வருடமாகிறது. 1997ல் ஜூலை 1 ந் தேதி இந்த நாள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. சீனாவிடம் ஹாங்காங் போனபின்பு வாழ்க்கை எப்படி மாறுமோ என்று கவலைப்பட்ட பலர் ஹாங்காங்கைவிட்டு உலகின் வேறு பாகங்களுக்கு குடி பெயர்ந்தனர். சீனர்களிடையே ஒரு வழக்கம் உண்டு. நாம் முன்னோர்களுக்குத் திதி கொடுப்பதுபோல் அவர்கள் வருடா வருடம் முன்னோர்களின் அஸ்தி வைத்த இடத்தில் சென்று அந்த இடத்தை சுத்தப் படுத்துவதும் அங்கே வணங்குவதும் வழக்கம். ஆனால் ஹாங்காங்கை விட்டு இடம் பெயர்ந்தபின் முன்னோர்களின் நினைவிடத்தை வணங்குவதற்காக ஹாங்காங் வந்து போக முடியுமா என்ன? அதனால் இவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா? அஸ்திகளைத் தோண்டி எடுத்துக் கொண்டு தாங்கள் குடிபோகும் நாட்டிற்கு எடுத்து சென்று விட்டார்கள்!! எப்படி இவர்கள் யோசனை?

இந்த ஹாங்காங் கை மாறுதல் பற்றிய என் கட்டுரையை இங்கே படியுங்கள்.